நான் ப்ளஸ் டூ முடிக்கும்போது எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு வருமான வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். வெறும் வாயையே மெல்லக் கூடிய கலைஞர் அடித்தது சான்ஸ் என்று “போராடினார்”. எம்ஜிஆர் நமக்கு எதற்கு வம்பு என்று என்று வருமான வரம்பை நீக்கினார். கலைஞரை விட தான்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் நண்பன் என்று காட்டுவதற்காக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32%இலிருந்து 50%ஆக இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். மொத்த இட ஒதுக்கீட்டை 50% இலிருந்து 68% சதவிகிதம் ஆக்கினார். கரெக்டாக அந்த வருஷம் ப்ளஸ் டூ முடித்த எனக்கு எஞ்சினியரிங் சீட் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் தனியார் கல்லூரிகள் கிடையாது. இட ஒதுக்கீட்டை பற்றி எனக்கு என்ன கருத்து இருந்திருக்கும் என்று நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்.
என் அதிர்ஷ்டம் அடுத்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை ரொம்ப கஷ்டம். அடுத்த வருஷம் எனக்கு வெயிட்டிங் லிஸ்டில் சீட் கிடைத்தது. ஆனால் போன ஒரு மாதத்தில் நான் ஒரு டாப் மாணவன் என்பதும் இருந்ததில் 90% பேரை விட சிறந்த மாணவன் என்றும் சந்தேகமற தெரிந்தது. என் கணக்கு ஆசிரியர் சீனியர்களிடம் எல்லாம் போய் இந்தப் பையன் ஒரு மகா அறிவாளி என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்தார். (எல்லாம் முதல் வருஷம் மட்டும்தான், அடுத்த வருஷத்திலிருந்து சராசரிக்கு மேற்பட்ட மாணவன், ஆனால் டாப் மாணவன் எல்லாம் இல்லை. படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது) ஆனால் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் – என்ன கொடுமை சரவணன் ரேஞ்சுக்கு இது என்னை யோசிக்க வைத்தது.
எனது ரூம் மேட்கள் நால்வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மூன்று பேர் கவுண்டர்கள். நான்காமவன் தங்கமணிமாறன். தி.க. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன். என்ன ஜாதி என்று தெரியாது. உயிர் நண்பன். ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கிறோம். துணி, செருப்பு, பணம் எல்லாம் அனுமதி கேட்காமல் பகிர்ந்து கொள்ளலாம். “ஏண்டா எடுத்தே” என்று திட்டினால் “போடா மயிரு” என்று சொல்லிவிட்டு போகலாம். அவன் அப்பா அரசு ஊழியர். அதனால் அவனுக்கு சீட் கிடைத்ததே தவிர ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. ஒரு வேளை ஓபன் கோட்டாவிலேயே சீட் கிடைத்ததோ என்னவோ – இப்போது நினைவில்லை.
இன்னொரு நல்ல நண்பனின் அப்பா பெரிய வியாபாரி. அப்போதே கார் எல்லாம் இருந்தது. ஆனால் அவன் “வருமானம்” ஸ்காலர்ஷிப் வாங்கவும் தகுதி உடையது. மாறனோ கஷ்டப்பட்டான். தேவை உள்ளவர்களுக்கு ஸ்காலர்ஷிப் இல்லை, ஒரு தேவையும் இல்லாதவர்கள் சுலபமாக ஸ்காலர்ஷிப் வாங்கலாம் என்ற நிலைய கண்கூடாக பார்த்தேன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் எல்லாமே பம்மாத்து வேலை என்ற முடிவுக்கு சுலபமாக வர முடிந்தது. மாறனிடம் இந்த இரண்டு விஷயத்தையுமே வைத்து வாதிடுவேன். இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் திறமை உள்ளவர்களை அமுக்குகிறது, சரியான இடத்தில் உதவி போய் சேருவதில்லை என்று சொல்வேன். அவனாலும் ஒன்றும் சொல்ல முடியாது.
மாறனின் தி.க. தாக்கமோ, இல்லை எனக்கே தோன்றியதோ தெரியாது – பின்னால் எனக்கு இந்த கேள்விகள் தோன்றின.
1. படித்து முடித்து எங்கோ மின் வாரியத்திலோ, இல்லை பொது பணித்துறையிலோ வேலை செய்ய ப்ளஸ் டூவில் எழுபது மார்க் வாங்கினால் என்ன, எண்பது மார்க் வாங்கினால் என்ன?
2. மார்க் திறமையை முடிவு செய்ய சரியான கருவியே இல்லை – நான் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து வந்தவன், என் காலேஜில் மிக திறமையான மாணவன். ஆனால் ப்ளஸ் டூவில் என் மார்க் பல பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விட கம்மிதானே? அப்புறம் 98% வாங்கியும் நான் முற்படுத்தப்பட்டவன், எனக்கு சீட் கிடைக்கவில்லை என்று புலம்புவானேன்? 98%க்கும் 92%க்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா?
3. என் செட்டில் பிராமணர்கள் நிறைய பேர் இருந்தார்கள் – நிச்சயமாக 3% இல்லை. (3% என்றால் ஆறு பேர்தான் இருந்திருக்க வேண்டும்) ஒரு பத்து பதினைந்து % இருந்தார்கள் – அதாவது 32% ஒப்பன் கோட்டாவில் இது கிட்டத்தட்ட 40%. அப்படி என்றால் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் சரியான வாதமே அல்ல.
4. ஒரு பையன் ரெயில்வே போர்ட்டரின் பையன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் இல்லாமல் அவன் படித்திருக்கவே முடியாது. அவனை மாதிரி ஒரு இட ஒதுக்கீடு ஒரு 10% சதவிகிதம் பேருக்கு சரியான முறையில் போய் சேர்ந்திருக்கலாம். 68% ஒதுக்கீட்டில், 10% சரியாக பயன்பட்டது என்றால் low efficiencyதான். ஆனால் ஒரு அரசு செயல்பாட்டில் இதுவே அதிகம் efficient என்று தோன்றுகிறது.
நகர்ப்புறங்களிலிருந்து வருபவர்களுக்கு கிராமப்புற மாணவர்களை விட exposure அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கிராமப்புறத்தார்களை விட குறைவாகத்தான் discriminationஐ அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு டபிள் அட்வான்டேஜ் ஆக இருக்கிறது. உண்மையில் கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். ஒரு ஐம்பது வருஷங்களுக்காவது தரப்பட வேண்டும்.
எல்லா பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டவை அல்ல. கவுண்டர்களை சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், நாடார்கள், செட்டியார்கள் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களா? இவர்கள் ஆதிக்க சாதிகள்; பணக்கார சாதிகள். என் கருத்தில் தலித்களுக்கும், பழங்குடிகளுக்கும் மட்டுமே நீண்ட காலம் இட ஒதுக்கீடு தரவேண்டும். மற்றவர்களுக்கு ஒன்று இரண்டு ஜெநேரஷன்களுக்கு தரலாம். ஆனால் இது அரசியல் ரீதியாக சாத்தியம் அல்ல.
அரசியல் ரீதியாக ஒன்றுதான் சாத்தியம் – எல்லா ஜாதிகளையும் மெதுவாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் சேர்க்க வேண்டும். அதனால் பிள்ளைமார், கோனார், ரெட்டியார், நாயக்கர், யார் யார் எல்லாம் இப்போது பிற்படுத்தப்பட்ட ஜாதி லிஸ்டில் இல்லையோ அவர்கள் எல்லாரையும் சேர்க்கும் முயற்சிய நான் ஆதரிக்கிறேன். அப்புறம் இட ஒதுக்கீட்டுக்கு இரண்டு மூன்று ஜெனரேஷன்களில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்! :-))
பின் குறிப்பு: தமிழ் நாட்டில் 3%தான் பிராமணர்கள் என்பது திராவிட இயக்கங்களின் மதிப்பீடு. திராவிட இயக்கங்கள் பிராமணர்களை பற்றி உண்மைதான் பேசுவார்கள் என்று அவர்களே கூட நம்புவதில்லை. உண்மையில் எத்தனை சதவிகிதம்? யாருக்காவது தெரியுமா? பிராமண சங்கத்தின் மதிப்பீடு என்ன என்று தெரிந்தால் அதற்கும் 3%க்கும் நடுவில் ஒரு சதவிகிதத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஜனவரி 3, 2009 at 2:47 முப
//என் செட்டில் பிராமணர்கள் நிறைய பேர் இருந்தார்கள் – நிச்சயமாக 3% இல்லை. (3% என்றால் ஆறு பேர்தான் இருந்திருக்க வேண்டும்) ஒரு பத்து பதினைந்து % இருந்தார்கள் – அதாவது 32% ஒப்பன் கோட்டாவில் இது கிட்டத்தட்ட 40%. அப்படி என்றால் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் சரியான வாதமே அல்ல.//
நீங்கள் கூறும் புள்ளிவிவரம் என்ன சொல்கிறதென்றால், பிராமணர்கள் ஒடுக்கப்பட்டதையும் மீறித்தான் தங்கள் திறமையால் மட்டும் மேலே வந்தார்கள். நான் ஏற்கனவே எனது ஒரு பதிவில் பின்னூட்டத்தில் கூறியுள்ளேன்.
“கற்கல் நன்றே கற்கல் நின்றே பிச்சைப் புகினும் கற்கல் நன்றே என்றே நாங்கள் (பிராமணர்கள்) படித்து வந்திருக்கிறோம். குருவுக்கு உடலால் பணிவிடை செய்து அவர் இஷ்டப்பட்ட போது பாடம் கேட்டு உயிரைக் கொடுத்துப் படித்தவர்கள் நாங்கள். ஒரு போதும் கல்வியை இலவசமாகப் பெற்றதில்லை. அவ்வாறுப் பெறும் வித்தைக்குப் பலனில்லை என்பதும் எங்கள் நம்பிக்கை.
20-ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்டத் தேங்கிய நிலையில் இருந்த உலகம் இப்போது வருடத்துக்கு வருடம் பிரமிக்கத்தக்க முன்னேற்றம் பெற்று வருகிறது. 70 தலை முறையாக மற்றவர் தூங்கி விட்டு இப்போது நாங்கள் தேங்கி நிற்க வேண்டும் என்று கூறினால் அவ்வாறு நிற்பதற்கு நாங்கள் என்னக் கேனைகளா”? பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_17.html
நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேர்ந்தபோது முதலாம் ஆண்டில் 280 பேர் இருந்தனர். அதில் 150 பேர் பார்ப்பனர்கள். அதற்கென்ன இப்போது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜனவரி 3, 2009 at 3:52 முப
டோண்டு அவர்களே,
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும். முப்பாட்டன் செய்த தவறுகளுக்கு நான் பொறுப்பில்லை என்று நீங்கள் நினைப்பதும் எனக்கு தெரியும். பிறகு முப்பாட்டன் நன்றாக படித்ததால் உங்கள் பேரன்களும் நன்றாக படிப்பார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?
உங்கள் முப்பாட்டனுக்கு படிக்க வாய்ப்பு இருந்தது – ஒரு “பறையனுக்கு” உங்கள் முப்பாட்டன் காலத்தில் படிக்க என்ன வாய்ப்பு இருந்தது? ஒரு மறவனுக்கும், சானானுக்கும் வாய்ப்புகள் எழுபது தலைமுறைகளாக இல்லாவிட்டாலும் ஒரு ஏழு தலைமுறைகளாவது மறுக்கப்பட்டன அல்லவா? இல்லை திறமை என்று எதை கூறுகிறீர்கள்? நகர்ப்புறத்தில் உங்கள் பேரன் 98% சதவிகிதம் வாங்குவதை விட ஒரு போர்ட்டரின் மகன் 80% வாங்குவது திறமை இன்மை என்று நான் நினைக்கவில்லை.
எழுபது தலைமுறைகளாக தூங்கினார்கள் என்று சொன்னீர்கள். அவர்கள் தூங்கியதற்கு முழு பொறுப்பும் அவர்களுடையதுதானா?
இட ஒதுக்கீடு பிரமணர்களுக்கு நல்ல விஷயம் இல்லை என்பது விவாதிக்க வேண்டிய கருத்து இல்லை – எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் சமூகத்தை பொறுத்த வரை அவ்வளவு மோசமான கருத்தும் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு அரசாங்கத்துக்கு சமூகத்தின் ஒரு பகுதியை முன்னேற்ற வேண்டும் என்று நினைக்க எல்லா உரிமையும் உண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருச்சி மாவட்டத்தை விட ஓர் அரசாங்கம் அதிகமாக செலவழிக்கலாம். அது திருச்சி மாவட்டத்துக்கு நஷ்டம்தான் – ஆனால் அரசின் பார்வையில் ஏழை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். பாம்பு பிடித்து வாழும் இருளர் கூட்டத்துக்கு ஏழை பிராமண அர்ச்சகர்களை விட அதிக சலுகைகள் அளிக்கப்படலாம். அது தவறு என்று சொல்ல முடியுமா?
அமேரிக்காவில் செய்வதால் இந்தியாவிலும் செய்ய வேண்டியதில்லை – ஆனால் அமெரிக்காவிலும் affirmative action உண்டு என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
// நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேர்ந்தபோது முதலாம் ஆண்டில் 280 பேர் இருந்தனர். அதில் 150 பேர் பார்ப்பனர்கள். அதற்கென்ன இப்போது? // இது சமீபத்தில் 1963-இல் பிராமணர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை குறிப்பிடுகிறதா, இல்லை பிராமணர்களாக பிறந்ததவர்களில் புத்திசாலிகள் மற்ற ஜாதியினரை விட அதிகம் என்பதை குறிப்பிடுகிறதா? என்னுடைய கருத்து என்ன என்று நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்களும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பார்ப்பவர் இல்லை என்று எனக்கு தெரியும். 🙂
ஜனவரி 3, 2009 at 1:19 பிப
எனக்கு இந்த பதிவு பிடித்திருக்கிறது..இது பற்றி விவாதிக்க வேண்டும்..
நன்றி
ஜனவரி 3, 2009 at 1:48 பிப
//எழுபது தலைமுறைகளாக தூங்கினார்கள் என்று சொன்னீர்கள். அவர்கள் தூங்கியதற்கு முழு பொறுப்பும் அவர்களுடையதுதானா//
Nor is it that of Brahmins and they are being discriminated against.The socalled backward castes have done a lot of Vankodumai and definitely their reservation eats into our chances. That is what I see.
Regards,
Dondu N. Raghavan
ஜனவரி 3, 2009 at 3:10 பிப
// Nor is it that of Brahmins and they are being discriminated against.The socalled backward castes have done a lot of Vankodumai and definitely their reservation eats into our chances. //
I too have mentioned that the many of the backward castes aren’t really backward and do not deserve reservation. // எல்லா பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டவை அல்ல. … //
ஜனவரி 3, 2009 at 3:48 பிப
நன்றி, அர டிக்கெட்!
மார்ச் 18, 2009 at 7:42 பிப
வணக்கம்!
இட ஒதுக்கீடு தேவையா என்பது பற்றி விவாதிப்பதை விட பிந்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கவேண்டும். அதன் மூலமே அவர்கள் முன்னேற முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து. பிந்தங்கிய நிலையில் உள்ளவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படி யாராவது கருதினால் அவர்கள் மனிதர்களாகவே இருக்கமுடியாது.
பிரச்சனைகளை அனுகும் பொழுது நடுநிலையுடன் அடிப்படை காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டிருந்தால் இந்தியா சுதந்திரமடைந்த 20 ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கும்.ஆனால் நாடு சுதந்திரம் அடைந்த பொழுது இருந்த பல பிரச்சனைகளால் உடனடியாக திட்டம் தீட்ட இயலாது என்பதால், தற்காலிக நிவாரணமாக “இட ஒதுக்கீடு” கொண்டு வரப்பட்டது. பிந்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் கிராமப்பகுதிகளில்தான் உள்ளனர்.பெரும்பான்மையான கிராமங்களில் ஆரம்ப பள்ளிக்கூடங்கள் கூட இல்லாத நிலையில், இட ஒதுக்கீட்டால் கிடைத்த பலன் மிக மிக சொற்பமே. திரு.காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, ஒரு மாவட்டத்திற்கு காரில் சென்றார், அந்த ரோட்டின் இருபக்கமும் கிராமங்கள். சிறுவர்கள் கும்பல் கும்பலாக ஆடு மாடுகளை மேய்ப்பதை கண்டு காரை நிறுத்திவிட்டு அச்சிறுவர்களை
அழைத்து “பள்ளிக்கூடம் போகாமல் ஏன் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கீங்க” என கேட்டதற்கு “எங்க கிராமத்தில் பள்ளிக்கூடமே கிடையாது” என்று அவர்கள் பதில் சொல்ல, சமாளித்துக்கொண்டு “சரி பள்ளிக்கூடம் கட்டித்தந்தா போவீங்களா?” என திரும்பவும் கேட்டிருக்கிறார். ” பள்ளிக்கூடம் போனால் யாரு சோறு போடுவாங்க? ஆடு மேய்ச்சால் ஆட்டுக்காரர் சோறு போடுவார். ஆடு குட்டி போட்டால் ஒரு குட்டியும் தருவார்.” என சூப்பராக பதில் சொல்ல, காமராஜருக்கு ஒரு உண்மை புலப்பட்டது. இவர்களின் முனேற்றத்திற்கு கல்வி வசதிதான் அடிப்படையான தேவை என முடிவு செய்து கல்விப்புரட்சியை உடனடியாக துவங்கினார். 300 பேர் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கு
ஒரு ஆரம்ப பாடசாலை என 30,000 பள்ளிக்கூடங்கள், மதிய உணவு, ஆசிரியர் பயிற்சி பள்ளி என துவக்கப்பட்டன. மீதி பகுதியுடன் மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி
திரவிய நடராஜன்
மார்ச் 20, 2009 at 8:58 முப
திரவிய நடராஜன்,
காமராஜை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் மறுமொழி வந்தது. முன்னால் ஜனாதிபதி ஆர்வியும் நீங்கள் சொன்ன விஷயத்தை சொல்லி இருப்பதை பார்த்திருப்பீர்கள்.
மார்ச் 20, 2009 at 4:00 பிப
வணக்கம்!
இட ஒதுக்கீடு விசயத்தில் என் அழுத்தமான கருத்தை ஏற்லனவே திரு அரிகரன் அவர்கள் தனது ” அரிகரனின் உலகங்கள்” என்ற வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார். பிளாக் முகவரி; http;’//harimakesh,blogspot.com அந்த பதிவை கீழே கொடுத்துள்ளேன்
நன்றி
Sunday, July 27, 2008
(191) பகுத்தறிவு தமிழகத்தில் இடஒதுக்கீடு தந்த பலன்
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டினால் பகுத்தறிவு வற்றாது ஓடும் சமூகநீதியை அரசியல் திராவிட பெத்தடின் கொள்கைக் கட்சிகளின் ஆட்சிகள் நிலை நாட்டிவிட்டதாக புருடா விடப்படுவது அறிந்ததே.
சில நாட்கள் சமீபத்தில் சக பதிவர் தனது பதிவில் மருத்துவக் கல்லூரி இடங்களில் முதல் 300மதிப்பெண்களால் தமிழ்நாட்டில் இருக்கும் 69% இடஒதுகீட்டினால் மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்பட்டு விட்டு இந்தியாவுக்கே முன்மாதிரியாகைவிட்டதாகச் சொல்லியிருந்தார்.
நான் பின்னூட்டமாக அந்தப்பதிவில், “மருத்துவக்கல்லூரி சேர்க்கை லிஸ்ட்டில் தெரிவிக்கப்படும் ஜாதியை மட்டும் வைத்து சமூகநீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது” உண்மையில் ஜாதிச் சான்றிதழ் சார்ந்த இட ஒதுக்கீட்டு வெற்றி என்பது பம்மாத்து என்பதாக கருத்து தெரிவித்திருந்தேன்
கல்வி, அரசு வேலைக்கான ஜாதிச் சான்றிதழ் விற்பனைத் திருவிழா கொண்டாட்டம் ஆண்டுதோறும் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்பு ஆரம்பமாகும் ஜூன் மாதத்தில் உச்சத்தில் இருக்கும்.
நிதர்சனத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு பாயும் தமிழகத்தினை பகுத்தறிவற்று வேத ஆகமப்படி பரந்த கோவில்கள் கட்டி அரசாண்ட சோழர் / பல்லவர்-பாண்டியர் வழித்தோன்றலாகவும் இருந்துகொண்டே பிற்படுத்தப்பட்டவராக, தமிழக அரசியல் களத்தில் முனைப்பில் இருந்து, கடின உழைப்பால் நூறாண்டுகள் நின்ற மரங்களை வெட்டி சாலையெங்கும் வீழ்த்தி சுயமாக மிகவும் பிற்படுத்திக்கொண்டுவிட்ட சமூகமாக இருந்துகொண்டே ஆதி திராவிடரை / பழங்குடியினரை வெறுத்தாலும் …
தமிழகத்தில் ஆட்சி செய்யும் / அதிகாரத்தில் இருக்கும் பகுத்தறிவு பெத்தடின் ஏற்றும் அரசியல் திராவிட கழக உறுப்பினர் அட்டை இருந்தால் தமிழ்நாட்டில் 69% சமூகநீதி நிலவிடச் செய்யும் “இட ஒதுக்கீட்டு ஜாதிச் சான்றிதழ் ஏஜெண்ட்” ஆவது எளிது.
தமிழகத்தில் 2008-09 ஆண்டு 70,000 பொறியியல் கல்வி இடங்கள் அரசு கோட்டாவில் இருக்கிறது. அரசு தனியாருக்கு ஏற்படுத்தித் தந்திருக்கும் கல்விச் சந்தையில் 50%மானேஜ்மெண்ட் கோட்டா 70,000 இடங்கள் இருக்கின்றது.
இந்த 70-85,000இடங்களுக்கான டொனேஷன் தொகை என்பது தமிழக்த்திலே ஜாதியை அறவே ஒழித்துவிட்டு, சமூகநீதிப்படி பகுத்தறிவோடு இயங்கும் அரசியல் திரா”விட” பெத்தடின் அரசு ஆசிர்வாதத்தில் ஓப்பன் கேட்டகிரிக்கு 5-9லட்சம் , பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 3-5 லட்சம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (இந்நாள் அரசியல்வாதிகள்/முன்னாள் அரச வம்சத்தினர்)2-3 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இடஒதுக்கீட்டு சான்றிதழ் ஏஜண்ட்டுக்குத் தரவேண்டியது ரூ. 5000/- கல்லூரி கேபிடேஷன் தொகை ரூ இரண்டு முதல் நாலு லட்சம் வரை சேமிப்பு!
எனவே சாதியை முற்றிலும் ஒழித்துவிட்ட புரட்(டு)சி /வீரபூமியான தமிழகத்தில் இட ஒதுக்கீடு தேவையுள்ள அனைவரும் இந்த இடஒதுக்கீட்டு சான்றிதழ் விற்பனையைப் பயன்படுத்தி கல்வியில் மேம்படவும்.
பகுத்தறிவு தமிழகத்தில் இட ஒதுக்கீடு தரும் பலன்
`சாதிகள் இல்லையடி பாப்பா!’ என்று பாடிய சுப்பிரமணிய பாரதிக்கு சாதிச் சான்றிதழ்! அதுவும் பிற்படுத்தப்பட்டவர் என்று!
என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப்படவோ அதிசயிக்கவோ இதில் எதுவுமே இல்லை… உங்களிடம் காசிருந்தால் போதும் நீங்கள் விரும்பும் ஜாதியில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். அவ்வளவு ஏன்? உங்களுக்குப் பிறக்காத குழந்தை முதல் மூன்று தலைமுறைக்கு முன் மறைந்த உங்கள் மூதாதையர் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த சாதியிலும் நீங்கள் இடஒதுக்கீடு பெறலாம்.
அப்படித்தான் பாரதியாருக்கும் வகுப்பு மாறி இடம் ஒதுக்கப்பட்டது. பாரதி மறைந்து எண்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்பு, `புதுப்பேட்டையில் இருக்கிறார். அவருக்கு ஜாதி கிடையாது. ஆனால் சான்றிதழ் வேண்டும்!’ என்று நாம் கேட்ட இரண்டாவது நாளே நாடார் சமூகத்தில் அவரைச் சேர்த்து நம்மை பிரமிக்க வைத்துவிட்டனர்!
நிஜமான தகவல்களைச் சொல்லி, நியாயமான சான்றிதழைக் கேட்டால் பெறுபவரை நேரில் வரச்சொல்லி, பிறப்புச் சான்றிதழில் என்ன ஜாதி? பள்ளிக்கூட சான்றிதழில் என்ன ஜாதி? விலாசத்தை உறுதிப்படுத்த, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் நகல் என பலவற்றைக் கேட்டு பாடாய்ப்படுத்தும் அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் மட்டும் எதுவுமே கேட்காமல் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவதன் காரணம்தான் நமக்குப் புரியவில்லை.
பாரதியார் பெயரில் இந்த கம்யூனிட்டி சர்டிஃபிகேட் வாங்க நாமும் பெரிதாக ஒன்றும் சிரமப்படவில்லை.சில ஆயிரங்களை இடைத்தரகரிடம்இழந்தோம். அவ்வளவுதான். கொஞ்சம் சிரமப்பட்டது பொருத்தமான புரோக்கரை கண்டுபிடிக்க மட்டும்தான்.
அதற்காக, அந்த அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் நம் விசாரணையைத் தொடங்கி அலைந்து கொண்டிருந்ததை அவர்களும் கண்காணித்திருக்க வேண்டும். கொஞ்சம் சோர்ந்து ஒரு மரநிழலில் சற்று ஒதுங்கிய நேரத்தில் கரெக்டாக வந்தார் ஆஜானுபாகுவான அந்த ஆள்.
“சாருக்கென்ன, சாதி சர்டிஃபிகேட் வேணுமா?” என்று சம்மன் இல்லாமல் அவர் ஆஜராக, அப்பொழுதே நம் முயற்சியில் பாதி முடிந்துவிட்ட மாதிரிதான்!
“எந்த புரூஃபும் இல்லாம `பி.சி.’ சர்டிஃபிகேட் வேணும்னா சார்ஜ் ஜாஸ்தியாகும். நாளும் முன்ன பின்ன ஆகும்! சரின்னா ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் குடுங்க! வேலை முடிஞ்சதும் மீதி!” என்று நேரிடையாகவே அவர் மேட்டருக்கு வர, நமக்கு கொஞ்சம் தயக்கம்தான்! ஆனாலும் காசைக் கொடுத்துட்டு, சான்றிதழுக்கான விவரங்களை ஒரு துண்டுக் காகிதத்தில். `சி. சுப்பிரமணிய பாரதி, தந்தை பெயர் சின்னசாமி என்று மட்டும் எழுதிக் கொடுத்தோம். நாம் என்ன எழுதினோம் என்பதைப் பற்றி அந்த புரோக்கர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
பிளாட்ஃபாரத்து பெட்டிக்கடையில் ஒரு ஃபார்ம் வாங்கினார். அதை நிரப்புவதற்கு ஒருவரிடம் கொடுத்தார். அழுக்கு மூட்டையாய் நின்ற மற்றொருவரிடம் கோர்ட் ஃபீஸ் ஸ்டாம்ப் வாங்கினார். பின் நம்மைப் பார்த்து, “ரெண்டு நாள் கழிச்சு வாங்க! எல்லாம் ரெடியா இருக்கும்!” என்று சொன்னவர், அடுத்த நிமிஷம் எங்கே போனார்னே தெரியலை. அந்த புரோக்கரின் நேர்மையை உறுதிப்படுத்த இன்னும் சில புரோக்கர்களிடம் விசாரித்தோம். `பர்ஃபெக்ட் பார்ட்டி’ன்னு பலரும் சர்டிஃபிகேட் தந்தனர்.
ரெண்டு நாள் கழிச்சு சொன்னமாதிரி நாமும் அங்கே போக, வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போடுவதற்குள் அதே ஆள் கையில் சர்டிஃபிகேட்டுடன் நின்றார். சர்டிஃபிகேட்டைப் பார்த்தால் சி.சுப்பிரமணியன் என்றிருந்தது. “`பாரதி,’ எங்கய்யா?”ன்னு கேட்க, “அதென்னங்க பெரிய விஷயம்!”னு போனவர் பத்தே நிமிடத்தில் சுப்பிரமணிய பாரதியின் பெயரில் பிற்படுத்தப்பட்டோருக்கான முறையான சான்றிதழுடன் வந்தார். அதைப் பார்த்ததும் நம் கண்களையே நம்மால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்ததும்தான் தெரிந்தது சின்னச்சாமி என்ற தகப்பனார் பெயரை சின்னராஜ் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தது. அதையும் மாற்ற முடியுமா என புரோக்கரைத் தேடினோம். பார்ட்டி எஸ்கேப்.
புரோக்கருக்கு பாரதியைத் தெரியாமல் இருக்கலாம். கையெழுத்துப்போட்ட அதிகாரிக்குமா சந்தேகம் வந்திருக்காது! `இவர்கள் பாரதியை மறந்துவிட்டார்களா? அல்லது பணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்கள் நினைவில் இல்லையா?’
`இந்த அலுவலகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கிறதா? இல்லை எல்லா இடத்திலும் இதுதான் நிலைமையா?இதையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்ள மற்றொரு இடத்திற்குச் சென்றோம்…
பாரதி சினிமாவுக்குப் பாட்டெழுதியிருந்தால் ஒருவேளை இவர்களுக்கு நினைவிருந்திருக்கலாம். அதனால் இம்முறை ஒரு சினிமா பிரபலத்தின் பெயரில் சாதிச் சான்றிதழ் பெற்றுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்… ஸ்ரேயா, அசின் என்றால் நாற்பதைத் தாண்டிய புரோக்கர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பளிச்சென்று ஞாபகத்துக்கு வராது! அதனால் குஷ்பு பெயரைத் தேர்வு செய்தோம்…
இது இரண்டாவது அனுபவம் என்பதால் வேலை சுலபமாகவே இருந்தது. புரோக்கர் கேட்டதைவிட, `ஐநூறு ரூபாய் அதிகம் தருகிறோம்; அவசரம்!’ என்று நாம் சொன்னதும் வேலைகள் விரைந்து நடந்தன. அந்த அவசரத்தில் குஷ்பு_சுந்தர் என நாம் எழுதிக் கொடுத்ததை எப்படிப் புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. சுந்தரைத் தகப்பனார் என்று மாற்றிவிட்டனர். சாதியையும் அவர்கள் சவுகரியத்திற்கு மறவர் என முடிவு செய்து கொண்டனர்.
சாதியும், முறையும் எப்படி இருந்தால் என்ன, தவறு செய்கிறார்களா? இல்லையா? என்பதுதான் முக்கியம் என்று நாமும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனாலும் பேச்சுக்கு, “இந்த சர்டிஃபிகேட் ஒரிஜினல்தானா?” என்று கேட்டோம்.
“இது செல்லாத இடம் ஒன்று இந்தியாவில் இல்லை! என்னவொன்று இதனுடைய நகலை மட்டும் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்திவிடுவோம்!” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார்கள். இதைச் செய்ய தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஓர் அமைப்பாகவே செயல்படுகிறார்களாம்.
ஆக, பாரதியார் நாடார் ஆவதும்; குஷ்பு மறவர் ஆவதும் இவ்வளவு எளிது என்றால், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடெல்லாம் யாருக்காக? எதற்காக? எதுவாயினும், விற்கப்படுவது சான்றிதழ் அல்ல சமூக நீதி என்பதைப் புரிந்துகொண்டு, அதன் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!.
மார்ச் 21, 2009 at 4:05 முப
திரவியம் நடராஜன்,
சிந்தனையை தூண்டும் விஷயம். நல்ல நோக்கங்கள் இப்படி நடைமுறையில் தவறாக பயன்படுத்தப்படுவது மிக மோசமான விஷயம்.
ஆனால் என்னுடைய கருத்தில் இட ஒதுக்கீடு ஒரு 20% சரியாக பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்வேன். அரசாங்க திட்டங்களில் இதுவே அதிகம் efficient ஆக இருக்கக் கூடும்.