Hinduism



(ஆசிரியர்: திரு.ராமசாமி)
மாதா, அன்னை, அம்மா, தாய் என பல சொற்கள் இருந்தாலும் அவையனைத்தும் ஒருவரைத்தானே குறிக்கின்றன. நம்மை ஈன்று பாலூட்டி சீராட்டி வளர்த்த,வளர்க்கின்ற பெருமாட்டி அம்மாவைத்தவிர வேறு யார் இருக்கமுடியும்? அதனால்தானே நாம் “அன்னையும்,பிதாவும் —-மாதா பிதா  குரு,தெய்வம்’ என்றெல்லாம் அன்னையை முன்னிறுத்திப் பெருமை  கொள்கிறோம் பாராட்டுகிறோம்.நாட்டைத் தாய்நாடு என்று அழைக்கின்றோம். அப்போது கூட ‘ஜனனி,ஜன்மபூமி——-‘”பெற்ற தாயும்,பிறந்த நன்னாடும் “என்று தாய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.சிரமம் பாராது ஈரைந்து திங்கள் சுமந்து தான் உண்ணும்  உணவையே தன்  .   குழந்தைக்கு உணவாக்கி, பிறந்தபின் தன்  உதிரத்தை முலைப்பாலாகக் கொடுத்து  ஆளாக்கிய தாய்க்கு எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானம் கொடுப்பதில் தவறேதுமில்லையே! இந்த உறவு (பந்தம்)தொப்புள் கொடி உறவாகக் கூட இருக்கலாம்.ஆனால் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்பதை முழுமையாக உணர்ந்தவர்களல்லவா  நாம்?ஆகவே தாய்க்கு எங்கும் முதலிடம் கொடுப்பதில் வியப்பெதுமில்லையே!
நிலையற்ற உலகில் நிலையாத வாழ்வு வாழ்கின்ற சாமான்யர்களே நாம்.அன்னையின் அருமையைப்புரிந்தவர்கள், தெரிந்தவர்கள்  அன்னாரது பெருமையையைத்தேரிந்த நாம் உலக நாயகியான ஜகன்மாதாவான அம்பிகையின் அருளை உணரமாட்டோமா?அவளை  அரியணையில் அமர்த்தி ஆராதிக்கமட்டோமா?ஆகவே தான் ‘மாதா’வின் முதலில் ‘ஸ்ரீ’ என்ற சொல்லைச் சேர்த்து ,’ஸ்ரீ மாதா’ என்று விளித்து மகிழ்ச்சியடைகிறோம். ‘ஸ்ரீ’ (திரு) என்றாலே இகபர செல்வங்களை அருளுபவள் என்றுதானே பொருள்.அதனால் தான் லலிதா சஹஸ்ரநாமம் “ஸ்ரீ மாதா . மகாராஞீ “என்று தொடங்குகிறது.
அன்னையின் அருள் இயல்பானது,இயற்கையானது. உள்ளன்போடு ஒரு முறை தெரிந்தோ,தெரியாமலோ அழைத்தால் கூட அருள் பாலிப்பவள் அன்னையே!அவள் அவ்யாஜ கருணா ரூபிணி. குழந்தைகளாகிய நாம் எப்படி உபாசித்தாலும் அதை ஏற்று அனுக்ரஹம் செய்யக்கூடியவள்.அவள் எதிர்பார்ப்பது “உள்ளன்பும், பக்தியும் தான்’வேறு க்ரியா லாபங்களையோ   அல்லது அவை பற்றிய ஞானத்தையோ அல்ல.இதையொட்டியே ஆசார்யாளும்

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ச்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ச்துதுகதா:!
ந ஜானே முத்ராஸ்து ததபி ச ந ஜானே விலபனம்
பரம் ஜானே மாத: த்வதனுசரணம்   க்லேசஹரணம்!!
என்று சொல்லியிருக்கிறார்கள்.
பொருள்:- எனக்கு மந்திரம்,தந்திரம்,வழிபாட்டு வகை,தியானம்,முத்திரைகள் போன்று எதுவுமே தெரியாது.ஆனால்  அன்னையே!உன்னைச் சரணடைந்து பக்தியோடு வழிபட்டால் துன்பங்கள் அகலும் என்பதை உணர்ந்துள்ளேன்.
மேலும் அன்னை க்ஷிப்ர  பிரசாதினி அருள் புரிவதில்,அதுவும் விரைந்து புரிவதில் அவளுக்கு  நிகர் அவளே!அதனால்தான் அம்மையை ‘சுகாராத்யா,சுலபாகதி’ என்றெல்லாம் அழைக்கின்றோம். நியம நிர்பந்தங்களில்லாமலேயே உபாசிக்கலாம்.உபாசனை மிக மிக எளிதானது.அம்மையை ஒருமித்த மனதோடு சரணடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.வேண்டும் அளவுக்கு மேலாகவே பெறலாம்.சகலவிதமான ஆபத்துகளிலிருந்து விடுபடலாம். அன்னை கருணையின் உருவம்.

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாசமதிகம் , சரண்யே லோகானாம்   தவ ஹி சரணாவேவ  நிபுணௌ                   (பயத்திலிருந்து காப்பவள்:கேட்பதற்கு  மேலாகவே நன்மை (பலன்)செய்யக்கூடியவள் அன்னையின் சரணங்களே நமக்கு எஞ்ஞான்றும்  துணை.)
நம் பாவங்களனைத்திர்க்கும்  பிராயச்சித்தம் அன்னையின் பாதங்களைப் பணிவதே.
க்ரதச்யாகில  பாபஸ் ய   ஞானதோ அஞானதோ வா ,பிராயச்சித்தம் பரம் ப்ரோக்தம் பராசக்தே:பத ஸ்மருதி:
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் அன்னை பராசக்தியின் பாதஸ்மரணமே
ஆகவே சக்தி வழிபாடு மிகவும் சிறந்தது.மேலும் அவளே சிவசக்தி,அர்த்தநாரி .அவளை வழிபட்டு அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!


அமேரிக்காவில் தீபாவளி எப்படி கொண்டாடுவார்கள் என்று என் உறவினர்கள் பல முறை கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு முன்பெல்லாம் ஒன்றும் சொல்ல இருக்காது. அதாவது ஒரு எட்டு வருடம் முன்பெல்லாம், தீபாவளி என்பது சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு செய்யும் சில ஃபோன் கால்களுடன் தீபாவளி காலை முடிந்துவிட்டாதாக தோன்றும். என் அன்பு மனைவியிடம் இருந்து சில ஸ்வீட்ஸுடனும், வீட்டில் ஒரு சிறிய பூஜையுடனும் தீபாவளி இரவும் முடிந்துவிட்டதாகத் தோன்றும். இப்படி அமைதியான முறையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு ஏக்கத்தை விட்டில் நிறைத்து விட்டு வந்து போகும். இது அனேகமாக இங்கு இன்றும் பல இல்லங்களில் நடக்கும் ஒரு காட்சிதான். ஆனால் சில வருடங்களாக இதில் இனிய மாற்றங்கள். இந்த மாதிரி போரடித்த தீபாவளியை போக்க வேண்டும் என்று மனைவியும் நானும் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவாக ஒரு பாரம்பரியம் உருவாகத் தொடங்கியிருக்கிறது.

தீபாவளி நெருங்குகிறது…. தம்பிகளுடனும், கம்பவுண்ட் நண்பர்களுடனும் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே எந்த வெடிகள் வாங்க வேண்டும் என்று ஒரு நூறு ரூபாய்க்கு பட்டியல் போட்டு, கடைசியில் ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் ஒரு இருபத்தைந்து ரூபாய்க்கு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்ன்ர் தான், வெடி மற்றும் மத்தாப்புக்கள் வருகிறது. அது போலத்தான் புதிய உடைகளும். திபாவளிக்கு முந்தின தினம் டெய்லர் கடைக்குப் போய் காத்திருந்து, அவர் கருணையில் கடைசியில் இரவு ஒரு ஒன்பது மணிக்கு புதிய உடைகள் வந்து சேர்கிறது. இதல்லாம் ஒரு துன்பமாயினும் அதிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. பாட்டி வீட்டில் தான் அனேகமாகத் தீபாவளி. மாலை அப்பா வந்ததும் டவுன் பஸ் பிடித்து கொட்டும் மழையில் கடைசி ”யாக்கோபுரம்” பஸ் பிடித்து கிட்டதட்ட இரவு பத்தரை மணிக்கு பாட்டியின் ஊர் போய் சேர்கிறோம். ஊரே அந்த இரவிலும் கோலாகலம் அடைந்திருக்கிறது. ஒரு வீட்டிலும் முன் கதவு மூடப்படவில்லை.ஒவ்வொரு வீட்டின் முன்னும் சித்தப்பா,பெரியப்பா, மாமா-அத்தை இவர்களின் பையன்களும், பெண்களும் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது வெளியே வந்து மகிழ்ச்சி பொங்க ”வாங்க வாங்க” என்று அபபாவிடமும், அம்மாவிடமும் விசாரித்துவிட்டு “போளி ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது”, “துக்கடா அடுப்பில் இருக்கிறது” என்று எதாவது சொல்லிப் போகிறார்கள்.அதற்க்குள் சித்தப்பா எங்களை பார்த்து வந்து “என்ன கடைசி பஸ் தான் கிடைத்ததா” என்று விசாரித்துக் கொண்டே அம்மா கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்கிறார்…வெடி மத்தாப்புகளுக்கிடையிலும், குசலம் விசாரிப்புகளுக்கு இடையிலும் புகுந்து, கடந்து பாட்டி வீடு வந்தடைகிறோம். அங்கே சித்தப்பா மகன்கள் மற்ற நண்பர்களுடன் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி வந்து எல்லோரையும் வரவேற்கிறாள். வந்ததும், வராததுமாக “லக்‌ஷ்மி, வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தேன், நல்ல வேலை வந்துட்ட. போய் அதை பாத்துக்க” என்று சொல்ல அம்மா உடைகளை மாற்ற நேரமில்லாமல் அடுப்படியில் சித்திகளுடன் ஐக்கியமாகிறாள்.
“என்ன டெய்லர் நேரமாக்கிட்டானா? கடைசி கார் தானா கிடைச்சுது?”
“இல்லம்மா, அஃபீஸ்ல் வேலை 7 மணி வரை இருந்துது. அப்புறம் டெய்லர்ட்ட போயிட்டு வரும் போதே, மழை வேற”
“சரி விடு. வா சாப்பிடு…”
“நீங்களும் வாங்கடா…” நாங்களும் உற்ச்சாகமாகி பின்னல் ஓடுகிறோம்.
எல்லோரும் பேசிக்கொண்டே சுடச் சுட தோசை மற்றும் தேங்கா சட்னி, சாம்பார் ஸ்வீட்கள் முதலியவற்றை கபளீகரம் பண்ணுகிறோம்.
அப்பா மற்றும் சித்தப்பா ஊர் முழுவதும் உள்ள சகோதரர்களையும், தங்களைப்போன்று வெளியூரிலிருந்து வந்த சகோதரர்களையும் (எல்லாம் பெரியப்பா – சித்தப்பா வீட்டு சகோதரர்கள் தான் – ஊரே சொந்தக்ககாரர்கள் தானே) பார்க்க, எல்லோரும் கூடும் அடுத்தடுத்து நீண்ட திண்ணைகள் கொண்ட வீடுகள் அமைந்த நடுத்தெருவிற்க்குச் செல்கிறார்கள். மூன்று வீட்டு திணனையை சகோதரர்கள் நிறத்திருக்கிறார்கள். பலமான சிரிப்பு, பேச்சு, மீண்டும் சிரிப்பு. இனி மேல் இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்…நாங்கள் எல்லோரும் அம்மாக்களிருக்கும் அடுப்படிக்கும், தெருவிற்க்கும், அப்பாக்களிருக்கும் நடுத்தெருவிற்க்கும் இரவு 11 மணியிலிருந்து 2 மணி வரை ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கேட்பதற்கு ஒரு ஆள் கிடையாது. எல்லா இடங்களும் விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. வெடிகளின் சத்தங்களிலும், ஜனங்களின் போக்கு வரத்திலும் ஊர் நிறைந்திருக்கிறது….

முப்பது வருடத்திற்கு முன்னால் அது. நிச்சயம் இப்பொழுது இப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆம். இங்கும் தீபாவளி வந்துவிட்டதுதான்.நாளை மறு நாள் தீபாவளி.சித்ரா முன்னரே எல்லோருக்கும் ”ஈவைட்” மூலம் தகவல் அனுப்பி தீபாவளிக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். தீபாவளி காலையில் ஒன்றும் பண்ண முடியாது. பட்ஷணம் பல பண்ண வேண்டும் என்ற அவளுக்கு ஆசை தான். ஆனால் தனி ஆளாக அதெல்லாம் செய்ய முடியுமா? என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது? அனைத்து நண்பர்களும், மனைவிகளும் பிஸியாக இருப்பவர்கள். எல்லோருக்கும் வேலை, வீடு, குழந்தைகள். மொத்தத்தில் தீபாவளி அன்று காலை அலுவலகத்திற்கு லீவ் போட்டால் தான் முடியும் என்ற நிலைமை. அப்படிதான் ஆயிற்று. நான் உதவி செய்யலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலுவலகம் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில் (மற்ற நான்கு நாட்கள் கோர்ட்டில்)மாட்டிக் கொண்டதால் சித்ராவிற்கு உதவி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை சத்தமில்லாமல் வாபஸ் வாங்கினேன்.

சவாலை சமாளிக்கத்தான் அலுவலகத்தில் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறாள் சித்ரா. பிராஜக்ட் மேனஜர். தீபாவளியும் அவள் கண்ணில் ஒரு சிறு பிராஜக்ட்டாக உருவெடுத்தது. நான் மாலையில் வீடு வந்து சேரும் பொழுது அனேகமாக எல்லாம் தயார். நான் என் பங்குக்கு எதாவது உதவி செய்யவா என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டு வைத்தேன்.கேட்கும் போதே ஒரு பயம் தான். எங்கே வேலை நிறைய இருக்குமோ என்று. நல்ல வேலை பெரிதாக  செய்வதற்கு ஒன்றும் மீதம் இல்லை. நண்பர்களும் ஸ்வீட், காரம், டின்னர் ஐட்டங்களுடன் 7 மணிக்கு ஆஜர்.

தீபாவளிக்கு வெடி மத்தாப்பு எல்லாம் ஜூலை மாதமே வாங்கிவிடுவோம். அப்பாடா. இதில் ஒன்றிலாவது இந்தியாவில் கொண்டாடுபவர்களை தோற்கடித்தாகிவிட்டது. அட வெடியெல்லாம் போடுகிறீர்களா என்று ஆச்சர்யபடுகிறீர்களா? ஆம. நிச்சயாமாக. ஜூலை நான்கு இங்கே சுதந்திர தினம். அதற்கு ஃபயர்வொர்க்ஸ் கிடைக்கும். சிவாகாசி சரக்கு இல்லை. அதை வாங்கி வைத்துவிடுவோம். இம்முறையும் அது தான். பேக்யார்ட் என்று சொல்லும் கொல்லை புறத்தில் கோலாகலம் மணி 8 அளவில் தொடங்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்காகத் தானெ. அனைத்து குழந்தைகளும் வந்து சேர்வதற்கு 8 மணி ஆகிவிட்டது. சற்றே நவம்பர் குளிர் மெலிதாக தாக்குகிறது. கம்பி மத்தாப்புகளில் ஆரம்பித்த கொண்டாட்டம் படிப்படியாக் ப்ரோமோஷன் பெற்று, உய் உய் என்ற சத்தங்களுடன் பெரிதாக சில மணித்துளிகள் வெடிக்கும் வெடியாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம்.

பின்னர் ஸ்வீட்களுடன் டின்னர். குழந்தைகளின் விளையாட்டு. பெரியவர்களின் பேச்சுகள். கிட்டத்தட்ட தமிழகத்தில் தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி.ஒரு முக்கியமான விஷயம். அனேகமாக உங்கள் வீட்டிற்கெல்லாம் அழையா விருந்தினராக வரிசையாக வருகை தரும் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர்கள், திரை நட்சத்திரங்கள், புது சினிமாக்கள் பற்றிய ரிவ்யூக்கள் இவையெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. சாலமன் பாபையாக்களை வீட்டிற்குள் கூட்டி வரும் டி.வி.சேனலகள் எங்கள் வீட்டில் கிடையாது. அடுத்த முறை தீபாவளி அன்று முழுவதும் டி.வி.யை அணைத்து விட்டு கொண்டாடுங்கள். அதன் மகிழ்ச்சியே தனி.

போன வருடமும், இந்த வருடமும் வார இறுதி என்பதால் மகிழ்ச்சியான மன நிலையில் கொண்டாட முடிந்தது. தீபாவளிக்கு விடுமுறை எவ்வளவு அவசியம் என்பது நன்றாகவே புரிந்தது. ஆர்வி – ஹேமா, குழந்தைகளுடன்  சில வருடங்களாக சேர்ந்து தான் தீபாவளி கொண்டாடுகிறோம். இரண்டு வருடத்திற்கு முன் மேலும் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள். போன வருடம் ஒரு ஐந்து குடும்பம். இந்த வருடம் இந்த எண்ணிக்கையில் மேலும் இரண்டு கூடியது. இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மாமா-அத்தை, பெரியப்பா-சித்தப்பா, பெரியம்மா-சித்திகள்.


அடுத்த வருடத்திற்கு காத்திருக்கிறோம்.


திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரான ‘பரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘  மீது மதிப்பும்,  பக்தியும் உண்டு.   அதற்கு ஒரு காரணம் உண்டு.  அது ஒரு முக்கியமான சம்பவம்.  ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,  சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது.  அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அந்தமடம்,  கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

https://i0.wp.com/www.indiadivine.org/content_images/1/7/paramacharya-01.jpg
நான், எனது தாயார்,  எனது தந்தையார்,  எனது மனைவி நான்கு பேரும் சென்றோம்.  சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.  நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.  காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லைட்டெல்லாம்  அணைந்துவிட்டது.  அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு,  மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  மெல்லக் கீழே உட்கார்ந்து,  கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.  ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார்.  ‘ஆமாங்கய்யா!  நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்.  என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

அப்போது அவர்,  “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.  திருப்பதி சென்றிருந்தேன்.  அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது.  யானை நன்றாக இருக்கிறதே  யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘  என்றார்கள்.  திருச்சி சென்றிருந்தேன்.  அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன்.  அங்கும் யானை மாலை போட்டது.  யானை அழகாக இருக்கிறது.  யானை யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன்.  அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள்.  ‘இது யாருடையது ?’  என்றேன்.    ‘சிவாஜி கணேசன்  கொடுத்தது‘ என்றார்கள்.  நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் பப்ளிசிடிக்காக  சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

“ஆனால்,  யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.  அந்த மனசு உனக்கிருக்கிறது.  ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”  என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.  அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ?  எத்தனை அனுக்கிரஹம்!   எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை,  இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம்.    பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.   எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம் .








அன்று காலையில்தான் மதிப்பிற்குரிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ மடத்தில்  பரமாசார்யாளைத் தரிசித்து விட்டு ஆசி பெற்றுச் சென்றிருந்தார்கள் .  ஆசார்யாள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்.  மாலை சுமார் நான்கு மணியிருக்கும்.   “பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள பிரஞ்சு பேராசிரியர்கள் பெரியவாளை தரிசிக்க இப்பொழுது வரப் போகிறார்கள்.  நீங்களும் இருந்து விட்டுப் போங்களேன்” என்றார் ஸ்ரீ மடத்தில் இருந்த ஒருவர்.   “சரி” என்று தயங்கினேன்.

சில நிமிடங்களுக்குள்ளாக எதிர்பார்த்த பேராசிரியர்கள் வந்தனர்.  “பெரியவாளைப் பார்க்க அவர்கள் வரலாம்.  உங்களையும் பெரியவாள் கூட வரச் சொன்னார்” என்றார் மடத்தைச் சேர்ந்தவர்.  மகிழ்ச்சியுடன் உடன் சென்றேன்.  பெரியவாள் எளிமையே உருவமாகத் தரையில் அமர்ந்திருந்தார்கள்.  தரிசிக்க வந்த ஐந்து பிரஞ்சு பேராசிரியர்களையும் எதிரில் அமரும்படி கூறினார்.  என்னை தமக்கு அருகில் வந்து அவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லுமாறு பணித்தார்.

வந்தவர்களில் மூவர் பெண்கள்;  இருவர் ஆண்கள்.  அவர்களின் தலைவராக இருப்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்திருப்பதாகவும்,  மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் வந்திருப்பதாகவும் கூறினார்.  பெரியவாள் சிரித்துக் கொண்டே ஒவ்வொருவருடைய பெயரையும்,  அவர்கள் எந்தத் துறையில் பேராசிரியர்களாகத் திகழ்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து கொண்டார்.

அவர்கள் தங்கள் தங்கள் துறைகளைக் கூறி வரும்போது,  பெரியவாள் சட்டென்று அவர்களில் ஒரு பெண்மணியைப் பார்த்து,  “நீங்கள் இத்தாலியிலிருந்து வந்தவர்களா?” என்று கேட்டார்.  அந்தப் பெண்மணி பிரஞ்சு நாட்டு பாரீஸ் மாநகரைச் சேர்ந்தவர்.  அங்கு பேராசிரியர்.  அப்படி இருக்கும்போது ஏன் இப்படிக் கேட்கிறார் என்று எண்ணினேன்.  அந்த பெண்மணி கூறிய பதில் எங்களை வியப்பிலாழ்த்தியது. “எங்கள் முன்னோர்கள் இத்தாலியைச் சார்ந்தவர்கள் தாம்” என்றார்.  அடுத்து பெரியவாள் கேட்ட கேள்வி மேலும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.  பாரிஸுக்கு வடக்கில் லுக்ஸ்ம்பர்க்  என்ற நகருக்குத் தெற்கில் வாழ்ந்தவர்களா? என்று கேட்டார்.  அந்த பெண்மணி ஆச்சரியத்தில் மூழ்கி தன்னுடன் வந்த ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டே,  “ஆமாம்” என்று கூறினார்.  இதற்கு முன் அப்பெண்மணி இந்தியா வந்ததேயில்லை.  அப் பெண்மணியைப் பற்றி யாருக்குமே தெரியாது.  அப்படியிருக்க, பெரியவாள் பிரான்சு ஜெர்மனி நாடுகளின் அமைப்பையும்,  இந்தப் பகுதி தான் என்று வரையறுத்துக் கூறும் பாங்கையும் கண்டு நாங்கள் வியப்பை அடக்க முடியாது வாய் புதைத்து நின்றோம்.

எங்கள் முக பாவங்களைப் பார்த்து பெரியவாளே அது எப்படி என்று விரித்து உரைத்தார்கள்.  “இத்தாலிய நாட்டினருக்கும்,  பாரிஸுக்கும் வடக்கே லுக்ஸ்ம்பர்கிற்குத்   தெற்கில் உள்ளவர்களுக்கும் பெரும்பாலும் தலைக் கேசம் கருப்பாயிருக்கும்.  இத்தாலியர்களின் லத்தீன் மொழியின் உச்சரிப்பு ஒருவிதமாக இருக்கும்”  என்றார்கள்.  அதைக் கேட்டு அந்த பெண்மணி, “ஆமாம்!  ஆமாம்!” என்று வேகமாகத் தலையாட்டினார்.

காஞ்சிபுரத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருக்கும் பெரியவாள்,  உலகில் எங்கிருந்து யார் வந்தாலும்,  எம்மொழி பேசினாலும்,  இந்த பகுதியிலிருந்து வந்தவர்,  இந்த மொழி பின்னணி கொண்டவர் என்று சொல்லும் பாங்கையும் பார்த்த போது,  வேத காலத்தில் அனைத்தையும் அறிந்த மகரிஷிகள் எல்லாம் ஒருங்கே இணைந்து  இன்று பெரியவாள் உருவில் ஒரு ஒப்பற்ற பரம ஞானியாகத் திகழ்வதை உணர்ந்தேன்.

— டாக்டர்,  இரா.  நாகசாமி (முன்னாள் தொல்பொருள்  ஆய்வுத் துறை தலைவர்)



இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

இன்னொரு சம்பவம்…

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

***

நீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்!

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்… திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!

அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.

ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.

அவ்வளவுதான்… மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.

கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.


காஞ்சிப் பெரியவர்,  திருப்பதி போகும் வழியில் ஒரு சின்னக் கிராமத்தில் முகாமிட்டிருந்தார் .  மெயின் சாலையிலிருந்து வயல்களுக்கிடையே உள்ள கப்பி ரோடு வழியாக அந்த கிராமத்தை அடைய வேண்டும்.  நான் அப்போது ‘தினமணி கதிரி’ல் இருந்தேன்.  சுவாமிகளைப் பார்ப்பதற்காக நானும், எம். கே. என்று அழைக்கப்படும் திரு எம். கிருஷ்ணசாமியும் (இப்போது லூகாஸ் டி.வி.எஸ்.)  திரு டி.கே.தியாகராஜனும் போயிருந்தோம்.  எங்களைப் பார்த்ததும், சுவாமிகள் கையால் சைகை காட்டி எதிரே உட்காரச் சொன்னார்கள்.

பிறகு என்னைப் பார்த்து,  “எக்ஸ்பிரஸில் ‘கீ’  போஸ்டில் இருக்கியோ ? ” என்று கேட்டுக் கொண்டே சாவியால் திறப்பது போல் அபிநயித்துக் காட்டினார்.  நான் பதில் எதும் சொல்லாமல் பரவசத்தோடு அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.  பெரியவர்  ரொம்ப உற்சாகத்தோடு காணப்பட்டார்.

“நீ அமோகமா இருப்பே.  க்ஷேமமாய் இருப்பே” என்று வாயார வாழ்த்தினார்.

சிறிது நேரம் மௌனம்.

“பாலிட்டி என்றால் என்ன தெரியுமோ ?” என்றார் சட்டென்று.

எனக்குத் தெரியவில்லை.  தயங்கி விட்டு,  ”  ‘பாலிடிக்ஸ்’   என்றால் தெரியும் ” என்றேன்.

“நான் கேட்பது பாலிடிக்ஸ் இல்லை.  பாலிட்டி” என்றார்.

விழித்தேன்,  அல்லது விழித்தோம்.

“மனித சமுதாயத்துக்கு மொத்தமாகச் செய்யப்படுகிற சேவைக்கு  ‘பாலிட்டி’  என்று சொல்லலாம்.  ‘பாலிட்டி’  என்று தலைப்பிட்டு நீ உன் பத்திரிகையில் வாரா வாரம்  ‘ரிலிஜனை’ப் பற்றி எழுது”  என்றார்.  ஏறக்குறைய ஒரு கட்டளை மாதிரி.

“மதம்,  பக்தி இது பற்றியெல்லாம் பத்திரிகையில் எப்போதாவது வரலாமே தவிர,  வாரா வாரம் எழுதுவது கூடாது என்ற கொள்கை உடையவன் நான்” என்றேன்.

சுவாமிகள் என்னிடம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை.  சற்று வியப்புடன், “ஏன் அப்படிச் சொல்கிறாய் ?” என்று கேட்டார்.

“ரிலிஜன் எழுதினால் பத்திரிகை விற்பனையாவதில்லை.  சீரியசாக எழுதினால் சர்குலேஷன்  உயராது”  என்றேன்.

“பரவாயில்லை;  நீ எழுது.  விற்பனையாகும்”  என்றார்.

எனக்கு ஏன் கொள்கையிலிருந்து விலகிப் போக விருப்பமில்லை.

“பெரியவா மன்னிக்க வேண்டும்.  என் பத்திரிகையில் நான் ரிலிஜனைப் பற்றி எழுதுவதாக இல்லை.  விற்பனை பாதிக்கும்”  என்றேன்.

நான் பிடிவாதமாகச் சொன்னாலும் பெரியவர்கள் என்னிடம் ஒரு குழந்தையிடம் காட்டும் அன்பைக் காட்டிப் பேசினார்.

“அப்படியா நினைக்கிறாய் ?” என்று இழுத்தார் போல் விட்டு விட்டார்.

அப்புறம் மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.  காரில் ஏறி கப்பி ரோடில் போய்க் கொண்டிருந்தபோது சுவாமிகள் முகாமிலிருந்த பிராமணர் ஒருவர் எங்களைத் துரத்திக் கொண்டு  சைக்கிளில்  வருவதைக் கவனித்தோம்.  அவர் எங்களிடம் ஏதோ சொல்லத்தான் வருகிறார் என்பதை ஊகித்து காரை நிறுத்தச் சொன்னோம்.

“பெரியவர் உங்களைக் கூப்பிடுகிறார்”  என்றார் அந்த மடத்து ஆள் மூச்சு வாங்க.

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று மூவரும் யோசித்துக்கொண்டே போனோம்.

“ரிலிஜன், கடவுள் பற்றியெல்லாம் எழுதினால் பத்திரிகை விற்காது என்று சொன்னாயே,  இப்போது தினமணி பேப்பரில் தினமும் மாம்பலத்து திடீர்ப் பிள்ளையாரைப் பற்றி எழுதுகிறார்களே!  இதனால் விற்பனை அதிகரித்திருப்பதாகக்  கேள்விப் பட்டேனே !” என்றார்.

அப்போது  மாம்பலத்தில் திடீர்ப் பிள்ளையார் பூமியிலிருந்து கிளம்பி தினம் ஓர் அங்குலமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம்.  பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த திடீர்ப் பிள்ளையாரைப் பார்க்கப் பெரும் கூட்டமாகக் கூடிக் கொண்டிருந்தார்கள்.

“பெரியவா நினைக்கிற மாதிரி அது ரிலிஜன் எழுதுவதால் ஆகும் விற்பனை அல்ல.  தெய்வ பக்திக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.  ஒரு பரபரப்பான செய்தியில் சஸ்பென்சும் சேர்ந்து கொண்டது.  அதனால் விற்பனை கூடி உள்ளது.  அவ்வளவுதான்”  என்றேன்.

“ஓகோ,  அப்படி நினைக்கிறாயா,  சரி நீ போகலாம்”  என்பது போல் தலையசைத்து விட்டார்.

தொடர்புடைய பதிவுகள்:

பெரியவாள் – கவிஞர் வாலி


ஹுசேனைப் பற்றி எழுதியது போதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கே கொஞ்சம் அலுத்துவிட்டது. ஆனால் இரண்டு அருமையான பதிவுகளைப் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது.

ஒன்று டாக்டர் ருத்ரன் எழுதியது. இதன் பின்புலம் ஹுசேனை வைத்து ஷோ காட்டி அவருக்கு எதிராக ஒரு அணியில் ஓட்டுகளை திரட்டுவதே என்று நிறுவுகிறார். அப்புறம் நிர்வாண சரஸ்வதி விஷயத்தில் literal ஆகவே படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறார், புட்டு புட்டு வைக்கிறார். கட்டாயமாக படித்துப் பாருங்கள்.

இன்னொன்று ராஜ நடராஜன் எழுதியது. ஹுசேன் இது பற்றி சொன்னவற்றை பதித்திருக்கிறார். அருமையான பதிவு, படித்துப் பாருங்கள்.

இன்னொரு விஷயம் – நான் கூட கொஞ்சம் பயந்தேன், டாக்டர் ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி படத்தை எல்லாருக்கும் மீண்டும் நினைவுபடுத்தி அனாவசியமாக அவரை வம்புக்கு இழுக்கிறோமே என்று. ஒருவர் – ஒரே ஒருவர் கூட அதை ஆட்சேபிக்கவில்லை. என்ன வரையப்பட்டிருக்கிறது என்பது என்பதை விட யார் வரைந்தது என்பதுதான் முக்கியம்!

பின்குறிப்பு: எதிர்வினைக்கு எதிர்ப்பதம் என்னங்க? யாருக்காவது தெரியுமா? நேர்வினை என்றால் சரியாக வரவில்லை, எதிர் எதிர்வினை என்று எழுதினால் எனக்கு எதிரிகள் உருவாகிவிடப் போகிறார்கள்!

தொகுக்ககப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
டாக்டர் ருத்ரன் படம் வரைந்து பாகங்களை குறிக்கிறார்
ராஜ நடராஜன் ஹுசேன் என்ன சொல்கிறார் என்பதை பதித்திருக்கிறார்
ஹுசேன் – சில எதிர்வினைகள்
எம்.எஃப். ஹுசேனின் “சர்ச்சைக்குரிய” ஓவியங்கள் பற்றி நான், டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி நான், டாக்டர் ருத்ரன்


ருத்ரன் வரைந்த நிர்வாண சரஸ்வதி

இந்த பதிவை எழுத மூன்று காரணங்கள். ஒன்று கிரி என்பவர் எழுதிய ஒரு பதிவு, இரண்டு திருச்சிக்காரன் என் முந்தைய பதிவில் எழுதிய சில பின்னூட்டங்கள், மூன்று டோண்டுவின் ஒரு பதிவு.

ஹுசேன் பற்றி என் நிலை – ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – தெரிந்ததே. டாக்டர் ருத்ரன், ஜெயமோகன் போன்றவர்கள் ஏறக்குறைய இதே நிலை எடுப்பவர்கள். டாக்டர் ருத்ரன் ஓவியர். அவர் ஹுசேனின் ஓவியங்களை ஒரு நிபுணருக்கு மட்டுமே கை வரும் ஆர்வத்துடன் ரசிக்கிறார், எழுதுகிறார். ஜெயமோகன் ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மையில் இவையும் அடங்கும் என்பதை வற்புறுத்துகிறார்.

பதிவுலகத்தில் இந்த நிலை எடுப்பவர்கள் மைனாரிடிதான். பல தளங்களில் உறுமல்தான் கேட்கிறது. நான் அவ்வப்போது பார்க்கும் தளங்களில் தமிழ் ஹிந்து தளம், டோண்டு, திருச்சிக்காரன் என்று பலரும் எதிர்வினை புரிகிறார்கள். என்ன கொழுப்பு இந்த ஹுசேனுக்கு, முகமதை இப்படி வரைவானா என்று பலரும் குமுறுகிறார்கள். என்ன வரையப்பட்டிருக்கிறது என்பதை விட பலருக்கு வரைந்தது ஒரு முஸ்லிம் ஆயிற்றே என்பதுதான் முக்கியம். ஒரு ஹிந்து வரைந்திருந்தால் என்ன சொல்வார்கள்? டாக்டர் ருத்ரன் இப்படி சில படங்கள் வரைந்திருக்கிறார், அதை என் ஒரிஜினல் பதிவில் பதிக்க அனுமதியும் கொடுத்தார். அதைப் பற்றி ஒரு குரல் – ஒரே ஒரு குரல் – கூட வரவில்லை. அவர்கள் ரேடாரில் இது வரவே இல்லையா, இல்லை ஹிந்து வரைந்தால் அது அவர்கள் மனதை புண்படுத்தாதா என்று தெரியவில்லை. இங்கே அவரது ஓவியங்களை மீள்பதிவு செய்திருக்கிறேன். (டாக்டர் ருத்ரன் பேரை இப்படி firing lineஇல் இழுப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாராக!)

கிரியின் முக்கியமான கேள்வி # 1 – ஹுசேனை விமர்சிப்பவர்கள் ஹிந்து வெறியர்களா?
இல்லை, இல்லவே இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஹுசேன் படம் என் மனதை புண்படுத்துகிறது என்று சொன்னால் ஹிந்துத்வா என்று யாராவது சொன்னால் “போய்ட்டு வா” என்று அனுப்பி விடுங்கள். (ஹிந்துத்வா என்பது எப்படி “கெட்ட” வார்த்தை ஆகிறது? இஸ்லாமியம், கிறிஸ்துவம், பவுத்தம் எல்லாம் கெட்ட வார்த்தையா?)
உங்கள் அபார்ட்மெண்டில் நீங்கள் உங்கள் சந்தோஷத்தை கொண்டாட மிக அதிக வால்யூமில் பாட்டு வைத்து ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் அபார்ட்மென்ட், உங்களுக்கு கொண்டாட எல்லா உரிமையும் உண்டுதான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அது அடுத்தவர்களை பாதிக்கத்தான் செய்கிறது. அப்படி பாதிக்கும் புள்ளி என்ன என்பதில் பலருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு புள்ளி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. என்னைப் பொறுத்த வரையில் இந்த விஷயத்தில் அந்தப் புள்ளி ஹுசேனைத் தாண்டி வெகு தூரத்தில் இருக்கிறது. அதனால்தான் இப்படி வரைவது தவறு என்று சட்டம் இருந்தால் அது மாற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதற்காக உங்களுக்கு அந்த புள்ளி பக்கத்தில் இருக்கக் கூடாதா என்ன? எனக்கு காது டமாரம், பாட்டு எவ்வளவு சத்தமாக வைத்தாலும் கேட்பதில்லை என்றால் நீங்களும் செவிடாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
எனக்கு தெய்வங்கள் உண்மையிலேயே மனித சக்திக்கு அப்பாற்பட்டவை. போயும் போயும் ஒரு மனிதன் தெய்வங்களை அவமானப்படுத்த முடியும் என்று நினைக்கக் கூட முடியவில்லை. பெரியார் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு பிள்ளையாரை அவமானப்படுத்துவதோ இல்லை ஹுசேன் சரஸ்வதியை நிர்வாணமாக வரைந்து சரஸ்வதியை அவமானப்படுத்துவதோ எப்படி முடியும்? நீங்கள் தெய்வங்கள் மனிதர்களால் அவமானப்படுத்தக் கூடியவை என்று நினைக்கலாம். அப்படி நினைப்பதும், அதனால் ஹுசேனை விமர்சிப்பதும் உங்கள் உரிமை. ஆனால் அவர் மீது வன்முறை என்ற பேச்சே கூடாது, அது சட்ட, நியாய விரோதம். சட்டம் இருக்கிறதாம், அதன்படி நடவடிக்கை எடுங்கள்! (நான் அந்த சட்டம் மாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவன். ஏனென்றால் கருத்து சுதந்திரம் எனக்கு மிக முக்கியம்.)
பொதுவாக இந்திய அரசுக்கு இந்த புள்ளி மிக பக்கத்தில் இருக்கிறது. அதனால்தான் இந்த மாதிரி விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக – முட்டாள்தனமாக, கோழைத்தனமாக – நடந்து கொள்கிறது. அதனால்தான் சல்மான் ரஷ்டியின் புத்தகம் தடை செய்யப்படுகிறது, டாவின்சி கோட் திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இன்றைக்கு ஹுசேன் செய்ததும் தவறு என்று சட்டமே இருப்பது போல தெரிகிறது. (சும்மா டம்மி கேசா, இல்லை நிஜமாகவே சட்டப்படி ஹுசேன் தண்டனைக்குரியவரா என்று எனக்கு சந்தேகம் உண்டு.)
இப்படி வரைந்திருப்பது என் மனதை புண்படுத்துகிறது என்று சொல்ல – உங்கள் உணர்வுகளைப் பற்றி நீங்கள் சொல்ல – உங்களுக்கு இல்லாத உரிமையா? தாராளமாக சொல்லுங்கள். அந்த புள்ளி எங்கே இருக்கிறது என்று விவாதியுங்கள். ஆனால் சத்தமாக பாட்டு வைத்திருப்பவரிடம் யப்பா சாமி, கொஞ்சம் வால்யூமை குறைப்பா என்று வேண்டுகோள் விடலாம்; சமூக நிர்பந்தம் மூலம் (கள்ளுக்கடைகளுக்கு எதிராக காந்தி மறியல் செய்யச் சொன்ன மாதிரி) அவரை வீட்டை காலி செய்ய வைக்கலாம். என்ன நீ வீட்டுக்கு திரும்பி வந்தால் ஜெயில், அடிப்போம் என்று பயமுறுத்துவீர்களா? அப்படி செய்வது சரி என்று நினைப்பவர்கள் யாராவது உண்டா? அந்த மாதிரி தண்டனைகள் “குற்றத்துக்கு” appropriateதானா? இப்போது ஹுசேன் கட்டார் குடிமகனாகி இருப்பது ஜெயில், அடி என்ற பயத்தினால்தானே? இவரை பயமுறுத்துவது மட்டும் சரி என்று எப்படி நினைக்கிறீர்கள்? அப்படி செய்பவர்களுக்கும் கட்டைப் பஞ்சாயத்துக்காரர்களுக்கும் என்ன வித்தியாசம்?

கிரியின் முக்கியமான கேள்வி # 2 – ஹுசேன் படங்கள் கலைக்கண்ணோடு மட்டும் பார்க்க வேண்டியவையா?
இந்த கலைக்கண், மாலைக்கண்ணோடு எல்லாம் எப்படி பார்ப்பது என்று எனக்கு தெரியாது. ஓவியத்தை பிரஷ் வொர்க், பேப்பர் வழவழ என்று இருக்கிறதா இல்லையா, அது இம்ப்ரஷனிஸ்ட் ஓவியமா இல்லை க்யூபிஸ்ட் ஓவியமா என்று ஒரு expert பார்க்கலாம். எனக்கு அந்த ஓவியம் என்னுள் என்ன உணர்ச்சிகளை எழுப்புகிறது என்பதுதான் முக்கியம். எல்லாரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், you will be disappointed.

திருச்சிக்காரனின் முக்கியமான கேள்வி – பெரும்பாலான மக்கள் மனம் புண்படும் என்று தெரிந்தும் ஏன் ஹுசேன் இப்படி செய்ய வேண்டும்? அவருக்கும் ஒரு சமூகப் பொறுப்பு வேண்டாமா? (அதாவது அபார்ட்மெண்டில் பாட்டு கொஞ்சம் கம்மி வால்யூமில் கேட்க வேண்டும் என்று அவருக்கு தெரிய வேண்டாமா?) அதற்கு காரணம் மத வெறிதானே?
திருச்சிக்காரன் சொல்வது ஓரளவு நியாயமானதே. நாலு பேர் வாழும் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்சில் எவனும் இரவு பாட்டை சத்தமாக வைத்துவிட்டு தோம் தோம் என்று ஆடக் கூடாது என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு? ஆனால் ஹுசேன் விஷயத்தில் பாதிப்பு tangible இல்லை. மனம் புண்படுகிறது என்பதை காரணமாக வைத்து ஒரு விஷயத்தை தடை செய்தால் அப்புறம் எதையும் யாரும் செய்ய முடியாது. பாமியன் புத்தர் சிலைகள் தாலிபன்காரர்களின் மனதை புண்படுத்தியது, அதனால்தான் அந்த அரிய கலைச் செல்வத்தை உடைத்து எறிந்தார்கள். நாளை ஒரு அறிவுக் கொழுந்து வந்து அஜந்தா ஓவியங்களுக்கு மேலாடை வரையச் சொல்வார். இன்று ஹுசேனை தண்டித்தால் அதுதான் நாளை அவர்களுக்கு precedent ஆக மாறும்.
ஹுசேன் இந்த படங்களை வரைந்து ஒரு நாற்பது வருஷம் இருக்கும் போலத் தெரிகிறது. இரண்டு மூன்று வருஷமாகத்தான் பலரும் சவுண்ட் விடுகிறார்கள். முப்பது முப்பத்தைந்து வருஷம் பெரும்பாலான மக்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவர் என்ன நினைத்திருப்பார்? பெரும்பாலான மக்கள் மனம் நம் ஓவியங்களால் புண்படுகிறது என்றா? இது சும்மா சென்சேஷனுக்காக ஹிந்துக்களை மத அடிப்படையில் ஒன்றாக திரட்ட விரும்பும் அமைப்புகளும், ஊடகங்களும் செயற்கையாக ஊதி பெரிதாக்கி இருக்கும் பிரச்சினை.
அப்புறம் அவர் என்ன வீடு வீடாகப் போய் தன் படங்களை காட்டிக் கொண்டிருக்கிறாரா? அவர் இருப்பது ஒரு elite உலகம். அங்கே அம்பானிகளும் பச்சன்களும் சோனியாக்களும்தான் வாழ்கிறார்கள். அவர் படம் வரைந்து அது ஒரு புண்ணாக்கு பாதிப்பையும் நம் சாதாரணர் சமூகத்தில் ஏற்படுத்தப் போவதில்லை. கான் திரைப்பட விழா, வெனிஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்படும் ஆர்ட் ஃபில்ம் மாதிரிதான் அவரது ஓவியங்களும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஏதாவது ஒரு புத்தகத்தில் பதித்திருப்பார்கள்.
நாற்பது வருஷம் முன்னால் வரைந்த படத்துக்கும் அவர் வருத்தம் தெரிவித்திருப்பதாக கேள்விப்பட்டேன். (என் கண்ணில் அவர் அப்படி செய்திருக்கக் கூடாது.) இன்னும் அவரிடமிருந்து நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள்? அவர் வேறு என்னதான் செய்ய வேண்டும்?
மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதம் சரி இல்லை. ஒரு நூறு வருஷத்துக்கு முன்னால் ஜாதி தவறு என்று ஆயிரத்தில் ஒருவர் நினைத்திருந்தால் சொல்லி இருந்தால் அதிகம். அவர்களும் இப்படி நம் கருத்து பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அதனால் நாம் சொல்லக் கூடாது, எழுதக் கூடாது, என்று நினைத்திருந்தால் இன்று நம் கதி என்ன?

டோண்டுவின் கேள்வி # 1 – ஹிட்லரை நிர்வாணமாக வரைந்தது அவனை அவமானப்படுத்தவே என திருவாய் மலர்ந்தருளியுள்ள ஹுசைன் சரஸ்வதி, சீதை, பார்வதி ஆகிய பெண் கடவுளரை வரைந்தது எதில் சேர்த்தி?
புண்படுத்தும் எண்ணத்தில் வரையவில்லை என்று ஹுசேன் சொல்லி இருக்கிறார். சரஸ்வதியை “அவமானப்படுத்தவும்” அவருக்கு சுதந்திரம் உண்டு. நான் வணங்கும் சரஸ்வதி தெய்வம். தெய்வத்தை மனிதன் அவமானப்படுத்த முடியும் என்று டோண்டு நினைப்பது தெய்வத்தை குறைத்து மதிப்பிடுவது. அவர் சரஸ்வதியை குறைத்து மதிப்பிட்டு என் போன்ற கடவுள் நம்பிக்கை உள்ள ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறார். உண்மையில் அதுதான் சரஸ்வதிக்கு “அவமானம்!”

டோண்டுவின் கேள்வி # 2 – நிர்வாணமாகக் கூட வேண்டாம், முகம்மதுவின் படத்தை துணியுடன் வரையத் துணிவானா அவன்?
சம்பந்தமே இல்லாத கேள்வி. முகமதுவை வரைந்தால்தான் சரஸ்வதியை வரைய வேண்டும் என்று டோண்டு புதிய கோட்டா சிஸ்டம் கொண்டு வருகிறார்! அவருக்கு துணிவில்லை என்றே வைத்துக் கொள்வோம். வீரர்களுக்கு மட்டும்தான் கருத்து சுதந்திரம் என்று சொல்ல வருகிறாரா?

டோண்டுவின் கேள்வி # 3 – முகம்மது பற்றிய ரெஃபரன்ஸ் வந்ததற்கே இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகள் கலவரம் செய்ய, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி ஒளிந்து அதை நீக்கியவன் இங்கு மட்டும் ஏன் மொண்டித்தனம் செய்ய வேண்டும்?
இது என்ன என்று தெரியவில்லை. ஹுசேன் ஏதோ முகமதுவின் படத்தை வரைந்து பின்னால் நீக்கி இருக்கிறாரோ என்னவோ. சரி பேட்டை ரவுடிக்கு மாமூல் கொடுத்தாயே எனக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கலாமா? அந்த இஸ்லாமிய அமைப்புகளை அடக்குங்கள் என்று டோண்டு பொங்கி இருந்தால் புரிந்து கொள்ளலாம். அவனை மட்டும் அயோக்கியத்தனம் பண்ண விடுகிறாயே, என்னை ஏன் விடுவதில்லை என்று கேட்பது போல அல்லவா இருக்கிறது?

டோண்டுவின் கேள்வி # 4 – சல்மான் ருஷ்டி விவகாரத்தில் அவருக்கு வந்த மரண மிரட்டலை எங்காவது இவன் எதிர்த்திருக்கிறானா? (முக்கால்வாசி அதற்கு ஆதரவு கூட தெரிவித்திருப்பான்)
டோண்டுவுக்கும் அவர் நிலை என்ன என்று தெரியாது – எனக்கும் தெரியாது. என்ன, நான் எந்த முன் முடிவுக்கும் போகவில்லை.
அப்புறம் ஹுசேன் எந்த நிலை எடுத்தால் என்ன? அவர் ரஷ்டி விஷயத்தில் தவறான நிலை எடுத்தால் ஹுசேன் விஷயத்தில் நாம் எல்லோரும் தவறான நிலை எடுக்க வேண்டுமா? ஹுசேன் ரஷ்டி வீட்டில் திருடினால் நீங்கள் ஹுசேன் வீட்டில் திருடுவீர்களா? என்ன லாஜிக் என்றே புரியவில்லையே!

டோண்டுவின் கேள்வி # 5 – தஸ்லீமா விவகாரத்தில் இவனது நிலைப்பாடு என்ன?
டோண்டுவுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. என்ன நிலைப்பாடாக இருந்தாலும் அது irrelevant.

டோண்டுவின் கேள்வி # 6 – மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான விடைகள் அவனுக்கு சப்பைக்கட்டு கட்டும் போலி மதச்சார்பற்றவர்களிடமாவது அவர்களை பொருத்து உள்ளனவா?
நான் மதச்சாற்பற்றவனா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என்னிடம் விடைகள் இருக்கின்றன, அதை முன்னாலும் எழுதி இருக்கிறேன். சல்மான், மற்றும் தஸ்லிமாவுக்கு, மற்றும் டாவின்சி கோட், மற்றும் முகமதை பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன், நாளை யாராவது முகமதை ஓரினச் சேர்க்கையாளராக வரைவது இல்லை மேரியும் ஏசுவும் உறவு கொள்வது போல வரைவது போன்றவற்றுக்கு முழு உரிமை உண்டு. நான் அதை விமர்சிக்கலாம். (ஏசு மேரி உறவு படம் வரையப்பட்டால் நான் அதை நிச்சயமாக கண்டிப்பேன், ஆனால் அப்படி வரைய அவருக்கு முழு உரிமை உண்டு என்று வாதிடுவேன்.)
தன கேள்விகளுக்கு மாற்று கருத்து கொண்ட யாரும் பதில் சொல்லாமல் நழுவுகிறார்கள் என்று டோண்டு சொல்கிறார். For the record, நான் நிச்சயமாக சொல்லி இருக்கிறேன், டோண்டு அவற்றை படித்துவிட்டு இங்கே எதிர்வினையும் புரிந்திருக்கிறார்.

டோண்டுவுக்கும் ஒரு கேள்வி: சல்மான், தஸ்லிமா, டாவின்சி கோட் தடை, முகமதைப் பற்றி வந்த டேனிஷ் கார்ட்டூன் ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன?

டோண்டுவின் வாதம் மிக சிம்பிளாக: ஹுசேன் தனக்கு ஒரு நியாயம், ஊருக்கு இன்னொன்று என்று நினைக்கும் அயோக்கியன், அதனால் நாம் “நல்லவர்களுக்கு” பார்க்கும் நியாய தர்மத்தை இவருக்கு பார்க்க வேண்டியதில்லை. இந்த நிலை எனக்கு இசைவானதில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
ஹுசேனுக்கு ஹிந்து கடவுள்களை அவர் இஷ்டப்படி வரைய எல்லா உரிமையும் உண்டு – ஆர்வி, டாக்டர் ருத்ரன், ஜெயமோகன்
ஹுசேன் செய்தது தவறு – கிரி, டோண்டு, திருச்சிக்காரனின் கருத்துகள் இந்த பதிவின் பின்னூட்டத்தில் இருக்கின்றன.
ஹுசேனின் கட்டார் முடிவு பற்றி
ஆர்வி, டாக்டர் ருத்ரன், சோ ராமசாமி


விண்ணில் எழாது — ஒரு
பெண்ணில் எழுந்தது
ரமணன் என்னும் —
ரவி;
புன்மை இருள்
போயொழிந்து
புலர்ந்தது — இப்
புவி!

*****

தன்னைத்
தானே விரும்பாதவன்;
வீடுபெற வேண்டி
வீடு விட்டு வந்தபின் —
வீடு திரும்பாதவன்!
அவன்–
ஆரையும் விழுத்தவல்ல —
நசைகள் மூன்றும்
நண்ணா மலை;
அமர்ந்த இடம்
அண்ணாமலை!

அவன்
அரிய குணங்களின் —
அற்புத
ஆவணம்;
கோவணம் கட்டிய — திருமுறைப்
பாவணம்!

குகை புகுந்த — வாலறிவின்
சிகை;
அதனுள் சுரந்த
ஆனந்தச் சுனையில் — ஞான
அரவிந்தமாய் — மடல்
அவிழ்ந்த முகை!

மான்;
மயில்;
ஆன்;
அஜம்;
அனைத்திடமும்
அன்பு பாராட்டினான்  — ஒரே
அளவதாய்;  அவன் ஓர் —
ஆண் தாய்!

‘உன்னுள் இருக்கும்
உன்னை அறி;
நீயாகவே —
நிற்பான் அரி!’

உதவினான்
உபதேசம்;
உட்கார்ந்து கேட்டது
ஊர்; தேசம்!
‘நான்’ விட்டவன் — ஒருநாள்
வான் சென்றான்;  செல்லுமுன்
‘நான்’ விட்டவன் — எவரும்
வான் செல்லலாம் என்றான்!

கவிஞர் வாலி (இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்)

அடுத்த பக்கம் »