(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)
டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.
கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.
மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.
ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.
இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.
குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.
அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.
எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.
அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!
புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.
ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.
அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.
தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!
இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).
மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்