India



1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங்கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.

இயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.

இந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.

இவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.

அயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்

(For ItsDiff Radio – September 14, 2011)


மார்ச் 13, 1940

கேக்ஸ்டன் ஹால், லண்டன்.

கிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன?

ஏப்ரல் 13, 1919.

1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.

உலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.

அப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.

அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு  இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”

ஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.

(For ItsDiff Radio – September 7, 2011)


நவம்பர் 17 1920.

பின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.

அவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.

மேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.

ஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.

அந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.

(For ItsDiff Radio –  August 23, 2011)


ஃபெப்ருவரி 4, 1922

மகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.

இந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார்.  பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.

இவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக  1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.

இப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.

(For ItsDiff Radio – July 27, 2011)


(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.

பேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.

நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது.  இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின்  ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.

இன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.

இதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.

இருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.

ஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை  நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு  நேரான  வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை  நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.

சந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர்   ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பதிவுகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags


1948ல் அம்பேத்கார், நேரு, சர்தார் படேல் ஆகியோர் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பையும், பெண்கள் விடுதலையையும், மற்ற பல முன்னேற்றக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்திய சட்டத்தை தயார் செய்தனர்.  இது தனிப்பட்ட ஹிந்து சட்டத்தை எதிர்த்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொளகையை முன் வைத்தது. இதை ஹிந்து-சட்ட-மசோதா (Hindu code Bill) என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படை வேலைகள் இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிய வரும் பொழுதே ஆரம்பித்து விட்டது. அதாவது 1941லேயே அனைத்து இந்துக்களுக்கும் ஒருமையான சட்டத்தை ஏற்படுத்த சர்.பி.என்.ராவ் தலைமையிலான கமிட்டியை பிரிட்டிஷார் உருவாக்கினர்.  இந்தச் சட்டம் மிதாக்‌ஷரத்தையும், தாயாபாகத்தையும் நிலைகுலையச் செய்தது. அதனால் பல இந்து மேல் ஜாதியினரை பகைத்து கொண்டார் நேரு.

இந்த சீர்திருத்தச் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்*:

1. மிதாக்‌ஷரத்தையும்,  தாயபாகத்தையும் முழுமையாக அல்லாவிட்டாலும்  பல பகுதிகளை புறக்கணித்தல் – சுருக்கி சொல்லப்போனால் மகனுக்கும் மகளுக்கும் அப்பாவின் சொத்தில் 50-50

2. பெண்களுக்கு அலிமோனி – விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவானாம்சம்

3.  ஜாதி மாற்று திருமணங்களை அங்கீகரித்தல் – அதாவது சட்டப்படி ஜாதி மாற்று மணங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டப்படி ஒரே ஜாதியில் திருமணம் பண்ணியவர்கள் போன்று அணைத்து உரிமையும் பெறுதல் – அதாவது சொத்துரிமை போன்றவை.

4. பெண்களுக்கும் டைவோர்ஸ் உரிமை

5. மோனோகாமி – ஒரு மனைவியோ, ஒரு கணவனோ மட்டும் இருக்கவேண்டும்

6. வேறு ஜாதிக் குழந்தைகளை தத்தெடுப்பது

*(”காந்திக்கு பிறகு இந்தியா” – ராமச்சந்திர குகா)

நல்லச் சட்டங்கள் தானே என்று தோன்றுகிறதல்லவா? உங்களுக்கு தோன்றுகிறதோ இல்லையோ, பல முன்னேற்ற சமுதாயத்திற்கு காலகாலமாய் தோன்றிக்கொண்டு தானிருந்திருக்கிறது. இந்த மாதிரி சீர்திருத்தங்களெல்லாம் கௌடிலயர் காலத்திலிருந்தே பல மேல ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரவிந்தன் நீலகண்டன்  ”இந்துத்வத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்” (“பண்பாட்டை பேசுதல்”  – தமிழ்ஹிந்து பதிப்பகம்) என்ற கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். ஸின் முக்கிய கோட்பாடான சாதிய புறக்கணிப்பிற்கு  சத்தியகாம ஜாபாலா, ஸ்ரீமத் பி.ஸ்ரீ.ஆச்சாரியார் முதற் கொண்டு பல உதாரணங்கள் கூறுகிறார். வீர் சாவர்க்கர், குருஜி மாதவ சதாசிவ கோல்வால்க்கர் முதலியோர்கள் சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ். மேடைகள் எப்பொழுதும்  ரைகவர் முதல் அம்பேத்கார் வரை முன் வைத்து பேசுகிறது என்பதையெல்லாம் அரும்பாடுபட்டு விளக்குகிறார். அவரின் பிரயத்தனம் புரிகிறது. மேல் ஜாதி ஹிந்துக்கள் முற்போக்கு சிந்தனைக்கு தடையாக இருந்ததை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது என்ற செய்தியை சொல்ல பாடுபடுகிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் ஜாதியத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளை சுட்டுகிறார்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  ”ஹிந்து சட்ட மசோதா”விற்கு கடின எதிர்ப்பு தெரிவித்ததாக வரலாறு கூறுகிறது. அனைத்திந்திய இந்து-சட்ட-மசோதா-எதிர்ப்பு என்ற அமைப்பிற்க்கு தன் முழு ஆதரவை அளித்திருக்கிறது. துவாரகாவின் சங்கராச்சாரியர், பழமைவாத(conservative) வக்கீலகள், மற்றும் பலரின் இந்த மசோதா எதிர்ப்பிற்கு பின்னால் தன் முழு பலத்தையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அளித்ததாக ராமச்சந்திர குஹா கூறுகிறார். இந்தச் சட்டம் ”ஹிந்து இனத்திற்கு ஒரு அணு குண்டு” என்று ஆர்.எஸ்.எஸ்.ச்ஸை சேர்ந்தவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

இன்று ஆர்.எஸ்.எஸ். இதை எப்படி நியாயப்படுத்துகிறது?


வருஷம் 1946. இந்தியா விடுதலைப் பெறப்போவது உறுதியாகிவிட்டது. ஒரு இடைக்கால மத்திய அரசை அமைக்க வேண்டும். காங்கிரஸ், ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் இரண்டையும் ஒரு கூட்டணி அரசை அமைக்க வைஸ்ராய் கூப்பிட்டிருந்தார். முஸ்லிம் லீக் பயங்கர வீம்பு பிடித்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த முஸ்லிமும் அமைச்சராகக் கூடாது என்று நிபந்தனை. இதை காங்கிரஸ் நிராகரித்தது. (அபுல் கலாம் ஆசாத் ஒரு வருஷம் முன்பு வரை காங்கிரசின் தலைவராக இருந்திருக்கிறார்) லீக் பழிக்குப் பழி உளிக்கு உளி என்று தானும் ஒரு ஹிந்துவை அமைச்சராக்கியது. யார் அந்த முஸ்லிம் லீகின் (ஒரே ஒரு) ஹிந்து? அவர்தான் இந்த ஜோகேந்த்ரநாத் மண்டல்.

இதைப் பற்றி முதன்முதலாக தெரிந்து கொண்டபோது முஸ்லிம் லீகில் எப்படி ஒரு ஹிந்து போய்ச் சேர்ந்தார் என்று வியந்தேன். அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை பல விஷயங்களை விளக்குகிறது. மண்டல் தலித் தலைவர். தலித்களும் முஸ்லிம்களும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள், அதனால் அவர்களது இலக்குகளில் இசைவு உண்டு, சேர்ந்து இருந்தால் அது பலத்தை அதிகரிக்கும் என்று கருதி இருக்கிறார். ஜின்னாவால் கவரப்பட்டு அவருக்கும் லீகுக்கும் உண்மையான விசுவாசியாக இருந்தார். பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானுக்குப் போனார். அங்கே சட்ட அமைச்சராக இருந்தார். ஜின்னா இருந்தவரைக்கும் எல்லாம் சரியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ஜின்னாவின் மறைவுக்குப் பிறகு அங்கே ஹிந்துக்கள் ஒடுக்கப்படுவதைப் பார்த்து வேறு வழியில்லாமல் தன பதவியை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

மண்டல் தலித்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். அவரது ஆதரவு இல்லாவிட்டால் சுராவர்தி 1946-இல் வங்காளத்தில் வெற்றி பெற்று முஸ்லிம் லீக் அரசை அமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படி முஸ்லிம் லீக் அரசு அமைதிருக்காவிட்டால் கல்கத்தா, நவகாளி கலவரங்கள் எல்லாம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. வங்காளத்தில் நடந்தது சுராவர்தி அரசின் மறைமுக ஆதரவோடு நடந்த கலவரம். (ஹே ராம் படத்தில் காண்பிக்கப்படுவது இந்த கலவரம்தான்.) அப்படியே யோசித்துக் கொண்டே போனால் பிரிவினைக்கே இவர்தான் காரணமோ என்று தோன்றுகிறது!

சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம், கண்மூடித்தனமான விசுவாசம், தப்புக் கணக்கு ஆகியவை நல்ல தலைவராக பரினமித்திருக்கக் கூடிய ஒருவரை எப்படி திசை மாற்றி இருக்கிறது என்பதற்கு மண்டல் ஒரு உதாரணம்.

நல்ல கட்டுரை எழுதி இருக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கு வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
ஜோகேந்த்ரநாத் மண்டல் – விக்கி குறிப்பு
ஜோகேந்த்ரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்


தமிழ் மணம் நட்சத்திரப் பதிவு 5

உள்ளத்தைத் தொட்ட ஒரு (பழைய) செய்தி:

ஜனவரி 25 , 1994-இல் காப்டன் டி.பி.கே. பிள்ளை (D.P.K. Pillay) இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் லோங்டி பாப்ரம் (Longdi Pabram) என்ற கிராமத்தில் ரோந்து போய்க்கொண்டிருந்தார். நான்கு தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை. ஒரு தீவிரவாதி அவுட். பிள்ளைக்கு அபாயமான காயம், பிழைப்பாரா மாட்டாரா என்ற நிலை. பிள்ளையை காயப்படுத்திய கேய்னே போன் (Kaine Bon) உட்பட இரண்டு தீவிரவாதிகள் கைப்பற்றப்பட்டனர்.

ஆனால் துப்பாக்கி சண்டையில் மாசெலியு தாய்மெய் (Maseliu Thaimei) என்ற ஒரு இளம் பெண்ணின் மீதும் குண்டு பாய்ந்தது. பிள்ளையை தூக்கிச் செல்ல ஒரு ஹெலிகாப்டர் வந்தபோது அவர் முதலில் அந்த பெண்ணை எடுத்துச் செல்லச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் லோங்டி பாப்ரம் கிராமத்தை தாக்கி நொறுக்கி விடுகிறோம் என்று பொங்கி எழுத சக அதிகாரிகளை தன்னுடைய கடைசி ஆசையாக அந்த கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஏறக்குறைய சத்தியம் வாங்கி தடுத்திருக்கிறார். பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகளுக்கும் அடி விழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நல்ல வேளையாக பிள்ளை பிழைத்துவிட்டார். இன்று அவர் ஒரு லெஃப்டினன்ட் கர்னல்.

ஆறேழு மாதங்களுக்கு முன்னால் மீண்டும் அந்த கிராமத்துக்கு போயிருக்கிறார். காப்பாற்றப்பட்ட மாசெலியு இன்று ஒரு தாய். அந்தப் பெண்ணின் அம்மா தன் பெண்ணின் உயிரை காப்பாற்றியவரை பார்த்து கதறி கதறி அழுதாராம்.

பிள்ளை இது ஒன்றும் பெரிய தியாகம் இல்லை, யாராயிருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள், அந்த பெண்ணுக்கு தான் சுடப்பட்டது என் என்று தெரியாது, எனக்குத் தெரியும், அந்த தீவிரவாதிகளுக்குத் தெரியும், அதனால்தான் அவளைக் காப்பாற்ற வேண்டியது எங்கள் முதல் கடமை என்று நினைத்தேன் என்கிறாராம். தமிழ் சினிமாவில் வருவது போல என் கடமையைத்தானே செய்தேன் என்கிறார், என்ன என்ன சினிமாவில் பார்த்தால் சிரிப்பு வரும், இது genuine ஆக இருக்கிறது.

கிராம நாட்டாமை திரு அடான்போ (Atanbo) அந்த இரவின் ஒவ்வொரு நொடியையும் நன்றாக நினைவு வைத்திருக்கிறார். பிள்ளை எங்களை மன்னிக்காவிட்டால் நாங்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது என்கிறார்.

பிள்ளையே எதிர்பாராத ஒரு சந்திப்பு – கேய்னே போன் அவரை வந்து பார்த்திருக்கிறார். இப்போது தீவிரவாதப் பாதையை விட்டுவிட்டார் என்று தெரிகிறது. 16 வருஷங்களுக்கு முன் ஒருவரை ஒருவர் கொல்ல முயன்ற இருவரும் இன்று தழுவிக் கொண்டனர்.

பிள்ளை “என்னால் நம்பவே முடியவில்லை! கிராமத்தைப் பார்க்க வந்தேன், கேய்னேவையும் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை” என்கிறார்.

பிள்ளையின் சக அதிகாரியான கர்னல் சோங்கர் (Chonker) – இன்று லோங்டி பாப்ரம் கிராமத்துக்கு அருகே ஒரு பட்டாலியனுக்கு தலைவராக இருப்பவர் – சொல்கிறார்: “ஒவ்வொரு ராணுவ வீரனின் கனவும் இதுதான் – காப்பாற்றுபவன் என்று பேர் வாங்கவே துடிக்கிறோம், கொல்பவன் என்றல்ல.”

16 வருஷங்களுக்கு பின் தான் சண்டையிட்ட, படுகாயம் பட்ட ஒரு கிராமத்துக்கு ஒரு ராணுவ வீரன் வருவதே அபூர்வம். அந்த கிராமம் அவரை அழைத்திருப்பது அதை விட அபூர்வம். Truly inspiring story.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பக்கம்: இந்தியன் எக்ஸ்ப்ரஸ் சுட்டி


எப்போதுமே சட்டம் வேலை செய்யாத இடங்களைப் பற்றி பெரிதாக கூக்குரல் இடுகிறோம். மாறுதலுக்காக சட்டம் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய ஒரு கேஸ், நீதிபதி சின்ஹாவைப் பற்றி இந்த பதிவு.

இந்திரா காந்தி 71 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார். அது பங்களாதேஷ் போர் முடிந்திருந்த காலம். அவர் வெற்றி பெறாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஆனால் அந்த தேர்தலில் அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ராஜ்நாராயன் அவர் மேல் ஒரு கேஸ் போட்டார். அந்த கேசும் 4 வருஷத்துக்குள் முடிந்துவிட்டது. விசாரித்தவர் ஜஸ்டிஸ் சின்ஹா. நாட்டின் பிரதமருக்கு எதிராக தைரியமாக தீர்ப்பளித்தார் சின்ஹா.

சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் அப்பீல் செய்து இந்திரா காந்தி வென்றார். ஆனால் அதற்குள் அவசர நிலை பிரகடனம் நடந்தது, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெயிலில், பிறகு தேர்தல், இந்திராவின் வீழ்ச்சி, என்று நாட்டின் சரித்திரமே மாறிவிட்டது.

ஜஸ்டிஸ் சின்ஹா இரண்டு வருஷத்துக்கு முன்தான் இறந்திருக்கிறார். யாரும் பெரிதாக கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார் – என் கடமையைத்தான் செய்தேன் என்று தமிழ் சினிமா கிளிஷே ஒன்றை உண்மையாக செய்தவர் அவர்.

அவரைப் பற்றி முன்னாள் அமைச்சர் சத்தியப் பிரகாஷ் மாளவியா இங்கே எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டி: சத்ய பிரகாஷ் மாளவியாவின் அஞ்சலி


(A ray of hope to “Rejuvenate India” என்ற இடுகையை தமிழாக்கம் செய்ய வேண்டுமே (பிரசாத் கேட்டுக்கொண்டதற்க்காக) என்ற சுமை அழுத்திக் கொண்டிருந்தது. நண்பர் ராஜன் அவர்கள் ஜேபியுடன் அவருக்கு உண்டான தொடர்பை பின்னூட்டமாக எழுதியிருந்தார். அதையே இங்கே ஒரு இடுகையாக ப்ரொமோட் செய்து நான் தமிழாக்கம் செய்வதை கால தாமதம் செய்வதற்கு தகுந்த காரணமாக கொண்டுவிட்டேன். ஓவர் டூ ராஜன்…)

இவர் பீஹார் ஜெ பி அல்ல ஆந்திராவின் ஜெ பி. இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். மருத்துவம் படித்தால் மக்களுக்கு நேரடியாகச் சேவை செய்யலாம் என்று நினைத்து டாக்டரானவர். பின்னர் அதுவும் போதாமல் ஐ ஏ எஸ் ஆனால் இன்னும் நிறைய பேர்களுக்கு உதவி செய்யலலாம் என்று நினைத்து ஐ ஏ எஸ் ஆகி, பிரகாசம் மாவட்டக் கலெக்டராக இருந்து பின்னர் என் டி ஆரின் செயலாளராக இருந்து, அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு எந்த சேவையையும் உருப்படியாகச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து, சக்திவாய்ந்த ஐ ஏ எஸ் பதவி, செக்ரடரி பதவி, டாக்டர் வேலை எல்லாம் உதறி விட்டு இந்திய அரசியல் அமைப்பை அடிப்படையில் மாற்றும் முயற்சியில் ஊழல் அற்ற இந்தியாவை மக்களிடம் அதிகாரத்தை அளிக்கும் இந்தியாவை உருவாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். லோக் சத்தா என்ற அரசியலில் ஈடுபடாத அரசியல் அமைப்பு மாற்றத்தைக் கொணரும் இயக்கத்தை ஆரம்பித்து இன்று 14 வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது தன் இயக்கத்தை ஒரு அரசியல் இயக்கமாகவும் மாற்றி ஆந்திராவில் எம் எல் ஏ எலக்‌ஷனில் போட்டியிட்டு பத்து சதவிகித வாக்குகள் பெற்று இவர் மட்டும் எம் எல் ஏவாகவும் ஆகியிருக்கிறார். இவரது இயக்கத்தை அகில இந்திய அளவில் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்த புதிதில் இவரைச் சந்தித்து 2000ம் ஆண்டு பேசியிருக்கிறேன். அப்பொழுது இவரைச் சந்திக்க நாங்கள் ஒரு பத்திருபது பேர்கள் சென்றிருந்தோம். தெளிவான நோக்கம், சிறப்பான பேச்சாற்றல், ஊழலற்ற தூய்மை, இந்தியாவின் பலம் பலவீனம் குறித்த தெளிந்த பார்வை, எதிர்காலம் குறித்த நோக்கு எல்லாம் படைத்த இந்தியாவை ஆளும் அனைத்து நேர்மையான தகுதிகளும் திறமையும் பெற்ற ஒரு தலைவர். மெதுவாக நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறார். நேற்று இவர் சன்னிவேல் நகரில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி தனது முயற்சிகளையும் முன்னேற்றங்களையும் விவரித்தார்.

சாதாரணமாக ஒரு அரசியல்வாதி வந்தால் அதிக பட்சம் ஒரு சின்ன ஹோட்டலில் ஒரு ஐம்பது பேர்கள் கூடுவார்கள். அமெரிக்காவில் இது நாள் வரை அதிக கூட்டத்தை ஈர்த்தவர் வாஜ்பாயி ஒருவர் மட்டுமே. ஒரு நடிகர் வந்தால் அவரைப் பார்க்க நூறு பேர்கள் கூடுவார்கள். ஆனால் ஒரு இந்திய அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை மாற்ற, இந்திய அமைப்பின் அடித்தளத்தை மாற்ற முனைந்த இந்த டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணனுக்கு நேற்று வந்திருந்த கூட்டம் அமெரிக்க இந்திய வரலாறு காணாதது. கிட்டத்தட்ட ஒரு 1500 பேர்கள் கூடியிருந்து அமைதியாக அவரது பேச்சைக் கேட்டது எனக்கு பெரும் பிரமிப்பை அளித்தது. இந்த வரவேற்பு அவருக்கு இந்தியாவில் கிட்டியிருக்குமானால் இந்தியப் பிரதமராகவே ஆகியிருந்திருப்பார். தமிழ் நாட்டிலும் இவரது அமைப்பு மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் விஜய் ஆனந்த் என்பவரால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. விஜய ஆனந்த் வாஷிங்டன் டி சி யில் இருந்து தமிழ் நாடு திரும்பி லஞ்சம் கொடாதோர் இயக்கத்தை ஆரம்பித்து இப்பொழுது டாக்டர் ஜெ பியுடன் இணைந்துள்ளார். 2020ல் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் திட்டத்துடன் இருக்கிறார்.

ஜெ பி மாற்ற விரும்புவது அரசியல்வாதிகளை அல்ல, சிஸ்டத்தை மட்டுமே. கிராம அளவில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவது மூலமாக மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்கிறார். இவரைப் போன்றவர்கள் எந்தவித மாயாஜாலத்தையும் நிறைவேற்றி விட முடியாது என்றாலும் கூட இவரைப் போன்றவர்கள் உருவாகியிருப்பதும் இந்த அளவு கவனிப்பைப் பெற்றிருப்பதும் கூட ஒரு சிறிய நம்பிக்கையை அளிக்கின்றது. இந்திய ஜனநாயகத்தில் அடிப்படை சீர்த்திருத்தங்களை செயல்படுத்துவதே இந்தியாவின் பெரும்பான்மையான ஊழல்களுக்குத் தீர்வு என்கிறார் ஜெ பி. ஆந்திராவை ஆட்டி வரும் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு அரசியல் இவரையும் துரத்தி வருகிறது. பேச்சு நடைபெற்ற சன்னிவேல் இந்துக் கோவில் அரங்கு முன் ஏராளமான தெலுங்கானா ஆதரவாளர்கள் ஜெ பி யைக் கண்டித்து பேனர் ஏன்றி நின்று கொண்டிருந்தனர். அதனால் பலத்த தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பும் ஹாலுக்குள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவு பத்து மணி வரை கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் கண்டனங்களுக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். வந்திருந்தவர்களில் 98% ஆந்திராகாரர்கள் என்றாலும் பேச்சை அற்புதமான ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்த்தினார். தமிழ் நாட்டில் இருந்து ரஜினிகாந்தே வந்திருந்தாலும் கூட இவ்வளவு பெரிய ஆர்வம் உள்ள கூட்டம் நிச்சயம் கூடியிருக்காது. அந்த வகையில் ஆந்திரா மக்களின் சினிமா மோகத்தின் மீதும் இந்தியாவின் மீதான அக்கறையின்மை மீதும் நான் கொண்டிருந்த அபிப்ராயத்தை பெரிதும் மாற்றி விட்டது இந்தக் கூட்டம். அவ்வளவு பெரிய அந்த அரங்கம் இவ்வளவு தூரம் முழுக்க நிரம்பி நான் கண்டதேயில்லை. தமிழக அரசியல்வாதிகள் போல இல்லாமல் முழுக்க முழுக்க ஒன்று பட்ட இந்தியாவின் மீதான அக்கறையுடனான ஒரு முழுமையான இந்தியனாக இருக்கிறார் ஜெ பி. இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையுடன் பேசுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்

தொடர்புடைய இடுகைகள்:
ஜேபி பற்றிய பக்ஸின் இடுகை

அடுத்த பக்கம் »