க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. 🙂

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். 🙂

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. 🙂

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!


இதுவும் ஒரு மீள்பதிப்பு. முந்தைய பதிவை சில டெக்னிகல் காரணங்களால் எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் இந்த மீள்பதிப்பை போட்டுவிட்டு பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்

1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்


9-11-1919 அன்று காரைக்குடி இந்து மதாபிமான விழாவில் கலந்து கொண்ட மஹாகவி பாரதியார் – அவருக்கு வலப்புறம் ராய.சொ.வும் இடப்புறம் சொ.மு.வும். (இந்த சொ.மு. யாரென்று தெரியவில்லை)

நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிய பதிவில் பல பேரை பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். திரு. சேதுராமன் அவர்கள் ராய. சொக்கலிங்கத்தை பற்றி சிரமப்பட்டு கண்டுபிடித்து கீழே உள்ளதை எழுதி இருக்கிறார். அவருக்கும் அவருக்கு விவரங்களை தந்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் எனது நன்றி! இது அவரது guest post.

இது போன்ற விஷயங்களை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. கூகிளில் தேடும் விஷயம் இல்லை. சேதுராமன் எப்படி சித. ராயப்ப செட்டியாரை கண்டுபிடித்தாரோ! சித. ராயப்ப செட்டியார் விவரங்கள் கொடுத்து உதவியது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திலிருந்து இந்த புகைப்படத்தையும் scan செய்து உதவி இருக்கிறார். வளவள என்று எழுதுவதை காட்டிலும் ஒரு ஓவியமோ, புகைப்படமோ விஷயத்தை நமக்கும் சுலபமாக சொல்லிவிடுகிறது. இதை பார்த்தவுடன் நமக்கும் ராய.சொ. பாரதியின் காலத்து அறிஞர் என்று தெரிந்துவிடுகிறது பாருங்கள்!

எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் மட்டும் போதாது, அவர்களது புத்தகங்களை வெளியிடவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தேன். புத்தகங்களை வெளியிடாவிட்டாலும், எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் ஏன் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றாவது சிறு குறிப்பாக வெளியிட வேண்டும். அப்படி அரசு செய்யும் வரை நம்மை போன்று சாதாரண மனிதர்கள்தான் இதற்கு சிரமப்பட வேண்டும். திருவாளர்கள் சேதுராமன், சித. ராயப்ப செட்டியார் ஆகியோருக்கு ஓ பக்கங்கள் ஞானி ஸ்டைலில் இந்த வார பூச்செண்டு கொடுக்க வேண்டியதுதான்! (இப்போது சேதுராமன் மேலும் சின்ன அண்ணாமலை, என்.வி. கலைமணி, அகஸ்தியலிங்கம், மு. ராகவையங்கார் ஆகியோரை பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.) உங்களுக்கும் பூச்செண்டு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறதா? 🙂

ஓவர் டு சேதுராமன்.

தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தன வைசிய ஊழியன்’ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்’ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது.. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள் நெறித் திருக் கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை, காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள், கொண்டது.

காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்”, “திருவாசகத் தேன்”, “திருத்தலப்பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரை நடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்”, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும், உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்”, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

(ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

மீண்டும் ஆர்வி:
இது ராய.சொவின் வாழ்க்கைக் குறிப்பு. அவரது எழுத்துகளை பற்றி சுருக்கமாகவே விவரங்கள் உள்ளன. பொதுவாக மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார், ஊழியன் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. அரசே பதிப்பித்தால் ஒழிய இவரது எழுத்துக்கள் மறு பதிப்பு பெற வாய்ப்புகள் குறைவுதான். இருப்பதை வைத்து பார்க்கும்போது இவர் எழுத்துக்கள் ஏன் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று விளங்கவில்லை.