காந்தி

காந்தி

எனக்கு காந்தி என்ற தலைவர் மீது மிகுந்த பிரமிப்பு உண்டு. அவரால் எப்படி ஒரு பெரும் ஜனக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது? அவர் அந்த கூட்டத்துக்கு அவர் அப்படி என்ன கொடுத்துவிட்டார்? அவரால் கொடுக்க முடிந்தது எல்லாம் சிறைவாசம்; அவர்களது சவுகரியமான சமூக வாழ்வில் மாற்றம்; ஜாதி வித்தியாசம் பார்க்காதே, மலம் அள்ளு, கிராமத்துக்கு போய் சேவை செய், படிப்பை, நல்ல பணம் தரும் தொழிலை விடு என்ற கஷ்டமான உபதேசங்கள்; சாதாரண மனித இயல்பிலிருந்து மாறி நடக்க வேண்டிய கட்டாயம், அடித்தால் வாங்கிக் கொள் என்ற கோட்பாடு; இதை எல்லாம் செய்தால் உங்களுக்கு என்றாவது சுதந்திரம் கிடைக்கலாம் என்ற ஒரு மங்கலான கனவு. இதை வைத்து அவர் எப்படி பெரும் கூட்டத்திடம் உற்சாகத்தையும் சலிப்பில்லாமல் உழைப்பதையும் ஏற்படுத்தினார்? ((இந்த பிரமிப்பை பற்றி ராஜேந்திர பிரசாத் எழுதிய At the Feet of Mahatma Gandhi பதிவிலும் எழுதி இருக்கிறேன்.)

எனக்கு காந்தி என்ற சிந்தனையாளர் மீது மரியாதை உண்டு, ஆனால் அந்த சிந்தனையாளரைப் பற்றி அவ்வளவு தெரியாது . அஹிம்சை என்ற ஒரு கோட்பாடு ஒன்றே போதும் மரியாதை வர. அவர் கிராமங்கள் பற்றி சொன்னவை இன்று கொண்டாடப்படும் ஷூமாகர், ரேச்சல் கார்சன், ஃபுகுவோகா போன்றவர்களின் எண்ணங்களை ஓரளவு ஒத்திருக்கின்றன. அவரது பொருளாதார சிந்தனைகளை புரிந்து கொண்டவர் ஜே.சி. குமரப்பா ஒருவர்தான் என்று நினைக்கிறேன். குமரப்பா சுதந்திர இந்தியாவில் பொருட்படுத்தப்படவே இல்லை. அது சரி காந்தி சொன்னதையே ஒதுக்கிய பின், குமரப்பா எந்த மூலை?

காந்தியின் சிந்தனைகள் பற்றி தெரிந்துகொள்வதில் ஒரு பெரும் பிரச்சினை உண்டு. சாதாரணமாக கிடைக்கும் புத்தகங்கள், கட்டுரைகள் காந்தி என்ற தலைவரை மட்டுமே பேசுகின்றன. நீங்கள் காந்தியை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் சம்பரான், ரௌலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா, ஆக்கப் பணிகள், உப்பு சத்யாக்ரகம், வட்ட மேஜை மாநாடு, காங்கிரஸ் அரசுகள், வெள்ளையனே வெளியேறு, நவகாளி, பாகிஸ்தான், இறப்பு என்று ஒரு chronological படிமம் சுலபமாக கிடைத்துவிடுகிறது. அவரது சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால் அஹிம்சை, ஹரிஜன் இதை தாண்டி போவது கஷ்டம். அவரது unprocessed கட்டுரைகள் கிடைக்கலாம். அவருடன் ஓரளவு வேறுபட்ட அம்பேத்கார், பெரியார், கோல்வால்கர் சொன்னது மூலம் சில தகவல்கள் indirect ஆக கிடைக்கலாம். அவரது எண்ணங்களை, சிந்தனைகளை படிக்கிற மாதிரி process செய்து வெளியிட்ட புத்தகங்கள் அபூர்வம் என்றே நான் நினைக்கிறேன். ஒரு விதத்தில் இது ஒரு நூறு வருஷத்துக்கு உட்பட்ட ஓரளவு சிந்தித்த தலைவர்கள் எல்லாருக்குமே – காந்தி, அம்பேத்கார், பெரியார், ராஜாஜி, நேரு எல்லாருக்குமே பொருந்தும்.

அந்த விதத்தில் ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய சில கட்டுரைகள் மிக உதவியாக இருக்கின்றன. குறிப்பாக காந்தியும் ஜாதியும், காந்தியும் தொழில் நுட்பமும், காந்தியும் ஹிந்தியும் என்ற இந்த பதிவுகள்.

காந்தியும் ஜாதியும் பதிவில் ஜாதியை பற்றிய காந்தியின் எண்ணங்கள் எப்படி மாறி இருக்கின்றன என்பதை ஜெயமோகன் எடுத்துக் காட்டுகிறார். காந்தி “வருணப் பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும் பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.” என்று நம்பி இருக்கிறார் என்று ஜெயமோகன் கூறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஜாதியின் negative கூறுகள் அதன் positive கூறுகளை விட முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார். இன்று ஜாதி இல்லை என்று நம்மில் பலரும் வாயளவிலாவது சொல்கிறோம் – அதற்கு முக்கிய காரணம் காந்திதான் என்று தோன்றுகிறது. மிக அருமையான கட்டுரை.

காந்தியும் ஹிந்தியும் பதிவில் ஜெயமோகன் சொல்வது இதுதான் – “காந்தி இந்தியை வலியுறுத்துவதன் மூலம் பன்மைத்தன்மைக்கு எதிராக ஒற்றை மையத்தை வலியுறுத்தவில்லை. அவர் உருவகித்த பன்மைத்தன்மை மிக்க கிராம சுயராஜ்யத்தின் தேசிய அளவிலான பொதுஇணைப்புமொழியாக ஒரு நடைமுறை யதார்த்தமாக இந்தியை முன்வைத்தார்.” இது எனக்கு சரியாகவே தோன்றுகிறது. அவர் இன்று இருந்திருந்தால் ஆங்கிலத்துக்கு இன்னும் முக்கியத்துவம் வேண்டும் என்று சொல்லி இருப்பார்.

இணையம் என்ற technology தெரியாதவர்கள் யாரும் என் இந்த பதிவை படிக்கப் போவதில்லை. ஆனால் காந்தி தொழில் நுட்பத்துக்கு எதிரானவர் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஏன் எனக்கும் அப்படித்தான் எண்ணம். அவர் பெரும் தொழில்களை விரும்பவில்லை, ஆலைகள் வேண்டாம், கை ராட்டினம் வேண்டும் என்று சொன்னவர்தான். ஜெயமோகனின் எண்ணத்தில் காந்தி appropriate technology வேண்டும் என்ற முன்னோடி. எனக்கு இந்த பதிவு காந்தியிடம் இன்றைய மதிப்பீடுகளை கொண்டு போய் பொருத்திக் கொள்கிறதோ என்று தோன்றுகிறது. காந்தி நவீன மருத்துவம் போன்றவற்றையும் நிராகரித்தவர். கஸ்தூரிபாவுக்கு இங்லிஷ் மருந்து கொடுத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். நவீன மருத்துவம் மட்டுமே சரியான வழி என்று நான் சொல்ல வரவில்லை. நவீன மருத்துவம் ஒரு விஞ்ஞான முறை, அதை சோதனை செய்து பார்க்காமலேயே காந்தி நிராகரித்தார். மீண்டும் அந்த பதிவை ஆற அமர ஒரு முறை படித்து பார்க்க வேண்டும்.

சத்தியாகிரகத்தின் விதிகள் எவை என்று இந்த பதிவில் விளக்குகிறார். மனிதருடைய புரிதலும் சரி, அதை விளக்கும் திறமையும் சரி, அபாரமானவை.

காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம் இந்த பதிவில் விளக்கப்படுகிறது.

காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது இங்கே.

இனி குறிப்பிடும் பதிவுகள் காந்தியின் சிந்தனையை விளக்குபவை இல்லை. இருந்தாலும் முக்கியமானவை, சுவாரசியமானவை என்பதால் குறிப்பிடுகிறேன்.

காந்தியின் தவறுகள் என்று சொல்லப்படுவதை பற்றி இங்கே மிக சிறப்பான ஒரு பதிவு இருக்கிறது. நான் கூட சமீபத்தில் கிலாஃபத் இயக்கம் தவறு என்று நீங்கள் கருதவில்லையா என்று கேட்டு ஒரு அவருக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். அவர் ஏற்கனவே எழுதி இருப்பதை நான்தான் பார்க்கவில்லை. பல நூறு கட்டுரைகள் எழுதி இருக்கிறார், எங்கே எது இருக்கிறது என்று தெரிய மாட்டேன் என்கிறது!

கிலாஃபத் இயக்கத்தை பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. துருக்கியில் என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் போராடியது, அதற்கு காந்தியும் ஆதரவு தந்து கூட போராடியது, வெறும் அபத்தமாக இருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் இதை பற்றி ஜெயமோகனுக்கு ஒரு அருமையான, ஆதாரங்கள் நிறைந்த ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அ. நீலகண்டன் மௌலானா முகம்மது அலியின் பிரசித்தி பெற்ற காந்தி பற்றிய கருத்தை சுட்டிக் காட்டுகிறார் – அலி சொன்னது – “ஆம் என் மார்க்கத்தின் படி ஒரு விபச்சாரம் செய்கிற ஒழுக்கமில்லாத முஸ்லீம் திருவாளர்.காந்தியைக்காட்டிலும் உயர்ந்தவர்தான்”. இதை காந்தி பெரிதுபடுத்தவில்லை. ஆனால் மௌலானா அளித்த விளக்கம் அவ்வளவாக பிரசித்தி பெறவில்லை. ஏறக்குறைய அவர் சொன்னது – “ஐந்தடி உயர உத்தமர் ஆறடி உயர திருடனை விட குள்ளமானவரே.”

காந்தியின் தாக்கம் லாரி பேக்கரை எப்படி பாதித்தது என்று இங்கேயும் கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் பற்றி இங்கேயும் எழுதி இருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள் (எல்லாம் ஜெயமோகன் எழுதியவை)
காந்தியின் சிந்தனைகளை விளக்கும் பதிவுகள்:

  • காந்தியும் ஜாதியும்
  • காந்தியும் தொழில் நுட்பமும்
  • காந்தியும் ஹிந்தியும்
  • சத்தியாகிரகத்தின் விதிகள்
  • காந்திக்கும் அம்பேத்காருக்கும் இருந்த பரஸ்பர சிந்தனைத் தாக்கம்
  • காந்தியை பற்றி சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் விவாதித்தது
  • காந்தியின் எளிமையும், அதற்கு ஆன செலவும்
  • மற்றவை:

  • காந்தியின் தவறுகள்
  • கிலாஃபத் இயக்கம் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கடிதம்
  • லாரி பேக்கர்
  • கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன்
  • என் பதிவு:
    ராஜேந்திர பிரசாதின் At the Feet of Mahatma Gandhi

    ஜெயமோகன் படிக்க வேண்டிய வரலாற்று புத்தகங்கள் என்று சிபாரிசு செய்திருந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

    காந்தியின் leadership குணம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துவது. ஐம்பது வயது வரைக்கும் இந்தியாவில் அவ்வளவாக visibility இல்லாத மனிதர். திடீரென்று வருகிறார். இரண்டு மூன்று வருஷங்களில் காங்கிரஸ் அவர் பாக்கெட்டுக்குள். பழம் தின்று கொட்டை போட்ட மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், லாலா லஜ்பத் ராய் எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார். திலகர் கூட காந்தியின் வழி வேலை செய்கிறதே என்று சொன்னாராம். காந்தி சொன்னார் என்று பெரும் பணக்கார, வாழ்க்கையில் வெற்றி பெற்ற படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்ற வக்கீல்கள் எல்லாம் சொத்து சுகத்தை விட்டுவிட்டு ஜெயிலுக்கு – ஜெயிலுக்கு! – போக க்யூவில் நிற்கிறார்கள். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போவது என்றால் இந்த படித்த, பணக்கார வர்க்கம் எப்படி பயப்பட்டிருக்கும்! வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்கள் பட்ட பாட்டை பார்த்த பிறகு எவனுக்கு தைரியம் வரும்? காந்தி வர வைத்திருக்கிறார். நாடே அவர் சொன்ன பேச்சை கேட்டிருக்கிறது. அவர் சொன்னால் ஒத்துழையாமை இயக்கம். சௌரி சௌராவில் வன்முறை, நிறுத்தி விடுங்கள் என்றால் நின்றுவிடுகிறது. இது என்ன மந்திரமா மாயமா?

    இது காந்தி உத்தமர், தியாக் சீலர் என்பதானால் வந்த தாக்கம் இல்லை. என் கண்ணில் கோகலே காந்தியை விட தியாக சீலர். கோகலேயின் தாக்கம் காந்தியின் தாக்கத்தில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. ஒரு இயக்கத்தின் தலைவன் தனி மனித சாதனையாக என்ன செய்துவிட முடியும்? அந்த செயல்களுக்கு ஒரு symbolic value இருக்க வேண்டும். காந்தி அந்த gesture-களை கவனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். உப்பெடுப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு இயக்கமாக இருக்கட்டும், உண்ணாவிரதமாக இருக்கட்டும், அது சாதாரண மனிதனுக்கு புரிகிறது, அவனுக்கும் செய்ய வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் ஏற்படுகிறது.

    பிரசாத் பாபுவின் புத்தகத்தில் நல்ல insight கிடைக்கிறது. சம்பரானில் அவுரி பயிர் செய்யும் பெரும் ஜமீன்தார்களுக்கும் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் விவசாயிகளுக்கும் தகராறு. பஞ்சம். காந்தி ஆஃப்ரிக்காவில் உழைத்திருக்கிறார் என்பதால் அவரை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எதோ ஒரு காங்கிரஸ் வருஷாந்திர கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள். எனக்கு தெரியாது, விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு சம்பரானுக்கு வந்திருக்கிறார். கூட லோகல் பெரிய மனிதர்கள், பிரசாத் பாபு உட்பட. காந்தி உள்ளே வரக்கூடாது என்று தடை உத்தரவு. காந்தி இதை நான் ஏற்கப் போவதில்லை, நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லை, நீங்கள் எல்லாம் போய்விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். பிஹாரி பாபுக்கள் எல்லாம் கூடி பேசுகிறார்கள் – எங்கிருந்தோ வந்த ஒருவர் பிஹாரி மக்களுக்காக ஜெயிலுக்கு போக தயாராக இருக்கிறார், நாம் திரும்பி போவது வெட்கக்கேடு என்று. காந்தி கூட சேர்ந்து நிற்கிறார்கள். அன்றிலிருந்து பிரசாத் பாபு காந்தியின் அடிமை. பிரசாத் வெளிப்படையாகவே சொல்கிறார் – சில சமயம் காந்தி சொல்வது எனக்கு புரிவதில்லை, பிடிப்பதில்லை, ஆனால் நான் அவர் பேச்சை தட்டுவதும் இல்லை என்று.

    காந்தியின் ரகசியம் இதுதானோ? கஷ்டமான காரியத்தை – அது மலம் அள்ளுவதாக இருக்கட்டும், ஜெயிலுக்கு போவதாக இருக்கட்டும், உண்ணாவிரதம் இருப்பதாக இருக்கட்டும், சட்ட மறுப்பு போராட்டமாக இருக்கட்டும் – தான் முன்னால் நின்று செய்து மற்றவர்களுக்கு moral pressure உருவாக்கி இருக்கிறார். அவர் பின்னால் ஒருவர் வந்தாலும் போதும், அது மேலும் peer pressure-ஐ உருவாக்குகிறது. ஒன்று இரண்டாகி பத்தாகி நூறாகி கோடியாகிறது.

    மானேஜ்மென்ட் குரு எல்லாரும் படிக்க வேண்டியது காந்தியின் வழிகளைத்தான்.

    ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கிறது.

    தொடர்புடைய பதிவுகள்:
    படிக்க வேண்டிய இந்திய வரலாற்று புத்தகங்கள் – ஜெயமோகன்

    வை.மு. கோதைநாயகி

    வை.மு. கோதைநாயகி

    நாட்டுடமை ஆன எழுத்துக்கள் பற்றிய ஒரிஜினல் பதிவை இங்கே காணலாம்.

    வை.மு.கோ.வைப் பற்றி குமுதத்தில் மறக்க முடியாத மங்கைகள் என்ற சீரிஸில் வந்த கட்டுரையை இங்கே காணலாம். அந்த கட்டுரை இதற்கும் ஆதாரமாக பயன்பட்டிருக்கிறது.

    ஒரு மடிசார் புடைவை மாமி, பள்ளிக்கூடம் சென்று படிக்காதவர், தன்னுடை ஐந்தாம் வயதில் ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டவர். தேசீயவாதி, காந்தி அடிகளின் பக்தை, 1932ம் ஆண்டிலேயே சுதந்திர இயக்கத்தில் ஆறு மாதம் சிறை சென்றவர். தன்னந்தனியாகவே ஒரு தமிழ்ப் பத்திரிகையை முப்பத்தைந்து ஆண்டுகள் நடத்திக் காட்டியவர், பெண்ணியவாதிகளின் முன்னோடி, மேடைப் பேச்சாளர், பாடகி, கவிஞர், 115க்கும் மேலாக நாவல்கள் எழுதியவர். சமூக ஊழியர். இவ்வளவு குணாதிசயங்களையும் கொண்டவர்தான் வை.மு. கோதை நாயகி.

    வை.மு.கோ 1901ம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி, நீர்வளூர் வெங்கடாச்சாரி, பட்டம்மாள் தம்பதியருக்கு செல்வ மகளாகப் பிறந்தவர். ஆசாரமானதோர் வைஷ்ணவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் இள வயதில் கோதை என்றும் ஆண்டாள் என்றும் அழைக்கப் பட்டவர். தன்னுடைய ஐந்தாவது வயதில், திருவல்லிக்கேணி வைத்தமா நிதி முடும்பை குடும்பத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற ஒன்பது வயது சிறுவனை மணம் செய்து கொண்டார்.

    பெண் என்பதால் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டாம் என்ற ஒரு தடை இருந்த காலம் அது. அந்தக் காரணத்தினாலேயே கோதைநாயகி பள்ளி சென்று படிக்கவில்லை. எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் சிறு வயதிலேயே தன்னுடன் பழகிய மற்ற குழந்தைகளுக்குப் பழைய கதைகளைச் சொல்லி வந்தார். பழைய கதைகள் எல்லாம் சொல்லித் தீர்ந்தவுடன், தானே புதுக் கதைகளைக் கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தார். இவர் கதை சொல்லும் அழகைக் கண்டு, பெரியவர்களும் இவரது கதைகள் கேட்கத் தொடங்கி விட்டனர். புகுந்த வீட்டில் இருந்த ஒரு பக்திச் சூழ்நிலை – எப்போதும் திருவாய்மொழி, பாசுரங்கள் முதலியன ஒலித்துக் கொண்டே இருக்கும் – அவருக்குத் தமிழ் நடையை இயல்பாகவும் சரளமாகவும் வரச் செய்தது.

    தனக்கு எழுதத் தெரியாதென்பதால், இவர் தன் தோழி பட்டம்மாளை, தான் சொல்பவற்றை எழுதித் தரச் சொல்லுவார் – இவ்வாறு இவர் சொல்லி, பட்டம்மாள் எழுதி உருவானது தான் இந்திர மோகனா என்ற நாவல். தொடர்ந்து பட்டம்மாளிடமே அவர் தமிழை எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார்.

    அந்தக் காலத்தில் பெண்கள் கதை எழுதுவது, பத்திரிகை நடத்துவதென்பது, அங்குள்ள பலருக்குப் பிடிக்கவில்லை. அடுப்பு ஊத வேண்டிய பெண்ணிற்கு, இந்த வேலைகள் எதற்கு என்று சில பெண்களும் கூட விமர்சித்தனர். இந்த எண்ணங்களையும், விமர்சனங்களையும் மீறி வை.மு.கோ. தன் பணியைத் தீவிரமாகத் தொடங்கினார்.

    அப்போது சென்னையில் வெளியாகி வந்த ஜகன்மோகினி என்ற பத்திரிகை நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தலாம் என்றெண்ணிய வை.மு.கோ.விற்கு கணவர் பார்த்தசாரதி உறுதுணையாக நின்றதோடு, 1925ல் அதை வாங்கித் திறம்பட நடத்தவும், விற்பனை அதிகரிக்கவும் உதவினார். இதன் பிறகு ஜகன்மோகினி தமிழ் நாட்டின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றாக முன்னேறியது.

    இந்தக் காலத்தைத் தமிழ் நாவல்களின் தொடக்க காலம் என்றும்கூறலாம்.. சக எழுத்தாளர்களில், ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் முதலானோரைக் குறிப்பிடலாம். கல்கி என்னும் தாரகை இன்னம் இலக்கிய வானில் ஒளி விடவில்லை. ஜகன்மோகினியில் வெளியான வை.மு.கோ.வின் முதல் நாவல் வைதேகி – துப்பறியும் நாவல்கள் எழுதிய முதல் தமிழ்ப் பெண்மணியும் இவர்தான். நூற்றுப் பதினைந்திற்கும் மேலான நாவல்கள் எழுதி வாசகர்கள் மனத்தில் அழியா இடம் பெற்றவர்.

    சிறந்த மேடைப் பேச்சாளர் – பேசும்போது இடையிடையே குட்டிக் கதைகள் சொல்லிக் கூட்டத்தைக் கவரும் திறமை இவருக்கிருந்தது. கர்னாடக இசையிலும் இவர் ஆற்றல் பெற்றவர். தான் பாடியதுமல்லாமல், பல இளம் இசைக் கலைஞர்களை – முக்கியமாக டி.கே.பட்டம்மாள் – ஊக்குவித்தார். ராஜாஜியின் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு, தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் இவரையும் பேசச் சொல்லி அன்பாக உத்தரவிட்டார் ராஜாஜி.

    வை.மு.கோ. மேடைகளில் பாடுவதன்றி பல பாட்டுகளையும் புனைந்துள்ளார். இவர் சில அபூர்வ ராகங்களில் இயற்றிய கிருதிகள் எல்லாம் சமீபத்தில் இசை மார்க்கம் என்ற புத்தகமாக வெளி வந்துள்ளன. முப்பதுகளில் வை.மு.கோ வீட்டில் வசித்த பி.ராமபத்ரன் என்பவர் இப்புத்தகத்தைப் பதிப்பித்துள்ளார். அம்பா மனோஹரி,கங்கணாலங்காரி, அம்சப்ரமாரி, தவளி ஹம்சி போன்ற அபூர்வ ராகங்களிலுள்ள இந்த கிருதிகள் ரஞ்சனி-காயத்ரி, கு.பாலமுரளிகிருஷ்ணா முதலியோரால் இப்போது மேடைகளில் பாடப்பட்டு வருகின்றன.

    சுப்பிரமணிய பாரதியார், வை.மு.கோ.விற்காகவே தம் ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே என்ற பாட்டைப் புனைந்ததாகவும், பின்னர் டி.கே. பட்டம்மாள் இந்தப் பாட்டினால் பிரபலமானார் என்பது இன்னோர் செய்தி. (சாருகேசி – ஹிந்து பத்திரிகையில் 13-2-2009)

    இவரொரு சிறந்த சமூக சேவகி – திருவல்லிக்கேணியில், காந்தியடிகளின் நினைவாக, மஹாத்மாஜி சேவா சங்கம் 1948ம் வருடம் மார்ச் ஏழாம் தேதி நிறுவப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு உதவும் பல நுண்கலைகள் கற்றுத் தரப்பட்டன. முதலில் ஒரு வாடகை இடத்தில் இருந்த இச்சங்கத்திற்கு, கக்சேரிகள் நாடகங்கள் மூலம் நன்கொடை வசூலித்து, ஒரு சொந்த இடமும் பெற்றுக் கொடுத்தார்.

    ராஜ்மோகன், அனாதைப் பெண் , தயாநிதி (சித்தி என்ற பெயரில்) ஆகிய இவரது நாவல்கள் வெள்ளித் திரையில் வெளிவந்தன. பத்மினி நடித்த சித்தி என்ற படம் ஆறு விருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த கதையாசிரியர் விருது வை.மு.கோ.வுக்கு வழங்கப்பட்டது.

    வை.மு. கோதைநாயகி 1960ம், வருஷம் ஃபிப்ரவரி 20 தேதி சென்னையில் காலமானார்.

    வை.மு. கோதைநாயகி படைப்புகள்

    வைதேகி (1925 – 4) — பத்மசுந்தரன் (1926 – 3) — சண்பகவிஜயம் (1927 – 2) — ராதாமணி (1927 – 4) — கௌரிமுகுந்தன் (1928 – 2) — நவநீதகிருஷ்ணன் (1928 – 2) — கோபாலரத்னம் (1929) — சியாமளநாதன் (1930 -2) சுகந்த புஷ்பம் (1930) – ருக்மணிகாந்தன் (1930) — வீர வசந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம் (1930) — நளினசேகரன் அல்லது செருக்காலழிந்த சீமாட்டி (1930) — உத்தமசீலன் (1932 – 3 ) கதம்பமாலை (1932 – 2) — பரிமள கேசவன் (1932 – 2) — மூன்று வைரங்கள் (1932 -2 ) — காதலின் கனி (1933 – 2) — சோதனையின் கொடுமை (1933 – 2) — படாடோபத்தின் பரிபவம் (1933 -2 ) — சாருலோசனா (1933 – 3) — தியாகக்கொடி (1934 – 2) — புத்தியே புதையல் (1934 – 2) — ஜயசஞ்சீவி (1934 – 4) — அமிர்த தாரா (1935 – 4) — ஆனந்தசாகர் (1935 -3) — பட்டமோ பட்டம்(1935 – 2) — பிச்சைக்காரக் குடும்பம் (1935 – 2) — பொங்கும் காதல் அல்லது மங்களபாரதி (1935 – 2) — அநாதைப் பெண் (1936 – 4) — இன்பஜோதி (1936 – 2) — பிரேம பிரபா (1936 – 2) — ராஜமோஹன் (1936 – 2) அன்பின் சிகரம் (1937 – 2) — சந்திர மண்டலம் (1937 – 2) — மாயப் பிரபஞ்சம் (1937 – 2) — உளுத்த இதயம் (1938) — மகிழ்ச்சி உதயம் (1938 – 4) — மாலதி (1938 – 3) — வத்ஸகுமார் (1938 ) — வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில் (1938 ) ஜீவியச்சுழல் (1938 -2 ) கலா நிலையம் (1941 – 4) — க்ருபா மந்திர் (1934 -4) — மதுர கீதம் (1943 – 4) — வாத்சல்யம் அல்லது வாக்குத் தத்தம் (1943 – 3) — அமுத மொழி (1944) — பிரார்த்தனை (1945 ) — அபராதி (1946 – 2) — தெய்வீக ஒளி (1947 -2) – புதுமைக் கோலம் (1947) — தபால் வினோதம் (1945 – 2) — கானகலா (1950) — தூய உள்ளம் (1950) — நியாய மழை (1950) – ப்ரபஞ்ச லீலை (1950) ப்ரேமாஸ்ரமம் (1950) — மனசாட்சி (1950) — ஜீவநாடி (1950) — சௌபாக்கியவதி (1950) — நம்பிக்கைப் பாலம் (1951 -2) — பாதாஞ்சலி (1951) — ரோஜாமலர் (1951) — தைரியலக்ஷ்மி (1952) — சுதந்திரப் பறவை (1953) — நிர்மல நீரோடை(1953) — கிழக்கு வெளுத்தது (1958)

    - முதற் பதிப்பு வெளியான வருஷமும், மொத்தப் பதிப்புகளும் அடைக்குறிக்குள்

    (ஆதாரம் – தமிழ் நாவல் வளர்ச்சி 1900-1940 புதிய ஒளியில் இருண்ட காலம் – முனைவர் சுப. சேதுப் பிள்ளை — தகவல் நன்றி — (ஹிந்து இதழ்களில், ராண்டார் கை, எஸ்.முத்தையா 2001, 2002ல் எழுதிய கட்டுரைகள் – மறக்க முடியாத மங்கைகள் என்ற தலைப்பில் குமுதம் இதழில் திருவேங்கிமலை சரவணன் எழுதிய கட்டுரை, மங்கையர் இதழ்கள் என்ற புத்தகத்தில் பிரேமா எழுதிய கட்டுரை – திருச்சி முஹம்மது யூனூஸ் எழுதிய கட்டுரை — புகைப்படம் நன்றி : திரு வி.எஸ்.வி. அவர்கள்)

    ஆர்வி: இவரும் ஜே.ஆர். ரங்கராஜு, வடுவூரார் ஸ்டைலில்தான் எழுதி இருப்பார் போலிருக்கிறது. நான் படித்ததில்லை, அதனால் நிச்சயமாக சொல்ல முடியாது. இந்த மாதிரி எழுத்துக்கள் நாட்டுடமை ஆக வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சேதுராமன் முயற்சியால் பலரை பற்றி கிடைத்த விவரங்களை படித்த பிறகு வடுவூராரும், ரங்கராஜுவும் இவரும் ஏன், லக்ஷ்மியும் சாண்டில்யனும் கூட மற்ற பலரை விட சிறந்த சாய்ஸ் என்றுதான் தோன்றுகிறது. இவர்கள் ஒரு கால கட்டத்தை பிரதிபலிக்கிறார்கள். பலருக்கும் அந்த அளவு கூட முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை.

    சின்ன அண்ணாமலையும் கல்கியும்

    சின்ன அண்ணாமலையும் கல்கியும்

    நாட்டுடமை பதிவில் அவ்வளவாக விவரம் தெரியவில்லை என்று குறைப்பட்டுக்கொண்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். அவரைப் பற்றி சேதுராமன் அவர்கள் திரட்டிய விவரங்கள் கீழே.

    தனது பத்தாவது வயதிலேயே, தனது ஊரிலேயே, தனது உறவினர் வீட்டிலேயே, மஹாத்மா காந்தியைத் தரிசிப்பதற்கு ஒருவர் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் ? இந்த பாக்கியம் பெற்றவர் காரைக்குடியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலைதான்.. இளைஞன் அண்ணாமலையின் சிறிய தாயார் உமையாள் ஆச்சி, ராய.சொக்கலிங்கத்தின் துணைவியார் – 1934ல் மஹாத்மா காரைக்குடி வந்த போது இந்த நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமல்ல, பிற்காலத்திலே, காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையை தமிழில் வெளியிட அண்ணலிடமே அனுமதி பெற்றவரும் கூட. இவருக்குச் சின்ன அண்ணாமலை என்ற பெயர் சூட்டியது வேறு யாருமல்ல, இராஜாஜி அவர்களேதான்.

    காரைக்குடி சா.கணேசனின் உறவினர் இவர் – சின்னஞ்சிறு பிராயத்திலேயே தேசத்தைப் பற்றியும் காந்திஜியைப் பற்றியும் நன்கறிந்து, தேசப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணாமலை.

    இளம் வயதில் காரைக்குடியிலும், மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரிலிருந்த ஆங்கிலோ-சைனீஸ் பள்ளியிலும் படித்தவர். தனது பதின்மூன்றாவது வயதிலே உமையாள் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டார்.

    மேடையில் பேசுபவர்களுக்கு சுவையாக எழுதத் தெரியாது, எழுதத் தெரிந்தவர்களுக்கு மேடையில் அழகாகப் பேச வராது.அண்ணாமலை இதற்கு விதிவிலக்கு! சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர், பதினாயிரம் இருபதினாயிரம் ஜனங்கள் அடங்கிய கூட்டத்திலே மணிக்கணக்கில் பிரசங்கமாரி பொழியக்கூடியவர், ஆவேசமாகப் பேசுவார், அழ வைக்கும்படி பேசுவார், சிரித்து வயிறு புண்ணாகும்படியும் பேசுவார் – இவரைப் போன்றவர்கள் நமது சட்ட சபையில் இருந்தால் எவ்வளவு கலகலப்பாகும் என்று நான் எண்ணுவது உண்டு. பேசும் ஆற்றலைப் போல் எழுதும் ஆற்றல் படைத்தவர் சின்ன அண்ணமலை – அழகிய சிறு கதைகள், சிறந்த நாவல்கள், ரசமான பிரயாணக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார் (“காணக் கண்கோடி வேண்டும்” என்ற நூலின் முன்னுரையில் கல்கி எழுதியது) சின்ன அண்ணாமலை கல்கி கிருஷ்ணமூர்த்தியைத் தன் குருவாகவும், வழிகாட்டியாகவும் வரித்துக் கொண்டவர்.

    திரு. சத்தியமூர்த்தி கலந்து கொண்ட அரசியல் மானாட்டில், அண்ணமலை பேசி முடித்தவுடன் அவரைப் பாராட்டி நாவன்மையைப் புகழ்ந்த சத்தியமூர்த்தி தான் அணிந்திருந்த காவி கலர் கதர் அங்கவஸ்திரம் ஒன்றைச் சபையின் கரகோஷத்தினிடை அவருக்குப் போர்த்தினார். அந்த நினைவாகவே இவர் தன் வாழ் நாள் முழுதும் கதரில் காவி நிறச் சட்டையையே அணிந்து வந்தார்.

    ஆகஸ்ட் , 1942ல் நடந்த விடுதலைப் புரட்சியின் போது, பல பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு கனல் தெறிக்கப் பேசியவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டு திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார் – மறு நாள் பகலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிறைக்கதவை உடைத்துத் திறந்து இவரை விடுதலை செய்தார்கள்.

    இவர் நடத்திய தமிழ்ப் பண்ணை புத்தகாலயம், இராஜாஜி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மற்றவர்களின் புத்தகங்களைப் பதிப்பித்தது. அண்ணாமலை எழுதிய முதல் புத்தகம் “சீனத்துச் சிங்காரி”

    மகாத்மா காந்தி கடைசியாகச் சென்னை வந்த போது, இராஜாஜி அண்ணாமலையை அண்ணலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அண்ணாமலையின் சிறைவாசம், விடுதலை பற்றிச் சொல்லிய பிறகு ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார் அண்ணாமலை, உங்கள் அனுமதி தேவை என்றிருக்கிறார் இராஜாஜி. “நஷ்டம் வராமல் பத்திரிகை நடத்துவாயா” என்று காந்தி கேட்டதற்கு “இவரும் உங்களைப் போல் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்தான்” என்றாராம் இராஜாஜி. மகிழ்ச்சியில் திளைத்த மகாத்மா, உடனேயே ‘தமிழ் ஹரிஜன்’ துவக்க விழா நடத்தி விடலாம் என்று சொல்லி முதல் காரியமாக தமிழிலேயே ‘தமிழ் ஹரிஜன்’ என்றெழுதித் துவக்கி வைத்தார்.

    அண்ணாமலை கல்கியைச் சந்தித்ததே ஒரு சுவாரசியமான கதை. தேவகோட்டையில் ராஜாஜி வந்திருந்த போது ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அண்ணாமலை அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர். அண்மையில் கல்கி எழுதி ஆனந்தவிகடனில் தலையங்கமாக வெளி வந்த ராஜாஜி பற்றிய விஷயங்களை நன்றாகவே மனப்பாடம் செய்திருந்தார் அண்ணாமலை. முதலில் மேடை நடுக்கம் தான் – ராஜாஜி ஊக்கிவிடவும் கணீரென்ற குரலில் தான் பேச வேண்டியதை தைரியமாக எடுத்துரைத்தார். ராஜாஜி ஆசிகள் வழங்கி கூடவே “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்றார்.

    பேச்சு முடிந்தவுடன் மேடையில் பின்புறம் அமர்ந்தார் அண்ணாமலை. அருகில் இருந்த ஒருவர் ‘ரொம்ப நன்றாகப் பேசினீர்கள் – இவ்வளவு விஷயம் எங்கு படித்தீர்கள்’ என்று கேட்டார். அவரிடம் உண்மையை மறைக்கக் கூடாதென்று ”ஆனந்தவிகடனில்” என்றார் அண்ணாமலை. யார் எழுதியது தெரியுமா என்றார் அந்த மனிதர். கல்கி என்றார் அண்ணாமலை. அவரைத் தெரியுமா? தெரியாது, நான் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன செய்வீர்கள்? சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வேன். “அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார். ஏன் என்று கேட்டார் அண்ணமலை. நான்தான் அந்தக் கல்கி என்று பதில் வந்தது (அண்ணாமலை எழுதிய “சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்ற புத்தகத்திலிருந்து)

    தன் வாழ்வில் அனேக தேசபக்தர்களைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றவர் சின்ன அண்ணாமலை.

    சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.. 1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தொண்டர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைந்திருந்தனர். அப்போது தமிழ் நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் சிவாஜிக்கென்று அனேக ரசிக மன்றங்கள் வைத்திருக்கின்றனர், இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தால் காங்கிரசுக்குப் புதிய பலம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.

    இதன் காரணமாகவேதான் 1969 ஆகஸ்டு மாதம் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பு உருவாகியது.
    அதன் முதல் பேரவை அக்டோபர் முதல் தேதியன்று சென்னையில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. சரித்திரம் காணாத ஊர்வலமும், தென்னாட்டு, வடனாட்டு நட்சத்திரங்களும், அலை மோதினர். காங்கிரசைப் பலப்படுத்த அண்ணாமலை மறைமுகமாகச் செய்த இந்த ஏற்பாடு காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டமில்லாததால் அதன் இலக்கை எட்டிப் பார்க்க முடியவில்லை. அண்ணாமலை ஏழு வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார்.

    நிறைய நூல்கள் இவர் எழுதியும், அந்த நூல்களின் விவரங்கள் கிடைக்கவில்லை — இவர் எழுதிய முதல் நூல் “சீனத்துச் சிங்காரி” நினைவுக்கு வரும் மற்ற நூல்கள் – தியாகச் சுடர், சொன்னால் நம்ப மாட்டீர்கள், கண்டறியாதன கண்டேன், காணக் கண் கோடி வேண்டும் என்பவை.

    (தகவல் உபயம் – சொன்னால் நம்ப மாட்டீர்கள்! – சின்ன அண்ணாமலை – குமரன் பதிப்பகம்}

    ஆர்வி: சின்ன அண்ணாமலையின் சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை சிறு வயதில் நானும் படித்திருக்கிறேன். அவர் கல்கி, ராஜாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்தவர். பின்னாளில் சிவாஜி, காமராஜ் ஆகியோருக்கு நெருக்கமாக மாறினார். ம.பொ.சிக்கு சின்ன அண்ணாமலையிடம் ஒரு வேலை செட்டப் செய்ய ராஜாஜி நடத்திய முயற்சிகள் ஏனோ பலிக்கவில்லை. அவருக்கு கல்கி ஒரு காரே வாங்கிக் கொடுத்திருக்கிறார். சி. அண்ணாமலையின் முதல் கார் அதுதானாம்.

    சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தில் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கும் விஷயம் ஒன்று – ஒரு முறை இவர் வெளியூரில் எங்கோ பிரசாரத்துக்கு போய்விட்டு இரவில் டீ குடிக்க ஒரு கடையில் நிறுத்தினாராம். மக்கள் இரவு ஆட்டம் பார்த்துவிட்டு சாரி சாரியாக வந்து கொண்டிருந்தார்களாம். இவர் என்ன படம், எப்படி இருந்தது என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தாராம். வீரபாண்டிய கட்டபொம்மன் படம். எல்லாரும் சிவாஜி நடிப்பை சிலாகித்துக் கொண்டிருந்தார்களாம். ஒருவர் மட்டும் இதெல்லாம் ஒரு படமா என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டிருந்தாராம். சி. அண்ணாமலை அவரிடம் உங்களுக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கவில்லையா என்று கேட்டாராம். அவர் சொன்னாராம், நடிப்பு எல்லாம் சரி, ஆனால் எங்க எம்ஜிஆரா இருந்தா வெள்ளைக்காரங்களை எல்லாம் சுட்டுட்டு குதிரை மேல ஏறி வந்து முடிசூட்டிக்குவாரு! என்று ஒரு போடு போட்டாராம்.

    அந்த புத்தகத்தில் மக்களே திரண்டு வந்து ஜெயிலை உடைத்து விடுதலை செய்த ஒரே மனிதர் தான்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். “பூட்டை உடை” என்ற புத்தகம் எழுதியதற்காக கேஸ் போடப்பட்டதும், இவர் பூட்டை உடை என்றால் என்ன என்று தமிழ் தெரியாத ஜட்ஜ், ப்ராசிக்யூட்டர் ஆகியோருக்கு விளக்க முயற்சி செய்ததால் மூன்று மாதம் ஜெயில் தண்டனை கிடைக்க வேண்டியது ஆறு மாதமாக ஆனதையும் நகைச்சுவையாக விவரிக்கிறார்.

    அவர் ஒரு சிறந்த தேச பக்தர், பேச்சாளர் என்று தெரிகிறது. ஆனால் நாட்டுடமை ஆக்கப்படும் அளவுக்கு என்ன எழுதிவிட்டார் என்பது இன்னும் தெரியவில்லை.

    இதுவும் ஒரு மீள்பதிப்பு. முந்தைய பதிவை சில டெக்னிகல் காரணங்களால் எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் இந்த மீள்பதிப்பை போட்டுவிட்டு பழைய பதிவை நீக்கிவிட்டேன்.

    1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்

    1919-இல் பாரதியுடன் ராய.சொக்கலிங்கம்


    9-11-1919 அன்று காரைக்குடி இந்து மதாபிமான விழாவில் கலந்து கொண்ட மஹாகவி பாரதியார் – அவருக்கு வலப்புறம் ராய.சொ.வும் இடப்புறம் சொ.மு.வும். (இந்த சொ.மு. யாரென்று தெரியவில்லை)

    நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் பற்றிய பதிவில் பல பேரை பற்றி தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். திரு. சேதுராமன் அவர்கள் ராய. சொக்கலிங்கத்தை பற்றி சிரமப்பட்டு கண்டுபிடித்து கீழே உள்ளதை எழுதி இருக்கிறார். அவருக்கும் அவருக்கு விவரங்களை தந்து உதவிய காரைக்குடி சித. ராயப்ப செட்டியாருக்கும் எனது நன்றி! இது அவரது guest post.

    இது போன்ற விஷயங்களை கண்டுபிடிப்பது சுலபம் இல்லை. கூகிளில் தேடும் விஷயம் இல்லை. சேதுராமன் எப்படி சித. ராயப்ப செட்டியாரை கண்டுபிடித்தாரோ! சித. ராயப்ப செட்டியார் விவரங்கள் கொடுத்து உதவியது மட்டும் இல்லாமல் ஒரு புத்தகத்திலிருந்து இந்த புகைப்படத்தையும் scan செய்து உதவி இருக்கிறார். வளவள என்று எழுதுவதை காட்டிலும் ஒரு ஓவியமோ, புகைப்படமோ விஷயத்தை நமக்கும் சுலபமாக சொல்லிவிடுகிறது. இதை பார்த்தவுடன் நமக்கும் ராய.சொ. பாரதியின் காலத்து அறிஞர் என்று தெரிந்துவிடுகிறது பாருங்கள்!

    எழுத்துகளை நாட்டுடமை ஆக்கினால் மட்டும் போதாது, அவர்களது புத்தகங்களை வெளியிடவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தேன். புத்தகங்களை வெளியிடாவிட்டாலும், எழுத்தாளர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்கள் ஏன் இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்றாவது சிறு குறிப்பாக வெளியிட வேண்டும். அப்படி அரசு செய்யும் வரை நம்மை போன்று சாதாரண மனிதர்கள்தான் இதற்கு சிரமப்பட வேண்டும். திருவாளர்கள் சேதுராமன், சித. ராயப்ப செட்டியார் ஆகியோருக்கு ஓ பக்கங்கள் ஞானி ஸ்டைலில் இந்த வார பூச்செண்டு கொடுக்க வேண்டியதுதான்! (இப்போது சேதுராமன் மேலும் சின்ன அண்ணாமலை, என்.வி. கலைமணி, அகஸ்தியலிங்கம், மு. ராகவையங்கார் ஆகியோரை பற்றியும் விவரங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.) உங்களுக்கும் பூச்செண்டு வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று புரிகிறதா? :-)

    ஓவர் டு சேதுராமன்.

    தமிழ்க் கடல் ராய.சொ. 30-10-1898 அன்று, காரைக்குடியில் பிறந்தவர். தந்தையின் பெயர் ராயப்ப செட்டியார், தாயார் அழகம்மை ஆச்சி. இளமையில் ஆசிரியர் சுப்பையா திண்ணைப் பள்ளியிலும், பின்னர் தனது பதினெட்டாவது வயதிலிருந்து இரண்டு வருஷங்கள் பண்டித சிதம்பர அய்யர் அவர்களிடம் தமிழ் இலக்கண இலக்கியப் பாடங்கள் பயின்றார்.

    ராய.சொ. அவர்கள் திருமதி உமையாள் ஆச்சியை பள்ளத்தூரில் 1918ல் திருமணம் புரிந்து கொண்டார்கள். இத்திருமண வாழ்க்கை 43 ஆண்டுகள் தொடர்ந்தது.

    தமிழ் இலக்கணப் பயிற்சி நடக்கையில் அப்போது ‘சமூகச் சீர்திருத்தத் தந்தை’ என்றழைக்கப்பட்ட திரு.சொ.முருகப்பாவின் தொடர்பு ஏற்பட்டது.. பல அன்பர்களைச் சேர்த்துக் கொண்டு ‘இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்தனர் மஹாகவி சுப்ரமணிய பாரதியார் 1919ல் நேரில் வந்து இச்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவாழ்த்துக் கவி பாடிச் சங்கத்தைப் பெருமைப் படுத்தினார். சங்கத்தின் தலைவராக ராய.சொ. பல ஆண்டுகள் பணி புரிந்துள்ளார்.

    சொ.முருகப்பா 1920ல் தொடங்கிய ‘தன வைசிய ஊழியன்’ பத்திரிகைக்கு, இரண்டாவது ஆண்டிலிருந்து ராய.சொ. ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் இப்பத்திரிகையின் பெயர் ‘ஊழியன்’ என்று மாற்றப்பட்டது. அடுத்த இருபது ஆண்டுகள் இப்பத்திரிகை காரைக்குடியிலும், சென்னையிலும் வெளி வந்தது. இப்பத்திரிகையில் உதவி ஆசிரியர்களாகப் பணி புரிந்தவர்களில், வ.ரா, தி.ஜ.ர., புதுமைப்பித்தன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.

    நாட்டின் விடுதலைப் பணிகளில் காந்தியடிகள் காட்டிய நெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ராய.சொ.1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அடைந்தார். நகரத்தார் வகுப்பில் அரசியல் காரணமாக முதன் முதலாகச் சிறை சென்றவர் ராய.சொ தான்.

    தன்னுடைய தென்னாட்டுப் பயணத்தின் போது, 1934-ம் ஆண்டு, அண்ணல் காந்தியடிகள், ராய.சொ.குடிலுக்கு வந்து, விருந்துண்டு அவரைப் பெருமைப் படுத்தியது இன்றும் எல்லோருடைய நினைவில் இருக்கிறது. காரைக்குடி நகரசபைத் தலைவராக இருந்தபோது, காரைக்குடியில் இருந்த நான்கு ஆரம்பப் பள்ளிகளைப் பதினேழாகப் பெருக்கினார்.

    இந்து மதாபிமான சங்கம் 1958ல் ராய.சொ.வுக்கு “தமிழ்க்கடல்” என்ற பட்டம் வழங்கியது.. 1961ல் இரங்கூன் நகர நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் தர்ம பரிபாலன சபை அவருக்கு “சிவமணி”என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர். தொடர்ந்து 1963ல் கோலாலம்பூர் அருள் நெறித் திருக் கூட்டம் அவரை “சிவம் பெருக்கும் சீலர்” என்று கௌரவம் செய்தனர்.

    ஆலயப் பணிகளில் வெகுவாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் – தென்னாட்டிலும், வட நாட்டிலும் உள்ள திருத்தலங்களுக்கெல்லாம் விஜயம் செய்தவர்.

    தன் வாழ்க்கைக் காலத்தில் திரட்டிய, புத்தகங்கள், பத்திரிகைகள் முதலானவற்றைக் கொண்ட பெரும் நூல் நிலையத்தை, காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு வழங்கினார். இத்தொகுப்பு, கிடைத்தற்கரிய பதிப்புகளும், திங்கள் இதழ்களும், அகர நூல்களும், திருக்குறள் இராமாயணம் பல பதிப்புகளும், இலக்கண, இலக்கிய, சமய, அரசியல், பல்வேறு உரை நூல்கள், கொண்டது.

    காந்தி நூற்றாண்டு விழாவினையொட்டி அன்னார் மீது தாம் முன்னர் இயற்றிய 901 பாடல்களையும் தொகுத்து “காந்தி கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூல் சென்னையில் வெளியிட்டார்.

    இவரது படைப்புகளில் “தேனும் அமுதும்”, “திருவாசகத் தேன்”, “திருத்தலப்பயணம்” முதலான பக்தி நூல்கள் இருபத்தியெட்டும், காவேரி, குற்றால வளம் முதலான உரை நடைகள் ஐந்தும், “காந்தி பிள்ளைத்தமிழ்”, “காந்தி பதினெண்பா” முதலான எட்டு கவிதை நூல்களும், “சேதுபதி விறலிவிடு தூது”, “கூளப்ப நாயக்கன் விறலிவிடு தூது” முதலான நான்கு இலக்கிய வெளியீடுகளும், உள்ளன. இவை தவிர “கம்பனும் சிவனும்”, “வில்லியும் சிவனும்” என்ற ஆராய்ச்சி நூல்களும் இவர் படைத்துள்ளார்.

    முன்னாள் இந்து மதாபிமான சங்கம் பொன் விழா கண்ட போது, உமையாள் மண்டபம் என்ற பெயரால் மேல் மாடி ஒன்று கட்டிக் கொடுத்திருந்தார்.. அழகப்பா கல்லூரி வட்டத்திலிருந்து ஓய்வெடுத்ததும், இம்மண்டபத்தில் குடியேறி தமது இறுதி நாள் வரை வாழ்ந்த ராய.சொ. 30-9-1974ல் மறைந்தார்.

    (ஆதாரம் – “தமிழ்க் கடல் ராய.சொ. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு” — அன்பளித்தது சித. ராயப்ப செட்டியார், காரைக்குடி)

    மீண்டும் ஆர்வி:
    இது ராய.சொவின் வாழ்க்கைக் குறிப்பு. அவரது எழுத்துகளை பற்றி சுருக்கமாகவே விவரங்கள் உள்ளன. பொதுவாக மரபு கவிதைகள் எழுதி இருக்கிறார், ஊழியன் என்ற பத்திரிகையை நடத்தி இருக்கிறார் என்று தெரிகிறது. அரசே பதிப்பித்தால் ஒழிய இவரது எழுத்துக்கள் மறு பதிப்பு பெற வாய்ப்புகள் குறைவுதான். இருப்பதை வைத்து பார்க்கும்போது இவர் எழுத்துக்கள் ஏன் நாட்டுடமை ஆக்கப்பட்டன என்று விளங்கவில்லை.

    இது ஒரு மீள் பதிப்பு. சில டெக்னிகல் காரணங்களால் முந்தைய பதிவை எங்கும் லிங்க் செய்ய முடியவில்லை. அதனால் முந்தைய பதிவை நீக்கிவிட்டு, இதை பதித்திருக்கிறேன்.

    டாப்டென் பதிவில் இன்னும் சில சிபாரிசுகளை கண்டுபிடித்தேன்.

    சுஜாதா
    விகடனில் சுஜாதா தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (மார்ச் 26, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):

    1. புறநானூறு ஏதோ இங்கும் அங்கும் கேட்டதுதான். இதெல்லாம் எனக்கு ரொம்ப தூரம்.

    2. பைபிள் எனக்கு பழைய ஏற்பாடுதான் பிடித்திருக்கிறது. பழைய ஏற்பாட்டு கடவுளுக்கும் புதிய ஏற்பாட்டு கடவுளுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

    3. பகவத் கீதை என்றைக்காவது படித்து பார்க்க வேண்டும்

    4. பாரதியார் கவிதைகள் நிறை குறைகளை சீர் தூக்கி பார்ப்பது எனக்கு முடியாத காரியம்

    5. புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன் நோபல் பரிசு பெறத் தகுதி உள்ளவர்.

    6. திருக்குறள் இதுவும் ரொம்ப தூரம்தான்.

    7. சிவப்புப் புத்தகம் (மா சே துங்) படித்ததில்லை.

    8. தமிழ்ப் பேரகராதி (சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) இது படிப்பதிற்கில்லை. இதை தொகுப்பதில் பங்கு பெற்ற மு. ராகவையங்காரைப் பற்றி இங்கே காணலாம்.

    9. நாலாயிர திவ்யப் பிரபந்தம் பிரித்து பார்த்திருக்கிறேன்.

    10. Why I Write? – ஜார்ஜ் ஆர்வெல் கட்டுரைகள் படித்ததில்லை.

    அசோகமித்ரன்
    விகடனில் அசோகமித்ரன் தேர்ந்தெடுத்த பத்துப் புத்தகங்கள் (ஏப்ரல் 2, 2006 தேதியிட்ட ஆனந்த விகடனில் இருந்து):

    1. திருக்குறள் (கழக வெளியீடு) ஏற்கனவே சொன்ன மாதிரி கொஞ்ச தூரம்தான்.

    2. சிலப்பதிகாரம் (உ.வே.சா. நூலக வெளியீடு) இதுவும் தூரம்தான்.

    3. கம்பராமாயணம் (சென்னை கம்பன் கழக வெளியீடு) இதுவும் தூரம்தான்.

    4. சத்திய சோதனை – மஹாத்மா காந்தி படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

    5. கண்டுணர்ந்த இந்தியா – நேரு அருமையான புத்தகம்

    6. என் சரித்திரம் – உ.வே. சாமிநாதய்யர் நல்ல புத்தகம், ஆனால் டாப் டென்னில் எல்லாம் இடம் பிடிக்காது.

    7. என் கதை – கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை படித்ததில்லை

    8. பாரதியார் கட்டுரைகள் நல்ல புத்தகம்.

    9. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம் படிக்க ஆசை, கிடைக்க மாட்டேன் என்கிறது.

    10. தற்காலத் தமிழ் அகராதி (க்ரியா வெளியீடு) இது படிப்பதற்கில்லை

    பி.கே சிவகுமார் – எனக்கு இவர் யாரென்று தெரியாது.
    எனக்குப் பிடித்த பத்துப் புத்தகங்கள் என்று யோசிக்க ஆரம்பித்ததில் உடனடியாகத் தோன்றியது இந்தப் பட்டியல்.

    1. பைபிள் புதிய ஏற்பாடு எனக்கு பழைய ஏற்பாடுதான் பிடித்திருக்கிறது.

    2. கம்பராமாயணம் (வை.மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் உரையுடன்) தூரம்.

    3. மஹாகவி பாரதியார் கவிதைகள் என் பதிவு இங்கே.

    4. மஹாத்மா காந்தியின் சத்திய சோதனை படியுங்கள்.

    5. ஜவஹர்லால் நேருவின் The discovery of India படியுங்கள்.

    6. திருவாசகம் கொஞ்ச தூரம்.

    7. ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படித்ததில்லை.

    8. ஜெயமோகனின் தமிழின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளின் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு(கள்) அருமையான் தொகுப்பு.

    9. Francis Wheen எழுதிய “Karl Marx – A Life.” படித்ததில்லை.

    10. Richard Dawkins எழுதிய “The Selfish Gene” படித்ததில்லை.

    kamarajar
    என் கண்களில் தமிழ் நாட்டின் தலை சிறந்த தலைவர் இவர்தான்.

    உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

    அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

    அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

    இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

    சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். :-) சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

    அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

    விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

    எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

    காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

    தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

    அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

    முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

    இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

    அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.

    சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாருமே கிழவர்கள்தான். காந்திக்கு கிட்டத்தட்ட 80, ராஜாஜி, படேல் எழுபதுகளில், நேரு, ஆசாத் கிட்டத்தட்ட அறுபது. நேதாஜி, ஜின்னா இல்லை. காந்தி மறைந்த பின் நேருவுக்கு ஈடான தலைவர்கள் படேல், ராஜாஜி, ஆசாத் மட்டுமே. படேலுக்கு பாகிஸ்தான், முஸ்லீம் லீக் ஆகியவற்றின் மீது கசப்பு இருந்தது. அவருக்கு முஸ்லிம்கள் மீதே கசப்பு இருந்ததோ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.

    நேரு இந்தியா சோஷலிச பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பினார். படேல், ராஜாஜி போன்றவர்கள் காபிடலிஸ்ட்கள். நேருவுக்கு அவர்கள் இருவரும் மாற்று கருத்துகளை தயக்கம் இன்றி தெரிவித்தார்கள். நேருவின் லட்சியவாதம், படேலின் practicalness இரண்டும் சேர்ந்தது ஒரு நல்ல காம்பினேஷன். இந்த காலத்திலும் அவர்களும் தவறு செய்தார்கள்தான் – நேரு காஷ்மீர் விஷயத்தில் அனாவசியமாக குழப்பினார். அவர் திபெத்தை பற்றி கூக்குரல் இட்டிருக்கவேண்டும். படேல் கம்யூனிஸ்ட்களை ஹைதராபாத் விஷயத்தில் பயன்படுத்திக்கொண்டார். ஹைதராபாத் கைக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடினார்.

    படேல் மறைந்ததும் ராஜாஜி அந்த இடத்தில் அமர்ந்தார். படேல் நேருவுக்குள் இருந்த போட்டி ராஜாஜி நேருவுக்குள் இல்லை. நேரு ராஜாஜியின் புத்தி கூர்மையை பெரிதும் மதித்தார். ராஜாஜியும் நேருவிடம் உரிமையுடன் மறுத்து பேசக்கூடியவர். அவர்கள் காம்பினேஷனும் நன்றாக செயல்பட்டிருக்கும். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர் அன்றைய மெட்ராஸ் மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தது துரதிருஷ்டமே. அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் என்றால் காங்கிரசாருக்கு பயம்தான். தெலிங்கானா புரட்சிக்கு பிறகு அது தவறு என்றும் சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட்கள் பயத்தால்தான் நேரு ராஜாஜியை மெட்ராசுக்கு முதலமைச்சராக போக சொன்னார்.

    அவர் முதலமைச்சரான விதமும் சரியில்லை. முதலில் மேலவைக்கு நியமன உறுப்பினர் ஆகி முதலமைச்சராக ஆனார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்கு இருந்த எதிர்ப்பு அவருக்கு அச்சம் தந்ததா? நேருவின் வார்த்தையை மீறி காமராஜ் அவருக்கு விரோதமாக தேர்தலில் செயல்பட்டிருக்கமாட்டார். ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள் அவரை தேர்தலில் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்பட்டாரா? தெரியவில்லை.

    முதலமைச்சராக நன்றாகவே செயல்பட்டார். நாட்டில் பஞ்சம் இருந்த சமயம் ரேஷனை ஒழிக்க தைரியம் வேண்டும். அவர் அப்படி செய்தது பதுக்கி இருந்த தானியங்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. போலீஸ் ஸ்ட்ரைக்கை அருமையாக கையாண்டு அடக்கினார். நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். (ம.பொ.சி. இதை பற்றி பேசுகிறார்) ஆனால் அவர் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணவிரதத்தை சரியாக கையாளவில்லை. ஸ்ரீராமுலுவின் இறப்பை தடுக்க அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

    அவரது “குலக் கல்வி” திட்டம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது. மாணவர்களுக்கு பகுதி நேரக் கல்வி, மிச்ச நேரம் அவர்கள் பெற்றோரின் விருப்பப்படி என்பதுதான் அந்த திட்டம். பெற்றோரின் விருப்பப்படி என்றால் கிராமப்புற குழந்தைகள் அப்பாவின் தச்சுத்தொழிலிலோ, மீன் பிடிப்பதிலோ, வேறு எதிலோதான் உதவி செய்திருப்பார்கள். பிராமணர்களின் குழந்தைகள் எந்த தொழிலையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நிறைய மாணவர்கள் படித்திருக்கலாம். இதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எழுபதுகளிலேயே என் நண்பன் தனுஷ் மாடு மேய்த்தவன். பள்ளிக்கு வரமாட்டான். மாலை நேரம் எங்களுடன் ஃபுட்பால் ஆட மட்டும் வருவான். மூன்று மணி நேரம்தான் பள்ளி என்றால் வந்திருக்கலாம். ஆனால் ஏழை மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க மதிய உணவு இதை விட நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அவன் சாப்பாடு வரும் நாட்களில் காலையில் வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் போய்விடுவான். எல்லா நாட்களிலும் சாப்பாடு வராது என்று நினைவு. இப்போது யோசித்துப் பார்த்தால் உணவு ஏன் எல்லா நாட்களிலும் வரவில்லை என்று தெரியவில்லை.

    ஆனால் ராஜாஜி கிராமப்புறங்களில் ஆறாயிரம் பள்ளிகளை மூடிவிட்டு பிறகு கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்க இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்தக் கால கட்டங்களில் பள்ளிகளை மூடுவது என்பது பெரும் தவறு. டோண்டு இப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அவரது ஆதாரம் கல்கி பத்திரிகைதான் – கல்கி அப்போதெல்லாம் உயிருடன் இருந்தார். அவர் ராஜாஜியின் கண்மூடித்தனமான ஆதரவாளர். அவர் நடுநிலைமையுடன் இதை பற்றி எழுதி இருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்தான்.

    இதை பற்றி மேலும் விவரமாக படிக்க டோண்டுவின் பதிவு இங்கே

    இந்த திட்டமும், காமராஜின் எதிர்ப்பும் அவரது முதலமைச்சர் பதிவுக்கு முடிவு தந்தன. அதற்கு பிறகு அவர் ஒரு பதவியும் ஏற்கவில்லை.

    காமராஜின் மதிய உணவு திட்டம் ராஜாஜியின் இந்த “குலக் கல்வி” திட்டத்தை விட சிறந்தது. காமராஜ் கல்வி தருவதை அரசின் கடமையாக கருதி இருக்க வேண்டும். ராஜாஜி இதையும் எப்படி efficient ஆக நடத்துவது என்பதை தனது top priority ஆக கொண்டிருக்க வேண்டும்.

    ஆனால் இதை “குலக் கல்வி” என்று திராவிட இயக்கங்கள் சித்தரித்தது தவறு. இது hindsight. இன்று சொல்வது சுலபம். அன்று அரசு வேலைகளில் பிராமண ஆதிக்கம் அதிகம். பல ஆண்டு காலங்களாக பிராமணர் அல்லாதவர்கள் அரசு வேலைகளை பெறாததை கண்டு வந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்று இப்படி தோன்றி இருக்காவிட்டால்தான் ஆச்சரியம். அவர்கள் இதை தச்சன் பிள்ளைகள் தச்சனாகவே இருக்க செய்யும் சதி என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. காமராஜ் போன்றவர்களும் பெரியவரை கழற்றி விட இதுதான் சான்ஸ் என்று நினைத்திருப்பார்கள். காமராஜும் இது ஜாதிகளை perpetuate செய்யும் “குலக் கல்வி” என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியும் இதை விளக்க பெரிதாக முயற்சி செய்திருக்க மாட்டார். முஹமது பின் துக்ளக் படத்தில் ராஜாஜி போன்று வரும் ஒருவர் “உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்கு தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்று மக்களிடம் சொல்வார். ராஜாஜியின் பலவீனம் இதுதான் என்று நினைக்கிறேன்.

    1955 ஆவடி காங்கிரஸில் சோஷலிசம்தான் தனது பாதை என்று காங்கிரஸ் அறிவித்தது. அந்த கால கட்டத்தில் சோஷலிசம்தான் சரியான பாதை என்றுதான் அநேகம் பேர் நினைத்தார்கள். ராஜாஜி காங்கிரசிலிருந்தும் நேருவிடமிருந்தும் மெதுவாக விலக ஆரம்பித்ததும் இப்போதுதான்.

    இந்த கால கட்டத்தில் லைசன்ஸ் கோட்டா பெர்மிட் ராஜ் என்று சொல்ல தைரியம் வேண்டும். இன்று இது சரியாக படலாம் – ஆனால் அன்று பணக்காரர்கள் அயோக்கியர்களாகத்தான் படங்களிலும் கதைகளிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு எம்ஜிஆரும் சிவாஜியும் “நீ பணக்காரன், உன்னிடம் பாசம் கிடையாது” என்றுதான் வசனம் பேசுவார்கள். அரசாங்கம் பணக்காரர்களையும், தொழிலதிபர்களையும், நில சுவாந்தார்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிடுவார்கள் என்று பரவலாக நினைத்த காலம் அது. அவர்களை கட்டுப்படுத்தத்தான் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் எல்லாமே. அப்போது இது தவறு என்று சிந்திக்க அறிவு கூர்மை, தான் நினைத்ததை சொல்லும் நேர்மை எல்லாம் வேண்டும். இது ராஜாஜிக்கு இருந்தது. மினு மசானி, ரங்கா போன்றவர்களுடன் சேர்ந்து அவர் சுதந்திரா கட்சியை உருவாக்கினார். அது காங்கிரசுக்கும், சோஷலிசத்துக்கும் நல்ல மாற்றாக உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.

    கட்சி ஆரம்பித்து அவர் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார். முத்துராமலிங்கத்தேவருடன் கூட்டு, தி.மு.க.வுடன் கூட்டு எல்லாம் அப்படித்தான். என் பெரியப்பா சொல்லுவார் – அவர் மயிலை மாங்கொல்லையில் “நான் என் பூணூலை பிடித்துக்கொண்டு சொல்கிறேன், நீங்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேசினாராம். அவர் தன்னை பிராமண ஜாதியின் தலைவராக குறுக்கிக்கொண்ட செயலாகத்தான் இதை நான் காண்கிறேன். அவர் எப்படி ஒரு ஜாதிக்கு appeal செய்தார்? காங்கிரசை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

    அவருடைய மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பி. ஆக இருந்தார் போலிருக்கிறது. எனக்கு சி.ஆர். நரசிம்மனை பற்றி ஒன்றுமே தெரியாது. இது nepotismஆ, இல்லையா என்று டோண்டு போன்று தெரிந்தவர்கள் சொல்லலாம். டோண்டு சி.ஆர். நரசிம்மன் திறமை வாய்ந்தவர் என்றும் ராஜாஜி தன் குடும்பத்தவருக்கு உதவி செய்யாத விஷயம் மிகவும் notorious என்றும், இதில் எந்த விதமான nepotismஉம் இல்லை என்றும் சொல்கிறார்.

    அவருடைய வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும் அருமையான அறிமுக புத்தகங்கள். சரளமான நடை. ராமனின் தவறுகளுக்கும் கிருஷ்ணனின் தவறுகளுக்கும் எந்த சப்பைக்கட்டும் கிடையாது. (வில்லிபுத்தூரார் பாரதத்தை படித்து பாருங்கள், எவ்வளவு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன?) ஆனால் இந்த புத்தகங்களுக்காக அவர் சாகித்ய அகாடெமி பரிசை வாங்கிக்கொண்டது பெரும் தவறு. அது வியாசருக்கும், வால்மீகிக்கும் சொந்தமானது. அதே போல் காங்கிரஸில் இருந்த போதே அவருக்கு பாரத ரத்னா பரிசு விருது வழங்கப்பட்டது. பலருக்கு தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று சொன்னவர் தியாகத்துக்கு பரிசும் விருதும் வாங்கி இருக்கக்கூடாது. (டோண்டு சாவிக்கு அவர் இந்த அறிவுரை கொடுத்ததை குறிப்பிடுகிறார்)

    தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது – சமீபத்தில் அவரது கொள்ளுப்பேத்திக்கு கலைஞர் அரசு உதவி வழங்கும் நிலைமை இருந்தது என்று படித்தேன். தன் வீட்டை ராஜாராம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொடுத்தாராம். வானதி திருநாவுக்கரசிடம் தனக்கு ராயல்டி எல்லாம் முக்கியம் இல்லை, ஆனால் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மலிவு விலையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

    மொத்தத்தில் அவரது புத்தி கூர்மை இணையற்றது. சிந்தனையில் நேர்மை உள்ளவர். தனக்கு சரி என்று பட்டதை தனக்கு என்ன நஷ்டம் வருமோ என்று தயங்காமல் சொன்னவர். அருமையான நிர்வாகி. ஆனால் அவர் மாற்று கருத்துகளை அரவணைத்து செல்ல தெரியாதவர், தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவர், சில பரிசுகளையும் பட்டங்களையும் அவர் ஏற்றது கேள்விக்குரியது, காங்கிரசை வீழ்த்த அவர் சில காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார் என்று கருதுகிறேன். அவரது நிறைகள் அவரது குறைகளை விட மிக அதிகம், அவர் இந்தியாவின் வரப் பிரசாதம், அவர் சுதந்திர இந்தியாவில் மேலும் பதவிகளை வகிக்காது இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

    அவரை பற்றி மேலும் படிக்க விரும்புவர்களுக்கு:
    டோண்டுவின் பதிவுகள்
    பத்திரிகையாளர் சுதாங்கனின் ஒரு பதிவு
    ராஜாஜி மற்றும் காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தி எழுதிய Rajaji: A Life (நான் படித்ததில்லை)

    நான் பயன்படுத்திய, சொல்ல மறந்த ஒரு source – திரு.வி.க.வின் வாழ்க்கை குறிப்புகள்

    வேறு மதிப்பீடுகள், குறிப்பாக திராவிட இயக்கங்களின் பார்வையில் ராஜாஜியை பற்றி ஏதாவது மதிப்பீடு இருந்தால் அதை படிக்க ஆவலாக இருக்கிறேன்.