முதல் பகுதி மிக நீளமாக போனதால் இரண்டாக பிரிக்க வேண்டியதாகிவிட்டது. முதல் பாகம் இங்கே. மற்ற கதைகளைப் பற்றி கீழே.
கு.ப. ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தவை திரை, கனகாம்பரம். கனகாம்பரம் உலகத் தரம் வாய்ந்த கதை. புதுசாய் கல்யாணம் ஆன கணவன் தன் மனைவியை தன நண்பர்களிடம் கலந்து பேசு, நாகரிக வாழ்க்கை வாழு என்று சொல்கிறான். உண்மையில் அவன் அதைத்தான் விரும்புகிறானா? திரையின் விதவை அக்கா ஒரு vicarious வாழ்க்கை வாழ விரும்புகிறாள்.
கு. அழகிரிசாமி ஒரு மாஸ்டர். சிறுகதை அவருக்கு கை வந்த கலை. அவருடைய ராஜா வந்திருக்கிறார், திரிவேணி போன்ற கதைகள் நிறைவை தருவன. ராஜா ஒரு கதையில் வீட்டுக்கு வருகிறார், ராமன் இன்னொரு கதையில் தியாகய்யர் வீட்டுக்கு வருகிறார். அன்பளிப்பு பலரும் சிலாகிப்பது. நானும்தான். உங்களை சுற்றி வரும் சிறுவர்களுக்கு பரிசு கொடுக்கிறீர்கள், ஆனால் சாரங்கனுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. அவன் இதை எப்படி எதிர்கொள்வான்?
இன்னும் கதைகள் உண்டு. அடுத்த பாகத்திலாவது தேறும் சிறுகதைகளின் முழு லிஸ்டையும் எழுத வேண்டும்.
கி. ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். அவருடைய பல கதைகள் தேறும். கோமதியில் ஒரு gay சமையல்காரன். மாய மானில் அரசு கொடுக்கும் மானியத்தை நம்பி கிணற்றில் மோட்டார் போட்டு கடனாளியாகும் ஒரு விவசாயி. கொத்தைப் பருத்தியில் நிலம் இல்லாத கலெக்டருக்கு பெண் கொடுக்க மறுக்கும் விவசாயி. ஜெயில் சிறுகதையில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சிறு குழந்தையுடன் விளையாடும் மாணவன், கதவு சிறுகதையில் ஜப்தி ஆன கதவில் இன்னும் ஆடும் சிறுவர்கள். இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும்.
சுந்தர ராமசாமியின் விகாசம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. ராவுத்தருக்கு கணக்கு தலைகீழ் பாடம். ஜவுளிக் கடையில் கூட்டம் நிறைந்து வழியும்போது முதலாளிக்கு அவர் இல்லாமல் பில் போட முடியவில்லை. ஆனால் ராவுத்தரின் அலட்டல் தாங்க முடியாமல் முதலாளி ஒரு கால்குலேட்டர் வாங்குகிறார். ராவுத்தர் என்ன செய்யப் போகிறார்?
ரத்னாபாயின் ஆங்கிலம் பேசப்படும், நல்ல சிறுகதை. பந்தா எப்படி எல்லாம் மாட்டி விடுகிறது?
பிரசாதம் கதையை படிக்கும் யாரும் ஒரு புன்முறுவல் செய்யாமல் இருக்க முடியாது. கான்ஸ்டபிளுக்கு பணம் வேண்டும். மாட்டிக் கொள்ளும் குருக்களிடம் லஞ்சம் கேட்கிறார். முதலில் பயப்படும் குருக்கள் பிறகு கொடாக்கண்டனாக மாறிவிடுகிறார். கான்ஸ்டபிள் என்ன செய்வார்?
ஊரார் பணத்தில் வாழும் கோவில் பண்டாரம், அவன் செலவில் வாழும் கிழவன். கிழவன் தனி ஆளாக கிணறு வெட்டுகிறான். இதுதான் கோவில் காளையும் உழவு மாடும் கதை. அருமை.
எனக்கு சீதை மார்க் சீயக்காய்த்தூள் மாதிரி ஒரு சிம்பிளான கதை என் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்கிறது.
இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.
தி.ஜா.வின் கதைகளில் ஞாபகம் வருவது பாயசம், பரதேசி வந்தான், சிலிர்ப்பு. பாயசம் காட்டும் பொறாமை, பரதேசி வந்தானில் இருக்கும் அறச்சீற்றம், சிலிர்ப்பில் ஏற்படும் நிறைவு எல்லாமே அருமை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப்பிள்ளை ஒரு tour de force. குடும்ப உறவுகளின் சுயநலத்தை மிக தத்ரூபமக விவரிக்கிறது. Very powerful story. பெட்கி இன்னொரு அருமையான கதை. செக்ஸ் என்ற ஒரே ஆயுதம் மட்டுமே இருக்கும் இளம்பெண் அதை தயங்காமல் உபயோகிக்கிறாள்.
ஜெயகாந்தன் கதைகளில் எனக்கு பிடித்தது அக்னிப் பிரவேசம் மட்டுமே. யுகசந்தி, குருபீடம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ரிஷிமூலம் மாதிரி கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் எனக்கு சுமாராகத்தான் தெரிகின்றன.
அசோகமித்ரன் என்ற ஜீனியசை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் கதைகளை விவரிப்பது கஷ்டம். பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. வழக்கம் போல தலைப்பு ஞாபகம் இல்லை. உதாரணமாக திடீரென்று ஒரு கணத்தில் கார் ஓட்டுவது கைவந்துவிடும் கதை. இந்த லிஸ்டும் அடுத்த பகுதியில்தான் முழுமை செய்ய வேண்டும்.
லா.ச.ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தது பூரணி. பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் ஒரு முறை எழுதினர். பூரணிதான் பூமி. – இல்லை இல்லை ப்ரித்வி. பூமியைப் போல பொறுமை வாய்ந்த குடும்பத் தலைவி. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.
அப்புறம் அம்பை. எல்லாரும் சொல்லும் அம்மா ஒரு கொலை செய்தால் கதை எனக்கு வெறும் cliche ஆக தெரிகிறது. எனக்கு பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. விவரிப்பது கஷ்டம். மல்லுக்கட்டு – மிக subtle ஆக பெண் அடக்கப்படுவதையும் அவள் போதும் என்று எழுந்திருப்பதையும் எழுதி இருப்பார்.
பாலகுமாரன் சில அபாரமான சிறுகதைகளை ஆரம்ப காலத்தில் எழுதி இருக்கிறார். சின்ன சின்ன வட்டங்கள் இன்றும் பேசப்படும் கதை. வேலை போய் கையில் காசில்லாமல் படும் அவதி மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும். நெட்டி பொம்மைகள் கதையில் எல்லாருடனும் படுக்கும் ஒரு துணை நடிகைக்கு இருக்கும் தைரியமும், நல்ல நிலையில் இருக்கும் இரு மத்திய வர்க்க “முற்போக்கு” எழுத்தாளர்களின் பயமும் நன்றாக வந்திருக்கும். எந்தக் கரை பச்சை கதையில் சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்யும் மச்சினனை அடுத்தவரின் indirect disapproval எப்படி தன் மன்னி மேல் எரிந்து விழ வைக்கிறது என்பதுதான் கரு.
வண்ணநிலவனின் எஸ்தர் பேசப்படும் கதை. காரணத்துடன்தான் பேசப்படுகிறது. அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.
கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.
கிருஷ்ணன் நம்பி. மருமகள் வாக்கு சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.
தங்கர் பச்சானின் குடி முந்திரி, வெள்ளை மாடு இரண்டும் நல்ல கதைகள். குடி முந்திரியில் நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார். வெள்ளை மாடு மாட்டுக்கும் மனிதனுக்கும் அமையும் உறவு பற்றி. பிரேம்சந்தின் ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
ஜெயமோகனின் ஜீனியஸ் சிறுகதைகளை விட நாவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பித்தம் – ரசவாதத்தை தேடி அலையும் ஒரு பண்டாரம், அசோகமித்ரனின் ஒரு கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது; அவதாரம் – பலம் வாய்ந்த ரௌடியை கைசண்டையில் ஜெயிக்கும் ஊனமுற்றவன்; கடைசி வரை சிறுகதை – சீரழிந்து போனாலும், விபச்சாரமே செய்தாலும் பரவாயில்லை, ஆனால் தங்கை வேற்று ஜாதிக்காரனை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் மாணிக்கம் கவுண்டர், இதே கருவை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன்; மாடன் மோட்சம் – ஒரு நாட்டார் தெய்வம் classical ஹிந்து மதத்தில் ஐக்கியமாவது; ஊமைச் செந்நாய் – ஒடுக்குபவனின் உதவியை நிராகரிக்கும் அடிமை; இந்த மாதிரி சில சிறந்த கதைகள் இருக்கின்றன.
தமயந்தி என்ற அவ்வளவாக தெரியாத எழுத்தாளர் எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அனல் மின் மனங்கள். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பச ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது?
ஏ.ஏ.ஹெச்.கே. கோரி எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அவன் அவள் இவன். “இவன்” “அவளுக்காக” அவளை பணத்துக்காக கைவிட்ட முறைப்பையன் “அவனுக்கு” கடிதம் எழுதித் தருகிறான். அப்படியே ரூட் போடுகிறான். கடிதம் பிரமாதமா எழுதப்பட்டு “அவன்” திரும்பி வந்து “அவளை” கல்யாணம் செய்து கொள்ள ரெடி!
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு கதை எனக்கு பிடித்தமானது. Very well crafted. சாகியின் சிறுகதைகளை நினைவுபடுத்துவது. பேய்க்கதை. விவரிக்க முடியாது, அதுதான் ஒரே கஷ்டம். பேரும் நினைவில்லை.
கடைசியாக சுஜாதா – நல்ல சிறுகதையை நான் தெரிந்துகொண்டது இவர் மூலமாகத்தான். பொதுவாக ஸ்ரீரங்கத்து கதைகள் அபாரமானவை. எனக்கு பிடித்தவை பேப்பரில் பேர் (கிரிக்கெட் விளையாடும் சுஜாதா), சீனு (ஏமாற்றும் நகரத்துப் பெண்). நிஜத்தை தேடி என்ற கதையும் பிடிக்கும். தான் சொன்னது தவறு என்று ஒத்துக்கொள்ள முடியாத கணவன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள்.
சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.
தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் – பகுதி 1
சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்
சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.
இந்த வாரம் சிறுகதை வாரம்