ஒரு சர்தார்ஜியின் பார்வையில் சென்னை! (நன்றி – ஆனந்த விகடன் – Issue Date – 18-11-2009)
உலகெங்கிலும் காதல் திருமணங்கள் ரொம்பவும் சிம்பிள். பையனுக்கு பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள்.
ஆனால், இந்தியக் காதல் திருமணத்தில் இன்னும் சில சடங்குகள் இருக்கின்றன. பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்தினருக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினருக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்தினருக்குப் பெண்ணின் குடும்பத்தினரைப் பிடிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினருக்குப் பையனின் குடும்பத்தினரைப் பிடிக்க வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் அந்தப் பெண்ணும் பையனின் காதலில் இருந்தால்தான், அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள்!
இந்த ‘நறுக் சுருக்’ முன்னுரையுடன் துவங்குகிறது சேத்தன் பகத்தின் சமீபத்திய ஆங்கில நாவல் ‘2 states.’
சேத்தன் பகத்? இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இளமை எழுத்தாளர். ‘இந்தியா இப்போது இப்படித்தான் இருக்கிறது!’ என்று இளமை இந்தியாவைப் புத்தகத்தின் பக்கங்களில் காட்சிப்படுத்துபவர். ‘one night at the call centre’,’five point something’,’there mistakes of my life’ என இவரது முந்தைய நாவல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பெஸ்ட் செல்லர்ஸ். 25 வயதைத் தாண்டாத கேரக்டர்கள், காலேஜ் கேம்பஸ், 80% காமெடி, 15% செக்ஸ், 5% மெசேஜ்… இவ்வளவுதான் சேத்தன் பகத்தின் ஃபார்முலா. பரபரவென விற்கும் ஒவொரு நாவலும் பிறகு சல்மான் கான், அமீர் கான் நடிக்கும் படங்களாக வடிவெடுக்கின்றன. வெயிட்… சேத்தன் புராணம் போதும். இங்கே நாம் பேசவிருப்பது சேத்தனின் ‘2 states’ நாவல் பற்றி மட்டுமே. காரணம், அதன் கதைக் களம்!
கதைப்படி பஞ்சாபிப் பையன் கிருஷ்சுக்கும் சென்னைப் பெண் அனன்யா சுவாமிநாதனுக்கும் காதல். அதைப் பெற்றவர்களின் அனுமதியுடன் கலகலப்பான கல்யாணம் ஆக்குவதற்காக இருவருமே போராடுவதுதான் கதை. கிட்டத்தட்ட ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தின் கதைதான். தனது டிரேட் மார்க் கிண்டல், நக்கல், கேலியுடன் இந்த நாவலிலும் முத்திரை பதித்திருக்கிறார் சேத்தன். ஆனால், ஒரு தமிழனாக, சென்னைவாசியாக அந்த நாவலைப் படிக்கும்போது சில இடங்களில் மூக்கு சிவப்பதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. நாம் சர்தார்ஜிகளை ஜோக்கடித்துக் கலாய்ப்பதுபற்றி சேத்தனுக்குத் தெரிந்திருக்கிறது போலும். சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர்களைச் சவட்டி எடுத்திருக்கிறார்.
கிருஷ் சென்னையில் ஃப்ளைட் இறங்கியதும், மொழி தெரியாதவர்களை ஆடோக்காரர்கள் மிரட்டுவதைப்பற்றி மட்டுமே முழு அத்தியாயம். ஏர்போர்ட் டு நுங்கம்பாக்கத்துக்கு ஐந்து விரல்களைக் காட்டுகிறார் ஆட்டோக்காரர்.
’50 ரூபாய்தானே!’ என்று ஏறியமர்ந்து இறங்கினால் ‘நான் ஐந்நூறு ரூபாய் சொன்னேன்!’ என்று வம்பிழுக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பக்கம் கடந்து செல்லும் தமிழறிந்த பஞ்சாபியை வைத்துச் சமாளிக்கிறார் கிருஷ். ஏமாந்த ஆட்டோ ‘…… …..’ என்று பளீர் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். இன்னொரு இடத்தில் ஒரு சமையல் ஆள் இரண்டு வசைச் சொற்களால் கிருஷ்ஷை அர்ச்சிக்கிறான். அம் மூன்று வார்த்தைகளும் சுடு சுளீர் கெட்ட வார்த்தைகள். வாசித்துக்கொண்டே இருக்கும்போது திடுக்கிடவைக்கிறது ஆங்கிலத்தில் இருக்கும் அந்த ஆபாசத் தமிழ் வசவுகள்.
கதை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடப்பதால் அனன்யாவை ஜெயலலிதாவுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார்கள் கிருஷ்ஷின் பஞ்சாபிச்சொந்தங்கள். ‘இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். கொஞ்சம் இடம் கிடைத்தால் ஆளை மயக்கி இழுத்து வசியம் செய்துவிடுவார்கள். ஜெயலலிதா… ஜெயலலிதா’ என் கிறார் ஒரு பஞ்சாபி அத்தை. ‘என்னது… தமிழகத்தின் முதல்வர் முன்னாள் நடிகையா? எப்படி… அது எப்படி சாத்தியம்!’ என்று ஆச்சர்யப்படுகிறார் இன்னொரு அத்தை. ‘இந்த தென்னிந்தியர்களுக்குத் தங்கள் மகளை எப்படி வளர்ப்பதென்றே தெரியவில்லை. ஹேம மாலினி முதல் ஸ்ரீதேவி வரை இந்தக் கதைதான்!’ என்று அலுத்துக்கொள்கிறார் கிருஷ்ஷின் தாய்.
ஊரெங்கும் சினிமா போஸ்டர்கள், அதில் ‘மாமா’வாகக் காட்சியளிக்கும் ஹீரோக்கள் அருகில் நேற்று தான் வயசுக்கு வந்த ஹீரோயின்கள், லுங்கியுடன் ‘ஷாப்பிங்’ செய்யும் தமிழர்கள் என்று நீளும் வர்ணனைகள்.
கல்லூரியில் படிக்கும்போதே, ஹாஸ்டல், காலேஜ் கேம்பஸ்களிலேயே ஹீரோ – ஹீரோயின் செக்ஸ் வைத்துக்கொள்வது சேத்தனின் நாவலில் தவறாமல் இடம்பெறும்தான். ஆனால், இதில் கிருஷ் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டுக்குச் செல்கிறார் அனன்யா. அங்கு ஒரு பீர் குடித்துவிட்டு, கிருஷ்சுடன் கசமுசா செய்கிறார். அவர்கள் பெட்ரூமில் பிஸியாக இருக்கும்போது சேத்தனின் அபார்ட்மென்ட் தோழர்கள் வெளியே தேவுடு காத்திருக்கிறார்கள். ‘தமிழ்ப் பெண்கள் இன்னும் அந்த எல்லைக்கெல்லாம் போகலைப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
சிட்டி பேங்க்கையும் விட்டுவைக்கவில்லைசேத்தன். தங்கள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிட்டி பேங்க் தெரிந்தே ஈடுபடுகிறது என்ற ரீதியில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். எந்த ஒரு விஷயத்தையும் இந்த அளவுக்குக் கேலி கிண்ட லுக்கு உள்ளாக்குவதற்கு ஓர் ஆங்கில எழுத்தாளருக்கு இருக்கும் சுதந்திரத்தை உணரும்போது, தமிழ் எழுத் தாளர்களின் நிலை பரிதாபமாக இருப்பதை எண்ணி ஆதங்கப்படுவதைத் தவிர, என்ன சொல்ல?!
”ஏன், தமிழர்களை இந்த வாரு வாரியிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், ”எனது மனைவியும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்தான். எங்கள் திருமணத்தின்போது நான் எதிர்கொண்ட பல சம்பவங்களின் பிரதிபலிப்புதான் இந்த நாவலாக வடிவெடுத்திருக்கிறது. நான் புத்தகத்தில் பஞ்சாபிகளையும் கிண்டலடித்திருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தைக் கவனியுங்கள்… இந்தப் புத்தகத்தை நான் எனது மாமனார், மாமியாருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். உலக வரலாற்றில் யாராவது அப்படிச் செய்திருப்பார்களா… சொல்லுங்கள்!” என்று பதில் கேள்வி கேட்டுச் சிரிக்கிறார் சேத்தன்!
ஜனவரி 5, 2010 at 3:21 முப
பஞ்சாபின்னாலே சர்தார்ஜி தானா? ப்ளீஸ் Come out of your small world of imagination and assumptions.
ஜனவரி 5, 2010 at 4:02 முப
Vijay,
I agree with you.
Pl. note that this article including the title is from ஆனந்த விகடன் – Issue Date – 18-11-2009)
ஜனவரி 5, 2010 at 7:48 பிப
Well Actually I meant about Ananda Vikatan only 🙂