சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.
*** சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகள் என்னைப் பார்க்க வந்தார்கள். நான் மாடியில் இருந்தேன். என் பெண்கள் அவர்களை ‘மேலே இருக்கிறார், போங்கள்” என்று அனுப்பி வைத்தனர். மாடிக்கு வந்த மாணவிகள் என்னைப் பார்த்து “சாண்டில்யனைப் பார்க்க வந்தோம்” என்றனர். “என்ன வேண்டும்” என்று கேட்டேன் — மாணவிகள் பரஸ்பரம் பார்த்துக் கொண்டார்கள், சற்றுக் குழம்பினார்கள் – ‘இல்லை, அவரைப் பார்த்துத்தான் பேச வந்தோம்” என்றனர். நான் என்ன பதில் சொல்ல? நான், கதை எழுதும் சாண்டில்யனாக இருக்க முடியாது என்ற தீர்மானத்திற்கு, அவர்கள் வந்ததற்குக் காரணமும் இருந்தது. யவன ராணியையும், கடல் புறாவையும் படித்துவிட்டு அவற்றைப் பற்றி சந்தேகம் கேட்க வந்தவர்கள் நெற்றியில் நாமத்தைப் போட்டுக்கொண்டு, எட்டு முழம் வேட்டி இடையில் கட்டி, மேலே ஒரு மூன்று முழத்துண்டுடன் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தால் அந்தக் கதைகளுக்கு ஆசிரியன் இவன்தான் என்று எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?
நானும் மெல்ல வெட்கத்தை விட்டு மெல்லப் புன்முறுவல் கொண்டு “நான்தான் சாண்டில்யன், என்ன வேண்டும்”? என்று அறிமுகம் செய்து கொண்டேன். நீங்களா? வியப்பு அவர்கள் முகத்தில் நன்றாகக் காட்சி அளித்தது. ‘ஆம் நானேதான்” – “எப்படியெப்படியோ கதை எழுதுகிறீர்களே” என்றாள் அந்த மாணவி – “என்ன செய்வது, அப்படித்தான் எழுத வருகிறது” – “உங்கள் வர்ணனை தான்…” என்று மாணவி தொடங்கினாள். இப்போது மற்ற மூவர் மௌனமும் ஆரம்ப அதிர்ச்சியும் கலைந்தன – இன்னொரு மாணவி, முதல்வளின் சொற்களைப் பாதியில் வெட்டி ‘தத்ரூபமாயிருக்கிறது” என்று பாராட்டினாள். (போராட்டங்கள் என்ற தன் சுய சரிதையில், நாவலாசிரியர் சாண்டில்யன்) ***
தமிழ் நாடு திருக்கோயிலூரில், திரு. இராமானுஜம் ஐயங்கார், திருமதி பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு ஒரே மகனாக, 1910ம் வருஷம் நவம்பர் மாதம் 10 தேதி பிறந்தவர் சாண்டில்யன். பெற்றோர் இட்ட பெயர் பாஷ்யம். குடும்பத்தினருடைய சொந்த ஊர் மாயவரம் அருகேயுள்ள திரு இந்தளூர் என்ற கிராமம்.
இளமைக்கல்வி, நன்னிலம் பண்ணைனல்லூர் திண்ணைப் பள்ளியிலும், பிறகு சென்னை பச்சையப்பன் பள்ளி, சைதாப்பேட்டை மாடல் பள்ளியிலும் தொடர்ந்தது. கல்லூரிக் கல்வி திருச்சி செயின்ட் ஜோசஃப் காலேஜில். திருச்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1930ல் ராஜாஜியின் விஜயம் இவரை சட்டமறுப்பு இயக்கத்தில் ஈர்த்தது. தந்தைக்கு ஒரே மகன் என்ற காரணத்தால், சத்தியாக்கிரகத்தில் ஈடுபட வேண்டாம், நிர்மாணப் பணியில் ஈடுபடுங்கள் என்ற ராஜாஜியின் அறிவுரை, இவரைக் காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக்கியது. துயிலி வேஷ்டியையும், பாப்ளின் சட்டையையும், கதருக்கு மாற்றிக்கொண்டார்.
கல்லூரியில் படிக்கும்போதே 1929ம் வருஷம் ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் மகள் ரங்க நாயகியை மணம் புரிந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சென்னை தியாகராய நகரில் வாசம் தொடங்கியது. இவர் வீட்டுக்கெதிரில் ராமசாமி தெருவில், கல்கியும், சற்றுத் தள்ளி உஸ்மான் ரோடில் வெங்களத்தூர் சாமினாத சர்மாவும் வசித்து வந்தனர். சர்மா அப்போது திரு.வி.க. அவர்களின் நவசக்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இவர்களின் நட்பு சாண்டில்யனின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. நகைச்சுவையுடன் பேசும் பழக்கத்தைக் கொண்டிருந்த சாண்டில்யனை ஏதாவது கதை எழுதலாமே என்று ஊக்குவித்த போதிலும், எனக்கு எழுத வராது என்று இவர் மறுத்து விட்டார். இந்த சால்ஜாப்பு அவர்களது இன்னொரு நண்பரும் திராவிடன் என்ற பத்திரிகையின் ஆசிரியருமான தோழர் சுப்பிரமணியத்திடம் எடுபடவில்லை. அவரது கட்டாயத்தின் பேரில் சாந்த சீலன் என்ற காங்கிரஸ் பின்னணி கொண்ட ஒரு கதை எழுதிப் பிரசுரமும் ஆனது. அக்கதை கல்கிக்கும் பிடித்துப் போகவே, இவரை எழுதச் சொல்லி கண்ணம்மாவின் காதல், அதிர்ஷ்டம் முதலிய கதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார் கல்கி.
ஆரம்ப முதல் சம்ஸ்கிருதமே படித்திருந்தவருக்கு, தமிழின் இந்த ருசி பிடித்துப் போயிற்று. முப்பதிலிருந்து ஒரு நான்கு வருஷங்கள் திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்ற வித்துவானிடம் தமிழ் பயில ஆரம்பித்து, திருவாய் மொழி ஆயிரமும், நம்பிள்ளையின் முப்பத்து ஆறாயிரப்படி வியாக்கியானத்துடன் மற்றும் பல தமிழ்க் காப்பியங்களையும் கற்றார்.
சுதேசமித்திரன் வாரப்பதிப்பிலும் சிறுகதைகள் எழுதி வந்த சாண்டில்யனுக்கு பத்திரிகையில் சேர வாய்ப்பு கிடைத்தது. 1935ம் வருடத்திலிருந்து 1942ம் வருடம் வரை, சுதேசமித்திரன் பத்திரிகையில் நிருபரானார். நாற்பத்து மூன்றில் ஆசிரியர் சி.ஆர்.ஸ்ரீனிவாசனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், நிருபர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஹிந்துஸ்தான் டைம்சில் துணை ஆசிரியரானார். அந்த நேரம், சண்டே டைம்சின் ஆசிரியரான திரு கே.ஆர்.நாராயணன் இவரை, வாகினி பி.என்.ரெட்டிக்கும், சித்தூர் வி.நாகையாவுக்கும் அறிமுகம் செய்து வைத்த பின், சினிமா உலகிலும் பிரவேசித்து, திரைக் கதை எழுதத் தொடங்கினார். ஸ்வர்க சீமா, என் வீடு என்ற படங்களின் திரைக் கதைகளின் உருவாக்கத்தில் இவருக்குப் பங்கிருந்தது. தொடர்ந்து நாகையாவின் ரேணுகா ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான வித்துவானாக மாறினார்.
அஹிம்சைக் கொள்கைக்கும், பலாத்காரத்துக்குமுள்ள வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டும், சத்தியாக்கிரக இயக்கத்தைப் பின்னணியாக வைத்தும், இவர் எழுதிய பலாத்காரம்தான் தமிழகத்தின் முதல் அரசியல் நாவலாகும். சத்தியமூர்த்தியின் முகவுரையுடன், சொந்த செலவில் தானே அந்தப் புத்தகத்தைப் பிரசுரம் செய்தார்.
மித்திரன் ஸ்ரீனிவாசன் இவரைத் திரும்ப அழைத்ததும், மித்திரனில் சேர்ந்தவர், அப்பத்திரிகையின் விசேஷப் பகுதிகள் அனைத்தையும் திருத்தி அமைத்து, மித்திரனின் வாசகர் வட்டத்தையும், சர்குலேஷனையும் அதிகரித்துக் காட்டினார். சி.ஆர்.எஸ். இவரை வெளியிலும் எழுதலாம் என்று அனுமதித்த பிறகு, அமுதசுரபியில் தன் கதைகளை வெளியிடலானார். பாலைவனத்துப் புஷபம், சந்த தீபம் என்ற இரு சரித்திரக்கதைகளுக்குப் பிறகு, வே.லக்ஷ்மணனின் விருப்பத்தின் பேரில் ஜீவ பூமி என்ற தொடர்கதையையும் எழுதினார்.
பத்திரிகைக்காரர்கள் சம்மேளனத்துக்கு இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கவை. பெரிய வித்துவான்கள் பாட்டுக்கச்சேரிகள் வைத்து, சம்மேளனக் கட்டடத்திற்குப் பணம் திரட்டினார். பத்திரிகையாளர் சங்கத்தை தொழிற்சங்கமாக மாற்ற இவர் எடுத்த முயற்சிகள் இனிப்பையும் கசப்பையும் கலந்தே ஈர்த்தன. பத்திரிகைத் தொழில் பற்றி இவர் எடுத்த முதல் செய்திப் படம் Birth of a Newspaper எல்லோரது பாராட்டையும் பெற்றது. தியாகப்பிரம்ம சபா, கிருஷ்ண கான சபா என்ற இரு சங்கீத சபாக்களின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
தான் சரியென்று நினைத்ததை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற இவரது மனப்பான்மை, பல முன்னாள் நண்பர்களின் மனக்கசப்புக்குள்ளாகியது. இவர் எழுதிய சினிமா/நாடக விமர்சனங்களாலும், சர்ச்சைகள் உண்டாகியன. ராஜாஜியின் பரம பக்தராக இருந்தவர், ராஜாஜியின் 1952 சினிமா எதிர்ப்புக் கொள்கையைக் கடுமையாகவே விமர்சித்தார். கல்கி, கி.வா.ஜ., ஆர்.வி., டி.கே.ஷண்முகம் போன்றோரும் இதில் உள்ளடங்குவர்.
இவரது குடும்பத்தினர் – இரு பிள்ளைகள் – பேராசிரியர் சடகோபன், பேராசிரியர் கிருஷ்ணன். ஐந்து பெண்கள் – வேதவல்லி, புஷ்பவல்லி, விஜயவல்லி, பத்மா, லக்ஷ்மி.
இவரது படைப்புகள் விவரம் வருமாறு:
இலக்கியத் திறனாய்வு – கம்பன் கண்ட பெண்கள் – திருப்பாவை விளக்க உரை
வாழ்க்கை வரலாறு – ஸ்ரீ இராமானுஜர் – போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை)
சிறுகதைத் தொகுப்பு – ராணியின் கனவு
சமூக நாவல்கள் – புரட்சிப்பெண் (பலாத்காரத்தின் மறுபதிப்பு) – செண்பகத் தோட்டம் – மனமோகம் – நங்கூரம் – மதுமலர்
சரித்திர நாவல்கள் – கடல் புறா (மூன்று பாகங்கள்) – ஜல தீபம் (மூன்று பாகங்கள்) – யவன ராணி (இரண்டு பாகங்கள்) – ராஜ பேரிகை – ராஜ திலகம் – கன்னி மாடம் – மன்னன் மகள் – சேரன் செல்வி – கவர்ந்த கண்கள் – மலை வாசல் – ஜீவ பூமி– மஞ்சள் ஆறு – மூங்கில் கோட்டை – சித்தரஞ்சனி – மோகினி வனம் – இந்திர குமாரி – இளைய ராணி – நீள் விழி – பல்லவ திலகம் – நாக தீபம் – உதய பானு – அவனி சுந்தரி – மங்கல தேவி – நிலமங்கை – ஜலமோகினி – ராஜ முத்திரை (இரு பாகங்கள்) – கடல் ராணி – மலை அரசி – மோகனச் சிலை – ராஜ யோகம் – ராணா ஹமீர் – நீலவல்லி – நாக தேவி – விலை ராணி – சந்திரமதி – பாண்டியன் பவனி – ராஜ்யஸ்ரீ – வசந்த காலம் – விஜயமஹாதேவி
தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ 1987 –
2. போராட்டங்கள் (சாண்டில்யனின் சுய சரிதை – முற்றுப் பெறாதது)
3. பேராசிரியர் சடகோபன் (நேர் காணல்)
4. வானதி பதிப்பகம் பட்டியல்
5. வலைத்தளக் கட்டுரைகள்
ஆர்வி: பதிவு கொஞ்சம் பெரியதாக இருப்பதால் என் கருத்துகளை இன்னொரு பதிவாக எழுதி இருக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டுடமை சீரிஸ்
தொடர்புடைய பதிவுகள்:
சாண்டில்யனைப் பற்றி ஒரு அலசல்
நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு
ஜூன் 2, 2009 at 2:52 முப
சாண்டில்யனின் சரித்திர கதைகள் அளவுக்கு சமூகக் கதைகள் சோபிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏ.ஜே.க்ரானின் எழுதிய Citadel, Shannon’s way ஆகிய நாவல்களிலிருந்து சில காட்சிகளை சுட்டு ஆனந்த விகடனில் தொடர்கதை ஒன்று எழுதினார். மதுமலர் என்று ஞாபகம். சமீபத்தில் 1980-ல் ஒரு கல்யாண நிச்சயதார்த்தத்தில் அவரை வளைத்து வெளிப்படையாகவே இது பற்றி கேட்டேன். முதலில் இல்லை என மழுப்பினார். ஆனால் நான் விடவில்லை. சீன்களை குறிப்பிட்டு ஏ.ஜே. க்ரானின் நாவலில் வந்த சம்பந்தப்பட்ட சீன்களை புட்டு புட்டு வைத்தும் அவர் அதெல்லாம் தற்செயலே எனக் கூறினார்.
ராஜபேரிகை என்னும் சரித்திர நாவலில் ஆங்கில வசனங்களை தமிழ் எழுத்துக்களில் எழுதி அடைப்புகுறிகளுக்குள் தமிழ் மொழிபெயர்ப்பை வேறு போட்டு படுத்தியது ஏன் என கேட்க, அதெல்லாம் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு உதவியாக இருக்கும் என சற்றும் சிரிக்காமல் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜூன் 2, 2009 at 3:43 முப
இந்த கொமெண்ட் எதுக்கு?
ஜூன் 2, 2009 at 4:19 முப
முதலில், சாண்டில்யன் படைப்புக்களை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை. தமிழக அரசின், இந்த அரசுடைமையாக்குகிற திட்டம், ஒரு கேலிக் கூத்தாகவே எனக்குப் படுகிறது. அண்ணாவின் படைப்புகளுக்கு, ரூபாய் இரண்டு கோடி, சிலருக்கு மூன்று, ஐந்து லட்சம், இப்படி தான்தோன்றித்தனமான அளவீடுகளில் பணத்தை கொடுப்பது, கலைமாமணி விருது கொடுப்பதை விடக் கேவலமாக இருக்கிறது. அது போய்த் தொலையட்டும்!
வாசகனை எப்படி வசப்படுத்துவது என்பதை நன்றாக அறிந்திருந்த எழுத்தாளர் சாண்டில்யன். டோண்டு சார் சொன்ன மாதிரி, இவருடைய சரித்திரக் கதைகள் சோபித்த அளவுக்கு, சமூகக் கதைகள் எடுபடவில்லை என்பது உண்மைதான்.
அதே நேரம் குண்டுச்சட்டியில் மட்டுமே குதிரை ஓட்டக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களில் இருந்து வேறுபட்டு, சரித்திரக் கதைகள் நிறைய எழுதினார். ராஜஸ்தானின் மாவீரர்களைப் பற்றியும், மகாராஷ்ட்ர கனோஜி ஆங்கரே பற்றியும், குப்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியைத் தொட்டும், இப்படிப் பரவலாக இந்திய வரலாற்றின் பல பகுதிகளை எழுதிய, தமிழுக்கு அறிமுகம் செய்த ஒரே எழுத்தாளர், இன்று வரை சாண்டியன் மட்டுமே.
நா.பார்த்தசாரதி, விக்கிரமன் என்று வெகு சிலரே சரித்திரக் கதைகளை எழுத முன்வந்தனர். சரித்திரக் கதை எழுத, முதலில் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். நிறையப் படிக்க வேண்டும், வரலாற்றுச் சம்பவங்களைச் சிதைத்து விடாமல், அதன் பேரில் தன் கற்பனையைக் கலந்து, படிப்பவர் மனதைக் கவருகிற மாதிரி கதையைக் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில், சாண்டில்யன் தனித்து, உயர்ந்து நிற்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏற்கெனெவே ஆர்வி ஒரு பதிவில், சாண்டில்யனின் கதைகளைப் பற்றி ஒரு நெகடிவான விமரிசனம் செய்திருந்தார் என்று நினைவு.
ரவிக்கை முட்டிக் கிழங்கு மாதிரித் தலைப்புக்களில் பாதி சரோஜா தேவி டைப் கதைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த குமுதத்தில் தொடர்ந்து எழுதியதால் என்னவோ, சாண்டில்யன் கதைகளில் கொஞ்சம் சிருங்கார ரசம் தூக்கலாகவே இருந்ததென்னவோ உண்மை!
ஜூன் 2, 2009 at 1:36 பிப
சரித்திரக்கதை எழுதுவதில் சாண்டில்யனுக்குப் பிறகு எந்த எழுத்தாளரும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. கோ.வி.மணிசேகரனும், நா.பார்த்தசாரதியும் கொஞ்சம் முயற்சித்தனர், ஆனால் வெற்றி பெறவில்லை. இவரின் கதைகளுக்கு ஓவியர் லதாவின் ஓவியங்கள் தனிக் ”கிளுகிளு”ப்பைக் கொடுத்தன.
ஜூன் 9, 2009 at 5:43 பிப
நல்லதந்தி, கிருஷ்ணமூர்த்தி, டோண்டு ராகவன்,
சாண்டில்யன் பற்றிய மறுமொழிகளுக்கு நன்றி! நான் தாமதமாக பதில் அளிப்பதற்கு வருந்துகிறேன்.
நல்லதந்தி, எனக்கு லதாவின் படங்கள் சரியாக ஞாபகம் இல்லை.
கிருஷ்ணமூர்த்தி, நீங்கள்தான் அவரது பரந்த தளங்களை பற்றி சொன்னீர்களா? நீங்கள் சொன்னதை சமீபத்திய சரித்திர நாவல் பதிவுகளில் பயன்படுத்தினேன்.
டோண்டு சார், சுவாரசியமான தகவல்கள். சாண்டில்யன் பற்றி சமீபத்தில் ஒரு craze இருந்ததா? நான் படிக்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு தென்படவில்லை. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் இருக்கிறதா?
மார்ச் 26, 2010 at 6:21 பிப
Hellos all,
Am an greatest fan of Mr. Sandilyan, Couold u pls let me know his historical book about cholas dynasty as am very big fan of the cholas ( i belong to thanjavur).
Krishnan.
மார்ச் 26, 2010 at 8:46 பிப
கிருஷ்ணன், இரண்டு நாவல்கள் உடனே நினைவு வருகின்றன. ஒன்று யவன ராணி. கரிகால் சோழன் மன்னன் ஆவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது. இன்னொன்னு மன்னன் மகள். ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கங்கையை நோக்கி நடந்த படையெடுப்பை பின்புலமாக வைத்து எழுதப்பட்டது.
மார்ச் 27, 2010 at 8:42 பிப
Dear Mr. RV,
Thank you very much for your advise, I read both the books and am looking for more books and they are very much interesting, If i had been an producers son or actors son i would have taken the both as movies as they have good story line. So pls advise more books about the chola dynasty.
Navaloo Naval,
Krishnan.
மார்ச் 29, 2010 at 10:55 பிப
கிருஷ்ணன், போன முறை கடல் புறாவை குறிப்பிட மறந்துவிட்டேன். ஆனால் நீங்கள் அதையும் நிச்சயமாக படித்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது. 😉 வேறு சாண்டில்யன் நாவல் எதுவும் இப்போதைக்கு நினைவு வரவில்லை. பாலகுமாரனின் உடையார் நாவல் பலரால் சிலாகிக்கப்படுகிறது. ராஜராஜ சோழன் பற்றிய நாவல். பொன்னியில் செல்வனைப் பற்றி நிச்சயமாக தெரிந்திருக்கும். அதற்கு ஒரு sequel – காவிரி மைந்தன் என்று வந்திருக்கிறதாம்.
ஏப்ரல் 5, 2010 at 8:10 பிப
Vengaiyin maindan is one of the good historical novel by Akilan on the base Rajendran chola
ஏப்ரல் 5, 2010 at 8:06 பிப
Vegaiyin maindan is one of the great historical novel on the base of chola dynasty by Akilan
ஏப்ரல் 5, 2010 at 9:12 பிப
சாண்டில்யன் எழுதிய ‘கடல் புறா’ – முதல் பாகம் சுருக்கம்
மூன்று பாகங்கள் கொண்ட இந்த சரித்திர நாவல் வீரராஜேந்திரன் காலத்தில் ‘தமிழ் – கலிங்க’ எல்லை விவகார சமயத்தில் நடக்கிறது. கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தில் புரிந்த அட்டூழியங்களுக்கு காரணம் ஏன் இருக்க கூடாது என்ற சிந்தனையில் இந்த நாவல் பிறந்ததுள்ளது. அநபாய குலோத்துங்கனின் ஸ்ரீ விஜயப் பயணத்தையும் இந்த நாவலில் சாண்டில்யன் சேர்த்துள்ளார்.
சரித்திர நிகழ்வுகளை வைத்து நாவலாக படிக்கும் அனுபவம் மிகவும் வித்தியாசமான ஒன்று. அதுவும் இந்த நாவலில் கப்பல் பயணத்தை பற்றி விபரிக்க போதும், போர் கப்பல் அமைப்புகளை பற்றி சொல்லும் போதும் நடுகடல் பயணத்தில் இருப்பது போல் இருந்தது.
இருபத்தியைந்து பதிப்பு அச்சான நாவலை பற்றி இதற்கு மேல் விளக்க எனக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது.
கதை சுருக்கத்துக்கு போவோம்.
புகார் நகரத்தில் இருந்து வீரராஜேந்திர சோழரின் சமாதான ஒலையுடன் பாலூர் பெருந்துறைக்கு சோழர்களில் படை தலைவனான இளையபல்லவன் என்று அழைக்கப்படும் கருணாகர பல்லவன் வருகிறார்.
அங்கு சுங்க அதிகாரியான சேந்தன் இளையபல்லவனை போகாமல் தடுத்து பாலூர் பெருந்துறையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை விளக்குகிறார். சோழர் இளவரசர் அநபாயன் கைது செய்யப்பட்டதையும், அவர் அந்த சிறைசாலையில் இருந்து தப்பித்ததையும் கூறுகிறார். இளையபல்லவனை ஒரு ரகசிய அறையில் மறைத்து வைக்கிறார் சேந்தன்.
கலிங்க படை தன்னை வருவதை உணர்ந்த இளையபல்லவன் தப்பித்து விருந்தினர் விடுதிக்கு நுழைக்கிறார். அங்கு, கடாரத்து இளவரசியையும் காஞ்சனாதேவியையும், அவள் தந்தை குணவர்மனையும் சந்திக்கிறார். குணவர்மனை கொல்லும் சதி நடப்பதை பற்றி இளையபல்லவன் சொல்கிறார். ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தை ஆழும் ஜெயவர்மன் குணவர்மனின் சகோதரன். ஜெயவர்மன் கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருப்பதால் , கலிங்கத்தின் பாலூரில் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை குணவர்மன் உணர்கிறார்.
குணவர்மனிடம் பேசிக் கொண்டு இருந்த போது ‘வெண் புறா’ அநபாயனின் செய்திக் கொண்டு அந்த அறைக்கு வருகிறது. புறா வந்த சில நாழிகளில் ஒரு காவலன் அநபாயன் அழைப்பதாய் சொல்லி அழைத்து செல்ல , அவனை கைது செய்ய தயார் நிலையில் கலிங்கத்து அரசன் பீமன் இருந்தான். சுங்க அதிகாரி போர்வையில் இருந்த சோழர் தூதன் சேந்தனும் கைது செய்யப்பட்டான்.
மறு நாள் மரணத்தை பற்றி நினைத்த சேந்தனை பார்த்து இளையபல்லவம் அநபாயன் நம்மை காப்பாற்ற வருவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார். இளையபல்லவனும், சேந்தனும் நீதிமன்றத்தில் அனந்தவர்மன் முன் நிறுத்தப்படுகின்றனர். அப்போது, அநபாயன் அனந்தவர்மன் முன் தோன்றி அவர்களை விடுவிக்க சொல்கிறார். காஞ்சனாதேவி அனந்தவர்மன் மார்ப்புக்கு குறிவைத்து வில்லோடு நின்றாள்.
தப்பித்து வந்த இளையபல்லவன் காஞ்சனை தன்னை காதலிப்பதை பற்றி தெரிந்துக் கொள்கிறார். பாலூரில் இருந்து தப்பிக்க அநபாயன் கடல் கொள்ளையரான அகூதா, அவன் சீடனான அமீர், கண்டிதேவன் உதவியை நாடுகிறார். அவர்களும் திட்டம் வகுத்து காஞ்சனையும், குணவர்மனையும் பாதுகாப்பாக தப்பிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தப்பி செல்வதை பார்த்த பீமன் தன் படையோடு பின் தொடர்ந்து செல்கிறான். அவர்களை திசை திருப்ப இளையபல்லவன் அவர்களோடு சண்டை போடுகிறான். பலத்த காயங்களுடன் உயிரை துச்சமாக மதித்து இளையபல்லவன் சண்டை போட்டுக் கொண்டு இருக்க, இளையபல்லவன் நிலையை நினைத்து கடலில் காஞ்சனை பயணம் செய்வது போல் முதல் பாகம் முடிகிறது.
முதல் பாகத்தில் காட்சி விபரங்களை விட மிகவும் ரசித்தது வசனங்களை தான்.
காஞ்சனை அறையில் மறைந்திருந்த இளைபல்லவனை பார்த்து…
” நீ எதிரியா…?” காஞ்சனை.
“இல்லை”
” அப்படியானால் கள்வனாயிருக்க வேண்டும்”
“கள்வனுமல்ல…”
“அப்படியானால் தமிழனா ?”
இந்த கேள்வி மேலும் பிரபிப்பையே அளித்தது இளையபல்லவனுக்கு.”கள்வனாயிராவிட்டால் தமிழனாயிருக்க வேண்டுமா ?” என்று வினவினான். தமிழர்களைத்தான் சில நாள்களாகக் கலிங்க அதிகாரிகள் சிறைக்குள் தள்ளி வருகிறார்கள்.
குணவர்மன் இளையபல்லவனிடம் தன் கதையை சொல்லும் போது, ” இது உலக விசித்திரம். வேண்டாதவனிடம் பதவி ஒட்டிக் கொள்கிறது. வேண்டுபவனை வெட்டி விலக்கி தள்ளுகிறது.” என்கிறார்.
நீதி மன்ற விசாரனையின் போது…
அனந்தவர்மன் ” சோழர் வேறு இனம்; கலிங்கம் வேறு இனம்”
இளையபல்லவம் : மாந்தர் அனைவரும் ஒரே இனம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தவிர இன்னொரு நாட்டவரின் அதிக்கத்தைவிட ஓர் இனம் தன் இனத்தின் மீதே நடத்தும் ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சரித்திரம் இதற்குச் சான்று..”
அனந்தவர்மன் : சரித்திரம் இதுவரை காணாத புதிய சான்றுகளை கலிங்கம் அளிக்கும்.
இந்த வசனத்தை படிக்கும் போது ஈழ பிரச்சனைக்கு கலிங்கம் முன் உதாரணமாக இருக்கின்றது என்று தான் தோன்றியது. பல இடங்களில் இப்படி பல ‘நச்’ வசனங்களும் உள்ளன.
பல ஆங்கில படத்தில் இருந்து கதை, வசனத்தை தழுவும் தமிழ் இயக்குநர்கள், இது போன்ற நாவல்களில் இருந்து கதை, வசனங்களை உரிமை வாங்கி எடுத்தால் எழுதுபவர்களுக்கு உத்வேகமாக இருக்கும்.
புத்தக வாசகர்கள் ‘கடல் புறா’ கண்டிப்பாக படிக்க வேண்டிய சரித்திர நாவல்.
http://guhankatturai.blogspot.com/2009/04/blog-post_15.html
ஏப்ரல் 5, 2010 at 9:16 பிப
யவன ராணி – சாண்டில்யன்
—————————
முன்னுரை
———–
சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று ‘யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாக, யவன ராணி, இளஞ்செழியன், ஹிப்பலாஸ், டைபீரியஸ், பூவழகி, கரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.
கதையோட்டம்
————–
ஒருநாள் கரையோரத்தில் படைத்தலைவனான இளஞ்செழியனின் கால்களில் யவன ராணி தட்டுப்படுகிறாள். அவள் தமிழகத்தில் கால் வைத்த அன்றே சோழ நாடு மன்னரை இழந்து குழப்பத்தில் ஆழ்கிறது. இளவரசர் கரிகாலன் தலைமறைவாகிறார். கொடியவனான இருங்கோவேள் ஆட்சிபீடத்தில் அமருகிறான். புகாரை யவனர்களுக்கு அளிக்க முடிவு செய்கிறான். இதனையறிந்த இளஞ்செழியன் புகாரையும் தமிழகத்தையும் காப்பாற்ற போராடுகிறான். டைபீரியஸ் படைத்தலைவனுக்கு மயக்கத் துளிகளைக் கொடுத்து யவனர் கப்பல் ஒன்றில் அனுப்பிவிடுகிறான். கப்பல் பயணத்தில் இளஞ்செழியன் பல வாறான இன்னல்களுக்கு ஆளாகினாலும், அத்தனையும் வெற்றிக்கொண்டு தாயகத்திற்குத் திரும்புகிறான். ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி படைத்தலைவன் மேல் காதல் கொண்டு அவனுக்கு பல வழிகளில் உதவி புரிகிறாள். ஏற்கனவே பூவழகியிடம் இதயத்தைப் பறிக்கொடுத்த இளஞ்செழியன் யவன ராணியின் அழகில் தடுமாறவே செய்கிறாள். இறுதியாக, இளஞ்செழியன் வகுத்த போர் திட்டத்தால் கரிகாலன் வெற்றியுடன் அரியணையில் அமருகிறான். யவண ராணி டைபீரியஸால் கொல்லப்படுகிறாள். இளஞ்செழியன் பூவழகியை மணந்து இன்பமாக வாழ்கிறான்.
காதல்
——-
இந்நாவலில் அக்காலத்து தமிழர்களின் செல்வமும், வீரமும், திறமையும், தந்திரங்களும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இருப்பினும், நாவலைப் படித்து முடித்தப் பிறகு யவன ராணியின் காதலும் தியாகமுமே மனதில் மேலோங்கி நிற்கிறது. தமிழகத்தில் ஆட்சி புரியும் எண்ணத்துடன் வந்த யவன ராணி தமிழனான இளஞ்செழியன் மீது மையல் கொள்கிறாள். படைத்தலைவன் மீது அவள் கொண்ட காதல், சொந்த நாட்டையும் கடமையையும் மறக்கச் செய்கிறது. யவன ராணி தனது இலட்சியத்தை விட தான் மனதால் வரித்திருக்கும் படைத்தலைவனின் இலட்சியத்தை நிறைவேற்ற அரும் பாடுபடுகிறாள். இதனால் ராணியாக இருந்தும் டைபீரியஸால் அரண்மனையிலேயே சிறை வைக்கப்படுகிறாள். பல சோதனைகளைச் சந்தித்த போதும் ராணியின் காதல் சிறிதும் உறுதி குலையவில்லை. படைத்தலைவனின் மனதில் பூவழகி இருப்பதை அறிந்திருந்தும் அவள் அவனை விரும்புவதை நிறுத்தவில்லை. தன் காதலின் மீது அவளுக்கிருந்த உறுதி வியப்பளிக்கிறது. உயிருக்கே அபாயம் விளையும் தருணத்தில் கூட அவள் படைத்தலைவனுக்கு உதவுதை பேருவகையாக, மனைவி கணவனுக்குச் செய்யும் கடமையாகக் கருதுகிறாள். இறுதியாக கடமையை மறந்து தேச துரோகம் செய்தமைக்காக டைபீரிஸால் கொல்லப்படுகிறாள். அவள் இறுதி மூச்சி படைத்தலைவனின் அணைப்பில் நிற்கிறது. யவன ராணியின் காதலும் தியாகமும் மகத்தானது. அதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
முடிவுரை
———-
சாண்டில்யன் இந்நாவலுக்கு மற்ற பெயர்களை விடுத்து ‘யவன ராணி’ என்று பெயர் வைத்தமைக்கு அர்த்தம் இருக்கவே செய்கிறது. யவன ராணியின் தியாகம் படைத்தலைவன் திறமையையும், கரிகாலன் வீரத்தையும், பூவழகியின் அழகையும் மிஞ்சி நிற்பதை யாராலும் மறுக்க முடியாது. ராணியின் காதல் அவளைப் போலவே அழகானது. தான் காதலித்தவன் தன்னை முழு மனதோடு காதலிக்கவில்லை என்பதை அறிந்தும் அவள் அவனை வெறுக்கவோ அவன் மீது கோபப்படவோ இல்லை. மாறாக, அவனுக்குப் பல வகைகளில் உதவி புரிந்து உறுதுணையாக இருக்கிறாள். யவன ராணியின் காதல் மரணத்தையும் மிஞ்சி நிற்கின்றது. நாவலில் விமர்சிப்பதற்கு பல விசயங்கள் இருப்பினும் யவன ராணியின் காதலை மட்டுமே சிறப்பித்துக் கூறுவதற்கு மன்னிக்கவும். என்னைப் பொருத்தமட்டில் யவன ராணியின் காதல் தியாகத்திற்கு நாவலில் காணப்படும் எவரும், எதுவும் இணையாகாது!
http://kanaigal.blogspot.com/2008/12/blog-post.html
ஏப்ரல் 10, 2010 at 6:04 முப
good
ஜூன் 30, 2010 at 11:37 முப
I’m a big fan of saandilyan by reading his “Mannan Magal”. After reading all your comments I wish to read “Yavanarani”&”Kadalpura”.
I could read his novel through my uncle’s introduction about him.
I request all the saandilyan fans to tell your relations about him and make them enjoy his writings.
ஜூலை 1, 2010 at 5:24 பிப
சரவணன், சாண்டில்யன் பதிவுக்கு மறுமொழி எழுதியதற்கு நன்றி!
ஓகஸ்ட் 5, 2010 at 9:44 முப
விஜய மஹா தேவி – இந்த புத்தகத்தை விட்டு விட்டீர்கள்.
இதுவும் சாண்டில்யன் எழுதியது தான்.
ஓகஸ்ட் 10, 2010 at 1:21 முப
விமல், விஜயமஹாதேவியையும் லிஸ்டில் சேர்த்துவிட்டேன்.
ஸ்ரீனிவாஸ், சாண்டில்யன் பற்றிய தகவல்களுக்கு நன்றி!
ஓகஸ்ட் 5, 2010 at 11:12 பிப
எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:
நல்ல எழுத்துக்கு வேண்டியது – முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.
எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.
“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி”, என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.
நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.
கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.
– சாண்டில்யனின் ‘நாவல் எழுதுவது எப்படி?’ (சில பகுதிகள்)
நவம்பர் 8, 2010 at 1:13 பிப
Can I get chandilyan’s kadalpura novel online?
நவம்பர் 9, 2010 at 1:33 முப
BK, Try here – http://kadalpuraaonnet.blogspot.com/
திசெம்பர் 24, 2010 at 12:13 பிப
i am also very big big fan of saandllyan
i read yavanarani and kadaal pura more than 100 times
நவம்பர் 13, 2011 at 12:59 பிப
I have been reading historical novels for a long time and have read varied authors. But what sets apart Sandilyan from others are his intricate war making tactics and strategy which is unique and which i find lacking in other novelists.
செப்ரெம்பர் 16, 2012 at 8:46 முப
if you have a copy of Vijayamahadevi, can i have a copy!!
ஜூன் 1, 2014 at 2:20 முப
[…] இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே. […]
மார்ச் 23, 2020 at 3:41 பிப
I am also very big fan of Sandilyan
Chandrakkumar