இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான உப்பிலி ஸ்ரீனிவாஸ் கொஞ்ச நாளாக சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் புகழும் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு அவர் கருத்துகளில் முழு இசைவு இல்லை. என் கண்ணில் சந்திரசேகரர் scholar, அவ்வளவுதான். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியவை:

ஊரில் பரவலாக இருக்கும் நினைப்பு இதுதான். சந்திரசேகரர் உத்தமர். ஞானி. வேதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர். உண்மையான துறவி. காஞ்சி மடத்துக்கு இன்றைக்கு மிச்சம் இருக்கும் பேருக்கும் புகழுக்கும் அவர்தான் காரணம். ஜெயேந்திரரோ பலவீனங்கள் உள்ளவர். கொலை செய்யத் தூண்டினார் என்று நம்புகிறோமோ இல்லையோ பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவருக்கு தத்துவ ஞானம் இருக்கிறதோ இல்லையோ அது அதிகமாக வெளியே தெரியவில்லை. அரசியலில் எல்லாம் தலையிட்டார். அவரால்தான் காஞ்சி மடத்துக்கு பேர் கெட்டது. எனக்கும் ஏறக்குறைய இதே எண்ணம்தான். சந்திரசேகரரை பெரும்பாலான பிராமணர்கள் தெய்வம் என்று கொண்டாட முக்கியமான காரணமே அவர்களுக்கு ஜெயேந்திரர் மேல் உள்ள அதிருப்தியும் வெறுப்புமே என்று எனக்கு தோன்றுகிறது. ஜெயேந்திரர் சந்திரசேகரரின் அடிச்சுவட்டிலேயே சென்றிருந்தால் இன்று சந்திரசேகரரை எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

சந்திரசேகரேந்திர சரஸ்வதி

சந்திரசேகரர் தனிப்பட்ட முறையில் உத்தமர்தான். ஒரு உண்மையான துறவிக்குரிய லட்சணங்கள் அனேகமாக அவருக்கு பொருந்தித்தான் இருக்கின்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பெரும் பாண்டித்தியம் உடையவர். அவருக்கு தமிழில் பாண்டித்தியம் இருந்தது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. (டாக்டர் நாகசாமி சில இடங்களில் இது பற்றி பேசுகிறார்.) மறைந்துகொண்டிருக்கும் நம் பாரம்பரியம் மீண்டும் தழைக்க பாடுபட்டார். அதர்வ வேதம் மீண்டும் ஓரளவு உயிர்த்தெழ அவர்தான் காரணம் என்று தெரிகிறது. ஒரு நாளைக்கு உப்பில்லாத வாழைப்பூ பொரியலும் சாதமும் கலந்து ஒரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொல்வார்கள். உண்மையோ பொய்யோ, மனிதர் உடலில் ஊளைச்சதை எதுவும் கிடையாது. ஊளைச்சதையை விடுங்கள், சதையே கிடையாது. (ஜெயேந்திரர் பார்க்க கொஞ்சம் புஷ்டியாக இருப்பார்.)

இப்படி உண்மையான துறவு ஒரு புறம், அதே நேரத்தில் திறமையான நிர்வாகி/மடாதிபதியும் கூட. ஒரு மடத்தின் பலம் அந்த மடாதிபதி மேல் மக்களுக்கு இருக்கும் நல்ல எண்ணமே என்பதை புரிந்து வைத்திருந்தார். ஒரு நல்ல தலைவனுக்கு வேண்டிய charisma அவரிடம் நிறைய உண்டு. அவரை சந்தித்துப் பேசியவர்களில் அநேகமானவர்கள் மிகவும் impress ஆகி இருக்கிறார்கள். அவர் வருவதற்கு முன் ஐயர்கள் எல்லாரும் ஒரு மடாதிபதி பின் நின்றிருக்கமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். ஜெயேந்திரர் பேர் இப்படி சீப்பட்ட பிறகும் முக்கால்வாசி ஐயர் கல்யாணப் பத்திரிகைகள் காஞ்சி சங்கராச்சாரியார் ஆசியுடன் என்றுதான் அடிக்கப்படுகின்றன (என் கல்யாணப் பத்திரிகையும் அப்படித்தான்.) சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்த கும்பகோணம் மடம் இன்று ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஜெயேந்திரர் கேவலப்படுவதற்கு முன் சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களில் அது மக்கள் கண்களில் ஏறக்குறைய முதல் இடத்துக்கே வந்து கொண்டிருந்தது. இப்படி அந்த மடத்துக்கு மதிப்பு இருப்பதற்கு சந்திரசேகரரே முக்கிய காரணம். இங்கே ஒரு முரண்பாடு இருக்கிறது – மடத்தின் பிரஸ்டிஜை வளர்த்த ஒரு துறவி பொய் சொன்னாரா? எனக்குத் தெரிந்து அவர் எங்கேயும் தன் வாயால் இது ஆதி சங்கரரால் நிறுவப்பட்டது என்று சொன்னதில்லை, ஆனால் அப்படி சொல்வதை எப்போதும் தடுத்ததில்லை. அதை மறைமுகமாக ஊக்குவித்தார் என்றுதான் நினைக்கிறேன். இந்த ஒரு விஷயம் அவரது துறவுக்கு ஒரு இழுக்குத்தான்.

ஜயேந்திர சரஸ்வதி

ஜெயேந்திரரோ, சொல்லவே வேண்டாம். கோர்ட்டில் எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது – ஆனால் என்ன தீர்ப்பு வந்தாலும் அவர் மீது படிந்த களங்கம் போகாது. பெண் விஷயத்தில் வீக் என்று அனேகமாக எல்லாரும் நினைக்கிறார்கள். கொலை பற்றி எனக்கே கொஞ்சம் சந்தேகம் உண்டு. அவர் இப்படி எல்லாம் கேவலப்படாவிட்டாலும் அவர் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு – ராம ஜன்ம பூமி விஷயத்தில் அவருடைய தலையீடு, பொதுவாக அவருடைய பி.ஜே.பி. சார்பு நிலை, ஒரு காலத்திய ஜெயலலிதா சார்பு நிலை எல்லாம் துறவுக்கு இழுக்கு. ஒரு துறவி அரசியலில் தலையிடுவது என் கண்ணில் தவறுதான். என் நினைவு சரியாக இருந்தால் இவர் பி.ஜே.பி. அலுவலகம் எல்லாம் திறந்து வைத்திருக்கிறார். ஒரு காலத்தில் ஜெயலலிதா, பி.ஜே.பி. தலைவர்கள் எல்லாருக்கும் வேண்டியவராக இருந்தார். ஜெயலலிதா கொண்டு வந்த கட்டாய மத மாற்ற தடை சட்டத்துக்கு இவர்தான் மூல காரணம் என்று கேள்வி. மேலும் சந்திரசேகரரோடு ஒப்பிடும்போது இவருக்கும் வேதம், சாஸ்திரம் பற்றி தெரிந்திருப்பது குறைவுதான் என்று தோன்றுகிறது.

ஆனால்:
சந்திரசேகரர் ஹிந்து மதத்தின் காலாவதி ஆகிவிட்ட, அடக்குமுறை அம்சம் உள்ள சில நியதிகளை மீண்டும் நிறுவ முயன்றார். முக்கியமாக, ஜாதி: அவருக்கு வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இல்லை, ஆனால் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் வேதம் படிப்பது குறைகிறதே என்ற கவலை இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் சொல்லித் தருகிறேன், வேதம் தழைத்தால் போதும் என்று அவர் கிளம்பவில்லை. அவருக்கு பிறப்பின் அடிப்படையில் வர்ணாசிரமம் என்பதில் நம்பிக்கை இருந்தது. பி.ஏ. கிருஷ்ணன் தலித்கள் கோவிலுக்கு வரலாம் என்று 1939இல் ராஜாஜி தமிழ் நாட்டு முதல்வராக இருந்தபோது கொண்டு வரப்பட்ட மசோதாவை எதிர்த்தார் என்று குறிப்பிடுகிறார். காந்தி அவரை பார்க்க வரும்போது நடுவில் ஒரு பசு மாட்டை நிறுத்தினாராம். ஏனென்றால் காந்தி பனியா, பிராமணர்களை விட “கீழ் ஜாதி”, பசு மாடு இல்லாவிட்டால் “தீட்டாகிவிடும்”. மொட்டை அடித்துக் கொள்ளாத விதவைப் பெண்களைப் பார்க்க மாட்டாராம்; அப்படி பார்க்க நேரிட்டால் அன்று சாப்பிட மாட்டாராம். இதனால் அவரை பார்க்காமல் தவிர்த்த உறவினர்கள் எனக்கு உண்டு. பெண்களுக்கு சமூகத்தில் என்ன இடம் சரியானது என்று நினைத்திருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது.

செல்வாக்கு நிறைய இருந்தது. அவர் செயலாக இருந்த காலத்தில் பிராமணர்கள்தான் நிறைய படித்த ஜாதி. இவர் சொல்லி இருந்தால், ஜாதியின் தாக்கம் இன்னும் குறைந்திருக்கும்; பெண்கள் இன்னும் கொஞ்சம் சமமாக நடத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் இவருக்கே அது தவறு என்று தோன்றவில்லை, அப்படிப்பட்ட சமூகமே சரி என்று நினைத்தார். அவரை குறை சொல்லியும் பயனில்லை. 1894இல் பிறந்தவர். அவர் வளர்ந்த காலத்தின் விழுமியங்கள் வேறு. அவரால் அந்த விழுமியங்களை தாண்ட முடியவில்லை.

ஜெயேந்திரர் 1935இல் பிறந்தவர். அவருடைய இளமைக் காலத்தில் ஜாதி தவறு என்று சொல்வதை நிச்சயமாக கேட்டிருப்பார். ஜெயேந்திரர் பல வருஷங்களாக மடத்தை சமூகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்று முயன்றார். மடத்தை இன்னும் வலுவானதாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வமாகக் கூட இருக்கலாம் – ஆனால் தலித்களோடு பழக முயன்றார். மடம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொந்தமானது என்று ஆக்க முயன்றார். அவரை சந்திரசேகரர் இருந்த வரைக்கும் சுதந்திரமாக இயங்கவிடவில்லை. ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய நிகழ்ச்சிக்கு இதுதான் மூல காரணம் என்று சொல்கிறார்கள். ஜெயேந்திரர் தன் முயற்சியில் வெற்றி அடையவில்லை, இன்றும் மடம் பிராமணர்களின் மடமே. ஆனால் அவர் முயன்றார் என்பது பெரிய விஷயம். ஜெயேந்திரர் சந்திரசேகரரை விட நாற்பது வயது இளையவர். அவருக்கு இது இன்னும் சுலபமாக இருந்திருக்கலாம்.

ஒரு பக்கம் தனிப்பட்ட முறையில் உத்தமரான, ஆனால் காலாவதி ஆகிவிட்ட ஹிந்து மதத்தின் சில பழக்க வழக்கங்களை மீண்டும் நிலைநிறுத்த முயன்ற ஒரு உண்மையான துறவி; இன்னொரு பக்கம், தனிப்பட்ட முறையில் பலவீனங்கள் உடைய, ஆனால் மடத்தை பயனுள்ள பாதையில் திருப்ப முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு மனிதர். எனக்கு மடத்தை மாற்ற முயன்றவர்தான் மேலானவராகத் தெரிகிறது.

டிஸ்க்ளைமர்: நான் தெய்வத்தின் குரல் எல்லாம் படித்தத்தில்லை. படிப்பேன் என்ற நம்பிக்கையும் இல்லை. புத்தகத்தின் பேரே கொஞ்சம் கடுப்படிக்கிறது. மனிதனை தெய்வமாக்காதீர்கள்!

பின்குறிப்பு: இந்த தளத்தின் இன்னொரு பொறுப்பாளரான நண்பர் ஸ்ரீனிவாஸ் ஒரு பதிவில் சந்திரசேகரர் பல்லக்கிலிருந்து மாயமாக மறைந்து போனார் என்றெல்லாம் எழுதி இருந்தார். இதே ஸ்ரீனிவாஸ் பெங்களூரில் இருக்கும் நித்யானந்தா எனக்கு திருவண்ணாமலையில் காட்சி தந்தார் என்று சாரு நிவேதிதா எழுதினால் விழுந்து விழுந்து சிரிப்பார். 🙂 மனிதனை தெய்வமாக்காதீர்கள், அனாவசிய கட்டுக்கதைகள் வேண்டாமே!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஆளுமைகள்–>காஞ்சி சங்கர மடம் பற்றிய பதிவுகள்