Pudhumaipithan

தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது! எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!

தொகுக்கப்பட்ட பக்கம்:படிப்பு

தொடர்புடைய பக்கம்: புதுமைப்பித்தனும் சந்திரபாபுவும்


பா.ராகவன்

பா.ராகவன்

பா.ராகவன் இன்று இணைய பதிவர்களில் பிரபலமானவர். கிழக்கு பதிப்பகத்தில் பார்ட்னரோ இல்லை உயர் அதிகாரியோ தெரியவில்லை. கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர். அவரது non-fiction பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. பெரிய அறிமுகம் எல்லாம் தேவை இல்லாதவர். அதுவும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

பா.ரா.வின் அப்பா ஆர்.பி. சாரதி, பெரியப்பா சுராஜ் ஆகியோரை சந்தித்திருக்கிறேன். அவர் அப்பாவும் என் அப்பாவும் ஹெட்மாஸ்டர்கள். ஏறக்குறைய சம வயதினர். பா.ரா. ஒரு முறை அவர் தன் முதல் கதையை கிணற்றடியில் வைத்து என் அப்பாவுக்குத்தான் சொன்னதாக குறிப்பிட்டார். சுராஜ் சைதாப்பேட்டையில் பாரதி சங்கம் என்று ஒன்று வைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்ன வயதில் சிலவற்றுக்கு போயிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அம்மா அப்பாவின் நண்பி-நண்பர்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும்.

அவர் இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்களை பற்றி குறிப்பிடுகிறார். நூறு புத்தகம் பற்றி ஒரே பதிவில் எழுதினால் நானே படிக்க மாட்டேன். அதனால் இதை பகுதி பகுதியாக பிரித்து எழுதுகிறேன்.

1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்: முக்கியமான ஆவணம். ஆனால் அருமையான புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]: எனக்கும் புதிய ஏற்பாடை விட பழைய ஏற்பாடுதான் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் கதைகள் சுவாரசியமானவை. அதில் ஜெஹோவா நம்மூர் சுடலை மாடன் மாதிரி எனக்கு படையல் வைக்காமல் அவனுக்கா வச்சே என்று கடுப்பாகிவிடுவார். ஒரு கன்னம் மறு கன்னம் எல்லாம் ஏசு வந்த பிறகுதான்.

3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்: படித்ததில்லை.

4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்: அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாசுரங்களை ரசித்திருக்கிறேன். பொய்கை ஆழ்வாரின் வையம் தகளியா வார்கடலே நெய்யாக பாசுரம் கொண்டு வரும் படிமம் மிக அற்புதமானது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாசுரமும் எனக்கு பிடித்தமானது. என்றாவது எனது கவிதை அலர்ஜியை கடந்து படிக்க வேண்டும்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்: சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு சூதிற் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி போனதில்லை என்று ஆரம்பிப்பது கவிதை. எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: படித்ததில்லை. படிப்பேனா என்பது சந்தேகமே.

7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: சில அற்புதமான கதைகள் உண்டு – கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய் தூள், விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம்…

8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்: அருமை!

11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி: அபாரம்!

12. சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்: படித்ததில்லை.

13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்: நல்ல புத்தகம்தான், ஆனால் ஏ க்ளாஸ் புத்தகம் இல்லை. காந்தியை கொலை செய்யப் போகும் புரட்சி இளைஞன். ஹே ராம் படம் இந்த கதையை ஓரளவு ஒத்துப் போகும்.

14. பொன்னியின் செல்வன் – கல்கி: மிக அற்புதமான கதை சிக்கல் கொண்ட புத்தகம். கொஞ்சம் verbose-தான், ஆனால் கல்கியின் சரளமான நடை அதை மறக்கடித்துவிடுகிறது. அலெக்சாண்டர் டூமா, வால்டர் ஸ்காட் போன்றவர்களை கொண்டாடும் நாம் அவற்றை விட சிறந்த கல்கியை மறந்துவிடுகிறோம்.

15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா: படித்ததில்லை. சாமிநாத சர்மா எழுதிய நான் கண்ட நால்வர் (திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி) எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய நாடகமான பாணபுரத்து வீரனும் பிடிக்கும். அவர்தான் கலைஞரின் மனோகரா ஸ்டைல் உணர்ச்சி பிழம்பு வசனங்களுக்கு முன்னோடி என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு – இரண்டு பாகங்கள்]: சில கதைகள் படித்திருக்கிறேன். முழு தொகுப்பையும் படித்ததில்லை. பிச்சமூர்த்தியின் பெரிய தாக்கம் சிறுகதைகள், நாவல்கள் அல்ல, அவரது கவிதைகள்தான். எனக்கே சில கவிதைகள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் காசு கொடுத்து வாங்கிய ஒரே கவிதை புத்தகம் பிச்சமூர்த்தி கவிதைகள்தான். பாரதியார் கவிதைகள் கூட அம்மா அப்பா யாராவது வாங்கிக் கொடுத்ததுதான்.

17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]: அற்புதம்! புதுமைப்பித்தனை பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. இது வரை வந்த தமிழ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர், அவ்வளவுதான்.

18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்: படித்ததில்லை.

19. எனது சிறைவாசம் – அரவிந்தர்: தண்டம். பா.ரா.வுக்கு இதெல்லாம் எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை.

20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்: படித்ததில்லை.

21. ஒற்றன் – அசோகமித்திரன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்க்கையை விவரிக்கும் அணுகுமுறை உள்ளவர். மெல்லிய நகைச்சுவை பக்கத்துக்கு பக்கம் தெரியும். இது அவருடைய உன்னதமான புத்தகங்களில் ஒன்று.

22. நிலா நிழல் – சுஜாதா: இதை படித்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் கதை ஞாபகம் வரவில்லை. இதுதான் ஒரு நடிகையின் சிறு பெண்ணோடு பக்கத்து மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் நண்பர்களாகும் கதையோ? நம்ம உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஏதாவது எழுதுகிறாரா என்று பார்ப்போம்.

23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா: இதுதான் ஒரிஜினல் ப்ளாக். நன்றாக இருக்கும். இதை பற்றி என்னுடைய ஒரு பதிவு இங்கே.

24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு: கரிச்சான் குஞ்சை பற்றி நிறைய படித்துவிட்டேன், இந்த புத்தகம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

25. அவன் ஆனது – சா. கந்தசாமி: படித்ததில்லை.

26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்: படித்ததில்லை.

27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்: படித்ததில்லை. படிக்க ஆவலாக இருக்கிறது. ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், பாக்கியம் ராமசாமி, சுந்தர பாகவதர் என்ற பேர்களில் எழுதுவது ஒருவரே (ஜ.ரா.சு.) என்று நினைத்திருந்தேன். இதைப் பார்த்தால் புனிதன் வேறு யாரோ என்று தோன்றுகிறது.

28. வ.உ..சி. நூற்றிரட்டு: படித்ததில்லை.

29. வனவாசம் – கண்ணதாசன்: வனவாசமோ மனவாசமோ ஏதோ ஒன்றுதான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம் எல்லாம் இல்லை, ஆனால் முக்கியமான ஆவணம். தி.மு.க.வின் உள்குத்துகளை விவரிக்கும் புத்தகம்.

30. திலகரின் கீதைப் பேருரைகள்: படித்ததில்லை.

31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்: கேள்விப்பட்டதே இல்லை.

32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர் படித்ததில்லை.

33. காமராஜரை சந்தித்தேன் – சோ: படிக்க விரும்பும் ஒரு புத்தகம். இந்த முறை ஊருக்கு போனால் அலையன்சில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். டோண்டு இந்த புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. அவர் சோவின் முரட்டு பக்தர். காமராஜ் மேல் பெருமதிப்பு வைத்திருப்பவர்.

34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்: படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. படித்த வரையில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. ரொம்ப ப்ராக்டிகலான புத்தகம். நியாய அநியாயங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
அசோகமித்ரனின் ஒற்றன் பகுதி 1, பகுதி 2, அசோகமித்திரன்
சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்
கரிச்சான் குஞ்சு
எஸ்.ஏ.பி., பி.எஸ். ராமையா, ஜெகசிற்பியன், எழுத்தாளர் ஆர்வி, சிவசங்கரி, தி. ஜா, நா. பா., விந்தன் ஆகியோரை பதிவர் ஜீவி அறிமுகம் செய்கிறார்.

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


சுஜாதா

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்று ஒரு லிஸ்ட் என் பழைய ஃபைல்களை கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும்.

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என்று நினைக்கிறேன். நல்ல கதை.

கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதைகளும் நினைவு வருகின்றன.

கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றணன். அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை.

தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.

பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.

கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன.

திலீப் குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண்ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல்லக்கு
கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங்கராஜன் – செய்தி
ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங்கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண்டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
வண்ணதாசன் – நிலை:

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய மொழிகள்)
சிறுகதை வாரம்
ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2


எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. அடுத்த பாகம் எப்ப வரும் எப்டி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

அனேகமாக இதுவே – முதல் பகுதியே – பெரிய போஸ்டாக இருக்கும். பெரிய போஸ்ட்களைப் பார்த்தாலே எனக்கு மனச்சோர்வு ஏற்படும். எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

லிஸ்ட் கீழே:
ஏ.ஏ.ஹெச்.கே. கோரி – அவன் அவள் இவன்
அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
அசோகமித்திரன் – பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்தக் கரை பச்சை
தமயந்தி – அனல் மின் மனங்கள்
திலீப் குமார் – கடவு, கடிதம்
ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம்
ஜெயமோகன் – பித்தம், அவதாரம், கடைசி வரை, மாடன் மோட்சம், ஊமை செந்நாய்
கி. ராஜநாராயணன் – கோமதி, மாய மான், கொத்தைப் பருத்தி, ஜெயில், கதவு
கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
கு. அழகிரிசாமி – ராஜா வந்திருந்தார், திரிவேணி, அன்பளிப்பு
கு.ப.ரா. – திரை,கனகாம்பரம்
லா.ச.ரா. – பூரணி
எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
பட்டுக்கோட்டை பிரபாகர் – ?
புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக் கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை
சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
சுஜாதா – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
சுந்தர ராமசாமி – விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய்த்தூள்
தங்கர் பச்சான் – குடி முந்திரி, வெள்ளை மாடு
தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம்
வண்ணநிலவன் – எஸ்தர்
யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்

பதிவின் நீளத்தைக் குறைக்க இந்த முறை புதுமைப்பித்தன் மட்டும். அடுத்த பாகத்தில் மற்றவர்களைப் பற்றி.

தமிழ் சிறுகதைகளில் பல சாதனையாளர்கள் உண்டு, ஆனால் இன்னும் புதுமைப்பித்தனை யாரும் தாண்டவில்லை. எனக்கு ஒரு பத்து பனிரண்டு கதைகள் தேறும்.

நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை.

அதற்கு மிக அருகே உள்ள கதை சுப்பையா பிள்ளையின் காதல்கள். தாம்பரத்திலிருந்து தினமும் ட்ரெயினில் போகும் சுப்பையா பிள்ளையின் கால் மேல் ஒரு இளம் பெண்ணின் கால் தற்செயலாக படுகிறது. அவ்வளவுதான் கதை.

அப்புறம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும். சிவ பெருமான் கந்தசாமி வீட்டுக்கு விசிட் அடிக்கிறார். புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. ஒரு நாள் கழிந்தது கதையில் வரும் சிறு பெண்ணும் அப்படித்தான்.

அப்புறம் சாப விமோசனம், பொன்னகரம். சீதையை ராமன் தீக்குளிக்க சொன்னது தெரிந்தால் அகலிகையின் கதி என்ன? பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது.

புதிய கூண்டு, துன்பக் கேணி இரண்டும் உணர்ச்சிகரமான கதைகள். கஷ்டப்படும் குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் காலேஜில் சேருகிறார்கள். அண்ணன் கிருத்துவப் பெண்ணை காதலித்து மதம் மாறி கல்யாணமும் செய்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அம்மா அவுட். அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை. அற்புதமாக எழுதப்பட்ட கதை. துன்பக் கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம்.

செல்லம்மாள் இன்னொரு அருமையான கதை. புருஷன் கண்ணெதிரில் செல்லம்மாள் செத்துக் கொண்டிருக்கிறாள், இதுதான் கதை. இன்னொருவர் கண்ணெதிரில் சாவதைப் பற்றி மகா மசானம் என்ற இன்னொரு கதையும் உண்டு.

கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது. ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை.

ஒரு நாள் கழிந்தது கதையில் முருகதாசர் அன்றைக்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொள்கிறார். அதற்கு ஆயிரம் வெட்டி பந்தா.

அப்புறம் காலனும் கிழவியும். கிழவியை அழைத்துப் போக வரும் யமதர்மன் கடைசியில் தன் பாசக்கயிற்றை விட்டுவிட்டுப்போகிறான். மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

அப்புறம் சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதையில் கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் சக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான்.

எனக்கு இன்னும் பிடிபடாத, ஆனால் பரவலாக பேசப்படும் கதை சிற்பியின் நரகம்.

என் Reference-களையும் கொடுத்துவிடுகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் காஞ்சனை (என் லிஸ்டில் வராது), கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், செல்லம்மாள் ஆகியவற்றை தன் 100 சிறந்த தமிழ் சிறுகதை லிஸ்டில் தேர்வு செய்திருக்கிறார். ஜெயமோகன் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றரவு, செல்லம்மாள், சிற்பியின் நரகம், கபாடபுரம், ஒரு நாள் கழிந்தது, அன்றிரவு, சாமியாரும் குழந்தையும் சீடையும், காலனும் கிழவியும், சாப விமோசனம், வேதாளம் சொன்ன கதை (என் லிஸ்டில் வராது), பால்வண்ணம் பிள்ளை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கிறார். ஜெயமோகன் லிஸ்டில் பாதி அடையாளம் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை புதுமைப்பித்தன் சிறுகதைகளை புரட்டிப் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:
சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்


தோன்றியதைப் பற்றி எல்லாம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறேன். அமார்த்ய சென்னிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை வரை ஒரே அவியலாக இருக்கிறது. ஒரு சேஞ்சுக்காக ஒரே ஒரு விஷயம் பற்றி focus செய்யலாம் என்று எண்ணம். இந்த வாரம், சிறுகதை வாரம். சிறுகதைகளை பற்றி மட்டும் எழுதப் போகிறேன். என்ன எழுதப் போகிறேன் என்று இது வரை எனக்கே தெரியாது. 🙂

சிறுகதை என்றால் என்ன என்று பெரிய பெரிய மேதைகளே வரையறுக்க குழம்புகிறார்கள். சிலர் சைஸை வைத்து வரையறுக்கிறார்கள். பத்து பக்கம் இருந்தால் சிறுகதையா? 25 பக்கம்? 50 பக்கம்? எத்தனை பக்கம் இருந்தால் சிறுகதையிலிருந்து கொஞ்சம் பெருகதைக்கு மாறுகிறது? (இந்த இடத்தில் எப்படியாவது அருகதை என்று எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன், அப்புறம் படிப்பவர்கள் பாவம் என்று விட்டுவிட்டேன்) நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அதிலெல்லாம் படம் போட்டு பாகங்களை குறித்த பிறகும் கதை பத்து பக்கத்தை தாண்டாது. இருபது பக்க “சிறுகதையே” எனக்கு கொஞ்சம் கஷ்டம். 🙂 ஆனால் டிக்கன்ஸ் சிறுகதை எழுதினால் ஒரு ஐம்பது பக்கம் போகும். ஜோஸஃப் கான்ராடின் Heart of Darkness படிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். என் கண்ணில் அது சிறுகதைதான். அது ஒரு 70 பக்கம் இருக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு மூன்று decade-களில் எழுதப்பட்ட கதைகள் பொதுவாக நீளமாக இருக்கின்றன.

சிலர் சிறுகதை ஒரு moment -ஐ, ஒரு நக்மா-வை, (நக்மாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கப்பு!) காட்டுவதுதான் சிறுகதை என்று சொல்கிறார்கள். (நக்மாவை காட்டினால் அல்லது நக்மா காட்டினால் அது சிறுகதை இல்லை, சினிமா என்று யாராவது கடிப்பதற்கு முன் ஹிந்தியில் நக்மா என்றால் ஒரு moment என்று சொல்லிவிடுகிறேன். அது moment-உக்கும் கொஞ்சம் மேலே, உருது வார்த்தைகளுக்கு உள்ள ஒரு charm அதில் இருக்கிறது.) அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம். ஆனால் புதுமைப்பித்தனின் ஒரு கதை – பேர் ஞாபகம் வரவில்லை, கூடுவிட்டு கூடு பாயும் நன்னய பட்டன்? என்று நினைக்கிறேன் – பல யுகங்களை கடக்கிறது. அதுவும் நல்ல கதைதான்.

பெரிய பெரிய மேதைகளே தடுமாறும்போது நான் எதற்கு கஷ்டப்பட வேண்டும்? யாரோ ஒருவர் போர்னோக்ராஃபி பற்றி சொன்னது நினைவு வருகிறது. அதை என்னால் வரையறுக்க முடியாது, ஆனால் பார்த்தால் எது போர்னோ, எது இல்லை என்று தெரியும் என்று சொன்னாராம். சிறுகதைக்கும் அந்த வரையறைதான் சரிப்பட்டு வரும். எந்த வரையறைக்கும் விதிவிலக்குகள் காட்ட முடியும். ஆனால் பார்த்தால் இது சிறுகதையா, குறுநாவலா, நாவலா என்று தெரியும்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த சிறுகதை ஆசிரியர்கள்/கதைகள் – உடனடியாக தோன்றுபவை – சாகி, எம்.ஆர். ஜேம்சின் பேய்க்கதைகள், ஓ. ஹென்றியின் சில கதைகள், பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில ஜாக் லண்டன் கதைகள், சில பி.ஜி. வுட்ஹவுஸ் கதைகள், வெகு சில அசிமோவ், உர்சுலா லி க்வின் கதைகள் பிடிக்கும். பெரிதாக பேசப்படும் ஹாதொர்ன், எட்கார் ஆலன் போ (Purloined Letter, Gold Bug, Pit and the Pendulum பிடிக்கும்), சாமர்செட் மாம், மார்க் ட்வேய்நின் சிறுகதைகள் எல்லாம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இந்திய மொழிகளில் ஹிந்தியில் பிரேம்சந்த். மிக அற்புதமான சிறுகதைகள். மணிக் பந்தோபாத்யாயின் வங்காளச் சிறுகதைகளில் பல மிகவும் சக்தி உள்ளவை. மைதிலியோ, போஜ்புரியோ என்னவோ ஒன்றில் எழுதிய ஃபனீஸ்வர்நாத் ரேணு அருமையாக எழுதுவார். வேறு யாரும் எனக்கு தெரியவில்லை. இஸ்மத் சுக்டை, சாதத் ஹாசன் மாண்டோ, கிருஷ்ண சந்தர் மாதிரி எல்லாம் பேர் நினைவு வந்தாலும் எந்த கதையும் நினைவு வரவில்லை. மற்றவர்களின் நாவல்கள்தான் நினைவு வருகின்றன.

தமிழில்தான் நான் ஓரளவு சிறுகதைகளை படித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை வடிவத்தை ஜீரணித்து பல வருஷம் ஆயிற்று. இத்தனைக்கும் நூறு வருஷமாகத்தான் சிறுகதைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. புதுமைப்பித்தன் ஒரு ஜீனியஸ். அவர் சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமே எழுதினர். கு.ப.ரா. அருமையான கதைகளை எழுதி இருக்கிறார். அசோகமித்திரன் தமிழின் இன்னொரு ஜீனியஸ். அவருக்கு சிறுகதை கை வந்த கலை. கு. அழகிரிசாமி சிறுகதையின் மாஸ்டர். கி.ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். ஈகோவை வைத்து மிக subtle-ஆன கதைகளை எழுதும் சா. கந்தசாமி, அன்றைய காலகட்டத்தின் நியாய அநியாயங்களை எடுத்து வைத்த ஜெயகாந்தன், மிக சுவாரசியமான கதைகளை வணிக இதழ்களுக்காக எழுதிய கல்கி, தேவன், சுஜாதா, ஒரு காலத்தில் மிக அபாரமான சிறுகதைகளை எழுதிய பாலகுமாரன், மிக குரிவாகவே எழுதினாலும் மறக்க முடியாத கதைகளை எழுதிய ஜி. நாகராஜன், திலீப் குமார், வெளுத்து வாங்கும் அ. முத்துலிங்கம், நாவல்கல் அளவுக்கு வராவிட்டாலும் நல்ல சிறுகதைகளை எழுதும் ஜெயமோகன் என்று மணிக்கொடி காலத்திலிருந்து இன்று வரை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு என்ன சிறுகதைகள் பிடித்திருந்தது? உங்களை பாதித்த சிறுகதைகள் ஏதாவது உண்டா? சிறுகதைகளை பற்றி உங்கள் எண்ணம் என்ன? சும்மா நானே பேசுவதை விட எல்லாரும் பேசினால் நன்றாக இருக்குமே!

நீங்கள் எழுதிய சிறுகதை எதையாவது இங்கே பதிக்க விரும்புகிறீர்களா? (எனக்கு பிடித்தால்தான் பதிப்பேன்.)

பக்ஸ், சேதுராமன் நீங்கள் யாராவது இதைப் பற்றி எழுத விரும்புகிறீர்களா?

தொடர்புடைய பதிவுகள்:

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு


(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்


ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான்.

எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு மறந்துவிடும். ஞாபகம் இருப்பவற்றை பற்றி மட்டும் கீழே.

புதுமைப்பித்தன்: தமிழில் எனக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் என்றால் இவர்தான். ராமகிருஷ்ணன் காஞ்சனை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், செல்லம்மாள் ஆகிய மூன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
க.க. பிள்ளையும் ஏன் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடிவதில்லை. கடவுள் க. பிள்ளை வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.
செல்லம்மாள் கதையில் கீழ் மத்தியதர குடும்பம் – கணவன் கண்ணெதிரில் மனைவி கொஞ்ச கொஞ்சமாக இறந்து போவாள்.
காஞ்சனை சுமார்தான். ஏதோ பேய்க்கதை.
ஒரு நாள் கழிந்தது, சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம், பொன்னகரம், சாப விமோசனம், கல்யாணி, துன்பக் கேணி, பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை, புதிய கூண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டாரே?

மௌனி: அழியாச்சுடர், பிரபஞ்ச கானம் என்ற இரு கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். மௌனி எனக்கு புரிவதில்லை.

கு.ப.ரா: கனகாம்பரம், விடியுமா இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கனகாம்பரம் மிக அற்புதமான கதை. கணவன் புது மனைவியிடம் தன நண்பர்கள் வந்தால் சகஜமாக கலந்து பேச சொல்வான். நிஜமாகவா?
விடியுமா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் திரை, வீரம்மாளின் காளை இரண்டும் நினைவுக்கு வருகிறது. மிக நல்ல கதைகள். அதை எல்லாம் விட்டுவிட்டாரே?

பி.எஸ். ராமையாவுக்கு ஒரு கதை – நட்சத்திர குழந்தைகள். பிச்சமூர்த்திக்கு ஒன்று – ஞானப் பால். தி.ஜானகிராமனுக்கு இரண்டு – பாயசம், பஞ்சத்து ஆண்டி. எதுவும் நினைவில்லை. பாயசம் கதையில்தான் பாயசத்தில் பல்லி என்று ஹீரோ அண்டாவை கவிழ்த்துவிடுவாரா?

கு. அழகிரிசாமிக்கு மூன்று – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு. ராஜா மட்டும்தான் என்ன கதை என்று நினைவுக்கு வருகிறது. நல்ல கதை.

கி. ராஜநாராயணனுக்கு மூன்று – கோமதி, கன்னிமை, கதவு.
கோமதிதான் gay சமையல்காரனை பற்றியதோ? மற்றவை நினைவுக்கு வரவில்லை.
நினைவு வருபவை – கொத்தைப் பருத்தி, மாய மான், ஜெயில்.

சுந்தர ராமசாமிக்கு இரண்டு – பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம். அவரது பல கதைகள் பிடிக்கும், ஆனால் இவை இரண்டும் நினைவில்லை. விகாசம் என்ற கதை எனக்கு மிக பிடித்தமானது.

லா.ச.ரா.வுக்கு இரண்டு – பச்சை கனவு, பாற்கடல். பாற்கடல் என்று ஒரு புத்தகம் உண்டு, அவரது குடும்ப வரலாறு போல இருக்கும், ஆனால் அதில் சிறுகதை என்ன? தெரியவில்லை. பச்சை கனவு படித்ததில்லை. அவர் எழுதியவற்றில் எனக்கு பூரணி பிடிக்கும் (பஞ்ச பூதக் கதைகளில் பூமியை உருவகித்து எழுதப்பட்டது)

நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி படித்ததில்லை.

அசோகமித்ரனுக்கு மூன்று – புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம்.
புலிக் கலைஞன் மிக அற்புதமான கதை. புலி வேஷக் காரன் சினிமா சான்சுக்காக ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான்.
பிரயாணம் – ப்ரில்லியன்ட்! அம்ப்ரோஸ் பியர்சின் ஒரு கதையை இது ஞாபகப்படுத்துகிறது. ஆனால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதப்பட்டது.
காலமும் ஐந்து குழந்தைகளும் படித்ததில்லை.

ஜெயகாந்தனுக்கு மூன்று – குரு பீடம், அக்னி பிரவேசம், முன் நிலவும் பின் பனியும்.
அக்னி பிரவேசம் மட்டும்தான் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் இங்குதான் ஆரம்பம் ஆகிறது.

பா. ஜெயப்ரகாசம் (தாலியில் பூச்சூடியவர்கள்), பிரமிள் (காடன் கண்டது), ஆதவன் (உயரமா சிவப்பா மீசை வெச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்) படித்ததில்லை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – மிக பிரமாதமான கதை. இதை விவரிக்க விரும்பவில்லை. பெட்கி கதையையும் சேர்த்திருக்கலாம்.

அ. முத்துலிங்கம் – மகாராஜாவின் ரயில் வண்டி. நிச்சயமாக படித்திருக்கிறேன், கதை ஞாபகம் வரவில்லை.

ந. முத்துசாமியின் நீர்மை – படித்ததில்லை.

அம்பைக்கு இரண்டு – காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள்
கா.ஒ.மான் வயதுக்கு வராமலே வயதாகிவிடும் ஒரு பெண்ணை பற்றியது. நல்ல கதைதான், ஆனால் அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
அ.ஒ.கொ. செய்தாள் எல்லாரும் தேவைக்கு மேல் கொண்டாடும் ஒரு கதை. சின்னப் பெண் வயதுக்கு வந்த போது அலுத்துக் கொள்ளும் அம்மா பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை கொலை செய்தாள் என்று கதை. அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
எனக்கு பிடித்த அம்பையின் கதைகள் – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு.

வண்ணநிலவன் (எஸ்தர், மிருகம், பலாப்பழம்), சம்பத்(சாமியார் ஜூவுக்கு போகிறார்), ராஜேந்திர சோழன்(புற்றில் உறையும் பாம்புகள்), வண்ணதாசன் (தனுமை, நிலை), ஆ.மாதவன் (நாயனம்) – இவற்றை நான் படித்ததில்லை.

சுஜாதாவுக்கு இரண்டு (நகரம், ஃபில்மோத்சவ்) – படித்திருந்தால் நினைவில்லை.
சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்த சில – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி.

சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள் – இதை விவரிப்பது கஷ்டம். அருமையான கதை.

ஜி. நாகராஜன் (டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள்) – நாகராஜனின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன், ஆனால் இது என்ன என்று நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணன் நம்பி (தங்க ஒரு, மருமகள் வாக்கு) – மருமகள் வாக்கு சூப்பர்! நானும் அதற்கு கிளி சின்னத்தில் வாக்களிக்கிறேன். தங்க ஒரு நான் படித்ததில்லை.

பூமணி(ரீதி), நாஞ்சில் நாடன்(இந்நாட்டு மன்னர்), பிரபஞ்சன்(அப்பாவின் வேஷ்டி, மரி என்னும் ஆட்டுக்குட்டி), சோ. தர்மன்(சோக வனம்), மாலன்(இறகுகளும் பாறைகளும்) ஆகியவற்றை நான் படித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி, ஒரு கப் காப்பி. பரவாயில்லை, ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

திலிப் குமார் – மூங்கில் குருத்து, கடிதம். எனக்கு கடிதம் பிடித்த கதை. மூ. குருத்து சுமார்தான். ஆனால் அவர் எழுதிய கடவுதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

எஸ்.ராவின் தேர்வு #63-#100 வரை நான் படித்திருப்பது ஜெயமோகனின் பத்ம வ்யூஹம் கதை மட்டும்தான். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு பெரிய பித்து உண்டு, அதனால்தான் பத்ம வ்யூஹம் நினைவிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளில் எனக்கு நினைவில் வருபவை பித்தம், காலம், அவதாரம், ஊமை செந்நாய்.

நான் படிக்காத அந்த #63-#100 வரை உள்ள தேர்வுகள்:
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

மேலே உள்ளவற்றைத் தவிர நான் பரிந்துரைக்கும் சில கதைகள் – பாலகுமாரன்(சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை பச்சை?), தங்கர் பச்சான்(குடி முந்திரி, வெள்ளை மாடு), தமயந்தி(அனல் மின் நிலையங்கள்)மனங்கள், யுவன் சந்திரசேகர்(23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்)

தொடர்புடைய பதிவுகள்:
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்


சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்


க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. 🙂

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். 🙂

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. 🙂

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!


இதுவும் ஒரு மீள்பதிப்பு. முந்தைய பதிவை சில டெக்னிகல் காரணங்களால் எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் இந்த மீள்பதிப்பை போட்டுவிட்டு பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்


9-11-1919 அன்று காரைக்குடி இந்து மதாபிமான விழாவில் கலந்து கொண்ட மஹாகவி பாரதியார் – அவருக்கு வலப்புறம் ராய.சொ.வும் இடப்புறம் சொ.மு.வும். (இந்த சொ.மு. யாரென்று தெரியவில்லை)

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிய பதிவில் பல பேரை பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். திரு. சேதுராமன் அவர்கள் ராய. சொக்கலிங்கத்தை பற்றி சிரமப்பட்டு கண்டுபிடித்து கீழே உள்ளதை எழுதி இருக்கிறார். அவருக்கும் அவருக்கு விவரங்களை தந்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் எனது நன்றி! இது அவரது guest post.

இது போன்ற விஷயங்களை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. கூகிளில் தேடும் விஷயம் இல்லை. சேதுராமன் எப்படி சித. ராயப்ப செட்டியாரை கண்டுபிடித்தாரோ! சித. ராயப்ப செட்டியார் விவரங்கள் கொடுத்து உதவியது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திலிருந்து இந்த புகைப்படத்தையும் scan செய்து உதவி இருக்கிறார். வளவள என்று எழுதுவதை காட்டிலும் ஒரு ஓவியமோ, புகைப்படமோ விஷயத்தை நமக்கும் சுலபமாக சொல்லிவிடுகிறது. இதை பார்த்தவுடன் நமக்கும் ராய.சொ. பாரதியின் காலத்து அறிஞர் என்று தெரிந்துவிடுகிறது பாருங்கள்!

எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் மட்டும் போதாது, அவர்களது புத்தகங்களை வெளியிடவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தேன். புத்தகங்களை வெளியிடாவிட்டாலும், எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் ஏன் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றாவது சிறு குறிப்பாக வெளியிட வேண்டும். அப்படி அரசு செய்யும் வரை நம்மை போன்று சாதாரண மனிதர்கள்தான் இதற்கு சிரமப்பட வேண்டும். திருவாளர்கள் சேதுராமன், சித. ராயப்ப செட்டியார் ஆகியோருக்கு ஓ பக்கங்கள் ஞானி ஸ்டைலில் இந்த வார பூச்செண்டு கொடுக்க வேண்டியதுதான்! (இப்போது சேதுராமன் மேலும் சின்ன அண்ணாமலை, என்.வி. கலைமணி, அகஸ்தியலிங்கம், மு. ராகவையங்கார் ஆகியோரை பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.) உங்களுக்கும் பூச்செண்டு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறதா? 🙂

ஓவர் டு சேதுராமன்.

தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தன வைசிய ஊழியன்’ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்’ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது.. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள் நெறித் திருக் கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை, காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள், கொண்டது.

காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்”, “திருவாசகத் தேன்”, “திருத்தலப்பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரை நடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்”, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும், உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்”, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

மீண்டும் ஆர்வி:
இது ராய.சொவின் வாழ்க்கைக் குறிப்பு. அவரது எழுத்துகளை பற்றி சுருக்கமாகவே விவரங்கள் உள்ளன. பொதுவாக மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார், ஊழியன் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. அரசே பதிப்பித்தால் ஒழிய இவரது எழுத்துக்கள் மறு பதிப்பு பெற வாய்ப்புகள் குறைவுதான். இருப்பதை வைத்து பார்க்கும்போது இவர் எழுத்துக்கள் ஏன் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று விளங்கவில்லை.