பா.ராகவன்

பா.ராகவன்

பா.ராகவன் இன்று இணைய பதிவர்களில் பிரபலமானவர். கிழக்கு பதிப்பகத்தில் பார்ட்னரோ இல்லை உயர் அதிகாரியோ தெரியவில்லை. கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர். அவரது non-fiction பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. பெரிய அறிமுகம் எல்லாம் தேவை இல்லாதவர். அதுவும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

பா.ரா.வின் அப்பா ஆர்.பி. சாரதி, பெரியப்பா சுராஜ் ஆகியோரை சந்தித்திருக்கிறேன். அவர் அப்பாவும் என் அப்பாவும் ஹெட்மாஸ்டர்கள். ஏறக்குறைய சம வயதினர். பா.ரா. ஒரு முறை அவர் தன் முதல் கதையை கிணற்றடியில் வைத்து என் அப்பாவுக்குத்தான் சொன்னதாக குறிப்பிட்டார். சுராஜ் சைதாப்பேட்டையில் பாரதி சங்கம் என்று ஒன்று வைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்ன வயதில் சிலவற்றுக்கு போயிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அம்மா அப்பாவின் நண்பி-நண்பர்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும்.

அவர் இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்களை பற்றி குறிப்பிடுகிறார். நூறு புத்தகம் பற்றி ஒரே பதிவில் எழுதினால் நானே படிக்க மாட்டேன். அதனால் இதை பகுதி பகுதியாக பிரித்து எழுதுகிறேன்.

1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்: முக்கியமான ஆவணம். ஆனால் அருமையான புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]: எனக்கும் புதிய ஏற்பாடை விட பழைய ஏற்பாடுதான் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் கதைகள் சுவாரசியமானவை. அதில் ஜெஹோவா நம்மூர் சுடலை மாடன் மாதிரி எனக்கு படையல் வைக்காமல் அவனுக்கா வச்சே என்று கடுப்பாகிவிடுவார். ஒரு கன்னம் மறு கன்னம் எல்லாம் ஏசு வந்த பிறகுதான்.

3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்: படித்ததில்லை.

4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்: அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாசுரங்களை ரசித்திருக்கிறேன். பொய்கை ஆழ்வாரின் வையம் தகளியா வார்கடலே நெய்யாக பாசுரம் கொண்டு வரும் படிமம் மிக அற்புதமானது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாசுரமும் எனக்கு பிடித்தமானது. என்றாவது எனது கவிதை அலர்ஜியை கடந்து படிக்க வேண்டும்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்: சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு சூதிற் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி போனதில்லை என்று ஆரம்பிப்பது கவிதை. எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: படித்ததில்லை. படிப்பேனா என்பது சந்தேகமே.

7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: சில அற்புதமான கதைகள் உண்டு – கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய் தூள், விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம்…

8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்: அருமை!

11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி: அபாரம்!

12. சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்: படித்ததில்லை.

13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்: நல்ல புத்தகம்தான், ஆனால் ஏ க்ளாஸ் புத்தகம் இல்லை. காந்தியை கொலை செய்யப் போகும் புரட்சி இளைஞன். ஹே ராம் படம் இந்த கதையை ஓரளவு ஒத்துப் போகும்.

14. பொன்னியின் செல்வன் – கல்கி: மிக அற்புதமான கதை சிக்கல் கொண்ட புத்தகம். கொஞ்சம் verbose-தான், ஆனால் கல்கியின் சரளமான நடை அதை மறக்கடித்துவிடுகிறது. அலெக்சாண்டர் டூமா, வால்டர் ஸ்காட் போன்றவர்களை கொண்டாடும் நாம் அவற்றை விட சிறந்த கல்கியை மறந்துவிடுகிறோம்.

15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா: படித்ததில்லை. சாமிநாத சர்மா எழுதிய நான் கண்ட நால்வர் (திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி) எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய நாடகமான பாணபுரத்து வீரனும் பிடிக்கும். அவர்தான் கலைஞரின் மனோகரா ஸ்டைல் உணர்ச்சி பிழம்பு வசனங்களுக்கு முன்னோடி என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு – இரண்டு பாகங்கள்]: சில கதைகள் படித்திருக்கிறேன். முழு தொகுப்பையும் படித்ததில்லை. பிச்சமூர்த்தியின் பெரிய தாக்கம் சிறுகதைகள், நாவல்கள் அல்ல, அவரது கவிதைகள்தான். எனக்கே சில கவிதைகள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் காசு கொடுத்து வாங்கிய ஒரே கவிதை புத்தகம் பிச்சமூர்த்தி கவிதைகள்தான். பாரதியார் கவிதைகள் கூட அம்மா அப்பா யாராவது வாங்கிக் கொடுத்ததுதான்.

17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]: அற்புதம்! புதுமைப்பித்தனை பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. இது வரை வந்த தமிழ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர், அவ்வளவுதான்.

18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்: படித்ததில்லை.

19. எனது சிறைவாசம் – அரவிந்தர்: தண்டம். பா.ரா.வுக்கு இதெல்லாம் எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை.

20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்: படித்ததில்லை.

21. ஒற்றன் – அசோகமித்திரன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்க்கையை விவரிக்கும் அணுகுமுறை உள்ளவர். மெல்லிய நகைச்சுவை பக்கத்துக்கு பக்கம் தெரியும். இது அவருடைய உன்னதமான புத்தகங்களில் ஒன்று.

22. நிலா நிழல் – சுஜாதா: இதை படித்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் கதை ஞாபகம் வரவில்லை. இதுதான் ஒரு நடிகையின் சிறு பெண்ணோடு பக்கத்து மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் நண்பர்களாகும் கதையோ? நம்ம உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஏதாவது எழுதுகிறாரா என்று பார்ப்போம்.

23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா: இதுதான் ஒரிஜினல் ப்ளாக். நன்றாக இருக்கும். இதை பற்றி என்னுடைய ஒரு பதிவு இங்கே.

24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு: கரிச்சான் குஞ்சை பற்றி நிறைய படித்துவிட்டேன், இந்த புத்தகம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

25. அவன் ஆனது – சா. கந்தசாமி: படித்ததில்லை.

26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்: படித்ததில்லை.

27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்: படித்ததில்லை. படிக்க ஆவலாக இருக்கிறது. ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், பாக்கியம் ராமசாமி, சுந்தர பாகவதர் என்ற பேர்களில் எழுதுவது ஒருவரே (ஜ.ரா.சு.) என்று நினைத்திருந்தேன். இதைப் பார்த்தால் புனிதன் வேறு யாரோ என்று தோன்றுகிறது.

28. வ.உ..சி. நூற்றிரட்டு: படித்ததில்லை.

29. வனவாசம் – கண்ணதாசன்: வனவாசமோ மனவாசமோ ஏதோ ஒன்றுதான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம் எல்லாம் இல்லை, ஆனால் முக்கியமான ஆவணம். தி.மு.க.வின் உள்குத்துகளை விவரிக்கும் புத்தகம்.

30. திலகரின் கீதைப் பேருரைகள்: படித்ததில்லை.

31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்: கேள்விப்பட்டதே இல்லை.

32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர் படித்ததில்லை.

33. காமராஜரை சந்தித்தேன் – சோ: படிக்க விரும்பும் ஒரு புத்தகம். இந்த முறை ஊருக்கு போனால் அலையன்சில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். டோண்டு இந்த புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. அவர் சோவின் முரட்டு பக்தர். காமராஜ் மேல் பெருமதிப்பு வைத்திருப்பவர்.

34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்: படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. படித்த வரையில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. ரொம்ப ப்ராக்டிகலான புத்தகம். நியாய அநியாயங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
அசோகமித்ரனின் ஒற்றன் பகுதி 1, பகுதி 2, அசோகமித்திரன்
சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்
கரிச்சான் குஞ்சு
எஸ்.ஏ.பி., பி.எஸ். ராமையா, ஜெகசிற்பியன், எழுத்தாளர் ஆர்வி, சிவசங்கரி, தி. ஜா, நா. பா., விந்தன் ஆகியோரை பதிவர் ஜீவி அறிமுகம் செய்கிறார்.

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


தற்செயலாகத்தான் இந்த ப்ளாகை பார்த்தேன். ஜீவி என்பவர் எழுதுகிறார். சில எழுத்தாளர் அறிமுகங்கள் என்னை கவர்ந்தன.

ஜீவிக்கு பிடித்த எழுத்தாளர்களில் எனக்கு பிடித்தவர்கள் குறைவுதான். அவரது அறிமுகங்களும் ஓரளவு சம்பிரதாயமானவைதான். பாட புத்தகங்களில் வரும் கட்டுரைகள் மாதிரி ஒரு ஃபீலிங் வருகிறது. அதனால் என்ன? அவருடைய எழுத்தில் காணப்படும் உண்மையான உணர்வு இந்த குறைகளை போக்கி விடுகிறது.

கீழே இருப்பது அவரது அறிமுகங்கள் லிஸ்ட், என் சிறு குறிப்புகளுடன். பேரை க்ளிக் செய்தால் ஜீவியின் பதிவை காணலாம்.

எஸ்.ஏ.பி. – எஸ்.ஏ.பி குமுதம் ஆசிரியர், குமுதத்தை மிக பெரிய முறையில் வெற்றி பெற வைத்தவர். அவர் எழுபதுகளிலேயே கதைகள் எழுதுவதை குறைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். எனக்கு மங்கலாக ஞாபகம் இருக்கும் ஒரு தொடர்கதையில் ஆளவந்தார் என்ற ராசியான போலி டாக்டர் ஹீரோ. அப்போது சுவாரசியமாகத்தான் இருந்தது. ஜீவி அவரது காதலெனும் தீவினிலே, நீ, பிரமச்சாரி, சொல்லாதே, இங்கே இன்றே இப்பொழுதே, ஓவியம், நகரங்கள் மூன்று, சொர்க்கம் ஒன்று போன்ற நாவல்களை சிலாகிக்கிறார். ஜெயமோகன் தமிழின் சிறந்த social romances லிஸ்டில் அவரது சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.

பி.எஸ். ராமையா – ராமையாவை நான் அதிகம் படித்தத்தில்லை. படித்த கொஞ்சமும் (பூவிலங்கு என்ற நாடகம், பாக்யத்தின் பாக்யம் என்ற சிறுகதை தொகுப்பு) சொல்லும்படி இல்லை. படித்ததில் ஓரளவு பிடித்தது குங்குமப் போட்டு குமாரசாமிதான். அதுவும் சிறு வயதில் கிராம நூலகம் ஒன்றில் படித்தது. (என் படிப்பு அனுபவத்தில் கிராம நூலகங்களின் பங்கு பற்றி இந்த பதிவில் காணலாம்.) ஜீவி கு.பொ. குமாரசாமி, மலரும் மணமும், தேரோட்டி மகன், பிரசிடென்ட் பஞ்சாட்சரம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
சுந்தர ராமசாமி எங்கேயோ இவர் நல்ல எழுத்தாளர் இல்லை என்றும் சி.சு. செல்லப்பா இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது ஏனென்று புரியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். ஜெயமோகனும் இவரை நல்ல எழுத்தாளர் என்று நினைக்கவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் இவர் எழுதிய பூச்சூட்டல் என்ற சிறுகதை தான் தமிழ் சிறுகதைகளை தொகுத்தால் அதில் இடம் பெறும் என்று சொல்லி இருக்கிறார். ஜெயமோகன் இவரது பிரேம ஹாரம் என்ற நாவலை சிறந்த social romance லிஸ்டில் சேர்க்கிறார்.

ஜெகசிற்பியன் – இவரையும் நான் அதிகம் படித்ததில்லை. படித்த சில புத்தகங்கள் மேலும் படிக்க வேண்டும் என்று தோன்ற வைக்கவும் இல்லை. நந்திவர்மன் காதலி, திருச்சிற்றம்பலம் நினைவிருக்கிறது. இவருக்கு சாண்டில்யன் பரவாயில்லை என்று நினைத்ததும் நினைவிருக்கிறது. ஜீவி இவரது பல நாவல்களை குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இவரது திருச்சிற்றம்பலத்தை Historical Romances லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

ஆர்வி – ஆர்வியையும் நான் அதிகமாக படித்ததில்லை. ஒரு வெள்ளிக்கிழமையில் என்ற சிறுகதை தொகுப்பு மட்டுமே படித்திருக்கிறேன். அதிலும் எனக்கு ஒரே ஒரு கதைதான் தேறியது – வரவேற்பு. காதலித்து கல்யாணம் செய்து கொள்ள முடியாத நிலைமை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் பந்தம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயமோகன் அணையாவிளக்கு நாவலை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். ஜீவி ஒரு வெள்ளிக்கிழமையில், அணையாவிளக்கு தவிரவும் பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

சிவசங்கரி: ஒரு காலத்தில் சிவசங்கரி விகடன் போன்ற பத்திரிகைகளின் தொடர்கதை ராணி. அவரது மார்க்கெட் பெண்கள். அப்போதெல்லாம் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். அப்பவே ஆனால் பிடிக்கவில்லை. எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு, என் அம்மாவின் சிநேகிதி பெண்கள் எல்லாரும் இவரை விழுந்து விழுந்து படிப்பதால், அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் இவரது தொடர்கதைகளை விடாமல் படித்தேன். பெண்களிடம் உருப்படியாக பேசவும் முடியவில்லை என்பதுதான் சோகமான விஷயம். ஒரு மனிதனின் கதை, பாலங்கள், அருண் ஹீரோவாக வரும் ஒரு முக்கோணக் காதல் கதை போன்றவை பாப்புலராக இருந்தன. ஜெயமோகனும் ஒ.ம. கதை, பாலங்கள் ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் குறிப்பிடுகிறார். ஜீவி பல படைப்புகளை குறிப்பிடுகிறார்.

தி. ஜானகிராமன்: தி.ஜாவை பற்றி நான் எதுவும் புதிதாக சொல்லிவிட போவதில்லை. மனிதர் ஜீனியஸ், அவ்வளவுதான். அவருடைய எழுத்துகளில் படிப்பவரை அதிர்ச்சி செய்ய வேண்டும் என்று கொஞ்சம் விருப்பம் தெரிகிறது. எனக்கு மோக முள் தமிழின் டாப் டென் நாவல்களில் ஒன்று. அம்மா வந்தாள் முக்கியமான ஒரு நாவல். ஜெயமோகனுக்கும்தான். எஸ். ராமகிருஷ்ணனும் தமிழின் சிறந்த நாவல்களாக இவற்றை குறிப்பிடுகிறார்.

நா. பார்த்தசாரதி: நா.பா. கொஞ்சம் உபதேசம் செய்பவர். இருந்தாலும் குறிஞ்சி மலர், சத்திய வெள்ளம் மாதிரி சில நாவல்கள் நன்றாக வந்திருக்கின்றன. ஜெயமோகன் ராணி மங்கம்மாள், மணிபல்லவம் ஆகிய இரண்டு நாவல்களையும் historical romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். மங்கம்மாள் சுமார்தான். மணிபல்லவம் நினைவில்லை. குறிஞ்சி மலர், பொன் விலங்கு, சமுதாய வீதி ஆகியவற்றை தன் social romances லிஸ்டில் சேர்த்திருக்கிறார். சமுதாய வீதி சுமார்தான். அதில் வில்லனாக வருபவர் சிவாஜி கணேசனை வைத்து உருவாக்கப்பட்டவர் என்பதுதான் கொஞ்சம் அதிசயம். ஜீவி அவரது தீபம் பங்களிப்பை புகழ்ந்து எழுதி இருக்கிறார்.

விந்தன்: விந்தனின் எழுத்துகள் என்னை கவரவில்லை. நான் படித்ததும் கொஞ்சம்தான் – மனிதன் மாறவில்லை என்ற நாவல். அவரது பாலும் பாவையும் நாவலை ஜீவி சிலாகிக்கிறார்.

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு காலத்தில் பேசப்பட்டவர்கள். பாப்புலராக இருந்தவர்கள். ஆனால் தி.ஜா. ஒருவர்தான் இந்த லிஸ்டில் மறக்க முடியாதவர்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்:
ஜெயமோகனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்
எஸ். ராமகிருஷ்ணனின் தமிழ் நாவல் சிபாரிசுகள்


(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது – டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்


க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. 🙂

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். 🙂

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. 🙂

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!


டாப்டென் பதிவில் மேலும் சில புத்தக சிபாரிசுகள். நன்றி குமுதம், டாப்டென், பாஸ்டன் பாலா

முந்தைய சிபாரிசுகள் இங்கே மற்றும் இங்கே.

தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்கிறார்கள். நான் அவரது இலக்கிய விமர்சனங்களை படித்ததில்லை. இப்போது திண்ணை தளத்தில் தன் வாழ்க்கை நினைவுகளை சுவாரசியமாக எழுதி வருகிறார்.

1. மோகமுள் – தி. ஜானகிராமன் கந்தர்வன், சி. மோகன் ஆகியோரும் சிபாரிசு செய்த புத்தகம். கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.

2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் கந்தர்வன் சிபாரிசு செய்த நாவல். எனக்கு இதை படித்திருக்கிறேனா என்று கொஞ்சம் குழப்பம்.

3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி சி. மோகன் சிபாரிசு செய்திருக்கிறார். அருமையான புத்தகம். என்னுடைய காப்பியை பக்ஸ் தூக்கிக்கொண்டு போயிருக்கிறான். நீங்கள் சிலிகான் வாலியில் வசிப்பவராயிருந்தால், இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

4. கோவேறு கழுதைகள் – இமையம் கந்தர்வன் சிபாரிசு செய்தது. படித்ததில்லை.

5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் சா. கந்தசாமி சிபாரிசு செய்தது. படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.

7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை

8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை

9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ் வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கு என்று நமக்கு தோன்றும். இந்திரா பார்த்தசாரதியும் கீழ் வெண்மணி பற்றி குருதிப் புனல் என்ற நாவலை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்

ராஜ மார்த்தாண்டனும் முக்கியமான இலக்கிய விமர்சகர் போலிருக்கிறது. நான் எதையும் படித்ததில்லை.

1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி அருமை. சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.

4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும், சி. மோகனும் குறிப்பிடுகிறார்கள். பக்ஸ் கொடுத்த பிறகு சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி படித்ததில்லை.

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார்.

7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.

8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.

9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட. படித்ததில்லை.

10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தர் என் லிஸ்டில் மிகவும் மேலே இருக்கும். பிரேம் பணிக்கர் இப்போது எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம் என்ற நாவலை ஆங்கிலத்தில் online ஆக மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறார். அதுவும் இதை விட சிறந்த புத்தகம்.