வெங்கட் சாமிநாதன் திண்ணை இணைய இதழில் சமீபத்தில் மூன்று கட்டுரைகளை எழுதி இருக்கிறார். சுருக்கமாக, அவர் அந்த காலத்தில் இருந்த ஒழுக்கங்கள் இன்று கைவிடப்படுகின்றன என்றும், கடந்த இருபது வருஷங்களில் அவர் முக்கியமானவையாக நினைக்கும் புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றியும் இவற்றில் எழுதி இருக்கிறார். சுட்டிகள் கீழே.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

அன்றைக்கிருந்தாப் போல இன்றைக்கில்லை என்பது எல்லா பெரிசுகளும் சொல்லும் குறைதான். இன்னும் 20 வருஷம் கழித்து நான் உயிரோடு இருந்தால் நானும் இப்படித்தான் பேசுவேன். ஆனால் காந்தியின் தாக்கம் கணிசமானவர்களை ஒழுக்கமானவர்களாக மாறியது என்றுதான் தோன்றுகிறது. இன்று காந்தியின் தாக்கம் மதுக் கடைகள் அவர் பிறந்த நாள் அன்று மூடப்படுவது மட்டும்தான். நம்முடைய ரோல் மாடல்கள் இன்று அம்பானியும், மாறன்களும், பில் கேட்சும், நாராயண மூர்த்திகளும், ப்ரேம்ஜிகளும், ரஜினிகாந்த்களும், விஜய்களும், அஜித்களும், தெண்டுல்கர்களும், தோணிகளும்தான். காந்தி, நேரு, காமராஜ், படேல், ராஜாஜி, வ.உ.சி. போன்றவர்கள் அல்ல. அதனால் நமது value system மாறித்தான் விட்டது.

சரி அதை விடுவோம். புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி அவர் நிறைய எழுதி இருக்கிறார். அவற்றை பற்றி என் குறிப்புகள் கீழே.

முதல் சுட்டியில் அவர் குறைகள்தான் பெரிதாக இருக்கிறது. கடைசியில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில பெயர்கள்: யூமா வாசுகி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், சு.வேணுகோபால், உமா மகேஸ்வரி, இமையம், பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன், சோ.தருமன்

இவற்றை நான் படித்தவர்கள் ஜெயமோகன், சுப்ர பாரதி மணியன், யுவன் சந்திரசேகர், பெருமாள் முருகன் ஆகியோர்தான்.

ஜெயமோகனை பற்றி நான் புதிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. என் கருத்தில் அவர் நோபல் பரிசு வாங்கும் தரத்தில் எழுதுகிறார். பேய் பிடித்தவன் போல் எழுதுகிறார். ஒரு வருஷத்துக்கு 2000-3000 பக்கங்கள் எழுதுவார் போலிருக்கிறது. நானும் எழுத முயற்சித்தேன், ஒரு பக்கம் எழுதவே எனக்கு ஒரு வாரம் ஆகிறது. ஆழமாகவும், அதே சமயத்தில் விரிவாகவும் எழுதுகிறார். Deep and wide. இரண்டாம் சுட்டியில் வெ.சா. அவரது விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் ஆகிய புத்தகங்களை சிலாகித்து சொல்கிறார். நான் காடு என்ற புத்தகத்தையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்வேன். ஜெயமோகனின் விமர்சனங்களும் முக்கியமானவை.

சுப்ர பாரதி மணியனை நான் கிட்டத்தட்ட இருபது வருஷங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். அருமையான மனிதர். எனக்கு அவரது புத்தகங்கள் மிகவும் dry ஆக இருக்கின்றன. படிக்க சுலபமாக இல்லை. அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை படித்திருக்கிறேன். சில புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன் – சாயத்திரை – என்றாவது படிப்பேன்.

யுவன் சந்திரசேகரின் ஒளி விலகல் புத்தகம் அபாரமான புத்தகம். விக்ரமாதித்தன் கதை பாணியை வைத்துக் கொண்டு இவ்வளவு அருமையாக எழுத முடியுமா? வேறு புத்தகங்கள் இல்லை, என்றாவது வாங்கி படிக்க வேண்டும்.

பெருமாள் முருகன் எழுதியவற்றில் நான் நிழல் முற்றம் மட்டுமே படித்திருக்கிறேன். திருச்செங்கோடு மாதிரி ஒரு சிறு நகரத்தில் இருக்கும் ஒரு தியேட்டரை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட மிக நல்ல நாவல். ஏழாம் உலகம் அளவுக்கு தாக்காவிட்டாலும், இந்த நாவல் சித்தரிக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் நிஜமாகத்தான் தெரிகிறார்கள்.

இரண்டாம் சுட்டியில் அவர் புத்தகங்களை பற்றி இன்னும் focus செய்திருக்கிறார்.

அ. முத்துலிங்கம் கொண்டாடப்பட வேண்டியவர். அவர் கதைகளை நான் ஓசியில் இணையத்தில்தான் படித்தேன். அசோகமித்ரனின் வாரிசு இவர்தான். ஆனால் அசோகமித்ரனை விட இவரது எழுத்துக்கள் கொஞ்சம் optimism உள்ளவை. பல கதைகளை படித்து புன்னகை வரும்.

ஜோ டி குருசின் ஆழி சூழ் உலகு பற்றி சிலாகித்து சொல்கிறார். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். அருமையான புத்தகம் என்று ஒரு நூறு பக்கம் படித்ததும் தெரிந்தது. ஆனால் ஒரு பக்கம் வைத்துவிட்டேன். சில சமயம் இப்படி ஆகிவிடுகிறது.

பி.ஏ.கிருஷ்ணனின் புலி நகக் கொன்றை பற்றி குறிப்பிடுகிறார். மிக அருமையான புத்தகம். லா.ச.ராவின் பாற்கடலுக்கு பிறகு குடும்ப உறவுகளை வைத்து இவ்வளவு அருமையான autobiographical நாவல் படித்ததில்லை. இதைப் போலத்தான் எனக்கும் ஒரு புத்தகம் எழுத ஆசை.

ராஜமார்த்தாண்டனின் கொங்கு தேர் வாழ்க்கை ஒரு சிறப்பான கவிதை தொகுப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் கவிதையை கண்டாலே ஓடுபவன். எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் புரட்டிப் பார்க்கலாம்.

எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய மணல் கடிகை ஒரு புது உலகத்தை நம் முன் வைக்கிறது என்று சொல்கிறார். நான் படித்ததில்லை. சூத்ரதாரி என்ற பேரில் எழுதுபவரும் கோபாலகிருஷ்ணன்தானோ?

மேலும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை, யூமா. வாசுகியின் ரத்த உறவு ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறார். நான் படித்ததில்லை. படித்தவர்கள் யாராவது இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்!

தோபபில் முகம்மது மீரான் பற்றி மூன்றாவது சுட்டியில் சொல்கிறார். மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம்.

சல்மா என்ற பெண்ணியக் கவிஞர் பற்றி எழுதி இருக்கிறார். முன்னமே சொன்ன மாதிரி எனக்கும் கவிதைக்கும் காத தூரம்.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் சினிமாவில் நுழைந்திருப்பது நல்ல விஷயம் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சுஜாதா போன்ற அறிவாளிகளும் சினிமா என்ற கடலில் அடையாளம் தெரிவதில்லை என்பதையும் சொல்கிறார். ஜெயகாந்தன் மட்டுமே தான் தானாகவே இருந்த எழுத்தாளராம். எனக்கு உன்னைப் போல் ஒருவன் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. பிரிண்ட் இருக்கிறதோ இல்லையோ?

இமயத்தின் கோவேறு கழுதைகள், சோ. தர்மனின் கூகை, மற்றும் தூர்வை, பாமாவின் கருக்கு ஆகியவை முக்கியமான தலித் நாவல்களாம். நான் படித்ததில்லை. படித்தவர்கள் சொல்லுங்கள்! பாமாவின் வன்மம் ஒரு அருமையான நாவல். பள்ளர் பறையர் உப ஜாதிகளுக்கு இடையே உள்ள தகராறுகளை பற்றி எழுதி இருக்கிறார்.

கனடாவின் தேவகாந்தன் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை ஒரு ஆவணம் போன்ற நாவலாக எழுதி இருக்கிறாராம். எங்கேயாவது கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


டாப்டென் பதிவில் மேலும் சில புத்தக சிபாரிசுகள். நன்றி குமுதம், டாப்டென், பாஸ்டன் பாலா

முந்தைய சிபாரிசுகள் இங்கே மற்றும் இங்கே.

தலை சிறந்த 10 தமிழ் நாவல்: வெங்கட்சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்கிறார்கள். நான் அவரது இலக்கிய விமர்சனங்களை படித்ததில்லை. இப்போது திண்ணை தளத்தில் தன் வாழ்க்கை நினைவுகளை சுவாரசியமாக எழுதி வருகிறார்.

1. மோகமுள் – தி. ஜானகிராமன் கந்தர்வன், சி. மோகன் ஆகியோரும் சிபாரிசு செய்த புத்தகம். கும்பகோணத்து தெருக்களின் தூசி புத்தகத்தின் பக்கங்களில் இருக்கிறது.

2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் கந்தர்வன் சிபாரிசு செய்த நாவல். எனக்கு இதை படித்திருக்கிறேனா என்று கொஞ்சம் குழப்பம்.

3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி சி. மோகன் சிபாரிசு செய்திருக்கிறார். அருமையான புத்தகம். என்னுடைய காப்பியை பக்ஸ் தூக்கிக்கொண்டு போயிருக்கிறான். நீங்கள் சிலிகான் வாலியில் வசிப்பவராயிருந்தால், இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

4. கோவேறு கழுதைகள் – இமையம் கந்தர்வன் சிபாரிசு செய்தது. படித்ததில்லை.

5. வானம் வசப்படும் – பிரபஞ்சன் சா. கந்தசாமி சிபாரிசு செய்தது. படிக்கலாம். ஆனால் சூப்பர் டூப்பர் நாவல் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

6. தூர்வை – சோ. தர்மன் படித்ததில்லை.

7. எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில் நாடன் படித்ததில்லை

8. கரமுண்டார் வீடு – தஞ்சை பிரகாஷ் படித்ததில்லை

9. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்; அற்புதமான நாவல். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ராஜ மார்த்தாண்டனும் சிபாரிசு செய்கிறார்.

10. செந்நெல் – சோலை சுந்தரபெருமாள் முக்கியமான புஸ்தகம். நல்ல நாவல் என்று சொல்ல மாட்டேன். கீழ் வெண்மணி பற்றி எழுதப்பட்ட docu-fiction. படிக்கும்போது இப்படித்தான் நடந்திருக்கு என்று நமக்கு தோன்றும். இந்திரா பார்த்தசாரதியும் கீழ் வெண்மணி பற்றி குருதிப் புனல் என்ற நாவலை எழுதி இருக்கிறார். ஆனால் அந்த நாவலில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். இதிலோ அந்த ஊரிலேயே வாழ்ந்த ஒருவர் கதையை சொல்வது போல தோன்றும். சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்

ராஜ மார்த்தாண்டனும் முக்கியமான இலக்கிய விமர்சகர் போலிருக்கிறது. நான் எதையும் படித்ததில்லை.

1. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் அருமை. என் பதிவு இங்கே. கந்தர்வனும் சிபாரிசு செய்கிறார். சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

2. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி அருமை. சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

3. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் அருமை. வேதம் படிக்கும், ஒரு விதவையுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று குழம்பும் மகன், அவனது சோரம் போகும் அம்மா ஆகிய இரு பாத்திரங்களை வைத்து விளையாடி இருக்கிறார்.

4. ஜே.ஜே. சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி அருமை. வெங்கட் சாமிநாதனும், சி. மோகனும் குறிப்பிடுகிறார்கள். பக்ஸ் கொடுத்த பிறகு சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம்.

5. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் – சுந்தர ராமசாமி படித்ததில்லை.

6. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முடிக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். சி. மோகனும் சிபாரிசு செய்கிறார்.

7. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அருமையான புத்தகம். வெங்கட் சாமிநாதனும் குறிப்பிடுகிறார்.

8. பின்தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன் ஜெயமோகன் நாலைந்து அற்புதமான நாவல்களை எழுதி இருக்கிறார். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான் – விஷ்ணுபுரத்தை விட, ஏழாம் உலகத்தை விட, காடு நாவலை விட.

9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் சா.கந்தசாமியின் சிபாரிசும் கூட. படித்ததில்லை.

10. உப பாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன் நல்ல புத்தகம். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு fascination உண்டு. மகாபாரதத்தை வைத்து எவ்வளவு மோசமாக எழுதினாலும் ரசிப்பேன் என்று நினைக்கிறேன். இது நன்றாகவே எழுதப்பட்டிருக்கும், சிலிகான் வாலிக்காரர்கள் இரவல் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மகாபாரதத்தை வைத்து இதை விட நல்ல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தர் என் லிஸ்டில் மிகவும் மேலே இருக்கும். பிரேம் பணிக்கர் இப்போது எம்.டி. வாசுதேவன் நாயரின் ரண்டாமூழம் என்ற நாவலை ஆங்கிலத்தில் online ஆக மொழி பெயர்த்துக் கொண்டு வருகிறார். அதுவும் இதை விட சிறந்த புத்தகம்.


சமீபத்தில் டாப்டென் என்ற பதிவில் சில சிபாரிசுகளை பார்த்தேன். அவர்கள் குமுதத்தில் வந்த சிலவற்றை மீள்பதிவு செய்திருக்கிறார்கள். அவை பற்றிய கமெண்ட்கள் இங்கே.

சிறந்த பத்து தமிழ் நாவல்கள் – சா. கந்தசாமி

சா. கந்தசாமியின் சாயாவனம் என் சிறு வயதில் அம்மா, அப்பா, நான் எல்லாரும் பல முறை விரும்பி படித்த புத்தகம். என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம் அதுதான் என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் என்ன என்பதை மிகவும் ஆக சுட்டி இருப்பார்.

1. பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை தமிழின் முதல் நாவல் என்பதால் இது பலரால் சிபார்சு செய்யப்படுகிறது. என் கருத்தில் இது படிக்கப்பட வேண்டியது இல்லை. போரடிக்கும்.

2. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம் க.நா.சு. படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் குறிப்பிட்ட நாவல். இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

3. ஒரு நாள் – க.நா. சுப்பிரமணியம் ஜெயமோகன் சொன்ன நாவல். இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

4. வாசவேஸ்வரம் – கிருத்திகா கிருத்திகா சமீபத்தில் மறைந்துவிட்டாராம். இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

5. 18ஆவது அட்சக்கோடு – அசோகமித்திரன் அசோகமித்திரன் மிக subtleஆன ஆசிரியர். இந்த புத்தகம் எனக்கு too subtle. அவரது தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள் போன்ற புத்தகங்களை சிபாரிசு செய்கிறேன்.

6. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன் படித்ததில்லை.

7. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை.

8. அவன் ஆனது – சா. கந்தசாமி படித்ததில்லை.

9. வானம் வசப்படும் – பிரபஞ்சன் படிக்கலாம், ஆனால் எனக்கு இந்த புத்தகம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை.

10. ரப்பர் – ஜெயமோகன் ஜெயமோகனின் சுமாரான நாவல். அவரது முதல் நாவலும் கூட. அவரது potential நன்றாக தெரியும், ஆனால் அவர் எழுத்தாளராக இன்னும் பல படிகள் ஏற வேண்டி இருப்பதும் தெரியும். இதை விட பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் போன்ற புத்தகங்களை நான் சிபாரிசு செய்கிறேன்.

கந்தவர்னை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவரது சிபாரிசுகள்.

1. மோகமுள் – தி. ஜானகிராமன் மிக அருமையான புத்தகம். அந்த கால கும்பகோணத்தின் தூசியை இதன் பக்கங்களில் சுவாசிக்கலாம்.

2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் ஒரே ஒரு நீல. பத்மநாபன் நாவல்தான் என் நினைவில் இருக்கிறது. எனக்கு இங்கே கொஞ்சம் குழப்பம். இதை படித்திருக்கிறேனா என்று நினைவில்லை.

3. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி, என் சிறு வயதிலேயே என்னை கவர்ந்த இலக்கியத்தரம் வாய்ந்த புத்தகம்.

4. மலரும் சருகும் – டி. செல்வராஜ் படித்ததில்லை.

5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன் மிக அருமையான புத்தகம். ராஜநாராயணனின் பல புத்தகங்கள் அருமையானவை.

6. கடல்புரத்தில் – வண்ணநிலவன் படிக்கலாம், ஆனால் எல்லாரையும் போல் நான் இந்த புத்தகத்தை சிலாகித்து சொல்ல மாட்டேன்.

7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன் கேள்விப்பட்டதே இல்லை.

8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன் நல்ல புத்தகம்.

9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம் என் பதிவு இங்கே.

10. கோவேறுக் கழுதைகள் – இமையம் படித்ததில்லை.

சி. மோகன் சிபாரிசுகள் – எனக்கு இவர் யாரென்று தெரியாது. படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை.

1. இடைவெளி – எஸ். சம்பத் படித்ததில்லை.

2. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம் ஆரம்பித்தேன். ஆரம்பம் மிக நன்றாக இருந்தது. புத்தகம் பிடிக்கும் என்று தோன்றியது. ஆனால் மேலே தொடர முடியாமல் ஒரு சோம்பேறித்தனம்.

3. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் அபாரமான புத்தகம். சுலபமாக சுஜாதா புஸ்தகம் மாதிரி படிக்க முடியாது. அதிகாரம் எப்படி அநீதியில் விளைகிறது, இதிகாசங்கள் எப்படி உருவாகின்றன, பல கோணங்களில் படிக்கலாம்.

4. நினைவுப் பாதை – நகுலன் படித்ததில்லை.

5. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன் ஒரு ரவுடி மிக லாஜிகலாக சிந்தித்து தன் வைப்பாட்டிக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்கிறான். ஜி. நாகராஜன் இன்னும் தமிழ் உலகை ஷாக் செய்யக் கூடியவர்.

6. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி அற்புதமான புஸ்தகம்.

7. மோகமுள் – தி. ஜானகிராமன் முன்பு சொன்ன மாதிரி அருமை.

8. பள்ளிகொண்டபுரம் – நீல. பத்மநாபன் படித்ததில்லை

9. தண்ணீர் – அசோகமித்திரன் இந்த முறை அவரது எழுத்து எனக்கு புரிந்துவிட்டது – என்று நினைக்கிறேன். ஜமுனா, அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தை, தண்ணீர் பஞ்சம் எல்லாம் நன்றாக வந்திருக்கும்.

10. சாயாவனம் – சா. கந்தசாமி முன்பே சொன்ன மாதிரி இலக்கியத் தரம் வாய்ந்த புஸ்தகம்.