பா.ராகவன்

பா.ராகவன்

பா.ராகவன் இன்று இணைய பதிவர்களில் பிரபலமானவர். கிழக்கு பதிப்பகத்தில் பார்ட்னரோ இல்லை உயர் அதிகாரியோ தெரியவில்லை. கல்கியில் துணை ஆசிரியராக இருந்தவர். அவரது non-fiction பெரும் வெற்றி அடைந்திருக்கிறது. பெரிய அறிமுகம் எல்லாம் தேவை இல்லாதவர். அதுவும் நான் அறிமுகம் செய்து வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

பா.ரா.வின் அப்பா ஆர்.பி. சாரதி, பெரியப்பா சுராஜ் ஆகியோரை சந்தித்திருக்கிறேன். அவர் அப்பாவும் என் அப்பாவும் ஹெட்மாஸ்டர்கள். ஏறக்குறைய சம வயதினர். பா.ரா. ஒரு முறை அவர் தன் முதல் கதையை கிணற்றடியில் வைத்து என் அப்பாவுக்குத்தான் சொன்னதாக குறிப்பிட்டார். சுராஜ் சைதாப்பேட்டையில் பாரதி சங்கம் என்று ஒன்று வைத்து அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்துவார். சின்ன வயதில் சிலவற்றுக்கு போயிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அம்மா அப்பாவின் நண்பி-நண்பர்களை எல்லாம் போய்ப் பார்க்க வேண்டும்.

அவர் இங்கே தனக்கு பிடித்த நூறு புத்தகங்களை பற்றி குறிப்பிடுகிறார். நூறு புத்தகம் பற்றி ஒரே பதிவில் எழுதினால் நானே படிக்க மாட்டேன். அதனால் இதை பகுதி பகுதியாக பிரித்து எழுதுகிறேன்.

1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்: முக்கியமான ஆவணம். ஆனால் அருமையான புத்தகம் என்றெல்லாம் சொல்லமாட்டேன்.

2. வேதாகமம் [குறிப்பாகப் பழைய ஏற்பாடு]: எனக்கும் புதிய ஏற்பாடை விட பழைய ஏற்பாடுதான் பிடிக்கும். பழைய ஏற்பாட்டில் கதைகள் சுவாரசியமானவை. அதில் ஜெஹோவா நம்மூர் சுடலை மாடன் மாதிரி எனக்கு படையல் வைக்காமல் அவனுக்கா வச்சே என்று கடுப்பாகிவிடுவார். ஒரு கன்னம் மறு கன்னம் எல்லாம் ஏசு வந்த பிறகுதான்.

3. புத்தரும் அவர் தம்மமும் – பி.ஆர். அம்பேத்கர்: படித்ததில்லை.

4. நாலாயிர திவ்யப் பிரபந்தம்: அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாசுரங்களை ரசித்திருக்கிறேன். பொய்கை ஆழ்வாரின் வையம் தகளியா வார்கடலே நெய்யாக பாசுரம் கொண்டு வரும் படிமம் மிக அற்புதமானது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்ற பாசுரமும் எனக்கு பிடித்தமானது. என்றாவது எனது கவிதை அலர்ஜியை கடந்து படிக்க வேண்டும்.

5. பாஞ்சாலி சபதம் – பாரதியார்: சூதர் மனைகளிலே அண்ணே தொண்டு மகளிருண்டு சூதிற் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி போனதில்லை என்று ஆரம்பிப்பது கவிதை. எனக்கே கற்பூர வாசனை தெரிகிறது.

6. ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்: படித்ததில்லை. படிப்பேனா என்பது சந்தேகமே.

7. சுந்தர ராமசாமி சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: சில அற்புதமான கதைகள் உண்டு – கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய் தூள், விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம்…

8. வண்ணநிலவன் சிறுகதைகள் [முழுத் தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

9. வண்ணதாசன் சிறுகதைகள் [முழுத்தொகுப்பு]: புத்தகம் இருக்கிறது, படிக்க வேண்டும்.

10. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்: அருமை!

11. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி: அபாரம்!

12. சிந்தாநதி – லா.ச. ராமாமிருதம்: படித்ததில்லை.

13. கல்லுக்குள் ஈரம் – ர.சு. நல்லபெருமாள்: நல்ல புத்தகம்தான், ஆனால் ஏ க்ளாஸ் புத்தகம் இல்லை. காந்தியை கொலை செய்யப் போகும் புரட்சி இளைஞன். ஹே ராம் படம் இந்த கதையை ஓரளவு ஒத்துப் போகும்.

14. பொன்னியின் செல்வன் – கல்கி: மிக அற்புதமான கதை சிக்கல் கொண்ட புத்தகம். கொஞ்சம் verbose-தான், ஆனால் கல்கியின் சரளமான நடை அதை மறக்கடித்துவிடுகிறது. அலெக்சாண்டர் டூமா, வால்டர் ஸ்காட் போன்றவர்களை கொண்டாடும் நாம் அவற்றை விட சிறந்த கல்கியை மறந்துவிடுகிறோம்.

15. கார்ல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா: படித்ததில்லை. சாமிநாத சர்மா எழுதிய நான் கண்ட நால்வர் (திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதி) எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அவருடைய நாடகமான பாணபுரத்து வீரனும் பிடிக்கும். அவர்தான் கலைஞரின் மனோகரா ஸ்டைல் உணர்ச்சி பிழம்பு வசனங்களுக்கு முன்னோடி என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.

16. ந. பிச்சமூர்த்தி கதைகள் [முழுத்தொகுப்பு – இரண்டு பாகங்கள்]: சில கதைகள் படித்திருக்கிறேன். முழு தொகுப்பையும் படித்ததில்லை. பிச்சமூர்த்தியின் பெரிய தாக்கம் சிறுகதைகள், நாவல்கள் அல்ல, அவரது கவிதைகள்தான். எனக்கே சில கவிதைகள் பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! நான் காசு கொடுத்து வாங்கிய ஒரே கவிதை புத்தகம் பிச்சமூர்த்தி கவிதைகள்தான். பாரதியார் கவிதைகள் கூட அம்மா அப்பா யாராவது வாங்கிக் கொடுத்ததுதான்.

17. புதுமைப்பித்தன் கதைகள் [முழுத்தொகுப்பு]: அற்புதம்! புதுமைப்பித்தனை பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. இது வரை வந்த தமிழ் எழுத்தாளர்களில் அவரே முதன்மையானவர், அவ்வளவுதான்.

18. வேடந்தாங்கல் – ம.வே. சிவகுமார்: படித்ததில்லை.

19. எனது சிறைவாசம் – அரவிந்தர்: தண்டம். பா.ரா.வுக்கு இதெல்லாம் எப்படி பிடிக்கிறது என்று தெரியவில்லை.

20. கரீபியன் கடலும் கயானா தீவுகளும் – ஏ.கே. செட்டியார்: படித்ததில்லை.

21. ஒற்றன் – அசோகமித்திரன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்க்கையை விவரிக்கும் அணுகுமுறை உள்ளவர். மெல்லிய நகைச்சுவை பக்கத்துக்கு பக்கம் தெரியும். இது அவருடைய உன்னதமான புத்தகங்களில் ஒன்று.

22. நிலா நிழல் – சுஜாதா: இதை படித்த ஞாபகம் இருக்கிறது, ஆனால் கதை ஞாபகம் வரவில்லை. இதுதான் ஒரு நடிகையின் சிறு பெண்ணோடு பக்கத்து மெக்கானிக் ஷாப் சிறுவர்கள் நண்பர்களாகும் கதையோ? நம்ம உப்பிலி ஸ்ரீனிவாஸ் ஏதாவது எழுதுகிறாரா என்று பார்ப்போம்.

23. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா: இதுதான் ஒரிஜினல் ப்ளாக். நன்றாக இருக்கும். இதை பற்றி என்னுடைய ஒரு பதிவு இங்கே.

24. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு: கரிச்சான் குஞ்சை பற்றி நிறைய படித்துவிட்டேன், இந்த புத்தகம்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது.

25. அவன் ஆனது – சா. கந்தசாமி: படித்ததில்லை.

26. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்: படித்ததில்லை.

27. எடிட்டர் எஸ்.ஏ.பி – ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன்: படித்ததில்லை. படிக்க ஆவலாக இருக்கிறது. ஜ.ரா. சுந்தரேசன், புனிதன், பாக்கியம் ராமசாமி, சுந்தர பாகவதர் என்ற பேர்களில் எழுதுவது ஒருவரே (ஜ.ரா.சு.) என்று நினைத்திருந்தேன். இதைப் பார்த்தால் புனிதன் வேறு யாரோ என்று தோன்றுகிறது.

28. வ.உ..சி. நூற்றிரட்டு: படித்ததில்லை.

29. வனவாசம் – கண்ணதாசன்: வனவாசமோ மனவாசமோ ஏதோ ஒன்றுதான் படித்திருக்கிறேன். நல்ல புத்தகம் எல்லாம் இல்லை, ஆனால் முக்கியமான ஆவணம். தி.மு.க.வின் உள்குத்துகளை விவரிக்கும் புத்தகம்.

30. திலகரின் கீதைப் பேருரைகள்: படித்ததில்லை.

31. நுண்வெளிக் கிரணங்கள் – சு.வேணுகோபால்: கேள்விப்பட்டதே இல்லை.

32. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை – பி.ஆர். அம்பேத்கர் படித்ததில்லை.

33. காமராஜரை சந்தித்தேன் – சோ: படிக்க விரும்பும் ஒரு புத்தகம். இந்த முறை ஊருக்கு போனால் அலையன்சில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். டோண்டு இந்த புத்தகத்தைப் பற்றி எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. அவர் சோவின் முரட்டு பக்தர். காமராஜ் மேல் பெருமதிப்பு வைத்திருப்பவர்.

34. அர்த்த சாஸ்திரம் – சாணக்கியர்: படிக்க ஆரம்பித்தேன், முடிக்க முடியவில்லை. படித்த வரையில் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்தது. ரொம்ப ப்ராக்டிகலான புத்தகம். நியாய அநியாயங்களை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய பதிவுகள்:
பா.ரா.வுக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

தமிழில் சரித்திர நாவல் சிபாரிசுகள், இன்னும் சில சிபாரிசுகள்
அசோகமித்ரனின் ஒற்றன் பகுதி 1, பகுதி 2, அசோகமித்திரன்
சுஜாதாவின் ப்ளாக் – கணையாழியின் கடைசி பக்கங்கள்
கரிச்சான் குஞ்சு
எஸ்.ஏ.பி., பி.எஸ். ராமையா, ஜெகசிற்பியன், எழுத்தாளர் ஆர்வி, சிவசங்கரி, தி. ஜா, நா. பா., விந்தன் ஆகியோரை பதிவர் ஜீவி அறிமுகம் செய்கிறார்.

பா. ராகவனின் தளம்
பா.ரா. பற்றிய விக்கி குறிப்பு
பா.ரா.வின் நிலமெல்லாம் ரத்தம் ஆன்லைனில் படிக்க
கிழக்கு பதிப்பகம்


க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. 🙂

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். 🙂

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. 🙂

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!