நான் பார்த்த நாடகம் எல்லாம் சென்னை சபா சர்க்யூட்டில் பார்த்தவைதான். ஒய்.ஜி.பி., சோ, மௌலி, கிரேசி மோகன், எஸ்.வி. சேகர், காத்தாடி ராமமூர்த்தி நாடகங்களை பார்த்திருக்கிறேன். கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம், டெனன்ட் கமாண்ட்மெண்ட்ஸ், மகாபாரதத்தில் மங்காத்தா, டௌரி கல்யாணம், பட்டின பிரவேசம், அப்புறம் காத்தாடி ஊட்டிக்கு போகும் ஒரு நாடகம், ஐயோ அம்மா அம்மம்மா இவைதான் நான் இந்த சர்க்யூட்டில் பார்த்த நாடகங்களின் உச்சம்.

எஸ்.வி.சேகரும், கிரேசி மோகனும் ஒரே ஜெனரேஷனுக்கே நாடகம் என்றால் என்ன என்பதை மறக்கடித்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்சனையும் ஷாவையும், ப்ரெக்டையும், ஆர்தர் மில்லரையும், டென்னசீ வில்லியம்சையும் படிக்க ஆரம்பித்ததும்தான் நாடகம் என்றால் என்ன என்று ஓரளவாவது எனக்கு பிடிபட ஆரம்பித்தது. அப்போது தமிழில் சோவின் நாடகங்களை படித்தேன். ஆனால் நாடகம் என்பது படித்து புரிந்து கொள்ள வேண்டியது இல்லை, பார்க்க வேண்டியது. அப்புறம் நாவலுக்கும் நாடகத்துக்கும் என்ன வித்தியாசம்?

நாடக உத்திகள் எனக்கு புரிய ரொம்ப நாளானது. உதாரணமாக ப்ரெக்டின் The good woman of Sezuan படித்தபோதுதான் எனக்கு முகமூடிகளை ஒரு நாடகத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று புரிந்தது. கிரேக்க நாடகங்களை படித்தபோது என்னடா போரடிக்கிறார்கள் என்று தோன்றியது. அதில் வரும் கோரஸ் மகா முட்டாள்தனமாக தெரிந்தது.

அப்போதுதான் ஹைதராபாதில் காஷிராம் கொத்வால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகம் என்றால் அதுதான் நாடகம். எனக்கு இந்த நாடகம் பற்றி முன்பின் தெரியாது. ஏதோ நண்பன் கூப்பிட்டான் என்று கூடப் போனேன். முதல் காட்சியில் கோரஸ் வந்த அடுத்த நிமிஷம் எனக்கு கோரஸ் பற்றி ஞானோதயம் ஏற்பட்டது. Extremely powerful drama. விஜய் டெண்டுல்கர் ஒரு ஜீனியஸ். நானா ஃபட்னவிஸாக நடித்த மோகன் அகாஷே இன்னொரு ஜீனியஸ். நாடகம் என்றால் என்ன என்பது இதை பார்த்த பிறகுதான் எனக்கு புரிந்தது. நான் இன்னொரு நாடகத்தை இன்னும் பார்க்கவில்லை.

கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நானா ஃபட்னவிஸ் மராத்திய பேஷ்வா. புனேயில் அதிகாரம் செலுத்தியவர். பெண் பித்தர். அங்கே ஏழை காஷிராம் பிராமணர்களால் அவமானப்படுத்தப்படுகிறான். அவன் தன் பெண்ணை நானாவுக்கு கூட்டிக் கொடுத்து அதிகாரம் உள்ள கொத்வால் பதவியை பெறுகிறான். எல்லா பிராமணர்களுக்கும் டார்ச்சர் கொடுக்கிறான். அவன் பெண் பிரசவத்தில் இறந்துவிட, அவன் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அவன் அழிகிறான்.

பெங்களூரில் தலே தண்டா என்ற சுமாரான கிரிஷ் கார்னாட் நாடகம் பார்த்திருக்கிறேன். கல்கத்தாவிலும், பம்பாயிலும், பெங்களூரிலும் நாடகம் ஓரளவு நடப்பதாக அப்போதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். விஜய் டெண்டுல்கர், ஏவம் இந்த்ரஜித் எழுதியவர், கிரிஷ் கார்னாட் மாதிரி தமிழில் யாருமே எழுதுவதில்லையா?

ஏவம் இந்த்ரஜித், சாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!, துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா போன்ற நாடகங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இவை அனைத்தும் நல்ல நாடகங்களாக அமையும் என்று தோன்றுகிறது. இது போன்ற நிஜமான நாடகங்கள் தமிழில் வருவதில்லையா? இல்லை வெளியில் தெரிவதில்லையா? இன்று நான் எங்கேயோ வாழ்கிறேன் என்பது உண்மைதான், ஆனால் நாடகம் என்றால் என்ன என்று கூட தெரியாமல் நான் வளர்ந்த சூழ்நிலைதான் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

கூத்துப் பட்டறை, ஞானி, நா. முத்துசாமி என்றெல்லாம் இருபது வருஷங்களுக்கு முன் நான் கேள்விப்பட்டது கூட இல்லை. அது சரி, கணையாழி பற்றி கூட தெரியாதுதான். 🙂 இப்போது வளர்பவர்களாவது பார்த்தால் சரிதான். ஆனால் இந்த ஜெனரேஷனுக்கும் எஸ்.வி. சேகர்தான் தெரியும் போலிருக்கிறது.

எனக்கு தெரிந்து சோதான் தமிழில் ஓரளவாவது உருப்படியாக நாடகம் எழுதி இருக்கிறார். அவை எல்லாமே வசனங்களை வைத்து மட்டும் எழுதப்பட்டவைதான். ஆனால் உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சாத்திரம் சொன்னதில்லை, முகமது பின் துக்ளக் ஆகியவை நல்ல முயற்சிகள்.

திராவிட பாரம்பரியத்தில் அண்ணாவின் வேலைக்காரி, ஓரிரவு பெரிதாக பேசப்படுகின்றன. கல்கி ஓரிரவை பார்த்துவிட்டு இதோ ஒரு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் அண்ணாவை புகழ்ந்திருக்கிறார். கனல் பறக்கும் வசனம் இருந்தால் போதும், கதை முக்கியமில்லை என்று நினைத்த காலம் போல. அப்படி என்றால் வெ. சாமிநாத சர்மாவின் பாணபுரத்து வீரனை கூட நல்ல நாடகம் என்று சொல்லலாம்.

இந்திரா பார்த்தசாரதி பற்றி சொல்கிறார்கள். நந்தன் கதை நாடகம் conspiracy theory கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது. (இதன் வீடியோவை ஒரு முறை பார்த்திருக்கிறேன், நல்ல நடிப்பு, ஆனால் கதை சரியில்லை!) ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதையை அப்படியே போட்டுவிட்டார். இவை எல்லாம் நல்ல நாடகமாக எனக்கு படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் ஒரு காலத்தில் மிகவும் பாப்புலர். ஊர் வம்பு, கால்கட்டு ஆகியவற்றை விகடனில் படித்திருக்கிறேன். தனிக் குடித்தனம் புகழ் பெற்ற நாடகம். ஆனால் இவை எதுவும் உலகத் தரம் வாய்ந்த நாடகம் என்று எனக்கு தோன்றவில்லை.

சுஜாதா சில முயற்சிகள் செய்திருக்கிறார். சரியாக வரவில்லை. நான் பார்த்த ஊஞ்சல் நாடகத்தின் வீடியோ was quite bad. டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சிறு வயதில் படித்திருக்கிறேன், அப்போது பிடித்திருந்தது, இப்போது என்ன நினைப்பேனோ தெரியாது. அவர் எழுதிய சரளா என்ற நாடகம் அந்த காலத்தில் எனக்கு டென்னசீ வில்லியம்சை நினைவுபடுத்தியது. மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

அதே போல் ஜெயந்தன் எழுதிய ஏதோ ஒரு நாடகம் எனக்கு அந்த காலத்தில் பிடித்திருந்தது. கணக்கனோ என்னவோ பேர். மீண்டும் படித்து பார்க்க வேண்டும்.

தமிழில் சோதனை நாடகங்கள் என்று என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் நாற்காலிக்காரர் கதை நாடகமாக பார்த்தால் நன்றாக இருக்கலாம்.

நீங்கள் நாடகம் பார்த்த அனுபவங்களை எழுதுங்களேன்! அது எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணமாக இருந்தாலும் சரி.

தொடர்புடைய பதிவுகள்
சோ – ஒரு மதிப்பீடு
முகமது பின் துக்ளக் விமர்சனம்


ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான்.

எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு மறந்துவிடும். ஞாபகம் இருப்பவற்றை பற்றி மட்டும் கீழே.

புதுமைப்பித்தன்: தமிழில் எனக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் என்றால் இவர்தான். ராமகிருஷ்ணன் காஞ்சனை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், செல்லம்மாள் ஆகிய மூன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
க.க. பிள்ளையும் ஏன் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடிவதில்லை. கடவுள் க. பிள்ளை வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.
செல்லம்மாள் கதையில் கீழ் மத்தியதர குடும்பம் – கணவன் கண்ணெதிரில் மனைவி கொஞ்ச கொஞ்சமாக இறந்து போவாள்.
காஞ்சனை சுமார்தான். ஏதோ பேய்க்கதை.
ஒரு நாள் கழிந்தது, சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம், பொன்னகரம், சாப விமோசனம், கல்யாணி, துன்பக் கேணி, பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை, புதிய கூண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டாரே?

மௌனி: அழியாச்சுடர், பிரபஞ்ச கானம் என்ற இரு கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். மௌனி எனக்கு புரிவதில்லை.

கு.ப.ரா: கனகாம்பரம், விடியுமா இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கனகாம்பரம் மிக அற்புதமான கதை. கணவன் புது மனைவியிடம் தன நண்பர்கள் வந்தால் சகஜமாக கலந்து பேச சொல்வான். நிஜமாகவா?
விடியுமா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் திரை, வீரம்மாளின் காளை இரண்டும் நினைவுக்கு வருகிறது. மிக நல்ல கதைகள். அதை எல்லாம் விட்டுவிட்டாரே?

பி.எஸ். ராமையாவுக்கு ஒரு கதை – நட்சத்திர குழந்தைகள். பிச்சமூர்த்திக்கு ஒன்று – ஞானப் பால். தி.ஜானகிராமனுக்கு இரண்டு – பாயசம், பஞ்சத்து ஆண்டி. எதுவும் நினைவில்லை. பாயசம் கதையில்தான் பாயசத்தில் பல்லி என்று ஹீரோ அண்டாவை கவிழ்த்துவிடுவாரா?

கு. அழகிரிசாமிக்கு மூன்று – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு. ராஜா மட்டும்தான் என்ன கதை என்று நினைவுக்கு வருகிறது. நல்ல கதை.

கி. ராஜநாராயணனுக்கு மூன்று – கோமதி, கன்னிமை, கதவு.
கோமதிதான் gay சமையல்காரனை பற்றியதோ? மற்றவை நினைவுக்கு வரவில்லை.
நினைவு வருபவை – கொத்தைப் பருத்தி, மாய மான், ஜெயில்.

சுந்தர ராமசாமிக்கு இரண்டு – பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம். அவரது பல கதைகள் பிடிக்கும், ஆனால் இவை இரண்டும் நினைவில்லை. விகாசம் என்ற கதை எனக்கு மிக பிடித்தமானது.

லா.ச.ரா.வுக்கு இரண்டு – பச்சை கனவு, பாற்கடல். பாற்கடல் என்று ஒரு புத்தகம் உண்டு, அவரது குடும்ப வரலாறு போல இருக்கும், ஆனால் அதில் சிறுகதை என்ன? தெரியவில்லை. பச்சை கனவு படித்ததில்லை. அவர் எழுதியவற்றில் எனக்கு பூரணி பிடிக்கும் (பஞ்ச பூதக் கதைகளில் பூமியை உருவகித்து எழுதப்பட்டது)

நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி படித்ததில்லை.

அசோகமித்ரனுக்கு மூன்று – புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம்.
புலிக் கலைஞன் மிக அற்புதமான கதை. புலி வேஷக் காரன் சினிமா சான்சுக்காக ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான்.
பிரயாணம் – ப்ரில்லியன்ட்! அம்ப்ரோஸ் பியர்சின் ஒரு கதையை இது ஞாபகப்படுத்துகிறது. ஆனால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதப்பட்டது.
காலமும் ஐந்து குழந்தைகளும் படித்ததில்லை.

ஜெயகாந்தனுக்கு மூன்று – குரு பீடம், அக்னி பிரவேசம், முன் நிலவும் பின் பனியும்.
அக்னி பிரவேசம் மட்டும்தான் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் இங்குதான் ஆரம்பம் ஆகிறது.

பா. ஜெயப்ரகாசம் (தாலியில் பூச்சூடியவர்கள்), பிரமிள் (காடன் கண்டது), ஆதவன் (உயரமா சிவப்பா மீசை வெச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்) படித்ததில்லை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – மிக பிரமாதமான கதை. இதை விவரிக்க விரும்பவில்லை. பெட்கி கதையையும் சேர்த்திருக்கலாம்.

அ. முத்துலிங்கம் – மகாராஜாவின் ரயில் வண்டி. நிச்சயமாக படித்திருக்கிறேன், கதை ஞாபகம் வரவில்லை.

ந. முத்துசாமியின் நீர்மை – படித்ததில்லை.

அம்பைக்கு இரண்டு – காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள்
கா.ஒ.மான் வயதுக்கு வராமலே வயதாகிவிடும் ஒரு பெண்ணை பற்றியது. நல்ல கதைதான், ஆனால் அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
அ.ஒ.கொ. செய்தாள் எல்லாரும் தேவைக்கு மேல் கொண்டாடும் ஒரு கதை. சின்னப் பெண் வயதுக்கு வந்த போது அலுத்துக் கொள்ளும் அம்மா பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை கொலை செய்தாள் என்று கதை. அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
எனக்கு பிடித்த அம்பையின் கதைகள் – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு.

வண்ணநிலவன் (எஸ்தர், மிருகம், பலாப்பழம்), சம்பத்(சாமியார் ஜூவுக்கு போகிறார்), ராஜேந்திர சோழன்(புற்றில் உறையும் பாம்புகள்), வண்ணதாசன் (தனுமை, நிலை), ஆ.மாதவன் (நாயனம்) – இவற்றை நான் படித்ததில்லை.

சுஜாதாவுக்கு இரண்டு (நகரம், ஃபில்மோத்சவ்) – படித்திருந்தால் நினைவில்லை.
சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்த சில – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி.

சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள் – இதை விவரிப்பது கஷ்டம். அருமையான கதை.

ஜி. நாகராஜன் (டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள்) – நாகராஜனின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன், ஆனால் இது என்ன என்று நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணன் நம்பி (தங்க ஒரு, மருமகள் வாக்கு) – மருமகள் வாக்கு சூப்பர்! நானும் அதற்கு கிளி சின்னத்தில் வாக்களிக்கிறேன். தங்க ஒரு நான் படித்ததில்லை.

பூமணி(ரீதி), நாஞ்சில் நாடன்(இந்நாட்டு மன்னர்), பிரபஞ்சன்(அப்பாவின் வேஷ்டி, மரி என்னும் ஆட்டுக்குட்டி), சோ. தர்மன்(சோக வனம்), மாலன்(இறகுகளும் பாறைகளும்) ஆகியவற்றை நான் படித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி, ஒரு கப் காப்பி. பரவாயில்லை, ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

திலிப் குமார் – மூங்கில் குருத்து, கடிதம். எனக்கு கடிதம் பிடித்த கதை. மூ. குருத்து சுமார்தான். ஆனால் அவர் எழுதிய கடவுதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

எஸ்.ராவின் தேர்வு #63-#100 வரை நான் படித்திருப்பது ஜெயமோகனின் பத்ம வ்யூஹம் கதை மட்டும்தான். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு பெரிய பித்து உண்டு, அதனால்தான் பத்ம வ்யூஹம் நினைவிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளில் எனக்கு நினைவில் வருபவை பித்தம், காலம், அவதாரம், ஊமை செந்நாய்.

நான் படிக்காத அந்த #63-#100 வரை உள்ள தேர்வுகள்:
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

மேலே உள்ளவற்றைத் தவிர நான் பரிந்துரைக்கும் சில கதைகள் – பாலகுமாரன்(சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை பச்சை?), தங்கர் பச்சான்(குடி முந்திரி, வெள்ளை மாடு), தமயந்தி(அனல் மின் நிலையங்கள்)மனங்கள், யுவன் சந்திரசேகர்(23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்)

தொடர்புடைய பதிவுகள்:
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்