வாரப் பத்திரிகைகளை படித்து வளர்ந்த எல்லாருக்கும் தெரிந்த பேர் மணியன் செல்வன். அவருடைய அழகிய ஓவியங்களை பார்க்காத தமிழர்கள் குறைவே. பொன்னியின் செல்வனுக்கு இவர் தந்தை மணியம் வரைந்த ஓவியங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சிவகாமியின் சபதத்திற்கு இவர் வண்ணத்தில் வரைந்த ஒவியங்கள் நினைவிருக்கலாம். அவருடைய ரேடியோ ப்ரோக்ராம் பற்றி சமீபத்தில் தகவல் கொடுத்திருந்தோம். அந்த ரேடியோ ப்ரோக்ராமில் தெரிந்து கொண்ட ஒரு விஷயம் – அவரும் ஒரு ப்ளாக் எழுதுகிறார். அதை இங்கே காணலாம்.

ம.செ.வின் அப்பாவும் பெரிய ஓவியர். அவர் பெயர்தான் மணியம்.

ஏதோ கதையைக் கொடுத்து ஒரு ஓவியம் வரைய சொல்வார்கள், இவர்களும் வரைந்து கொடுப்பார்கள் என்றுதான் நான் வாரப் பத்திரிகை ஓவியர்களைப் பற்றி நினைத்திருந்தேன். அதில் எவ்வளவு வேலை இருக்கிறது, எத்தனை பிளானிங் இருக்கிறது, ஒரு ஓவியருக்கு என்னென்ன பொறுப்பு இருக்கிறது என்று மிகவும் அழகாக விளக்கினார். ப்ரோக்ராமை மிஸ் செய்துவிட்டாலும் ஆர்கைவிலாவது கேளுங்கள்!

மணியன் செல்வனுக்கு பிடித்த வாரப் பத்திரிகை ஓவியர்கள் கோபுலுவும் சிற்பியும் என்று சொன்னார். நார்மன் ராக்வெலையும் ரொம்ப பிடிக்குமாம்.

கீழே ம.செ. வரைந்த ஒரு ஓவியம். எத்தனை கச்சிதமான கோடுகள்!