Tamil Culture



The archives of the below program are now available in ItsDiff.com

Date
Special Show/
Theme
Images
Additional Information
Archives
Presented

by

Feb 26
2011
Malaysia
Vasudevan
Special tribute to the
great singer Malaysia
Vasudevan – Tamil film
play back singer
Part 1Part 2

 

Ashok

________________________________________________

A Tribute to Malaysia Vasudevan  by It’s Diff Radio -LIVE

This Wednesday (Feb 23 1011) at 7:30 AM Pacific Standard Time and 9 PM Indian Standard Time

You can hear ItsDiff Radio from 6AM to 9 AM PST  (7:30 PM to 10:30 PM IST) every Wednesday

Date
Special Show/
Theme
Images/ picture
Additional Information
Archives
Presented by
Feb 26
2011
Malaysia
Vasudevan
Special tribute to the
great singer Malaysia
Vasudevan – Tamil film
play back singer
Part 1

Part 2

 

Ashok

(இதன் ஒரு பகுதி மீள்பதிவு)

சமீபத்தில் மலேசியா வாசுதேவன் மரணம் அடைந்தார். பெரும் பாடகர். சாதித்தவர். அவரை பற்றி பேசுவதற்கு நல்ல விஷயங்கள் தான் நமக்கு கிடைக்கிறது. யூலஜி ஒன்றும் யதார்தத்திற்கு புறம்பாக இருக்கப் போவதில்லை. ஆனால் யூலஜி என்பது புகழ்ந்து சொல்ல வேண்டிய ஒன்று என்ற ஒரே காரணத்திற்க்காக உண்மைக்கு புறம்மபான விஷயங்களை கூறுவது சந்தர்பத்தை பயன்படுத்தி  சமூகத்தை மூளைச் சலவை செய்வதற்கு ஒப்பான அறமற்ற செயல். அரசியல் ஆதாயங்களுக்காக அந்த காலத்திலிருந்து இன்று வரை கட்சிகள் யூலஜியை ஒரு கருவியாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகிறது.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதலில் இங்கிருந்து துவங்கலாம். ஒரு செயலை எல்லோரும் நல்ல விஷயத்தில் துவங்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் தேர்தல் என்பதும் கெட்டவிஷயம். தேர்தல் முடிந்த பின்னரும் வரும் முடிவுகளும் கெட்ட சமபவம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளும் கெட்ட சமபவங்கள் தான். நல்ல காலம், ஐந்து ஆண்டுகள் கெட்ட காலம் முடிந்து அடுத்த கெட்ட காலத்திற்கு உண்டான சமபவங்கள் துவங்கிவிடும். அதனால் மரணம் என்ற ஒரு சமபவத்தோடு தொடர்புடைய ஒன்று இந்த தேர்தல் களத்திற்கு பொருத்தமான ஒன்றே. (சில புரட்சிக் கட்சிகள் தேய்பிறை, வளர்பிறை, ஜாதகம்,  எல்லாம் பார்த்து பார்த்து முடிவுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாம் எதிர் திசையில் செல்வோம்)

கெட்ட சமபவங்களை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், கொஞ்சம் துணிவுடன் தான் அதை எதிர்கொள்வோமே என்ற ஒரு எண்ணமே ஒழிய இதைப் படித்த பின்னர் நாமெல்லாம் கிளம்பி மக்களை மனம் திருத்தி மகாத்மா காந்திகளை சட்ட சபைக்கு அனுப்புவோம் என்ற நப்பாசையெல்லாம் கிடையாது.

இது ஜெயகாந்தன் அண்ணாவிற்கு அளித்த யூலஜி

(பை த வே, ஜெயகாந்தன் திமுகவையும், அண்ணாவையும் இங்கே குறிப்பிட்டிருந்ததால் மற்ற கட்சிகளும் தலைவர்களும் அப்படியில்லை என்று நம்பி விடவேண்டாம்.  காம்ராஜ் கூறியது போல் அனைத்துக் கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்)

ஓவர் டு ஜெயகாந்தன்

”இங்கே வந்திருக்கிற நீங்கள் அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய கும்பலை ஒத்தவர்கள் அல்லர். நீங்கள் அங்கேயும் போயிருந்திருக்கலாம். எனினும், அந்தக் கும்பலில் நீங்கள் கரைந்து விடவில்லை. எனவேதான், நீங்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிறீர்கள். கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.

அண்ணாதுரையின் மரணத்துக்குக் கூடிய அந்தக் கும்பல் எவ்வளவு பெரிது எனினும் இந்தக் கூட்டம் அதனினும் வலிது. கலைகின்ற கும்பல் கரைந்த பிறகு அந்தக் கும்பலில் பங்கு கொண்ட, அந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட மனிதர்களை ஒரு கூட்டமாகச் சந்திப்பதற்கு நான் இங்கு அழைக்கிறேன். இது எனது தனித்த குரலே ஆயினும் இது காலத்தின் குரல் என்பதனைக் கண்டு கொள்ளுங்கள். இந்தக் குரலுக்கு வந்து கூடுகின்ற இந்தக் கூட்டம், பதட்டமில்லாதது; நாகரிக மரபுகள் அறிந்தது; சிந்தனைத் தெளிவுடையது. இதற்கு ஒரு நோக்கமும், இலக்கும், குறியும், நெறியும், நிதானமும் உண்டு…

ஆனால் கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும். கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு. கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்…

காலஞ்சென்ற அண்ணாதுரையைப் பற்றி எனக்கு முன்னால் பல நண்பர்கள் பேசினார்கள். அவர்களது நல்உணர்ச்சிகளைப் புண்படுத்துகிற நோக்கம் எனக்கில்லை. ஆனாலும் அண்ணாதுரையைப் பற்றிய எனது சரியான உணர்ச்சிகளை இங்கே நான் சொல்ல வந்திருக்கிறேன்.

இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி.மு.க. தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும், அந்தச் சமாதியையும் பயன்படுத்துவதை, பயன்படுத்தப் போவதை அனுமதிப்பது நாகரிகமும் அல்ல; நல்லதும் அல்ல. சமூக ரீதியாக, கலாசார ரீதியாக, அரசியல் ரீதியாக அண்ணாதுரை இருந்தாலும் எனக்கு எதிரிதான்; இறந்தாலும் எனக்கு எதிரிதான். தனிப்பட்ட முறையில் அவர் எனக்கு எதிரியும் அல்ல; நண்பரும் அல்ல. அவரைப் பற்றிய எனது முடிவுகளை ஒரு தனிமனிதனின் மரணத்தின் பொருட்டு நான் கைவிட முடியாது.

அண்ணாதுரையின் மறைவினால் அவர் இந்திய அரசியலில் பிரிட்டிஷ்காரர்களின் கையாளாக நமக்கு அறிமுகம் ஆனவர் என்ற உண்மை மறைந்துவிடுவதில்லை. நாத்திகம், சமூக சீர்திருத்தம் என்ற அசட்டுத்தனங்களில் சிக்கி நமது இலக்கியங்களையும், புராணங்களையும், ஹிந்து சமயத்தையும் பாமரத்தனமாக விமர்சனம் செய்து பாமரர் மத்தியில் புகழடைந்தார் என்கிற உண்மையும் மறைந்து விடாது. அவர் எழுதிய குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப் போவதில்லை. அவர் சம்பந்தப்பட்ட எல்லாமே இரவல். இரவலே ஆயினும் அதை அவர் ஒப்புக் கொள்ளாததால் அது இலக்கியத் திருட்டு. அதற்கும்மேல் அவரது இரவல் சரக்குகள் எத்தகையது என்பதை அறிகிற பொழுது, அவரது தரம் மிகவும் தாழ்ந்தது என்கிற உண்மையையும் இந்த மரணம் வந்து மறைத்துவிடப் போவதில்லை.

அவரை அறிஞர் என்று மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்றூ பெருமூடர்களே அழைக்கலாயினர். நகைச்சுவை எழுத்தாளர் என்று பெயரெடுத்திருந்த கல்கி அவர்கள் பத்திரிகையில் எழுதிய ஒரு நாடக விமர்சனத்தில் அண்ணாதுரையை பெர்னாட்ஷா என்று வஞ்சகப் புகழ்ச்சி செய்திருக்கிறார். தமிழர்களே! உங்களுடைய தற்காலத் தகுதிக்கு இவர்தான் பெர்னாட்ஷா என்பதாகவே அதை நான் புரிந்து கொண்டேன்.

பாமரத்தனமான நாடகங்களும், மெளடாகத்தனமான பகுத்தறிவு வாதங்களும், தமிழறிவில்லாத, ஆனால் தமிழார்வமுடைய மக்களின் மூடத் தமிழ்ப் பற்றினாலும் பார்ப்பன எதிர்ப்பு என்னும் ஓர் அநாகரிக நடைமுறையினாலும், காங்கிரஸ் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு என்னும் கொச்சை அரசியலினாலும் ஏதோ ஒரு ஜனக்கும்பலை வசீகரிக்கிற அண்ணாதுரை எனது கவனத்தைக் கூடத் தன்பால் இழுத்ததில்லை…

அரசியல்வாதிகள் – அதாவது ஓட்டு வாங்கி, பதவியைப் பிடித்து அதன் மூலம் தங்கள் கொள்கைப்படி தேசத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு பல கொடிகளின் கீழ் லட்சியத்துக்காகப் பணியாற்றுகிறவர்கள் – அண்ணாதுரையின் தயவை நாடினார்கள். அதற்காக அண்ணாதுரையும், தி.மு.கழகமும் அவர்களோடு பேரம் நடத்தியதுண்டு.

‘எல்லாவிதமான பலவீனங்களையும் தனக்கும், தனது கழகத்துக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு சமுதாய நாணயத்திலும், அரசியல் நாணயத்திலும் மிகவும் பலவீனப்பட்டுப் போன அண்ணாதுரையை தி.மு. கழகம் தனது தலைவராக வரித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை…

கலைத்துறை, இலக்கியத்துறை, மொழித்துறை, பொருளாதாரத்துறை, எல்லாமும் சங்கமிக்கிற சமுதாயத்துறை ஆகிய எல்லாவற்றிலும் அண்ணாதுரை எடுத்துக் கொண்ட நிலைகள் தரம் குறைந்து தாழ்ந்து, மூடர்களையும் முரடர்களையும் மட்டுமே சார்ந்து இருந்ததை நான் எப்படி மறப்பேன் ?

அண்ணாதுரை, தான் கைக்கொண்ட எல்லாக் கொள்கைகளையும் ஒரு கட்டத்துக்குப் பிறகு கைகழுவிக் கொண்டுதானிருந்தார். அதற்காகவும் அவரைப் பாராட்ட முடியவில்லை.

ஏனெனில் ஒரு கருத்து தவறானதென்றல் அதைக் கைவிட்டு விடத்தான் வேண்டும்; இது பாமரர்க்கும் அறிஞர்க்கும் பொது. ஆனால் பாமரன் மறுபடியும் ஒரு புதிய தவறிலே சிக்குவான். அண்ணாதுரை தனது வாழ்க்கை முழுவதிலும் புதிய புதிய தவறுகளையே செய்து கொண்டிருந்தார். பொய்யையும் சாகசத்தையும் தமது அரசியலுக்கு மூலதனமாகக் கொண்டிருந்த அண்ணாதுரை, தன்னைப் பற்றிய உண்மைகளை ஒரு உயிலாகக் கூட எழுதி வைக்கவில்லை.

பண்டித ஜவஹர்லால் நேரு பத்தாண்டுகளுக்கு முன்னாலேயே தமது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தார். தம்மை நாத்திகர்கள் என்று அழைத்து கொண்ட கார்ல் மார்க்சும் எங்கெல்சும் தங்களது மரண சாசனத்தை எழுதி வைத்திருந்தனர். மகாத்மா காந்தியடிகள் எழுதியதெல்லாம் அவரது வாழ்க்கையின் சாசனமே. இவர்களின் மீதெல்லாம் மரியாதை வைத்திருக்கிற நான், அண்ணாதுரைக்கும் அதே விதமான மரியாதையை எப்படித் தர முடியும் ?

எந்த ஒரு மரணமும் எப்படி எனக்கு வருத்தம் தருமோ, அதே போல அண்ணாதுரையின் மரணத்துக்கு மனிதாபிமானமும் மரியாதையும் மிகுந்த முறையில் எனக்கும் வருத்தம் உண்டு. எனது எதிரிகூட நீண்ட நாள் வாழ்ந்து என்னிடம் தோல்வியை அடைய வேண்டுமென்றே நான் விரும்புவேன். ஒரு மரணத்தின் மூலம் அவன் தப்பிச் செல்வது எனக்கு சம்மதமில்லை. எதிரிகளை வெல்ல வேண்டும். அழிப்பது கூடாது. கொடிய நோய்களினாலும், கோரமான விபத்துக்களினாலும் அவர்கள் அழிந்து படுவது கடவுள் சாட்சியாக எனக்குச் சம்மதமில்லை; அந்த அழிவில் லாபம் காண்பதும், மகிழ்ச்சியுறுவதும் காட்டுமிராண்டித்தனமானது….

என்னைப் போலவே இந்த உண்மைகளை உணர்ந்திருந்தும், பெருந்தன்மை கருதியோ அல்லது பேசமுடியாமலோ நீங்கள் மெளனமாயிருக்கிறீர்கள். அந்த மரணத்தையும் இந்த மெளனத்தையும் சமூகத்தின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். நான் ஆரம்பித்த பத்திரிகை கூட அண்ணாதுரைக்கு ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கென்று ஒரு பத்திரிகை இல்லாத கொடுமையை நான் இப்போது அனுபவிக்கிறேன் ‘ – என்றெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நான் அந்தக் கூட்டத்தில் பேசினேன்.”

– ஜெயகாந்தன்  (ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்)

(இட்லிவடை தளத்தில் வேறொரு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. நன்றி)


(இது அண்மையில் தான் ”அவார்டா கொடுக்கறாங்க” ப்ளாக்கில் வெளியானது. ஒரு சிறிய குழப்பத்தினால் இங்கே வரவேண்டியது அங்கே வெளிவந்துவிட்டது. எனவே மீண்டும் இங்கே.)

(இது ஈஷ்வர் கோபால் அனுப்பியுள்ள செய்தி)
திரு. உமர் எழுதிய ‘கலை உலகச் சக்கரவர்த்திகள்’ என்ற நூலிலிருந்து சில சுவாரசியமான தொகுப்புகள் :-

‘நாதசுவரச் சக்ரவர்த்தி’ டி.என். ராஜரத்தினம் பிள்ளை பிரயாணம் செய்யும்போது, ரயிலிலும் சரி, காரிலும் சரி, கச்சேரிக்குச் செல்லும்போது ஒரு பெரும்படையுடன்தான் செல்வார்.  ஒருதரம் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் அவர் வந்து இறங்கியபோது அவருடன் வந்தவர்கள் சாரதா (அவர் மனைவிகளுள் ஒருவர், அவருக்கு ஐந்து மனைவிகள்), 2 அல்சேஷன் நாய்கள், 1 தாளம் போடுபவர், 1 ஒத்து ஊதுபவர், 2 தவில் வித்வான்கள், 1 நாதசுவர வித்வான், 2 எடுபிடிகள் ஆக பத்து நபர்களுடன் வந்திறங்கினார். பிரயாணத்திலும் கூட அவரது ஆடம்பர வாழ்வு தெரிந்தது.

இவர் ஒரு தனிப் பிறவி! சுகபோகங்களின் சிகரம்.  கேவலம், கையொப்பம் இடட்டும் – கொட்டைக் கொட்டை எழுத்துகள். அரைப் பக்கம் நிரம்பிவிடும். லெட்டர் பேப்பரும் வால் நோட்டீஸ் மாதிரித்தான். அதன் ஜோடி கவர் 15 அங்குலம் நீளமாகவும் இருக்கும். தபால் இலாகாவுக்கு நல்ல லாபம். கவரின் மேல் அச்சிட்டுள்ள பட்டம், பதவிகளின் போக்கும் கொஞ்சமும் இளைத்தவையல்ல, ரொம்பவும் பொருத்தமான பட்டங்களும் கூட. ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’, ‘ அகில உலக ஜோதி’…

மோட்டார் கார் பெரிய ரதம், காலனுக்கு (gallon) எட்டு மைலுக்கு மேல் ஓடாது. கச்சேரிகளுக்குப் பிரயாணம் செய்யும்போது,பக்கவாத்திய பரிவாரம், குடும்பம் சகலமும் காரில் அடங்கிவிடும். காதுகளில் மோட்டார் ‘ஹெட் லைட்’டுக்குச் சமமான வைரக் கடுக்கன் ஜோடி, அதை எஸ்.ஜி. கிட்டப்பாவிடம் விலைக்கு வாங்கி அணிந்துகொண்டதாகச் சொல்லுவார்கள், ஜரிகை மயமான ஆடை, அழுத்த வர்ணங்களில் பட்டுச் சட்டை, கவுன் போலவும் கழுத்து முதல் பாதம் வரை சில சமயங்களில் அணிந்துகொள்வார், முதலாளி மட்டுமேயல்ல, செட்டிலுள்ள பையன்களும் ஆடம்பரமான வேஷத்துடந்தான் இருப்பார்கள்.

பொடி டப்பி, பேர் பொடி டப்பியானாலும், டிரங்க் என்றுதான் சொல்லவேண்டும். பாப்பா கே.எஸ்.வெங்கட்ராமையா, வெள்ளியும் பொன்னும் கலந்த பெரிய பொடி டப்பியைப் பிரத்தியேகமாகத் தயாரித்து, ராஜரத்தினம் பிள்ளைக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். வெற்றிலைப் பெட்டி, ஒரு கூட்ஸ் வண்டி மாதிரி இருக்கும். கூஜா ஒரு வெள்ளி டிரங்க். இவ்வளவையும் தூக்கிக்கொண்டு, ரயில் பிரயாணம் முதல் வகுப்பில் வருவார்.

டி.என்.ஆர். ஓட்டல் தாசப்பிரகாஷில் தங்கியிருந்தபோது உஸ்தாத் கான்சாகிப் படே குலாம் அலி கான் அதே விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் ஜி.என்.பியை அழைத்துக் கொண்டு டி.என்.ஆர். இருந்த அறைக்கு வந்துவிட்டார். இருவர் வரவையும் கண்டு பூரித்துப் போனார் டி.என்.ஆர். சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த்தும், கான்சாகிபின் பாட்டைக் கேட்க ஆசைப்பாட்டார் டி.என்.ஆர். டி.என்.ஆரின்  ஆசையை ஜி.என்.பி. சொன்னது, ‘மாண்ட்’ ராகத்தில் அற்புதமாக அரை மணி நேரம் பாடினார் உஸ்தாத். கான்சாகிப் பாட்டைக் கேட்டதும் ஜி.என்.பி. அப்படியே மயங்கிவிட்டார். ராஜரத்தினம் பிள்ளைக்கு குஷி வந்துவிட்ட்து. விடுவாரா பிள்ளை, படே குலாம் வாசித்த அதே ‘மாண்ட்’ ராகத்தை தனது நாதசுவரத்தில் இரண்டு மணி நேரம் வாசித்தார். ஜி.என்.பி-யும் படே குலாம் அலி கானும் வியந்துவிட்டார்கள்.

“நாதசுவரச் சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை’ என்று விலாசமிட்டு வந்தால்தான் கடிதங்களையோ, அழைப்பிதழ்களையோ பிரித்துப் பார்ப்பார். ‘நாதசுரச் சக்கரவர்த்தி’ என்று தனது பெயருக்கு முன் போடாத, மொட்டையாக டி.என்.ராஜரத்தினம் பிள்ளை என்று மட்டும் வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்காமலேயே குப்பையில் வீசிவிடுவார்.

நாகப்பட்டினத்தில் ஒரு நாதஸ்வர வித்வான். அவர் கையில் நாதஸ்வரம், வாசிப்பில் அபஸ்வரம், ஆனால் வேஷத்தில் ராஜரத்தினம் பிள்ளை அவர்களை அப்பட்டமாகக் காப்பியடித்துக் கொண்டிருந்தார். முன்பு அவர் குடுமி வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கிராப்புத் தலை ஆனார்.  அதே ஜொலிப்புக் கடுக்கன், அதே டால் வீசும் மோதிரங்கள் போதாக்குறைக்கு “ஏகலைவன் மாதிரி அண்ணாச்சியை மனசிலே வச்சுக்கிட்டு வாசிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அத்துடன் நிற்காமல் ராஜரத்தினத்துக்கு நாதஸ்வரம் செய்து தரும் ஆசாரியைப் பிடித்து, அவருடைய வாத்தியத்தின் பிரத்தியேக அமைப்பையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  அத்துடனாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். “அண்ணாச்சி வாத்தியம் இருபத்தேழு இஞ்சு தானே, என்னுடைய வாத்தியத்தை இருபத்தெட்டரையாகப் பண்ணிவிடு” என்று வேறு சொல்லி வைத்தார். இது எப்படியோ பிள்ளைவாளின் காதுக்கு எட்டிவிட்டது.  அவரை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டார்.  கொஞ்ச நாள் கழித்து ராஜரத்தினம் பிள்ளை நாகப்பட்டினம் போக வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது. அங்கே ஒரு கச்சேரி. போன உடனேயே உள்ளூர் நாதஸ்வரத் தம்பிக்கு சொல்லியனுப்பினார். தம்பிக்கு ஒரு புறம் சந்தோஷம், இன்னொரு புறம் பயம். ஒருவாறு மனதைத் திடப்படுத்திக்கொண்டு ராஜரத்தினத்தின் முன் தயங்கித் தயங்கி நின்றார்.

“என்ன தம்பி, சவுக்கியமாயிருக்கியா”?

“இருக்கேன், உங்க ஆசீர்வாதம்”.

“அசப்பிலே பார்த்தா என்னை மாதிரியே இருக்கே. என்னைப் போலவே ஊதறியாமே? பேஷ், பேஷ், யாருகிட்டே பாடம்”?

“உங்களையே குருவா மனசிலே எண்ணிக்கிட்டேனுங்க, கேட்கப் போனா இந்த வட்டாரத்திலே என்னை எல்லோரும் ‘சின்ன ராஜரத்தினம்’னுதான் சொல்லுவாங்க. எல்லாம் உங்க ஆசீர்வாதம்!”

“அது சரி நீ என்னவோ ஆசாரிகிட்டே உன் வாத்தியத்தை இன்னும் கொஞ்சம் நீளமாகச் செய்யச் சொன்னயாமே, என்ன ரகசியம் அதிலே”?

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, மந்தர ஸ்தாயியை இன்னும் கொஞ்சம் அழுத்தமாப் பேச வைக்கலாம்னு ஓர் இஞ்ச் கூடுதலா பண்ணச் சொன்னேனுங்க”.

“அது போவட்டும், டிரஸ், கிரஸ், ஆபரணங்கள் எல்லாம் என்னைப் போலவே போட்டுகிட்டு இருக்கியே?”

உள்ளூர்த்தம்பி ஓர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். தம்பிக்கு நிறைய காப்பி, பலகாரம் வாங்கிக் கொடுத்த பின், இருவரும், ஒரு காரில் ஏறி, வெளியே போனார்கள். ராஜரத்தினம் தன் ஓட்டுனரை விளித்து, “நேரே சலூனுக்கு ஓட்டப்பா!” என்றார். கார் சலூன் போய்ச் சேர்ந்த்து. தாம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு உள்ளூர்த் தம்பியைப் பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார். தம்பிக்கு பகீரென்றது. “என்ன விபரீதம் நடக்குமோ”? என்று தயங்கினார்.

“சும்மா உட்காருப்பா!” என்றதும் தயங்கித் தயங்கி நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தார். முடி திருத்தும் கலைஞரைப் பார்த்து, “இரண்டு பேருக்கும் மொட்டை அடி, திருப்பதி ஸ்டைலில்” என்றார். உள்ளூர்த் தம்பி அலறி, “என்னங்க இது! நான் என்ன தப்பு செய்தேன்?” என்று கதறியே விட்டார். “பின்னே என்னவென்று நினைச்சுகிட்டே? எல்லாத்திலேயும் நீ என்னைக் காப்பி அடிக்கிறே. நான் கடுக்கன் போட்டா நீ கடுக்கன் போடறே. நான் தோடா போட்டா நீயும் ‘தோடா’ போடறே. கழுத்து சங்கிலியிலே பாதியை
ஜிப்பாவுக்கு வெளியே எடுத்து விடுக்கிறே. கட்டுக்குடுமி வச்சுக்கிடா கட்டுக்குடுமி வச்சுக்கிறே, கிராப்பு வச்சிக்கிட்டா கிராப்பு வச்சிக்கிறே. வாத்யம் பண்றதிலே என்னை ஒரு படி மிஞ்சி ஒன்றரை இஞ்ச் கூட வைச்சு ஆர்டர் பண்றே. நான் இப்ப மொட்டை அடிச்சுக்கப்போறேன். நீயும் அடிச்சுக்க!” என்றார். தம்பிக்கு புத்தி வந்து சரணாகதி அடைந்த பிறகுதான் சலூனை விட்டு வெளியே வந்தார்.

டி.என்.ஆர். 1956ஆம் ஆண்டில் மாரடைப்பால் காலமானார். இவர் சம்பாதித்த தொகையின் மதிப்பு அக்காலத்திலேயே கோடி ரூபாய்க்கும் அதிகம் என்பார்கள். ஒரு கச்சேரிக்கு 1950ம் ஆண்டிலேயே பத்தாயிரம் ரூபாய் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவ்வளவு பணம் குவிந்தும் சிக்கனமாகச் செலவு செய்யாது மிகவும் ஆடம்பரமாக செலவு செய்துவிட்டார். கடைசிக் காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. இவரின் இறப்புச் சடங்குகளை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்தான் ஏற்றுக்கொண்டார்.


(நண்பர் கோபாலின் எழுத்து பலரை பழைய நினைவுகளுக்கு தள்ளிவிட்டது. சாரதா அவர்கள் தன் அனுபவத்தை கூறுகிறார்)

நன்றி கோபால், பழையவற்றைக்கிளறிவிட்டமைக்காக. பழையவற்றை அசைபோடுவதுபோன்ற இனிமையான அனுபவம் உண்டா?. என்னைப்பொறுத்தவரை ‘கிடையாது’ என்பதே என் பதில்.

எங்கள் இளம் பருவத்தில், எங்கள் ஊரில் எங்கள் வீட்டிலும் பல ஆண்டுகள் பசுமாடு இருந்தது. எங்கள் ஊரிலும் ‘பவுண்டுத்தொழு’ இருந்தது. சென்னையின் இயந்திர கதியில் வாழ்க்கையைத் தொலைக்கும் முன், அனுபவித்த சுவையான நினைவுகளை உங்கள் கட்டுரை கிளறிவிட்டுவிட்டது. சேர்மன்வாடி சந்திப்புக்கும், பழஞ்செட்டித்தெரு சந்திப்புக்கும் இடையே, மெயின் ரோட்டிலேயே இருந்தது பவுண்டுத்தொழு. எங்களுடையது நல்ல பசு ஆதலால் ஒருநாளும் பவுண்டில் அடைக்கப்பட்டதில்லை. ஆனால் என் நண்பர்களின் வீட்டு மாடுகள் அடைபட்ட போதெல்லாம் போய்ப்பார்த்த அனுபவம் உண்டு.

உயர்நிலைப்பள்ளி முடியும் வரை ஆண், பெண் பாகுபாடின்றி பழகிய காலம் அது. அப்போது ஊரில் இருந்தது ஒரே உயர்நிலைப்பள்ளி. சேதுரோட்டுக்கு தெற்கே பெரிய கிரவுண்டைக்கடந்து போக வேண்டும். அல்லது கஸ்டம்ஸ் ரோட்டில் போய் பள்ளி அருகில் கிழக்கு நோக்கி இறங்க வேண்டும். சற்று தூரத்தில் ஆண்கள் கல்லூரி சேது ரோட்டுக்கு வடக்கே, சாலையை ஒட்டியே இருந்தது. எங்களது எஸ்.எஸ்.எல்.சி. வரை கோ-எஜுகேஷன் ஸ்கூல். பள்ளிகூடத்திலேயே காதல் உண்டாவதாகக் காண்பிக்கும் திரைப்படங்கள் வராததாலும், அவ நம் வீட்டுக்கூடத்துக்கே வந்து கெடுக்கும் தொலைக்காட்சிகள் இல்லாததாலும் மனதில் கல்மிஷம் இல்லாமல் பழகிய வயதுகள். எங்கள் கூட்டத்தில் ஆறு மாணவர்கள், ஐந்து மாணவிகள், என்னையும் சேர்த்து. எப்போதும் ஒரே கூட்டமாக சுற்றுவோம். பள்ளியில் யூனிபாரமெல்லாம் கிடையாது. கலர்கலராக பாவாடை, தாவணி அணிவோம். மாணவர்கள் நினைத்தால் பேண்ட் அணிந்து வருவார்கள் அல்லது லுங்கி (?) அணிந்து வருவார்கள்.

எங்கள் ஊர் பவுண்டுத்தொழு சுமார் இருபது அடிக்கு இருபது அடி சதுர இடம், அதிலேயே ஆடுகளுக்காக சின்ன உட்பிரிவு, அதற்கு தனியாகக்கதவு. ஆடுகளுக்கான பிரிவுக்கு மட்டும் மேற்கூறை, மாடுகளுக்கு வெட்டவெளி. இரண்டு கதவுகளிலும் முக்காலுக்கு முக்கால் அடியில் கம்பிகள் போட்ட ஒரு திறப்பு உண்டு. உள்ளே நிற்கும் மாடு அல்லது ஆடுகளை அதன் வழியாகப் பார்த்துக்கொள்ளலாம். அந்த வழியாகப்போகும்போதெல்லாம் சும்மா போய் உள்ளே எட்டிப்பார்ப்போம். ஏதோ அவைகளை அழைத்துப்போக வந்திருப்பதுபோல பரிதாபமாகப்பார்க்கும். உள்ளே அடைத்தாலும் பட்டினி போட்டுவிட மாட்டார்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் அல்லது புல், மற்றும் ஒரு பக்கம் சிமெண்ட் திண்ணையோடுகட்டப்பட்ட ‘குடுதாழி’ எனப்படும் தண்ணீர்த் தொட்டியில் நிறையத்தண்ணீர் இருக்கும்.

சில நேரங்களில் எட்டிப்பார்க்கும்போது, நமக்குத்தெரிந்தவர்கள் வீட்டு மாடு அல்லது ஆடு உள்ளே நின்றால் அவர்கள் வீட்டுக்குப்போய் ‘உங்க வீட்டு மாட்டைக்காணோமா?. பவுண்டுல அடைச்சி வச்சிருக்காங்க’ என்று தெரிவித்து சமூக சேவை செய்வதும் உண்டு.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்காக சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேர்ந்ததும், சூழ்நிலைகள் சுத்தமாக மாறிப்போனது. என்னவோ திடீரென்று சந்திர மண்டலத்தில் போய் இறங்கியது போன்றதொரு நிலை. ஊரில் ஆண் மாணவர்களோடு பழகும்போது கூட தப்பாக தெரியாத பழக்க முறைகள் மறைந்து, மாணவிகளிலேயே கூட வார்த்தைக்கு வார்த்தை தவறான உள்ளர்த்தம் வைத்து பேசும், முற்றிலும் புதியதொரு சூழ்நிலை புரிபடத்துவங்கியது.

நிறைய ஆண்டுகள் கடந்தபின்னர் ஊர் சென்ற சமயம் பவுண்டுத்தொழுவத்தைப் போய்ப்பார்த்தபோது, அது உபயோகத்தில் இல்லையென்று சொன்னார்கள். இருந்தாலும் ஆர்வத்துடன் முக்காலடி ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தேன். காலியாகக்கிடந்தது. இடம் முழுக்க கருவேலஞ்செடிகள் மண்டிக்கிடந்தன. இதுவும் சரி, இதோடு இணைந்த பழைய ரெவினியூ இன்ஸ்பெக்டர் அலுவலகமும் சரி, நொறுங்கிப்போய் இன்றோ நாளையோ விழும் நிலையில் இருந்தன.

விரைவில் அவற்றை இடிக்கப்போவதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். இடிந்து கட்டந்தரையாகப் போகும்முன்னர் பார்த்துவிட்ட திருப்தியில் பெருமூச்சு விட்டேன். ‘இவ்வளவுதான் வாழ்க்கை’யென்பதை எவையெவைல்லாம் நமக்குப்புரிய வைக்கின்றன.

கடற்கரையோரம் அமைந்துள்ள ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். மாலைநேரம். அப்போது ரயில் வரும் நேரமில்லையாதலால் பிளாட்பாரம் வெறிச்சோடியிருந்தது. நான் ஒருத்தி மட்டுமே. ஆகவே அங்குள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். எதிரே பரந்து விரிந்துகிடந்த உப்பளத்தில் இருந்து வீசிய காற்று புடவையைப் பறக்கவைத்தது. சுற்றிலும் பார்த்தேன் யாருமில்லை. கடந்துபோன இன்பமான நாட்களில் மனம் லயித்துப்போக, அழத்துவங்கினேன், கண்ணீர் வற்றும்வரை


By ஈ. கோபால்

பவுண்டுத்தொழு

வாழ்க்கை மாறும்போது பல நிகழ்வுகள், வாழ்வாதாரம், வாழும்முறை, சமூக கோட்பாடுஎல்லாம் கொஞ்சம் மாறும் – ஆனால், சுமார் 20 வருடங்களாக, பழைய சுவடே இல்லாமல்,தரைமட்டமாக அழிந்துபோனவற்றில் குறிப்பிடத்தக்கது – வாழ்கைமுறை, மொழிப்பயன்பாடு,இயற்கை, வனவிலங்குகளின் வாழும் உரிமை, மனிதநேயம், மரியாதை, ஒருவரை ஒருவர்மதிப்பது, மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பது, பொதுநலம் என்பவையே.

அப்போதல்லாம், ஒவ்வொரு மணித்துளிகளிலும் நாம் இயற்கையோடுதான் வாழ்ந்துள்ளோம்.நம்மை அறியாமலே விலங்கு, இயற்கை, மரம், செடி, கொடி, நட்பு, பாசம் ஆகியவற்றால்பின்னப்பட்டு சமமான வாழ்வாரத்தை பருகியுள்ளோம். பழைய வாழ்கைமுறை இன்றையசூழலுக்கு ஒவ்வாதமுறையா தெரியவில்லை. ஆனால், காலத்தின் கோலத்தில் புள்ளிவைத்துவரையத்துவங்கி பழகிவிட்டதால் – இதுவே இன்பம் என்று நினைத்து பழையவற்றைநூலைச்சுற்றி மனதில் பூட்டிவிட்டோம்.

காலையில் ஒரு நான்கு மணிசுமாருக்கு அப்பா எழுந்திருந்தால் – முதலில் கண்ணில்படுவதுநாங்கள்தான்.  தருமாஸ்பத்திரியில் படுத்துள்ளது போல் படுத்திருக்கும் எங்களை, “நேரமாச்சு,எழுந்து பசு மாட்டுக்கு தண்ணிவைக்கனும்” என்று பின்கட்டுக்கு போவார் – அப்போது ஒருஎச்சரிக்கையும் கொடுப்பார், “ம்…சீக்கிரம் எழுந்திருங்கள்”. எங்களில் முறை போட்டுக்கொண்டுபசுமாட்டிற்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு அறைத்துக்கொடுக்கவேண்டும், அதற்கென்றுதனியாக தொழுவத்தில் ஒரு ஆட்டுக்கல் பதியப்பெற்றிருக்கும். வைக்கப்படப்பிலிருந்துவைக்கோல் பிடுங்கி ஒவ்வொரு பசுமாட்டிற்க்கும் தொழுவில் போட்டுவிட்டு, முதலில் கழுநீர்(அதற்கு காப்பி) கொடுக்கவேண்டும். மாட்டின் சாணியை பல பகுதிகளிலிருந்து மொத்தமாகஎடுத்து ஒரு இடத்தில் சேர்க்கவேண்டும். பின் கிணற்றிலிருந்து ஒரு 150 வாளி தண்ணீர்இறைத்து தோட்டத்திற்கு பாய்ச்ச வேண்டும். விருமுறைநாட்கள் என்றால், முழு நாட்களும், வீட்டின் முன் யார்வந்து கழிநீர் கொண்டுவந்தாலும், வாங்கி பின் கட்டில் பசுமாட்டுத்தொட்டியில் நிறப்பவேண்டும். பூபாளத்தில் தூங்குவது ஒருவித சுகம். அன்னாளில், எதையுமே அறிந்திராதவயதில், எவ்விதகட்டுபாடும் இல்லாத மனம் இளம் காலைபோல் துள்ளித்திரியும், அப்போதுகடிவாளம் போட்டால் யாருக்குத்தான் பிடிக்கும்?.

ஒரு 4.30 மணிக்கு தட்சனைக்கோனார் என்று பால் கறக்க ஒருவர் வருவார்.  ஒல்லியான தேகம்,வாயில் எப்போதும் வெற்றிலையை அரவை இயந்திரம் போல் அரைத்துக்கொண்டிருப்பார்,சிறிய கண்கள் முழித்துள்ளாரா, விழித்திருக்கிறாரா தெரியாதிருக்கும், தலையில் ஒருமுண்டாசு, சட்டையெல்லாம் கிடையாது, வேட்டியை நம்பூதிரிகள் கட்டும் பஞ்சகச்சத்தை விட குறைவாக இறுக்கிக் கட்டி, நடையும் ஓட்டமுமாக வருவார்.  ஒரு செவலைப்பசு இருந்தது, அதுஇவர் கறந்தால்தான் ஒன்றும் பண்ணாது, வேறு யார் வந்தாலும் பதம் பார்க்கும், அடங்காது. இவர் சரியாக அதை கணிப்பார், அதன் ‘மூட்’ எப்படி, இன்னிக்கு பால் கொடுக்குமா, உடம்புசரியில்லையா, மகிழ்சியக இருக்கிறதா என்று ஒரு பார்வையில் ஆராய்ந்து கொட்டிவிடுவார். எங்கப்பா பின்கட்டிற்கு போய் 20 நிமிடத்தில், இவர் வந்தபின்புதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “ஏ, என்னா இன்னுமா எந்திரிக்கல, மணி 4.30 ஆச்சு, எந்திரிங்க” என்று சொல்லிக்கொண்டேபோகும்போது அவர் பேசுவது எதுவும் நமக்கு கேட்காது. இன்னாள் “திரும்பிப்பார்க்கிறேன்”கள்கனவில் வந்து அஸ்திவாரத்தை அசைத்துக்கொண்டிருக்கும்போது, தட்சினைக்கோணார்சொன்னால் காதில் கேட்கவா போகிறோம்?

கடகால்

அவருக்கு முந்தின இரவே ‘கடகால்’ என்ற நீள வட்டத்தில் ஒரு பாத்திரம் வைத்திருப்பார்கள். அதன் கூட கொஞ்சம் விளக்கெண்ணையும், தண்ணீரும் இருக்கும். இந்த ‘கடகால்’ என்பது ஒரு 35 செ.மீ நீளமும் 20 செ.மீ மேல்முகப்பு சுற்றும் உடைய எவெர்சில்வர் அல்லது பித்தளை பாத்திரம், இரண்டு காதும் இருக்கும்.  இதில் தான் பாலை கறப்பார்கள். இது நீளமாகவும், சுற்றளவு குறைவாகவும் இருக்கும். இவர் பசுமாட்டருகே போகும் முன், கொஞ்சம் வைக்கோலைப்போட்டுவிட்டு, எங்கப்பாவிடம், “பசங்க இன்னும் எழுந்திருக்கல, நான் கத்திட்டுத்தான் வாரேன்” என்று கூடுதலாக வைக்கோலைப்போடுவார்.  பின் விளக்கெண்ணையை மடுக்களில் தடவி(antiseptic?), தண்ணீரை தெளித்து, குந்தி உட்கார்ந்து இந்த ‘கடகாலை’ இரு முழங்கால் நடுவில் லாவகமாக் சொருகி பால் கறப்பார். இதில் ஒரு காம்பில் பால் கறக்க மாட்டார்கள், அது கன்றுக்குட்டிக்காக வைத்திருப்பார்கள்.

அவரின் உந்துதலாலும், எங்கள் மேல் உள்ள நம்பிக்கையாலும், அப்பா ஒரு வாளி நிறைய தண்ணீர் சேந்தி – சூடான ‘வார்ப்பில்’ பாயாசத்தை தூக்கி ஓடிவரும் சமயல்காரர்கள் போல், அரக்க பறக்க பின் கட்டிலில் தொடங்கி கொட்டில், தாழ்வாரம், ரேழி தாண்டி தூக்கிவந்து, நெல்வயலுக்கு உரம் வீசும் விவசாயி போல், போல் எங்கள் மேல் ஊற்றிவிடுவார்.  நாங்கள் படுத்திருக்கும் பஞ்சுமெத்தை வெறும் பாய், கைதான் தலையணை.  கனவில் பயத்தில் ஒண்ணுக்கு போய்விட்டாலும் சரி, இதுபோன்ற தண்டனை கொடுத்தாலும் சரி, அதை நாங்கள்தான் எடுத்துப்போய் கழுவவேண்டும்.  அண்ணா தம்பிகள் ஒரு கிரிக்கட் குழுதேரும் என்பதால், அப்பாவிற்கு துணிதோய்க்க எங்கள் முதுகே கல்லாக பயன்பட்டுள்ளது, பல சமயங்களில்.  எவ்வளவு கோபம் வந்தாலும் வீட்டுப்பெண்களை அடிக்கவோ, கடிந்து கொள்ளவோ மாட்டார்கள். “சே, நாமும் பெண்ணாய் பிறந்திருக்கலாம்” என்று பல நேரங்களில் ஏங்கியதுண்டு.  ஆனால், அன்பிற்கும் பாசத்திற்கும் ஒரு குறை வைக்கமாட்டார். எங்கள் வீட்டிலிருந்த செவலைப்பசுக்கு எல்லா கைங்கர்யம் செய்தும் அதன் மேன் ஒரு பாசம் வரும் சில நேரத்தில் ‘ஏ பசுவே உனக்கு இவ்வளவு உழைத்திருக்கிறேன், நீ எனக்கு என்ன பண்ணுவே?’ என்று கேட்டிருக்கிறேன்.  அதற்கு உடம்பு சரியில்லாவிடில் மாட்டாஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறேன். கிணற்றிலிருந்து வாளிவாளியாக இறைத்து கொட்டி அதை குளிப்பாட்டி அழகு பார்த்திருக்கிறேன். மாட்டிற்கு லாடம் அடிக்கும்போதும், மூக்கனாம் கயிறை குத்தும்போதும் விசனப்பட்டிருக்கிறேன்.

 

(தொடரும்)

தொடர்புடைய பிற பகுதிகள்

கோபால் பக்கங்கள்

 


தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி பாரதி தமிழ் சங்கம் தனிமை என்ற நாடகத்தை சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு அளித்தது. இரண்டு காட்சிகள். மதியம் இரண்டு மணிக்கு நாங்கள் சென்றோம். இன்னொரு காட்சி மாலை 6 மணிக்கு. வேண்டா வெறுப்பாக குழந்தைகளுக்கு தனிமையை கொடுத்துவிட்டு, நான்-சித்ரா, ஆர்வி-ஹேமா நால்வரும் கடமையே என்ற உணர்வில் சென்றோம். ஓஹ்லோனி கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடனே பார்க்கிங் லாட்டிலேயே பாரதி தமிழ் மன்ற வாலண்டியர்கள் வரவேற்று நமக்காக பார்க்கிங் டிக்கட்டை கருவியிலிருந்து தருவித்து கொடுத்தார்கள். இரண்டு ரூபாய். ஜாக்ஸன் தியேட்டருக்கு வழி சொன்னார்கள். வரவேற்ப்பு எல்லாம் பலமாக தானிருக்கிறது…உள்ளே டிராமா எப்படியோ என்று யோசனையில் பல படிகள் ஏறி ஜாக்ஸன் தியேட்டரில் நுழைந்து இருக்கையைப் பிடித்தோம்.

சரியான நேரத்திற்கு நாடகத்தை தொடங்கினார்கள். ஜாக்சன் தியேட்டரில் பல பிற மொழி நாடகங்கள் நடக்குமென புரிகிறது. அதற்க்கு தகுந்தவாறு அரங்க அமைப்பு உள்ளது. கவனத்தை ஈர்த்த்து சப்-டைட்டில் போடும் வசதி. திரைப்படங்களுக்கு சப்-டைட்டில் போட்டு தான் பார்த்திருக்கிறேன். புதிதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. சப்-டைட்டில் தெரியும் திரை அமைப்பு மிகவும் உயரத்திலிருந்ததால் டிவிடி மற்றும் திரைப்படங்களில் பார்ப்பதுப் போல் சப்டைட்டிலை கடைககண்ணில் பார்க்க முடியாது. நாங்களிருந்த இடத்திலிருந்து நடுப்பகுதியிலிருந்து மிகவும் கடினம். ஒன்று சப்-டைடிலைப் பர்க்க வேண்டும் அல்லது நாடகக் காட்சிகளை பார்க்க வேண்டும். இரண்டும் ஒரே பார்வையில் அடங்காது. பாக்ஸ் அமைப்பில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஒருவேளை தெரியலாம்.

நாடகம் காட்சி அமைப்பு எளிமையாக இருந்தது. அதிகம் பிராப்ஸ் இல்லை.ஆனால் நாடகக் காட்சிகளுக்கே உண்டான செயற்க்கைதன்மையை மறைக்க முடியவில்லை. இந்த குறையை வலிமையான கதையினாலும் தேர்ந்த அளவான நடிப்பிலும் ஒரளவு மறைத்திருக்கிறார்கள்.

வைஷ்ணவ குடுமபத்தின் அடையாளங்களையும், ஆசாபாசங்களையும், பாரம்பரியங்களையும் பொருளியல் உலகின் சூழலில் தவற விட்டுவிட்டு கூட்டு குடும்ப வாழ்க்கையின் சுகங்களை, இன்பங்களையும் இழந்து நிற்கும் தனிமையை தன் குழந்தைகள் தன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது உணர்கிறார் மணி எனற ஒரு பெரியவர் (நவீன் நாதன்). தன் கிராமத்து அக்ரகாரத்தைத் தாண்டி பணி நிமத்தமாகவும், கூட்டுக் குடும்பத்தின் அவதிகளிலிருந்து தனனையும் தன் மனைவியையும் விடுவித்துக் கொள்ள சென்னை செல்ல முயலும் போது, குடும்பத்தின் சந்தோஷத்திற்க்கு முடிவு ஏற்ப்படுகிறது. தன் பக்க நியாத்தை விளக்க முயல பல உறவுகளின் முக்கியத்தை பலவீனமாக்கி மனங்களை புண்படச் செய்கிறார். பின்னர் தான் தனிமையாக வாழும் முதிய காலத்தில் வாழ்க்கையில் பிடிப்பற்று, நோய் நொடியில் உழன்று கொண்டு முடிவை எதிர்ப்பார்த்து விரக்தியாக காலத்தை கழிக்கும் பொழுது ஸ்ரீதர் (ஜெய் கணேஷ்) என்ற ஒரு ஒரு புதிய நண்பர் வருகிறார். பெரியவ்ரின் வாழ்வில் சீர்திருத்தங்களை செய்கிறார். பெரியவர் தனிமையிலிருந்து விடுபடுகிறார்.

பழைய கதை என்றாலும் நவீன சூழலுக்கு மாற்றிஅமைத்திருக்கிறார்கள். நாடகக் கதை அமைப்பு ஃபளாஷ் பேக் யுத்திகளால் சிறப்பாக அமைந்திருக்கிறது. கடந்த கால நிகழ் கால பிரிவினைகளை லைட்டிங் மற்றும் ஃபிரீஸ் யுத்திகளாலும் கையாண்டிருக்கிறார்கள். லைட்டிங் தரம் உயர்ந்தது. ஒலியமைப்பும் உயர்ந்த ரகமே. ஜாக்சன் தியேட்டர் அமைப்புகள் கைகொடுத்திருக்கிறது.

நாடகத்தில் நகைச்சுவை ஒரு ப்ளஸ். அதுவும் புது மருமகள் சிகரெட் பிடிப்பதாக பார்த்த மாமியார் வரும் காட்சி புனைவுகள் பிரில்லியண்ட். நாடகத்தின் மையப் பகுதியில் சற்றே தொய்விருந்தது. மற்றபடி நாடகத்தில் எந்தத் குறைப்பாடும் எனக்குத் தெரியவில்லை.

இது ஒரு கிரியா கிரியேஷன்ஸ் நாடகம்.  ஆனந்த் ராகவ் எழுதிய நாடகத்தை தீபா ராமானுஜம் டைரக்ட் செய்திருக்கிறார்.  முன்னர் ஹியூஸ்டன், மற்றும் பல நகரங்களில் நடத்தியிருக்கிறார்கள்.  தமிழகத்திலும் நடத்தியிருக்கிறார்கள்.

பாரதி தமிழ் மன்றம் இம்முறை சிறப்பாக ஆர்கனைஸ் செய்துள்ளது. அதுவும் மிகவும் சிறப்பாக. பொதுவாக சிக்கனம் கருதி பாரதி தமிழ் மன்றத்தினர் சிறிய பட்ஜெட் நிகழ்ச்சிகளாக நடத்த அது மக்கள் மனதில் பெரிதாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இம்முறை ஹை பட்ஜெட்க்கு போயிருக்கிறார்கள். பணத்துக்கு ஏற்ற தரம். சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.  பணம் செலவு செய்வது ஒரு புறம், நேரம் செலவு செய்வது ஒர் புறம். தரமான நேரத்தை தந்திருக்கிறார்கள்.

வளைகுடா பகுதியில் இது வரைப் பார்த்த நாடகங்களிலேயே மிகவும் நேர்த்தியான நாடகம். நாடக், மற்றும் பல தொழில்முறை குழுக்களைக் காட்டிலும் அபாரமாக வந்துள்ளது.

பிற்சேர்க்கை – இதில் சப்-டைட்டில் என்று நான் குறிப்பிட்டிருப்பதன் சரியான பெயர் சூப்பர் டைட்டிலாம். பின்னர் தான் அறிந்துக் கொண்டேன்.


தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 4

சிறு வயதில் படித்ததுதான் – தமிழை இழித்துப் பேசிய கனக விஜயர் தலையிலே கல்லேற்றிக் கொண்டு வந்தான் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்று வந்தான் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமயம் வரை படையெடுத்துப் போய் வென்றான் கரிகால சோழன், கங்கை வரை சென்று வென்று வந்த ராஜேந்திர சோழன் என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது, மூலைக்கு மூலை அரசியல் கூட்டங்களில் – குறிப்பாக தி.மு.க. கூட்டங்களில் பேசப்பட்டது.

எல்லாம் சரிதான், அது எப்படி இந்த படையெடுப்புகளைப் பற்றி தமிழ் நாட்டுக்கு வெளியே எதுவும் பேசப்படுவதில்லை? கனக விஜயர் எந்த பகுதிக்கு ராஜா? சமுத்திர குப்தன் தொண்டை நாடு வரை திக்விஜயம் செய்தது பல்லவ அரசின் ஆவணங்களில் இருக்கிறது, மாலிக் காஃபூர் மதுரையை அழித்ததற்கு ஆவணம் இருக்கிறது, செங்குட்டுவனுக்கும், நெடுஞ்சேரலாதனுக்கும், கரிகால சோழனுக்கும் எதையும் காணோமே? சிலப்பதிகாரத்தில் கரிகாலன் மகத (இன்றைய பீகார்), அவந்தி நாடுகளை வென்றதாக இருக்கிறதாம். வட நாட்டு சரித்திர புத்தகங்களில் தெற்கே இருந்து யாரும் படையெடுத்து வந்ததாக சொல்லப்படவே இல்லையே? நான் படித்த வரையில் இவை வட நாட்டு சரித்திரத்தில், மக்கள் நினைவில் இல்லவே இல்லை.

கங்கை கொண்ட ராஜேந்திரனுக்கு மட்டுமே தமிழ் நாட்டுக்கு வெளியே ஆவணம் இருக்கிறது. ராஜேந்திரனும் நேர் வடக்குப் பக்கம் போகவில்லை. இன்றைய ஒரிஸ்ஸா (கலிங்கம்) வரையில் அன்றைய நட்பு நாடான வேங்கி நாடு பரந்திருந்தது. ராஜேந்திரனின் தளபதிகள் கலிங்கம் வழியாக இன்றைய வங்காள மாநிலம் வரை போய் அங்கிருந்து கங்கை தண்ணீரை சோழ நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். (கங்கை இன்றைய கல்கத்தாவுக்கு அருகேதான் கடலில் கலக்கிறது.) இது ஒன்றுதான் ஆவணங்கள் இருக்கும், கொஞ்சமாவது வடக்குப் பக்கம் போன படையெடுப்பு என்று நினைக்கிறேன்.

நான் சரித்திர நிபுணன் இல்லை. சிலப்பதிகாரத்தையும் படித்தவன் இல்லை. படித்தவர்கள், நிபுணர்கள் யாராவது இருக்கிறீர்களா? (டாக்டர் நாகசாமி மாதிரி யாரிடமாவது கேட்க வேண்டும்.) இதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா? இது உண்மையிலேயே வரலாறா இல்லை தொன்மமா? (legend)

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு


தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 2

தமிழ் நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கையில் பிற்சேர்க்கையாக ஆதி திராவிடர், பழங்குடியினர், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் லிஸ்டை கொடுத்திருந்தார்கள். அதில் சில ஜாதிகளின் பெயர்கள் வினோதம்!
ஆதி திராவிடர் லிஸ்டில் பள்ளர், பறையர், அருந்ததியர், தேவேந்திர குலத்தார் மட்டும் இல்லை; கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னன் என்ற ஜாதியினர் ஆதி திராவிடராம். சேரமான் என்று ஆதி திராவிடர் ஜாதி இருக்கிறதாம்.

மன்னன் ஜாதியினர் பழங்குடிகள் லிஸ்டிலும் இடம் பெறுகிறார்கள். மலயாளி என்ற ஜாதியினர் பழங்குடியினராம். இவர்கள் மலையாளம் பேசுவார்களா, இல்லை மலைப்பகுதியில் வாழ்பவர்களா என்று தெரியவில்லை.

தென்னிந்திய திருச்சபை, லத்தீன் கத்தோலிக்கர்கள் பிற்படுத்தப்பட்டவராம். இது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததாக இருக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் லத்தீன் கத்தோலிக்க கிருஸ்துவ வண்ணார் என்று ஒரு உட்பிரிவு!

தங்கப் பதக்கம் திரைப்படம் பார்த்தபோது தமிழர்களில் யார் சௌத்திரி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. ஆனால் சௌத்திரி என்பது பிற்படுத்தப்பட்ட ஒரு ஜாதியின் பெயராம்!

ஏனாதி நாயனார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனாதி என்பது ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியின் பெயராம்! பெரிய புராணத்துக்கும் முந்தைய காலத்திலிருந்தே இந்த ஜாதி இருக்கிறது போலும்!

செட்டியார்களில் எத்தனை வகை? கற்பூர செட்டியார் (கற்பூரம் மட்டும் விற்றார்களா?), பன்னிரண்டாம் செட்டியார் (மிச்ச பதினொன்று செட்டியார் உட்பிரிவுகள் என்ன ஆயிற்று?), உத்தம செட்டியார், சாதுச் செட்டி, சுந்தரம் செட்டி (என்ன அழகான செட்டியார்கள் என்று பேர் வாங்கியவர்களா?) என்ற பெயர்கள் ஆச்சரியப்படுத்தின.

வேளாளர்களும் இப்படித்தான் – குடிகார வேளாளர் (அனேகமாக குடிபடை என்ற அர்த்தத்தில் இருக்கும் என்று ஒரு நிமிஷத்துக்கு அப்புறம்தான் தோன்றியது), பொடிகார வேளாளர் (பொடிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?) உட்பட பல பிரிவுகள்.

யோகீஸ்வரர் என்று ஒரு MBC பிரிவு. யோகிக்கே ஜாதியா?

யவனர் என்றால் வெளிநாட்டவர், குறிப்பாக கிரேக்க நாட்டவர் என்று யவன ராணி படித்த காலத்திலிருந்து நினைத்துக் கொண்டிருந்தேன். யவன என்று ஒரு ஜாதி இருக்கிறது! அந்த காலத்தில் இங்கே வந்து போன யவனர்களின் வாரிசுகளோ?

தக்காளி முஸ்லிம் என்று ஒரு உட்பிரிவு!

(ராமகிருஷ்ண)ஹெக்டே – (தேவே)கௌடா சண்டை கர்நாடகத்தில் பிரபலம். தமிழ்நாட்டில் ஹெக்டே, கௌடா இரண்டும் பிற்படுத்தப்பட்ட ஜாதி.

சொன்னால் நம்பமாட்டீர்கள், கேப்மாரிகள் என்று சீர்மரபினர் ஜாதி இருக்கிறது. (சீர்மரபினர் அந்த காலத்து “குற்றப் பரம்பரையின்” நீட்சியோ?) கேப்மாரி என்பது சென்னை வட்டாரத்தில் ஒரு வசவு. யாரோ ஒருவர் சொன்னார், கேனையன் என்பது தருமபுரி வட்டாரத்தில் ஒரு ஜாதி என்று! இந்த லிஸ்டில் காணவில்லை.

லிஸ்டில் ஆந்திர, கர்நாடக, கேரள மூலம் உள்ள ஜாதிகள் நிறைய தெரிகின்றன. செட்டியார், போயர், ஒட்டர், நாயக்கர் மட்டுமில்லை. ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் பல உட்பிரிவு. குறவர் என்றால் அதில் ஒரு இருபது முப்பது உட்பிரிவு, போயர், தேவர், வன்னியர் என்று எல்லா ஜாதியிலும் இப்படித்தான்.

சமூக ஆராய்ச்சி செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ஜாதிப் பெயர்கள் மட்டுமே கூட ஒரு fertile ground ஆக இருக்கும். மன்னன் ஒரு காலத்தில் குறுநில மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மாநில எல்லைகளுக்கு அர்த்தமே இல்லை என்று தெரிகிறது. செட்டியார் தமிழர், செட்டி ஆந்திராவிலிருந்து வந்தவர்; அப்படி என்றால் செட்டிகள் ஆந்திராவுக்கு போய் செட்டிலான செட்டியார்களின் வாரிசுகளா? கர்நாடகப் பகுதியிலும் ஷெட்டி என்று ஒரு பிரிவு உண்டு. இதை எல்லாம் பற்றி ஆராய தமிழ் நாட்டுக்கு ஒரு டி.டி. கோசாம்பி வேண்டும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜாதி

தொடர்புடைய சுட்டிகள்:
பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை காலி அறிக்கை (ஜாதிகள் லிஸ்ட் பிற்சேர்க்கை) – pdf download



பாலகுமாரனுக்கு ராஜராஜ சோழன், தஞ்சாவூர் பெரிய கோவில் என்றால் ஒரு பித்து உண்டு. உடையார் புத்தகம் வருவதற்கு முன்பே அவரது பல புத்தகங்களில் இது தெரியும்.

அவருடைய தளத்தில் அவர் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டதைப் பற்றி உள்ளம் உருகி ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அதைப் பற்றி விவரித்து எல்லாம் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. அங்கேயே போய் படித்துக் கொள்ளுங்கள்!

பாலகுமாரன் பதிவைப் பார்த்தேன், அடுத்த நாள் இந்த ஹிந்து கட்டுரை கண்ணில் பட்டது. டாக்டர் நாகசாமியின் ஒரு உரையைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன் 407 தளிச்சேரி பெண்டுகளுக்கு (நாட்டியம் ஆடுபவர்கள்) வீடு, நிலம் வழங்கியது, வீட்டின் அட்ரஸ், (ஏறக்குறைய பட்டா) அடுத்த வாரிசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய முறை, பாடுபவர்கள், உடுக்கை அடிப்பவர்கள், வீணை வாசிப்பவர்கள், மத்தளம் வாசிப்பவர்கள், சங்கு ஊதுபவர்கள், கணக்கு வழக்கு பார்ப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், தைப்பவர்கள், எல்லா நடனங்களையும் மேற்பார்வை பார்ப்பவர்கள் அத்தனை விஷயங்களையும் கோவிலில் கல்வெட்டாக செதுக்கி வைத்திருக்கிறாராம். டாக்டர் நாகசாமி இந்த நானூறு தளிச்சேரி பெண்டுகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி அதை முதல்வர் கருணாநிதி வெளியிட்டாராம்.

சுவாரசியமான கட்டுரை, படித்துப் பாருங்கள்!

அப்புறம் தமிழ் ஹிந்து தளத்திலும் ஒரு அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. அதே தளிச்சேரி பெண்டுகள், அவர்கள் வாழ்க்கை முறை, என்ன வட்டிக்கு அந்த காலத்தில் பணம் கிடைத்தது என்று பல விஷயங்களை எழுதி இருக்கிறார்கள். கட்டாயமாக படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவுகள்:
பாலகுமாரனின் பதிவு
தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் – ஆர்வியின் பதிவு, ஹிந்து கட்டுரை
இந்திரா காந்தி சென்டரில் எல்லா ஓவியங்களும் (பாதிக்கு மேலான ஓவியங்கள் மங்கிவிட்டிருக்கின்றன. ஆனால் மிச்ச ஓவியங்களை தவறவிடாதீர்கள்.)
பெரிய கோவில் பற்றி ஒரு தளம்

ஹிந்து கட்டுரை
டாக்டர் நாகசாமி

தமிழ் ஹிந்து கட்டுரை


ஒரு காலத்தில் வாரப் பத்திரிகைகளிருந்து எடுத்து பைண்ட் செய்யப்பட பழைய தொடர்கதைகள் பல உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் புழங்கும். எனக்கு அந்த மாதிரி புத்தகங்களை படிக்கும்போது ஒட்டிக் கொண்டு வந்திருக்கும் மிச்ச பக்கங்களை படிப்பது பிடிக்கும். அப்படிதான் நான் சில கோவில் ஓவியங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் சில்பி என்ற பெயர் தெரியாது. (பெயர் தெரிந்த முதல் ஓவியர் ஜெயராஜ்தான்.) யாரோ வரைந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதுதான். சமீபத்தில் வரலாறு.காம் என்ற தளத்தில் சில்பியை பற்றிய சில கட்டுரைகளைப் பார்த்தபோது பழைய ஞாபகங்கள் வந்தன. அங்கே சில்பியின் வாழ்க்கை, சில்பியின் கோட்டோவியங்கள், சில்பியைப் பற்றி ஒரு அறிமுகம் என்று மூன்று கட்டுரைகளைப் பார்த்தேன்.

(விகடனுக்கும் பசுபதிக்கும் வரலாறு.காம் தளத்துக்கும் நன்றி!) உதாரணத்துக்காக அங்கிருந்து ஒரு ஓவியத்தை இங்கே மறுபதிப்பு செய்திருக்கிறேன். அதில் எத்தனை நுணுக்கம்? ஒரு புகைப்படத்தில் கூட இப்படி ஒரு எஃபெக்டை கொண்டு வருவது கஷ்டம். (படத்தை கிளிக்கினால் பெரிய சைஸ் ஓவியம் தெரியும்.)

ராஜன் உபயத்தில் இந்த சிற்பத்தின் புகைப்படமும் கிடைத்திருக்கிறது. இது ஸ்ரீவைகுண்டம் கோவிலில் உள்ள ஒரு சிற்பமாம்.

சில்பி விகடனில் பணி புரிந்திருக்கிறார். ஊர் ஊராகப் போய் அங்குள்ள கோவில்களை – கோவில் என்றால் மூலவர் உற்சவர் கோபுரம் மட்டுமில்லை – எந்த மூலை முடுக்கில் அவரை ஒரு சிற்பம் கவர்ந்தாலும் அதை வரைவார். தென்னாட்டு செல்வங்கள் என்று ஒரு தொடர் வந்ததாம். அது பூரா இவர் ஓவியங்கள்தானாம். இங்கே இருக்கும் ஓவியம் கூட அந்த தொடரில் வந்ததுதானாம்.

எனக்கு ஓவியத்தின் கலை நுணுக்கம் எல்லாம் தெரியாது. ஓவியம் பிடித்திருக்கிறது இல்லை என்பது பார்த்த நொடியில் படுவதோடு சரி. அதன் பின்னால் இருப்பது க்யூபிசமா, சர்ரியலிசமா, பாயிண்டிலிசமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் இது பார்ப்பதை அப்படியே பிரதி எடுக்க முயற்சி என்பது தெரிகிறது. என் கண்ணில் சிறந்த ஓவியம், ஆனால் ஓவியக் கலைஞர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. டாக்டர் ருத்ரன் மாதிரி யாராவது என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

சிற்பியின் ஓவியங்களின் பிரின்ட் எங்காவது இன்னும் கிடைக்கிறதா? இணையத்தில் பார்க்க முடியுமா? “தென்னாட்டு செல்வங்கள்” தொடர் புத்தகமாக கிடைக்கிறதா? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்!

பிற்சேர்க்கை: ஸ்ரீனிவாஸ் இரண்டு ஓவியங்களை அனுப்பி இருக்கிறார். இடது பக்கம் கங்கை கொண்ட சோழபுரம் கோவில். அதற்கு அடுத்தபடி இருப்பது திருவாலங்காடு சிவன் கோவில். அவருக்கு நன்றி!

சில்பியின் பாணி, தரம் போன்றவை என் போன்ற பாமரனுக்கு மட்டும்தான் பிடிக்குமா இல்லை ஓவியர்களும் கலை விமர்சகர்களும் அதை உயர்ந்த ஓவியம் என்று கருதுகிறார்களா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. டாக்டர் ருத்ரன் நல்ல ஓவியர், எனக்குத் தெரிந்த ஒரே ஓவியர். அவரைக் கேட்டேன் – அவர் வார்த்தைகளில்:

சில்பி ஒரு மேதை மட்டுமல்ல, மகான். அப்படி வரைவது வெறும் திறமையாக எனக்குப் படுவதில்லை, அது அருள், வரம்.

சில்பியின் ஓவியங்களை லக்ஷ்மி எனும் விமர்சகரும் பார்வதி கலைக்கூடத்தின் உரிமையாளரும் ஒரு நூலாக்க சில வருடங்களுக்கு முன் முயன்றார்கள். சில்பியின் குடும்பத்தினர் ஒத்துவரவில்லை என்று சொல்லப்பட்டது.
விகடனுக்கு அப்புறம் மணியனின் இதயம் பேசுகிறது இதழில் சில்பி வரைந்து வந்தார். அவற்றுள் காந்திமதியும் அபிராமியும் அற்புதம்.

ரகுவீரதயாள் திருப்பதி ஐயங்கார் என்பவர் “தென்னாட்டு செல்வங்கள்” தொடரின் சில பகுதிகளை தொகுத்திருக்கிறார். ஸ்ரீனிவாஸ் அவற்றுக்கு சுட்டி கொடுத்திருக்கிறார். இருவருக்கும் நன்றி! இரண்டு பகுதிகள் நெட்டில் கிடைக்கின்றன. முதல் பகுதி தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றியது. இரண்டாம் பகுதி திரிபுவனம் கோவிலைப் பற்றியது.

தொடர்புடைய பக்கங்கள்:
சில்பி – ஒரு அறிமுகம்
சில்பியின் கோட்டோவியங்கள்
சில்பியின் வாழ்க்கை வரலாறு
வரலாறு.காம் தளம்

தஞ்சாவூர் பெரிய கோவில் – சில்பியின் ஓவியங்கள்
திரிபுவனம் கோவில் சித்திரங்கள்

அடுத்த பக்கம் »