இணையத்தில் அதிகமாக திட்டு வாங்குபவர்களில் காஞ்சி மடத்தின் இன்றைய தலைவரான ஜயேந்திர சரஸ்வதியும் ஒருவர். நான் ஒரு அய்யர் குடும்பத்தில் பிறந்தவன். அய்யர்களில் பலரும் காஞ்சி சங்கர மடத்தை மதிப்பவர்கள். அதனால் எனக்கு ஒரு insider perspective இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு இந்த மடம் கிடம் ஆகியவற்றில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. நான் எழுதுவது என் சொந்த அனுபவம், perspective. இதை படித்தால் உங்கள் மனம் புண்படலாம். என் அம்மா அப்பா படித்தால் ஏண்டா இப்படி எழுதினே என்று கோபப்படலாம். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை, என் கருத்து எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் வேர்க்கடலை கட்டி வந்த பேப்பரை கூட படிப்பேன். காஞ்சி மடத்தை பற்றிய ஐதீகங்களையும் ஆதி சங்கரர் ஐதீகங்களையும் ஓரளவு படித்திருக்கிறேன். மடத்திலேயே சில புத்தகங்கள் கிடைத்தன என்று நினைவு. காஞ்சி மடம் என்பது கும்பகோணத்தில் சிருங்கேரி மடத்தின் ஒரு கிளையாக இருந்தது, பிறகு காஞ்சிபுரத்தில் தனி மடமாக மாறிவிட்டது என்பது காஞ்சி மட ஐதீகங்களிலேயே இலைமறைகாயாக தெரிகிறது. ஆனால் official காஞ்சி மடத்து ஐதீகமோ, இது ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஐந்தாவது மடம் என்கிறது. ஆதி சங்கரர் முதல் மடாதிபதியாக இருந்ததாகவும் சுரேஸ்வரர் இரண்டாவாது மடாதிபதி என்றும் official காஞ்சி மடாதிபதிகள் லிஸ்டில் இருக்கிறது. சுரேஸ்வரர்தான் சிருங்கேரி மடத்தை நிறுவியர் என்பது எல்லா சங்கர மடங்களும், ஆதி சங்கரர் ஐதீகங்களும் தெளிவாக சொல்லும் விஷயம். ஒரு பொய்யின் மீது ஒரு ஆன்மீக மடம் எழுப்பப்பட்டிருப்பது எனக்கு சிறு வயதிலேயே பெரிய உறுத்தலாக இருந்தது. கிளை மடமாக இருந்தோம், இப்போது தனியாக பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டால் மடத்தின் மகிமை குறைந்துவிடுமா? அப்படி குறைந்துவிடுமென்றால் மடத்துக்கு உண்மையிலேயே ஏதாவது மகிமை இருக்கிறதா?

காஞ்சி மடத்தை பலரும் மதிக்க முக்கிய காரணம் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள்தான். காந்தி வந்து அவரை சந்தித்ததை, அவர் யாரோ ஒரு வெள்ளைக்காரருக்கு திருவண்ணாமலை ரமணரை கை காட்டியதை, சிவாஜி திருவருட்செல்வரில் அப்பருக்கு அவரை ரோல் மாடலாக வைத்துக் கொண்டதை, ஜெயகாந்தன் எழுதிய ஜய ஜய சங்கர சீரிஸ் புத்தகங்கள எல்லாம் பெருமையாக பேசுவார்கள். அவரை நான் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். என் சிறு வயதில் காஞ்சிபுரத்துக்கு பக்கத்தில் உள்ள கலவையோ என்னவோ ஒரு கிராமத்தில் இருந்தார் என்று நினைவு. அங்கே ஒரு முறை போயிருக்கிறேன். பெரிய இடம், அவரைப் பார்க்க இரண்டு மூன்று மணி நேரம் ஆனது. ஆனால் அங்கே சும்மா சுற்றி நடந்து வந்து பொழுது போய்விட்டது. அவர் ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவார், அதுவும் உப்பு இல்லாமல் வாழைப்பூவும் சாதமும் கலந்து ஒரு கவளம் இரு கவளம்தான் சாப்பிடுவார் என்று சொன்னார்கள். அட சுகமாக வாழும் சந்நியாசி இல்லை போலிருக்கிறதே என்று தோன்றியது.

அவர் ஒரு முறை சென்னைக்கு வந்திருந்தார். அப்போது எனக்கு ஒரு 13-14 வயது இருக்கலாம். என்னுடைய விதவை உறவினர் ஒருவர் அவரை பார்க்க கிளம்பவில்லை. ஏனென்றால் அவர் தலை மழிக்காத விதவையை பார்த்தால் அன்று சாப்பிட மாட்டாராம். அவர் சாப்பிடும் ஒரு கவளம் இரு கவளத்தையும் நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று அவர் வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார். விதவை என்றால் தலையை மழித்துக் கொள்ளத்தான் வேண்டுமா, இது என்னடா கொடுமை என்றுதான் தோன்றியது. அதுவும் அந்த வயதுதான் எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வயது, தனக்குத்தான் எல்லாம் தெரியும், இந்த பெரிசுகள் எல்லாம் நாட்டைக் கெடுக்கின்றன என்று ஒரு நினைப்பு இருக்கும் வயது. வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அப்புறம் அவருக்கு வயதாக வயதாக senile ஆகிவிட்டார், அதை யாரும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிறார்கள் என்று தோன்றியது. தீபாவளி மலரில் அவர் படம் போடுவார்கள். ஒரு தீபாவளி மலரில் அவர் குத்துக்காலிட்டு அடி தொடை தெரிய உட்கார்ந்திருந்தார். தீபாவளியும் அதுவுமாக திவ்ய தரிசனம். வெளியிலும் வரவே மாட்டாராம். வெளியில் வந்தால் உண்மை தெரிந்துவிடப் போகிறது என்று அவரை உள்ளேயே வைத்திருந்தார்கள் என்று எனக்கு தோன்றியது. அவர் மறைந்ததும் அவரை கடவுள் என்று கொண்டாடுகிறார்கள். ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் ஆழ்வார் என்று ஒரு காரக்டர் வருவார். அவர் ஒரு icon, senile ஆனாலும் அவரை வைத்து ஷோ காட்டுவார்கள். அந்த இடத்தை படித்தபோது இவர் ஞாபகம் வந்தது.

உண்மையில் பல அய்யர்கள் அவரை கொண்டாடுவது ஜெயேந்திரர் மீது உள்ள அதிருப்தியால்தான் என்று நினைக்கிறேன். ஜெயேந்திரர் மடத்தை விட்டு ஓடிய போதே இந்த அதிருப்தி தொடங்கிவிட்டது. அரசியல் தலையீடு, மடத்தை புது வழிகளில் – மற்ற ஜாதியினரை போய் பார்ப்பது, கல்வி, சங்கரா யூனிவர்சிடி எல்லாம் இந்த அதிருப்தியை அதிகரித்தது. அப்புறம் கொலை கேஸ், பெண்கள் உறவு என்றெல்லாம் நியூஸ் வர ஆரம்பித்ததும் எல்லாருக்கும் அருவருப்பு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெயேந்திரர் சேரிகளுக்கு போனதும், காலேஜ் திறந்ததும், மடத்தின் சொத்துகளை வைத்து, சமூகத்துக்கு ஏதோ செய்ய நினைத்ததும் எனக்கு பிடித்திருந்தது. ஏதோ கொஞ்சமாவது உருப்படியாக ஏதோ செய்கிறார் என்று தோன்றியது. இவரது முயற்சிகளுக்கு பழமையில் ஊறிய பெரியவர் முட்டுக்கட்டை போட்டிருப்பார், அதனால்தான் தாங்க முடியாமல் ஓடியிருப்பார் என்று தோன்றியது. ஆனால் அது அரசியலில் இலைமறைகாயாக தலையிடுதல், ராம ஜன்ம பூமிக்கு ஆதரவு என்று மாற ஆரம்பித்தது. கடைசியில் பார்த்தால் கொலை கேஸ், பெண்கள் என்று முடிந்திருக்கிறது.

ஜெயேந்திரர் மாசு மறுவற்ற உத்தமர் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நெருப்பிலாமல் புகையாது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு மடாதிபதி, அதுவும் ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஒரு மடத்தின் அதிபதி என்று சொல்லிக் கொள்பவர் கொலை எல்லாம் செய்ய வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஜெயலலிதாவுடன் ஏதோ தகராறு, அதனால்தான் அவரை பழி வாங்கவே ஜெ இப்படி எல்லாம் செய்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஜெ ஒருவரை ஒழிக்க வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர். கைது செய்த போலீஸ் அதிகாரி பற்றியும் சில நெகடிவ் செய்திகள் வந்தது மங்கலாக நினைவிருக்கிறது. கலைஞர் ஆட்சியிலும் கேஸ் விரைந்து நடத்த முயற்சி எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. ஆனால் ஜெயேந்திரர் மேல் தப்பே இல்லை என்றாலும், இது காழ்ப்பு உணர்ச்சியால் மட்டுமே போடப்பட்ட கேஸ் என்றாலும் ஜெயேந்திரர் கேசை கிடு கிடு என்று முடிக்க முயற்சி செய்ய வேண்டாமா? அப்படி அவரும் முயற்சி செய்வது போல் தெரியவில்லை. அப்படி அவர் முயற்சி செய்யாததுதான் அவர் மீது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

Ceaser’s wife must be above suspicion என்று சொல்வார்கள். கேஸ் முடியும் வரைக்கும் என்னை நானே சஸ்பெண்ட பண்ணிக் கொள்கிறேன், மடத்தின் லௌகீக விஷயங்களை ஒரு கமிட்டி கவனிக்கும், ஆன்மீக விஷயங்களை கவனிக்க இன்னொரு வாரிசை தேர்ந்தெடுக்கிறேன், கேஸ் முடிந்த பிறகுதான் நான் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்பேன் என்று சொன்னால், அது அவருக்கும் கௌரவம். அப்படி அவர் செய்ய விரும்புவதாகவே தெரியவில்லை. எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் கேசை இழுத்தடிப்போம் என்றுதான் முனைவதாக தோன்றுகிறது. இது அவருக்கும் இழுக்கு, சங்கர மடம் என்ற அமைப்புக்கும் இழுக்கு.

இன்றைக்கும் அய்யர்கள் காஞ்சி மடத்துக்கு போகத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு காஞ்சி மடம் ஒரு ஆன்மீக ஸ்தலம் மாதிரி. குல தெய்வம் கோவிலில் பூசாரி சரி இல்லை என்றாலும் கடா வெட்டி பூசை செய்வது நிறுத்தாமல் நடப்பது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். ஆனால் எல்லாருக்கும் ஒரு தயக்கம், இங்கே போகிறோமே என்று கொஞ்சம் கவலை எல்லாம் இருக்கிறது. அது எல்லாம் மூத்தவரை கடவுளாகவே பாவிக்கும் நிலையாக உருவாகி இருக்கிறது.

உண்மையில் நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. இந்த கால கட்டத்தில் மடங்கள் போன்ற மத அமைப்புகள் (முஸ்லிம், கிருஸ்துவ, சீக்கிய அமைப்புகளுக்கு பேர் தெரியவில்லை) தேவைதானா? ஒரு மடாதிபதியின் கடமைகள் என்ன? அதை பெரியவரும் ஜயேந்திரரும் செய்தார்களா? பெரியவர் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவரா? ஒரு நல்ல மடத்தின், மடாதிபதியின் இலக்கணம் என்ன? இன்றைய கால கட்டத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும்? Does a mutt have any relevance today? அதை பற்றி இன்னொரு பதிவில்.

இன்றைய சமுதாயத்தில் ஒரு மடம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காஞ்சி மடாதிபதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? முடிந்தால் எழுதுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியது இல்லை

சுஜாதா

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்று ஒரு லிஸ்ட் என் பழைய ஃபைல்களை கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும்.

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என்று நினைக்கிறேன். நல்ல கதை.

கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதைகளும் நினைவு வருகின்றன.

கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றணன். அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை.

தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.

பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.

கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன.

திலீப் குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண்ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல்லக்கு
கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங்கராஜன் – செய்தி
ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங்கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண்டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
வண்ணதாசன் – நிலை:

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய மொழிகள்)
சிறுகதை வாரம்
ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2

முதல் பகுதி மிக நீளமாக போனதால் இரண்டாக பிரிக்க வேண்டியதாகிவிட்டது. முதல் பாகம் இங்கே. மற்ற கதைகளைப் பற்றி கீழே.

கு.ப. ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தவை திரை, கனகாம்பரம். கனகாம்பரம் உலகத் தரம் வாய்ந்த கதை. புதுசாய் கல்யாணம் ஆன கணவன் தன் மனைவியை தன நண்பர்களிடம் கலந்து பேசு, நாகரிக வாழ்க்கை வாழு என்று சொல்கிறான். உண்மையில் அவன் அதைத்தான் விரும்புகிறானா? திரையின் விதவை அக்கா ஒரு vicarious வாழ்க்கை வாழ விரும்புகிறாள்.

கு. அழகிரிசாமி ஒரு மாஸ்டர். சிறுகதை அவருக்கு கை வந்த கலை. அவருடைய ராஜா வந்திருக்கிறார், திரிவேணி போன்ற கதைகள் நிறைவை தருவன. ராஜா ஒரு கதையில் வீட்டுக்கு வருகிறார், ராமன் இன்னொரு கதையில் தியாகய்யர் வீட்டுக்கு வருகிறார். அன்பளிப்பு பலரும் சிலாகிப்பது. நானும்தான். உங்களை சுற்றி வரும் சிறுவர்களுக்கு பரிசு கொடுக்கிறீர்கள், ஆனால் சாரங்கனுக்கு மட்டும் எதுவும் கொடுக்கவில்லை. அவன் இதை எப்படி எதிர்கொள்வான்?
இன்னும் கதைகள் உண்டு. அடுத்த பாகத்திலாவது தேறும் சிறுகதைகளின் முழு லிஸ்டையும் எழுத வேண்டும்.

கி. ராஜநாராயணன் இன்னொரு மாஸ்டர். அவருடைய பல கதைகள் தேறும். கோமதியில் ஒரு gay சமையல்காரன். மாய மானில் அரசு கொடுக்கும் மானியத்தை நம்பி கிணற்றில் மோட்டார் போட்டு கடனாளியாகும் ஒரு விவசாயி. கொத்தைப் பருத்தியில் நிலம் இல்லாத கலெக்டருக்கு பெண் கொடுக்க மறுக்கும் விவசாயி. ஜெயில் சிறுகதையில் ஸ்கூலை கட் அடித்துவிட்டு சிறு குழந்தையுடன் விளையாடும் மாணவன், கதவு சிறுகதையில் ஜப்தி ஆன கதவில் இன்னும் ஆடும் சிறுவர்கள். இன்னும் நிறைய இருக்கிறது, ஆனால் இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும்.

சுந்தர ராமசாமியின் விகாசம் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. ராவுத்தருக்கு கணக்கு தலைகீழ் பாடம். ஜவுளிக் கடையில் கூட்டம் நிறைந்து வழியும்போது முதலாளிக்கு அவர் இல்லாமல் பில் போட முடியவில்லை. ஆனால் ராவுத்தரின் அலட்டல் தாங்க முடியாமல் முதலாளி ஒரு கால்குலேட்டர் வாங்குகிறார். ராவுத்தர் என்ன செய்யப் போகிறார்?
ரத்னாபாயின் ஆங்கிலம் பேசப்படும், நல்ல சிறுகதை. பந்தா எப்படி எல்லாம் மாட்டி விடுகிறது?
பிரசாதம் கதையை படிக்கும் யாரும் ஒரு புன்முறுவல் செய்யாமல் இருக்க முடியாது. கான்ஸ்டபிளுக்கு பணம் வேண்டும். மாட்டிக் கொள்ளும் குருக்களிடம் லஞ்சம் கேட்கிறார். முதலில் பயப்படும் குருக்கள் பிறகு கொடாக்கண்டனாக மாறிவிடுகிறார். கான்ஸ்டபிள் என்ன செய்வார்?
ஊரார் பணத்தில் வாழும் கோவில் பண்டாரம், அவன் செலவில் வாழும் கிழவன். கிழவன் தனி ஆளாக கிணறு வெட்டுகிறான். இதுதான் கோவில் காளையும் உழவு மாடும் கதை. அருமை.
எனக்கு சீதை மார்க் சீயக்காய்த்தூள் மாதிரி ஒரு சிம்பிளான கதை என் பிடித்திருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் பிடித்திருக்கிறது.
இவர் லிஸ்டும் அடுத்த பாகத்தில்தான் முழுமை அடையும் என்று நினைக்கிறேன்.

தி.ஜா.வின் கதைகளில் ஞாபகம் வருவது பாயசம், பரதேசி வந்தான், சிலிர்ப்பு. பாயசம் காட்டும் பொறாமை, பரதேசி வந்தானில் இருக்கும் அறச்சீற்றம், சிலிர்ப்பில் ஏற்படும் நிறைவு எல்லாமே அருமை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப்பிள்ளை ஒரு tour de force. குடும்ப உறவுகளின் சுயநலத்தை மிக தத்ரூபமக விவரிக்கிறது. Very powerful story. பெட்கி இன்னொரு அருமையான கதை. செக்ஸ் என்ற ஒரே ஆயுதம் மட்டுமே இருக்கும் இளம்பெண் அதை தயங்காமல் உபயோகிக்கிறாள்.

ஜெயகாந்தன் கதைகளில் எனக்கு பிடித்தது அக்னிப் பிரவேசம் மட்டுமே. யுகசந்தி, குருபீடம், நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, ரிஷிமூலம் மாதிரி கதைகள் பேசப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் எனக்கு சுமாராகத்தான் தெரிகின்றன.

அசோகமித்ரன் என்ற ஜீனியசை பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம். அவர் கதைகளை விவரிப்பது கஷ்டம். பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும் என்று ஒரு லிஸ்ட் இருக்கிறது. வழக்கம் போல தலைப்பு ஞாபகம் இல்லை. உதாரணமாக திடீரென்று ஒரு கணத்தில் கார் ஓட்டுவது கைவந்துவிடும் கதை. இந்த லிஸ்டும் அடுத்த பகுதியில்தான் முழுமை செய்ய வேண்டும்.

லா.ச.ரா.வின் கதைகளில் எனக்கு பிடித்தது பூரணி. பஞ்ச பூதக் கதைகள் என்று அவர் ஒரு முறை எழுதினர். பூரணிதான் பூமி. – இல்லை இல்லை ப்ரித்வி. பூமியைப் போல பொறுமை வாய்ந்த குடும்பத் தலைவி. இன்னொரு கதை பேர் ஞாபகம் வரவில்லை. குயவன் தன் பிள்ளை இறந்த கோபத்தில் பானை சட்டிகளை உடைக்கும் கதை.

அப்புறம் அம்பை. எல்லாரும் சொல்லும் அம்மா ஒரு கொலை செய்தால் கதை எனக்கு வெறும் cliche ஆக தெரிகிறது. எனக்கு பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. விவரிப்பது கஷ்டம். மல்லுக்கட்டு – மிக subtle ஆக பெண் அடக்கப்படுவதையும் அவள் போதும் என்று எழுந்திருப்பதையும் எழுதி இருப்பார்.

பாலகுமாரன் சில அபாரமான சிறுகதைகளை ஆரம்ப காலத்தில் எழுதி இருக்கிறார். சின்ன சின்ன வட்டங்கள் இன்றும் பேசப்படும் கதை. வேலை போய் கையில் காசில்லாமல் படும் அவதி மிக அருமையாக காட்டப்பட்டிருக்கும். நெட்டி பொம்மைகள் கதையில் எல்லாருடனும் படுக்கும் ஒரு துணை நடிகைக்கு இருக்கும் தைரியமும், நல்ல நிலையில் இருக்கும் இரு மத்திய வர்க்க “முற்போக்கு” எழுத்தாளர்களின் பயமும் நன்றாக வந்திருக்கும். எந்தக் கரை பச்சை கதையில் சாதாரணமாக வீட்டு வேலைகளை செய்யும் மச்சினனை அடுத்தவரின் indirect disapproval எப்படி தன் மன்னி மேல் எரிந்து விழ வைக்கிறது என்பதுதான் கரு.

வண்ணநிலவனின் எஸ்தர் பேசப்படும் கதை. காரணத்துடன்தான் பேசப்படுகிறது. அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

கிருஷ்ணன் நம்பி. மருமகள் வாக்கு சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

தங்கர் பச்சானின் குடி முந்திரி, வெள்ளை மாடு இரண்டும் நல்ல கதைகள். குடி முந்திரியில் நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார். வெள்ளை மாடு மாட்டுக்கும் மனிதனுக்கும் அமையும் உறவு பற்றி. பிரேம்சந்தின் ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.

ஜெயமோகனின் ஜீனியஸ் சிறுகதைகளை விட நாவல்களில்தான் நன்றாக வெளிப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் பித்தம் – ரசவாதத்தை தேடி அலையும் ஒரு பண்டாரம், அசோகமித்ரனின் ஒரு கதையை கொஞ்சம் நினைவுபடுத்துகிறது; அவதாரம் – பலம் வாய்ந்த ரௌடியை கைசண்டையில் ஜெயிக்கும் ஊனமுற்றவன்; கடைசி வரை சிறுகதை – சீரழிந்து போனாலும், விபச்சாரமே செய்தாலும் பரவாயில்லை, ஆனால் தங்கை வேற்று ஜாதிக்காரனை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைக்கும் மாணிக்கம் கவுண்டர், இதே கருவை வைத்து நானும் ஒரு கதை எழுதி இருக்கிறேன்; மாடன் மோட்சம் – ஒரு நாட்டார் தெய்வம் classical ஹிந்து மதத்தில் ஐக்கியமாவது; ஊமைச் செந்நாய் – ஒடுக்குபவனின் உதவியை நிராகரிக்கும் அடிமை; இந்த மாதிரி சில சிறந்த கதைகள் இருக்கின்றன.

தமயந்தி என்ற அவ்வளவாக தெரியாத எழுத்தாளர் எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அனல் மின் மனங்கள். கிழவியை என்ன செய்வது என்ற அதே கருதான். மகனுக்கும் வேண்டாம், மகளுக்கும் வேண்டாம். கடைசியில் மகன் அவளை பச ஸ்டாண்டில் விட்டுவிட்டு போய்விடுகிறான். குரூரம் எத்தனை சிறப்பாக வந்திருக்கிறது?

ஏ.ஏ.ஹெச்.கே. கோரி எழுதிய ஒரு சிறந்த சிறுகதை அவன் அவள் இவன். “இவன்” “அவளுக்காக” அவளை பணத்துக்காக கைவிட்ட முறைப்பையன் “அவனுக்கு” கடிதம் எழுதித் தருகிறான். அப்படியே ரூட் போடுகிறான். கடிதம் பிரமாதமா எழுதப்பட்டு “அவன்” திரும்பி வந்து “அவளை” கல்யாணம் செய்து கொள்ள ரெடி!

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு கதை எனக்கு பிடித்தமானது. Very well crafted. சாகியின் சிறுகதைகளை நினைவுபடுத்துவது. பேய்க்கதை. விவரிக்க முடியாது, அதுதான் ஒரே கஷ்டம். பேரும் நினைவில்லை.

கடைசியாக சுஜாதா – நல்ல சிறுகதையை நான் தெரிந்துகொண்டது இவர் மூலமாகத்தான். பொதுவாக ஸ்ரீரங்கத்து கதைகள் அபாரமானவை. எனக்கு பிடித்தவை பேப்பரில் பேர் (கிரிக்கெட் விளையாடும் சுஜாதா), சீனு (ஏமாற்றும் நகரத்துப் பெண்). நிஜத்தை தேடி என்ற கதையும் பிடிக்கும். தான் சொன்னது தவறு என்று ஒத்துக்கொள்ள முடியாத கணவன். அப்புறம் ஒரு லட்சம் புத்தகங்கள்.

சில சமயம் தனிப்பட்ட கதைகளை விட தொகுப்பு ஒரு அருமையான ambience-ஐ உருவாக்குகிறது. உதாரணமாக தேவனின் துப்பறியும் சாம்பு கதைகள், கல்கியின் தேரழுந்தூர் சிவக்கொழுந்து, தப்பிலி கப், மயிலைக் காளை போன்ற கதைகள், சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் ஸ்ரீரங்கம் கதைகள், பிரபஞ்சனின் பதவி என்று சிறுகதைத் தொகுதி, பெங்களூர் ரவிச்சந்திரன் எழுதிய இந்திரா காந்தியின் இரண்டாவது முகம் என்ற சிறுகதைத் தொகுதி போன்றவற்றை சொல்லலாம்.

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் – பகுதி 1

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்

எத்தனை நாள்தான் அடுத்தவர்கள் லிஸ்டை பற்றியே எழுதுவது? இந்த முறை என் லிஸ்ட். இது முழுமையானது இல்லை. எனக்கு சிறுகதைகள் தலைப்பு நினைவிருப்பதில்லை. ஞாபகம் வரும் சிறுகதைகளை பற்றி இப்போது. அடுத்த பாகம் எப்ப வரும் எப்டி வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துடும்.

அனேகமாக இதுவே – முதல் பகுதியே – பெரிய போஸ்டாக இருக்கும். பெரிய போஸ்ட்களைப் பார்த்தாலே எனக்கு மனச்சோர்வு ஏற்படும். எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். நாலைந்து பதிவுகளாக போட்டாலும் போடுவேன்.

லிஸ்ட் கீழே:
ஏ.ஏ.ஹெச்.கே. கோரி – அவன் அவள் இவன்
அம்பை – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு
அசோகமித்திரன் – பிரயாணம், புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும்
பாலகுமாரன் – சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்தக் கரை பச்சை
தமயந்தி – அனல் மின் மனங்கள்
திலீப் குமார் – கடவு, கடிதம்
ஜெயகாந்தன் – அக்னிப் பிரவேசம்
ஜெயமோகன் – பித்தம், அவதாரம், கடைசி வரை, மாடன் மோட்சம், ஊமை செந்நாய்
கி. ராஜநாராயணன் – கோமதி, மாய மான், கொத்தைப் பருத்தி, ஜெயில், கதவு
கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
கு. அழகிரிசாமி – ராஜா வந்திருந்தார், திரிவேணி, அன்பளிப்பு
கு.ப.ரா. – திரை,கனகாம்பரம்
லா.ச.ரா. – பூரணி
எம்.வி. வெங்கட்ராம் – பைத்தியக்காரப் பிள்ளை, பெட்கி
பட்டுக்கோட்டை பிரபாகர் – ?
புதுமைப்பித்தன் – மனித இயந்திரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாப விமோசனம், பொன்னகரம், புதிய கூண்டு, துன்பக் கேணி, செல்லம்மாள், கல்யாணி, ஒரு நாள் கழிந்தது, காலனும் கிழவியும், பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை
சா. கந்தசாமி – தக்கையின் மீது நான்கு கண்கள்
சுஜாதா – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி, ஒரு லட்சம் புத்தகங்கள்
சுந்தர ராமசாமி – விகாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், பிரசாதம், கோவில் காளையும் உழவு மாடும், சீதை மார்க் சீயக்காய்த்தூள்
தங்கர் பச்சான் – குடி முந்திரி, வெள்ளை மாடு
தி. ஜானகிராமன் – சிலிர்ப்பு, பரதேசி வந்தான், பாயசம்
வண்ணநிலவன் – எஸ்தர்
யுவன் சந்திரசேகர் – 23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்

பதிவின் நீளத்தைக் குறைக்க இந்த முறை புதுமைப்பித்தன் மட்டும். அடுத்த பாகத்தில் மற்றவர்களைப் பற்றி.

தமிழ் சிறுகதைகளில் பல சாதனையாளர்கள் உண்டு, ஆனால் இன்னும் புதுமைப்பித்தனை யாரும் தாண்டவில்லை. எனக்கு ஒரு பத்து பனிரண்டு கதைகள் தேறும்.

நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை.

அதற்கு மிக அருகே உள்ள கதை சுப்பையா பிள்ளையின் காதல்கள். தாம்பரத்திலிருந்து தினமும் ட்ரெயினில் போகும் சுப்பையா பிள்ளையின் கால் மேல் ஒரு இளம் பெண்ணின் கால் தற்செயலாக படுகிறது. அவ்வளவுதான் கதை.

அப்புறம் கடவுளும் கந்தசாமி பிள்ளையும். சிவ பெருமான் கந்தசாமி வீட்டுக்கு விசிட் அடிக்கிறார். புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. ஒரு நாள் கழிந்தது கதையில் வரும் சிறு பெண்ணும் அப்படித்தான்.

அப்புறம் சாப விமோசனம், பொன்னகரம். சீதையை ராமன் தீக்குளிக்க சொன்னது தெரிந்தால் அகலிகையின் கதி என்ன? பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது.

புதிய கூண்டு, துன்பக் கேணி இரண்டும் உணர்ச்சிகரமான கதைகள். கஷ்டப்படும் குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் காலேஜில் சேருகிறார்கள். அண்ணன் கிருத்துவப் பெண்ணை காதலித்து மதம் மாறி கல்யாணமும் செய்து கொள்கிறான். கொஞ்ச நாளில் அம்மா அவுட். அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை. அற்புதமாக எழுதப்பட்ட கதை. துன்பக் கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம்.

செல்லம்மாள் இன்னொரு அருமையான கதை. புருஷன் கண்ணெதிரில் செல்லம்மாள் செத்துக் கொண்டிருக்கிறாள், இதுதான் கதை. இன்னொருவர் கண்ணெதிரில் சாவதைப் பற்றி மகா மசானம் என்ற இன்னொரு கதையும் உண்டு.

கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது. ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை.

ஒரு நாள் கழிந்தது கதையில் முருகதாசர் அன்றைக்கு வேண்டிய பணம் சம்பாதித்துக் கொள்கிறார். அதற்கு ஆயிரம் வெட்டி பந்தா.

அப்புறம் காலனும் கிழவியும். கிழவியை அழைத்துப் போக வரும் யமதர்மன் கடைசியில் தன் பாசக்கயிற்றை விட்டுவிட்டுப்போகிறான். மனிதருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு.

அப்புறம் சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதையில் கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் சக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான்.

எனக்கு இன்னும் பிடிபடாத, ஆனால் பரவலாக பேசப்படும் கதை சிற்பியின் நரகம்.

என் Reference-களையும் கொடுத்துவிடுகிறேன். எஸ். ராமகிருஷ்ணன் காஞ்சனை (என் லிஸ்டில் வராது), கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், செல்லம்மாள் ஆகியவற்றை தன் 100 சிறந்த தமிழ் சிறுகதை லிஸ்டில் தேர்வு செய்திருக்கிறார். ஜெயமோகன் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், கயிற்றரவு, செல்லம்மாள், சிற்பியின் நரகம், கபாடபுரம், ஒரு நாள் கழிந்தது, அன்றிரவு, சாமியாரும் குழந்தையும் சீடையும், காலனும் கிழவியும், சாப விமோசனம், வேதாளம் சொன்ன கதை (என் லிஸ்டில் வராது), பால்வண்ணம் பிள்ளை ஆகியவற்றை தேர்ந்தெடுக்கிறார். ஜெயமோகன் லிஸ்டில் பாதி அடையாளம் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை புதுமைப்பித்தன் சிறுகதைகளை புரட்டிப் பார்க்க வேண்டும்.

சிறுகதை சிபாரிசுகள்:
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

சில எழுத்தாளர்களின் சிறுகதைகள்:
தங்கர் பச்சான், குறிப்பாக வெள்ளை மாடு, குடிமுந்திரி சிறுகதைகள்
அசோகமித்திரன், குறிப்பாக, பிரயாணம் சிறுகதை
சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை
அம்மாவுக்கு புரியாது – உரையாடல் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்ட கதை, கதைக்கு பரிசு
ஜெயமோகனின் உரை – பசியாகி நிற்கும் ஞானம். தி.ஜா.வின் பரதேசி வந்தான் கதை இங்கே விலாவாரியாக பேசப்படுகிறது.

இந்த வாரம் சிறுகதை வாரம்

(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது - டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்

ராமகிருஷ்ணனின் லிஸ்ட் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன். அப்புறம் கொஞ்சம் புத்தக அலமாரியை புரட்டி பார்த்தேன். பாஸ்டன் பாலா ஒரு லிங்க் கொடுத்திருந்தார். இன்னும் ஞாபகம் வந்தவை.

மௌனியின் பிரபஞ்ச கானம் – இந்த கதை ஏதோ கொஞ்சம் புரிகிறது. ஆனால் பிரமாதமாக ரசிக்கவில்லை.

கு.ப.ராவின் விடியுமா? – எனக்கு நேராக கதை சொல்லாவிட்டால் பல நேரங்களில் புரிவதில்லை. இந்த கதையில் அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா?

தி. ஜானகிராமனின் பாயசம் – பொறாமையை, அசூயையை இந்த கதையை விட பிரமாதமாக வெளிப்படுத்தி விடமுடியாது. அண்ணன் பையன் தலையெடுத்து சித்தப்பாவுக்கு எல்லாம் செய்தாலும் சித்தப்பாவுக்கு ஈகோவும் பொறாமையும் படுத்துகிறது. கல்யாணத்தில் பாயசத்தில் எலி என்று சொல்லி அண்டாவை கவிழ்த்து விடுகிறார்.

கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு – அன்பளிப்பு அற்புதம். தன்னை மட்டும் விட்டுவிட்டார் என்ற மனநிலையை அருமையாக எழுதி இருக்கிறார். இருவர் கண்ட ஒரே கனவு ஓகே, ஆனால் பிரமாதம் இல்லை.

கி. ராஜநாராயணனின் கோமதி, கதவு – கோமதி gay சமையல்காரன் பற்றியதுதான். நன்றாக எழுதி இருக்கிறார். கதவு வீட்டில் ஜப்தி செய்யப்பட வீட்டு குழந்தைகள் விளையாடும் கதவு பற்றி. நன்றாக வந்திருக்கிறது. கி.ரா.வுக்கு கேட்க வேண்டுமா?

சுந்தர ராமசாமியின் பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம், விகாசம் – பிரசாதம் அருமை. நான் இதை விவரிக்க விரும்பவில்லை. படித்து அனுபவியுங்கள். ரத்னாபாயும் நன்றாக இருக்கிறது. விகாசம் பற்றி எஸ்.ரா. சொல்லி இருக்கிறார், நான்தான் கவனிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த சு.ரா. கதை இதுதான். கோவில் காளையும் உழவு மாடும் என்ற ஒரு நல்ல கதையும் இப்போதும் நினைவுக்கு வருகிறது.

அசோகமித்ரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் – மனிதர் ஜீனியஸ். டெக்னிக் மிக அற்புதம். இதையும் விவரிக்க முடியாது.

ஜெயகாந்தனின் குரு பீடம், முன் நிலவும் பின் பனியும் – இரண்டும் மிக நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம்.

ஆதவன் சிவப்பா உயரமா மீசை வெச்சுக்காமல் – பாஸ்டன் பாலா லிங்க் கொடுத்து உதவினார். நன்றாக இருக்கிறது. இங்கே படிக்கலாம். பகுதி 1, பகுதி 2, பகுதி 3

வண்ணநிலவனின் எஸ்தர், மிருகம், பலாப்பழம் – எஸ்தர் மிக அருமை. மிருகம் புரியவே இல்லை. பலாப்பழம் புரிந்த மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. கொஞ்சம் subtle ஆனா எழுத்தாளர்.

ராஜேந்திர சோழனின் புற்றில் உறையும் பாம்புகள் – ஓகே. ஆனால் பிரமாதம் இல்லை.

வண்ணதாசனின் நிலை – ஓகே.

ி. நாகராஜனின் டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள் – ஓடிய கால்கள் எனக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. டெரிலின் ஷர்ட் ஓகே.

பூமணியின் ரீதி – தண்ணீருக்கு தவிக்கும் இரு சிறுவர்கள். நன்றாக இருந்தது.

சுப்ரபாரதிமணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – மட்டன் சமையலை பற்றி விலாவாரியாக எழுதிக்கொண்டே பொய் திடீரென்று ஓ. ஹென்றி ஸ்டைலில் முடிக்கிறார். நல்ல எழுத்து.

அழகிய பெரியவனின் வனம்மாள் – பரவாயில்லை. மரங்களை நேசிக்கும் ஒரு வயதான பாட்டி.

சுயம்புலிங்கத்தின் ஒரு திருணையின் பூர்வீகம் – என்னிடம் இருக்கும் கலெக்ஷனில் ஒரு திருணையின் கதை என்று ஒன்று இருக்கிறது. பரவாயில்லை.

சம்பந்தம் உள்ள பிற பதிவுகள்
100 சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணனின் லிஸ்ட்
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி.

இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான்.

எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு மறந்துவிடும். ஞாபகம் இருப்பவற்றை பற்றி மட்டும் கீழே.

புதுமைப்பித்தன்: தமிழில் எனக்கு பிடித்த சிறுகதை எழுத்தாளர் என்றால் இவர்தான். ராமகிருஷ்ணன் காஞ்சனை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், செல்லம்மாள் ஆகிய மூன்றை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
க.க. பிள்ளையும் ஏன் பிடிக்கும் என்று என்னால் சொல்ல முடிவதில்லை. கடவுள் க. பிள்ளை வீட்டுக்கு ஒரு விசிட் அடிக்கிறார்.
செல்லம்மாள் கதையில் கீழ் மத்தியதர குடும்பம் – கணவன் கண்ணெதிரில் மனைவி கொஞ்ச கொஞ்சமாக இறந்து போவாள்.
காஞ்சனை சுமார்தான். ஏதோ பேய்க்கதை.
ஒரு நாள் கழிந்தது, சுப்பையா பிள்ளையின் காதல்கள், மனித இயந்திரம், பொன்னகரம், சாப விமோசனம், கல்யாணி, துன்பக் கேணி, பிரம்ம ராக்ஷஸ், ஞானக் குகை, புதிய கூண்டு எல்லாவற்றையும் விட்டுவிட்டாரே?

மௌனி: அழியாச்சுடர், பிரபஞ்ச கானம் என்ற இரு கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். மௌனி எனக்கு புரிவதில்லை.

கு.ப.ரா: கனகாம்பரம், விடியுமா இரண்டையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கனகாம்பரம் மிக அற்புதமான கதை. கணவன் புது மனைவியிடம் தன நண்பர்கள் வந்தால் சகஜமாக கலந்து பேச சொல்வான். நிஜமாகவா?
விடியுமா நினைவுக்கு வரவில்லை.
ஆனால் திரை, வீரம்மாளின் காளை இரண்டும் நினைவுக்கு வருகிறது. மிக நல்ல கதைகள். அதை எல்லாம் விட்டுவிட்டாரே?

பி.எஸ். ராமையாவுக்கு ஒரு கதை – நட்சத்திர குழந்தைகள். பிச்சமூர்த்திக்கு ஒன்று – ஞானப் பால். தி.ஜானகிராமனுக்கு இரண்டு – பாயசம், பஞ்சத்து ஆண்டி. எதுவும் நினைவில்லை. பாயசம் கதையில்தான் பாயசத்தில் பல்லி என்று ஹீரோ அண்டாவை கவிழ்த்துவிடுவாரா?

கு. அழகிரிசாமிக்கு மூன்று – ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, இருவர் கண்ட ஒரே கனவு. ராஜா மட்டும்தான் என்ன கதை என்று நினைவுக்கு வருகிறது. நல்ல கதை.

கி. ராஜநாராயணனுக்கு மூன்று – கோமதி, கன்னிமை, கதவு.
கோமதிதான் gay சமையல்காரனை பற்றியதோ? மற்றவை நினைவுக்கு வரவில்லை.
நினைவு வருபவை – கொத்தைப் பருத்தி, மாய மான், ஜெயில்.

சுந்தர ராமசாமிக்கு இரண்டு – பிரசாதம், ரத்னாபாயின் ஆங்கிலம். அவரது பல கதைகள் பிடிக்கும், ஆனால் இவை இரண்டும் நினைவில்லை. விகாசம் என்ற கதை எனக்கு மிக பிடித்தமானது.

லா.ச.ரா.வுக்கு இரண்டு – பச்சை கனவு, பாற்கடல். பாற்கடல் என்று ஒரு புத்தகம் உண்டு, அவரது குடும்ப வரலாறு போல இருக்கும், ஆனால் அதில் சிறுகதை என்ன? தெரியவில்லை. பச்சை கனவு படித்ததில்லை. அவர் எழுதியவற்றில் எனக்கு பூரணி பிடிக்கும் (பஞ்ச பூதக் கதைகளில் பூமியை உருவகித்து எழுதப்பட்டது)

நகுலனின் ஒரு ராத்தல் இறைச்சி படித்ததில்லை.

அசோகமித்ரனுக்கு மூன்று – புலிக் கலைஞன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம்.
புலிக் கலைஞன் மிக அற்புதமான கதை. புலி வேஷக் காரன் சினிமா சான்சுக்காக ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான்.
பிரயாணம் – ப்ரில்லியன்ட்! அம்ப்ரோஸ் பியர்சின் ஒரு கதையை இது ஞாபகப்படுத்துகிறது. ஆனால் பியர்சை விட பல மடங்கு சிறப்பாக எழுதப்பட்டது.
காலமும் ஐந்து குழந்தைகளும் படித்ததில்லை.

ஜெயகாந்தனுக்கு மூன்று – குரு பீடம், அக்னி பிரவேசம், முன் நிலவும் பின் பனியும்.
அக்னி பிரவேசம் மட்டும்தான் படித்திருக்கிறேன். சில நேரங்களில் சில மனிதர்கள் இங்குதான் ஆரம்பம் ஆகிறது.

பா. ஜெயப்ரகாசம் (தாலியில் பூச்சூடியவர்கள்), பிரமிள் (காடன் கண்டது), ஆதவன் (உயரமா சிவப்பா மீசை வெச்சுக்காமல், ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்) படித்ததில்லை.

எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – மிக பிரமாதமான கதை. இதை விவரிக்க விரும்பவில்லை. பெட்கி கதையையும் சேர்த்திருக்கலாம்.

அ. முத்துலிங்கம் – மகாராஜாவின் ரயில் வண்டி. நிச்சயமாக படித்திருக்கிறேன், கதை ஞாபகம் வரவில்லை.

ந. முத்துசாமியின் நீர்மை – படித்ததில்லை.

அம்பைக்கு இரண்டு – காட்டில் ஒரு மான், அம்மா ஒரு கொலை செய்தாள்
கா.ஒ.மான் வயதுக்கு வராமலே வயதாகிவிடும் ஒரு பெண்ணை பற்றியது. நல்ல கதைதான், ஆனால் அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
அ.ஒ.கொ. செய்தாள் எல்லாரும் தேவைக்கு மேல் கொண்டாடும் ஒரு கதை. சின்னப் பெண் வயதுக்கு வந்த போது அலுத்துக் கொள்ளும் அம்மா பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை கொலை செய்தாள் என்று கதை. அம்பை இதை விட சிறப்பான கதைகளை எழுதி இருக்கிறார்.
எனக்கு பிடித்த அம்பையின் கதைகள் – வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு.

வண்ணநிலவன் (எஸ்தர், மிருகம், பலாப்பழம்), சம்பத்(சாமியார் ஜூவுக்கு போகிறார்), ராஜேந்திர சோழன்(புற்றில் உறையும் பாம்புகள்), வண்ணதாசன் (தனுமை, நிலை), ஆ.மாதவன் (நாயனம்) – இவற்றை நான் படித்ததில்லை.

சுஜாதாவுக்கு இரண்டு (நகரம், ஃபில்மோத்சவ்) – படித்திருந்தால் நினைவில்லை.
சுஜாதா கதைகளில் எனக்கு பிடித்த சில – பேப்பரில் பேர், சீனு, நிஜத்தை தேடி.

சா. கந்தசாமி, தக்கையின் மீது நான்கு கண்கள் – இதை விவரிப்பது கஷ்டம். அருமையான கதை.

ஜி. நாகராஜன் (டெரிலின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டியும் அணிந்த மனிதர், ஓடிய கால்கள்) – நாகராஜனின் எல்லா கதைகளையும் படித்திருக்கிறேன், ஆனால் இது என்ன என்று நினைவுக்கு வரவில்லை.

கிருஷ்ணன் நம்பி (தங்க ஒரு, மருமகள் வாக்கு) – மருமகள் வாக்கு சூப்பர்! நானும் அதற்கு கிளி சின்னத்தில் வாக்களிக்கிறேன். தங்க ஒரு நான் படித்ததில்லை.

பூமணி(ரீதி), நாஞ்சில் நாடன்(இந்நாட்டு மன்னர்), பிரபஞ்சன்(அப்பாவின் வேஷ்டி, மரி என்னும் ஆட்டுக்குட்டி), சோ. தர்மன்(சோக வனம்), மாலன்(இறகுகளும் பாறைகளும்) ஆகியவற்றை நான் படித்ததில்லை.

இந்திரா பார்த்தசாரதி, ஒரு கப் காப்பி. பரவாயில்லை, ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

திலிப் குமார் – மூங்கில் குருத்து, கடிதம். எனக்கு கடிதம் பிடித்த கதை. மூ. குருத்து சுமார்தான். ஆனால் அவர் எழுதிய கடவுதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

எஸ்.ராவின் தேர்வு #63-#100 வரை நான் படித்திருப்பது ஜெயமோகனின் பத்ம வ்யூஹம் கதை மட்டும்தான். எனக்கு மகாபாரதத்தின் மீது ஒரு பெரிய பித்து உண்டு, அதனால்தான் பத்ம வ்யூஹம் நினைவிருக்கிறது. ஜெயமோகனின் கதைகளில் எனக்கு நினைவில் வருபவை பித்தம், காலம், அவதாரம், ஊமை செந்நாய்.

நான் படிக்காத அந்த #63-#100 வரை உள்ள தேர்வுகள்:
63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் – கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை – உமா வரதராஜன்
67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் – சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை – சார்வாகன்
72. ஆண்மை – எஸ்பொ.
73. நீக்கல்கள் – சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் – சூடாமணி
76. சித்தி – மா. அரங்கநாதன்.
77. புயல் – கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை – கோணங்கி
79. கறுப்பு ரயில் – கோணங்கி
80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்
83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.
89. காசி – பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி
93. வேட்டை – யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா
97. ஹார்மோனியம் – செழியன்
98. தம்பி – கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

மேலே உள்ளவற்றைத் தவிர நான் பரிந்துரைக்கும் சில கதைகள் – பாலகுமாரன்(சின்ன சின்ன வட்டங்கள், நெட்டி பொம்மைகள், எந்த கரை பச்சை?), தங்கர் பச்சான்(குடி முந்திரி, வெள்ளை மாடு), தமயந்தி(அனல் மின் நிலையங்கள்)மனங்கள், யுவன் சந்திரசேகர்(23 காதல் கதைகள், தாயம்மா பாட்டியின் 43 கதைகள்)

தொடர்புடைய பதிவுகள்:
சினிமாவுக்கு ஏற்ற தமிழ் சிறுகதைகள்

எனக்கு படிப்பதில் ஒரு பித்து ரொம்ப வருஷமாக இருக்கிறது. சாண்டில்யனை பற்றி எழுதியபோது இந்த பித்து எப்படி வளர்ந்தது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சரி நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஒரு சீரிசை ஆரம்பிக்கிறேன். முதலில் எழுபதுகள் நடுவில். என்னுடைய ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை.

சின்ன வயதில் நான் கிராமங்களில் வளர்ந்தவன். நான் வளர்ந்த கிராமங்களில் அரசு அமைப்புகள் என்றால் எலிமெண்டரி ஸ்கூல், ஹைஸ்கூல், மாட்டாஸ்பத்திரி (மனித ஆஸ்பத்திரிக்கு ஒரு பத்து மைல் போக வேண்டும், அதுவும் அரசு ஆஸ்பத்திரி கிடையாது), அப்புறம் லைப்ரரி. குக்கிராமம் என்றால் எலிமெண்டரி ஸ்கூல் மட்டும்தான் இருக்கும். எனக்கு அப்போதெல்லாம் நான் கிராமத்தில் இருக்கிறேன், குக்கிராமத்தில் இல்லை என்று ஒரு சின்ன பெருமை உண்டு. :-)

அந்த கிராமத்து லைப்ரரிகளில் ஒரு ஆயிரம் ஆயிரத்தைநூறு புஸ்தகம் இருக்கும். புது புஸ்தகங்கள் எனக்கு தெரிந்து பத்து வருஷங்களில் வந்ததில்லை. பேப்பர் வரும். பத்திரிகைகள் வரும். ஒரு நூறு புஸ்தகம் சிறுவர் புஸ்தகம் ஆக இருக்கும்.

எனக்கு ஏழு வயது இருக்கும்போது என் அம்மா என்னை அந்த லைப்ரரியில் ஒரு மெம்பராக சேர்த்துவிட்டாள். நான் ஒன்றிரண்டு வருஷங்களில் அந்த சிறுவர் புஸ்தகங்களை முடித்துவிட்டேன். எனக்கு இன்னும் நினைவிருப்பவை வாண்டு மாமாவின் காட்டுச்சிறுவன் கந்தன், பூவண்ணனின் காவேரியின் அன்பு, அப்புறம் ஆலம் விழுது – ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்துவார்கள். இது கன்னடத்தில் நம்ம மக்களு என்று சினிமாவாகக் கூட வந்தது. (அதில் ஒரு அற்புதமான காட்சி – ஸ்கூலில் ராமாயணம் டிராமா. ராவணன் சீதையின் சுயம்வரத்துக்கு வருவான். தோளைத் தட்டி என்னை போல பலசாலி உண்டா என்று நாலு வரி பாடிவிட்டு பிறகு தெரியாத்தனமாக வில்லை எடுத்து உடைத்துவிடுவான். என்ன செய்வது என்று தெரியாமல் டீச்சர் திரை போட்டுவிட்டு பிறகு அது சும்மா முதல் ரவுண்ட், லுலுலாயி வில்தான், இதோ உண்மையான வில் என்று சமாளிப்பார்)

சரி எங்கெல்லாமோ போய்விட்டேன். நூறு புஸ்தகம் என்றால் படித்துவிடலாம். அவற்றை முடித்த பிறகு என்ன படிப்பது என்று தெரியவில்லை. முதல் வழிகாட்டி அம்மாதான். எட்டு வயதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் அம்மா கை காட்டிய சாண்டில்யன் புஸ்தகங்கள் எல்லாம் படித்தேன். சரித்திரப் பாடப் புத்தகத்தில் தெரிந்து கொண்டதைவிட சாண்டில்யன் மூலமாக தெரிந்து கொண்டது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த வயதில் சாண்டில்யன் இளவரசிக்கு மேடு, காடு என்று எழுதினால் அதெல்லாம் புரியவில்லை. சாகசங்கள் – கடல் புறா, மலை வாசல், ராஜ முத்திரை, யவன ராணி – மட்டுமே மனதில் நின்றது.

ஆனால் ஒரு பத்து புத்தகம் படித்த பிறகு சாண்டில்யன் ஃபார்முலா பிடிபட்டுவிட்டது. ஒரு கற்பனையான அல்லது நிஜமான, சரித்திரத்தில் பெரிய இடம் பெறாத பாத்திரம்தான் ஹீரோ. யாராவது ஒரு mentor இருப்பார். ஹீரோயின் எப்போதும் 40-20-40 சைசில் இருப்பார். (இந்த சைசின் மகத்துவம் ஒரு பனிரண்டு வயது வாக்கில் புரிய ஆரம்பித்தது). நிறைய இயற்கை வர்ணனை இருக்கும். சுலபமாக அலுப்பு தட்டிவிட்டது.

அடுத்தபடி என் அம்மா படிக்க சொன்னது ஜெயகாந்தன். அந்த வயதில் எனக்கு போர் அடித்தது. அவர் கதைகளில் வருபவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். பாதி நேரம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள், சில பல சிறுகதைகள் எதுவும் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் ரொம்ப பிடித்திருப்பது போல (அம்மா எனக்கு ரசனை இல்லை என்று நினைத்துவிட்டால்?) பாவ்லா செய்து கொண்டிருந்தேன். முதல் முதலாக பிடித்தது அவர் ஜய ஜய சங்கர என்று எழுதிய ஒரு சீரிஸ்தான். இன்றும் நான் சி.நே.சி. மனிதர்கள், ஜ.ஜ. சங்கர தாண்டிப் போகவில்லை. என்றாவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படிக்க வேண்டும்.

அப்புறம் காண்டேகர். காண்டேகர் என்று சொல்லக் கூடாது, யயாதி என்றுதான் சொல்ல வேண்டும்.இப்போது யோசித்து பார்த்தால் யயாதி அந்த வயதுக்கு கொஞ்சம் அதிகப்படியோ என்று தோன்றுகிறது. மிகவும் பிடித்திருந்தது. கச்ச தேவயானியின் கதை, யயாதியின் தேடல், யதியின் தேடல், சர்மிஷ்டையின் தேடல் – எல்லாம் மிக அற்புதமாக வந்திருந்தன. அந்த வயதில் பாயிண்ட் ஆஃப் வ்யூ யயாதியிலிருந்து தேவயானியிலிருந்து சர்மிஷடக்கு மாறுவது மிக அற்புதமாக டெக்னிக் என்று தோன்றியது. காண்டேகரின் பிற புத்தகங்கள் எதுவும் அவ்வளவாக பிடிக்கவில்லை.

என் அம்மாவின் சிபாரிசுகளில் அற்புதமான புத்தகம் என்று நான் அப்போது நினைத்தது, இப்போதும் நினைப்பது சா. கந்தசாமியின் சாயாவனம்தான்.

அடுத்தபடி குமுதம், விகடனில் வரும் தொடர்கதைகளை ஒரு பத்து வயதில் படிக்க ஆரம்பித்தேன். ரா.கி. ரங்கராஜன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை ஆகியோர் பரவாயில்லை என்று தோன்றியது. மணியன் உலக மகா போர். பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஓரளவு பிடித்திருந்தது. தேடித் பிடித்து அப்போது படித்த புத்தகங்கள், ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை, பாக்யம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி, சாவியின் வாஷிங்டனில் திருமணம். அம்மாவும் நானும் இவற்றை பற்றி பேசுவோம்.

என்னுடைய sources இவைதான் – கிராம நூலகங்கள், பாப்புலர் பத்திரிகைகளான குமுதம், விகடன், கோகுலம், உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் பத்திரிகைகலிருந்து கிழித்து பைண்ட் செய்யப்பட தொடர்கதைகள், இந்த கால கட்டத்தின் இறுதியில் வரத் தொடங்கின மாத நாவல்கள் (ராணி முத்து ரொம்ப நாளாக வந்துகொண்டிருந்தது. இப்போதுதான் மாலைமதி ஆரம்பித்தது.) எனக்கு மட்டுமல்ல, என் அம்மாவுக்கும் இவைதான் sources. எனக்கு தெரிந்த எல்லாருக்குமே இவைதான் sources. புத்தகங்களை வாங்கலாம் என்று எனக்கு தோன்றியது கூட இல்லை.

இன்றைக்கு நாஸ்டால்ஜியா, மற்றும் நல்ல புத்தகங்கள் என்று நான் இந்த காலத்தில் படித்த புத்தகங்களுள் சிபாரிசு செய்வது:

நல்ல புத்தகங்கள்:
1. சா. கந்தசாமியின் சாயாவனம்
2. வி. எஸ். காண்டேகரின் யயாதி
3. ஜெயகாந்தனின் ஜய ஜய சங்கர (4 மாத நாவல்கள், ஒரு சீரிஸ்)
4. ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் (இந்த வயதில் பிடிக்கவில்லை, ஓரளவு பெரியவன் ஆன பிறகு பிடித்திருந்தது)

இரண்டாம் பட்டியல்:
1. ரா.கி. ரங்கராஜனின் ஒளிவதற்கு இடமில்லை
2. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி புத்தகங்கள் அப்புசாமியும் ஆயிரத்தொரு இரவுகளும்
3. பாக்கியம் ராமசாமியின் மாணவர் தலைவர் அப்புசாமி
4. பாக்கியம் ராமசாமியின் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
5. சாண்டில்யனின் யவன ராணி
6. சாண்டில்யனின் கடல் புறா
7. சாண்டில்யனின் ராஜ முத்திரை
8. சாண்டில்யனின் மலை வாசல்
9. சாண்டில்யனின் கன்னி மாடம்
10. சாவியின் வாஷிங்டனில் திருமணம்

நாஸ்டால்ஜியா:
1. வாண்டு மாமாவின் காட்டு சிறுவன் கந்தன்
2. பூவண்ணனின் காவேரியின் அன்பு
3. பூவண்ணனின் ஆலம் விழுது

ஐந்தாறு வருஷ படிப்புக்கு பதினேழு புஸ்தகம்தான் தேறுகிறது. வேண்டுமானால் இன்னும் சில சாண்டில்யன் கதைகள், எஸ்.ஏ.பி. அண்ணாமலை (கதை பெயர் எதுவும் ஞாபகம் வரவில்லை) சேர்த்துக் கொள்ளலாம்.

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு சிரிப்பை வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப் புனல் (கீழ் வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப் பட்டது) புத்தகத்தை விட அவ்வளவாக வெளியே தெரியாத செந்நெல் – சோலை சுந்தரப் பெருமாள் எழுதியது – நன்றாக இருக்கும்.

இன்று தற்செயலாக திண்ணை தளத்தில் இ.பா.வின் ஏசுவின் தோழர்கள் புத்தகத்துக்கு ஒரு விமர்சனம் பார்த்தேன். நியாயமான விமர்சனம்தான். போலந்தில் செட்டில் ஆகிவிடும் ஒரு தமிழனின் மகள் தன் வேர்களை தேடி கும்பகோணம் வரும் கதை. மேல் விவரங்களை அங்கேயே பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.

பின் குறிப்பு: சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்

அடுத்த பக்கம் »