ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த புத்தகம். ஒன்றுக்கு இரண்டு காப்பி வேறு கை வசம். இன்று தூக்கம் வராமல் புரட்டினேன்.
மனிதர் ஜீனியஸ். சந்தேகமே இல்லை.
அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.
கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.
பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட மென்மையான, subtle, மேன்மையான நகைச்சுவை.
எண்பதுகளில் என் படிப்பு என்ற பதிவில் ஒரு அசோகமித்திரன் கதையை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது இந்த நாவலின் ஒரு பகுதி என்று தெரிந்து கொண்டேன். அதிசயமான தற்செயல்!
தொடர்புடைய பிற பதிவுகள்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்
பின் குறிப்பு: ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை.
ஜூன் 21, 2009 at 9:45 முப
படித்ததுண்டு. ஆனால் அவ்வளவு சுவாரசியம் தரவில்லை.
ஜூன் 21, 2009 at 11:10 முப
எழுத்தாளர் R.V. யின் படைப்புகளைப் படித்ததுண்டா?.குமுதம் 60-70 களில் வளர்த்த எழுத்தாளர்களில் ஒருவர்.”மிலாட்”போன்ற தொடர்கதைகள் இவரது எழுத்துக்களில் அப்போது குமுதத்தில் தொடர்ந்து வெளிவந்தன. ஐம்பதுகளில் கண்ணன் போன்ற சிறுவர் மாத இதழ்களில் இவர் சிறுவர் தொடர்கதைகளை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். இப்போது பூவுலகவாசியாக இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை!. அவரைப் பற்றி உங்களைவிட்டால் வேறு யார் எழுதுவார்கள். முயற்சி செய்யுங்களேன்!
ஜூன் 21, 2009 at 11:17 முப
P.V.R ஐ R.V. என்று குறிப்பிட்டு விட்டேன். தேன்மழை, தேன்கிண்ணம் ஆனது போல! :). ஆனால் கண்ணன் சிறுவர் மாத இதழ்களில் எழுதியவர் R.V.யா, P.V.R ஆ?. வயதானார்கள் விவரம் சொல்லலாம். R.V அளவிற்கு வயது ஆகி இருந்தால் கூட போதும்.
ஜூன் 22, 2009 at 1:45 முப
புகழினி,
ஒற்றன் பற்றிய பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
ஜூன் 22, 2009 at 5:46 முப
கண்ணன் இதழின் ஆசிரியர் ஆர்.வி. என்ற
திரு ஆர்.வெங்கடராமன் அவர்கள்.. இவரே
கலைமகளின் துணை ஆசிரியரும் கூட..
கலைமகள் காரியாலயத்தின் மாடியில்
இருந்த ஒரு அறையில் கி.வா.ஜ., தி.ஜ.ர.
எம்.எஸ்.செல்லம் அய்யர், ச.கு.கணபதி
அய்யர், கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஆர்.வி. எல்லோரையும்
பார்க்கலாம். அந்த கும்பலில் ஆர்.வி.மட்டும்
சினிமா ஹீரோ மாதிரி இருப்பார். கலைமகள்
போலவே இவரும் மைலாப்பூர் வாசியாகவே
இருந்து, பின்னர் தான் தி.நகருக்குக்
குடியேறினார். ஆகஸ்ட் 2008ல் காலமாகி
விட்டார் ஆர்.வி. இவர் எனக்குத் தெரிந்து
குமுதத்தில் நாவல்கள் எழுதவில்லை.
குமுதத்தில் எழுதியவர், பி.வி.ஆர். என்ற
பி.வி.ராமகிருஷ்ணன் அவர்கள்..நான்
படித்ததில்லை – அவரது நண்பர்கள் அவர்
எழுதிய நாவல்களுள் சிறந்தது ‘ஒடும்
மேகங்களே!’ என்று சொல்கிறார்கள்.
இவரும் 2006ல் காலமாகி விட்டார்.
ஜூன் 22, 2009 at 10:17 முப
Thanks! sethuraman! 🙂
ஜூன் 22, 2009 at 10:31 பிப
சேதுராமன்,
நானும் நல்லதந்தியுடன் சேர்ந்து விளக்கத்துக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கலைமகள் ஆசிரியர் குழுவில் இடம் பெற வேண்டுமென்றால் இனிஷியல்களை மட்டுமே பேராக வைத்துக்கொள்ள வேண்டும் போல இருக்கிறதே? கி.வா.ஜ., தி.ஜ.ர., கா.ஸ்ரீ.ஸ்ரீ., ஆர்.வி…
ஜூன் 25, 2009 at 2:00 முப
அசோகமித்ரனின் சென்னை பற்றிய குறிப்பு புத்தகம் ஒன்று உண்டு. படித்து பாருங்கள். நீங்கள் சொல்வதுபோல மெல்லிய நகைச்சுவையோடும் எழுத்துகளில் அசோகமித்ரனுக்கு முதன்மை இடம் உண்டு.
ஒக்ரோபர் 8, 2009 at 4:06 முப
2006 இருந்து , வருடம் ஒருமுறை படித்துவிடுவேன் … திகட்டாத தித்திக்கும் பால்கோவா …