(இது ஸ்ரீ சேதுராமனின் இடுகை)
இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தின் நூறாவது ஆண்டு விழா தமிழகமெங்கும் – ஏன் தமிழர்கள் இருக்கும் தேசங்களில் எல்லாம் – கொண்டாடப்படுகிறது.
1909ம் வருஷம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி, காஞ்சிவரத்தில், ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு. அண்ணாதுரை. பெற்றோர் திரு.நடராசன், பங்காரு அம்மாள் – அண்ணாதுரையை வளர்த்து ஆளாக்கியது அவரது சிற்றன்னை இராஜாமணி அம்மாள் (தொத்தா)
காஞ்சியிலேயே தன் ஆரம்ப, உயர் படிப்பை பச்சையப்பன் ஹைஸ்கூலில் முடித்தவர், தன் கல்லூரிப் படிப்பை, சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும்போதே, 1930ம் வருஷம் திருமதி. ராணி அம்மாளுடன் அவரது திருமணம் நிகழ்ந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சட்டம் படிக்க, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், நிதி வசதியின்மை காரணமாக, சட்டப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 1938ம் வருடம் நடந்த ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக நான்கு மாதங்கள் சிறைவாசம் கிடைத்தது.
தமிழில் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் – அவரது முதல் சிறுகதை 1934ம் வருஷம் ஆனந்தவிகடனிலும் (கொக்கரக்கோ), முதல் குறு நாவல் “கோமளத்தின் குறும்பு” 1939 குடியரசு இதழிலும் வெளியாகின. குடியரசு இதழிலேயே அவரது “வீங்கிய உதடு” என்ற புதினம், 1940ல் தொடர்கதையாக வந்தது.
அவர் எழுதிய முதல் நாடகம் ‘சந்திரோதயம்’ – அடுத்தது ‘சந்திர மோகன்’ அல்லது ‘சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம்’ – இந்த இரண்டாவது நாடகத்தில் அவரே “காக பட்டர்” என்ற வேஷத்தில் நடித்தவர். சிவாஜியாக நடிக்கவிருந்த எம்.ஜி.ஆர். கடைசி நிமிஷத்தில் மறுத்து விட்டதனால், டி.வி.நாராயணசாமியின் வேண்டுகோள்படி, வி.சி.கணேசன் சிவாஜி பாத்திரமேற்று நடித்தார். பெரியார் அவர்களுக்கு கலை மீது அவ்வளவு ஆர்வம் கிடையாது, கலைதான் தமிழ்ச் சமுதாயத்தையே சீரழிக்கின்றது என்ற எண்ணம் அவருக்கு. அவர் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, கணேசனைச் சிறப்பாக நடித்தாய் இனி நீ “சிவாஜி”தான் என்று பெயரிட்டார்.
தொடர்ந்து அண்ணா அவர்கள் – ஓரிரவு, வேலைக்காரி, நீதி தேவன் மயக்கம், காதல் ஜோதி, நல்லதம்பி, சொர்க்கவாசல் முதலிய
நாடகங்களை எழுதினார். இவற்றுள் சில திரைப்படங்களாகவும் வந்தன.
1942ல் “திராவிட நாடு” ஆசிரியர் பதவியை ஏற்றவர், 1949, வருஷம் “மாலை மணி”யின் ஆசிரியரானார். இதே வருஷம், பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக ஏற்பட்ட மன வேறுபாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்தை செப்டம்பர் 17ம் தேதியன்று தோற்றுவித்து முதல் பொதுச் செயலாளர் பதவியேற்றார். தி.மு.க. 1952ல் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு, கட்சியைத் தீவிரமாக வளர்த்தார்.
1959ம் வருடம் நடந்த சென்னை மாநகரக் கார்ப்பரேஷன் தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்று, மேயர் பதவியைப் பெற்றது. வெற்றிகள் தொடர்ந்தன. 1967ம் வருடம், தி.க.வாலும், தி.மு.க.வாலும் “குல்லுக பட்டர்” என்று வர்ணிக்கப்பட்ட, ராஜாஜியின் காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கை காரணமாக அவ்வருடம் நடந்த மாநிலத் தேர்தலிலும், 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அன்று தமிழ் நாட்டின் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்று வரை, திரும்ப ஆட்சி அமைக்க முடியாமற் போனது!
1967ம் வருடம் மார்ச்சு 6ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார் அண்ணா. மாநிலத்தின் பெயரைத் “தமிழ் நாடு” என்று பெயரிட்டதும், படியரிசித் திட்டம் கொணர்ந்ததும் இவரே.
அமெரிக்க அரசின் ‘லீடர்ஷிப் எக்ஸ்சேஞ்ச்” என்ற திட்டத்தின் படி, அண்ணா ஒரு அமெரிக்கப் பயணம் செய்ததும் இந்த வருஷம்தான். அவரது பயண ஏற்பாடுகளை சென்னையிலிருந்த TRANS WORLD AIRLINESதான் செய்து கொடுத்தது. நானும், என் மேலாளர் திரு.கே.ஆர்.கிருஷ்ணஸ்வாமியும் அப்போது பல முறை அவரது காரியாலயத்தில் சந்தித்து, ரோம், பாரிஸ், வாஷிங்க்டன் முதலான இட்ங்களில் தங்குமாறு வரையறுத்துக் கொடுத்தோம். புகழ் பெற்ற யேல் பல்கலைக் கழகத்தின் Chubb Fellowship பெற்ற இந்தியர் அண்ணாதான் என்று நினைக்கிறேன். ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து, மே 12 வரை, இந்தப் பயணம் நீடித்தது. அமெரிக்காவிலிருந்து, திரும்பி வரும்போது, ஜப்பான், சிங்கப்பூர் வழியாக வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தனது உடல் நிலை காரணமாக, அண்ணா மறுபடியும் செப்டம்பர் மாதமே அமெரிக்கா செல்ல வேண்டியதாயிற்று. சிகிச்சை முடிந்து நவம்பர் மாதம் இந்தியா திரும்பிய அண்ணா, கடைசியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி 1969 பொங்கல் திரு நாளன்று, தியாகராய நகரில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு தான். அவருடைய உடல் நிலை மீண்டும் மோசமாகி ஃபிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு (ஃபிப்ரவரி 3ம் தேதி 00:20) அண்ணா காலமானார். அடுத்த நாள் ஃபிப்.4 சென்னைப் பல்கலைக் கழகக் கட்டடத்திற்கு எதிரே அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.
பல லட்சம் மக்கள் பங்கேற்ற, இது வரை கண்டிராத, ஒரு பெரிய இறுதி ஊர்வலம் அன்று நடை பெற்றது.
(செய்தி ஆதாரம் – பேரறிஞர் அண்ணாவின் மக்களாட்சிச் சிந்தனைகள் – தமிழ்மண் பதிப்பகம் – சென்னை 1999– மற்றும் வலைத்தளச் செய்திகள்)
ஆர்வி: திரு சேதுராமன் பயண ஏற்பாடுகளை கவனிக்கும் travel agency ஒன்று நடத்தி வருகிறார் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது. அவர்தான் அண்ணாவின் அமெரிக்க பயண ஏற்பாடுகளை கவனித்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது.
தொடர்புடைய பதிவுகள்:
ஓரிரவு (Oriravu)
ஓரிரவு பற்றி கல்கி
செப்ரெம்பர் 15, 2009 at 10:33 பிப
அண்ணாதுரையை தமிழ்நாட்டில் ஓவராக புகழோட பார்க்கின்றார்களே தவிற, ஒரு அரசியல்-தனிமனிதன் விமர்சனத்துடன் இல்லை.
உதாரணமாக அண்ணதுரையின் `திராவிடநாடு` குருடன் கண்ட கனவு. அதை 1952, 1957, 1962 எலெக்ஷென்களில் ஒரு கோரிக்கையாக வைக்கவில்லை என நினைக்கிறேன். 1962 சீன ஆக்கிரமிப்பு பிறகு, இந்தியாவை “காப்பாற்றுவதற்க்காக” திராவிட நாடு கோரிக்கையை `கைவிட்டாராம்` ; அதுதான் பரவலாக நம்பப் படும் கட்டுக்கதை.
திராவிட நாடு கோரிக்கையை “கைவிடும்” போதும் , We are giving up the Dravida nadu demand, even though the reasons for it remain என சொன்னார் என்று எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஆர்டிகிளில் படித்துள்ளேன்.
எவனாவது நிஜமாகவே `தனிநாடு` என்ற சீரியசான கோரிக்கையை `காரணம் இருந்தும்` கைவிடுவானா? அப்படி `காரணம் இருந்தும்` கைவிடப்பட்ட கோரிக்கை அப்படியானால் ஒரு பூச்சாண்டி விளையாட்டே தவிற, ஒரு சிந்திக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்ட அரசியல் நோக்கம் இல்லை.
Annadurai was a man of bad faith என்றுதான் இதில் இருந்து தெரிகின்றது.
1967 தேர்தலில் ஒரு ரூபாய்க்கு 3 படி அரிசி தருவோம் என்று வாக்கு கொடுத்த்ய் விட்டு, அப்படி ஒன்றும் செய்யவில்லை. 1971 சோ மீட்டிங்க் ஒன்று போயிருந்தேன் , அதில் சோ ஒரு 1967 மாலை முரசு ஒன்ரை படித்து காண்பித்தார், அதில் அண்ணாதுரை `நாங்கள் ரூபாய்க்கு 3 படி தராவிட்டால், எஙகளை சந்தியில் நிருத்தி சாட்டையால் அடிங்கள்` என சூளுரைத்ததை படித்ததும், ஒரே கரகோஷம், சிரிப்பு.
அவர் 1967 பதவி ஏற்றதும், சென்னையில் பஸ் ஊழியர்களுக்கும் , மாணவர்களுக்கும் ஒரே சண்டை, பஸ் ஊழியர்கள் சட்டக்கல்லூரியை சூழ்ந்து கொண்டு, பல மாணவர்களை அடித்து காயப்படுத்தினர், அப்போது அண்ணாதுரைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ரகளை, வன்முறை வரும்போது முதலிலேயே போலீஸை அணுப்பியிருந்தால் அவ்வளவு சேதம் வந்திருக்காது
அண்ணாதுரை ஒரு மீடியாகர் அரசியல்வாதி, திராவிட இயக்கத்தில் மீடியாகர் ஆளுங்கள்தான் சிங்கங்கள்.
விஜயராகவன்
செப்ரெம்பர் 16, 2009 at 1:48 முப
கம்மென்று இருந்த காலத்திலும் மறுமொழி இட்டவர்களுக்கு நன்றி! முடிந்த வரையில் இங்கே எல்லாருக்கும் எழுதுகிறேன். விட்டுப்போயிருந்தால் என் கவனக் குறைவுக்காக மன்னியுங்கள்.
விஜயராகவன், இந்த பதிவு ஒரு மதிப்பீடு இல்லை. அது அவரை நினைவு கூறும் ஒரு பதிவு மட்டுமே. ஆனால் அண்ணா மீது ஒரு மாயை உருவாக்கப்பட்டிருப்பது உண்மைதான். அண்ணாவை பற்றி ஒரு மதிப்பீடு எழுதலாமா என்று நான் சில சமயம் யோசித்ததுண்டு. ஆனால் அலங்கார வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் அவரை பற்றி படித்ததில்லை. அதனால் ஐடியாவை தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது. நீங்கள் ஒரு guest post எழுதுகிறீர்களா?
நரேஷ், கிம் க்ளைஸ்டர்ஸ் பற்றிய உங்கள் பதிவு – குறிப்பாக ஃபோட்டோக்கள் அருமை.
குணா, 42 வயது சீதை ஒரு நகைச்சுவை பதிவு. சாய்நாத்தின் கேள்வி ரூம் போட்டு யோசிக்கறாங்களா என்று கேட்க வைக்கிறது. இதிலும் திராவிடமா? அப்புறம் 42 வயது ஆனால் அழகாக இருக்க மாட்டார்களா? ஜேகேராஜா எழுதி இருப்பதையும் பாருங்கள்.
சௌந்தர், கேட்டிருந்தால் பதிவில் சாய்நாத்தின் பேருக்கு பதிலாக உங்கள் பேர் வந்திருக்கும். 🙂 டோண்டு சார், பதிவை திருத்திவிட்டேன்.
ஜனனி, நீங்கள் ஹிதேந்திரனின் சகோதரியா?
துபாய் ராஜா/மதி இந்தியா/துளசி கோபால், உண்மையில் ஜெயமோகன் ஒரு அதிசய மனிதர்தான். கூடிய விரைவில் அடுத்த பதிவு…
ராம்பிரசாத், அழியா சுடர்கள் மிக அருமையான தளம். தனி மனிதராக கலக்குகிறீர்கள்!
வால்பையன், குடுகுடுப்பை, ஜவஹர், ப்ளாக் பாண்டி, பாராட்டுகளுக்கு நன்றி!
செப்ரெம்பர் 16, 2009 at 8:28 முப
ஆர்வி, அண்ணாதுரையைப் பற்றி நான் சிஸ்டமேடிக் ஆக படித்ததும், சிந்தித்ததும் கிடையாது. அப்படி செய்யும் போது, ஒரு கெஸ்ட் போஸ்ட் எழுதலாம்.
Political biography என்பது ஒரு கலை, அதற்கு நிறைய விஷயங்களும் ஆவணங்களும் வேண்டும், சின்ன வயதிலிருந்து தெரிந்தவர்களை பார்த்து பேசணும். அது தமிழகத்தில் வளரவில்லை.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளே தினம் டைரி குறிப்பு செய்கின்றனர், யாராவது அவருடைய பயாக்ரஃபி எழுதினால் , தங்கள் டைரியை கூட காண்பிக்கின்றனர்.
எங்கிட்ட , அண்ணாதுரை பத்தி அவ்வளாக விஷயங்கள் இல்லை.
செப்ரெம்பர் 16, 2009 at 4:51 முப
திரு விஜயராகவன்:
1967க்கு முன்னர் இருந்த அண்ணாவும்
பின்னர் இருந்தவரும் வித்தியாசமான
வர்கள் என்பது என் கருத்து.. முதல்வர்
பதவியேற்றதும் அவரது பேச்சுகளில்
பெரும் மாறுதல் இருந்தது. அது வரை
இருந்த பார்ப்பனத் துவேஷமும், புராண
இதிஹாசங்களில் அவருக்கு இருந்த
கடுப்பும் முதல்வரான பின் வெளிப்படை
யாகத் தெரியவில்லை – அந்தப் பொறுப்பைக்
கழகக் கண்மணிகள் எடுத்துக் கொண்டனர்.
அவர் பதவியில் இருந்தது சொற்ப காலமே!
அது வரை எதிர்க்கட்சிக்காரராகவே இருந்த
ஒருவரை திடீரென்று ஆட்சியில் அமர்த்திய
வுடன், அவரிடம் நிர்வாகத் திறமையை
எதிர்பார்க்க முடியாது.. இன்னம் கொஞ்சம்
காலம் அவர் ஆட்சியில் இருந்திருந்தால்
நல்லவை நடந்திருக்கக் கூடும் என்று ஏன்
நாம் எண்ணக் கூடாது?
ஆர்வி: நான் இருந்தது ட்வா விமானக்
கம்பெனியில், அதனால் தான் எங்களுக்கு
அந்த அனுபவம் கிடைத்தது!! பயண
ஏஜன்சியில் இருந்து வந்தார் என்றிருக்க
வேண்டும். இப்போது முழுதும் ஓய்வு தான்!