நான் மு.வ.வை அதிகமாக படித்ததில்லை. மொண்ணையாகத்தான் கதைகள் எழுதுவார் என்று எனக்கு ஒரு impression இருந்தது. தமிழ் பட்டப் படிப்பில் எப்போதும் அவரது நூல்கள் பாடமாக வைக்கப்படுவதால் எழுந்த ஒரு prejudice என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் அவர் எழுதிய மொழி நூல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது போல இருந்தது.
கரித்துண்டு க.நா.சு.வால் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதை சமீபத்தில் மீண்டும் படித்தபோதுதான் கவனித்தேன். சரி என்றாவது படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். மறைந்த நண்பர் சேதுராமன் கரித்துண்டு, அகல் விளக்கு ஆகிய இரு புத்தகங்களையும் எங்களுக்கு கொடுத்து அனுப்பினார், அவர் புண்ணியத்தில்தான் படித்தேன். அவர் நினைவாக எங்களிடம் இருப்பது அந்த இரண்டு புத்தகங்கள்தான்.
கரித்துண்டின் கதை அவ்வளவு முக்கியமில்லை. கணவன் முடமானதால் விலகும் மனைவி, மனைவி விலகியதாலும், முடமானதாலும் உயர் மத்தியதர நிலையிலிருந்து ஏழ்மையை விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒரு ஓவியர், அவர் சேர்த்துக்கொண்ட ஒரு பெண், அவரது ஓவியங்களை ரசிக்கும் கதை சொல்பவர், அமெரிக்க வாழ்வினால் impress ஆன ஒரு பேராசிரியர், கம்யூனிச சிந்தனை கொண்ட அவரது மாணவன் – இவர்களை வைத்து தொழில், கைத்தொழில் ஆகியவற்றில் அரசு என்ன செய்ய வேண்டும், ஆந்திர-தமிழக எல்லை தகராறு, அமெரிக்கத்தன வாழ்க்கையின் சாதக பாதகங்கள், திருக்குறள், தேர்தல் முறையின் பலவீனங்கள் ஆகியவற்றை பற்றி பல லெக்சர்கள். இதுதான் புத்தகம்.
அந்த காலத்துக்கு புரட்சிகரமான கதையாக இருந்திருக்கும். ஓவியரின் மனைவி பேராசிரியருடன் மணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறாள். கற்பை பற்றி லெக்சர்கள் எல்லாம் இல்லை – ஆனால் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை சேர்த்துக் கொள்கிறார். கற்பை பற்றி ஒரு பாத்திரம் பேசும்போது தமிழர்கள் சீர்திருத்தம் பற்றி பேசினாலும் கன்னித்தன்மைக்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கிண்டல் தொனிக்க பேசுகிறாள்.
மிக சரளமான நடை. கல்கியின் நடை மாதிரி ஓடுகிறது. படிக்க ஆரம்பித்தால் சுலபமாக படித்துக்கொண்டே போகலாம்.
மேலே சொன்ன லெக்சர்கள்தான் இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவை எல்லாம் எனக்கு இசைவானவை இல்லை. ஆனால் அந்த காலத்துக்கு மிக பெரிய விஷயமாக இருந்திருக்கும். அரசின் கடமைகள், காபிடலிசம், முதலாளித்துவம் பற்றி மிக எளிமையாக புரிய வைத்துவிடுகிறார். இன்றும் இது பெரிய விஷயம்தான்.
ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் மு.வ.வின் பலம், பலவீனம் இரண்டுமே அவரிடமிருக்கும் வாத்தியார்த்தனம்தான் என்று நினைக்கிறேன். அவர் எதையும் படிப்பவனின் சிந்தனைக்கு விடுவதில்லை. கடைசி சொட்டு வரை நமக்கு புகட்டி விடுகிறார்.
படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
தொடர்புடைய பதிவுகள்
மு.வ.
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?
செப்ரெம்பர் 21, 2009 at 4:38 பிப
ஆர்.வி,
சரியாகச் சொன்னாய்! மு.வ. கதை சொல்லுவது ஆசிரியர் மாணவருக்கு அறிவுறை பாணியில் இருக்கிறது.
அகல்விளக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வார இறுதிக்குள் முடித்துவிடுவேன். அதற்க்குள் அதை பற்றி நீ எழுதவில்லையென்றால் நான் எழுதுவதாக உத்தேசம்.
நவம்பர் 15, 2009 at 6:55 முப
டாக்டர் மு வ அவர்களின் கரித்துண்டு நாவல் சமுதாயத்திற்குத் தேவையான கருத்துகளை சிறப்பாக எடுத்துக்கூறுகிறது. ஆனால் நீண்ட நீண்ட உரையாடல் சற்று அலுப்பைத் தருகின்றன. அதுவும் தமிழக – ஆந்திர எல்லைப்பிரச்சினை படிக்கும் வாசகர்களுக்கு அயர்வை ஊட்டுகின்றன. இருப்பினும் நாவல் ஒரு முட ஓவியன் வாழ்க்கை நிகழ்வுகளை தெளிந்த ஓடை போல சொல்லி செல்லுகிறது. மனதைக் கரைக்கும் பல நிகழ்வுகள், சமுதாய ஏற்றத்தாழ்வு, வறுமை,இல்லறம், பெண்ணுரிமை கருத்துகள் ஆங்கங்கே தெளிவுப்பட நாவலில் வருகின்றன.
திசெம்பர் 7, 2010 at 4:50 பிப
[…] மு.வ.வின் கரித்துண்டு […]
ஒக்ரோபர் 22, 2014 at 12:00 முப
[…] ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் […]
ஏப்ரல் 4, 2015 at 12:19 முப
[…] ஆனால் இவர் எழுதிய இரண்டு நாவல்கள் – கரித்துண்டு மற்றும் அகல் விளக்கு – எனக்குப் […]