இருவரும் நிச்சயமாக வேறு வேறு.

கணேஷ் ஷெர்லாக் ஹோம்ஸ். ஷெர்லாக்கைப் போலவே கணேஷ் யோசிக்கிறார், கண்டுபிடிக்கிறார். ஷெர்லாக் ஒரு சிறு விஷயத்தை வைத்துக் கொண்டு செய்யும் யூகங்கள் மட்டுமே மிஸ்ஸிங். (உதாரணமாக The Blue Carbuncle கதையில் ஒரு தொப்பியை வைத்துக் கொண்டு தொப்பியின் சொந்தக்காரரின் மனைவி இப்போதெல்லாம் அவர் மீது கடுப்பாக இருக்கிறார் என்று ஷெர்லாக் யூகிப்பார்.) கோர்ட்டுக்கு போகாத பெர்ரி மேசன்.

வசந்த் டாக்டர் வாட்சன். கனேஷுக்காக உயிரையும் கொடுப்பார். கணேஷின் கண்டுபிடிப்புகள் பிரகாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு counterpoint. பெர்ரி மேசனுக்கு அங்கங்கே ஓடி அலைந்து துப்பு கண்டுபிடிக்கும் ஒரு டிடக்டிவ் உண்டு. (பேர் மறந்துவிட்டது). டாக்டர் வாட்சன், அந்த டிடக்டிவ், மற்றும் ஜொள்ளு விடும் ஒரு இளைஞன் ஆகியவற்றின் கலவைதான் வசந்த்.

ஆரம்ப காலத்தில் (பாதி ராஜ்ஜியம், அனிதா இளம் மனைவி) காலத்தில் கணேஷே பெர்ரி மேசன், ஹோம்ஸ் மற்றும் ஜொள்ளனாக இருப்பார். அப்படி இருந்தால் counterpoint என்பது கஷ்டம். அதற்காக ஒரிஜினல் கணேஷை இரண்டாகப் பிரித்து புது கணேஷும், வசந்தும் உருவாக்கப்பட்டனர் என்று வைத்துக் கொள்ளலாம்.

எது எப்படியோ எல்லா கணேஷ்-வசந்த் கதைகளையும் ஒரு ஆம்னிபஸ் வால்யூமாக போடுங்கப்பா! தமிழ்நாட்டில் கூட நல்லபடி விற்கும்!

தொடர்புடைய பதிவுகள்:
உப்பிலி ஸ்ரீனிவாசின் பதிவு
டோண்டுவின் ஒரிஜினல் பதிவு
ஷெர்லாக் ஹோம்ஸின் “The Blue Carbuncle” கதை – இது ஒரு tour de force, இது வரை படித்ததில்லை என்றால் கட்டாயமாக படியுங்கள்!


(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

எதையும் ஒருமுறை
======================
ஒரு சட்டக் கல்லூரியில் மாணவர்களுடன் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கணேஷ் வசந்த் கல்லூரிக்கு சென்று இருப்பார்கள். அங்கு நிருபமா என்ற மாணவியின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பார் கணேஷ். திரும்பி வரும் போது தன்னை ஓர் இடத்தில் இறக்கிவிட வேண்டுமென நிருபமா கேட்க இவர்களும் காரில் ஏற்றிக் கொள்வார்கள். வழியில் ஒரு கால்வாயில் ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருக்கும். போலிஸ், கூட்டமென அந்த இடம் பரபரப்பாக இருக்கும். மூவரும் இறங்கி சென்று பார்ப்பார்கள். அதை அனாதை பிணமென போலிஸ் தீர்மானத்திருக்கும். நிருபமா அதை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதில் தங்களின் உதவி வேண்டுமென கணேஷிடம் கேட்பார். கணேஷ் அது கடினம் எனக் கூறிய பிறகும் நிருபமா பிடிவாதமாக இருப்பதால் கணேஷ் சில உதவிகளைச் செய்வார். ஒரு சமயம் அந்த கால்வாயின் வழியே சிறிது தூரம் நிருபமாவின் நச்சரிப்பால் செல்வார்கள். அங்கு இறந்தகிடந்த பெண் அணிந்திருந்த சேலையைப் போன்றே ஒரு சேலையை அணிந்து மற்றொரு பெண் இருப்பதைப் பார்த்து அவரிடம் விசாரிப்பார்கள். அந்தப் பெண் தானும் தன் தோழி காவேரியும் அந்த சேலையை ஒன்றாக வாங்கினோம் என கூறுவாள். தன் தோழியை ஒரு பத்து நாளாக காணவில்லையெனக் கூறுவாள். அவள் உதவியுடன் காவேரியின் வீட்டிற்கு செல்வார்கள். இறந்த பெண் காவேரி தானா என முடிவாகவில்லை. எல்லாமே யூகம் தான். அங்கு ஒரு புத்தகம் மட்டும் வித்தியாசமாக இருக்கும். பறவைகள் சம்பந்தப்பட்ட புத்தகம். அதில் ஒரு பெயர் இருக்கும். பறவைகள் சார்ந்த ஒரு சங்கத்தின் மூலம் அந்த புத்தகத்திற்கான ஆளைக் கண்டுபிடிப்பார்கள். அவரின் செயல்களைப் பார்த்து நிருபமாவின் மூலமாக சுஜாதா ஆண்களை எக்கச்சக்கமாக திட்டுவார் :) அந்த மனிதர் வாழ்க்கையில் எதையும் ஒருமுறை செய்துபார்க்க வேண்டுமென நினைப்பவர். பல பெண்களுடன் பழகி அவர்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வைத்து இருப்பார். காவேரியும் அதில் உண்டென அவர் சொல்ல(இவர்களின் சில செய்திகளால்) இவர்கள் பார்ப்பார்கள். நிருபமா இவன் தான் கண்டிப்பாக காவேரியைக் கொலையை செய்து இருப்பான் என முடிவுடன் இருக்க, மருத்துவமனையில் இருந்த அனாதைப் பிணம் தங்கள் மகள் கங்கா எனக் கூறி அவரின் பெற்றோர்கள் பிணத்தைப் பெற்றுக் கொண்டிருப்பார்கள். கணேஷ் நிருபமாவிடம் ஒன்றும் செய்ய முடியாதெனக் கூறிவிடுவார்.

மறுபடியும் கணேஷ்
=====================
பிரபாகர் என்ற ஒரு தொழிலதிபரின் மனைவி ஷைலஜா. பிரபாகர் இந்தப் பெண்ணை சட்டென்று மணந்து கொண்டு வந்துவிடுவார். அந்தப் பெண் கல்லூரி நேரத்தில் தயாள் என்பவரைக் காதலித்திருப்பார். கல்யாணமாகி எட்டு வருடம் கழித்து தயாள் மறுபடி ஷைலஜாவை சந்தித்து தன்னுடன் வந்துவிடுமாறு கேட்பான். மணவாழ்க்கையில் ஏற்பட்டக் கசப்பாலும் குழந்தையின்மையினாலும் இருக்கும் ஷைலஜா இதனால் சிறிது குழப்பமடைவார். கணவருக்கு இந்த விஷயம் தெரிந்துவிடும். ஒரு நாள் பெங்களூர் செல்லும்போது மனைவியைக் கண்காணிக்க ஒருவரிடம் கூறிவிட்டு செல்வார். ஷைலாஜா வும் அன்று ஒரு கடற்கரையில் தயாளை சென்று சந்திப்பாள். நாளை இரவு சென்ட்ரல் நிலையத்துக்கு வரும்படி அவன் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவான். இந்த விஷயம் பெங்களூரில் இருக்கும் கணவனுக்கு தெரிவிக்கப்பட்டுவிடும். அவர் அடுத்த நாள் காலை விமானத்தில் சென்னை வர தயாராகி விடுவார். இதனிடையில் சென்னையில் வீட்டில் ஷைலாஜாவுக்கு ஒரு கடிதம். கணவனுக்கு தெரியாமல் இருக்க 10000 ரூபாய் தரவேண்டுமென. இவள் குழம்பிப்போய் கணேஷை உடனே வரச் சொல்வாள். கணேஷ் வசந்த வந்து இவளிடம் பேசி சில விஷயங்களைத் தெளிவாக்கி விடுவர். மறு நாள் தெளிவாக கணேஷிடம் பேசும் ஷைலஜா வேலைக்காரர்களை சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தானும் புறப்படுவார். திரும்பி வரும்போது கணவர் வீட்டிலிருப்பார். வாக்குவாதம் முற்றி மனைவியைக் கொன்று விட்டு தற்கொலை மாதிரி அனைத்தையும் மாற்றிவிட்டு திரும்ப பெங்களூர் சென்றுவிடுவார். மாலை ஷைலாஜா கேட்டுக்கொண்ட படி அவரை சந்திக்க வரும் கணேஷ் வசந்த் அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்ப்பார்கள். போலிஸுக்கு தெரிவிப்பார்கள்.ஏறக்குறைய எல்லாம் தற்கொலை என உறுதி செய்யப் படுமுன் வசந்த் சில விஷயங்களைக் கண்டுபிடித்து சொல்வார். இவர்கள் ஒரு காகிதத்தில் வரிசையாக என்னென்ன நடந்திருக்குமென கண்டுபிடிப்பார்கள். சரியாகப் பொருந்திவரும். பிரபாகரை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்றால் அங்கு அவரும் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார். கணேஷ் போலிஸுக்கு தொலைபேசியில் மறுபடியும் கணேஷ் என்பார். இரண்டு கொலையும் ஒரே மாதிரி ஆனால் வேறு வேறு ஆட்களால் செய்யப்படும்.

அனிதா – இளம் மனைவி
===========================
இது நைலான் கயிறுக்கு அடுத்து குமுதத்தில தொடர்கதையாக எழுதப் பட்ட நாவல். இதில் கணேஷ் மட்டும் தான். கணேஷிடம் வசந்துக்கும் உரிய அனைத்து குணங்களும் இருக்கும்.ஒருவரின் சடலம் ஒன்றைக் கண்டுபிடித்து அங்குக் கிடந்த முகவரியின் மூலம் அவர் வீட்டிற்கு போலிஸ் போன் செய்து இறந்தவர் ஷர்மா என்பவரா என உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்பார்கள். ஷர்மாவின் மனைவி அனிதாவும் உதவியாளர் பாஸ்கரும் ஷர்மாதான் என கூறுவார்கள். அவர் தன் இன்னொரு உதவியாளரோடு கிளம்பி போனார் என தெரியும். உதவியாளார் தலைமறைவாகி விட்டாரெனத் தெரிந்து அவரைத் தேடுவார்கள். அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்காது. ஷர்மாவின் மகள் மோனிகா அமெரிக்காவில் இருப்பார். அவர் வருமுன் இங்கு அனைத்துக் காரியங்களும் முடிந்து விட்டிருக்கும். அவர் நேராக கணேஷை சந்தித்து தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை நீங்கள் சீக்கிரம் பெற்றுத்தர வேண்டுமெனக் கூறுவார். கணேஷ் ஒப்புக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு செல்வார். அங்கு ஷர்மாவின் இரண்டாவது மனைவி அனிதாவை (மோனிகா முதல் மனைவியின் மகள்) சந்திப்பார். நிறையத் திருப்பங்கள். கணேஷ் கொலையாளியைக் கண்டுபிடிக்கவும் தீர்மானித்து விடுவார்.முதலில் அனிதாவின் மேல் சந்தேகம். கணவரைப் பழிவாங்கி விட்டாரோ என. பின பாஸ்கரின் மேல். ஆனால் பாஸ்கரும் கொல்லப்படுவார். அனிதா காணாமல் போவார். இறுதியில் திருப்பங்களுடன் கதை முடியும். ஷர்மாவுடன் கடைசியாக காரில் சென்ற செயலாளரின் புகைப்படம் கிடைக்காததன் பின்னணியேக் கொலையாளி மற்றும் கொலையுண்டவரின் கதை.


(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

தண்டனையும் குற்றமும்
===========================
இது ஒரு சிறுகதை. உயிர்மையின் சுஜாதாவின் மர்மக் கதைகள் தொகுப்பில் உள்ளது. நான் படித்த கணேஷ் வசந்த் கதைகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட வழக்குகளில் தோற்ற ஒன்று இது மட்டும் தான். ஒருவன் அவன் மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட முதலாளியைக் கொல்லப் போவதாக எல்லோரிடமும் சொல்லித் திரிவான். ஒரு நாள் அந்த முதலாளியைத் தேடி செல்லும் போது அவர் ஏற்கனவே கொல்லப்பட்டிருப்பார். போலிஸ் சரியாக அந்த ஆளை கொலை நடந்த இடத்திலேயே பார்த்துக் கைது செய்வார்கள். கணேஷ் வசந்த் அவருக்காக வாதாடுவார்கள். அனைத்து சாட்சிகளும் குற்றம் சாட்டப் பட்டவருக்கு எதிராகவே இருக்கும். கணேஷ் வசந்த் கொலையை செய்தது கொலையுண்டவரின் பார்ட்னர் தான் என்பதைக் கண்டுபிடித்தாலும் நிருபிக்க முடியாமல் இருப்பார்கள். நிரபராதிக்கு தண்டனை வழங்கப் பட்டுவிடும். இறுதியில் ஒரு திருப்பத்துடன் சுஜாதாவின் சிறுகதை உத்தியுடன் முடியும்.

விதி
=====
சென்னை – பெங்களூர் சாலையில் வேலுர் அருகில் நடக்கும் ஒரு பேருந்து விபத்தில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்து விடுவார்கள். இது நடந்து ஒரு வாரம் கழித்து ஒரு பெண் கணேஷ் வசந்த அலுவலகத்திற்கு வந்து அந்த விபத்தில் தன் அண்ணனும் இறந்து விட்டான். பெங்களூரில் எங்களுக்கு உறவினரோ தெரிந்தவர்களோ யாருமில்லை. என் அண்ணனுக்கு சம்பவம் நடந்த அன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. என்னிடம் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று போனவர் ஏன் பெங்களூர் பேருந்தில் போக வேண்டும். இது விதியென்று என்னால் நம்ப முடியவில்லை. அவன் ஏன் பெங்களூர் செல்லவேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்பாள். கணேஷ் வசந்தும் இதை விதியென்றே நினைப்பார்கள். விபத்தில் சிக்கிய பேருந்தின் கம்பெனிக்கு சென்று சில விவரங்களைப் பெறுவார்கள். பின முதலாளியையும் சந்தித்து பெண்ணின் அண்ணனைப்(தாமோதர்) பற்றி விசாரிப்பார்கள். கிடைத்த விவரங்கள் போதாது. தாமோதர் பணிபுரிந்த நகரத்தின் முக்கிய புள்ளிகள் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு க்ளப்புக்கு சென்று அவரைப் பற்றி விசாரிப்பார்கள்.தாமோதருக்கு நிறையப் பெண்களிடம் தொடர்பு இருந்ததெனவும் அவர்களில் ஒருத்தரைச் சந்திக்க பெங்களூர் சென்று இருக்கலாம் எனவும் முடிவுக்கு வருவர். அந்த க்ளப்பில் விபத்திற்குள்ளான பேருந்து கம்பெனி முதலாளியின் மனைவியும் உறுப்பினர். இதற்கிடையில் தாமோதரின் தங்கை தாமோதரின் தொலைபேசி தொடர்புகள் உள்ள ஒரு நோட்டை கணேஷ் வசந்திடம் தருவார். அதில் பேருந்து கம்பெனி முதலாளி வீட்டு எண்ணும் இருக்கும். விபத்து நடந்த அன்று பேருந்து 9.30 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இருக்கும். ஆனால் தாமோதர் 10 மணி வரை வீட்டிலிருந்ததாகத் தெரிய வரும். உடனே உள்ளுணர்வின் பேரில் ஒரு முடிவுக்கு வருவார்கள். அது சரியாகவே இருக்கும்.

மெரீனா
=========
பணக்கார வீட்டு இளைஞர்களின் செயலைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டக் கதை. திலீப் என்ற இளைஞன் தன் காரில் நண்பர்களுடன் வந்து மெரீனா கடற்கரையில் குடித்துவிட்டு போதை மருந்தும் அடித்துக் கொண்டிருப்பார்கள். அங்கு டாடா சுமோ வில் வரும் இன்னொரு இளைஞனையும் பெண்ணையும் பார்த்துவிட்டு தங்கள் நண்பன் தான் ஒரு பெண்ணுடன் வந்து உள்ளதாக நினைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பார்கள். ஆனால் வேறு ஆளான அந்த இளைஞன் இவர்களைத் தாக்க வருவான். திலீப் அவன் மண்டையில் டயர் லீவரால் அடித்து விடுவான். அவன் இறந்துவிட்டான் என்று இவர்கள் ஓடி வந்துவிடுவார்கள். கார் சாவியைத் தொலைத்து விடுவார்கள். வீட்டுக்கு சென்று சாவி தேடிக்கொண்டிருக்கையில் திலீப்பின் தந்தை வந்து நடந்ததெல்லாம் அறிந்து அவரே காரை கொண்டு வந்து விடுவார். மறுநாள் போலிஸ் இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார். அங்கு ஒரு அனாதைப் பிணம் இருந்ததாகவும் உங்கள் கார் அங்கு இரவு அங்கு இருந்ததால் சந்தேகமெனவும் கூறுவார். இன்ஸ்பெக்டர் பணம் எதிர்பார்ப்பார். பணம் கொடுத்தால் பிரச்சினையை முடித்து விடுவதாக. பணம் கொடுக்கும் முன் திலீப்பின் தந்தை நண்பர் ஒருவரின் யோசனையால் கணேஷ் வசந்தின் உதவியை நாடுவார். பணம் கொடுத்தால் எல்லாம் சரியாக நடக்குமா என்பதை மட்டும் தெரிந்து கொள்ள. அடிபட்டவன் இறக்கவில்லையென கண்டறிவார்கள், மேலும் அனாதைப் பிணம் வேறு யாரோ என்றும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் இறுதியில் திலீபை கைது செய்ய அவர்களே இன்ஸ்பெக்டருக்கு யோசனை கூறுவார்கள்.

(

உயிர்மை வழங்கும் Sujatha’s Books List

http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101

http://www.uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=101&pn=2

)


(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

ஐந்தாவது அத்தியாயம்
———————————-
ஒரு திருமணமான பெண் தம்பு செட்டித் தெருவில் உள்ள கணேஷ் வசந்த் அலுவலகத்துக்கு ஒரு வார இதழுடன் வருகிறார். அந்த இதழில் வரும் தொடர்கதை தன்னைக் குறிப்பதாகச் சொல்கிறார். ஐந்தாவது அத்தியாயத்தின் போது தான் கொல்லப் படுவோமென பயந்து இவர்களிடம் வருவார். அவர் தன் கணவரின் மேல் சந்தேகப் படுவார்.வசந்த் கதையை எழுதுபவரை கண்டுபிடுப்பார். ஆனால் அவர் எங்கிருந்தோ கொரியரில் வரும் கதையை தட்டச்சு செய்து அனுப்புபவர் மட்டும்தான் எனத் தெரியும். ஆனால் கடைசியில் அந்த பெண் கணவரைக் கொன்று விடுவார்.தற்காப்புக்காகக் கொன்றதாக சொல்லுவார். குற்றவாளி யார் என்பதை சுஜாதா வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுவார்.

ஆயிரத்தில் இருவர்
=============================
ஒரு (எத்திராஜ்) பெண்ணும் தந்தையும் கணேஷிடம் வருவார்கள். அவரின் மூத்த மகள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசரை மணந்து ஒரு வருடம் முன்பு குஜராத் அகமதாபாத்தில் கேஸ் அடுப்பு வெடிப்பினால் இறந்து போய் இருப்பார். அது விபத்து இல்லையென்றும் மகளின் மாமனார், மாமியார் மற்றும் கணவருமே அவளைக் கொன்று விட்டனர் எனவும் கூறுவர். கூடவே மூத்த மகள் எழுதிய ஒரு கடிதத்தையும் காண்பிப்பார். கணேஷ் – வசந்த் தங்கள் வேலையைத் துவங்குவார்கள். ஐ.ஏ.எஸ் ஆபிசர் குடும்பத்தின் நடவடிக்கைகள் சந்தேகங்களை வலுப்படுத்தும். கணேஷும் வசந்தும் ஒருமுறைத் தாக்கப் படுவார்கள். ஆபிசர் இரண்டாவதாக மணப்பதாக இருக்கும் பெண் திடீரென தாக்கப் படுவார். அவர் தன்னை மிரட்டியது ஒரு தாத்தா என்று ஒரு சமயம் கூறுவார். திடிரென மாமனாரும் மருமகனும் ஒரே அணிக்கு வந்துவிடுவார்கள். தன் மருமகனை தவறாகப் புரிந்து கொண்டதாக இறந்த பெண்ணின் தந்தை கூறிவிடுவார். திடீரென முட்டாளாக்கப்பட்டதாக உணரும் கணேஷும் வசந்தும் இதன் பின்னணியை கண்டுபிடிப்பார்கள்.

கொலையரங்கம்
=================
இதுவும் சொத்துப் பிரச்சனையின் பின்னணியில் நடைபெறும் சில கொலை முயற்சிகள் மற்றும் கொலையின் பின்னணியில் உள்ளவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுதான்.பீனா மற்றும் உத்தம் எனும் இருவருக்கும் பொதுவான சொத்திற்காக நடைபெறும் பிரச்சனை. இலங்கைப் போராளிகளின் வெடிகுண்டுடன் ஆரம்பிக்கும் கதை அதற்கு எந்த தொடர்புமில்லாதது. ஒரு மருத்துவமனையிலேயே பாதிக்கும் மேற்பட்டக் கதை நடக்கும்.கதை மருத்துவமனயிலேயே நிறைவு பெறும். முதலில் பீனா மீது சந்தேகம் வர, பின் அவரே கத்தியால் குத்தப் பட்டு மோசமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவார். அமெரிக்காவில் குடிபெயர்ந்துவிட்ட இன்னும் இருவருக்கு அந்த சொத்தில் பாத்யதை இருந்தும் அவர்கள் வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டிருப்பர். அதில் ஒருவர் இந்த சமயத்தில் வேலை சம்பந்தமாக சென்னை வர அவர் மேல் சந்தேகம் வர அவரும் கொலை செய்யப்படுவார். அனைத்தும் மறுபடி முதலில் இருந்து தொடங்கும். வசந்த்க்கு மருத்துவமனையில் கத்திக்குத்து என நீண்டு கணேஷ் இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பார்.

விபரீதக் கோட்பாடு
=====================
ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பார். இது நிறைய சந்தேகங்களை எழுப்பும். அவர் ஏன் ஊட்டி யாருக்கும் தெரியாமல் சென்றார். அந்த வீட்டில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிப்பதே கதை.ஏதோ ஒரு வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விபரீதத்தை அந்த சங்கம் நிறைவேற்றும் குற்றத்தை இறுதியில் கண்டுபிடிப்பார்கள்.


(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the Obvious என்பதே கணேஷின் அடிப்படையாக இருக்கும்.

நைலான் கயிறு, பாதி ராஜ்யம் மற்றும் ஒரு விபத்தின் அனாடமி போன்ற நாவல்களில் கணேஷ் மட்டுமிருப்பார்.

நிர்வாண நகரம்
———————-
சென்னை நகர இளைஞன் ஒருவன் கோபத்தாலும், இயலாமையாலும் சென்னையைப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். சில கொலைகளைச் செய்யப் போவதாக வரிசையாக காவல்துறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.பெயர் சிவராஜன், திருவல்லிக்கேணி மேன்சன் வாசி. ஆனால் தான் கொல்லப் போகிறவர்களின் அடையாளங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.ஒவ்வொரு கடிதத்திற்குப் பிறகும் குறிப்பிட்டபடி ஒவ்வொருத்தராக கொல்லப் படுகிறார்கள். போலிஸ் இவனைத் தேடுகின்றனர். கணேஷ் வசந்த் இங்கிருந்துதான் வருகிறார்கள். அவர்களும் இவனைத் தேடுகின்றனர். இதற்கிடையில் இவனுக்கு காதலியுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணேஷ் வசந்த் இவனைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது.சிவராஜன் என்ற பெயரால் சில பிரச்சினைகள் வந்ததாக சுஜாதா ஒருமுறைக் குறிப்பிட்டுள்ளார்.

வஸந்த்! வஸந்த்!
————————-
கூழமந்தல் எனும் கிராமத்தில் உள்ள ராஜராஜன் கிணறு எனும் ஒரு பழங்கால கிணறு ஒன்றின் மர்மத்தில் ஆரம்பிக்கும் இந்த கதையில் வஸந்த் நிறைய கஷ்டபட்டிருப்பார். ஒருமுறை விஷம், இறுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு காப்பாற்றப் படுவார். ஒரு வரலாற்றுப் பேராசிரியரின் வரலாற்றுக் குறிப்புக் காணாமல் போவதில் இருந்து கதை ஆரம்பிக்கும். கிணற்றை ஒரு சமூக விரோதக் கும்பல் ஏதோ ஒரு காரணத்துக்காக உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். புதையலா, ஏதேனும் பழங்கால சிலையா எனத் தெரியாமல் கணேஷும் வஸந்தும் துப்பறிவார்கள். இதற்குள் சிலர் தாக்கப் படுவதும் ஒரு கொலையும் நடந்துவிடும். வஸந்த் வழக்கம் போல சைடில் ஒரு பெண்ணையும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணிக்கொண்டிருப்பார். இறுதியில் வசந்த் வில்லனிடம் மாட்டிக் கொண்டு துப்பாக்கியின் ஒரு தோட்டாவை உடம்பில் வாங்கிக் கொள்வார். கணேஷ் போலிஸுடுன் வந்து அவர்களைக் கைது செய்து வசந்தை காப்பாற்றி கதை நிறைவு பெறும்.

கொலையுதிர் காலம்  (தொடர்ச்சி)
———————————————-
ஒரு பெண்ணின் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போய் ஏற்படும் சவால்கள் நிரம்பியக் கதை. பேய், ஆவி என நிறுத்தாமல் வாசிக்கச் சொல்லும் ஒரு கதை. அந்த பெண்ணின் பரம்பரையில் ஒரு பெண் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அது ஆவியாக உலவி அந்தப் பரம்பரையைப் பழி வாங்குவதாகவும் அந்த ஊரே நம்பிக் கொண்டிருக்கையில் வஸந்தும் கணேஷும் பேயைப் பார்க்கவும் செய்கின்றனர். கணேஷ் பேயிடம் அடியும் வாங்குகிறார். சொத்துக்கு இன்னொரு வாரிசான வியாசனின் மேல் சந்தேகமிருக்க அவரும் கொல்லப் படுகிறார். இறுதியில் திடிரென வரும் ராமபத்ரன் எனும் ஐ.ஐ.டி பேராசிரியர் தான் கொலையாளி எனக் கண்டுபிடிக்கின்றனர். கதை மிகமிக வேகமாக சென்று திடிரென முடிந்துபோகும்.பொதிகையில் 90 களில் நாடகமாகவும் வந்துள்ளதாகத் தெரிகிறது.


(இது உப்பிலி ஸ்ரீனிவாஸின் இடுகை)

யவனிகா
PublishedYear : 2002

சுஜாதாவின் வாசகர்கள் நினைவில், நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.

காந்தளூர் வசந்தகுமாரன் கதை

காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன்.

Over to Sujatha on this novel….

‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை. நீலகண்ட சாஸ்திரி, பர்ட்டன் ஸ்டைன், சதாசிவப்பண்டாரத்தார் போன்றவர்கள் விஸ்தாரமாக எழுதியிருக்கும் சரித்திரக் குறிப்புகளை ஆதரித்தவை.

வஸந்த் வஸந்த்
PublishedYear : Dec.2005

சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று.

கொலையுதிர் காலம்
PublishedYear : Dec.2007

அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்கும் சம்பவங்களும் எதிர்பாராத திருப்பங்களும் தீர்க்கமுடியாத புதிர்களும் நிறைந்த கொலையுதிர் காலம் வெளிவந்த காலத்திலிருந்தே வாசகர்களின் உற்சாகமான வாசிப்பிற்கு உரியதாக இருந்து வந்திருக்கிறது.

சுஜாதா சொல்கிறார்:

(ரேவதி ரவீந்திரன் பேட்டி)

கேள்வி: கதைகளில் “கணேஷை” அறிமுகப்படுத்தி விட்டு நீங்கள் பெங்களூர் வந்தப்ப தான் “வசந்த்தை” அறிமுகப்படுத்திநீங்களா ?

கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ‘68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல்ல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்த்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychological ஆ அது ரொம்ப Interest ஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க.


(This post is from Srinivas Uppili)

(இது ஒரு மீள் பதிவு. டோண்டுவின் ஒரிஜினல் பதிவு இங்கே: http://dondu.blogspot.com/2004/11/blog-post_110005261711525005.html நன்றி டோண்டு அவர்களே!)

டோண்டு கூறுகிறார்:

சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் கதைகளை ஆதி காலத்திலிருந்தே படித்து வருபவன். “நைலான் கயிறு” கணேஷ் இப்போதைய வசந்த் போலவே செயல் பட்டிருப்பார். “அனிதா இளம் மனைவி” யில் கராத்தே சண்டை கூடப் போட்டிருப்பார். காலப் போக்கில் வசந்த் தேவைப் பட்டிருக்கிறார்.

கணேஷ் மற்றும் வசந்த் இருவரும் ஒருவரே என்பதில் எனக்கு ஐயமில்லை.சுஜாதா வாசகர்களின் கருத்து என்ன?

பின் குறிப்பு:
காந்தளூர் வசந்த குமாரன் கதையிலும் கூட கணேஷ் (கணேச பட்டர்) மற்றும் வசந்த் (வசந்த குமாரன்) வருகிறார்கள். மிகவும் ரசித்தேன். முக்கியமாக வசந்த குமாரனின் சேட்டைகளை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

From this web site, you can purchase e-book versions of most of Sujatha’s novels/shortstories – for $3 apiece..
http://www.writersujatha.com


(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்


இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.

கணேஷின் முதல் தோற்றம் நைலான் கயிறு நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.

வசந்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. பாதி ராஜ்யம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன்.

கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்தபிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் காயத்ரியில் என்று நினைக்கிறேன். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். பிறகு பிரியாவில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம்.

நிர்வாண நகரம் வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன. மேற்கே ஒரு குற்றம் போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. வசந்த்! வசந்த்! நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.

வசந்த் தனியாக வரும் கதையும் உண்டு என்ற ஸ்ரீதர் நாராயணன் நினைவுபடுத்தினார். எனக்கும் புத்தகத்தின் பேர் நினைவு வரவில்லை. காந்தளூர் வசந்தகுமாரன் கதையில் வசந்த் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு சென்று கணேச பட்டறையும் சந்திக்கிறார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.

எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சில்வியா, மெரீனா போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். வந்திருக்கிறதா?

ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்! பிரியாவில் வசந்தாக வருபவர் என்னத்தே கன்னையா என்று ஸ்ரீதர் நாராயணன் சொல்கிறார். என்னத்தே சொல்றது? ஆனால் அது கன்னையா இல்லை என்று நித்தில் மறுக்கிறார்.

டிவி சீரியல் எதுவும் இன்னும் வரவில்லையா? டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதி ராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். விவரம் சொன்ன வெங்கட்டுக்கு நன்றி. சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதி ராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது. (எஸ்செக்ஸ் சிவா விஜய் ஆதி ராஜுக்கு வேஷம் பொருந்தி வந்தது என்று சொல்கிறார்.) கொலையுதிர்காலமும் டிவி சீரியலாக வந்திருக்கிறதாம். அதில் வசந்தாக நடித்தவர் விவேக்காம். (தகவல் தந்த பீமார்கனுக்கு நன்றி!) டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு டிவியில் வந்தபோது ராஜீவ் கணேஷாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் வசந்தாகவும் நடித்தார்களாம். (சரத் பாபு டாக்டராம்). இருவருக்கும் வேஷப் பொருத்தம் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி.க்கு வயதும் இமேஜும் உதைக்கிறது. (தகவல் தந்த ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி!)

எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார். இன்றைக்கு பிரகாஷ் ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். வசந்த்தாக சிம்பு?