அனல் பறக்கும் வாதங்களும் எதிர் வாதங்களும் வந்து கொண்டிருக்கின்றன. நான் பேசுவது நல்ல விஷயம் என்று நம்புபவன். மாற்று கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும் என்று நினைப்பவன். ரதி, ப்ரியா, வானதி மற்ற அனைவருக்கும் கருத்துகளை எழுதியதற்காக நன்றி!
நான் எங்கே நிற்கிறேன் என்று இந்த பதிவில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டாவது பகுதி இங்கே.
புலிகள்:
புலிகள் ஈழம் வேண்டும் என்று போராடுவது தவறான செயலா?
இல்லவே இல்லை.
ஒரு அரசாங்கம் பிறப்பு, பேசும் மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றை வைத்து உங்களை இரண்டாம் தர குடிமகனாக சட்ட பூர்வமாக நடத்த முயற்சிக்கும்போது; அரசு எந்திரம் இந்த அடிப்படையில் மக்களை ஒடுக்கும்போது; போராடுவது தவறே இல்லை. போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. அஹிம்சை ஓரளவுதான், சில சூழ்நிலைகளில் மட்டும்தான் பயன் தரும்.
பிறகு புலிகளையும பிரபாகரனையும் நான் ஏன் எதிர்க்கிறேன்?
புலிகள் இலங்கை அரசோடு, சிங்களவர்களோடு மட்டும் போராடவில்லை. சக போராளிகளையும், கருத்து வேற்றுமை உள்ள அனைவரையும் வஞ்சம் வைத்து கொல்கிறார்கள். ஈழ விடுதலை என்பது அவர்கள் சொல்லும் வழியிலே, அவர்கள் தலைமையிலே மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
புலிகள் தலைமையில் ஒரு தனி ஈழம் அமைவது நல்ல விஷயமா?
இல்லை.
புலிகள், பிரபாகரன் ஃபாசிஸ்ட்கள். அவர்கள் தலைமையில் அமையும் எந்த ஆட்சியும் நல்லது இல்லை.
ராஜீவ்:
புலிகள் ராஜீவை கொலை செய்ததை கண்டிக்கப்பட வேண்டியதா?
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது.
எல்லா இந்தியர்களும் எதிர்க்க வேண்டிய விஷயம் இது. இதற்கெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இது புலிகளும் ஈழத் தமிழர்களும் கூட கண்டிக்க வேண்டியது என்பது என் உறுதியான கருத்து. வெறும் பழி வாங்கும் உணர்ச்சியால் நடந்த கொலை இது. மக்கள் நலத்தில் அக்கறை உள்ள எந்த தலைவனும் கடந்த கால கசப்புகளை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு செயல்படக் கூடாது. ப்ராக்டிகலாகவும் யோசிக்க வேண்டும். இந்த ஒரு கொலைதான் இந்தியர்களை புலிகளுக்கு எதிராக திருப்பியது. இன்று நிலை கொஞ்சம் மாறி இருந்தாலும் தமிழர்களும் புலிகளுக்கு எதிராக செயல்பட இது ஒன்றுதான் முக்கிய காரணம். அதற்கு முன்னால் புலிகளுக்கு எதிராக கருத்து சொன்ன தமிழர்கள் வெகு சிலரே. பிரபாகரனின் மிக பெரிய முட்டாள்தனமான செயல் இது.
ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் நல்ல விஷயமா?
ஆம்.
பிறகு புலிகள் அதை ஏன் எதிர்த்தார்கள்?
பிரபாகரன் ஒரு பிடி மண்ணாக இருந்தாலும் போதும், அது என் கண்ட்ரோலில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைத்ததால்.
ஒப்பந்தம் ஏன் தோல்வி அடைந்தது?
அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்தன மாட்டி விட்டுவிட்டார். ராஜீவ் புலிகளை, பிரபாகரனை, பிரபாகரனின் பிடிவாதத்தை, அவரது “என் வழி தனி வழி” மனப்பான்மையை குறைத்து மதிப்பிட்டுவிட்டார். ஆப்பெடுத்த குரங்கு போல ஆகிவிட்டது ராஜீவின் நிலை.
IPKF அத்து மீறியதா?
என்னால் ஆதாரம் காட்ட முடியாது. ஆனால் எந்த ராணுவமும் அத்து மீறி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. போலீஸ் திருடர்களை அடிக்கக் கூடாதுதான். ஆனால் அடிப்பதே இல்லை என்று யாராவது நம்புகிறீர்களா?
இலங்கை அரசு:
இலங்கை அரசை ஆதரிக்க வேண்டுமா?
இல்லவே இல்லை.
புலிகள் செய்த/செய்யும் தவறுகள் பரங்கிமலை அளவு என்றால் இலங்கை அரசு செய்த/செய்யும் தவறுகள் இமய மலை அளவு. Period.
தமிழ் நாடு:
தமிழர்களின் தவறு என்ன?
புலிகள் பற்றிய குற்ற/எதிர்ப்பு உணர்ச்சியில் நாம் ஈழத் தமிழர்களின் கஷ்டங்களை தமிழர்கள் அல்லாத இந்தியர்களிடம் விளக்க தவறி விட்டோம். உதாரணமாக இந்த தளம் தமிழில்தானே இருக்கிறது?
மற்ற இந்தியர்கள் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஆ ஊ என்றால் தீக்குளிக்கிறார்கள் தீயில் எரிகிறார்கள், (யாரையா தீயில் எரிவதை தீக்குளித்தல் என்ற அழைப்பது?), ஈழம் என்றால் அறிவு பூர்வமாக, ப்ராக்டிகலாக பேசுவதில்லை என்றுதான் நினைக்கிறார்கள். வைக்கோதான் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும், மற்ற தேசிய தலைவர்களுக்கும் தெரிந்த ஈழத் தமிழர் ஆதரவுக் குரல். உணர்ச்சிவசப்படாமல் வைக்கோவுக்கு பேசவே தெரியாது. வேறு என்ன நினைப்பார்கள்? இல்லை என்றால் கலைஞர் மாதிரி பதவிக்காக ஜால்ரா அடிப்பார்கள்; இல்லை ஜெ மாதிரி குட்டையை குழப்புவார்கள். தமிழ் நாட்டின் முகங்கள் மிகவும் polarised ஆக இருக்கின்றன. வைக்கோவுக்கும் சோவுக்கும் இடைப்பட்ட ஒரு குரல் எங்கே?
தமிழர் தலைவர்களின் தவறு என்ன?
தலைமை வகிக்கும் தகுதி இல்லாதவர்கள். ஸ்டண்ட் அடிப்பதே குறி.
சிதம்பரம் போன்றவர்கள் என் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பவதில்லை?
இன்று என்ன செய்ய வேண்டும்?
முதலில் ப்ராக்டிகலாக யோசிக்க வேண்டும். பழைய கசப்புகளையே நினைத்து செயல்படக்கூடாது.
இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும்?
Ideally, போரை நிறுத்த வேண்டும். ஆனால் இது நடக்கப் போவதில்லை. நீங்கள் இலங்கை அரசின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். 25 வருஷ போருக்கு பின் இன்று வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கிறது. புலிகளை அனேகமாக அழித்து விடலாம் என்ற நிலை. போரை நிறுத்தினால் அது புலிகள் இயக்கம் மீண்டும் வலிமையோடு உயிர்த்தெழ உதவும். அப்படி செய்ய இலங்கை அரசுக்கு என்ன பைத்தியமா இத்தனை நாள் தமிழர்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், இன்னும் சில ஆயிரம் பேர் செத்தால் என்ன ஆகிவிடும் என்றுதானே யோசிப்பார்கள்? இலங்கை அரசு போரை தொடரத்தான் போகிறது.
போரை நிறுத்தப் போவதில்லை என்றால் அடுத்த நிலை என்ன?
தமிழர் காம்ப்களை செஞ்சிலுவை சங்கமோ, ஐ.நா.வோ பார்வை இட வேண்டும். அவர்களை நல்லபடி நடத்த வேண்டும்.
அரசியல் சட்ட மாற்றங்கள் இப்போதே ஆரம்பிக்க வேண்டும். இவற்றை செய்தால் இலங்கை அரசுக்கு propaganda வெற்றி கிடைக்கும்.
புலிகள் என்ன செய்ய வேண்டும்?
Ideally, தனி ஈழம் கோரிக்கையை விட்டுவிட்டு, இலங்கை அரசோடு ஒத்துழைக்க வேண்டும். இதுவும் நடக்கப் போவதில்லை. காயங்கள் மிக ஆழமானவை, புலிகளின் மனோநிலையும் அப்படிப்பட்டதில்லை.
அப்படி என்றால் புலிகளுக்கு அடுத்த நிலை என்ன?
போரில் ஈடுபடாத தமிழர்களை ஒரு பாதுகாப்பு வளையமாக பயன்படுத்தாதீர்கள். எனக்கு நிச்சயமாக அப்படி நடக்கிறதா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அப்படி செய்ய புலிகள் நிலையில் இருக்கும் எவருக்கும் தோன்றத்தான் தோன்றும்.
இழப்புகளை எவ்வளவு தூரம் குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் குறைத்துக் கொண்டு தப்பிப்பதுதான் இப்போதைக்கு சிறந்த வழி. எதிர்காலத்தில் மீண்டும் வலிமை பெற முயற்சிக்கலாம்.
இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது.
இங்கே வரும் இலங்கை தமிழர்களை ஆதரிப்போம். கல்வி, மருத்துவ வசதி, சுலபமாக தொழில் செய்ய கடன் வசதி, குடியுரிமை ஆகியவை கொடுக்கப்பட வேண்டும். இலங்கை தமிழர்கள் தம் காலில் நிற்க முடிந்த உதவிகள் செய்ய வேண்டும்.
இலங்கை அரசின் மீது diplomatic pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர் காம்ப்கள் ஊடகங்கள், செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. ஆகியவை சுலபமாக அணுகும் நிலையில் இருக்க, அரசியல் சட்டம் இப்போதே மாற்றப்பட, எதிர்கால அரசியல் அமைப்பு இப்படி இருக்கும் என்று வரையறுக்கப்பட இப்போதே pressure இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஈழத் தமிழர் படும் கஷ்டங்களை எடுத்து சொல்லுங்கள். ஆங்கில பத்திரிகைகள், பதிவு தளங்கள் ஆகியவற்றில் ஏன் இலங்கை பிரச்சினை பேசப்படுவதில்லை? இந்தியாவில் இருந்து வரும் டாப் டென் ஆங்கில பதிவுகள் எப்போது இலங்கை பிரச்சினையை பற்றி பேசின? அவர்கள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசினாலும் பரவாயில்லை, முதலில் தங்கள் கருத்துகளை பதிக்க வேண்டும். அந்த் ஆரம்பம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்கப் போவதில்லை. As a tactical step, நீங்கள் புலிகளை ஆதரித்தாலும் இப்போதைக்கு அவர்களை பற்றி பேசாதீர்கள். நீங்களும் ஆங்கிலத்தில் பதிவிடுங்கள்!
காங்கிரஸ்காரர்களை பிடியுங்கள். கலைஞர் மண் குதிரை. சண்டைக்காரன் காலில் விழுவதே இப்போதைக்கு நல்லது. அவர்கள் வாயை திறக்க வேண்டும். அதற்கு முயற்சி செய்யுங்கள்!