இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான உப்பிலி ஸ்ரீனிவாஸ் கொஞ்ச நாளாக சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் புகழும் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு அவர் கருத்துகளில் முழு இசைவு இல்லை. என் கண்ணில் சந்திரசேகரர் scholar, அவ்வளவுதான். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியவை:
ஊரில் பரவலாக இருக்கும் நினைப்பு இதுதான். சந்திரசேகரர் உத்தமர். ஞானி. வேதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். உண்மையான துறவி. காஞ்சி மடத்துக்கு இன்றைக்கு மிச்சம் இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர்தான் காரணம். ஜெயேந்திரரோ பலவீனங்கள் உள்ளவர். கொலை செய்யத் தூண்டினார் என்று நம்புகிறோமோ இல்லையோ பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவருக்கு தத்துவ ஞானம் இருக்கிறதோ இல்லையோ அது அதிகமாக வெளியே தெரியவில்லை. அரசியலில் எல்லாம் தலையிட்டார். அவரால்தான் காஞ்சி மடத்துக்கு பேர் கெட்டது. எனக்கும் ஏறக்குறைய இதே எண்ணம்தான். சந்திரசேகரரை பெரும்பாலான பிராமணர்கள் தெய்வம் என்று கொண்டாட முக்கியமான காரணமே அவர்களுக்கு ஜெயேந்திரர் மேல் உள்ள அதிருப்தியும் வெறுப்புமே என்று எனக்கு தோன்றுகிறது. ஜெயேந்திரர் சந்திரசேகரரின் அடிச்சுவட்டிலேயே சென்றிருந்தால் இன்று சந்திரசேகரரை எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
சந்திரசேகரர் தனிப்பட்ட முறையில் உத்தமர்தான். ஒரு உண்மையான துறவிக்குரிய லட்சணங்கள் அனேகமாக அவருக்கு பொருந்தித்தான் இருக்கின்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பெரும் பாண்டித்தியம் உடையவர். அவருக்கு தமிழில் பாண்டித்தியம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. (டாக்டர் நாகசாமி சில இடங்களில் இது பற்றி பேசுகிறார்.) மறைந்துகொண்டிருக்கும் நம் பாரம்பரியம் மீண்டும் தழைக்க பாடுபட்டார். அதர்வ வேதம் மீண்டும் ஓரளவு உயிர்த்தெழ அவர்தான் காரணம் என்று தெரிகிறது. ஒரு நாளைக்கு உப்பில்லாத வாழைப்பூ பொரியலும் சாதமும் கலந்து ஒரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொல்வார்கள். உண்மையோ பொய்யோ, மனிதர் உடலில் ஊளைச்சதை எதுவும் கிடையாது. ஊளைச்சதையை விடுங்கள், சதையே கிடையாது. (ஜெயேந்திரர் பார்க்க கொஞ்சம் புஷ்டியாக இருப்பார்.)இப்படி உண்மையான துறவு ஒரு புறம், அதே நேரத்தில் திறமையான நிர்வாகி/மடாதிபதியும் கூட. ஒரு மடத்தின் பலம் அந்த மடாதிபதி மேல் மக்களுக்கு இருக்கும் நல்ல எண்ணமே என்பதை புரிந்து வைத்திருந்தார். ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய charisma அவரிடம் நிறைய உண்டு. அவரை சந்தித்துப் பேசியவர்களில் அநேகமானவர்கள் மிகவும் impress ஆகி இருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன் ஐயர்கள் எல்லாரும் ஒரு மடாதிபதி பின் நின்றிருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெயேந்திரர் பேர் இப்படி சீப்பட்ட பிறகும் முக்கால்வாசி ஐயர் கல்யாணப் பத்திரிகைகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்றுதான் அடிக்கப்படுகின்றன (என் கல்யாணப் பத்திரிகையும் அப்படித்தான்.) சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்த கும்பகோணம் மடம் இன்று ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஜெயேந்திரர் கேவலப்படுவதற்கு முன் சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் அது மக்கள் கண்களில் ஏறக்குறைய முதல் இடத்துக்கே வந்து கொண்டிருந்தது. இப்படி அந்த மடத்துக்கு மதிப்பு இருப்பதற்கு சந்திரசேகரரே முக்கிய காரணம். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது – மடத்தின் பிரஸ்டிஜை வளர்த்த ஒரு துறவி பொய் சொன்னாரா? எனக்குத் தெரிந்து அவர் எங்கேயும் தன் வாயால் இது ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று சொன்னதில்லை, ஆனால் அப்படி சொல்வதை எப்போதும் தடுத்ததில்லை. அதை மறைமுகமாக ஊக்குவித்தார் என்றுதான் நினைக்கிறேன். இந்த ஒரு விஷயம் அவரது துறவுக்கு ஒரு இழுக்குத்தான்.
ஜெயேந்திரரோ, சொல்லவே வேண்டாம். கோர்ட்டில் எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது – ஆனால் என்ன தீர்ப்பு வந்தாலும் அவர் மீது படிந்த களங்கம் போகாது. பெண் விஷயத்தில் வீக் என்று அனேகமாக எல்லாரும் நினைக்கிறார்கள். கொலை பற்றி எனக்கே கொஞ்சம் சந்தேகம் உண்டு. அவர் இப்படி எல்லாம் கேவலப்படாவிட்டாலும் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு – ராம ஜன்ம பூமி விஷயத்தில் அவருடைய தலையீடு, பொதுவாக அவருடைய பி.ஜே.பி. சார்பு நிலை, ஒரு காலத்திய ஜெயலலிதா சார்பு நிலை எல்லாம் துறவுக்கு இழுக்கு. ஒரு துறவி அரசியலில் தலையிடுவது என் கண்ணில் தவறுதான். என் நினைவு சரியாக இருந்தால் இவர் பி.ஜே.பி. அலுவலகம் எல்லாம் திறந்து வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதா, பி.ஜே.பி. தலைவர்கள் எல்லாருக்கும் வேண்டியவராக இருந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மத மாற்ற தடை சட்டத்துக்கு இவர்தான் மூல காரணம் என்று கேள்வி. மேலும் சந்திரசேகரரோடு ஒப்பிடும்போது இவருக்கும் வேதம், சாஸ்திரம் பற்றி தெரிந்திருப்பது குறைவுதான் என்று தோன்றுகிறது.ஆனால்:
சந்திரசேகரர் ஹிந்து மதத்தின் காலாவதி ஆகிவிட்ட, அடக்குமுறை அம்சம் உள்ள சில நியதிகளை மீண்டும் நிறுவ முயன்றார். முக்கியமாக, ஜாதி: அவருக்கு வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இல்லை, ஆனால் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தருகிறேன், வேதம் தழைத்தால் போதும் என்று அவர் கிளம்பவில்லை. அவருக்கு பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் என்பதில் நம்பிக்கை இருந்தது. பி.ஏ. கிருஷ்ணன் தலித்கள் கோவிலுக்கு வரலாம் என்று 1939இல் ராஜாஜி தமிழ் நாட்டு முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மசோதாவை எதிர்த்தார் என்று குறிப்பிடுகிறார். காந்தி அவரை பார்க்க வரும்போது நடுவில் ஒரு பசு மாட்டை நிறுத்தினாராம். ஏனென்றால் காந்தி பனியா, பிராமணர்களை விட “கீழ் ஜாதி”, பசு மாடு இல்லாவிட்டால் “தீட்டாகிவிடும்”. மொட்டை அடித்துக் கொள்ளாத விதவைப் பெண்களைப் பார்க்க மாட்டாராம்; அப்படி பார்க்க நேரிட்டால் அன்று சாப்பிட மாட்டாராம். இதனால் அவரை பார்க்காமல் தவிர்த்த உறவினர்கள் எனக்கு உண்டு. பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் சரியானது என்று நினைத்திருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது.
செல்வாக்கு நிறைய இருந்தது. அவர் செயலாக இருந்த காலத்தில் பிராமணர்கள்தான் நிறைய படித்த ஜாதி. இவர் சொல்லி இருந்தால், ஜாதியின் தாக்கம் இன்னும் குறைந்திருக்கும்; பெண்கள் இன்னும் கொஞ்சம் சமமாக நடத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் இவருக்கே அது தவறு என்று தோன்றவில்லை, அப்படிப்பட்ட சமூகமே சரி என்று நினைத்தார். அவரை குறை சொல்லியும் பயனில்லை. 1894இல் பிறந்தவர். அவர் வளர்ந்த காலத்தின் விழுமியங்கள் வேறு. அவரால் அந்த விழுமியங்களை தாண்ட முடியவில்லை.
ஜெயேந்திரர் 1935இல் பிறந்தவர். அவருடைய இளமைக் காலத்தில் ஜாதி தவறு என்று சொல்வதை நிச்சயமாக கேட்டிருப்பார். ஜெயேந்திரர் பல வருஷங்களாக மடத்தை சமூகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்றார். மடத்தை இன்னும் வலுவானதாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வமாகக் கூட இருக்கலாம் – ஆனால் தலித்களோடு பழக முயன்றார். மடம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொந்தமானது என்று ஆக்க முயன்றார். அவரை சந்திரசேகரர் இருந்த வரைக்கும் சுதந்திரமாக இயங்கவிடவில்லை. ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய நிகழ்ச்சிக்கு இதுதான் மூல காரணம் என்று சொல்கிறார்கள். ஜெயேந்திரர் தன் முயற்சியில் வெற்றி அடையவில்லை, இன்றும் மடம் பிராமணர்களின் மடமே. ஆனால் அவர் முயன்றார் என்பது பெரிய விஷயம். ஜெயேந்திரர் சந்திரசேகரரை விட நாற்பது வயது இளையவர். அவருக்கு இது இன்னும் சுலபமாக இருந்திருக்கலாம்.
ஒரு பக்கம் தனிப்பட்ட முறையில் உத்தமரான, ஆனால் காலாவதி ஆகிவிட்ட ஹிந்து மதத்தின் சில பழக்க வழக்கங்களை மீண்டும் நிலைநிறுத்த முயன்ற ஒரு உண்மையான துறவி; இன்னொரு பக்கம், தனிப்பட்ட முறையில் பலவீனங்கள் உடைய, ஆனால் மடத்தை பயனுள்ள பாதையில் திருப்ப முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு மனிதர். எனக்கு மடத்தை மாற்ற முயன்றவர்தான் மேலானவராகத் தெரிகிறது.
டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்!
பின்குறிப்பு: இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான நண்பர் ஸ்ரீனிவாஸ் ஒரு பதிவில் சந்திரசேகரர் பல்லக்கிலிருந்து மாயமாக மறைந்து போனார் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதே ஸ்ரீனிவாஸ் பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா எனக்கு திருவண்ணாமலையில் காட்சி தந்தார் என்று சாரு நிவேதிதா எழுதினால் விழுந்து விழுந்து சிரிப்பார். 🙂 மனிதனை தெய்வமாக்காதீர்கள், அனாவசிய கட்டுக்கதைகள் வேண்டாமே!
தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்–>காஞ்சி சங்கர மடம் பற்றிய பதிவுகள்
ஏப்ரல் 23, 2010 at 4:45 முப
வித்தியாசமான சிந்தனை வேறு பட்ட கோணம் . அட போட வைத்தது.
ஏப்ரல் 23, 2010 at 4:51 முப
\\டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. !\\
படிப்பதில் ஒன்று தவறில்லை. சும்மா ஆதாரங்களில்லாமல் குற்றம் சொல்லவேண்டாம்.
\\புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்\\
பரமாச்சார்யார் தன்னை தெய்வம் என்று கூறிக்கொள்ளவில்லை.அவரது ஃபாலோயர்கள் அவரை தெய்வமாக மதித்தால் உங்களுக்கேன் கடுப்பு??
ஜெயேந்திர சரஸ்வதி பெண்கள் விஷயத்தில் வீக் என்கிறீர்களே, நீங்கள் அருகிலிருந்து பார்த்ததுண்டா??? If you are levying allegations on a person, please provide factual evidence.
ஏப்ரல் 23, 2010 at 5:58 முப
இரவு 12:55 க்கும் சலிக்காமல் படிக்கவைத்த எழுத்து.
பிராமணன், பார்ப்பனர் இரண்டையுமே தவிர்த்து எழுதவே முடியாதா?
இந்து மதம் போன்ற பாகன் மதங்களுக்கு சங்கர மடங்கள் தேவையா? அதனால் என்ன பயன்?
ஏப்ரல் 23, 2010 at 6:01 முப
Vijay சொல்கிறார்:
April 23, 2010 at 4:51 மு.பகல்
\\டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. !\\
படிப்பதில் ஒன்று தவறில்லை. சும்மா ஆதாரங்களில்லாமல் குற்றம் சொல்லவேண்டாம்.
\\புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்\\
பரமாச்சார்யார் தன்னை தெய்வம் என்று கூறிக்கொள்ளவில்லை.அவரது ஃபாலோயர்கள் அவரை தெய்வமாக மதித்தால் உங்களுக்கேன் கடுப்பு??
ஜெயேந்திர சரஸ்வதி பெண்கள் விஷயத்தில் வீக் என்கிறீர்களே, நீங்கள் அருகிலிருந்து பார்த்ததுண்டா??? If you are levying allegations on a person, please provide factual evidence.
//
இன்னும் நித்யா சப்பக்கொடுக்கவில்லை என்று மறுக்கும் பக்தர்களும் உண்டு.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
ஏப்ரல் 23, 2010 at 6:17 முப
http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_14.html
ஏப்ரல் 23, 2010 at 6:32 முப
nalla alasal. endrum maha periyavar avarai deyvam endru solli kondathum illai. innum solla ponaal thannai periyava endru alaipatheye kindal aditu irukira.
ref : maha periyar books written by ganapati anna
ஏப்ரல் 23, 2010 at 6:59 முப
vithyaasamaan kooNaththil cinthinthanai. yoocikka vaikkirathu. kaalam maarikkondtee varukiRthu. cinthanaiyum appatiyee maarukirthu.
ஏப்ரல் 23, 2010 at 9:27 முப
நல்ல அலசல்.ஜெயேந்திரர் கொஞ்சம் வாயை அடக்கி வைத்திருந்தால் உடம்பும் அடங்கியிருந்து இருக்கும். சந்திரசேகரரைவிட பிராமணர் அல்லாதோரை ஈர்க்க ஜெயேந்திரர் முயற்சித்தார். பாராட்டலாம். ஆனால் பெண்கள் விஷயத்தில் அது உண்மையோ பொய்யோ, அந்தப்பிரச்சினையில் ஈடுபடாமல் இருந்திருக்கணும். முடியாவிடில் மடத்திலிருந்து விலகியிருக்கணும்.
ஏப்ரல் 23, 2010 at 11:01 முப
//ஏனென்றால் காந்தி பனியா, பிராமணர்களை விட “கீழ் ஜாதி”, பசு மாடு இல்லாவிட்டால் “தீட்டாகிவிடும்”. மொட்டை அடித்துக் கொள்ளாத விதவைப் பெண்களைப் பார்க்க மாட்டாராம்; அப்படி பார்க்க நேரிட்டால் அன்று சாப்பிட மாட்டாராம். இதனால் அவரை பார்க்காமல் தவிர்த்த உறவினர்கள் எனக்கு உண்டு. பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் சரியானது என்று நினைத்திருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது.//
இப்படி இருந்தவர் தான்
//சந்திரசேகரர் தனிப்பட்ட முறையில் உத்தமர்தான். //
என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். என்ன rationale? புரியவில்லை. You mean to say that treating a fellow human being (that too a person revered as Mahatma) qualifies being called a holy person. If Gandhi was treated like this, wonder how much others would have suffered (if at all they were even allowed to come near his so called holiness)
//1894இல் பிறந்தவர். அவர் வளர்ந்த காலத்தின் விழுமியங்கள் வேறு. அவரால் அந்த விழுமியங்களை தாண்ட முடியவில்லை.//
அதே காலகட்டத்தில் வளர்ந்த பெரியார் (born in 1879) அந்த விழுமியங்களை தாண்டினாரே?
This post just seems to be cover-up and justification for mutt, doing a good balancing act of holding up one mutt head while gently criticizing the next mutt head.
ஏப்ரல் 23, 2010 at 11:11 முப
யதார்த்தமான மாறுபட்ட பார்வை.
ஏப்ரல் 23, 2010 at 1:45 பிப
பரமாச்சாரியார் திருமதி.இந்திராவை சந்திக்க மறுத்தார் என்று கேள்வி பட்டதுண்டு.காரணம் என்ன என்று தெரியவில்லை.
ஏப்ரல் 23, 2010 at 2:51 பிப
நானும் இந்த பெரியவா சின்னவா நடுவில் உள்ளவா என்பது மாதிரி விஷயங்களுக்கு அதிகம் மதிப்பு கொடுப்பதில்லை. ஆனால் எனக்கு தெரியாத விஷயங்களை இப்படி பொது இடத்தில எதோ ஆதாரம் வைத்து பேசுவது போன்ற பாவனையில் கருத்து வைப்பதும் இல்லை. உங்கள் கருத்தை இங்கே சொல்லுவதற்கு முன் நீங்கள் உங்கள் ஊகங்கள் தவிரே வேறு எந்த ஆதாரங்களை படித்து, அல்லது அனுபவித்து தெரிந்து கொண்டீர்கள் ? ஏற்கனவே தாறுமாறான தவறான தகவல்களை உண்மை என்று தந்து கொண்டிருக்கும் தளங்கள் இங்கு ஏராளம். இந்தியாவுக்கு வெளியில் வாழும் நீங்கள் இந்தியா பற்றி, இந்து மதம் பற்றி, பிராமணர்கள் பற்றி குறை சொல்லி எழுதி இணையத்தில் உங்களை நடுநிலையாளனாக அடையாளம் காட்டிக் கொள்ள (சிலர் ஏற்கனவே இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்) ஆளில்லா கடையில் டீ ஆற்றாமல் இருக்க கிடைக்கும் வாய்ப்பாக பயன்படுதுகிரீர்களா என்ன ?
குறையே சொல்லக் கூடாதா என்றால். அப்படி அல்ல. நிறைகளை சொல்லி தூக்கிப் பிடிக்கச் சொல்லவும் இல்லை. தனக்கு முழுமையாக தெரியாத விஷயங்களை இது மாதிரி பொது தளங்களில் சொல்லுவது சரி என்று உங்கள் படிப்பும் அறிவும் சொல்லுகிறதா என்று உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்.
ஏப்ரல் 23, 2010 at 5:06 பிப
விருட்சம், இதில் எனக்குத் தெரிந்த, நான் முழுமையாக நம்பக் கூடியவர்கள் சொன்ன, படித்த செய்திகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். நிரூபிக்கபடாதது விஜய் சொன்ன மாதிரி ஜெயேந்திரரின் பெண்கள் வீக்னஸ் மட்டுமே. மன்னிக்கவும், கலைஞர் ஊழல் செய்வதைக் கூட நான் பக்கத்தில் இருந்து பார்த்ததில்லை, ஆனால் அவர் லஞ்சம் வாங்கினார்/வாங்குகிறார் என்பதையும் முழுமையாக நம்புகிறேன். இது ஆளில்லா டீக்கடை விஷயம் இல்லை; சந்திரசேகரரைப் பற்றி இந்த தளத்தின் பொறுப்பாளர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு என்பதை தெளிவாக்கும் முயற்சி.
விஜய், பக்கத்தில் இருந்து பார்த்தாயா என்று கேட்கிறீர்கள். நான் என்ன கோர்ட்டா, சந்தேகத்துக்கிடமில்லாமல் நிருப்பித்த பிறகுதான் பேசுவேன் என்பதற்கு? அசாருதின் மேல் என்ன நிரூபித்தார்கள், இன்று வரை? சிஷ்யகோடிகள் அவரை தெய்வமாக்கினால் எனக்கென்ன கடுப்பு என்று கேட்டிருந்தீர்கள். அதுதாங்க கடுப்பு! சிஷ்யகோடிகள் ஒரு மனிதனை தெய்வமாக்குகிறார்கள் என்பததுதான் கடுப்பு. மனிதனை தெய்வமாக்காதீர்கள் என்று அவர்களைப் பார்த்துதான் சொல்கிறேன், உங்களுக்கு புரியவில்லையா?
கார்த்திக், நாகர்கோவில் ராம், குடுகுடுப்பை, சொல்லுகிறேன், மணி, ராஜநடராஜன், பாராட்டுக்கு நன்றி!
கார்த்திக், பெரியவர் தன்னை கடவுளாக எண்ணியதில்லை என்று சொல்லி இருந்தீர்கள். உண்மைதான், அவர் எங்கும் அப்படி சொன்னதாக எனக்கு தெரியவில்லை. இதற்கெல்லாம் “பக்தர்கள்தான்” காரணம்.
குடுகுடுப்பை, மடங்கள் நல்ல முறையில் செயல்படலாம் என்றுதான் நான் நினைக்கிறேன். காஞ்சி சங்கர மடம் பக்கத்தில் மடம் எல்லாம் வேஸ்டா என்ற பதிவைப் பாருங்கள்.
சிமுலேஷன், உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது.
அஜய், 1879-இல் பிறந்த எத்தனை பேர் பெரியாரைப் போல யோசித்தார்கள், எத்தனை பேர் இவரைப் போல? தான் வளரும் காலத்தில் இருக்கும் விழுமியங்களை தாண்டுபவர் பாராட்டுக்குரியவர். அப்படிப்பட்டவர் ஆயிரத்தில் ஒருவர்தான். ஏன், பெரியாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவரது முதல் மனைவி நாகம்மையை அவர் நடத்திய விதம், அவரது இரண்டாவது திருமணம் எல்லாம் இன்றைய பெண்ணியவாதிகளுக்கு சுருக்கென்று குத்தும். அவர் தன மனைவி(கள்) தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றுதானே நினைத்திருக்கிறார்?
விஜயன், இந்திரா காந்தியைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.
ஏப்ரல் 24, 2010 at 3:57 முப
My point was not about the whole post, but 2 observations which you made which were contradicting each other (i.e) on one hand a person is deemed to be a saint and on the other hand he seems to be a person who did not have even a basis courtesy towards a fellow human being. And that cannot be justified in anyway by taking into account the period in which he was born.
Periar was an e.g. which I referred and you have referred to that but not replied to the crux of my reply, but just answered my query with another query. Anyway, to each one his own.
ஏப்ரல் 23, 2010 at 7:45 பிப
ஆர். வி
நீங்க “ஹிட்ஸ்மோனியானால”பாதிக்கப்பட போற அறிகுறி தெரியுது:)- போதகுறைக்கு ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றிக் கொண்டிருப்பது போல சில சமயம் உணர்கிறேன்னு வேற பயந்துபோய் இருக்கீங்க. எதுக்கும் குலதெய்வத்துக்கு
ஒரு வேண்டுதல் போட்டுறுங்க:)-
ஜோக்ஸ் அபார்ட் வித்யாசமான அலசல்.உங்களுடன் ஃபுல்லா ஒத்து போமுடியாது.
நீங்க்கள் ஜெயேந்திரனை சப்போர்ட் பண்ணுவது ஆச்சர்யமாக உள்ளது.என்னை பொறுத்தவ்ரையில் அவனுக்கும் நித்யாவிற்கும் பெரிய வித்யாசமில்லை!
“மனிதனை தெய்வமாக்காதீர்கள்,”
இக்கருத்துடன் முழுவதும் ஒத்து போகிறேன்.
“அனாவசிய கட்டுக்கதைகள் வேண்டாமே”
இது அவர்கள் அனுபவ்ம்தானே.அவர்கள் சந்திரசேகரரை ஒரு வழிகாட்டியாகவேதான் கூறுகிறார்கள்.தெய்வமாக கூறவில்லையே?
ஏப்ரல் 24, 2010 at 9:31 முப
டியர் ஆர்.வி…
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரை. வரவேற்கிறேன். நாட்டு விதலைக்கு தலைமையேற்று நடத்தி, இன்றைக்கு விடுதலைக்காற்றை நாம் சுவாசிக்க முக்கிய காரணிகளில் ஒருவரான மகாத்மாவைச் சந்தித்தபோது, இடையில் ஒரு பசுவை நிறுத்திக்கொண்டார் என்று படித்தபோது மனதில் ‘சுருக்’கென்றது. ஒரு ஐந்தறிவு விலங்குக்கு கொடுக்கும் மரியாதையை ஒரு மனிதனுக்கு, அதுவும் தேசத்தந்தை என்று இன்றளவும் போற்றப்படும் ஒரு மகாத்மாவுக்கு கொடுக்கவில்லை எனும்போது ‘இவர் என்ன வகையில் ஞானி?’ என்று எண்ணத்தோன்றுகிறது.
‘ஜெயேந்திரர் பெண்கள் விஷயத்தில் வீக் என்று எப்படித்தெரியும்? பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா?’ என்று ஒருவர் கேட்டிருந்தார். பிராமண குலத்தைச்சேர்ந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் கொடுத்த தொலைக்காட்சி பேட்டி ஒரு ஆதாரம் போதாதா, அவர் வீக்னஸைப் பறைசாற்ற?’. ஒவ்வொன்றுக்கும் பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா என்று கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?. அரசியல்வாதிகள் பற்றி மட்டும் நாக்கில் பல் போட்டு பேசமுடியுமா?. ‘கருணாநிதி லஞ்சம் வாங்கினார் என்கிறீர்களே. பக்கத்தில் இருந்து பணத்தை எண்ணிக்கொடுத்தீர்களா?. ஜெயலலிதா அடாவடியாக சொத்து வாங்கினார் என்கிறீர்களே, பத்திரத்தில் நீங்கள் சாட்சிக்கையெழுத்துப் போட்டீர்களா?’ என்றெல்லாம் அவர்களைப் பார்த்துக்கேட்க எவ்வளவு நேரமாகும்?. மடாதிபதிகள் பற்றி நம்பத்தகுந்த ஆதாரங்கள் வெளிப்படும்போது நம்பித்தானே ஆக வேண்டும்?.
கண்டனக்கணைகள் வரும் என்று தெரிந்தும் துணிச்சலாக எழுதிய ஆர்.வி.க்குப் பாராட்டுக்கள். உங்கள் வித்தியாசமான பார்வை தொடரட்டும்.
ஏப்ரல் 24, 2010 at 3:53 பிப
சாரதா, உங்கள் பாராட்டுக்கு நன்றி! நான் கூட நிறைய பேர் திட்டுவார்கள் என்று எதிர்பார்த்தேன், அப்படி எல்லாம் இல்லை. 🙂
அஜய், பெரியார் அந்த விழுமியங்களை தாண்டினார், இவர் ஏன் தாண்டவில்லை என்று நீங்கள் கேட்டதற்குத்தானே பதில் எழுதி இருக்கிறேன்? 😉 எது சரி, எது தவறு என்பது சிறிது சிறிதாகத்தான் மாறுகிறது. அவர் வளர்ந்த காலத்தில் எது சரி என்று அவர் படித்தாரோ, அவருக்கு எது சொல்லப்பட்டதோ, அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது தவறு என்று இன்று எல்லாருக்கும் தோன்றுகிறது. “All men are created equal” என்று அமெரிக்க constitution சொல்கிறது. அதை எழுதுவதில் முக்கிய பங்கு வகித்தவர்கலான ஜார்ஜ் வாஷிங்கடனும் தாமஸ் ஜெஃபர்சனும் நீக்ரோ அடிமைகளை வைத்துத்தான் விவசாயம் பார்த்தார்கள். “All men” என்றுதான் எழுதி இருக்கிறார்கள், பெண்களைப் பற்றி பேச்சு மூச்சு இல்லை. அதனால் அவர்களை hypocrites என்று சொல்ல முடியுமா?
சதீஷ், ஜெயேந்திரர் மடத்தை எல்லாருக்கும் சொந்தமாக்க முயன்றது பாராட்டப்பட வேண்டியது என்று சொல்கிறேன், அவ்வளவுதான்.
ஏப்ரல் 24, 2010 at 4:52 பிப
உப்பிலி பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் சமூகத்தின் பிரபலங்களின் அனுபவங்களின் பதிவுகள். நல்ல விஷயங்கள் என்று சொல்லப் படுபவைக்கு பெரிதாக ஆதாரம் தேவை இல்லை. நமக்கு மனசுக்கு சரின்னு பட்டதுனா எதுக்கலாம் இல்லையான விட்டு விடலாம்.
உங்களின் பகிர்வு உங்களது அனுமானம் மாதிரிதான் தெரிகிறது. ஏன் என்றால் நீங்கள் படித்த செய்தி என்றால் எதில் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அந்த செய்தியை வெளியிட்டவர் யார் என்பது செய்தியின் நம்பகத் தன்மைக்கு ஆதாரமாக இருக்கும். உங்கள் அணுகுமுறை மேலோட்டமானது. தவறான செய்தியை சொல்லும் போது அதாரம் மிக முக்கியம்.
@Sarada
அனுராத ரமணன் சொல்லுவதை நம்ப வேண்டியதில்லை என்று அவரது சகோதரி கொடுத்திருந்த பேட்டியை அறிவீர்களா?
சகோதரிகளில் யாரை நம்புவது?
அதே மாதிரி தான் இந்த காந்தி பசு மாடு எல்லாம். சிவாஜியை அவர் குடும்பத்தை நேருக்கு நேர் ஆசிர்வதித்ததாக சிவாஜி சொல்லி இருக்கிறார். அப்புறம் காந்தியை வ ிசயத்தை எப்படி நம்புவது?
நான் பெரியவரை ஏன் குடும்பத்துடன் பார்க்க சென்றே போது மடத்துக்குள் எந்த screening உம் செய்ததாக நினைவில் இல்லை. எல்லோரும் பெரியவர் முன் தான் அமர்ந்துஇருந்தோம்
ஏப்ரல் 24, 2010 at 4:53 பிப
எதுக்கலாம் இல்லை ஏத்துக்கலாம். typo
ஏப்ரல் 25, 2010 at 6:26 முப
அன்புள்ள ஆர்.வி,
முதலில் ஒருவரை நல்லவராகச் சித்தரிப்பதற்கு வேறு ஒருவரை கேவலமாகச் சித்தரிப்பது என்ன லாஜிக்-கோ புரியவில்லை.
நீங்களே குறிப்பிட்டுள்ளது போல ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்து போரடித்து பாதிக்கப்பட்ட அறிகுறியோ ?
உங்கள் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிப்பதற்கு முன், என் மன ஓட்டங்களைப் பிரதிபலித்த விஜய், karthik மற்றும் virutcham எல்லோருக்கும் நன்றி.
சிமுலேஷன், உங்கள் கட்டுரை மிக அருமை.
உங்களுக்கு ஒரு வெறும் Scholar – ஆகத் தோன்றும் ‘மஹா பெரியவர்’ எனக்கும், அவரை நம்பும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான அவரது பக்தர்களுக்கும் ஒரு ‘நடமாடிய தெய்வம்’ தான். உங்கள் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பது போல நீங்களும் என் கருத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மனிதனை தெய்வமாக்க நான் முயற்சி செய்ததாக நினைக்கவில்லை. மனித வடிவில் வந்து நூறு வருடங்கள் நெருப்பு போல் வாழ்ந்து காட்டிய ஒரு தெய்வத்தைப் பற்றிய சமூகத்தின் பிரபலங்களின் அனுபவங்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவ்வளவு தான். அதற்கு இந்தத் தளம் ஒரு தப்பான இடம் என்று புரிந்து கொண்டேன்.
‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின் பெயரே உங்களுக்குக் கடுப்படிக்கிறது என்பது சற்று சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அந்தப் புத்தகத்தைப் படிக்காமலே உங்களால் எப்படி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது ? தீவிர நாத்திகவாதிகள் கூட உங்களது இந்த வாதத்தை ஆதரிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.
சென்ற வாரம், நாம் நேரில் சந்தித்தபோது, நீங்கள் கூறிய மாதிரி, “We are not clones – we are just co-authors on a same blog – that’s all.”
ஜெயேந்திரர் மேல் தகுந்த ஆதாரம் இல்லாமல் நீங்கள் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகள் எல்லாமே நீங்கள் பரபரப்புக்காக எழுதியதாகத் தெரிகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகள் பின்னணியில் உள்ள அரசியல் பற்றி நீங்கள் ஒரு வரி கூட குறிப்பிடாதது மிகவும் விந்தையாக உள்ளது. அனுராதா ரமணன் நம்பகத் தன்மை மேல் எனக்கு மற்றும் பலருக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. விருட்சம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, அவரது சகோதரியே அவரது அபாண்டக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை.
கடைசியாக, இதுவரை என் பதிவுகளைப் படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன், வேறு ஒரு பொருத்தமான தளத்தில்….
அன்புடன்,
ஸ்ரீநிவாஸ்
ஏப்ரல் 25, 2010 at 6:58 முப
@ஆர் வி, இந்த ஒரு பதிவுக்காக ஏன் வேற தளத்துக்குப் போகணும்? என்னை மாதிரி ஊமையா ஒன்னும் சொல்லாமே எத்தனை பேர் உங்கள் எழுத்துக்களை வாசிச்சுக்கிட்டிருக்கோம்! அப்புறம் நாங்க உங்களைத் தேடி எங்க வருவதாம்?
ரெண்டு பேர் சிந்தனை பண்றாங்கன்னா கருத்து வேறுபாடு வருவதெல்லாம் இயல்புதான். அதனால தயவு செய்து இந்த தளத்துலேய நீங்க தொடர்ந்து எழுதணும்னு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் (அவர் அவரோட கோணத்துல எழுதட்டும், நீங்க உங்க பாணியில எழுதுங்க: எதை ஏத்துக்கறதுன்னு படிக்கறவங்க முடிவு பண்ணட்டும்- வேணா பின்னூட்டங்களைத் தடை பண்ணிடுங்க: முக்கால்வாசிப் பிரசின்னைக்குக் காரணம் அவங்க பாட்டுக்கு இஷ்டத்துக்கு ஏத்தி விடுறதுதான்.)
ஏப்ரல் 25, 2010 at 7:43 பிப
அன்புள்ள ஸ்ரீனிவாஸ், இதற்கு உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெயில் அனுப்பவதா இல்லை இங்கேயே பதில் எழுதலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏப்ரல் 26, 2010 at 6:42 பிப
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,
உங்களை இந்த பதிவு வருத்தப்பட வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட எண்ணத்தில் எழுதப்படவில்லை என்றாலும் உங்கள் மனம் புண்பட்டதற்காக என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் என் கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை.
இனி நீங்கள் எழுதி இருப்பவைக்கு என் பதில்கள்:
// முதலில் ஒருவரை நல்லவராகச் சித்தரிப்பதற்கு வேறு ஒருவரை கேவலமாகச் சித்தரிப்பது என்ன லாஜிக்-கோ புரியவில்லை. // யாரை கேவலமாக சித்தரித்திருக்கிறேன் என்கிறீர்கள்? பெரியவரையா சின்னவரையா? இருவரையும் கேவலமாக சித்தரித்திருப்பதாக எனக்கு தெரியவில்லை.
// நீங்களே குறிப்பிட்டுள்ளது போல ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றிக் கொண்டிருந்து போரடித்து பாதிக்கப்பட்ட அறிகுறியோ? // இது என்னங்க வம்பா போச்சு? புதிதாக நான் என்ன எழுதி இருக்கிறேன்? என் பழைய பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம்…
// உங்களுக்கு ஒரு வெறும் Scholar – ஆகத் தோன்றும் ‘மஹா பெரியவர்’ எனக்கும், அவரை நம்பும் என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான அவரது பக்தர்களுக்கும் ஒரு ‘நடமாடிய தெய்வம்’ தான். உங்கள் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பது போல நீங்களும் என் கருத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். // இதில் எனக்கென்ன பிரச்சினை? உங்கள் நம்பிக்கை உங்களுக்கு, என் கருத்துகள் எனக்கு…
// நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல மனிதனை தெய்வமாக்க நான் முயற்சி செய்ததாக நினைக்கவில்லை. மனித வடிவில் வந்து நூறு வருடங்கள் நெருப்பு போல் வாழ்ந்து காட்டிய ஒரு தெய்வத்தைப் பற்றிய சமூகத்தின் பிரபலங்களின் அனுபவங்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்ள நினைத்தேன். அவ்வளவு தான். அதற்கு இந்தத் தளம் ஒரு தப்பான இடம் என்று புரிந்து கொண்டேன். // இதிலும் எனக்கென்ன பிரச்சினை? எப்போதாவது ஆட்சேபித்திருக்கிறேனா? எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாக பேசுவேன் என்பது உங்களுக்கு தெரியாததா? எனக்கு ஆட்சேபனை இருந்தால் சொல்லி இருக்க மாட்டேனா? பிரபலங்களின் அனுபவங்களை நீங்கள் எழுதுகிறீர்கள், என் கருத்துகளை நான் எழுதுகிறேன். என் கருத்துகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் என் கருத்துகள் உங்களுக்கும் தெரிந்தவைதான், ஏற்கனவே எழுதியவைதான். சந்திரசேகரேந்திரர் vs ஜெயேந்திரர் ஒப்பிடுதல், ஜெயேந்திரர் மேல் என்ற conclusion மட்டுமே புதிய கருத்து. அவை உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுதான் ஆச்சரியப்படுத்துகிறது.
// ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின் பெயரே உங்களுக்குக் கடுப்படிக்கிறது என்பது சற்று சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அந்தப் புத்தகத்தைப் படிக்காமலே உங்களால் எப்படி ஒரு அபிப்ராயத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது ? தீவிர நாத்திகவாதிகள் கூட உங்களது இந்த வாதத்தை ஆதரிப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. //
ராமனின் குரல் தெய்வத்தின் குரல்; கிருஷ்ணனின் குரல் தெய்வத்தின் குரல்; சந்திரசேகரரின் குரல் துறவியின் குரல், நல்ல மனிதரின் குரல், பெரிய ஸ்காலரின் குரல், கொஞ்சம் பழைய காலத்து மனிதரின் குரல். அதை தெய்வத்தின் குரல் என்று அவரது “பக்தர்கள்” சொல்வது என்னை கடுப்படிக்கிறது. எனக்குத் தெரிந்து ஆதி சங்கரரின், ராமானுஜரின், அப்பரின், ஆண்டாளின், அருணகிரிநாதரின், விவேகானந்தரின் “குரல்கள்” தெய்வத்தின் குரல் என்று சுட்டப்படவில்லை. சந்திரசேகரர், சத்திய சாயிபாபா போன்றவர்களின் குரல்தான் தெய்வத்தின் குரல் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் புத்தகத்தின் பெயர் கடுப்படிக்கிறது; படிக்காத புத்தகத்தைப் பற்றி சொல்ல எனக்கு எதுவுமில்லை.
// சென்ற வாரம், நாம் நேரில் சந்தித்தபோது, நீங்கள் கூறிய மாதிரி, “We are not clones – we are just co-authors on a same blog – that’s all.” // ஆம், இப்போதும் அதையேதான் சொல்கிறேன். நீங்கள் இதை ஏற்றுக் கொண்டீர்கள் என்றால் என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.
// ஜெயேந்திரர் மேல் தகுந்த ஆதாரம் இல்லாமல் நீங்கள் அள்ளி வீசும் குற்றச்சாட்டுகள் எல்லாமே நீங்கள் பரபரப்புக்காக எழுதியதாகத் தெரிகிறது. //
மன்னிக்க வேண்டும் ஸ்ரீனிவாஸ், உங்கள் கருத்தை நான் கடுமையாக மறுக்கிறேன். பரபரப்புக்காக எழுதி இருக்கிறேன் என்று சொல்வது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. தளத்தின் சக பொறுப்பாளராக இருக்கும் நீங்கள் இன்னொரு பொறுப்பாளரைப் பற்றி இப்படி எழுதி இருக்கக் கூடாது. இது பற்றி நான் எல்லார் முன்னிலையிலும் பேச விரும்பவில்லை. உங்களுக்கு தனியாக மெயில் அனுப்புகிறேன்.
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு என்கிறீர்கள். ஜெயேந்திரரைப் பற்றி இப்படி நினைக்க probable cause இல்லை என்றோ இப்படி பரவலாக கருத்து இல்லை என்றோ நினைக்கிறீர்களா? அப்படிப் பார்த்தால் நித்யானந்தாவுக்கு எதிராக என்ன ஆதாரம் இருக்கிறது? அருமையான அனிமேஷன் படங்கள் வரும் இந்த காலத்தில் அந்த வீடியோ உட்டாலக்கடி இல்லை என்று நிரூபிக்க முடியுமா? கலைஞர், ஜெயலலிதா ஊழல் பேர்வழிகள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? தினகரன் அலுவலகத்தில் மூன்று பேர் எரிக்கப்பட்ட கேசில் எல்லாரும் விடுதலை ஆகிவிட்டார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், விடுதலை ஆனவர்கள் உத்தமர்கள் என்றா?
சரி, ஜெயேந்திரர் மாசு மறுவற்றவர் என்றே வைத்துக் கொள்வோம். சந்திரசேகரரை “நடமாடும் தெய்வம்” என்று கொண்டாடும் நீங்கள் ஜெயேந்திரர் போன்ற உத்தமரை ஏன் தெய்வம் என்று நினைக்கவில்லை? அப்படி யாராவது சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? சந்திரசேகரரை பற்றி பலரும் எழுதியதை பதிக்கிறீர்கள். ஏன் உங்களுக்கு ஜெயேந்திரரை பற்றி யாராவது எழுதியதை பதிக்கலாம் என்று இது வரை தோன்றவில்லை?
சரி, நம்மில் பலரும் நேரில் பார்த்த சந்திரசேகரர் இயற்பியல் விதிகளை மீறி பல்லக்கிலிருந்து மாயமாக மறைந்தார், மீண்டும் வந்தார் என்று ஒரு பதிவு எழுதினீர்கள். என்ன ஆதாரம்?
// இந்தக் குற்றச்சாட்டுகள் பின்னணியில் உள்ள அரசியல் பற்றி நீங்கள் ஒரு வரி கூட குறிப்பிடாதது மிகவும் விந்தையாக உள்ளது. அனுராதா ரமணன் நம்பகத் தன்மை மேல் எனக்கு மற்றும் பலருக்கு மிகுந்த சந்தேகம் உண்டு. விருட்சம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, அவரது சகோதரியே அவரது அபாண்டக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை.//
பின்னணியில் அரசியல் இருக்கிறது என்பது உண்மைதான். பதிவின் நோக்கம் ஜெயேந்திரர் மேல் உள்ள குற்றச்சாட்டுகளின் அரசியலை ஆராய்வது இல்லை; அவர்கள் இருவரையும் ஒப்பிடுவது. குற்றச்சாட்டுகளின் அரசியல் இங்கே ஒரு tangent; அப்படிப்பட்ட tangent-ஐ விவரிப்பது எனக்கு முக்கியமாக படவில்லை. காஞ்சி மடம் சிருங்கேரியின் ஒரு கிளை மடமாக இருந்தது என்பதும் ஒரு tangent. அதையும்தான் நான் விவரமாக எழுதவில்லை. பதிவிலிருந்து எத்தனை tangent-க்கு போக முடியும்?
// தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன், வேறு ஒரு பொருத்தமான தளத்தில்….// உங்களிடம் நேரடியாக பேசியதையே மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். நீங்கள் இங்கே எழுதுவதை வரவேற்கிறேன். பல சுவாரசியமான பதிவுகளை இங்கே எழுதியதற்கு நன்றி! நீங்கள் சந்திரசேகரரை பற்றி மேலும் பல பதிவுகள் எழுதுவதைப் பற்றி எனக்கு நேற்றும் ஆட்சேபனை ஒன்றுமில்லை, நாளையும் இருக்காது. ஆனால் கருத்து வேறுபாடுகள் உங்களை இந்த அளவுக்கு வருத்தப்பட வைக்கும் என்றால், என் கருத்துகளை நான் எழுதுவதில் உங்களுக்கு ஆட்சேபனை உண்டென்றால், இந்த தளம் உங்களுக்கு பொருத்தமாகத் தெரியவில்லை என்றால், வேறு தளத்திலேயே சந்திப்போம்.
ஏப்ரல் 25, 2010 at 7:51 முப
@RV
பெரியவரை தெய்வம் என்று நினைக்கும் அளவிற்கு எனக்கு அவரை தெரியாது. ஆனால் குறை சொல்லுவதற்கு எனக்கு அனுபவம் கிடையாது.
உங்களுக்கு உப்பிலியின் கருத்தில் உடன்பாடில்லை என்று ஏற்கனவே நீங்கள் அவரது பதிவு ஒன்றில் சொல்லி விட்டீர்கள். பிறகு எதற்கு தனியாக ஒரு பதிவு. உங்களுக்கு மடத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது தவறில்லை. ஆனால் நட்பின் மேல் நம்பிக்கை இருக்கவேண்டும் இல்லையா? நீங்கள் உங்கள் நண்பர் இங்கு எழுதுவதை மறுத்து எழுதுமுன் அவர் எப்படி தனது சொந்தக் கருத்தை முன் வைக்காமல் பிறரின் அனுபவப் பதிவுகளை முன் வைக்கிறாரோ நீங்களும் அது மாதிரி தான் செய்து இருக்க வேண்டும். இல்லை அவரிடம் தொடர்ந்து எழுத வேண்டாம் என்று சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்தது நூறு வயது வரை வாழ்ந்த ஒரு மனிதரை ஆதாரமில்லாமல் விமர்சித்தது வேதனை அளிக்கிறது.
சக்தி விகடன் ரவி தளத்தில் ஒரு இஸ்லாமியர் மடத்தில்நண்பர்களோடு தானும் கூடி இருந்த போது பெரியவர் மடத்தின் பக்கத்தில் இருந்த மசூதியில் பிரார்த்தனை முடியும் வரை மடத்தில் பூஜையை (சத்தம் மசூதிக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதற்காக) நிறுத்தி வைக்கும் படி உத்தரவிட்டதை நெகிழ்ச்சியோடு பின்னூட்டமிட்டு இருந்தார்.
ஏப்ரல் 25, 2010 at 9:07 முப
சந்திரசெகரேந்திரர், ஜெயேந்திரர், விஜயேந்திரர் -இவர்களுக்குள் எப்படி வேண்டுமானாலும் கம்பேரிசன் பண்ணிக் கொள்ளுங்கள், ஒன்றும் ஆகி விடாது.
ஆதி சங்கரர், பத்ம பாதர், சுரேஸ்வாச்சாரியார், ஹஸ்தாகமலர், தோடாகாச்சரியார் போன்ற சீடர்களை உருவாக்கினார்!
இராம கிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தரை உருவாக்கினார்!
சந்திரசெகரேந்திரர் உருவாக்கியது ஜெயேந்திரரை.
இவாறாக எல்லோரும் அவர்களிடம் இருக்கும் ஆன்மீகத்தை தானே சீடர்களுக்கு தர முடியும்?
மொத்தத்திலே இந்து மதத்திற்கு விடிவு காலமே!
அங்கால அம்மனுக்கு ஆடியில பொங்கல் வைக்கும் தமிழ் தாய்மார்கள் அந்த அமைதியான வழிபாட்டை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது எப்போதும் தொடரும். அதற்க்கு ஆதி சங்கரருக்கு நன்றி. புத்தரின் முழுத் துறவு மதத்தில் இருந்து ஆன்மீகத்தை மீட்டு , குடும்ப வாழ்க்கைக்கு ஆன்மீகத்தை கொடுத்தது ஆதி சங்கரின் மிகப் பெரிய செயல்களில் ஒன்று.
இந்து மதம் இன்றைக்கு இருப்பதற்கு காரணம், மாரி அம்மனைக் கும்பிடுபவரும், முக்குப் பிள்ளையார் கும்பிடுபவரும், சபரி மலை செல்பவர்கள் …. இவர் போன்றவர்தான்.
சந்திர செகறேந்திரரோ, ஜெயேந்திரரோ இந்து மதத்திற்கு ஒன்றும் வெட்டி முறிக்க வேண்டாம். இந்து மத்தைப் பன்சர் ஆக்காமல் இருந்தால் போதும்.
ஆதி சங்கரர் தந்த அமைதியான, நேர்மையான ஆன்மீக வழியை விட்டு அத்தை பாட்டிக் கதைகளை சொல்லிக் கொண்டும், பாலிடிக்ஸ் செய்து கொண்டும் இருப்பதை எல்லாம் ஆன்மீகம் என்று சிலர் நினைத்து விட்டார்கள். ஆஹா, ஓஹோ, பேஷ், பேஷ் என்று கண்டவர் காலிலும் விழுந்து இந்து மதத்தைக் கெடுத்தது போதும்.
இது பற்றிய விரிவான கட்டுரை நமது தளத்திலே விரைவில் வெளியாகும்.
ஏப்ரல் 25, 2010 at 6:33 பிப
திருச்சிக்காரன், என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாக புரியவில்லை. சந்திரசேகரேந்திரர் ஹிந்து மதத்துக்கு எந்த விதத்திலும் பாதகமாக இருந்ததாக நான் நினைக்கவில்லை. அவர் கால விழுமியங்களை அவர் தாண்ட முடிந்திருந்தால் இன்னும் பயனுள்ளவராக இருந்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன்.
ஏப்ரல் 25, 2010 at 7:55 பிப
இதை தெளிவாக சொல்ல வேண்டுமானால் விரிவாக எழுத வேண்டும். பின்னூட்டத்தில் விளக்குவது கடினம்.
சீடனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை உருவாக்குவதுதான் ஒரு குருவின் சிறப்பு.
“யாரு ? சுப்புனியா , சோமு பையன் தானே!” என்று கேட்டவுடனே நமக்கு சொர்க்கத்திலே இந்திரன் பக்கத்திலே ஒரு சேர் ரெடியாகி விட்டது போல அகமகிழ்ந்து சிஷியன் அம்பேல்.
வெறுமனே “ஆச்சாரியாளைப் போய் பார்த்து விட்டு வந்தேன், நல்ல தரிசனம், என்ன தேஜஸ்” என்று அகமகிழ்ந்து, அதையே ஆன்மீகம் என்று நினைக்கும் படியான ஒரு நிலை சந்திர செகரேந்திரருக்கு பிறகுதான் உருவானது.
அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு போடேல் என்று காலில் விழுவதையே ஆன்மீக மாக நினைத்து விட்டார்கள்.
இந்தியாவிலே தமிழ் நாட்டில் ஆன்மீக விழிப்புணர்ச்சி அதிகமாக இருந்தது.
சாதாரண பிச்சாண்டி துறவியாக சென்னைக்கு வந்த விவேகானந்தரின் ஆன்மீக சிறப்பை சரியாக புரிந்து கொண்டு அவரி அமெரிக்காவுக்கு போக உதவி செய்தது தமிழர்களே. தியாகராசரின் கீர்த்தனைகளின் ஆன்மீக சிறப்பை உணர்ந்து கொண்டு அதை பரப்பியதும் தமிழ் நாடே.
இப்போது எது ஆன்மீகம் என்றே சரியாக புரியாமல், ஜெயேந்திரர் மேல் ஒரு சிறு குற்றமும் இல்லை என சாதிக்கலாமா அல்லது அடுத்து காலில் விழ இன்னொரு நபரைத் தேடலாமா என்று குழம்பும் அளவுக்கு, தனி மனித ஆன்மீக வலிமை இல்லாத நிலைக்கு காஞ்சி சீடர்களை கொண்டு வந்தது சந்திரசெகறேந்திரரே.
கிட்டத் தட்ட 30 வருட காலம் ஐயர்கள் என சொல்லப் பட்பவர்கள் சந்திர செகரேந்திரரிடம் முழுதுமாக சரணடைந்து கொஞ்ச கொஞ்சமாக தங்கள் ஆன்மீக அறிவையும் வலிமையையும் இழந்து விட்டனர்.
போன மாதம் ஒரு நண்பரின் வீட்டில் நீங்கள் ஐயர் என்று சொல்லும் பிரிவை சேர்ந்த ஒரு இளைங்கரை சந்தித்தேன். மனைவி இரண்டு சிறு குழந்தைகளோடு நண்பரின் வீட்டுக்கு வந்திருந்தார். நண்பர், “முருகரின் சிலை வாங்கி வைத்து இருக்கிறேன், பூசனை செய்கிறேன், பூசனை அறைக்கு வந்து பாருங்கள்” என்றார். கடைசி வரையில் பூசனை அறைக்கு வரவேயில்லை. எனக்கு கடவுள் வழிபாட்டில் அவ்வளவாக இண்டரஸ்ட் இல்லை சார் என்று சொல்லி விட்டார். அவர் மனைவியோ, “அவர் சுத்தமாக சாமி கும்பிடுவதில்லை இல்லை” என அலுத்துக் கொண்டார். ஐயர் இளைங்கர்களில் எனக்குத் தெரிந்து பல பேருக்கு ஆன்மீகத்தில் சுத்தமாக ஈடுபாடு இல்லை.
அவர்கள் அப்பாக்களோ அதை விட சுத்தம். ஷேரில் இன்வெஸ்ட் பண்ணலாமா பணத்தைப் பெருக்கலாமா என்பதே அவர்களுக்கு முக்கிய நோக்கம். ஒரு சாமியார் பத்தி ஒரு மாதிரியா நியூஸ் வருதே என்றால், எதோ அவனுக்கு விருப்பம், அதை விடுப்பா, முக்கிய விசயம் இருந்தா சொல்லு என்கிறார்கள். ஆன்மீகம் அவர்களுக்கு தேவை இல்லாத விடயம் ஆகி விட்டது.
குரு எனபது நீங்கள் சொல்வது போல கல்யாண அழைப்பிதழில் பேர் போட மட்டும்தான். நல்ல குரு, நல்ல சிஷ்யர்கள்!
ஏப்ரல் 26, 2010 at 7:11 பிப
திருச்சிக்காரன், ஆன்மிகம் என்பது மேம்போக்காக மாறிக்கொண்டு வருகிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் ஐயர்கள் சந்திரசேகரரால் ஆன்மீகத்தில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்று சொல்வதில் எனக்கு இசைவில்லை. சந்திரசேகரரின் தாக்கம் அவ்வளவு பெரியதும் இல்லை; அவரது கொஞ்சநஞ்ச தாக்கமும் இல்லாவிட்டால் மிஞ்சி இருப்பதும் எப்போதோ போயிருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஜெயேந்திரரின் நிறை குறைகளுக்கு சந்திரசேகரர் எப்படி காரணமாவார்? You can take a horse to water… என்ற பழமொழி நினைவு வருகிறது.
விருட்சம், நீங்கள் என் பதிவில் புதிதாக எதுவும் இல்லையே, ஏன் எழுதினாய் என்கிறீர்கள். ஸ்ரீனிவாசோ என் பதிவைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். 🙂 ஒப்பிடுவது புதியது. நட்பின் மீது நம்பிக்கை என்றால் என்ன பொருள் என்று விளங்கவில்லை. நட்பின் மீது நம்பிக்கை என்றால் கருத்து வேறுபாடுகளை வெளியே சொல்லக் கூடாதா? அந்த அணுகுமுறை எனக்கு இசைவானதில்லை. ஸ்ரீனிவாஸ் பிறரின் அனுபவங்களை பதிக்கிறார், நீயும் அதையே செய்ய வேண்டும் என்கிறீர்கள். இது என்ன வம்பாப் போச்சு! இப்படி எல்லாம் விதி வைத்துக்கொண்டால், நான் என் கருத்துகளை எழுதினேன், ஸ்ரீநிவாசும் அவரது கருத்துகளை மட்டும் எழுத வேண்டும் என்று கூட விதி வருகிறது! அப்புறம் ஆதாரம், எங்கிருந்து படித்தேன் என்று சொல்ல வேண்டும் என்று எழுதி இருந்தீர்கள். காந்தி பற்றி எங்கு படித்தேன் என்று நினைவில்லை. நினைவு வந்த வேறு சிலவற்றை சொல்லியும் இருந்தேன் – எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணன் சந்திரசேகரர் “ஹரிஜன ஆலய பிரவேச மசோதாவை” எதிர்த்தை குறிப்பிடுகிறார். அப்புறம் கலைஞர் ஊழல் என்று யார் எங்கே சொன்னது என்று நீங்கள் கேட்டால் நான் எங்கே போவது?
பாஸ்கர், நான் இந்த தளத்தில்தான் எழுதப் போகிறேன். ஸ்ரீநிவாசை இந்த வாரம் சந்திக்க முடியவில்லை. அவரது மனநிலைதான் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
ஏப்ரல் 27, 2010 at 4:31 முப
//திருச்சிக்காரன், ஆன்மிகம் என்பது மேம்போக்காக மாறிக்கொண்டு வருகிறது என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆனால் ஐயர்கள் சந்திரசேகரரால் ஆன்மீகத்தில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்று சொல்வதில் எனக்கு இசைவில்லை. சந்திரசேகரரின் தாக்கம் அவ்வளவு பெரியதும் இல்லை; அவரது கொஞ்சநஞ்ச தாக்கமும் இல்லாவிட்டால் மிஞ்சி இருப்பதும் எப்போதோ போயிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.//
ஐயர்கள் கிட்டத்தட்ட எல்லோரும் சந்திரசெகரேந்திரரின், ஜெயேந்திரரின் பின்னே நின்றார்கள்.
ஆனால் அவர்கள் ஆன்மீக உணர்வை, வலிமையை, அறிவை இழந்துவிட்டு இருக்கிரர்ர்கள் என்றால் அதற்க்கு யார் பொறுப்பு?
அவர்களின் குருதானே? அப்படி அவர் காரணம் இல்லை என்றால் யார் காரணம்? நானும் நீங்களுமா காரணம்?
கணக்குப் பாடம் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் இருக்கிறார். ஆனால் பையன் கணக்கில் முட்டை மார்க் வாங்கி வருகிறான் என்றால் அதற்க்கு யார் பொறுப்பு? பையனை வாத்தியாரிடம் கூட்டிச் சென்ற ரிக்சா மேனா பொறுப்பாக முடியும்?
//ஜெயேந்திரரின் நிறை குறைகளுக்கு சந்திரசேகரர் எப்படி காரணமாவார்? You can take a horse to water… என்ற பழமொழி நினைவு வருகிறது.//
நான் முன்பே சொல்லி விட்டேன். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். தன்னிடம் இருக்கும் ஆன்மீகத்தை தானே சீடர்களுக்கு தர முடியும்?
ஏப்ரல் 27, 2010 at 5:46 முப
@RV
நட்பின் மேல் நம்பிக்கை என்று நான் சொன்னது – உங்கள் நண்பர் ஒரு கருத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும் போது, அதுவும் அனுபவ பகிர்வுகள், அதே நேரத்தில் நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை (எதிர் கருத்தை) தகுந்த ஆதாரம் இல்லாமல் அதே தளத்தில், அதே நேரத்தில் பதிவது பெரிய முரண்பாடாக எனக்குத் தெரிகிறது.
கோர்டில் கேஸ் நடக்கும் போது நாம் திரும்பத் திரும்ப பலரும் சொல்லும் குற்றச் சாட்டை சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை என்பது என் கருத்து. இதை சொல்லும் என் குடும்ப மடம் ஸ்ரின்கேறி காஞ்சி அல்ல. நான் ஸ்ரிங்கேரியும் போனது கிடையாது.
நான் மடங்களை இது வரை பின்பற்றியதில்லை.
ஹரிஜன ஆலய பிரவேசம் பற்றி பெரியவர் கருத்து என்ன என்பதை நான் அறிந்ததில்லை. உப்பிலி நிறைய பெரியவர் பற்றி தெரிந்து வைத்து இருக்கிறார். அவர் கருத்து என்ன என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
அவர் பழைய காலம். இன்னும் கூட ஹரிஜன ஆலயப் பிரவேசம் என்பது பல இடங்களில் போராட்டமாகவே இருக்கே. திராவிட ஆட்சி தானே நடுக்குது? இதில் பெரியார் கூட எதுவும் செய்ததாக தெரியவில்லையே
ஏன் சர்சுகளில் கூட இந்த பிரச்னை இருக்கே.
ஏப்ரல் 27, 2010 at 6:05 முப
பெரியவர் ஜெயேந்திரர் ஒப்பீடு என்பதில் உங்கள் எழுத்துக்களின் தொனியில் எனக்கு உடன்பாடு இல்லை.
எனது ஒப்பீடு பெரியவர் ஆன்மிகம் என்பதை வாழ்கையாக பாவித்தார். வேண்டுபவர் தேடி அடைய வேண்டும் என்று நினைத்தார். அரசியல், பணம், அதிக மக்கள் புழக்கம் மடத்தின் செயல்பாடுகளை நீர்க்கச் செய்யும், நோக்கத்தை திசை திருப்பும் என்றும் நினைத்தார்.
ஜெயேந்திரர் விவேகானந்தர் மாதிரி நாம் ஒரு இடத்தில இருந்து கொண்டு இருப்பதை விட வெளியில் இறங்கி அடிப்படை பிரச்சனைகளுக்கு உதவவில்லைஎனில் மதம்(மக்கள்) பிற மத ஆக்கிரமிப்பை எதிர் கொள்ள சிரமம்படும் என்று நினைத்தார். missionaries போல் நாமும் கல்வி நிலையங்கள், கோவில்கள், மருத்துவ வசதி என்று இறங்கியாக வேண்டிய கட்டாயம் இருப்பதை உணர்ந்தார். missionaries கல்வி நிறுவங்களே பெரும்பாலும் இருந்து வந்த நிலை இவரால் கொஞ்சமேனும் மாறியதை நாம் மறுக்க முடியாது.
இவர் ஆசைப் பட்டதும் நடந்தது. பெரியவர் பயந்ததும் நடந்தது. பணம், மடத்துக்கு வெளி ஆட்கள் வருகை, அரசியல் இதெல்லாம் உள்ளே கொண்டு வரும் சில குழப்பங்களை இவர் முன்ஜாகிரதையோடு கையாளத் தவறி விட்டார். கூடவே மக்கள் இவரை ஒரே அடியாக தாங்க ஆரம்பிக்க அதை இவர் கண்டிக்க, தவிர்க்க தவறினார் என்பது என் புரிதல்.
பெரியவரின் தயக்கம் நியாமானது தான். இவர் முயற்சியும் நியாமானது தான். பல நன்மைகள் கண்டிப்பாக செய்து இருக்கிறார். இப்போது இவர் மீதான குற்றச் சாட்டுக்கு சட்டம் பதில் சொல்லும். இல்லையெனில் சிவ பூஜை செய்யும் ஒருவர் தவறு செய்து விட்டு தப்பித்து விடுவார் என்றால் பின் சிவ பூஜைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். இன்று சர்ச்சையில் இருப்பவர்கள் பலரும் சிவ பூஜை செய்பவர்கள்.
நாம் ஆன்மிகத்தில் நம்பிக்கை வைப்பவர்கள் என்றால் பின் தெய்வம் தண்டிக்கும் என்பதிலும் தானே நம்பிக்கை வைக்க வேண்டும் ( மனிதர்கள் மூலம் தான் )
எல்லோரும் குற்றம் சொல்லுகிறார்கள் நானும் சொல்லுகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருப்பானேன்?
ஏப்ரல் 27, 2010 at 6:39 முப
@thiruchchikkaaran
ஐயர்களின் ஆன்மிகத்தையே இவர்கள் திசை திருப்பினார்கள் என்பதெல்லாம் நல்ல கற்பனை . நீங்கள் சொன்ன நண்பன் உதாரணம் எல்லாம் ஒரு பொது
உதாரணமாக எடுக்க முடியுமா? ஆன்மிகத்தை ஒருவர் பின்பற்றவில்லை என்றால் அது இபோதைக்கு என்று தான் கொள்ள வேண்டும். அவர் வாழ்வு அதிக சங்கடங்கள் இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். சிலரால் வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது.
பலரது கடவுள் மறுப்புக் கொள்கைகள் ஒரு GUI மாதிரி தான். தன்னால் சமாளிக்க முடியாத கஷ்டம் வரும் போது backend interface அதன் வேலையை செய்யும்
நல்ல குரு என்பவர் வழிகாட்டிக் கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. அவர்கள் வாழ்கையை பார்த்து நல்ல சீடன் கற்றுக் கொள்ள வேண்டும். ராமக்ரிஷ்னரை குருவாக ஏற்ற விவேகானந்தர் அவர் மூலம் கடவுளைக் கண்டார். ஆனால் அவரது எல்லா செய்கைகளும் ராம கிருஷ்ணரை பின்பற்றியே இருந்தது என்று சொல்லி விட முடியுமா. தானே பலதையும் ஆராய்ந்து தெளிந்து பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார் இவர் குருவாக இருந்தார் என்பதை விட வழிகாட்டியாக இருந்தார் என்று சொல்லுவது பொருந்தும் இல்லையா?
இவரோடு ஜெயேந்திரரை நான் முழுவதுமாக ஒப்பிடுவதாக எண்ண வேண்டாம். மடத்தை மக்களுக்கு கொண்டு செல்ல இவர் நினைத்த விஷயத்தில் மட்டுமே இதை நான் சொல்லுகிறேன். மற்றபடி ஒப்பீடு செய்யும் அளவு எனக்கு விஷயம்தெரியாது
ஏப்ரல் 27, 2010 at 7:38 முப
மனிதர்களைத் தெய்வமாக்காதீர்கள் என்ற வேண்டுகோள் ஒரு தனிப்பட்ட முறையில் செய்த ஒன்று.
It is a personal opinion of the blogger, RV. It is not based on any theology.
If it should be based on any theology, then the fitting one is Islamic theology, which categorically forbids worship of humans. Thus, the statement is Islamic.
I wonder why he is propogating an Islamic creed here!
பல மதங்களில் – குறிப்பாக, இந்து மதத்தில் -மனிதர்கள் தெய்வங்களாக்கப்பட்டு வணங்க மதம் தடுப்பதில்லை.
அம்மனிதர்களை எல்லா இந்துக்களும் வணங்க வேண்டும் என மதமே நிர்ப்பந்தப்படுத்துவதில்லை. எப்படி எல்லாக்கடவுளர்களையும் கண்டிப்பாக வணங்க நிர்ப்பந்தப்படுத்தப்படுவதில்லையோ அப்படி.
உப்பிலி எழுதியது சரி: ’மகா பெரியவாளை’ மாமனிதருக்கும் மேலாக வைத்து, தெய்வமாக வணங்குவது அவரது பக்த கோடிகளே. அவர்களை நான் விமர்சனம் பண்ணுவது தவறு. அவர்கள், தம் மதக்கொள்கையின் படியேதான் நடக்கின்றனர்.
உப்பிலி சினிவாஸ் மகா பெரியாவாளை வணங்குவது தவறு. This is a personal comment. பேரை பார்த்துச் சொல்கிறேன் அவ்வளுவுதான். If my guess is correct. If incorrect, that means, if he is an iyer, he can. There are names like Uppili Srinivas, Kasturi Rangan (scientist) for Iyers, as we know!
Next about Mahaperiyavaal’s belief system.
அவர் ஜாதிகளை நம்பினார். பிராமணர்கள் அப்படி இருக்கணும், இப்படி இருக்கனும் என்றார். மத்தமனுசங்களை ஜாதித்துவேசம் பண்ணினார் – இதுதானே RV is trying to make a case against him.
My reply:-
இப்படிப்பட்ட செயல்கள் அவர், தான் சனாதன தர்மத்தை எவ்வித மாற்றமும் இல்லாமல், தலைமுறை தலைமுறையாக, அத்த்தருமத்தைக் கட்டிக்காப்போருக்கு ஒரு முன்மாதிரியாக செய்தவை. அவர் ஒவ்வொரு செயலும் மதத்தின் அடைப்படையிலே.
அவர் போற்றிய, வாழ்ந்த மதம் a pristine, pure orthodox sanatana dharma, loosely called Vedic Hindu religion. அம்மதம் வருணாஷ்ர தர்மத்தை தன் அடைப்படைக்கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது.
ஜாதிகள் இல்ல்யென்பது இன்றைய வாதம். அதை இராமனுஜர் வைணவம் கொண்டுள்ளது. ஆனால் சங்கரமடம் கொண்டதல்ல.
மகா பெரிய்வாளின் ‘தெய்வத்தின் குரல்’ கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டும். ஆரால்? அவரின் விமர்சகர்களால்! எபபடி அண்ணா கம்பராமாயணத்தைக் கரைத்துக்குடித்து, ‘கம்பரசம்’ எழுதினாரோ, அப்படி.
தெ.கு – வரிக்கு வரி, சனாதன தர்மக்கொள்கைகளை எடுத்துச்சொல்லி, அக்கொள்கைகளை அழிவதால், உலகமே பாழாகிறது என்கிறது.
Therefore, this is also a personal opinion of RV, the blogger. Mahaperiyaval did that, did this, etc. – is a complaint, a personal complaint only.
He did that and did this – only because he believed whole heartedly that by doing this and by doing that – only, the ancient Hindu dharama can be transmitted to the future generations, esp. Tamil Hindus. He lived that life and died for that.
Like him or hate him – but dont say what he did is against the religion.
I read thoroughly all the volumes. I am convinced he was true to the letter and spirit of the religion he came to uphold.
For my part, I wont touch his religion even with barge pole!
ஏப்ரல் 27, 2010 at 1:50 பிப
@ Jo Amalan Rayen Fernando: The best comment I read in this post. If everyone had your objectivity, we won’t be talking back and forth, but come to an understanding without creating enmity. Brilliant, sir. Thank you.
For my part, I believe that the Mahaperiya referred to is God, and RV does not know what he is talking about. But he has a right to say what he thinks.
ஏப்ரல் 27, 2010 at 2:20 பிப
>>>>
அரசியலில் எல்லாம் தலையிட்டார். அவரால்தான் காஞ்சி மடத்துக்கு பேர் கெட்டது.
<<<<
அரசியல் ஆமை நுழைந்த இடம் உருப்படாது என்பது ஊரறிந்த/உலகறிந்த உண்மை.
“நீ அரசியலைத் தொட்டாலும் அரசியல் உன்னைத் தொட்டாலும் உன் கதி அதோ கதி”
ஏப்ரல் 27, 2010 at 3:00 பிப
வர்ணாஸ்ரமம் என்பது சமூக கோட்பாடே, அது இந்து மதக் கோட்பாடு அல்ல.
ஆனாலும் இந்து மதம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மதமாக இருப்பதால், பிற மதங்களின் மேல் வெறுப்புக் கருத்தைப் பரப்புபவர்களுக்கு இந்து மதம் இடைஞ்சலாக இருக்கிறது.
எனவே இந்து மதம் சாதியை உதறினாலும், இவர்கள் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாகவே ஆகப் போகின்றனர். ஏனெனில் இந்து மதம் வர்ணாஸ்ரம கட்டமைப்பை தாண்டி வெளியே வந்து விட்டது.
இந்து மதம் என்றாலே வர்ணாஸ்ரமமே என்பது போல பிரச்சாரம் செய்து கொண்டு உள்ளனர் சிலர்.
ஆனால் வர்ணாஸ்ரமம் என்பது இந்திய சமுதாய அமைப்பே. அது இந்து மதத்தின் அடிப்படை அல்ல.
இந்து மதத்தின் அடிப்படை, உண்மையே!
உண்மையை அடைவதே (அசத்தோமா சத்கமய), துன்பத்தில் சிக்கியுள்ள உயிரை விடுதலை பெற்ற நிலையை அடைய செய்வதே இந்து மதத்தின் நோக்கம்.
அதை அடைய கர்ம யோகம், கர்ம பலத் தியாகம், பக்தி, தியானம்…. இவ்வாறாக பல வழிகள் சொல்லப் பட்டு உள்ளன.
இந்த அடிப்படை, நோக்கம், வழிகள் இவை எந்த ஒரு மனிதனுக்கும் பொருந்தும்.
எனவே இந்து மதத்திற்கும், வர்ணாசிரம அமைப்புக்கும் உள்ள தொடர்பு ஞானத்துக்கும் அறியாமைக்கும் உள்ள தொடர்பே, சூரியனுக்கும் மேகத்துக்கும் உள்ள தொடர்பே.
இப்போது இந்திய சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் வேகமாக குறைந்து வருகின்றன. அதை விட வேகமாக இந்து மதம் வர்ணாஸ்ரம மறைப்புக்கு வெளியே தன கிரகணங்களைப் பாய்ச்சுகிறது.
திருப்பதி பாலாஜி கோவிலில் சாமி கும்பிடுபவன் தன முன்னால் செல்பவன் எந்த சாதி எனத் தெரிந்து வைத்து இருக்கிறானா?
எனவே கையைப் பிசையும் மாண்பு மிகுக்கள் 1917ல் ஸ்பர் டான்க் ரோடிலே நாயர் பேசியது, 1935 ல் கும்பகோணம் மாநகராட்சியில் நடை பெற்றது என பழைய பஞ்சாங்கத்தை பேச வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டு விட்டனர்.
இப்போது உள்ள இந்து மதத்தின் மீது அவர்களால் எந்தக் குற்றமும் சொல்ல முடியவில்லை. அப்படி சொலவதானால் அது நித்யா விவகாரம் போன்றதே.
ஏப்ரல் 28, 2010 at 12:04 முப
திருச்சிக்காரன், // ஐயர்கள்…. ஆனால் அவர்கள் ஆன்மீக உணர்வை, வலிமையை, அறிவை இழந்துவிட்டு இருக்கிரர்ர்கள் என்றால் அதற்க்கு யார் பொறுப்பு? // ஐயர்கள்தான் பொறுப்பு. அவர்களுக்கு அது அவசியமில்லை என்று நினைத்திருக்க வேண்டும். அவரவர் இழப்புக்கும் சிறப்புக்கும் அவரவர்தான் பொறுப்பு. சந்திரசேகரர் என்ன அவர்களது சர்வாதிகாரியா? அவர் பட்டுப்புடவை கட்டாதீர்கள் என்று சொன்னார், யாரும் கேட்கவில்லை. டௌரி வாங்காதீர்கள் என்று சொன்னார், யாரும் கேட்கவில்லை. வேதம் படியுங்கள் என்று சொன்னார், யாரும் கேட்கவில்லை. அவர் என்ன அவர்கள் கையைப் பிடித்து இழுத்து ஆன்மீகத்தை மறவுங்கள் என்றா சொன்னார்? அப்புறம் இந்து மதம், ஜாதி என்பது இன்னொரு பெரிய கதை…
விருட்சம், // உங்கள் நண்பர் ஒரு கருத்தை பதிவு செய்து கொண்டு இருக்கும் போது, அதுவும் அனுபவ பகிர்வுகள், அதே நேரத்தில் நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை (எதிர் கருத்தை) தகுந்த ஆதாரம் இல்லாமல் அதே தளத்தில், அதே நேரத்தில் பதிவது பெரிய முரண்பாடாக எனக்குத் தெரிகிறது. // இதில் எனக்கு இசைவில்லை. நீங்க சொல்வதை வைத்துப் பார்த்தால் நான் ஒரு கருத்தை ஏற்கனவே பதிவு செய்து இருக்கும்போது அவர் இந்த அனுபவ பகிர்வுகளை பதிவு செய்வதும் தவறு என்றாகிறது. அவர் தனக்கு சரி என்று பட்டதை பதிவு செய்ததில் எனக்கு எந்த தவறும் தெரியவில்லை, அதே விதிதான் எனக்கும்.
// பெரியவரின் தயக்கம் நியாமானது தான். இவர் முயற்சியும் நியாமானது தான். // இரண்டு பேர் செய்ததும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.
ஜோ அமலன், புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. கொஞ்சம் அவரசரத்தில் வேறு இருக்கிறேன். பிறகு உங்கள் மறுமொழியைப் பற்றி எழுதுகிறேன்.
நட்பாஸ், // I believe that the Mahaperiya referred to is God, and RV does not know what he is talking about. But he has a right to say what he thinks. // அப்பாடா! ஒருவராவது புரிந்து கொள்கிறீர்களே! 🙂
தீபக், // நீ அரசியலைத் தொட்டாலும் அரசியல் உன்னைத் தொட்டாலும் உன் கதி அதோ கதி” // இப்படி நினைப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. நானும் அரசியலில் ஈடுபடப்போவதில்லைதான். ஆனால் அதனால்தான் ஊழல் தழைக்கிறது.
ஏப்ரல் 28, 2010 at 4:30 முப
ஐயர்கள் ஆனமீக நாட்டத்தை பயிற்ச்சியை இழந்ததற்கு அய்யர்களே தான் காரணம் என்றால் அப்போது சந்திரசேகரேந்திரர் எதற்கு இருந்தார்?
ஒரு ஆன்மீக வாதியாக, துறவியாக, இந்து மத முக்கியஸ்தராக ஒருவர் கருதப் பட வேண்டும் என்றால், அவரால் மற்றவருக்கு ஆன்மீக நாட்டத்தை, வலிமையை உருவாகக் முடியவில்லை என்றால் அவர் எப்படி ஆன்மீக வாதியாக கருதப் பட முடியும்?
வெறும் வேதப் படிப்பு ஒருவரை ஆன்மீக வாதியாக்கி விட முடியாது. உபன்யாசம் போல கதைகளை சொல்வது ஒருவரை ஆன்மீக வாதி யாக்கி விட முடியாது.
புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் இவர்கள் பெரிய ஆன்மீக அலைகளை உருவாக்கியவர்கள். அவர்களின் ஆன்மீக உணர்வை பலருக்கும் அளித்தவர்கள். அவர்களின் வாழ்க்கைக் காலம் முடிந்த பின்னும், பல நூற்றாண்டுகள் தாண்டிய பின்னும், அவர்களுடைய ஆன்மீக தாக்கம் செயல் படுகிறது.
நான் சந்திர சேகரேந்திரரை தனிப் பட்ட அளவில் குறை சொல்லவில்லை. அவருடைய தலைமையில் ஆன்மீக நாட்டம் உருவாகவில்லை, மாறாக ஆன்மீக நாட்டம் குறைந்தது என்கிற உண்மையை தெளிவாக சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
புத்தர் காலத்தில் ஆன்மீக நாட்டம் குறைந்திருந்தது. புத்தர் அதை சரி செய்தார். ஆதி சங்கரரும் அப்படியே. இந்தியாவின் ஆன்மீக வரலாற்றை நீங்கள் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
பெரும்பாலான ஐயர்கள் நேர்மையாக வாழ்ந்தார்கள் என்பதை நான் உறுதியாக சொல்ல முடியும். எல்லோருக்கும் அது தெரியும்
அந்த சமுதாயம் இன்றைக்கு ரவி சுப்பிரமண்யம், ரகு, ஆடிட்டர் ராதா கிருஷ்ணன், ஆகியவர்களை தருகிறது. காஞ்சிபுரம் அசிங்க அர்ச்சகர் தேவ நாதன் உருவாக்கப் பட்டு இருக்கிறார், அவருக்கு இன்னொரு அர்ச்சகர் உற்சாகம் தந்து இருக்கிறார் என்று சொல்லப் படுகிறது.
ஆன்மீக சீரழிவு நடை பெற்றுள்ளது. நீங்கள் அய்யோ பாவம், சந்திரசெகறேந்திரர் என்ன செய்ய முடியும், என்று தடவிக் கொடுக்கிறீர்கள்.
சீடர்களின் மனதில், வாழ்க்கையில் ஆன்மீகத்தை உருவாக்கும் திறன் இல்லாவிட்டால், ஆன்மீகத் தலைமையை ஏற்க வேண்டிய அவசியம் என்ன?
உடையாமல் உறுதியாக பல வருடம் நிற்க்கக் கூடிய பாலத்தை கட்ட இயலாதவர் எதற்காக இஞ்சினீயர் பொறுப்பு ஏற்க்க வேண்டும்? நீங்கள் சொல்வது சித்தாள் சரியாக கான்க்ரீட் கலவை போடவில்லை என்று சித்தாளைக் குறை சொல்வது போல இருக்கிறது.
ஏப்ரல் 28, 2010 at 6:40 பிப
திருச்சிக்காரன், இருவரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறோம். இசைவு ஏற்படப்போவதில்லை, விட்டுவிடுவோமே!
ஜோ அமலன்,
உயர்ந்த மனிதர், எனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று ஒருவரை வணங்குவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் பொதுவாக மனிதர்களை தெய்வமாக்குவது என்பது சாதாரணமாக அவர்களைப் பற்றி ஒன்றுக்கு பத்தாக பேசுவது, இயற்பியல் விதிகளை மீறி அவர்கள் அற்புதங்கள் புரிந்ததாக சொல்வது என்பதுதான். நான் வளர்ந்த சூழ்நிலையோ என்னவோ, தொன்மங்கள் விஷயத்தில் – திருப்பாணாழ்வார் அடித்தால் பெருமாள் கண்ணில் ரத்தம் வந்தது மாதிரி – அது எனக்கு தவறாக தெரிவதில்லை. ஆனால் சம கால மனிதர்கள் விஷயத்தில் இப்படி உண்மைக்கு புறம்பாக பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நான் உறுதியாக கருதுகிறேன். அப்படி எழுதுவது, பேசுவதையே நான் விமர்சிக்கிறேன். இதற்கும் வாலியும் வைரமுத்துவும் கலைஞரை திராவிடர்களின் தெய்வமே! என்று ஜால்ரா அடிப்பதற்கும் சின்ன வித்தியாசம்தான் இருக்கிறது.
உப்பிலி ஸ்ரீனிவாஸ் மகா பெரியவரை வணங்குவது தவறு என்று எழுதி இருப்பதை இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்துவிட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் யாரை வணங்கலாம் யாரை வணங்கக்கூடாது என்று நீங்கள் என்ன சொல்வது? அவர் இஷ்டம், அவர் சவுகரியம். இன்று மகா பெரியவர் உயிரோடு இருந்து அவரை பார்க்க நேரிட்டால் அவர் காலில் விழுந்து வணங்குவதில் அவர் மீது விமர்சனங்கள் உள்ள எனக்கே ஒரு பிரச்சினையும் இல்லை. (வயதில் பெரியவர், நல்ல மனிதர், உண்மையான துறவி இத்யாதி இத்யாதி. ஆனால் ஜெயேந்திரர் காலில் விழத் தயங்குவேன்.) அப்படி இருக்கும்போது அவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர், தெய்வம் என்று கருதும் ஸ்ரீனிவாஸ் ஏன் தொழக் கூடாது?
// அவர், தான் சனாதன தர்மத்தை எவ்வித மாற்றமும் இல்லாமல், தலைமுறை தலைமுறையாக, அத்த்தருமத்தைக் கட்டிக்காப்போருக்கு ஒரு முன்மாதிரியாக செய்தவை. அவர் ஒவ்வொரு செயலும் மதத்தின் அடைப்படையிலே. // ஆம், என்னை விட அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். அவர் ஹிந்து மதம் static ஆனது, இதற்கு மேல் மாற்றக் கூடாது என்று நினைத்திருக்க வேண்டும். சங்கரரும், ராமானுஜரும், பசவரும், நாமதேவரும் செய்தது போல அதை இன்னும் “உயர்த்த” அவர் விரும்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவருக்கிருந்த ஞானம் அபாரமானது, அவரால் அப்படி செய்திருக்க முடியும். அப்படி அவர் செய்ய விரும்பாதது புரிந்து கொள்ளக் கூடியதுதான், ஆனால் துரதிருஷ்டமே.
ஏப்ரல் 29, 2010 at 1:19 முப
இந்தப் பதிவுக்கு அப்புறம் இன்னும் ஆறு பதிவுகள் போட்ட பின்னும் இங்க பின்னூட்டங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது நீங்கள் உங்கள் தீவிர வாசகர்களாகிய எங்களைத் தொடக் கூடாத இடத்தில் தொட்டுட்டீங்கன்னு தோணுது. 🙂
எனக்கு ஒரே ஒரு சந்தேகம். ரமணரை அவரோட பக்தர்கள் பகவான்னு சொல்றாங்க. அதே போல் சாய் பாபா, அரவிந்த அன்னை, இப்படி ஏறத்தாழ எல்லாரையும் தெய்வமா நினைச்சுதான் கும்பிடுறாங்க.
இதுவரை தமிழர்கள் காலம் காலமாக தாங்கள் பின்பற்றும் குருமார்களை தெய்வமாகக் கும்பிடுவதை, இப்போ போலி சாமியார்கள் வந்த காரணத்தால நிறுத்திவிட்டு, அவங்களையும் ஆசாமிகளா பாக்கற அவசியம் வந்தாச்சுன்னு நினைக்கிறீங்களா? இது இங்க்ளிஷ்ல சொல்லற மாதிரி குளிப்பாட்டின தண்ணியோட குழந்தையையும் தூக்கி வீசற மாதிரி ஆயிடாது?
அவங்க அவங்க தாங்க கும்பிடறவங்கள தெய்வமா கொண்டாடுவதில் என்ன தப்பு? அது நித்யானந்தரா இருந்தா என்ன, ராமானுஜரா இருந்தா நமக்கு என்ன ? என் நண்பர் ஒருவர் தன தாயின் புகைப்படத்தை பூசை அறையில் வைத்து மாலை எல்லாம் போட்டு வழிபடறார்- அதை தப்புன்னு சொல்லிடலாமா?
அப்புறம் இந்த மாய மந்திர கதைகள்: அதை திட்டம் போட்டு இட்டுக் கட்டி எடுத்து விடராங்கன்னு நீங்க நம்பறீங்களா? இதுல கொஞ்சம் கூட உண்மை இல்லைங்கறதுதான் உங்கள் நிலையா? அப்படி சொன்னா இந்த உலகத்துல இருக்கற எல்லா மதங்களும் பொய்யின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை: அதில் இருக்கிற சாமியார்களும் அவர்களது அடியார்களும் பித்தலாட்டக்காரர்கள், இல்லியா?
நான் என்ன நினைக்கிறேன்னா, எல்லாருக்கும் அவங்க அவங்க நம்பிக்கைகளைக் கொண்டாட சகல உரிமையும் இருக்கு (அவநம்பிக்கையையும்தான்). பிரச்சினை எங்க வருதுன்னா, என்னோட நம்பிக்கை உன்னோட நம்பிக்கையை விட உயர்ந்ததுன்னு சொல்லும்போதும், உன்னோட நம்பிக்கை மூடநம்பிக்கை, என்னோட அவநம்பிக்கை பகுத்தறிவுன்னு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு பேசும்போதும்தான்.
நான் உங்க உணர்வுகளையோ, திரு உப்பிலி ஸ்ரீனிவாஸ் அவர்களின் உணர்வுகளையோ புன்படுத்தலைன்னு நினைக்கிறேன். அப்படி ஏதாவது சொல்லியிருந்தா, தெரியாம சொன்னதுன்னு நெனைச்சு மன்னிச்சிருங்க.
நன்றி.
ஏப்ரல் 29, 2010 at 2:08 முப
அப்புறம், மறந்து போறதுக்குள்ள இன்னொன்னும் சொல்லிடறேன். ரமணர் பத்திய ஒரு கதை (“என்னாங்கடா பாட்டி காலத்துக் கதையை பேசிக்கிட்டு இருக்கீங்க”ன்னு திருச்சிக்காரர் நினைக்கிறது எனக்கு இப்போவே கேக்குது! இருந்தாலும் பரவாயில்லை)
ஒருத்தர் தன்னை கிருஷ்ணர்னு சொல்லிக்கிட்டு அவரயப் பாக்க வந்தாராம். ரமணரும் அவரை கிருஷ்ணர் மாதிரியே ட்ரீட் பண்ணி, அவருக்கு வேண்டிய மரியாதையெல்லாம் கொடுத்து அனுப்பினாராம். அவரு போன அப்புறம், ரமணரோட பக்தர்கெல்லாம், “என்ன சாமி, அந்த ஆளு சரியான பிராடு. அவனுக்குப் போய் மரியாதை பண்ணிக்கிட்டு”ன்னு வருத்தப்பட்டாங்களாம். அதுக்கு அவரு, “ஏம்பா, நீங்கல்லாம் ‘நான்தான் ராமசாமி, குப்புசாமி, மயிவாஹனன்”னு சொன்னா நான் கேட்டுக்கலை? அப்புறம் என்னா?’ன்னாராம்.
இதுதான் உன்மையிலேய சகிப்புத் தன்மை. இல்லீங்களா?
நீங்க, மகாபெரியவரோட கோட்பாடுகளைவிட ஸ்ரீபெரியவரோட நடவடிக்கைகள் மேலானவைன்னு சொல்லியிருந்தா, அது வேற மாதிரி. ஆனா, அவருக்கு இவரு பரவாயிலைன்னு ஒட்டுமொத்தமா முத்திரை குத்தினதுதான் பெரியவர் உப்பிலியை வருத்தப்பட வெச்சிருக்கும்.
நான் இந்த தளத்துல அவரோட பதிவுகளை விரும்பி வாசிக்கறவன். அதனால, “ஆமாமா, நான் அவர் சொன்னதையும் இவர் செஞ்சதையும் கம்பேர் பண்ணி, இன்டிவிஜுவலா அவரை மட்டம் தட்டியிருக்க வேண்டாம்.”னு சொல்லி அவரை இங்க கூட்டிக்கிட்டு வரணும்னு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜான் டான், “எவனும் தீவு இல்ல, நானே எல்லாமின்னு ஒரு பயலும் சொல்லிக்க முடியாது. கடற்கரையில இருக்கற ஒரு களிமண் கட்டி கரைஞ்சு போனாலும் அந்தக் கண்டத்துக்கு இழப்புதான்”னு சொன்னாரு, இல்லீங்களா?
ஐரோப்பா மாதிரி ஒரு பெரிய கண்டமே ஒரு சின்ன களிமண் கட்டி கரைஞ்சு போறதால நட்டப்படுதுங்கறபோது, நாமெல்லாம் என்ன? எதுக்காக தேவையில்லாத, எண்ணங்களின் அடிப்படையிலான விவாதங்களின் மூலமா, உணர்வுப் பூர்வமான நண்பர்களை இழக்கணும்?
நல்ல முடிவு எடுங்க.
ஏப்ரல் 29, 2010 at 4:13 முப
என்னுடைய பார்வையை முன் வைக்கிறேன். அது சரியல்ல என்று கூறப் படும் போது, இன்னும் தெளிவாக விளக்கங்கள் அளித்தேன்.
தனி நபர் பெருமை காக்கப் பட வேண்டும் (அதுவும் அவர் அந்த பெருமைக்கு தகுதி உடையவாரா என்பது சர்ச்சையில் இருக்கும் நிலையில்) என்பதை விட,
மக்கள் சமுதாயத்துக்கு உண்டான பாதிப்பு சரி செய்யப் பட வேண்டும், மக்கள சமுதாயம் நல்ல வழியில் செலுத்தப் படுவது அவசியமானது என்கிற அக்கறையினாலே தான் இவ்வளவும் எழுதுகிறோம்.
ஏப்ரல் 30, 2010 at 6:35 முப
திருச்சிக்காரன், உங்கள் viewpoint புரிகிறது. உங்களுக்கும் நான் சொல்ல வருவது புரிந்திருக்கும். ஆனால் இருவருக்கும் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை, சொன்னதையே சொல்கிறோம் என்று தோன்றுகிறது. அப்படி ஒரு நிலையில் let us move on.
பாஸ்கர், உங்களோடு விவாதிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதுகிறீர்கள். அப்புறம் தீவிர வாசகர் என்று வேறு எழுதி இருக்கிறீர்கள். வாசகரே இருக்கிறார்களா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்! 🙂
ரமணரையோ, சாயிபாபாவையோ நீங்கள் தெய்வமாக வணங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உங்கள் வழிபாட்டு பழக்க வழக்கங்களில் உள்ளே நுழைய நான் யார்? ஆனால் அவர்களை நான் இன்னின்ன காரணங்களால் தெய்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னால் அது ஏன் உங்கள் மனதை புண்படுத்துகிறது? நானும் தெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, அவரை மதிப்பிடக் கூடாது என்றோ என்ன விதி? நித்யானன்தரை தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அப்படி இருப்பதால் நித்யானந்தரைப் பற்றி analyze செய்யக் கூடாது என்று சொல்வீர்களா? முடிந்தால் இந்தப் பதிவை படித்துப் பாருங்கள். – https://koottanchoru.wordpress.com/2008/12/30/ஆளுமைகள்-விமர்சனங்கள்/
நீங்கள் எனக்கு மனிதனை தெய்வமாக்குவது சரிப்படவில்லை என்பதை தவறாக புரிந்து கொண்டீர்களோ என்று தோன்றுகிறது. ஒரு (சம கால) மனிதர் இயற்பியல் விதிகளை மீறி அற்புதங்கள் புரிந்தார் என்பது எனக்கு ஒரு aversion-ஐத்தான் உருவாக்குகிறது. நமக்குத் தெரிந்த அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் சாயிபாபா படத்திலிருந்து விபூதி விழுகிறது, நித்யானந்தர் ஒரே நேரத்தில் பெங்களூரிலும் திருவண்ணாமலையிலும் காட்சி அளித்தார் என்பதெல்லாம் உண்மை என்று உங்களுக்கு தோன்றுகிறதா? என்னுடிய first hand experience என்று சொல்லுங்கள், பேசுவோம். அதற்கு வேறு ஏதாவது இன்றைய அறிவியலுக்குட்பட்ட காரணம் இருக்க முடியுமா என்று ஆராய்வோம். அதை தவிர வேறு எதுவும் எனக்கு இசைவில்லை.
எல்லா மதங்களும் பொய்யின் அடிப்படை என்பது பற்றி: புத்த மதம் அப்படி நிச்சயமாக இல்லை. ஹிந்து மதம் போன்ற ஒன்றில் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், விட்டுவிடலாம். அது வசதியான விஷாய்ம். தொன்மங்களில் நடக்கும் அற்புதச் செயல்கள் – பத்ராசல ராமதாசர், பாணாழ்வார், நந்தனார் இத்யாதி – சுவைக்காகவே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தொன்மங்கள் உருவாவதைப் பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், இன்னும் கை வரவில்லை.
// நான் உங்க உணர்வுகளையோ, திரு உப்பிலி ஸ்ரீனிவாஸ் அவர்களின் உணர்வுகளையோ புன்படுத்தலைன்னு நினைக்கிறேன். அப்படி ஏதாவது சொல்லியிருந்தா, தெரியாம சொன்னதுன்னு நெனைச்சு மன்னிச்சிருங்க. // எனக்கு கொஞ்சம் எருமைத் தோல், நீங்கள் இப்படி எல்லாம் நினைத்து தோன்றியதை சொல்ல தயங்க வேண்டியதில்லை. 🙂
// ரமணர் பத்திய ஒரு கதை… // ரமணர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் போலிருக்கிறது!
// நீங்க, மகாபெரியவரோட கோட்பாடுகளைவிட ஸ்ரீபெரியவரோட நடவடிக்கைகள் மேலானவைன்னு சொல்லியிருந்தா, அது வேற மாதிரி. ஆனா, அவருக்கு இவரு பரவாயிலைன்னு ஒட்டுமொத்தமா முத்திரை குத்தினதுதான் பெரியவர் உப்பிலியை வருத்தப்பட வெச்சிருக்கும். // பெரியவர் என்று ஸ்ரீநிவாசை சொல்லாதீர்கள், வருத்தப்படப் போகிறார்! 🙂 நீங்கள் நினக்கும்படிதானே சொல்லி இருக்கிறேன்? நீங்கள் மடத்தை சமுதாயத்துக்கு ஏற்ற முறையில் மாற்ற முயற்சித்தவர் என்ற முறையில் அவருக்கு இவர் மேல் என்றால் ஒவ்வொரு விதத்திலும் ஜெயேந்திரரே மேல் என்று அர்த்தம் கொள்கிறீர்களோ? ஜெயேந்திரர் தன் முயற்சிகளில் தோல்வி அடைந்திருக்கிறார் என்று எழுதி இருப்பதை நினைவூட்டுகிறேன். அப்புறம் ஸ்ரீனிவாசின் வருத்தம் ஜெயேந்திரர் பற்றி நான் எழுதியவை அபாண்டம் என்று அவர் நினைப்பதால் என்று அவர் எழுதி இருக்கிறார்…
// நான் இந்த தளத்துல அவரோட பதிவுகளை விரும்பி வாசிக்கறவன். // நானும்தான்.
// அதனால, “ஆமாமா, நான் அவர் சொன்னதையும் இவர் செஞ்சதையும் கம்பேர் பண்ணி, இன்டிவிஜுவலா அவரை மட்டம் தட்டியிருக்க வேண்டாம்.”னு சொல்லி அவரை இங்க கூட்டிக்கிட்டு வரணும்னு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். // அவர் இங்கே எழுத வேண்டும் என்பது நம் எல்லாருடைய விருப்பமும். ஆனால் அதற்காக நான் இல்லாத கருத்தை சொல்ல முடியாது. என் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. நேர்மையான விமர்சனங்கள் பயனுள்ளவை என்று நான் கருதுகிறேன். சந்திரசேகரரை புகழ்ந்து பல பதிவு போட்ட ஸ்ரீநிவாசும் சரி, சந்திரசேகரரி analyze செய்த நானும் சரி, எங்கள் மனதுக்கு நேர்மையாகத்தான் எழுதி இருக்கிறோம். இனி மேலும் இருவரும் அப்படியே எழுத வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். எங்கோ சொன்ன மாதிரி அவர் சந்திர சேகரரை புகழ்ந்து இன்னும் நூறு பதிவு இங்கே போட்டாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. அது அவர் கருத்து, நாங்கள் clones இல்லை, எங்களுக்குள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு, அவ்வளவுதான். ஸ்ரீனிவாஸ் போன்ற ஒரு நல்ல மனிதரின் மனம் புன்பட்டதர்காக மட்டுமே வருந்துகிறேன்.
ஏப்ரல் 30, 2010 at 11:33 முப
பொறுமையாக பதில் சொன்னனதுக்கு நன்றி.
இந்த விவாதத்துக்குரிய விஷயங்களை வேறு தளத்துக்குக் கொண்டு போற வேலை வந்தாச்சுன்னு தோணுது. உங்களது நேரமும் உழைப்பும் இப்படி ஆளாளுக்கு சொல்ற விஷயங்கள் ஒவ்வொண்ணுக்கும் விவரமான பின்னூட்டங்கள் இடுவதில் வீணாப் போகுதுன்னு நினைக்கிறேன். இந்த விவாதத்தின் சாரமான அம்சங்களைத் தனித் தனி பதிவுகளாகப் போட்டால் அதில் ஒரு நேர்த்தியும் கூடுதல் பயனும் இருக்கக் கூடும்.
அதனால தனி மனித/ தெய்வ விஷயங்களை விட்டு விட்டு இதில் பொதுப்படையான பிரச்சினைகளுக்கு வருவோம்:
1 . தனி மனித ஒழுக்கம் / மேம்பாடு- சமுதாய மறுமலர்ச்சி / தொண்டு : இவற்றின் இடம் எது? (பட்டி மன்ற பாணியில கேக்கறதுக்கு ஸாரி). ஏன் இந்த கேள்வி வருதுன்னா, ஜே கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள், நீதான் உலகம், நீ மாறுவதுதான் முக்கியம், சூடான் பத்தி எரியுதுன்னா அதுக்கு உன் மனசுல இருக்கற வன்முறைதான் காரணம்’னு சொல்றாங்க. ஏறத்தாழ ரமணரும், தனி மனித மன மாற்றத்துக்கு அப்புறம்தான் சமுதாய மாற்றம்னு சொல்ற மாதிரி தெரியுது. உங்க ஒப்பீடுல ஒருத்தர், தன்னை மேம்படுத்திக்க சொன்னார் (சாஸ்திரம் சம்பிரதாயத்தை கேள்வி கேக்காம பின்பற்றுவதன் மூலமா…), இன்னொருத்தர் அதை விட சமுதாய மாற்றத்துக்கு அவசியம் அதிகமா இருக்குன்னு நினைத்தார். ஒரு ஆன்மீக குருவாக இருப்பவர் எதில் கவனம் செலுத்தணும்?
2. தொன்மங்கள் உருவாவது பற்றிய உங்கள் எண்ணங்கள் கட்டாயம் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து கேள்வியே கேட்காமல் ஒப்புக்கொள்வது/ நிராகரிப்பது- இதனால் ஏற்படுகிற குழப்ப நிலைதான் இன்றைக்கு யாரைப் பற்றிய சித்து விளையாட்டு செய்தியும் அவரை தெய்வமாகக் கருத போதுமான காரணமாகிறது.
3 . இயற்பியல் விதிகள். இயற்பியல் விதிகளை மீற முடியாது என்று நீங்கள் சொல்வது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இயற்கை விதிகள் எல்லாம் மனிதன் திருத்தித் திருத்தி எழுதுவதுதானே?
எல்லா இயற்பியல் விதிகளையும் ஒரே சமன்பாட்டில் (Grand Unified Theory ) அடக்கிவிட முடியும் என்று இயற்பியல் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது குறித்து அவர்களில் ஒருவர், நீ அந்த சமன்பாட்டை ஒரு கம்பளத்தில் இட்டு வை- அது பறக்குமா? விதிகள் எப்படி உலகமாக உருப்பெற்றது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்றார்.
இயற்பியல் விதிகள் உலக இயல்பை விவரிக்கின்றனவே தவிர வரையறுப்பதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் இயற்பியல் விதிகள் எப்படி உலக நிகழ்வுகளை, அதன் சாத்தியங்களை, தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி வைக்கிறது: அவை ஏன் மீற முடியாதனவாக இருக்கின்றன என விவாதித்தாலும் பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் பொறுமையாக ஒவ்வொருத்தருக்கும் பதில் தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த பின்னூட்டம் மிக நீண்டதாகப் போய் விட்டது. எனவே மட்டறுபபதற்காகக் கிடப்பில் கிடக்கிற இதை அப்படியே முழுதுமாக எரிதமாக்கினாலும் தப்பில்லை. அது எனக்கு ஏற்புடையதாகவே இருக்கும். ஆனால் இந்த மூன்று விஷயங்களையும் கருத்தில் கொள்ளும்படி மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
ஏப்ரல் 30, 2010 at 8:45 பிப
பாஸ்கர்,
// உங்களது நேரமும் உழைப்பும்… பின்னூட்டங்கள் இடுவதில் வீணாப் போகுதுன்னு நினைக்கிறேன். // அதெல்லாம் ஒன்றும் இல்லை, வீணாக கவலைப்படாதீர்கள். 🙂 மேலும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் இந்த பதிவின் எதிர்பாராத பின் விளைவுகள்…
// உங்க ஒப்பீடுல ஒருத்தர், தன்னை மேம்படுத்திக்க சொன்னார் (சாஸ்திரம் சம்பிரதாயத்தை கேள்வி கேக்காம பின்பற்றுவதன் மூலமா…), இன்னொருத்தர் அதை விட சமுதாய மாற்றத்துக்கு அவசியம் அதிகமா இருக்குன்னு நினைத்தார். ஒரு ஆன்மீக குருவாக இருப்பவர் எதில் கவனம் செலுத்தணும்? // இரடுன்மே முக்கியம்தான். ஆனால் சமுதாய மாற்றம் ஏற்படுத்துபவர்கள்தான் – நாராயண குரு, விவேகானந்தர் மாதிரி – pure “ஆன்மீக” வழியில் செல்பவர்களை விட அதிக தாக்கம் உடையவர்கள். சந்திர சேகரர் முயன்றிருந்தால் பெரும் வெற்றி அடைந்திருப்பார். காந்தி சொன்னார் என்பதற்காக ஜாதி பேதம் பாராட்டுவதை நிறுத்தியவர் பலருண்டு. சந்திரசேகரர் அந்த மாதிரி impact-ஐ குறைந்த பட்சம் தமிழக பிராமணர்களிடம் உருவாக்கி இருப்பார். என் விமர்சனம் அவர் “சனாதன தர்மத்தை” தூக்கிப் பிடித்தார் என்பது மட்டுமே. முடிந்தால் இதையும் படித்துப் பாருங்கள் – https://koottanchoru.wordpress.com/2009/12/08/மடம்-எல்லாம்-வேஸ்டா/
// இயற்பியல் விதிகள். இயற்பியல் விதிகளை மீற முடியாது என்று நீங்கள் சொல்வது சற்று ஆச்சரியமாக இருக்கிறது. இந்த இயற்கை விதிகள் எல்லாம் மனிதன் திருத்தித் திருத்தி எழுதுவதுதானே? // இயற்பியல் விதிகள் நிரந்தரமானவை. நம் புரிதல்தான் திருப்பி திருப்பி எழுதப்படுகிறது. 🙂 அரிஸ்டாட்டிலின் புரிதலை கலிலீயோ திருத்தினார், நியூட்டனின் புரிதலை ஐன்ஸ்டீன் திருத்தினார். இன்றைய இயற்பியல் முழுமை அடைந்துவிடவில்லைதான். இன்னும் நமக்கு புரியாத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றனதான். பிழைத்துக் கிடந்தால் என் first hand experience ஒன்றையே எழுதலாம் என்று இருக்கிறேன். நமக்கே ரிலேட்டிவிட்டி ததிங்கினத்தோம், ஒரு மண் புழு அதைப் புரிந்து கொள்ள முடியுமா? அதைப் போலத்தான் நம் புரிதலுக்கும் எல்லைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இந்த விதிகளை இந்த “தெய்வப் பிறவிகள்” தாண்டுகிறார்கள் என்று சொல்வதற்கான எந்த காரணமும் எனக்கு தெரியவில்லை. Occam’s Razor principle-ஐ apply செய்து பாருங்கள்!
மே 1, 2010 at 3:27 முப
உங்க பதிலுக்கு நன்றி.
ஒரு விஷயம். ஞானி என்று சொல்லப்படுபவர், இயற்கையாகவே ஆகி விடுவதாக நம்பிக்கை. சச்சிதானந்த வடிவினர்னு சொன்னா, அவரே சத்: existence , சித் consciousness , ஆனந்தம் bliss என்பது நம்பிக்கை. அதாவது எந்த சக்தி இந்த மூணு அம்சங்களோ வெளிப்படுதோ, அதுதான் அவராவும் வெளிப்படுது என்பதால்தான் இதுபோன்ற இயற்கை விதிகள் அவரைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதை ஏத்துக்கறாங்க. இதை நம்பறதும் நம்பாததும் அவங்க அவங்க இஷ்டம் என்பதை சொல்லைத் தேவை இல்லை. ஆனா ஏன் இப்படி நம்பறீங்க என்ற கேள்வியைக் கேட்பவர்கள், இந்த சச்சிதானந்த விஷயத்தை என்னன்னு கேக்கணும். அப்பத்தான் இந்த விவாதம் சரியான பாதையில் போக வாய்ப்பிருக்கும்.
நீங்க சமுதாய மாற்றத்துக்கு, மடாதிபதியா இருக்கறவர் தூண்டுகோலா இருக்கணும் என்கிற எண்ணம் உடையவரா இருக்கறதாலதான் சந்திரசேகரேந்திரரை விட ஜெயேந்திரர் மேல்னு சொல்றீங்க, இல்லையா? இதில தனி நபர் விமரிசனங்கள ரொம்ப சென்சிடிவா இருந்து பெரிசு பண்ணாம, உண்மையான சமூக மாற்றத்துக்கு விதையா இருப்பது பிரச்சார மற்றும் இயக்க ரீதியான செயல்களா, இல்லை, ஒருத்தர் தன்னை மேம்படுத்திக்கிட்டு அதன் மூலமா ஆன்ம ரீதியா உலகத்துக்கு நன்மை பண்ணறதுதான் முதல் தேவையான்னு யோசிக்கணும். அண்ணா பெரியார் போன்ற சமூக சிந்தனையாளர்கள் விஷயத்துல இப்படி சொல்லக் கூடாது. ஆனா, “ரெண்டில்லை”ன்னு சொல்ற அத்வைதிகள் இந்த அளவுகோலின்படி விசாரிக்கப்படணுமா என்பது கொஞ்சம் நிதானமா யோசிக்க வேண்டிய கேள்வி.
மீண்டும் உங்கள் பதில்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மே 3, 2010 at 3:15 முப
பாஸ்கர்,
இந்த சச்சிதானந்தம் எல்லாம் நமக்குத் தெரியாத விஷயமுங்க! ஸ்ரீனிவாசுக்குத் தெரிந்திருக்கலாம்.
// நீங்க சமுதாய மாற்றத்துக்கு, மடாதிபதியா இருக்கறவர் தூண்டுகோலா இருக்கணும் என்கிற எண்ணம் உடையவரா இருக்கறதாலதான் சந்திரசேகரேந்திரரை விட ஜெயேந்திரர் மேல்னு சொல்றீங்க, இல்லையா? // சின்ன மாற்றம் – மடாதிபதி சமுதாய மாற்றத்துக்கு தூண்டுகோலா இருக்கணும் என்று அவசியம் இல்லை. ஆனால் அப்படி இருப்பவரை நான் மேலாக மதிக்கிறேன். இப்படி வச்சுக்கங்களேன் – சச்சின் டெண்டுல்கர்தான் இந்தியாவின் மிகச் சிறந்த பாட்ஸ்மன். ஆனால் ஸௌரப் கங்குலி இல்லாவிட்டால் இன்றும் இந்தியா வெளிநாடுகளில் போய் டெஸ்ட்களில் ஜெயிக்க முடியாது, கங்குலிதான் மைண்ட்செட்டை மாற்றினார் என்று நினைக்கிறேன். சச்சின் ஒரு மோசமான காப்டன் என்று சொல்வேன். அப்படி நினைப்பதின் corollary – இந்தியாவின் கிரிக்கெட் முன்னேற்றத்துக்கு பங்களிப்பு என்ற முறையில் சச்சினை விட கங்குலியே மேலானவர்!
Occam’s razor பற்றி நல்ல பதிவு, வாழ்த்துக்கள்!
மே 1, 2010 at 12:13 பிப
[…] சமீபத்தில் நான் ஒரு வலைதளத்தில் (கூட்டாஞ்சோறு) அதிகம் தெரியாத விஷயங்களைப் பற்றி […]
மே 3, 2010 at 3:38 முப
இப்போது எனக்கு நீங்கள் எந்த கோணத்தில் அப்படி எழுதினீர்கள் என்பது நன்றாகப் புரிகிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆச்சார்யர்கள் இருவர் குறித்தும் நீங்கள் எதுவும் எந்தக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல்தான் எழுதினீர்கள் என்பதையும் உணர்கிறேன். அது குறித்து வருத்தப் பட்ட உள்ளங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
பௌதீக மாற்றங்கள் போலல்லாமல், என்ன செய்வது, கருத்துப் பரிமாற்றம் என்பதன் ரசாயனம் வேறு மாதிரி இருக்கிறது- நமது கருத்துகள் நமது நம்பிக்கைகளுடன் பிணைந்திருக்கின்றன: நாம் யார் என்பதை நமது நம்பிக்கைகள்தான் பெரும்பாலும் வரையறுக்கின்றன. எனவே, எனது நம்பிக்கைகள் குறித்து நீங்கள் எதிர் கருத்து சொல்லும்போது, அவை கடுமையானவையாக இருக்கும்பட்சத்தில், என் மனம் புண்படுவது இயல்புதான்.
கருத்துகளைக் கருத்துகள் என்ற அளவில் பார்த்து அதற்குத் தகுந்த வகையில் பதில் தர நாமாக முனைந்து செயல்பட்டால்தான் உண்டு.
இந்த விவாதம் எனக்கு ஒரு படிப்பினையாக இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.
நன்றி.
மே 4, 2010 at 1:20 முப
பாஸ்கர், இப்போதுதான் புரிந்தது என்று எழுதி இருந்தீர்கள். என்ன செய்வது, என் எழுத்துத் திறன் அவ்வளவுதான். 🙂 கருத்து பரிமாற்றத்தைக் கண்டு தயங்குவது எனக்கு எப்போதும் புரிந்ததில்லை. நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று சொன்னால் உங்களை நிராகரிக்கிறேன் என்று பொருள் கொள்வது சர்வ சாதரணமாக இருக்கிறது. அதுவும் இணையத்தில் எழுத்து மூலமே பேசுகிறோம், body language cues எதுவும் இல்லை. நாம் நினைப்பது எழுத்தில் வருவதில்லை, நாம் எழுதுவது அடுத்தவருக்கு பர்ஃபெக்டாக புரிவதில்லை. இந்த பரஸ்பர misunderstanding விவாதிக்க விவாதிக்க மேலும் மேலும் வளர்ந்துகொண்டே போகிறது. இருந்தாலும் பேசினால்தானே ஒருவர் கருத்தை கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடியும்? 🙂
மே 4, 2010 at 4:06 முப
உண்மையை சொன்னால், நான் முதலில் படித்தபோது, உங்களுக்கு திரு ஸ்ரீனிவாஸ் அவர்கள் எழுதிய பதிவுகள் பிடிக்காமல் அவரை மட்டம் தட்டுவதற்காக வலுவிலே இவரை இழுத்தீர்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் பின்னூட்டங்களுக்கு நீங்கள் தந்த பதில்களைப் பார்த்தபோதுதான் எனது எண்ணம் தப்பு என்று புரிந்தது. நான் பழைய புண்களைக் கிளற விரும்பவில்லை, இருந்தாலும் ஒன்றி- நீங்கள் பெரியவரை ஒரு பிற்போக்கு சக்தியாகத்தான் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, அவர் சமுதாய மாற்றங்களுக்கு இன்னும் நிறைய முனைந்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள்.
ஆனால் ஓன்று. பெரியவரைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அவரது ஞானம் குறித்தான சிந்தனைகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஏன் அவர் சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது கொஞ்சம் தெரியும்.
அவரே ஒரு சிறு உதாரணம் சொல்வார். ஒரு சுள்ளிக் கட்டின் முடிச்சை அவிழ்க்க முடியவில்லை, அப்போது என்ன செய்வோம்? அதை விட இறுக்கமாக இன்னொரு கட்டு போட்டால், இந்தக் கட்டு தளர்ந்து விடும்- இதை உருவி வெளியே எடுத்துவிடலாம். அதே மாதிரி, நமக்கு இருக்கிற கர்ம பந்தங்களை எல்லாம், எந்த சாய்சுக்கும் வழியில்லாதபடி (கர்மபந்தம் ஏற்படுவதற்கு மூல காரணம் சாய்ஸ் என்பதால்) எந்த பேச்சும் பேசாமல் சாஸ்திரத்தை அனுசரித்துப் போனால், கர்ம பந்தம் தளர்ந்துவிடும்- இந்த சாஸ்திர கட்டு நாமாக போட்டுக் கொண்ட ஒன்று என்பதால் அதை அவிழ்ப்பதும் எளிதாகத்தான் இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை அவர் பிராமணர்களை ஒரு மாரல் முன்மாதிரிகளாய் இருக்க சொன்னார்: அவர் பிராமணர்கள் நாளைக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது, தினமும் உஞ்சவிருத்தி செய்து சாப்பிட வேண்டும் என்றெல்லாம் சொன்னார். இன்றைக்கு எஸ் சி எஸ் டீக்கு இருக்கிற ஒதுக்கீட்டை அவரானால் நூறு சதவீதமாகி விடு என்று சொல்கிறவர்.
எனக்கு ஒரு நண்பர் இருந்தார், அவர் பெரியவரின் தீவிர பக்தர். அவர் சொன்னதை எல்லாம் பின் பற்ற முயற்சி செய்பவர். நான் அவரிடம் பேசும்போது சொன்னது இதுதான், “சார், உங்களுக்கு என்ன, நீங்க செட்டியார், அவர் சொல்ற மாதிரி இருக்கறது உங்களுக்கு ஈசி. ஆனால் என்னை மாதிரி பிராமணணெல்லாம் எந்த வேலைக்கும் போகாம உஞ்சவிருத்தி என்கிற பேர்ல பிச்சை எடுத்துப் பிழைக்க முடியுமா?”
அவர் இருந்திருக்க வேண்டிய காலமே வேறு. நம் கையில் சிக்கி சீர்பட வேண்டும் என்பது அவர் தலை எழுத்தாக இருந்திருக்கும் போலிருக்கிறது!
(பின் குறிப்பு: நீங்கள் தெய்வத்தின் குரலைப் படிக்க வேண்டாம், எத்தனையோ துப்பறியும் கதைகள் படித்திருக்கிறீர்கள்: குடவோலை பற்றி அவர் சொல்கிற அத்தியாயத்தை மட்டும் படித்துப் பாருங்கள்- ஒரு நல்ல துப்பறியும் கதையை படித்த மாதிரி இருக்கும்.)
மே 4, 2010 at 9:38 பிப
// ஸ்ரீனிவாஸ் அவர்கள் எழுதிய பதிவுகள் பிடிக்காமல் அவரை மட்டம் தட்டுவதற்காக வலுவிலே இவரை இழுத்தீர்கள்…// நல்ல வேளை, ஸ்ரீனிவாஸ் நான் முன்னாள் எழுதிய பதிவுகள் பிடிக்காமல் என்னை மட்டம் தட்டவே பதிவு எழுதினர் என்று தோன்றாமல் இருந்ததே? 🙂 நானும் ஸ்ரீநிவாசும் மாதம் இரு முறையாவது சந்தித்துக் கொள்கிறோம். மட்டம் தட்ட வேண்டுமென்றால் நேரிலேயே செய்து கொள்வோம். 🙂
// நமக்கு இருக்கிற கர்ம பந்தங்களை… // கர்ம பந்தம் என்றால் பூர்வ ஜன்ம கர்மாவா? அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. Occam’s razor-தான்.
// அவர் பிராமணர்களை ஒரு மாரல் முன்மாதிரிகளாய் இருக்க சொன்னார்… // உண்மைதான்.
// குடவோலை பற்றி… // இதை சொல்கிறீர்களா? அந்த கால தேர்தல் பற்றி சந்திரசேகரேந்திரர் பகுதி 1, பகுதி 2
மே 4, 2010 at 11:32 பிப
குடவோலை- ஆமாம், ஆனால் விஷயம் அதுவல்ல. அதைப் பற்றிய விவரங்களை தான் சேகரித்தது எப்படி என்று அவர் narrate செய்வது ஒரு வகையில் ஷெர்லாக் ஹோம்ஸ் குறுக்கெழுத்து போடும்போது அவரது மனவோட்டம் பற்றி கதை எழுதினால் எப்படி இருக்கும், அப்படி துப்பறியும் கதை மாதிரி இருக்கும். எனக்குப் படிக்கப் பிடித்திருந்தது 🙂
மே 17, 2013 at 6:14 முப
//இன்றைக்கு எஸ் சி எஸ் டீக்கு இருக்கிற ஒதுக்கீட்டை அவரானால் நூறு சதவீதமாகி விடு என்று சொல்கிறவர். //
whether the followers of Mahapperivar are agreeable to his views as given above?
மே 19, 2010 at 5:29 பிப
RV,
I am late to this party! If the title offends you, think of it as the marketing ploy of the writer/publisher from the Kalki-Sadasivam-MS-Kalki empire which it truly is. Then there is no reason not to read the book.
Great blog, just don’t sell it too soon.
Best wishes
GP
மே 19, 2010 at 10:13 பிப
ஜீப், நீங்கள் சொல்வது போல அது marketing ployதான். பாஸ்கரும் சில இடங்கள் சுவாரசியமானவை என்று சொல்கிறார். பார்ப்போம்…
ஓகஸ்ட் 16, 2010 at 4:51 முப
@RV
//ரமணர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் போலிருக்கிறது!//
பாஸ்கர் குறிப்பிடுவதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் மேம் போக்காக எழுதி உள்ளது வருத்தத்தை தருகிறது. ரமணரைப பற்றி அதிகம் அறிந்து கொள்ளாமல், அவர் நகைச்சுவை உள்ளவர் என்று ஏதோ எழுதாதீர்கள். ரமணர் எல்லோரையும், குறிப்பாக எல்லா ஜீவராசிகளையும் ஒன்றாக பாவித்தவர்.
ஓகஸ்ட் 16, 2010 at 5:17 முப
தாஸ், நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை. பாஸ்கர் சொல்லி இருக்கும் ரமணர் பற்றிய கதை அவரது நகைச்சுவை உணர்வை காட்டவில்லையா?
ஓகஸ்ட் 16, 2010 at 5:27 முப
பாஸ்கர் என்ன அர்த்தத்தில் எழுதினர் என்று தெரியவில்லை. ரமணர் முதலில் தன்னை குரு என்று எப்போதும் சொல்லிக் கொண்டது கிடையாது, அவருக்கு சீடர்களும் கிடையாது.தன்னை மற்றவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அதை எப்போதும மறுத்ததும் கிடையாது, அதை பற்றி கவலைப் பட்டதும் கிடையாது. எப்போதும் சம நிலையில் இருந்த மகான் அவர்.
ஓகஸ்ட் 16, 2010 at 8:49 முப
அப்பாடா…
எதை சாக்காக வைத்து இங்கே மறுபடியும் பின்னூட்டம் போடலாம் என்று ரொம்ப நாளாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதற்கு வாய்ப்பு கொடுத்த திரு தாஸ் அவர்கள் வாழ்க…
ஆர் வி அவர்கள், ரமணர் (அவர்கள் என்று சொன்னால் கொஞ்சம் ஓவராக இருக்கும், இல்லையா?) நல்ல நகைச்சுவை உணர்வு உடையவராக இருந்தார் என்று புரிந்து கொண்டதில் தப்பில்லை- சமயம் கிடைக்கும்போதெல்லாம் டைமிங் ஜோக் அடிக்க ரமணர் தயங்கவில்லை என்பது அவரைப் பற்றி படிக்கும்போது தெரிகிறது. ஒரு தடவை, ராஜாஜி அவர்கள் வைஸ்ராய் ஆனபோது மவுண்ட்பட்டனின் உடையில் ராஜாஜி அவர்களின் உருவத்தை வரைந்து வைத்திருந்த ஒரு கேலிச் சித்திரத்தை பத்திரிக்கையில் பார்த்து மிகவும் ரசித்து அவர் உரக்கச் சிரித்ததாகத் தகவல்கள் பதியப்பட்டிருக்கின்றன. இது அவரது நகைச்சுவை உணர்வைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன்.
ஆனால், “ஏன் சாமி சிரிக்கறீங்க?” என்று அவரது சீரியசான அடியார்கள் கேட்டபோது, “இதோ பாருங்கப்பா, மௌன்ட்பாட்டனின் உடைகள் ராஜாஜியைப் போர்த்திருக்கிற மாதிரிதான் நம்மைப் பஞ்ச கோசங்களும் போர்த்து நம் ஸ்வரூபத்தை மறைக்கின்றன,” என்று பதில் சொன்னாராம்.
எனவே ஆர்வி அவர்கள் ரமணர் தேர்ந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்று சொன்னதிலும் எனக்கு உடன்பாடு, தாஸ் அவர்கள் சொன்ன மாதிரி அவரை காமடி பண்றவர் என்று மேம்போக்காகப் பார்க்கக் கூடாது என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடுதான்.
நன்றி- 🙂
ஓகஸ்ட் 16, 2010 at 2:25 பிப
On a related note…..
மஹாத்மா காந்தியை பற்றிய புத்தகம் ஒன்றை நுங்கம்பாக்கம் லேண்ட்மார்க்கில் வெளியிட்ட பொழுது இசைஞானி பேசியது.
“நான் பெரிதும் போற்றும் ரமணருக்கும் மஹாத்மாவிற்குமான தொடர்பு உன்னதமானது. மஹாத்மாவின் மேன்மையை உணர்த்த ரமணரின் வாழ்க்கையிலிருந்து இரண்டு சம்பவங்களை சொல்ல விரும்புகிறேன்.
ஒரு முறை மஹாத்மாவிற்கு நெருக்கமானவர்கள் குரு ரமணரை சந்திக்க வந்தார்கள். அவர்கள் மஹாத்மாவிற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ரமணரை கேட்டார்கள். அதற்கு ரமணர், “என்னை எந்த சக்தி இங்கே சாந்தம் கொள்ளச் செய்ததோ அதே சக்தி தான் அவரை அங்கே செயல் படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவருக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை” என்றாராம். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டது இல்லை. இப்போது இருப்பது போல தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பும் இல்லை. அப்படியிருந்தும் காந்தியின் மீது ரமணர் அவ்வளவு அபிமானம் வைத்திருந்தார். காரணம் ஒரு ஞானியின் மேன்மை இன்னொரு ஞானிக்குத் தான் தெரியும். நாம் மஹாத்மாவை மறந்ததின் விளைவு தான் இன்று நடைபெறும் வன்முறைகளுக்கும் பிற குற்றங்களுக்கும் காரணம். இன்று செய்தித் தாள்களில் வரும் சம்பவங்களையெல்லாம் பார்த்தால் மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
ரமணர் எதற்கும் கலங்காதவர். இந்து முஸ்லிம் மதச் சண்டைகளின் பொழுது ரமணாஸ்ரமம் முன்பே பல கொலைகள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் கூட நிச்சலனமாக பார்த்துக் கொண்டிருந்த ரமணர், மஹாத்மாவின் மரணத்தை பற்றிக் கேள்விப்பட்டவுடன் கண் கலங்கி விட்டார்.”
இதைச் சொன்ன பொழுது இசைஞானியும் கண் கலங்கிவிட்டார். அதன் பிறகு ஒரிரு வார்த்தைகளோடு தன் உரையை முடித்துக் கொண்டார்.
ஓகஸ்ட் 16, 2010 at 3:42 பிப
திரு இசைஞானி அவர்கள் எத்தனையோ கொலைகள் ரமணாஸ்ரமம் முன் நடந்திருக்கின்றன, அவற்றை ரமணர் நிச்சலனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி இருப்பது புது செய்தியாக இருக்கிறது. தகவலுக்கு நன்றி.
ஆனால் ரமணரின் அரசியல் பார்வை மற்றும் அவர் காந்தியடிகளின் மேல் வைத்திருந்த மரியாதை குறித்த விவரங்கள் டேவிட் காட்மேனின் இந்த தளத்தில் காணக் கிடைக்கிறது:
http://sri-ramana-maharshi.blogspot.com/2008/04/bhagavan-and-politics-of-his-day_2739.html
இந்த மாதிரி அக்கு வேறு ஆணிவேராக அலசி ஆராய்ச்சி செய்து துவைத்துக் காயப் போட வெள்ளைக்காரனால்தான் முடியும் என்று சொன்னால் இங்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நமக்கெல்லாம் கற்பனை அதிகம், சுவையான மித்களைப் படைப்போம். ஆனால் வெள்ளைக்காரர்கள்தான் பேக்ட்களுக்கு மரியாதை தந்து அவற்றைக் கொண்டு வரலாறு சமைக்கிறார்கள்.
இந்தக் கலையை நாம் இன்னும் பழகவே ஆரம்பிக்கவில்லை என்று தோன்றுகிறது…
ஓகஸ்ட் 16, 2010 at 4:02 பிப
>>ஆனால் ரமணரின் அரசியல் பார்வை மற்றும் அவர் காந்தியடிகளின் மேல் வைத்திருந்த மரியாதை குறித்த விவரங்கள் டேவிட் காட்மேனின் இந்த தளத்தில் காணக் கிடைக்கிறது:
http://sri-ramana-maharshi.blogspot.com/2008/04/bhagavan-and-politics-of-his-day_2739.html
அன்புள்ள natbas,
சுட்டிக்கு நன்றி. மிகவும் அருமையான நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்.
ஓகஸ்ட் 16, 2010 at 5:14 பிப
@RV
நான் எழுதியதில் பிழை/குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்!
வள்ளி மலை சுவாமிகள் ரமணரிடம் குருவாக இருக்கும்படி வேண்டிய போது, ரமணர் “உன்னுடைய குரு உன்னைத் தேடி வருவார்” என்று கூறினார். அவ்வாறே சேஷாத்ரி சுவாமிகள் வள்ளிமலை சுவாமிகளின் குருவானார்.
பால் பிரெண்டன் காஞ்சிபுரம் சென்று சந்திர சேகரேந்திர சரஸ்வதியிடம் சென்று கேட்ட போது, அவர் “நீ தேடி வந்த குரு திருவண்ணாமலையில் இருக்கிறார்” என்று கூறி அவரை ரமணரிடம் அனுப்பி வைத்தார்.
P.S: ஒரு முறை திருடர்கள் வந்து அடித்த போது, “சாமிக்கும் பூசை கிடைத்தது” என்று புன்முறுவலுடன் ரமணர் சொன்னார். தன்னையும் தனது உடலையும் பிரித்து பார்த்தவர் அவர். தான் தனது உடல் அல்ல என்று தெளிந்தவர் அவர். பிற்காலத்தில் நோயுற்ற போதும் “இந்த உடல்தான் உணருகிறது” என்று அதையும் அப்படியே ஏற்றுக் கொண்டவர்.
முடிந்தால் அவர் வாழ்ந்த (நெறி) முறை பற்றி படிக்கவும். பால் பிரெண்டன் பிரியா விடை பெரும் தருணம் கண்களில் நீரை வரவழைத்து விடும்.
ஓகஸ்ட் 16, 2010 at 10:09 பிப
ஸ்ரீனிவாஸ், இதில் என்ன பிழை காணட்டும்? பால் பிரண்டன் ரமணரை சந்தித்தது நடந்த நிகழ்ச்சிதானே?
பாஸ்கர், தாஸ், மறுமொழிகளுக்கு நன்றி!
ஓகஸ்ட் 16, 2010 at 10:21 பிப
தங்களின் மறுமொழிக்கு நன்றி. இப்போதுதான் மனது நிம்மதியாயிற்று.
நேரம் கிடைக்கும்போது தாங்கள் ரமண சரிதம் படிக்கவும்.
– Das
ஓகஸ்ட் 17, 2010 at 12:22 முப
அன்புள்ள ஆர்.வி,
பால் பிரெண்டன் ரமணரைச் சந்தித்த நிகழ்ச்சியை எழுதியவர் Das.
உங்கள் பதிலை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஓகஸ்ட் 17, 2010 at 4:10 முப
// ஒரு முறை திருடர்கள் வந்து அடித்த போது, “சாமிக்கும் பூசை கிடைத்தது” என்று புன்முறுவலுடன் ரமணர் சொன்னார்//
அதே மாதிரி, அவர் முட்டி வழியால் அவதிப் பட்டபோது, எத்தனையோ சொன்னாலும் கேட்காமல் அவரது காலை அடியார்கள் பிடித்து விட்டபடி இருப்பாராம். ஒரு முறை அவரே தனது காலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து பதைத்துப் போன அடியார் ஒருவர், “என்னது இது! நாங்கள் இத்தனை பேர் இருக்கும்போது தாங்களே இப்படி செய்து கொள்ளலாமா?” என்று முறையிட்டாராம். அதற்கு ரமணர் சிரித்துக் கொண்டே, “ஏன் அப்பா, நானு கொஞ்சம் புண்ணியம் சேர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டாராம்.
இதே முட்டி வலி தொடர்பாக இன்னொரு சம்பவம்.
இப்படி அவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் திருவண்ணாமலைக்கு நோய்களை எல்லாம் தனது தவ வலிமையால் போக்கித் தருகிற சாமியார் ஒருவர் வந்தாராம். அவரைக் காண மக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாகப் போனது குறித்து ஒருவர் ரமணரிடம் சொன்னபோது, “ஆமாம், ஆமாம், இங்கு இருக்கிற சாமிக்கே இஞ்சின் ஆயில் (மோட்டார் ஆயில் அல்லது க்ரீசாகக் கூட இருக்கலாம்- சரியாக நினைவில்லை) தேவைப்படுகிறது. எல்லாரும் அங்கே போகட்டும், எல்லாரும் அங்கே போனால் நமக்கு நிம்மதிதான்,” என்று சொன்னாராம்.
மிக இயல்பாக வாழ்ந்தவர் அவர். சொல்வதென்றால் எவ்வளவோ சொல்லலாம். ஆன்மிகம் தத்துவம் பக்தி குறித்த விஷயங்கள் அவரிடமிருந்து பக்தர்களால் பிடுங்கி எடுக்கப்பட்டவை. ஈஸ்வரன் குறித்த சில பாடல்கள் தவிர வேறு எதையும் அவர் தானாகவே செய்ததாகத் தெரியவில்லை.
அவரிப் பற்றிப் பேச வாய்ப்பளித்த தாஸ் அவர்களுக்கு நன்றி.
ஓகஸ்ட் 17, 2010 at 12:36 முப
@ஸ்ரீநிவாஸ்
நன்றி ஸ்ரீநிவாஸ், நான் தங்களது பதிவுகளை (சந்திர சேகரேந்திர சரஸ்வதி பற்றிய) படித்துக் கொண்டு இருக்கிறேன். ரமணி அண்ணா “சக்தி விகடனில்” எழுதிய கட்டுரைகளை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..
@RV
நான் பிழை / குற்றம் என்று குறிப்பிட்டது தங்களின் கட்டுரையை விமர்சனம் செய்தது பற்றி. தாங்கள் எனது எழுத்தினால் காயம் அடைந்திருந்தால் மன்னிக்கவும்.
மே 4, 2012 at 2:23 பிப
I am not a blogger at this site, but would like to add something to what RV said:
First of all, it is not correct to compare a guru and his shisya in the way RV has compared here. I would not make such comparisons.
Mahaperiyavaa is the benchmark for sanatana dharma. His Holiness exactly showed what sacrifice, righteousness and perfection is all about; and also what is exactly following the scriptures is all about.
YES, the scriptural injunctions are difficult to follow on all occasions. But His actions should remind us the baseline of what needs to be followed. On a day-to-day basis, we all do things that may not be totally in-line with scriptural injunctions. If we set ourselves and our actions as the baseline, then the benchmark/ baseline gets shifted with age. We would seem to be doing things perfectly, and what we would pass on to the next generation is something more skewed.
So from that angle, when we perform actions, we need to see how much we have deviated from the baseline, make a note of those deviations, ask for forgiveness, and wow to follow the baseline more closely in future. That is the difference between being orthodox and radical. HH Mahaperiyavaa was orthodox. He did not impose anything on anyone. He showed be His actions the merits of following the scriptural injunctions. Harmony in soceity will increase more when more people are soft in their approach, and show us what is the right path. This is the central message what His Holiness Mahaperiyavaa showed us by His actions.
His Holiness Sri. Jayendra saraswathi Swamigal is a worthy successor of Kanchi mutt, irrespective of what some of the anti-Hindu media and anti-brahminical sect of the population think.
1) In a time like this, when nobody stands up against conversion, His Holiness did talk about it verbally, works with Christians and Muslims in a friendly way to resolve issues amicably, Sri. Jayendra saraswathi Swamigal (HHJS) is the hope for Hindus. Ayodhya issue, and discussions with the archbishops are certainly appreciated not only by Hindus, but also by muslims and christians.
2) HHJS paves the way to remove the social issues about untouchability by visiting the dalit colonies, buiding the temples for them and teaching them the way to worship, and integrating them with the maisstream. YES, people have problems with this action. Extreme orthodox people do not like this, and the people who convert Hindus to other religions do not like this either, as their work becomes difficult.
3) It does matter whether AIADMK administration includes HHJS in a case where there is not even an iota of prima facie evidence of any involvement of the acharya in the case. It would be really nice, when people like RV can spend more time in observing a 24-day of HHJS and whether HH have time to speak on the phone for 15 hours or conduct the meetings with criminals as indicated in the case report. Hence, the whole article by RV linking HHJS to the murder is not a valid one.
4) Writing about HHJS character is even more despicable. RV has fallen a pray to the SUN TV and the rest of the tamil media, who do not really understand how HHJS has lived His life. And RV further goes to say that even with all the tainted character, HHJS is better than His guru.
First of all, I would suggest RV to visit HHJS as often as possible, make note of HHJS character and then write more about Him.
Sorry RV, if I have tried to find fault with you. But let us all first nurture good human beings and then only soceity will be a better place. Certainly, the Acharyas of Kanchi mutt are the best of human beings. There are many more such people among us. Let us try to support them, follow them as much as we can before condemning any of their actions – as the Saint poet Thiru Valluvar says, GUNAM NADI KUTTRAMUM NADI AVATTRUL MIGAI NADI MIKKA KOLAL.
மே 21, 2012 at 8:32 முப
The important role of a leading saint is to lead and guide both the king and the people with his words and action. In this way, Jayendrar was not acting just like a pooja conducting pundit saint, but as a pioneer and guide for Hindus. He initiated enormous schools, hospitals, brought out every cast to unite. It was a time before this – around 50 years when there was no fund in the Kanchi Mutt to do even daily rituals and pooja and maintain. Hos this transformation can happen. It is because Jayenyendrar adopted himself to the situation. In the Veda period there was no plane or car to move around and the no. of people whom you have to meet and travel were different. But now you have to move around the terrorists, violent attacking atheists, anti Hindu propaganda making other and Hindu religious people.
மே 23, 2012 at 4:43 முப
Please dont insult one of the most sparkling saint of 20th century who was considered very pious even by Dalai Lama and even Muslims & Chirstians.
You dont have the least qualification to speak agains one of the most universal saint. Look before you leap.
மே 23, 2012 at 7:31 முப
பதில் எழுதிய அனைவருக்கும் நன்றி.
RV2, // First of all, it is not correct to compare a guru and his shisya in the way RV has compared here. I would not make such comparisons. // I would. என்ன தவறு என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லாமல் இப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று பொதுப்படையாக பேசுவதில் அர்த்தமில்லை.
// Mahaperiyavaa is the benchmark for sanatana dharma. His Holiness exactly showed what sacrifice, righteousness and perfection is all about; and also what is exactly following the scriptures is all about.
YES, the scriptural injunctions are difficult to follow on all occasions. But His actions should remind us the baseline of what needs to be followed. On a day-to-day basis, we all do things that may not be totally in-line with scriptural injunctions. If we set ourselves and our actions as the baseline, then the benchmark/ baseline gets shifted with age. We would seem to be doing things perfectly, and what we would pass on to the next generation is something more skewed.
So from that angle, when we perform actions, we need to see how much we have deviated from the baseline, make a note of those deviations, ask for forgiveness, and wow to follow the baseline more closely in future. That is the difference between being orthodox and radical. HH Mahaperiyavaa was orthodox. He did not impose anything on anyone. He showed be His actions the merits of following the scriptural injunctions. Harmony in soceity will increase more when more people are soft in their approach, and show us what is the right path. This is the central message what His Holiness Mahaperiyavaa showed us by His actions. // காலம் காலமாக தொடர்வதால் மட்டுமே baseline நிர்ணயிக்கப்படுவதில்லை. அப்படி எடுத்துக் கொள்வது சுலபமான வழி. சந்திரசேகரர் போன்ற scholar அந்த சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்தது துரதிருஷ்டம். இத்தனைக்கும் ஆதி சங்கரரே சண்டாளனை முதலில் புறம் தள்ளினாலும் பிறகு தன தவறை உணர்ந்தார் என்ற பாரம்பரியத்தில் உள்ளவர்.
// HHJS paves the way to remove the social issues about untouchability by visiting the dalit colonies, buiding the temples for them and teaching them the way to worship, and integrating them with the maisstream. YES, people have problems with this action. Extreme orthodox people do not like this, and the people who convert Hindus to other religions do not like this either, as their work becomes difficult. // ஆம், அதனால்தான் ஜெயேந்திரருக்கு உயர்ந்த இடத்ததைத் தருகிறேன்.
// It does matter whether AIADMK administration includes HHJS in a case where there is not even an iota of prima facie evidence of any involvement of the acharya in the case. It would be really nice, when people like RV can spend more time in observing a 24-day of HHJS and whether HH have time to speak on the phone for 15 hours or conduct the meetings with criminals as indicated in the case report. Hence, the whole article by RV linking HHJS to the murder is not a valid one. // கருணாநிதி, ஜெயலலிதா, கனிமொழி, நித்யானந்தா, யார் மேலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நீங்கள் அவர்கள் உத்தமர்கள் என்று நினைக்கிறீர்களா?
// Writing about HHJS character is even more despicable. // என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் செய்தார் என்று சொல்லக் கூடாது என்கிறீர்கள். சரி உங்கள் கருத்து உங்களுக்கு.
ராஜகோபால், //
It is because Jayenyendrar adopted himself to the situation. // என் கருத்தில் ஜெயேந்திரர் முயற்சி செய்தார், வெற்றி பெறவில்லை.
கிருஷ்ணா, தலாய் லாமா சொல்வதைத் திருப்பிச் சொல்ல இன்னொருவர் எதற்கு? எல்லாரும் அவரவருக்கு நேர்மையான கருத்தை சொன்னால் போதும். அவுரு பெரிய மகான், அவரைப் பத்தி தப்பா சொன்னா சாமி கண்ணைக் குத்திடும் என்பதற்கும் ஈ.வெ. ரா. பெரிய மனுசன் – பெரியார், கருணாநிதி கலைஞர், ஜெயலலிதா புரட்சித்தலைவி, என் தலைவனைப் பத்தி ஏதாவது சொன்னே, மகனே வகுந்துருவேன் என்று கிளம்புவதற்கும் என்ன வித்தியாசம்?
மே 24, 2012 at 5:04 முப
Unfortunately RV will not recognize the greatness of the Acharyas of Kanchi mutt. That is why he even starts writing an article like this. These days we can write about anyone in the internet forums and make the articles viral in no time. We can use media like sun tv to create a perception that everyone in this world is flawed, a slave of the senses and does not possess anything as divinity.
As long as we do not understand what evolution is, what is possible in the limits of human capability and consciousness, we cannot fathom the depths of accomplishment and fulfillment of saints like Kanchi Mahaswami and Ramana Maharishi, who were jivan muktas (highest possible state in the process of evolution).
It is too shallow to judge Kanchi Mahaswami by couple of topics (caste system and role of women), and leave rest of what His Holiness stood for. His Holiness was a true embodiment of the ultimate reality. In His very presence, one can feel and experience the very truth of the upanishads. It does not matter what RV thinks or writes. I have personal experiences with His Holiness that is not felt in anyway in the presence of 99.9999% of the world’s 7 billion population.
I have personally seen how Kanchi Mahaperiyavaa blessed a scavenger who came for a blessing for his family member with serious illness. I know how much EVERYONE (irrespective of their caste, race or religion) was blessed by His Holiness.
Talking bad about the worthy successor of Kanchi Mahaswami, is not enjoyable for me. His Holiness Sri. Jayendra Saraswati swamigal is also a spiritual beacon, whose compassion has helped me on several occassions. HH is a worthy successor for Kanchi mutt irrespective of how political administrations use media to portray.
In Guru Gita, Lord siva says that “If you have meritorious deeds (punya karma), you will see your guru as Lord Siva. If you have more unworthy deeds (papa karma), you will see your guru as a human being like yourself.”
Accordingly, the guru’s blessing will help in the spiritual progress.
If we do not take advantage of our gurus, we are the losers. Not Them!!!
My prayers that everyone should be able to first see good things in people before jumping to conclusions and demonizing anyone.
I rest my case.
Sincerely,
RV2
ஜூன் 13, 2012 at 2:15 முப
‘மகாத்மாவைச் சந்தித்தபோது, இடையில் ஒரு பசுவை நிறுத்திக்கொண்டார்’
இப்படி நடந்திருக்கவே வாய்ப்பில்லை; ஆதாரமும் இல்லை; அவர் தினந்தோறும் மடத்த்திலும் வெளியிலும் பல சாதியினரையும் சந்தித்துக்கொண்டுதான் இருந்தார்;
முஸ்லீம்கள்கூட அவரைச் சந்தித்திருக்கிறார்கள்; இடையில் பசு என்ற விஷயம் எங்குமே நடந்ததில்லை.
அப்படியானால் பார்ப்பனரல்லாத ஒவ்வொரு சாதியினரைச் சந்திக்கும்போது இடையில் பசு இருந்ததா?
இல்லாத ஒன்றை ஏன் கற்பித்துச் சொல்லி, சொல்லி பொய்யையே உண்மையாக்கி, சரித்திர ஆதாரமாக்கி ஒருவரைக் கேவலப்படுத்த முயற்சிப்பது என்ன வக விமர்சனம்.
இட்டுக்கட்டி ஒருவரை தெய்வமாக்குவது தவறென்றால் கதைகள் பல கட்டி ஒருவரை கடையனாக்க முயற்சிப்பது என்ன வகை அறம்?
ஜூன் 13, 2012 at 2:56 முப
கண்ணன்,
காலம் போகப்போக அவரது அணுகுமுறையும் மாறியது. சிவாஜி கணேசன், வானதி திருநாவுக்கரசு, கண்ணதாசன், பால் பிரண்டன் என்று பலரும் அவரை சந்தித்திருக்கிறார்கள். நானே இந்தத் தளத்தில் என் அப்பா ஒரு நாடார் குடும்பத்தை மடத்திற்குள்ளே அழைத்துச் சென்றதையும் அவர்கள் எந்த விதத்திலும் வித்தியாசமாக நடத்தப்படவில்லை என்பதையும் எழுதி இருக்கிறேன். (அப்படி வித்தியாசமாக நடத்தப்பட்டிருந்தால் என்னால் அந்த வயதில் புரிந்துகொள்ள முடியவில்லை. :-)) ஆனால் காந்தியை பசு மாட்டுத் தொழுவத்தில் வைத்து சந்தித்ததும் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியே. விக்கிபீடியாவைப் பார்க்கவும்.
ஜூன் 13, 2012 at 3:45 முப
மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பது வேறு, மாட்டை விசேஷ ஏற்பாட்டுடன் இடையில் கொண்டு வந்து நிறுத்தி அதன் பிறகு சந்திப்பது வேறு. அவர் பல சமயங்களில் பல கிராமங்களில் வீடுகளில் தங்கும் ஏற்படு இருந்தும்கூட மாட்டுத் தொழுவத்தில் வந்து அமர்ந்துகொள்வது அவரது வழக்கமாக இருந்தது; அதை நானும் பார்த்திருக்கிறேன்.
அது போகட்டும், இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறி கட்டுரைகள் எழுதும் எவரும் இதுபோல் முற்காலத்தில் இருந்தார் பிற்காலத்தில் இப்படி மாறினார்(அவர்கள் பார்வையில் அப்படியிருந்திருந்தால்) என்று பதிவு செய்வதில்லையே ஏன்?
அடுத்து, இந்த வர்ணாச்ரம ஏற்பாட்டில் நம்பிக்கை, பெண்களைப் பற்றிய காலத்திற்கொவ்வாத சில வரையரைகள் போன்றவைகளேல்லாம் இந்த காஞ்சீபுரம் மடாதிபதியிடம் மட்டும்தான் இருந்ததா?
ஈவே ராமசாமி அவர் காலத்தைத்தாண்டிய மாமனிதர் என்பதுபோல் சொல்கிறீர்களே, கண்டவளும் ரவிக்கை அணிந்ததால் துணி விலை ஏறிவிட்டது என்பது எந்தக் காலக்கணக்கில் சேர்ப்பது?; கீழ வெண்மணி படுகொலையில் நாயுடுவுக்கு பட்சமாக இருந்தது எந்தக்காலத்தில்?
பெரியவர்மீது விமர்சனங்கள் இருக்கலாம்; அதற்காக அந்தப் பன்னாடையோ ஒப்பிட்டு இவரை ரொம்பக் கேவலப்படுத்தாதீர்கள்.
ஜூன் 13, 2012 at 6:18 முப
>> இது போன்ற குற்றச்சாட்டுக்களை கூறி கட்டுரைகள் எழுதும் எவரும் இதுபோல் முற்காலத்தில் இருந்தார் பிற்காலத்தில் இப்படி மாறினார்(அவர்கள் பார்வையில் அப்படியிருந்திருந்தால்) என்று பதிவு செய்வதில்லையே ஏன்?
கண்ணன், அதற்கு நான் என்ன செய்யட்டும்? வேண்டுமானால் அவரை தெய்வம் என்று புகழும் யாருமே அவர் இப்படி ஜாதி பார்த்ததைப் பற்றி என் எழுதுவதில்லை என்று யோசியுங்கள், ஒரு வேளை புரியலாம்.
>>அடுத்து, இந்த வர்ணாச்ரம ஏற்பாட்டில் நம்பிக்கை, பெண்களைப் பற்றிய காலத்திற்கொவ்வாத சில வரையரைகள் போன்றவைகளேல்லாம் இந்த காஞ்சீபுரம் மடாதிபதியிடம் மட்டும்தான் இருந்ததா?
இருப்பவர்கள் எல்லாரையும் கண்டிக்க வேண்டியதுதான், இதில் என்ன சந்தேகம்?
>> ஈவே ராமசாமி அவர் காலத்தைத்தாண்டிய மாமனிதர் என்பதுபோல் சொல்கிறீர்களே, கண்டவளும் ரவிக்கை அணிந்ததால் துணி விலை ஏறிவிட்டது என்பது எந்தக் காலக்கணக்கில் சேர்ப்பது?; கீழ வெண்மணி படுகொலையில் நாயுடுவுக்கு பட்சமாக இருந்தது எந்தக்காலத்தில்?
ஈ.வே.ரா. எங்கே வந்தார்? அவரைப் பற்றி ஒரு வரி கூட இல்லையே?
ஜூன் 13, 2012 at 3:40 முப
We do not have to prove anything here. Someone is having serious problems. God please help these people who have wildest of imaginations.
RV2
ஜூன் 19, 2012 at 4:40 முப
RV,
Before writing anything pls do have the habit of doing a complete research. You cannot expect a mathathipathi to come to the street and fight like protoganists. Periyava has been condemning dowry right from the beginning, but brahmins never listened to him. Can u expect him to go and protest against them? Can you expect him to do things like what periyar did? In fact he always condemned brahmins for having deviated from chanting the Vedas. He pointed that this was the sole reason for the decay of the Varnashrama dharma. As a sanyasi he had to follow so many rules, which is what he had been doing throughout his life. You are talking about bringing vedas to everyone. That is what people are doing right now. By so doing, the sanctity of Vedas are gone. Today, every idiot chants the vedas without adhering to any of the rules laid out by the rishis. There are even pocket editions of the Vedas available today. In fact one should follow strict diet before chanting the Vedas, only then the veda mantras will have the desired effect. The Veda mantras are nothing but sounds of the cosmos, so to chant them, the body has to be in a specific condition, only then it will have the desired effect. No one follows those rules today, which is why none of the mantras are making any effect. Mantras can do miracles when chanted under the right conditions. This is why a separate class was required to chant and preserve them. You people are just contemplating on the meaning of Vedas. But how many people are really aware about the vibrations and their effect? A separate class was created for the sole purpose of chanting the Vedas and preserving them, and that class were brahmins. Periyava exactly tried to restore the Brahmin class. What’s wrong with it? Vedas are not your stupid film songs, which everyone can sing. Modern science has not yet reached the maturity level to understand the science behind Vedic chanting. When it does, people will recognize the importance of this method and system.
ஜூன் 19, 2012 at 7:14 முப
வியாசா,
வர்ணாசிரம தர்மம் என்பது தழைக்க வேண்டிய ஒன்று என்று நினைக்கிறீர்கள். என் கண்ணில் அது தர்மம் இல்லை அதர்மம் என்பதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையே!
வேதத்தின் “புனிதத்தன்மை”யைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. எனக்கு நான் ஒருவன் நரகத்துக்குப் போனாலும் சரி, நிறைய பேர் சொர்க்கம் போகவேண்டும் என்று எல்லாருக்கும் மந்திரத்தை உபதேசித்த ராமானுஜர்தான் உசத்தி. உங்களுக்கு இருந்தால் உங்களோடு. எனக்கென்ன? மாக்ஸ் முல்லர் படிக்கலாம், ஆனால் தலித்களும் பெண்களும் படித்தால் குடி மூழ்கிவிடும். என் குடி முழுகாது, அவ்வளவுதான். சும்மா வைப்ரேஷன் என்றெல்லாம் ஜல்லி அடிக்காதீர்கள். உண்மையிலேயே அப்படித்தான் என்றால் பரிசோதனை நடத்துங்கள், பத்து முறை ஆசாரமாக உச்சரித்து அத்யயனம் செய்தோம், இன்னின்ன விளைவுகள் ஏற்பட்டன என்று ஒரு பேப்பர் எழுதுங்கள். அதற்கெல்லாம் தைரியம் இல்லாவிட்டால் என் நேரத்தை வீணடிக்காதீர்கள்.
மே 17, 2013 at 6:21 முப
//மாக்ஸ் முல்லர் படிக்கலாம், ஆனால் தலித்களும் பெண்களும் படித்தால் குடி மூழ்கிவிடும்.//
Can anybody ,within Hindufold, oppose this without being criticised?
ஜூன் 19, 2012 at 8:12 முப
RV,
நீங்கள் உங்கள் தாய் தகப்பனுக்குதான் பிறந்தீர்கள் என்று டி என் எ டெஸ்ட் எடுத்து தான் நம்பினீர்கள? எல்லாவட்ட்ருக்கும் அறிவியல் சான்று கொடுக்க முடியாது. இருப்பினும் நான் முதலியே சொன்னது போல் வேதங்களுக்கு ஒரு வைப்ரஷன் இருக்க தான் செய்கிறது. இதை நவீன விஞனத்தில் ஓரளவு நிருபிதிர்ருகிரர்கள். இன்னும் துல்லியமாக நிரூபிக்க இன்னும் நவீன விஞானம் வளர வேண்டும். இதெல்லாம் தெரியாமல் பிதட்ட்ருவதை நிறுத்துங்கள். இப்பவும் சொல்கிறேன், நீங்கள் பார்க்கும் வர்ணாச்ரம தர்மம், அழிவின் விளிம்பில் இருக்கும் பொழுது பார்த்தது. வர்ணாஸ்ரமத்தின் உச்சத்தை நீங்கள் படிக்கவே இல்லை போலிருக்கு. அது சரி, பெரியவரை பற்றியே சரியாக படிக்கதாக நீங்கள் இதயா படிக்க போகுரீர்கள்? மனிதனை மேம்படுத்தும் மிக அற்புதமான ஒன்று வர்ணாஸ்ரமம். அது இக்காலக்கட்டத்துக்கு ஒத்து வராது என்பது உண்மை தான், ஆனால் அதற்காக அது மட்டமானது என்று அர்த்தம் இல்லை. முதலில் ஒரு விஷயத்தை பற்றி பேசுவதற்கு முன்னால் அதை சரியாக ஆராய்ச்சி செய்ய கட்ட்ருக்கொல்லுங்கள், பிறகு விமர்சிக்கலாம். உங்களை போன்றவர்களுக்கு மறுமொழி எழுதி நானும் என் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.
ஜூன் 19, 2012 at 9:15 பிப
என்ன மடத்தனமாக இருக்கிறதே? // இருப்பினும் நான் முதலியே சொன்னது போல் வேதங்களுக்கு ஒரு வைப்ரஷன் இருக்க தான் செய்கிறது. // நீங்கள் இருக்கிறது என்பீர்கள், நான் இல்லை என்கிறேன், அப்புறம் என்னதான் முடிவு? நீங்கள் என்ன கடவுளா, neengaL சொல்வதை எந்த நிரூபணமும் இல்லாமல் நான் ஏற்றுக் கொள்ள?
ஜனவரி 23, 2014 at 10:14 முப
Dear RV, Is this site still active? May I write something in this?
ஜனவரி 23, 2014 at 10:16 முப
Are there any comments on the recent court verdict on Sankararaman murder cae?
ஜனவரி 30, 2014 at 10:01 முப
All words in any language have powers to motivate humans and even animals. for example, if I call Mr RV a very noble person, he will definitely feel happy although he may, out of humility, deny that epithet. But if I call him by abusive langauge he will certainly be agitated and if my words are provocative enough he may even assault me physically. It is also common knowledge that even animals like domesticated dogs or cows respond to kind or rude words. Therefore, it is not surprising that vedas have power to confer benefits in our life. The Vedas are positive statements which have been chanted over eons and so have the power to change our life and thought. Swami Vivekananda said, “Repeated thoughts makes a habit; repeated habit makes a character and character, your destiny”. I hope you would give some weightage to such an authority and avoid rejecting this idea without proper research and empirical tests.
பிப்ரவரி 1, 2014 at 7:16 முப
Doctor Iyer,
// weightage to such an authority and avoid rejecting this idea without proper research and empirical tests… // The shoe is on the other foot. If someone proposes a theory, it is unto him/her to provide some data to back it up. If I say that all should chant my name for 5 minutes and that would bring lot of benefit to him/her, it is unto me to provide some data. I have come across lot of people talking about the benefit of vedas. I have not come across one who is willing to run one experiment that can be repeated. Perhaps you can be that one?
பிப்ரவரி 2, 2014 at 11:24 முப
//i have not come across one who is willing to run one experiment that can be repeated. Perhaps you could be one?//
Let me honestly assert that I have conducted numerous experiments in my life of 63 years, with mantras likie the Gayatri and have invariably found that they give the desired results if done according to the prescribed procedures and frame of mind. I have also come across many others who have corroborated this fact in their experiments.
For example, when I was in a serious life situation I chanted the Gayatri mantra 1000 times daily for 8 days and got miraculous relief from my serious personal troubles unexpectedly. Believe me, this experiment had been repeated 5 or 6 times in my life on various occasions and it was found to be valid.
However, one caveat! Our intention while chanting should be pure and not selfish or harmful to any other being and we should be fully mindful about what we are doing. Only then the mantra chanting will have effect. In fact, doing my regular Sandhya upasana for the last five decades has given me complete peace of mind, wisdom, improved my memory power and IQ vastly apart from scores of other benefits.
Also, I have noticed that on occasions when I was not mindfull of my saadhana (austereties) or there was any lapse in ethical behaviour, the mantra failed to protect me, thus pointing out my errors/shortcomings/omissions.
Thus the mantra protects one from falling into unethical behaviour which is of prime importance for acheiving wisdom or complete peace of mind. “Mantra” means one that protects the person chanting it.
The same observations apply to other vedic mantras.
You may read the literature in the following link if you are interested to know more:
http://www.stephen-knapp.com/vedic_culture_hinduism_a_short_introduction.htm
It is upto you to try and understand the truth behind the power of the mantras.
If you want to deny the above arguments it is upto you to disprove it by conducting an experiment and publishing the results. I am willing to beleive your statements if you are an honest aspirant to know the truth and you can convincingly prove that you have condcuted your experiments according to the rules that dictate such experiments.
பிப்ரவரி 2, 2014 at 3:09 பிப
A scientific frame of mind does not rush to rubbish any proposition without adequate scrutiny. The way Mr RV has been writing this blog seems to me that he is rather hasty in brushing aside many observations of other friends without adequate thought and scutiny. I think this is far from a scientific temper which required for achieving anything worthwhile in life.
In the last five decades I have spent the best part of my time learning about Sanatana Dharma. However, even after studying everything from Max Muller to Sw Vivekanada or Adi Shankara to lord Buddha, (in original Sanskrit literature apart from English translations), and doing adhyayana of upanishads (as well as studying brahma sutra) I feel there is much more to this Dharma than I have learned or, ever will. I have not acquired any more knowledge than an ant that would try to eat a microscopic particle of a mountain of jaggery.
Therefore, please do not think I am here to exhibit my erudition. Not in the least.
பிப்ரவரி 3, 2014 at 11:45 முப
However, by way of clarification I just want to mention that I do NOT differ much from you (RV) on your views on Kanchi seers – i.e., all the three of them starting from Sri Chandrasekharendra. Especially, I would agree with you on Jayendra.
ஜனவரி 4, 2016 at 2:39 பிப
காஞ்சி மஹாபெரியவாளை பெயர் சொல்லி அழைப்பதே தவறு. அவரை பற்றி பேச கூட ஒரு தகுதி வேண்டும். மடாதிபதிகளுக்கு முதலில் மரியாதை கொடுத்து பழக முயற்சி செய்யவும். உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லையென்றால் இந்த மாதிரி பதிவை தவிர்க்கவும். பெரியவா ஒன்றும் சித்து விளையாட்டுக்காரர் இல்லை. முதலில் தெய்வத்தின் குரல் முழுவதும் படியுங்கள். சித்தம் கலங்கியிருப்பின் உங்களுக்கு நன்றாக தெளியும். அதன் பின்னர் கேள்வி கேளுங்கள். பதில் சொல்ல நாங்கள் இருக்கிறோம்.
ஜனவரி 4, 2016 at 4:41 பிப
ஹாலாஸ்ய சுந்தரம் ஐயர்,
// உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இல்லையென்றால் இந்த மாதிரி பதிவை தவிர்க்கவும். // அதை விட சுலபமான வழி ஒன்று இருக்கிறது. நீங்கள் இந்தப் பதிவைத் தவிர்த்துவிடலாம்!
ஜூன் 26, 2020 at 5:27 பிப
இற்றுப்போன அழுகிய சிந்தனை கொண்ட ஈவேராவையே பெரியார் என்று கொண்டாடும்போது, வாழும் காலத்தில் ஒரு அப்பழுக்கற்ற துறவியாக அருள்நிறை மஹானாக வாழ்ந்த பெரியவரை தெய்வத்திற்கு இணையாக வணங்குவதில் யாதொரு தவறுமில்லை. ஈவேரா தமிழ் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், பெண்கள் பற்றியும் உதிர்த்துள்ள கருத்துக்களைப் படித்தால் காரி உமிழத்தோன்றும்
நவம்பர் 26, 2021 at 4:47 முப
காரணம் தெள்ளத்தெளிவு! அந்த விதவை மொட்டையடித்துக் கொள்ளாமல் முழுக் கூந்தலோடு இருந்தார்.