சரித்திர நாவல்கள் பதிவுகளுக்கு வந்த மறுமொழிகளில் டணாய்க்கன் கோட்டை பற்றி சிலர் குறிப்பிட்டிருந்தனர். நானோ இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. யாராவது அறிமுகப்படுத்தி வையுங்களேன் என்று கேட்டிருந்தேன். ரீடர் என்பவர் இதைப் பற்றி அம்ருதா என்ற இணைய இதழில் வந்திருந்தது என்று சொல்லி ஒரு மறுமொழி எழுதி இருந்தார். ஃபான்ட் பிரச்சினையால் அம்ருதா இதழை படிக்க முடியவில்லை. அதனால் எனக்கு இதை எழுதியது ரீடரா, இல்லை இமையம் என்பவரா, இது அம்ருதா இதழிலிருந்து எடுக்கப்பட்டதா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. எப்படி இருந்தாலும் அம்ருதா இதழ், மற்றும் ரீடருக்கு நன்றி! மிக அருமையான அறிமுகம். நாவலைப் படிக்க வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்துகிறது. நாவல் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். ஓவர் டு ரீடர்!
அம்ருதா சுட்டி 1, அம்ருதா சுட்டி 2
டணாயக்கன் கோட்டை – இமையம்
1956ல் ‘நவ இந்தியா’ இதழில் தொடராக வெளிவந்து வாசகர்கள் கவனத்தைப் பெதும் தன் பக்கம் ஈர்த்ததோடு, ராஜாஜி, மு.வரதராசனார், ஜி.டி.நாயுடு போன்றவர்களால் போற்றப்பட்ட நாவல் ‘டணாயக்கன் கோட்டை’. இந்நாவல் தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 1959லேயே மொழியாக்கம் செய்யப்பட்டு, மிக முக்கியமான பத்திரிகைகளில் தொடராக வெளி வந்துள்ளது. கன்னட, மலையாள வாசகர்களிடத்திலும் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளது இந்நாவல். நாவல் வெளிவந்து சரியாக அரை நூற்றாண்டுக் காலம் முடிந்துவிட்டது. இப்பொழுதும் இந்த நாவலைப் படிக்கும்போது, தற்காலத்தில் எழுதப்பட்டது போல அவ்வளவு ஈர்ப்புடையதாகவும், பல விதங்களில் சுவாரசியம் மிகுந்ததாகவும் இருக்கிறது. இதற்குக் காரணம் கதையின் தளமும், கதை சொன்ன விதமும்தான். இ. பாலகிருஷ்ண நாயுடு, தேர்ந்த கதை சொல்லியாக இருந்திருக்கிறார் என்பதற்கு ‘டணாயக்கன் கோட்டை’ நாவலே சாட்சியாக இருக்கிறது.
திப்பு சுல்தானின் காலம் 10.11.1750 முதல் 4.5.1799 வரை ஆக இருந்தாலும், இந்நாவலில் திப்பு சுல்தான் ஆட்சி செய்த காலத்தின், பதினேழு ஆண்டுகள் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நாவல் திப்பு சுல்தானுடைய வரலாற்றை, அரசாட்சி முறையை சொல்வது போல தோற்றம் தந்தாலும், நாவலின் மையம் அதுவல்ல. மைசூர் ராஜ்ஜியத்தில் பதினேழு ஆண்டு காலம் நடந்த அரசியல் நடவடிக்கைகள், போர்கள், படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள், சமூக மாற்றங்கள் ஆகிய அனைத்தையும் விவரிக்கிறது நாவல்.
திப்பு சுல்தானின் தனிப்பட்ட வாழ்க்கை, அரசாட்சி, நிர்வாகம், போர், ஆங்கிலேயரிடம் வீழ்தல் என்பதெல்லாம் நாவலின் ஒரு பகுதி மட்டுமே. நாவலில் பல கிளைக்கதைகள் வருகின்றன. குறிப்பாக டணாயக்கன் கோட்டை பாளையக்காரர்களான பாலராஜா, தேவராஜா என்பவர்களுடைய கதை அவற்றில் ஒன்று. புலியைப் பிடித்த வீரம்மா என்பவளின் கதை, மதவெறியன் பீர் ஜட்டா, ராணி லட்சுமி அம்மிணி, வெள்ளையர்களின் சூழ்ச்சி, திவான் மீர் சடக் என்று அடுக்கடுக்கான பல கிளைக் கதைகளை தன்னுள் கொண்டுள்ளது நாவல். இப்படியான பல கிளைக் கதைகள் நம்முடைய புராண, இதிகாச, ஐதீகக் கதைகளை நினைவூட்டுகின்றன. கிளைக் கதைக்குள்ளேயே பல கிளைக் கதைகள்; அக்கதைக்குரிய மனிதர்களும், அவர்களுடைய உலகமும் மிக நேர்த்தியான முறையில் விவரிக்கப்பட்டுள்ள விதம் மலைப்பையும், வியப்பையும் தருகிறது. மறந்து விடக்கூடிய பாத்திரங்கள் என்று நாவலில் ஒன்று கூட இல்லை.
நாவல் முழுவதும் பல அசாதாரணங்கள் நிறைந்து கிடக்கின்றன. அசாதாரண சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் நாவலை கட்டமைத்த விதத்தில், கதை சொன்ன விதத்தில், கதையைச் சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், மொழியின் எளிமையால், அசாதாரணங்களும் சாதாரண நிகழ்வுகளாக, நம்பும்படியாக இருக்கின்றன. அசாதாரணங்கள் நாவலின் போக்கில், கதையின் போக்கில் கரைந்து, வாசகர்கள் கவனத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறது. இந்தக் குணத்தால், இது வரை தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நாவல்களைக் காட்டிலும், இந்த நாவலுக்கு தனித்த சிறப்பான இடம் உண்டு. அதே மாதிரி நாவலாசியருக்கும் உண்டு. வரலாற்றை மட்டுமே பதிவு செய்யாமல் வரலாற்றில் இடம் பெற்ற பாத்திரங்களின் உள் மன உண்மைகளையும், வேட்கைகளையும் ஆராய்ந்து சார்பற்ற நிலையில் எழுதப்பட்டுள்ளதால், தமிழ் நாவல்களின் இலக்கிய வரலாற்றிலும் இந்த நாவலுக்கு முக்கிய இடம் உண்டு.
வரலாற்றில் நடந்த எல்லாப் போர்களும், படையெடுப்புகளும் பேராசையாலும், பதவி, அதிகாரம், ஒடுக்குதல் என்று தமது வல்லமையை நிரூபிக்க நடந்தவைகளே. வரலாறு நெடுகிலும் இது வரை நடந்த போர்களில், படையெடுப்புகளில், ஆக்கிரமிப்புகளில் ஒன்றைக் கூட, நன்மைக்கும் தீமைக்கும் எதிராக நடந்தவை என்று நம்மால் அடையாளப் படுத்த முடியாது. இதை நிரூபிக்கும் விதமாகத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் இருக்கிறது.
இந்நாவலில், அதிகாரத்திற்காக நடைபெறும் சூழ்ச்சிகளும், தந்திரங்களும், நயவஞ்சகங்களும், கயமைத்தனங்களும், உடன்படிக்கைகளும் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக நம்ப வைத்து ஏமாற்றுதல், மோசடி செய்தல், துரோகம் செய்தல், சூது, கபடம், உறவாடிக் கெடுத்தல், பலியாதல், பலி கொடுத்தல், ராஜ விசுவாசம், ராஜதுரோகம், சூழ்ச்சிக்கு மேல் சூழ்ச்சி என்று அடுக்கடுக்காக நடக்கிறது. அதோடு; கொலை, கொள்ளை, சூறையாடுதல், பெண் மோகம், ராஜபோகம், ஆட்சிக் கவிழ்ப்புகள், அதற்கான யுக்திகள் என்று விவக்கப்படுகிறது.
திப்பு சுல்தானின் ஆட்சி வீழ்ச்சிக்குக் காரணமாக இவ்வளவு காரியங்கள் நடக்கின்றன. இந்தக் காயங்களைத்தான் நாவல் மையப்படுத்துகிறது. திப்பு சுல்தானின் வீழ்ச்சியையோ, வெள்ளையன் ஆக்கிரமிப்புப் பற்றியோ நாவல் பேசவில்லை. அதிகார மாற்றம் நிகழ்வதற்குக் காரணிகளாக இருந்தவை பற்றி மட்டுமே பேசுகிறது. அதையும் சுவாரசியத்துடன் பேசுகிறது. இதுதான் இந்நாவலின் மிகப் பெரிய பலம்.
அதிகாரத்திற்காகவும் பேராசையாலும் நடக்கும் போரில் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள்; பலி கொடுக்கப்படுகிறார்கள். போரில் மதிப்பு வாய்ந்தது மனித உயிர்களல்ல; வெற்றி என்ற சொல் மட்டும்தான். ஒரே ஒரு மனிதனுடைய ஆசைக்காகவும், அதிகாரத் தேவைக்காகவும்தான் ஆயிரம் ஆயிரமாக மனிதர்கள் பலியாகிறார்கள். பலியாக்கப்படுகிறார்கள். அந்த ஒரு மனிதனுடைய ஆசையும், அதிகாரத்தை நோக்கிய விழைவும் நேர்மையானதாக இல்லை. வார்த்தைகளுக்கும் ஆணைகளுக்கும் இருக்கும் மரியாதை, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மனித உயிர்களுக்கு இல்லை என்பதைத்தான் இது வரை நடந்த எல்லாப் படையெடுப்புகளும் போர்களும், உறுதி செய்கின்றன.
அர்த்தமற்றுப் போன உயிர்ப் பலிகள், ஆயிரம் ஆயிரமாக கொன்று குவித்தாலும் தணியாத கோபம், வெறி, த்திரம், பகை, ஆவேசம், துவேஷம், காலத்திற்கேற்றவாறு, சூழலுக்கேற்றவாறு மாறும் உடன்படிக்கைகள், நம்ப வைத்து நாடகமாடி ஏமாற்றுதல்; காட்டிக் கொடுத்தல் இவைகள்தான் அரசாக, அரச நீதியாக, அரசாட்சியாக வரலாறு நெடுக நடந்துள்ளது. இவற்றைத்தான் ‘டணாயக்கன் கோட்டை’ நாவலிலும் பார்க்கிறோம்.
நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, வெள்ளப் பெருக்கின்போது ஆற்றைக் கடப்பதற்கான வழிமுறை, கிணற்றுக்குள்ளிருக்கும் குகைக் கோவிலிருந்து கோட்டைக்கு நூலேணி மூலம் செல்லுதல், கோவில் கருவறையில் குழந்தை வளருதல், சுரங்கப் பாதைகள், கோட்டைகளின் அமைப்பு முறை என்று, வரக் கூடிய விவரிப்புகள் பிரமாண்டமானதாக இருக்கிறது. அதே மாதி காரியங்களைச் செய்வதில் அக்கால மனிதர்களுக்கு இருந்த சாதுர்யம், மதிநுட்பம், சமயோசித புத்தி என்று பல அம்சங்கள், வாசகர்கள் மனத்தை ஈர்க்கிறது. அதோடு அக்காலத்தில் நடைமுறையில் இருந்த பழக்கவழக் கங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகள், சமூக ஒற்றுமை, இனவேற்றுமை, சமயம் சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் அழகுற பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாவலில் வரக்கூடிய முக்கிய கதாபாத்திரங்களான திப்பு சுல்தான், ராணி லட்சுமி அம்மிணி, வீரம்மா, வீராஜி, திவான் மீர் சடக், யாசின்கான், சல்லிவன், சுல்தானா பஃருன்னிஸா பேகம், பாலராஜா, தேவராஜா மற்றும் சிறு கதாபாத்திரங்களான மாஸ்தி, சோலைக்கிளி, சீதம்மா, ஈஸ்வ, குன்னம்மா, அலமேலு, ரங்கம்மா போன்ற கதாபாத்திரங்களும் நாவலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.
நாவலில் தேவையற்ற பாத்திரம் என்றோ, தேவையற்ற ஊளைச் சதைப்பகுதி என்றோ சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு மிகவும் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு நடத்தப்பட்ட சிறந்த நாடகக் காட்சி போல, நாவலின் ஒவ்வொரு பகுதியும் அமைந்துள்ளது.
ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால் எப்போதும் சதி, சூழ்ச்சி, நயவஞ்சகம் மட்டுமே இருப்பதில்லை. இவற்றோடு சேர்த்து மதமும், அதனுடைய மூட நம்பிக்கைகளும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதைத்தான் திப்பு சுல்தானின் கடைசி நாள் நிகழ்ச்சி காட்டுகிறது.
‘டணாயக்கன் கோட்டை’ நாவலில் வரக்கூடிய எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் மோசடிப் பேர்வழிகளாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள். திப்பு சுல்தான் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இருக்கிறான். அதனால்தான் வெல்ல முடியாத ‘மைசூர் புலி’ என்ற திப்புசுல்தானின் ஆட்சி, மிக எளிதாக வீழ்ச்சியுறுகிறது. இந்தியர்களே வெள்ளையர்களுக்கு யானை மீதும், குதிரை மீதும், தங்கம், வைரம் என்று மூட்டை மூட்டையாக ஏற்றி விட்டு, இந்திய மன்னர்களை ஆட்சியை விட்டு நீக்கிய அவலத்தின் ஒரு பகுதியை இந்நாவலில் காண்கிறோம். உலகெங்குமிருந்த சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், அதிகார விழைவால், காட்டிக் கொடுத்ததால் மட்டுமே வீழ்ந்து விடவில்லை. உலகில், என்று துப்பாக்கியும், பீரங்கிக் குண்டும் கண்டுபிடிக்கப்பட்டதோ அன்றே பிராந்தியம் சார்ந்த, வட்டாரம் சார்ந்த குறுநில மன்னர்களின் ஆட்சி வீழ்வதற்கான அத்தியாயம் தொடங்கியது.
மிகப் பெரிய ராஜ்ஜியங்கள் துப்பாக்கியாலும், பீரங்கிக் குண்டுகளாலும்தான் நிர்மாணிக்கப்பட்டது. பிராந்திய ஆயுதங்களான வில், அம்பு, ஈட்டி, எரிவாணம் போன்றவைகள் துப்பாக்கியின் முன், பீரங்கியின் முன் செயலிழந்து போயின. ஒரு வகையில் யுத்தத் தயாரிப்பு சம்பந்தமான விஞ்ஞானம்தான் எல்லா நாடுகளையும் அடிமைப்படுத்தியது.
திப்பு சுல்தான் வெள்ளையர் முன் தோற்றுப்போகவில்லை. விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் முன்தான் தோற்றுப்போனான். உலகில் அடிமைப்பட்ட ஒவ்வொரு நாடும் விஞ்ஞானத்தால்தான் அடிமைப்பட்டது. இந்தியாவும் அதனால்தான் அடிமைப்பட்டது என்பதை மிகவும் நேர்த்தியான முறையில் ‘டணாயக்கன் கோட்டை’ நாவல் சொல்கிறது.
பல விதங்களில் மிக முக்கியமான நாவலாக இருக்கிற இந்த நாவலில், திருக்குறளை மேற்கோள் காட்டியிருப்பது, பாம்பாட்டிச் சித்தர் பற்றிய குறிப்புகள், பரிமேலழகர் உரை குறித்த பகுதி, நாவலின் இடையிடையே வரக் கூடிய கதைச் சுருக்கம் போன்ற பகுதிகள்தான் நாவலுக்குச் சரிவைத் தருகின்றன. இந்தக் குறைபாடுகளையெல்லாம் மீறி, நாவல், வாசகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்று விடுகிறது.
‘டணாயக்கன் கோட்டை’ நாவலை வெளியிட்ட ‘அம்ருதா’ பதிப்பகம் பாராட்டுக்குயதாக இருக்கிறது. திப்பு சுல்தானின் உருவப்படம், ஸ்ரீகிருஷ்ண ராஜ உடையான் படம், திப்பு சுல்தான் பயன்படுத்திய ஆயுதங்கள், மைசூர் ராஜ்ஜிய வரைபடம், ஸ்ரீரங்கப்பட்டண வரைபடம், ஹைதர் அலியால் பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட இந்துக் கோவில்களின் படம், சிம்மாசனத்தை அலங்கக்கும் தெய்வீகப் பறவையின் படம், புலியின் படம், திப்பு சுல்தான் கொல்லப்பட்ட இடம், அடக்கம் செய்யப்பட்ட இடம் என்று பலவற்றை வண்ணத் தாளில் அச்சிட்டு, நாவலின் பக்கங்களுக்கிடையே சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. இக்காரியம் நாவலுக்கு கனம் சேர்த்திருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்
தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள்
இன்னும் சில சிபாரிசுகள்
கோவி. மணிசேகரன் என்ன ஆனார்?
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல், சாண்டில்யன்
கல்கி
37.523851
-122.047324