அமேரிக்காவில் தீபாவளி எப்படி கொண்டாடுவார்கள் என்று என் உறவினர்கள் பல முறை கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு முன்பெல்லாம் ஒன்றும் சொல்ல இருக்காது. அதாவது ஒரு எட்டு வருடம் முன்பெல்லாம், தீபாவளி என்பது சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு செய்யும் சில ஃபோன் கால்களுடன் தீபாவளி காலை முடிந்துவிட்டாதாக தோன்றும். என் அன்பு மனைவியிடம் இருந்து சில ஸ்வீட்ஸுடனும், வீட்டில் ஒரு சிறிய பூஜையுடனும் தீபாவளி இரவும் முடிந்துவிட்டதாகத் தோன்றும். இப்படி அமைதியான முறையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு ஏக்கத்தை விட்டில் நிறைத்து விட்டு வந்து போகும். இது அனேகமாக இங்கு இன்றும் பல இல்லங்களில் நடக்கும் ஒரு காட்சிதான். ஆனால் சில வருடங்களாக இதில் இனிய மாற்றங்கள். இந்த மாதிரி போரடித்த தீபாவளியை போக்க வேண்டும் என்று மனைவியும் நானும் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவாக ஒரு பாரம்பரியம் உருவாகத் தொடங்கியிருக்கிறது.

தீபாவளி நெருங்குகிறது…. தம்பிகளுடனும், கம்பவுண்ட் நண்பர்களுடனும் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே எந்த வெடிகள் வாங்க வேண்டும் என்று ஒரு நூறு ரூபாய்க்கு பட்டியல் போட்டு, கடைசியில் ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் ஒரு இருபத்தைந்து ரூபாய்க்கு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்ன்ர் தான், வெடி மற்றும் மத்தாப்புக்கள் வருகிறது. அது போலத்தான் புதிய உடைகளும். திபாவளிக்கு முந்தின தினம் டெய்லர் கடைக்குப் போய் காத்திருந்து, அவர் கருணையில் கடைசியில் இரவு ஒரு ஒன்பது மணிக்கு புதிய உடைகள் வந்து சேர்கிறது. இதல்லாம் ஒரு துன்பமாயினும் அதிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. பாட்டி வீட்டில் தான் அனேகமாகத் தீபாவளி. மாலை அப்பா வந்ததும் டவுன் பஸ் பிடித்து கொட்டும் மழையில் கடைசி ”யாக்கோபுரம்” பஸ் பிடித்து கிட்டதட்ட இரவு பத்தரை மணிக்கு பாட்டியின் ஊர் போய் சேர்கிறோம். ஊரே அந்த இரவிலும் கோலாகலம் அடைந்திருக்கிறது. ஒரு வீட்டிலும் முன் கதவு மூடப்படவில்லை.ஒவ்வொரு வீட்டின் முன்னும் சித்தப்பா,பெரியப்பா, மாமா-அத்தை இவர்களின் பையன்களும், பெண்களும் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது வெளியே வந்து மகிழ்ச்சி பொங்க ”வாங்க வாங்க” என்று அபபாவிடமும், அம்மாவிடமும் விசாரித்துவிட்டு “போளி ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது”, “துக்கடா அடுப்பில் இருக்கிறது” என்று எதாவது சொல்லிப் போகிறார்கள்.அதற்க்குள் சித்தப்பா எங்களை பார்த்து வந்து “என்ன கடைசி பஸ் தான் கிடைத்ததா” என்று விசாரித்துக் கொண்டே அம்மா கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்கிறார்…வெடி மத்தாப்புகளுக்கிடையிலும், குசலம் விசாரிப்புகளுக்கு இடையிலும் புகுந்து, கடந்து பாட்டி வீடு வந்தடைகிறோம். அங்கே சித்தப்பா மகன்கள் மற்ற நண்பர்களுடன் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி வந்து எல்லோரையும் வரவேற்கிறாள். வந்ததும், வராததுமாக “லக்‌ஷ்மி, வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தேன், நல்ல வேலை வந்துட்ட. போய் அதை பாத்துக்க” என்று சொல்ல அம்மா உடைகளை மாற்ற நேரமில்லாமல் அடுப்படியில் சித்திகளுடன் ஐக்கியமாகிறாள்.
“என்ன டெய்லர் நேரமாக்கிட்டானா? கடைசி கார் தானா கிடைச்சுது?”
“இல்லம்மா, அஃபீஸ்ல் வேலை 7 மணி வரை இருந்துது. அப்புறம் டெய்லர்ட்ட போயிட்டு வரும் போதே, மழை வேற”
“சரி விடு. வா சாப்பிடு…”
“நீங்களும் வாங்கடா…” நாங்களும் உற்ச்சாகமாகி பின்னல் ஓடுகிறோம்.
எல்லோரும் பேசிக்கொண்டே சுடச் சுட தோசை மற்றும் தேங்கா சட்னி, சாம்பார் ஸ்வீட்கள் முதலியவற்றை கபளீகரம் பண்ணுகிறோம்.
அப்பா மற்றும் சித்தப்பா ஊர் முழுவதும் உள்ள சகோதரர்களையும், தங்களைப்போன்று வெளியூரிலிருந்து வந்த சகோதரர்களையும் (எல்லாம் பெரியப்பா – சித்தப்பா வீட்டு சகோதரர்கள் தான் – ஊரே சொந்தக்ககாரர்கள் தானே) பார்க்க, எல்லோரும் கூடும் அடுத்தடுத்து நீண்ட திண்ணைகள் கொண்ட வீடுகள் அமைந்த நடுத்தெருவிற்க்குச் செல்கிறார்கள். மூன்று வீட்டு திணனையை சகோதரர்கள் நிறத்திருக்கிறார்கள். பலமான சிரிப்பு, பேச்சு, மீண்டும் சிரிப்பு. இனி மேல் இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்…நாங்கள் எல்லோரும் அம்மாக்களிருக்கும் அடுப்படிக்கும், தெருவிற்க்கும், அப்பாக்களிருக்கும் நடுத்தெருவிற்க்கும் இரவு 11 மணியிலிருந்து 2 மணி வரை ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கேட்பதற்கு ஒரு ஆள் கிடையாது. எல்லா இடங்களும் விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. வெடிகளின் சத்தங்களிலும், ஜனங்களின் போக்கு வரத்திலும் ஊர் நிறைந்திருக்கிறது….

முப்பது வருடத்திற்கு முன்னால் அது. நிச்சயம் இப்பொழுது இப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆம். இங்கும் தீபாவளி வந்துவிட்டதுதான்.நாளை மறு நாள் தீபாவளி.சித்ரா முன்னரே எல்லோருக்கும் ”ஈவைட்” மூலம் தகவல் அனுப்பி தீபாவளிக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். தீபாவளி காலையில் ஒன்றும் பண்ண முடியாது. பட்ஷணம் பல பண்ண வேண்டும் என்ற அவளுக்கு ஆசை தான். ஆனால் தனி ஆளாக அதெல்லாம் செய்ய முடியுமா? என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது? அனைத்து நண்பர்களும், மனைவிகளும் பிஸியாக இருப்பவர்கள். எல்லோருக்கும் வேலை, வீடு, குழந்தைகள். மொத்தத்தில் தீபாவளி அன்று காலை அலுவலகத்திற்கு லீவ் போட்டால் தான் முடியும் என்ற நிலைமை. அப்படிதான் ஆயிற்று. நான் உதவி செய்யலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலுவலகம் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில் (மற்ற நான்கு நாட்கள் கோர்ட்டில்)மாட்டிக் கொண்டதால் சித்ராவிற்கு உதவி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை சத்தமில்லாமல் வாபஸ் வாங்கினேன்.

சவாலை சமாளிக்கத்தான் அலுவலகத்தில் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறாள் சித்ரா. பிராஜக்ட் மேனஜர். தீபாவளியும் அவள் கண்ணில் ஒரு சிறு பிராஜக்ட்டாக உருவெடுத்தது. நான் மாலையில் வீடு வந்து சேரும் பொழுது அனேகமாக எல்லாம் தயார். நான் என் பங்குக்கு எதாவது உதவி செய்யவா என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டு வைத்தேன்.கேட்கும் போதே ஒரு பயம் தான். எங்கே வேலை நிறைய இருக்குமோ என்று. நல்ல வேலை பெரிதாக  செய்வதற்கு ஒன்றும் மீதம் இல்லை. நண்பர்களும் ஸ்வீட், காரம், டின்னர் ஐட்டங்களுடன் 7 மணிக்கு ஆஜர்.

தீபாவளிக்கு வெடி மத்தாப்பு எல்லாம் ஜூலை மாதமே வாங்கிவிடுவோம். அப்பாடா. இதில் ஒன்றிலாவது இந்தியாவில் கொண்டாடுபவர்களை தோற்கடித்தாகிவிட்டது. அட வெடியெல்லாம் போடுகிறீர்களா என்று ஆச்சர்யபடுகிறீர்களா? ஆம. நிச்சயாமாக. ஜூலை நான்கு இங்கே சுதந்திர தினம். அதற்கு ஃபயர்வொர்க்ஸ் கிடைக்கும். சிவாகாசி சரக்கு இல்லை. அதை வாங்கி வைத்துவிடுவோம். இம்முறையும் அது தான். பேக்யார்ட் என்று சொல்லும் கொல்லை புறத்தில் கோலாகலம் மணி 8 அளவில் தொடங்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்காகத் தானெ. அனைத்து குழந்தைகளும் வந்து சேர்வதற்கு 8 மணி ஆகிவிட்டது. சற்றே நவம்பர் குளிர் மெலிதாக தாக்குகிறது. கம்பி மத்தாப்புகளில் ஆரம்பித்த கொண்டாட்டம் படிப்படியாக் ப்ரோமோஷன் பெற்று, உய் உய் என்ற சத்தங்களுடன் பெரிதாக சில மணித்துளிகள் வெடிக்கும் வெடியாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம்.

பின்னர் ஸ்வீட்களுடன் டின்னர். குழந்தைகளின் விளையாட்டு. பெரியவர்களின் பேச்சுகள். கிட்டத்தட்ட தமிழகத்தில் தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி.ஒரு முக்கியமான விஷயம். அனேகமாக உங்கள் வீட்டிற்கெல்லாம் அழையா விருந்தினராக வரிசையாக வருகை தரும் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர்கள், திரை நட்சத்திரங்கள், புது சினிமாக்கள் பற்றிய ரிவ்யூக்கள் இவையெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. சாலமன் பாபையாக்களை வீட்டிற்குள் கூட்டி வரும் டி.வி.சேனலகள் எங்கள் வீட்டில் கிடையாது. அடுத்த முறை தீபாவளி அன்று முழுவதும் டி.வி.யை அணைத்து விட்டு கொண்டாடுங்கள். அதன் மகிழ்ச்சியே தனி.

போன வருடமும், இந்த வருடமும் வார இறுதி என்பதால் மகிழ்ச்சியான மன நிலையில் கொண்டாட முடிந்தது. தீபாவளிக்கு விடுமுறை எவ்வளவு அவசியம் என்பது நன்றாகவே புரிந்தது. ஆர்வி – ஹேமா, குழந்தைகளுடன்  சில வருடங்களாக சேர்ந்து தான் தீபாவளி கொண்டாடுகிறோம். இரண்டு வருடத்திற்கு முன் மேலும் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள். போன வருடம் ஒரு ஐந்து குடும்பம். இந்த வருடம் இந்த எண்ணிக்கையில் மேலும் இரண்டு கூடியது. இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மாமா-அத்தை, பெரியப்பா-சித்தப்பா, பெரியம்மா-சித்திகள்.


அடுத்த வருடத்திற்கு காத்திருக்கிறோம்.