உப்பிலி ஸ்ரீனிவாஸ் உட்பட்ட பலர் கக்கன் பற்றிய பல விவரங்களை வைத்யநாத ஐயர் பதிவில் கொடுத்திருந்தார்கள். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

கக்கன் 1910-இல் பிறந்தவர். அவரது குரு வைத்யநாத ஐயரை விட இருபது வயது இளையவர். தலித் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கோவில் பூசாரி. மதுரைக்கு பக்கத்து கிராமமான தும்பைப்பட்டியில் பிறந்தவர். வைத்யநாத ஐயர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார். 38-இல் சொர்ணம் பார்வதி என்பவரோடு கல்யாணம் நடந்திருக்கிறது.

முதன் முதலாக அவர் பேர் அடிபட்டது மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தின்போது என்று நினைக்கிறேன். வைத்யநாத ஐயரும் கோபாலசாமி என்பவரும் முன்னால் நின்று இந்த ஆலயப் பிரவேசத்தை நடத்தி இருக்கிறார்கள்.

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் ஜெயில். அப்போது பயங்கர அடியாம். 1946 மத்திய சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1952 தேர்தலில் எம்.பி. 1957 தேர்தலில் எம்.எல்.ஏ., அமைச்சர். பொதுப்பணித்துறை, விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன் என்று ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டினாராம். ஜாதிக் கலவரத்தை திறமையாக அடக்கினார் என்று இங்கே படித்தேன். – “சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர்.” அவர் டம்மி அல்ல, டோக்கன் தலித் தலைவர் இல்லை என்று விஜயன் சொல்கிறார். வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டாம்.

தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர். கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.

கக்கன் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தது என்று இங்கே படித்தேன். முதலில் கக்கன் காங்கிரஸ் தலைவராக இருந்தாரா இல்லை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக இருந்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியை வெளியே அனுப்பியாயிற்று. மிஞ்சி இருந்த ராஜாஜி ஆதரவாளர்கள் கூட – சி.எஸ். உட்பட – காமராஜை தலைவராக ஏற்றுக் கொண்டாயிற்று. அப்புறம் ஏது கோஷ்டி?

கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே.​ சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.​

அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல்,​​ மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம். ராஜன் சொல்கிறார் – அவரது தம்பி விஸ்வநாதன் கக்கனுக்கு சென்னையில் வேலை கிடைத்து வேலைக்குச் சேருவதற்காக அண்ணன் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறார். இது அரசு வீடு என் உறவினர்கள் தங்கக் கூடாது இரவு மட்டும் போலீஸ்காரர் தங்கும் அவுட்போஸ்டில் இருந்து விட்டு காலையில் வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் மந்திரி கக்கன். ஆனால் உப்பிலி ஸ்ரீனிவாஸ் இது சம்பந்தி என்று குறிப்பிடுகிறார். (ஒரு வேளை இரண்டு பேரையும் வீட்டில் தங்கக் கூடாது என்று சொன்னாரோ என்னவோ. என்னைப் பொறுத்த வரை இது கிறுக்குத்தனம்.)

1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார்.​ ​ ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார்.​ எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார்.​ நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார்.​ சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார்.​எம்.ஜி.ஆர். ​முதலமைச்சராக இருந்த போது,​​ தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும்,​​ இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது. 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.​ மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார்.​ உடனே கக்கனுக்கு தனியறை வசதியும்,​​ தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடைய எளிமைக்கும் நேர்மைக்கும் பல உதாரணங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.

பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை.​ தன்னுடைய இனத்தைக் கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை,​​ ​ சுரண்டியதுமில்லை.​ இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர். இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்தமிழ் சுட்டி – கக்கனின் எளிமைக்கும் நேர்மைக்கும் பல சம்பவங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.
கக்கன் பற்றிய இன்னொரு சுட்டி
கக்கன் பற்றிய விக்கி குறிப்பு