இது ஒரு மீள்பதிவு – கோமாவில் இருக்கும் கணேஷ் வசந்த் கதைகள் ப்ளாகிலிருந்து இங்கே மீண்டும் பதிப்பித்திருக்கிறேன்.
கணேஷின் முதல் தோற்றம் நைலான் கயிறு நாவலில். அறுபதுகளின் பின் பாதியில் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. கணேஷ் ஒரு துணை கதாபாத்திரம். அப்போதெல்லாம் அவருக்கு டெல்லி வாசம். வசந்த் கிடையாது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட யாருக்கோ ஆஜராகி அவருக்கு விடுதலை வாங்கித் தருவார். பாதி கதையில் காணாமல் போய்விடுவார்.
வசந்துக்கு முன்னால் கணேஷுக்கு நீரஜா என்று ஒரு அசிஸ்டன்ட் உண்டு. பாதி ராஜ்யம் என்ற கொஞ்சம் நீளமான கதையில் முதன் முதலாக க்ளையன்டாக வருவார். பிறகு ஒரு விபத்தின் அனாடமி என்ற கதையில் அசிஸ்டன்டாக ப்ரமோஷன்.
கணேஷ் எப்போது டெல்லியிலிருந்து சென்னை வந்தார் என்று சரியாகத் தெரியவில்லை. சென்னை வந்தபிறகுதான் வசந்த் வந்து ஒட்டிக்கொள்வார். வசந்தின் முதல் தோற்றம் காயத்ரியில் என்று நினைக்கிறேன். சாவி ஆசிரியராக இருந்த பத்திரிகை, எது என்று சரியாக நினவு இல்லை. தினமணி கதிரோ? ஜெயராஜின் ஒரு படம் பார்த்து மனம் கிளர்ந்தது ஞாபகம் இருக்கிறது. அன்றைய சூழ்நிலையில் அது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதைதான். பிறகு பிரியாவில் வசந்துக்கு ஒரு கௌரவத் தோற்றம்.
நிர்வாண நகரம் வந்த நாட்களில் அவர்கள் காரக்டர்கள் கச்சிதமாக உருவாக்கப்பட்டுவிட்டன. மேற்கே ஒரு குற்றம் போன்ற மாத நாவல்களில் அவர்கள் இருவருக்குமான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மனதில் முடிவாக வரையறுக்கப்பட்டுவிட்டன. வசந்த்! வசந்த்! நாவல் கல்கியில் வந்தபோது வசந்துக்குத்தான் அதிக ரசிகர்கள் என்று தோன்றியது.
வசந்த் தனியாக வரும் கதையும் உண்டு என்ற ஸ்ரீதர் நாராயணன் நினைவுபடுத்தினார். எனக்கும் புத்தகத்தின் பேர் நினைவு வரவில்லை. காந்தளூர் வசந்தகுமாரன் கதையில் வசந்த் ராஜ ராஜ சோழன் காலத்துக்கு சென்று கணேச பட்டறையும் சந்திக்கிறார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் குமுதம் இல்லாவிட்டால் விகடன் இல்லாவிட்டால் கல்கி இல்லாவிட்டால் குங்குமம் என்று எங்கேயாவது ஒரு கணேஷ் வசந்த் தொடர்கதை வந்துகொண்டே இருக்கும். ஒன்றும் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு மாத நாவலிலாவது வந்துவிடுவார்கள்.
எண்பதுகளின் முடிவில் பாலகுமாரன் புதிய நட்சத்திரமாக தோன்றிவிட்டார். இருந்தாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சில்வியா, மெரீனா போன்ற நீள் கதைகளில் வந்துகொண்டுதான் இருந்தார்கள். ஆனால் படிக்கும் எனக்கு வயதாகிவிட்டதாலோ என்னவோ கதையின் முடிச்சுகள் சுலபமாக பிடிபட ஆரம்பித்துவிட்டன. கணேஷ் வசந்த் கதைகள் ஒரு ஆம்னிபஸ் வடிவில் வெளியிடப்பட்டால் எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். வந்திருக்கிறதா?
ஜெய்ஷங்கர் காயத்ரி, இது எப்படி இருக்கு (அனிதா இளம் மனைவியின் படமாக்கல்) ஆகியவற்றிலும் ரஜினிகாந்த் ப்ரியாவிலும் கணேஷாக நடித்திருக்கிறார்கள். காயத்ரியில் வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசந்த்! பிரியாவில் வசந்தாக வருபவர் என்னத்தே கன்னையா என்று ஸ்ரீதர் நாராயணன் சொல்கிறார். என்னத்தே சொல்றது? ஆனால் அது கன்னையா இல்லை என்று நித்தில் மறுக்கிறார்.
டிவி சீரியல் எதுவும் இன்னும் வரவில்லையா? டிவி சீரியலாகவும் வந்திருக்கிறதாம். எண்பதுகளின் டம்மி ஹீரோக்களில் ஒருவரான சுரேஷ் கணேஷாகவும், விஜய் ஆதி ராஜ் வசந்தாகவும் நடித்திருக்கிறார்களாம். விவரம் சொன்ன வெங்கட்டுக்கு நன்றி. சுரேஷுக்கு வேஷப்பொருத்தம் நன்றாக இருக்கும். ஆனால் விஜய் ஆதி ராஜுக்கு கொஞ்சம் முற்றிய முகம். அவருக்கும் கணேஷ் வேஷம்தான் நன்றாக பொருத்தும் என்று தோன்றுகிறது. (எஸ்செக்ஸ் சிவா விஜய் ஆதி ராஜுக்கு வேஷம் பொருந்தி வந்தது என்று சொல்கிறார்.) கொலையுதிர்காலமும் டிவி சீரியலாக வந்திருக்கிறதாம். அதில் வசந்தாக நடித்தவர் விவேக்காம். (தகவல் தந்த பீமார்கனுக்கு நன்றி!) டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு டிவியில் வந்தபோது ராஜீவ் கணேஷாகவும் ஒய்.ஜி. மகேந்திரன் வசந்தாகவும் நடித்தார்களாம். (சரத் பாபு டாக்டராம்). இருவருக்கும் வேஷப் பொருத்தம் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி.க்கு வயதும் இமேஜும் உதைக்கிறது. (தகவல் தந்த ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி!)
எண்பதுகளின் ஆரம்பத்தில் எங்கள் கனவுகளில் கண்ணாடியுடன் ரஜினி கணேஷாகவும், கமல் வசந்தாகவும் இருந்தார். இன்றைக்கு பிரகாஷ் ராஜ் நல்ல கணேஷாக இருப்பார் என்று நினைக்கிறேன். வசந்த்தாக சிம்பு?
பிப்ரவரி 1, 2009 at 6:48 முப
நல்லதொரு பதிவு.. 🙂
கொலையுதிர்காலமும் DD ல் டிவி சீரியலாக வந்திருக்கிறதே.. அப்போது வசந்தாக நடித்தவர் விவேக்.
பிப்ரவரி 1, 2009 at 6:06 பிப
பீமார்கன்,
வருகைக்கும் விவரங்களுக்கும் நன்றி! கொலையுதிர்காலம் பற்றி பதிவில் சேர்த்துவிட்டேன்.
பிப்ரவரி 1, 2009 at 7:35 பிப
I too thought that Aadi Raj wouldn’t suit for Vasanth. But, he was very good and Suresh was perfect for Ganesh and that tv serial was very good. I think it was produced by Suhasini.
Siva
It’s almost one year without ‘Thalaivar’ – 27th Feb 2008…
பிப்ரவரி 1, 2009 at 8:08 பிப
வசந்த் தனியாக துப்பறியும் கதையும் உண்டு. பெயர் மறந்துவிட்டது.
காந்தளூர் வசந்தகுமாரனில் வசந்த் சரித்திர காலத்திற்கு கொண்டு சென்றுவிடுவார். கணேச பட்டரும் உண்டு.
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு கூட டீவியில் வந்திருக்கிறது. கனேஷாக ராஜீவும், வசந்தாக ஒய்ஜி மகேந்திரனும், டாக்டர் நரேந்திரனாக சரத்பாபுவும் நடித்திருந்தார்கள்.
ப்ரியாவில் ‘என்னத்த’ கன்னையா ‘வசந்த்’ஆக நடித்திருப்பார்.
கனேஷ், வசந்த பாத்திரமாக்களை புரிந்து கொண்டு casting செய்யப்படவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வசந்த் துடிப்பான, ஃப்ளர்ட் செய்யும் இளைஞன் மட்டுமல்ல, சட்டபுத்தகத்தில் கில்லாடியாக உருவகம் கொடுத்திருப்பார் சுஜாதா. ஏனோ அதனை பெரும்பாலும் படக் கதையாசிரியர்கள் கண்டு கொள்ளவில்லை.
மணிரத்னம் போன்றோர் கணேஷ்-வசந்த் பாத்திரத்திற்கு நன்றாக உயிரூட்டி திரையில் உலவவிடலாம் என்று தோன்றுகிறது.
பிப்ரவரி 2, 2009 at 12:14 முப
சிவா, ஸ்ரீதர்,
வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி!
ஸ்ரீதர், காந்தளூர் வசந்தகுமாரன் பற்றியும் சேர்த்து விட்டேன். ராஜீவுக்கு கணேஷாக வேஷம் பொருந்தும். ஒய்.ஜிக்கும் வசந்தாக பொருந்தும்தான், ஆனால் வயது, இமேஜ் உதைக்கிறது. பிரியாவில் வசந்தாக வருவது என்னத்தே கன்னையாவா? என்னத்தே சொல்றது?
பிப்ரவரி 2, 2009 at 5:11 முப
ப்ரியாவில் ‘வசந்த்’ஆக நடித்திருப்பவர் பெயர் தெரியவில்லை. ஆனால் ‘என்னத்த’ கன்னையா இல்லை. இந்த படம் வெளியான பிறகு சுஜாதா அவர்கள் இனி என் கதைகளை திரைபடமாக்குவதற்கு தருவதில்லை என கூறியதாக நினைவு. பின்னாளில் விக்ரம் கதை திரைபடமாக்கப் பட்டது.
வசந்த்தின் பாத்திரப் படைப்பு மிகவும் அருமையான ஒன்று. புத்திசாலிதனம், நகைசுவை உணர்வு, சிறிது வீரம், சிறிது ஜொல்லு எல்லாம் கலந்த கலவை. வசந்த் பாத்திரத்திற்கு இன்றைய தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என நினைக்கின்றேன். ‘ஏ டன்டனக்கா’ சிம்பு வசந்தா?
கல்லூரி நாட்களின் என்னை கவர்ந்த எழுத்தாளர் சுஜாதாவை நினைவு படுத்திய இப்பதிவிற்கு நன்றி.
நித்தில்
பிப்ரவரி 2, 2009 at 2:58 பிப
நித்தில்,
வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.
ப்ரியாவுக்கு அப்புறம் ஜன்னல் மலர் என்ற கதையும் யாருக்கு யார் காவல் என்று படமாக்கப்பட்டது. ஸ்ரீகாந்த் ஹீரோ.
மார்ச் 6, 2009 at 2:10 முப
சூப்பரா எழுதி இருக்கீங்க. சத்தியமா என்னால இப்படி எழுதமுடியாது. அதனால அந்த கணேஷ் வசந்த் மேட்டரை ஜகா வாங்கிக்கறேன் 🙂
மார்ச் 10, 2009 at 2:36 முப
நன்றி, கிஷோர்!
சுஜாதா ரசிகர்களை இணையத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி. கணேஷ் வசந்த் கதைகளை பற்றி ஒரு ப்ளாக் எழுத நினைத்திருந்தேன் – புத்தகங்கள் கிடைக்காததால் முடியவில்லை. அதிலிருந்து இங்கே ஒரு பதிவை மீள்பதிவு செய்திருந்தேன். அது உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சி.
மார்ச் 6, 2009 at 2:10 முப
For email notification
ஏப்ரல் 7, 2009 at 9:09 முப
I guess Suruli Rajan was cast as Vasanth in Priya. Though he is a good comedian, he is not the right choice for Vasanth. According to me, Rajnikanth was a bad choice for Ganesh. Its high time, we had casting directors in our movies..
பிப்ரவரி 27, 2010 at 8:22 முப
I think the film Airport (satyaraj) had lot of resemblance to his J.K. Not sure whether he is given credits for the story.
மார்ச் 1, 2010 at 7:53 முப
பாலாஜி,
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு பதிவுக்கு மறுமொழி இட்டதற்கு நன்றி!
நான் ஏர்போர்ட் பார்த்ததில்லை. ஜே.கே.யும் மங்கலாகவே நினைவிருக்கிறது. மீண்டும் தேடித் பிடித்து படிக்க வேண்டும்!
ஓகஸ்ட் 27, 2010 at 11:30 முப
“மேகத்தை துரத்தினவன்” – I remember Vasanth playing a side role. Ganesh is totally absent.
ஓகஸ்ட் 27, 2010 at 4:28 பிப
ஆறு, மறுமொழிக்கு நன்றி! வசந்த் மட்டும் துப்பறியும் நாவல் “மேகத்தை துரத்தினவன்” ஆகவே இருக்கலாம்.