இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

நான் இ.பா.வை ரசிப்பவன் இல்லை. அவரது நாவல்களில் எல்லாரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா நாவல்களிலும் ஒரு “அறிவுஜீவியின்” கோணம்தான், அதுவும் டெல்லியில் வாழும் ஒரு தமிழ் பிராமண “அறிவு ஜீவி” கோணம் மட்டுமே. இதில் நகைச்சுவை என்கிறார்கள், அங்கதம் என்கிறார்கள் எனக்கென்னவோ இதை விட வடிவேலு அடி வாங்குவதே கொஞ்சம் பெட்டர் நகைச்சுவையாக இருக்கிறது. அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற குருதிப்புனல் என் கண்களில் குறைகள் நிறைந்த படைப்புதான். அதில் அனாவசியமாக கோபால கிருஷ்ண நாயுடு காரக்டரை ஒரு ஹோமொசெக் ஷுவலாக ஆண்மைக் குறைவு உள்ளவனாக சித்தரித்துவிட்டார் – படித்தவர்கள் பலருக்கு நாற்பத்து சொச்சம் பேர் எரிந்ததை விட வில்லன் ஹோமோ என்பது மட்டும்தான் நினைவில் தங்கி இருக்கிறது. தந்திர பூமி, சுதந்திர பூமி, ஏசுவின் தோழர்கள் எதுவும் எனக்கு தேறவில்லை. என் கண்ணில் வெறும் fluff. அவருடைய புகழ் பெற்ற நந்தன் கதை நாடகத்தைப் பாருங்கள் – கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல நந்தனை ஒழிக்கிறார்கள். ராமானுஜர் நாடகம் வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளில் தொகுப்பு மட்டுமே. அவருடைய படைப்புகளில் கிருஷ்ணா கிருஷ்ணா ஒன்றுதான் எனக்கு பிடித்திருந்தது. அவருடைய படைப்புகளில் அது ஒன்றுதான் நூறு வருஷத்துக்குப் பின்னாலும் படிக்கக் கூடியது என்பது என் கருத்து. என் மகாபாரதப் பித்தும் இந்த நினைப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவர் எழுதிய ஒரு கப் காப்பி சிறுகதை புகழ் பெற்றது, ஆனால் அது சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். போட்டால் லிங்க் செய்யலாம். பதித்த ராமுக்கு நன்றி!

ஆனால் இ.பா.வின் தாக்கம் பெரியது. அவருடைய தாக்கம் ஆதவனில் நன்றாகவே தெரிகிறது. ராமசேஷன் அதே மாதிரி அறிவுஜீவிதான். இன்று வரை கீழ்வெண்மணி நாவல் என்றால் குருதிப்புனல்தான். அவருடைய நாடகங்கள் முக்கியமான முயற்சிகள். நந்தன் கதை கூட நாடகமாகப் பார்த்தால் கொக்கும் வெண்ணையும் தெரிவதில்லை. வைஷ்ணவ குரு பரம்பரை கதைகள் எல்லாம் ஐயங்கார்களே மறந்துகொண்டிருக்கும் காலம் இது. ராமானுஜர் நாடகம் பார்க்க நன்றாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அவருடைய எந்த நாவலும் மோசம் இல்லை. கால வெள்ளத்தில் நிற்காது, அவ்வளவுதான். அவர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் கொண்டு வந்த மாற்றங்களும் அநேகம்.

தமிழில் சீரியஸ் எழுத்தாளர்களுக்கு பத்மஸ்ரீ கொடுக்கப்படுவது நல்ல விஷயம். ஜெயகாந்தனுக்கு போன வருஷம் கொடுத்தார்கள். இந்த வருஷம் இ.பா.வுக்கு. சீக்கிரம் அசோகமித்திரன், கி. ராஜநாராயணன், சா. கந்தசாமி, பூமணி, ஜெயமோகன் மாதிரி எழுத்தாளர்களுக்கும் கொடுங்கப்பா! அதுவும் அசோகமித்திரன் இருக்கும் நிலையைப் பார்த்தால் ரொம்ப நாள் தாங்கமாட்டார் என்று தோன்றுகிறது, இருக்கும்போது மரியாதை செய்யுங்கள்! (சுந்தர ராமசாமிக்கான சான்சைத்தான் விட்டுவிட்டோம்.)

லிஸ்டில் டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி என்று போட்டிருந்தார்கள். இந்திரா பார்த்தசாரதியைத்தான் தெரிகிறது, யாருக்கு ரங்கநாதனைத் தெரியும்? 🙂

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: படிப்பு, ஆளுமைகள்

தொடர்புடைய பதிவுகள்:
2010 – விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட்
2009 பத்ம விபூஷன்/பூஷன்/ஸ்ரீ விருதுகள்
ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன்
ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் பத்ம பூஷன்
விவேக்குக்கெல்லாம் பத்மஸ்ரீயா?

கீழ்வெண்மணி நாவல்கள்
இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள்


எனக்கு சாதாரணமாக ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் ஆகியோரின் எண்ணங்களோடு ஒத்துப் போகிறது.

ஜெயமோகனின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன. நான் முதன்முதலாக படித்த அவருடைய புத்தகம் ஏழாம் உலகம். மனிதனின் குரூரத்தையும் அந்த குரூரம் அடிப்பவனுக்கும் அடிபடுவனுக்கும் காலம் செல்ல செல்ல உறைக்காமலே போய்விடும் மனநிலையையும், ஒரு புதிய களத்தையும் கண் முன்னால் கொண்டு வந்திருந்தார்.

வெங்கட் சாமிநாதனின் intellectual integrity அவரது எழுத்துக்களில் எப்போதுமே பிரகாசிக்கும். தரம் பார்த்து வாசகனுக்கு சொல்லும்போது எழுத்தாளரைப் பற்றி அவரது தனிப்பட்ட அபிப்ராயங்கள், சண்டை சச்சரவுகள், எந்த அரசியலும் இல்லாத கறாரான விமர்சனம். அவரது ரசனையும் என் ரசனையும் நிறைய ஒத்துப் போகும். (க.நா.சு.வுக்கும் இந்த நேர்மை உண்டு, ஆனால் க.நா.சு.வின் தேர்வுகளில் ஓரளவு எனக்கு தேறாமல் போய்விடுகிறது.)

வெ.சா. ஏழாம் உலகம் பற்றி விமர்சனம் எழுதி இருக்கிறார் என்று பார்த்ததும் ஆவலோடு படிக்கப் போனேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவரது விமர்சனம் ஒரு சம்பிரதாய விமர்சனமாக இருக்கிறது. நான் எழுதுவது போல இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன். 🙂 அவர் கொஞ்சம் தயக்கத்துடன்தான் – இந்த அரக்கத்தனத்தைப் பற்றி படிக்கத்தான் வேண்டுமா என்று ஒரு தயக்கம் – இதைப் படித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. மேலெழுந்தவாரியான விமர்சனம். அவரிடமிருந்து புதிய தரிசனம் எதுவும் கிடைக்கவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா.வின் ஏழாம் உலகம் விமர்சனம்
பக்சின் ஏழாம் உலகம் விமர்சனம்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்
ஜெயமோகனின் தளம்


மாட்டுப்பொங்கல் போனது கூட தெரியவில்லை. மாட்டுப் பொங்கல் எல்லாம் கொண்டாடி ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் ஆகிவிட்டது.

ஆனால் இப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மன நிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ். ராமகிருஷ்ணனின் தளத்தில் ஏதோ பிரச்சினை போலிருக்கிறது. தளத்திற்கு போக முடியவில்லை. ஆனால் அவரும் இதை சிறந்த தமிழ் நாவல் என்று குறிப்பிட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை.

கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.

உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்டிருக்கும் பக்கம்: படிப்பு

தொடர்புடைய குறிப்புகள்:
ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் பதிவு


யார் இந்த விகாஸ் ஸ்வரூப்? ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒரிஜினல் நாவலை எழுதியவர் இவர்தான். Q and A என்ற பேரில் வந்தது. படத்தில் கதையின் framework-ஐ மாற்றவில்லை, ஆனால் கேள்விகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல ஹீரோ வாழ்க்கையும் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ (பேர் ராம் முஹம்மது தாமஸ்) அத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்கிறார். ஸ்பான்சருக்கு அறிவித்தபடி பணம் கொடுக்க முடியாத நிலை. போலீசில் போட்டுக் கொடுக்கிறார்கள். சிறு வயதில் ஹீரோ காப்பாற்றிய பெண் இப்போது வக்கீலாக வளர்ந்து அவனைக் காப்பாற்றுகிறாள். இதில் அண்ணன் எல்லாம் கிடையாது, ஆனால் ஒரு உயிர் நண்பன் உண்டு. காதலும் உண்டு.

நாவல் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நல்ல framework-ஐ பிடித்துக் கொண்டார். அதை வைத்து ஒரு சுமாரான, போர் அடிக்காத நாவல் எழுதி இருக்கிறார். நீண்ட பயணத்தின் போது படிக்கக் கூடிய நாவல்.

இன்னொரு நாவலும் எழுதி இருக்கிறார். Six Suspects. பல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இன்னொரு போர் அடிக்காத நாவல். வில்லன் பெரிய தொழிலதிபர். உத்தரப் பிரதேசத்தின் உள்துறை மந்திரியின் மகன். மந்திரி உண்மையில் ஒரு தாதா. ஒரு பார்ட்டியில் ஒரு பெண்ணைக் கொன்று விடுகிறார். பணம், செல்வாக்கு இவற்றால் விடுதலை ஆகி விடுகிறார். அதைக் கொண்டாட ஒரு பார்ட்டி, அதில் அவரை யாரோ சுட்டுவிடுகிரார்கள். ஆறு பேர் மேல் சந்தேகம். இதுதான் கதை. ஆறு பேரில் ஒருவரான அந்தமான் தீவிலிருந்து வரும் ஒங்கே இனத்தை சேர்ந்த எகெடி நன்றாக வந்திருந்தது. மகாத்மா காந்தியின் ஆவி அவ்வப்போது ஒருவரைப் பிடித்துக் கொள்கிறது. மந்திரியின் காரக்டர் எப்போதும் தொலைபேசிக் கொண்டே இருக்கிறார்.

விகாஸ் ஸ்வரூப்புக்கு ஒரு நல்ல framework-ஐ தேர்ந்தெடுப்பது சுலபமாக இருக்கிறது. கதைக்கு ஒரு அடிப்படை சட்டம் கிடைத்ததும் ஓரளவு மெக்கானிக்கலாக அந்த சட்டத்தின் மீது கதையை டெவலப் செய்கிறார். கதையின் முடிச்சுகள் சுலபமாக, கொஞ்சம் சினிமாத்தனமாக அவிழ்கின்றன.

படித்தே ஆக வேண்டியவர் இல்லை, இருந்தாலும் படிக்கலாம்.குறிப்பாக நீண்ட பயணங்களின்போது.

தொடர்புடைய பதிவுகள்
ஸ்லம்டாக் மில்லியனர் விமர்சனம், ஸ்ரேயாவின் விமர்சனம், ஆஸ்கார் போட்டி, ரஹ்மானுக்கு ஆஸ்கார், ஆஸ்கார் விருதுகள்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்
ஏழாம் உலகம்
நான் கடவுள் விமர்சனம்


சுஜாதா

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்று ஒரு லிஸ்ட் என் பழைய ஃபைல்களை கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும்.

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என்று நினைக்கிறேன். நல்ல கதை.

கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதைகளும் நினைவு வருகின்றன.

கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றணன். அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை.

தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.

பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.

கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன.

திலீப் குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண்ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல்லக்கு
கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங்கராஜன் – செய்தி
ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங்கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண்டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
வண்ணதாசன் – நிலை:

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய மொழிகள்)
சிறுகதை வாரம்
ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2



எனக்கு பிடித்த இந்திய non-fiction எழுத்தாளர்களில் ராமச்சந்திர குஹாவுக்கு பெரிய இடம் உண்டு. அவரது “A Corner of the Foreign Field” கிரிக்கெட் பற்றி எழுதப்பட்ட மிக சிறந்த புத்தகங்களில் ஒன்று.

ஜெயமோகன் சமீபத்தில் இந்திய வரலாறு பற்றி படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று “காந்திக்கு பிந்திய இந்தியா” புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார். ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைத்தது. இப்போது கிழக்கு பதிப்பகம் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறதாம்.

புத்தகம் மிக நன்றாக இருந்தது. சுலபமான நடையில் சுவாரசியமாக எழுதப்பட்ட புத்தகம். காஷ்மீர், இந்திய-சீன எல்லை தகராறு, மொழிவாரி மாநில சீரமைப்பு போன்ற பல விஷயங்களை பற்றி அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. பல (எனக்கு) தெரியாத விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறார். உதாரணமாக ஆந்திர மாநிலம் அமையவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து இறந்த பொட்டி ஸ்ரீராமுலு பற்றி – ஐம்பது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்த பிறகுதான் ராஜாஜி அவரை அணுக முயற்சி செய்திருக்கிறார். ஆனானப்பட்ட ராஜாஜியே கோட்டை விட்ட விஷயம் இது. நேரு இறப்பதற்கு முன் ராஜாஜி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன் வைத்த ஒரு வழி மிக தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது – ஜம்மு, லடாக் இந்தியாவுக்கு; “ஆசாத் காஷ்மீர்” பாகிஸ்தானுக்கு; காஷ்மீர் பள்ளத்தாக்கு “சுதந்திர” நாடு, ஆனால் வெளிநாட்டு உறவும், ராணுவமும் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கூட்டாக பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அன்டோரா (விகி குறிப்பு) என்று ஒரு இத்துனூண்டு நாடு இப்படித்தான் ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ் நடுவில் இருக்கிறதாம். நேரு இறந்ததால் இதை மறந்துவிட்டார்கள்.

புத்தகத்தில் எனக்கு குறையாக படுவது டெல்லியின் கோணத்திலிருந்தே இந்திய வரலாற்றை பார்ப்பதுதான். இருந்தாலும் நல்ல புத்தகம், படிக்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனின் “வரலாற்றை வாசிக்க” பதிவு – முக்கியமான இந்திய வரலாற்று நூல்களை பற்றி.
ஜெயமோகனின் முக்கிய இந்திய வரலாற்று நூல் லிஸ்டில் இன்னொன்று – ராஜேந்திர பிரசாத்தின் At the Feet of Mahatma Gandhi
2009 பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் (குஹாவுக்கு பத்மபூஷன்)


தமிழ் சிறுகதைகளை பற்றி இங்கே மற்றும் இங்கே எழுதி இருந்தேன். இப்போது பிற இந்திய மொழிகள்.

தமிழுக்கு புதுமைப்பித்தன் என்றால் ஹிந்திக்கு பிரேம்சந்த். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். (இஸ்திஃபா (Resignation) கதையை படியுங்கள்) ஆனால் புதுமைப்பித்தன் போல நக்கல் அடிக்கமாட்டார். அவர் எழுதிய பல கதைகள் எனக்கு தேறும். நான் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில்தான். ஹிந்தியில் நான் எழுத்துக் கூட்டி படிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும். மொழிபெயர்ப்பில் கதையின் பிளாட் சரியாக வரலாம், ஆனால் பல nuances விட்டுப்போகும். அப்படி இருந்தும் அவரது கதைகளின் பிரமாதமான charm எனக்கும் புரிந்தது.

வழக்கம் போல எனக்கு கதை தலைப்புக்கள் நினைவிருப்பதும் இல்லை. ஆனால் மனைவியின் உடலை எரிக்க கிடைத்த பிணத்தில் குடிக்கும் மகனும் அப்பனும், வறுமையினால் விற்கப்படும் இரண்டு மாடுகள் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வரும் கதை, கடமையை செய்வதில் உறுதியாக நின்று வேலையை இழக்கும் சால்ட் இன்ஸ்பெக்டர், தனக்கே சாப்பாடு இல்லாவிட்டாலும் திண்ணையில் வந்து குந்தும் சாமியாருக்கு சாப்பாடு போடும் கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய பிரேம்சந்த் சிறுகதைகள் காப்பி எங்கே என்று தெரியவில்லை. அது கிடைக்கும்போது இவரைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

பிரேம்சந்த் சிம்பிளாக எழுதக் கூடியவர். அழகிரிசாமி, கி.ரா., பூமணி போன்றவர்கள் இவர் மாதிரி கதை எழுதுபவர்கள். அவருடைய கதையில் எல்லாம் வெட்ட வெளிச்சம். சிந்தனையை தூண்டும் தன்மை, சொல்லாமல் சொல்லும் தன்மை எதுவும் கிடையாது. அதே நேரத்தில் உபதேசம் எல்லாம் செய்யமாட்டார். அவர் கதைகள் வாழ்க்கையை, குறிப்பாக கிராம வாழ்க்கையை, அங்கங்கே ஃபோட்டோ பிடித்தது மாதிரி இருக்கும்.

அவருடைய கதைகள் பரவலாக காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன. வேறு பல கதைகளுக்கு தூண்டுதலாக அமைந்திருக்கின்றன. கல்கி அவரது சால்ட் இன்ஸ்பெக்டர் கதையை புது ஓவர்சீயர் என்று அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார். தங்கர் பச்சானின் வெள்ளை மாடு கதை அவரது இரண்டு எருமைகளின் கதையை நினைவுபடுத்துகிறது. (காப்பி இல்லை, inspiration ஆக இருக்கலாம்.) அவரது கதைகள் சாகாது.

அடுத்தபடி நினைவு வருபவர் மணிக் பந்தோபாத்யாய். வங்க மொழி எழுத்தாளர். மிக powerful கதைகள். அவர் கதைகளில் வருபவர்கள் ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள். Life courses through the characters in his stories. அவரது Primeaval என்ற கதை அவசியம் படிக்க வேண்டியது. ஒரு திருடன் திருடுகிறான், மாட்டிக் கொள்கிறான், தப்பித்து ஓடுகிறான், ஒரு கை போய்விடுகிறது, ஒரு பிச்சைக்காரியை சேர்த்துக் கொள்கிறான். இதெல்லாம் ஒரு கதையா? படித்தால்தான் புரியும். லிங்க் கொடுத்திருக்கிறேன், கட்டாயமாக படியுங்கள்.

இஸ்மத் சுக்டையின் உருது மொழி லிஹாஃப் என்ற கதை மிக அபாரமானது. பாரம்பரிய முஸ்லிம் குடும்பம். கணவனுக்கு பையன்கள்தான் வேண்டும். மனைவி என்ன செய்வாள்? இந்த கதையை எழுதியதற்கு அவர் மேல் ஆபாச கதை என்று கேஸ் போட்டிருக்கிறார்கள். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ஆர். கே. நாராயணின் A Horse and Two Goats என்ற கதையை படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது சில கதைகளில் நல்ல craft தெரிகிறது.

ஃபநீஸ்வர்நாத் ரேனு மிக அருமையான கதைகள் எழுதுபவர். அவர் எழுதுவது ஹிந்தியின் மிதிலா dialect. ரேணுவின் தீஸ்ரி கசம் கதை அதே பேரில் திரைப்படமாகவும் வந்தது. வேறு கதைகள் இப்போது ஞாபகம் வரவில்லை. என்னிடம் இருக்கும் புத்தகத்தை தேடித் பிடிக்க வேண்டும். சமீபத்தில் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவருக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் கலைத்துப்போட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை, ஹேமா கஷ்டப்பட்டு என்னை திட்டாமல் பொறுத்துக் கொண்டாள்.

சாதத் ஹாசன் மாண்டோ சிலாகிக்கப்படும் இன்னொரு எழுத்தாளர். உருது. அவரது டோபா டேக் சிங் பெரிதும் புகழப்படுகிறது. என் கண்ணில் சுமார்தான். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ரவீந்த்ரநாத் தாகூர் கவிதை எழுதி நோபல் பரிசு எல்லாம் வாங்கினார். அவர் பல நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு இப்போது ஞாபகம் வருவது காபூலிவாலா(ஹிந்தி படமாகவும் வந்தது), போஸ்ட்மாஸ்டர் (சத்யஜித் ரேயின் தோ கன்யா படத்தின் முதல் பகுதி), Hungry Stones என்ற கதைகள்தான். படிக்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. Hungry Stones கதை ஒரு gimmick என்றாலும் நல்ல craft உள்ள கதை. இவை கூடன்பர்க் தளத்தில் கிடைக்கும்.

அமேரிக்கா வந்த பிறகு – ஒரு 15-20 வருஷங்களாக – தமிழ் தவிர்த்த வேறு இந்திய மொழிப் புத்தகங்களை படிப்பது அற்றே போய்விட்டது. தமிழ் தெரியாத நண்பர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்கிக் கொடுத்தால் உண்டு. ரேனு, குல்சார், பிரேம்சந்த் புத்தகங்கள் எல்லாம் மனீஷ் ஷர்மா பரிசாகத் தந்தவை. அதே போல் அவனுக்கு தமிழ் புத்தங்களின் மொழிபெயர்ப்பை பரிசாகத் தருவதில் எனக்கு விருப்பம் உண்டு. வெகு அபூர்வமாகவே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. கடைசியாக கிடைத்தது ஒரு புளிய மரத்தின் கதை.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டியது மிக அவசியம். நானும் மனீஷுக்காக ஓரளவு தேடி இருக்கிறேன். புதுமைப்பித்தனின் சில கதைகள் கிடைத்தன. ஜெயகாந்தன் கிடைத்தார். (எனக்கு ஜெயகாந்தனைப் பற்றி உயர்வான எண்ணம் கிடையாது, அதனால் வாங்கவில்லை.) மொத்தமாக ஒரு நாலைந்து புத்தகம் கிடைத்திருந்தால் அதிகம்.

பொதுவாக சிறுகதைகளை விட நாவல்களை மொழிபெயர்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. ஏனோ தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு என்பது முக்கியமான கலை. அதுவும் இந்தியா மாதிரி செப்பு மொழி பதினெட்டுடையாள் நாட்டில் மிக மிக அவசியம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி ராம்நாத், த.நா. குமாரசாமி மாதிரி சிலர் இதை ஒரு சேவையாக செய்தார்கள். அவர்கள் மொழிபெயர்ப்புகள் மிக அருமையாக இருந்தன. இப்போது பாவண்ணன் மட்டுமே கன்னடத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்க்கிறார். அது சரி, தமிழர்கள் ஒரிஜினல் புத்தகங்களையே வாங்குவதில்லை, மொழிபெயர்ப்புதான் முழு நேர வேலை என்றால் மொழிபெயர்ப்பாளன் கதி அதோகதிதான்.

நீங்கள் படித்த பிற இந்திய மொழி சிறுகதைகள் பற்றி சொல்லுங்களேன்! நான் தேடிய காலத்தில் ஹிந்தி, வங்கம், கன்னடம், மலையாளம் ஓரளவு கிடைக்கும். ஆனால் அஸ்ஸாமீஸ், ஒரியா, மராத்தி, தெலுங்கு, உருது புத்தகங்கள் எல்லாம் சான்ஸ் இல்லை. (எண்டமூரி வீரேந்திரநாத்தை தவிர்த்து) இப்போது மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றனவா?

தொடர்புடைய பதிவுகள்
மணிக் பந்தோபாத்யாயின் Primeaval
இஸ்மத் சுக்டையின் லிஹாஃப் (Quilt)
சாதத் ஹாசன் மான்டோவின் டோபா டேக் சிங்
கூடன்பர்க் தளத்தில் தாகூரின் கதைகள்

சிறுகதை வாரம்
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் பகுதி 1, பகுதி 2
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.


முதல் பகுதி மிக நீளமாக போனதால் இரண்டாக பிரிக்க வேண்டியதாகிவிட்டது. முதல் பாகம் இங்கே. மற்ற கதைகளைப் பற்றி கீழே.

கு.ப. ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தவை திரை, கனகாம்பரம். கனகாம்பரம் உலகத் தரம் வாய்ந்த கதை. புதுசாய் கல்யாணம் ஆன கணவன் தன் மனைவியை தன நண்பர்களிடம் கலந்து பேசு, நாகரிக வாழ்க்கை வாழு என்று சொல்கிறான். உண்மையில் அவன் அதைத்தான் விரும்புகிறானா? திரையின் விதவை அக்கா ஒரு vicarious வாழ்க்கை வாழ விரும்புகிறாள்.

கு. அழகிரிசாமி ஒரு மாஸ்டர். சிறுகதை அவருக்கு கை வந்த கலை. அவருடைய ராஜா வந்திருக்கிறார், திரிவேணி போன்ற கதைகள் நிறைவை தருவன. ராஜா ஒரு கதையில் வீட்டுக்கு வருகிறார், ராமன் இன்னொரு கதையில் தியாகய்யர் வீட்டுக்கு வருகிறார். அன்பளிப்பு பலரும் சிலாகிப்பது. நானும்தான். உங்களை சுற்றி வரும் சிறுவர்களுக்கு பரிசு கொடுக்கிறீர்கள், ஆனால் சாரங்கனுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. அவன் இதை எப்படி எதிர்கொள்வான்?
இன்னும் கதைகள் உண்டு. அடுத்த பாகத்திலாவது தேறும் சிறுகதைகளின் முழு லிஸ்டையும் எழுத வேண்டும்.

கி. ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். அவருடைய பல கதைகள் தேறும். கோமதியில் ஒரு gay சமையல்காரன். மாய மானில் அரசு கொடுக்கும் மானியத்தை நம்பி கிணற்றில் மோட்டார் போட்டு கடனாளியாகும் ஒரு விவசாயி. கொத்தைப் பருத்தியில் நிலம் இல்லாத கலெக்டருக்கு பெண் கொடுக்க மறுக்கும் விவசாயி. ஜெயில் சிறுகதையில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சிறு குழந்தையுடன் விளையாடும் மாணவன், கதவு சிறுகதையில் ஜப்தி ஆன கதவில் இன்னும் ஆடும் சிறுவர்கள். இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும்.

சுந்தர ராமசாமியின் விகாசம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. ராவுத்தருக்கு கணக்கு தலைகீழ் பாடம். ஜவுளிக் கடையில் கூட்டம் நிறைந்து வழியும்போது முதலாளிக்கு அவர் இல்லாமல் பில் போட முடியவில்லை. ஆனால் ராவுத்தரின் அலட்டல் தாங்க முடியாமல் முதலாளி ஒரு கால்குலேட்டர் வாங்குகிறார். ராவுத்தர் என்ன செய்யப் போகிறார்?
ரத்னாபாயின் ஆங்கிலம் பேசப்படும், நல்ல சிறுகதை. பந்தா எப்படி எல்லாம் மாட்டி விடுகிறது?
பிரசாதம் கதையை படிக்கும் யாரும் ஒரு புன்முறுவல் செய்யாமல் இருக்க முடியாது. கான்ஸ்டபிளுக்கு பணம் வேண்டும். மாட்டிக் கொள்ளும் குருக்களிடம் லஞ்சம் கேட்கிறார். முதலில் பயப்படும் குருக்கள் பிறகு கொடாக்கண்டனாக மாறிவிடுகிறார். கான்ஸ்டபிள் என்ன செய்வார்?
ஊரார் பணத்தில் வாழும் கோவில் பண்டாரம், அவன் செலவில் வாழும் கிழவன். கிழவன் தனி ஆளாக கிணறு வெட்டுகிறான். இதுதான் கோவில் காளையும் உழவு மாடும் கதை. அருமை.
எனக்கு சீதை மார்க் சீயக்காய்த்தூள் மாதிரி ஒரு சிம்பிளான கதை என் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்கிறது.
இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

தி.ஜா.வின் கதைகளில் ஞாபகம் வருவது பாயசம், பரதேசி வந்தான், சிலிர்ப்பு. பாயசம் காட்டும் பொறாமை, பரதேசி வந்தானில் இருக்கும் அறச்சீற்றம், சிலிர்ப்பில் ஏற்படும் நிறைவு எல்லாமே அருமை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப்பிள்ளை ஒரு tour de force. குடும்ப உறவுகளின் சுயநலத்தை மிக தத்ரூபமக விவரிக்கிறது. Very powerful story. பெட்கி இன்னொரு அருமையான கதை. செக்ஸ் என்ற ஒரே ஆயுதம் மட்டுமே இருக்கும் இளம்பெண் அதை தயங்காமல் உபயோகிக்கிறாள்.

ஜெயகாந்தன் கதைகளில் எனக்கு பிடித்தது அக்னிப் பிரவேசம் மட்டுமே. யுகசந்தி, குருபீடம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ரிஷிமூலம் மாதிரி கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் எனக்கு சுமாராகத்தான் தெரிகின்றன.

அசோகமித்ரன் என்ற ஜீனியசை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் கதைகளை விவரிப்பது கஷ்டம். பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. வழக்கம் போல தலைப்பு ஞாபகம் இல்லை. உதாரணமாக திடீரென்று ஒரு கணத்தில் கார் ஓட்டுவது கைவந்துவிடும் கதை. இந்த லிஸ்டும் அடுத்த பகுதியில்தான் முழுமை செய்ய வேண்டும்.

லா.ச.ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தது பூரணி. பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் ஒரு முறை எழுதினர். பூரணிதான் பூமி. – இல்லை இல்லை ப்ரித்வி. பூமியைப் போல பொறுமை வாய்ந்த குடும்பத் தலைவி. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.

அப்புறம் அம்பை. எல்லாரும் சொல்லும் அம்மா ஒரு கொலை செய்தால் கதை எனக்கு வெறும் cliche ஆக தெரிகிறது. எனக்கு பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. விவரிப்பது கஷ்டம். மல்லுக்கட்டு – மிக subtle ஆக பெண் அடக்கப்படுவதையும் அவள் போதும் என்று எழுந்திருப்பதையும் எழுதி இருப்பார்.

பாலகுமாரன் சில அபாரமான சிறுகதைகளை ஆரம்ப காலத்தில் எழுதி இருக்கிறார். சின்ன சின்ன வட்டங்கள் இன்றும் பேசப்படும் கதை. வேலை போய் கையில் காசில்லாமல் படும் அவதி மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும். நெட்டி பொம்மைகள் கதையில் எல்லாருடனும் படுக்கும் ஒரு துணை நடிகைக்கு இருக்கும் தைரியமும், நல்ல நிலையில் இருக்கும் இரு மத்திய வர்க்க “முற்போக்கு” எழுத்தாளர்களின் பயமும் நன்றாக வந்திருக்கும். எந்தக் கரை பச்சை கதையில் சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்யும் மச்சினனை அடுத்தவரின் indirect disapproval எப்படி தன் மன்னி மேல் எரிந்து விழ வைக்கிறது என்பதுதான் கரு.

வண்ணநிலவனின் எஸ்தர் பேசப்படும் கதை. காரணத்துடன்தான் பேசப்படுகிறது. அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

கிருஷ்ணன் நம்பி. மருமகள் வாக்கு சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

தங்கர் பச்சானின் குடி முந்திரி, வெள்ளை மாடு இரண்டும் நல்ல கதைகள். குடி முந்திரியில் நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார். வெள்ளை மாடு மாட்டுக்கும் மனிதனுக்கும் அமையும் உறவு பற்றி. பிரேம்சந்தின் ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.

ஜெயமோகனின் ஜீனியஸ் சிறுகதைகளை விட நாவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பித்தம் – ரசவாதத்தை தேடி அலையும் ஒரு பண்டாரம், அசோகமித்ரனின் ஒரு கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது; அவதாரம் – பலம் வாய்ந்த ரௌடியை கைசண்டையில் ஜெயிக்கும் ஊனமுற்றவன்; கடைசி வரை சிறுகதை – சீரழிந்து போனாலும், விபச்சாரமே செய்தாலும் பரவாயில்லை, ஆனால் தங்கை வேற்று ஜாதிக்காரனை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் மாணிக்கம் கவுண்டர், இதே கருவை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன்; மாடன் மோட்சம் – ஒரு நாட்டார் தெய்வம் classical ஹிந்து மதத்தில் ஐக்கியமாவது; ஊமைச் செந்நாய் – ஒடுக்குபவனின் உதவியை நிராகரிக்கும் அடிமை; இந்த மாதிரி சில சிறந்த கதைகள் இருக்கின்றன.

தமயந்தி என்ற அவ்வளவாக தெரியாத எழுத்தாளர் எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அனல் மின் மனங்கள். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பச ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது?

ஏ.ஏ.ஹெச்.கே. கோரி எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அவன் அவள் இவன். “இவன்” “அவளுக்காக” அவளை பணத்துக்காக கைவிட்ட முறைப்பையன் “அவனுக்கு” கடிதம் எழுதித் தருகிறான். அப்படியே ரூட் போடுகிறான். கடிதம் பிரமாதமா எழுதப்பட்டு “அவன்” திரும்பி வந்து “அவளை” கல்யாணம் செய்து கொள்ள ரெடி!

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு கதை எனக்கு பிடித்தமானது. Very well crafted. சாகியின் சிறுகதைகளை நினைவுபடுத்துவது. பேய்க்கதை. விவரிக்க முடியாது, அதுதான் ஒரே கஷ்டம். பேரும் நினைவில்லை.

கடைசியாக சுஜாதா – நல்ல சிறுகதையை நான் தெரிந்துகொண்டது இவர் மூலமாகத்தான். பொதுவாக ஸ்ரீரங்கத்து கதைகள் அபாரமானவை. எனக்கு பிடித்தவை பேப்பரில் பேர் (கிரிக்கெட் விளையாடும் சுஜாதா), சீனு (ஏமாற்றும் நகரத்துப் பெண்). நிஜத்தை தேடி என்ற கதையும் பிடிக்கும். தான் சொன்னது தவறு என்று ஒத்துக்கொள்ள முடியாத கணவன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள்.

சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் – பகுதி 1

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்


எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. அடுத்த பாகம் எப்ப வரும் எப்டி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

அனேகமாக இதுவே – முதல் பகுதியே – பெரிய போஸ்டாக இருக்கும். பெரிய போஸ்ட்களைப் பார்த்தாலே எனக்கு மனச்சோர்வு ஏற்படும். எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

லிஸ்ட் கீழே:
ஏ.ஏ.ஹெச்.கே. கோரி – அவன் அவள் இவன்
அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
அசோகமித்திரன் – பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்தக் கரை பச்சை
தமயந்தி – அனல் மின் மனங்கள்
திலீப் குமார் – கடவு, கடிதம்
ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம்
ஜெயமோகன் – பித்தம், அவதாரம், கடைசி வரை, மாடன் மோட்சம், ஊமை செந்நாய்
கி. ராஜநாராயணன் – கோமதி, மாய மான், கொத்தைப் பருத்தி, ஜெயில், கதவு
கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
கு. அழகிரிசாமி – ராஜா வந்திருந்தார், திரிவேணி, அன்பளிப்பு
கு.ப.ரா. – திரை,கனகாம்பரம்
லா.ச.ரா. – பூரணி
எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
பட்டுக்கோட்டை பிரபாகர் – ?
புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக் கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை
சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
சுஜாதா – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
சுந்தர ராமசாமி – விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய்த்தூள்
தங்கர் பச்சான் – குடி முந்திரி, வெள்ளை மாடு
தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம்
வண்ணநிலவன் – எஸ்தர்
யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்

பதிவின் நீளத்தைக் குறைக்க இந்த முறை புதுமைப்பித்தன் மட்டும். அடுத்த பாகத்தில் மற்றவர்களைப் பற்றி.

தமிழ் சிறுகதைகளில் பல சாதனையாளர்கள் உண்டு, ஆனால் இன்னும் புதுமைப்பித்தனை யாரும் தாண்டவில்லை. எனக்கு ஒரு பத்து பனிரண்டு கதைகள் தேறும்.

நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை.

அதற்கு மிக அருகே உள்ள கதை சுப்பையா பிள்ளையின் காதல்கள். தாம்பரத்திலிருந்து தினமும் ட்ரெயினில் போகும் சுப்பையா பிள்ளையின் கால் மேல் ஒரு இளம் பெண்ணின் கால் தற்செயலாக படுகிறது. அவ்வளவுதான் கதை.

அப்புறம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும். சிவ பெருமான் கந்தசாமி வீட்டுக்கு விசிட் அடிக்கிறார். புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. ஒரு நாள் கழிந்தது கதையில் வரும் சிறு பெண்ணும் அப்படித்தான்.

அப்புறம் சாப விமோசனம், பொன்னகரம். சீதையை ராமன் தீக்குளிக்க சொன்னது தெரிந்தால் அகலிகையின் கதி என்ன? பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது.

புதிய கூண்டு, துன்பக் கேணி இரண்டும் உணர்ச்சிகரமான கதைகள். கஷ்டப்படும் குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் காலேஜில் சேருகிறார்கள். அண்ணன் கிருத்துவப் பெண்ணை காதலித்து மதம் மாறி கல்யாணமும் செய்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அம்மா அவுட். அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை. அற்புதமாக எழுதப்பட்ட கதை. துன்பக் கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம்.

செல்லம்மாள் இன்னொரு அருமையான கதை. புருஷன் கண்ணெதிரில் செல்லம்மாள் செத்துக் கொண்டிருக்கிறாள், இதுதான் கதை. இன்னொருவர் கண்ணெதிரில் சாவதைப் பற்றி மகா மசானம் என்ற இன்னொரு கதையும் உண்டு.

கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது. ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை.

ஒரு நாள் கழிந்தது கதையில் முருகதாசர் அன்றைக்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொள்கிறார். அதற்கு ஆயிரம் வெட்டி பந்தா.

அப்புறம் காலனும் கிழவியும். கிழவியை அழைத்துப் போக வரும் யமதர்மன் கடைசியில் தன் பாசக்கயிற்றை விட்டுவிட்டுப்போகிறான். மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

அப்புறம் சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதையில் கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் சக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான்.

எனக்கு இன்னும் பிடிபடாத, ஆனால் பரவலாக பேசப்படும் கதை சிற்பியின் நரகம்.

என் Reference-களையும் கொடுத்துவிடுகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் காஞ்சனை (என் லிஸ்டில் வராது), கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், செல்லம்மாள் ஆகியவற்றை தன் 100 சிறந்த தமிழ் சிறுகதை லிஸ்டில் தேர்வு செய்திருக்கிறார். ஜெயமோகன் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றரவு, செல்லம்மாள், சிற்பியின் நரகம், கபாடபுரம், ஒரு நாள் கழிந்தது, அன்றிரவு, சாமியாரும் குழந்தையும் சீடையும், காலனும் கிழவியும், சாப விமோசனம், வேதாளம் சொன்ன கதை (என் லிஸ்டில் வராது), பால்வண்ணம் பிள்ளை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கிறார். ஜெயமோகன் லிஸ்டில் பாதி அடையாளம் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை புதுமைப்பித்தன் சிறுகதைகளை புரட்டிப் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய பதிவுகள்:
சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்


தோன்றியதைப் பற்றி எல்லாம் ஜல்லி அடித்துக் கொண்டிருக்கிறேன். அமார்த்ய சென்னிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை வரை ஒரே அவியலாக இருக்கிறது. ஒரு சேஞ்சுக்காக ஒரே ஒரு விஷயம் பற்றி focus செய்யலாம் என்று எண்ணம். இந்த வாரம், சிறுகதை வாரம். சிறுகதைகளை பற்றி மட்டும் எழுதப் போகிறேன். என்ன எழுதப் போகிறேன் என்று இது வரை எனக்கே தெரியாது. 🙂

சிறுகதை என்றால் என்ன என்று பெரிய பெரிய மேதைகளே வரையறுக்க குழம்புகிறார்கள். சிலர் சைஸை வைத்து வரையறுக்கிறார்கள். பத்து பக்கம் இருந்தால் சிறுகதையா? 25 பக்கம்? 50 பக்கம்? எத்தனை பக்கம் இருந்தால் சிறுகதையிலிருந்து கொஞ்சம் பெருகதைக்கு மாறுகிறது? (இந்த இடத்தில் எப்படியாவது அருகதை என்று எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன், அப்புறம் படிப்பவர்கள் பாவம் என்று விட்டுவிட்டேன்) நான் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அதிலெல்லாம் படம் போட்டு பாகங்களை குறித்த பிறகும் கதை பத்து பக்கத்தை தாண்டாது. இருபது பக்க “சிறுகதையே” எனக்கு கொஞ்சம் கஷ்டம். 🙂 ஆனால் டிக்கன்ஸ் சிறுகதை எழுதினால் ஒரு ஐம்பது பக்கம் போகும். ஜோஸஃப் கான்ராடின் Heart of Darkness படிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். என் கண்ணில் அது சிறுகதைதான். அது ஒரு 70 பக்கம் இருக்கம். பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டின் முதல் இரண்டு மூன்று decade-களில் எழுதப்பட்ட கதைகள் பொதுவாக நீளமாக இருக்கின்றன.

சிலர் சிறுகதை ஒரு moment -ஐ, ஒரு நக்மா-வை, (நக்மாவுக்கு நல்ல தமிழ் வார்த்தை யாராவது சொல்லுங்கப்பு!) காட்டுவதுதான் சிறுகதை என்று சொல்கிறார்கள். (நக்மாவை காட்டினால் அல்லது நக்மா காட்டினால் அது சிறுகதை இல்லை, சினிமா என்று யாராவது கடிப்பதற்கு முன் ஹிந்தியில் நக்மா என்றால் ஒரு moment என்று சொல்லிவிடுகிறேன். அது moment-உக்கும் கொஞ்சம் மேலே, உருது வார்த்தைகளுக்கு உள்ள ஒரு charm அதில் இருக்கிறது.) அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் நல்ல உதாரணம். ஆனால் புதுமைப்பித்தனின் ஒரு கதை – பேர் ஞாபகம் வரவில்லை, கூடுவிட்டு கூடு பாயும் நன்னய பட்டன்? என்று நினைக்கிறேன் – பல யுகங்களை கடக்கிறது. அதுவும் நல்ல கதைதான்.

பெரிய பெரிய மேதைகளே தடுமாறும்போது நான் எதற்கு கஷ்டப்பட வேண்டும்? யாரோ ஒருவர் போர்னோக்ராஃபி பற்றி சொன்னது நினைவு வருகிறது. அதை என்னால் வரையறுக்க முடியாது, ஆனால் பார்த்தால் எது போர்னோ, எது இல்லை என்று தெரியும் என்று சொன்னாராம். சிறுகதைக்கும் அந்த வரையறைதான் சரிப்பட்டு வரும். எந்த வரையறைக்கும் விதிவிலக்குகள் காட்ட முடியும். ஆனால் பார்த்தால் இது சிறுகதையா, குறுநாவலா, நாவலா என்று தெரியும்.

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த சிறுகதை ஆசிரியர்கள்/கதைகள் – உடனடியாக தோன்றுபவை – சாகி, எம்.ஆர். ஜேம்சின் பேய்க்கதைகள், ஓ. ஹென்றியின் சில கதைகள், பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில ஜாக் லண்டன் கதைகள், சில பி.ஜி. வுட்ஹவுஸ் கதைகள், வெகு சில அசிமோவ், உர்சுலா லி க்வின் கதைகள் பிடிக்கும். பெரிதாக பேசப்படும் ஹாதொர்ன், எட்கார் ஆலன் போ (Purloined Letter, Gold Bug, Pit and the Pendulum பிடிக்கும்), சாமர்செட் மாம், மார்க் ட்வேய்நின் சிறுகதைகள் எல்லாம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

இந்திய மொழிகளில் ஹிந்தியில் பிரேம்சந்த். மிக அற்புதமான சிறுகதைகள். மணிக் பந்தோபாத்யாயின் வங்காளச் சிறுகதைகளில் பல மிகவும் சக்தி உள்ளவை. மைதிலியோ, போஜ்புரியோ என்னவோ ஒன்றில் எழுதிய ஃபனீஸ்வர்நாத் ரேணு அருமையாக எழுதுவார். வேறு யாரும் எனக்கு தெரியவில்லை. இஸ்மத் சுக்டை, சாதத் ஹாசன் மாண்டோ, கிருஷ்ண சந்தர் மாதிரி எல்லாம் பேர் நினைவு வந்தாலும் எந்த கதையும் நினைவு வரவில்லை. மற்றவர்களின் நாவல்கள்தான் நினைவு வருகின்றன.

தமிழில்தான் நான் ஓரளவு சிறுகதைகளை படித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதை வடிவத்தை ஜீரணித்து பல வருஷம் ஆயிற்று. இத்தனைக்கும் நூறு வருஷமாகத்தான் சிறுகதைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. புதுமைப்பித்தன் ஒரு ஜீனியஸ். அவர் சிறுகதைகள், கட்டுரைகள் மட்டுமே எழுதினர். கு.ப.ரா. அருமையான கதைகளை எழுதி இருக்கிறார். அசோகமித்திரன் தமிழின் இன்னொரு ஜீனியஸ். அவருக்கு சிறுகதை கை வந்த கலை. கு. அழகிரிசாமி சிறுகதையின் மாஸ்டர். கி.ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். ஈகோவை வைத்து மிக subtle-ஆன கதைகளை எழுதும் சா. கந்தசாமி, அன்றைய காலகட்டத்தின் நியாய அநியாயங்களை எடுத்து வைத்த ஜெயகாந்தன், மிக சுவாரசியமான கதைகளை வணிக இதழ்களுக்காக எழுதிய கல்கி, தேவன், சுஜாதா, ஒரு காலத்தில் மிக அபாரமான சிறுகதைகளை எழுதிய பாலகுமாரன், மிக குரிவாகவே எழுதினாலும் மறக்க முடியாத கதைகளை எழுதிய ஜி. நாகராஜன், திலீப் குமார், வெளுத்து வாங்கும் அ. முத்துலிங்கம், நாவல்கல் அளவுக்கு வராவிட்டாலும் நல்ல சிறுகதைகளை எழுதும் ஜெயமோகன் என்று மணிக்கொடி காலத்திலிருந்து இன்று வரை லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

உங்களுக்கு என்ன சிறுகதைகள் பிடித்திருந்தது? உங்களை பாதித்த சிறுகதைகள் ஏதாவது உண்டா? சிறுகதைகளை பற்றி உங்கள் எண்ணம் என்ன? சும்மா நானே பேசுவதை விட எல்லாரும் பேசினால் நன்றாக இருக்குமே!

நீங்கள் எழுதிய சிறுகதை எதையாவது இங்கே பதிக்க விரும்புகிறீர்களா? (எனக்கு பிடித்தால்தான் பதிப்பேன்.)

பக்ஸ், சேதுராமன் நீங்கள் யாராவது இதைப் பற்றி எழுத விரும்புகிறீர்களா?

தொடர்புடைய பதிவுகள்:

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு