(இது ஸ்ரீ சேதுராமன் அவர்களின் இடுகை)

FY

சசி தரூர் ஆபத்து விலகியது – சோனியாவைச் சந்தித்து விளக்கம் – இனி கவனமாக இருக்கும்படி கண்டிப்பு (தினமலர் தலையங்கம் – செப்.23,2009)

மத்திய அரசின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து இணைய தளத்தில் கருத்து தெரிவித்த வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர் “விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்வது, மாட்டுத் தொழுவத்தில் (cattle class) பயணிப்பது போன்றது என்று கூறியிருந்தார் – இதற்கு எதிர்க் கட்சிகள் மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது — ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சசி தரூர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்றும், செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் தரூருடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமுடியாது, அவர் கருத்துக்கள் கண்டனத்திற்குரியன என்றும் கூறினர். பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் ‘சசி தரூர் கூறியது ஒரு ஜோக் தான் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

இந்த விவாதங்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடந்த போது சசி வெளிநாடுகளில் – லைபீரியா, கானா – சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். விவாதம் முற்றுவது கண்டு அவர் தன் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார்…  பயணத்திலிருந்து திரும்பியவுடன், நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை, அவரது இல்லத்தில் இருபது நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்..  சந்திப்பு முடிந்து வெளியே வந்த சசி செய்தியாளர்களிடம் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.  (தின மலர் செய்தி)

நமது அரசியல் வாதிகளுக்கு என்றுமே கலா ரசனை கிடையாது என்பது இதிலிருந்து நிதர்சனமாகத் தெரிகிறது..  ட்விட்டரில் ஒரு பட்டாளமே சசியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றது!  ஒரு சாதாரண ‘கடி’  என்ன விளைவை ஏற்படுத்தி விட்டது என்று பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..  ஏனெனில் இது முதல் தடவையல்ல, பெரிசுகளுக்கு நினைவிருக்கலாம், ஐம்பது வருஷங்களுக்கு முன், இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்து, லோக் சபாவில் விவாதங்களும், பரிமாற்றங்களும் நடந்து ஒரு  சிறு புத்தகம் வாபஸ் பெறப்பட்டது…  அந்தப் புத்தகம் தான் “Foolishly Yours”

ஜே.ஆர்.டி.டாடாவின் “ஏர் இந்தியா” நிறுவனத்தின் கமர்ஷியல் டைரக்டர், எஸ்.கே. (பாபி) கூகாவின் கற்பனையில் உதித்த ஒரு முத்து இந்தப் புத்தகம். எல்லா ஏர் இந்தியா விமானங்களிலும், இருக்கைக்கு முன்னுள்ள பையில், இந்தப் புத்தகம் இருக்கும்.  பயணிகளின் கவனத்திற்கென சில விஷயங்கள் நகைச்சுவையுடனும், சித்திரங்களுடனும் விளக்கப் பட்டிருக்கும்..

இந்தப் புத்தகம் ஏர் இந்தியா நிறுவனத்தினால் 1948 போல் வெளியிடப்பட்டது. படிக்கும் போது நன்றாகவாய் விட்டுச் சிரிக்கலாம் – விமானப் பயணம் அன்று, இப்போதிருப்பது போல் மக்களைக் கவரவில்லை, வெகு சிலரே, நிதி வசதி உள்ளவர்களே விமானங்களில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  பயணத்தின் போது எப்படி இருக்க வேண்டும், என்னென்ன செய்வது என்றெல்லாம் ‘கடி’யாக விவரித்திருக்கும்  –

உதாரணமாக “நீங்கள் பயணம் முடிந்தபின் கீழே இறங்கும் போது, எங்கள் ஏர் ஹோஸ்டஸ் உங்களைத் தழுவிக்  கொண்டார் என்றால், அது உங்கள் பேரில் அவருக்குள்ள அன்போ, ஆசையோ அல்ல – மறதியாக நீங்கள் உங்கள் பைக்குள் எடுத்துப் போட்டுக் கொண்ட எங்கள் ஸ்பூன், ஃபோர்க்  (cutlery) முதலானவற்றைத் திரும்ப எடுப்பதற்குத்தான்!!

இன்னொன்று — எங்கள் விமானக் கேப்டன் உங்கள் இருக்கையை நோக்கி ஒரு பாய்ச்சலில் வருவது கண்டால், உங்கள் மனைவியையும், பர்சையும் மறு புறம் மாற்றி விடுங்கள்! கூகாவின் கற்பனையிலுதித்த ஏர் இந்தியா போஸ்டர்கள் பிரசித்தி பெற்றவை – பல தேசங்களைச் சேர்ந்த விமானக் கம்பெனிகளின் நானூறு போஸ்டர்கள் கண்காட்சியில் 1959ல் ஏர் இந்தியா போஸ்டர் தான் “அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ராவல் ஏஜண்ட்ஸ்” பரிசைத் தட்டிச் சென்றது… 1960ல் இந்தியாவின் “இண்டியன் சொசைட்டி ஆஃப் அட்வர்டைஸர்ஸ்” ஏர் இந்தியாவின் அக்காலச் சின்னமான “மஹாராஜா’வை உலகிற்கு அறிமுகப் படுத்திய திரு. கூகாவைக் கௌரவித்தது.  ஆனால் அதே வருஷம் தான், இந்தியப் பார்லிமெண்டில் நமது எம்.பி.க்கள் இத்தகைய விளம்பரங்களினால், இந்தியாவின் மானமே பறி போய்விட்டது என்று கூக்குரலிட்டனர்.. இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்தது, ஏ.எம்.தாரிக் என்ற எம்.பி.  — கட்லரி ‘கடி’யைச் சுட்டிக்காட்டி இந்தியர்களெல்லாம் திருடர்களா என்ன? என்றார் அவர்.  குறிப்பிட்ட கார்ட்டூன் சித்திரத்தில், பயணிக்கு ஒரு காந்தி குல்லா இருந்ததும் சுட்டிக் காட்டப் பட்டது.

அப்போதைய சபாநாயகர் தன் பங்கிற்கு “விமானத்தில் நானும் கவனித்திருக்கிறேன் – விளக்குகள் அணையும் போது பெண் பயணிகள்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார்களே என்றார் — அவர் குறிப்பிட்டது மேலே குறிப்பிட்ட இரண்டாவது ‘கடி’  –   இந்த விவாதங்களுக்குப் பிறகு அந்தக் கைப் புத்தகம் விமானக் கம்பெனியால் வாபஸ் பெறப்பட்டது.  அப்போதைய அமைச்சர் எவ்வளவோ முயன்ற போதும், நமது எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை த் திரும்பப் பெற மறுத்தனர்.

வருஷங்கள் ஐம்பது ஆனாலும் எம்.பி.க்கள் மாறவில்லை – அவர்களது நோக்கிலும் முன்னேற்றங்களில்லை..

(செய்திகள் ஆதாரம் – தினமலர், சென்னை  — டைம் பத்திரிகை செப்.1960 – எனது கடந்த கால நினைவலைகள்)

(இது ஸ்ரீ சேதுராமனின் இடுகை)

இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தின் நூறாவது ஆண்டு விழா தமிழகமெங்கும் – ஏன் தமிழர்கள் இருக்கும் தேசங்களில் எல்லாம் – கொண்டாடப்படுகிறது.

Anna

1909ம் வருஷம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி, காஞ்சிவரத்தில், ஒரு எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு. அண்ணாதுரை.  பெற்றோர் திரு.நடராசன், பங்காரு அம்மாள் – அண்ணாதுரையை வளர்த்து ஆளாக்கியது அவரது சிற்றன்னை இராஜாமணி அம்மாள் (தொத்தா)

காஞ்சியிலேயே தன் ஆரம்ப, உயர் படிப்பை பச்சையப்பன் ஹைஸ்கூலில் முடித்தவர், தன் கல்லூரிப் படிப்பை, சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே தொடர்ந்தார்.  கல்லூரியில் படிக்கும்போதே, 1930ம் வருஷம் திருமதி. ராணி அம்மாளுடன் அவரது திருமணம் நிகழ்ந்தது.  கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் சட்டம் படிக்க, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், நிதி வசதியின்மை காரணமாக, சட்டப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.  1938ம் வருடம் நடந்த ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காக நான்கு மாதங்கள் சிறைவாசம் கிடைத்தது.

தமிழில் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் – அவரது முதல் சிறுகதை 1934ம் வருஷம் ஆனந்தவிகடனிலும் (கொக்கரக்கோ), முதல் குறு நாவல் “கோமளத்தின் குறும்பு” 1939 குடியரசு இதழிலும் வெளியாகின.  குடியரசு இதழிலேயே அவரது “வீங்கிய உதடு” என்ற புதினம், 1940ல் தொடர்கதையாக வந்தது.

அவர் எழுதிய முதல் நாடகம் ‘சந்திரோதயம்’ – அடுத்தது ‘சந்திர மோகன்’ அல்லது ‘சிவாஜி கண்ட இந்து இராஜ்ஜியம்’  – இந்த இரண்டாவது நாடகத்தில் அவரே “காக பட்டர்” என்ற வேஷத்தில் நடித்தவர்.  சிவாஜியாக நடிக்கவிருந்த எம்.ஜி.ஆர். கடைசி நிமிஷத்தில் மறுத்து விட்டதனால், டி.வி.நாராயணசாமியின் வேண்டுகோள்படி, வி.சி.கணேசன் சிவாஜி  பாத்திரமேற்று நடித்தார். பெரியார் அவர்களுக்கு கலை மீது அவ்வளவு ஆர்வம் கிடையாது, கலைதான் தமிழ்ச் சமுதாயத்தையே சீரழிக்கின்றது என்ற எண்ணம் அவருக்கு. அவர் இந்த நாடகத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, கணேசனைச் சிறப்பாக நடித்தாய் இனி நீ “சிவாஜி”தான் என்று பெயரிட்டார்.

தொடர்ந்து அண்ணா அவர்கள்  – ஓரிரவு, வேலைக்காரி, நீதி தேவன் மயக்கம், காதல் ஜோதி, நல்லதம்பி, சொர்க்கவாசல் முதலிய
நாடகங்களை எழுதினார். இவற்றுள் சில திரைப்படங்களாகவும் வந்தன.

1942ல் “திராவிட நாடு” ஆசிரியர் பதவியை ஏற்றவர், 1949, வருஷம் “மாலை மணி”யின் ஆசிரியரானார்.   இதே வருஷம், பெரியார்-மணியம்மை திருமணம் காரணமாக ஏற்பட்ட மன வேறுபாடுகளால், திராவிட முன்னேற்றக் கழகத்தை செப்டம்பர் 17ம் தேதியன்று தோற்றுவித்து முதல் பொதுச் செயலாளர் பதவியேற்றார். தி.மு.க. 1952ல் நடத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு, கட்சியைத் தீவிரமாக வளர்த்தார்.

1959ம் வருடம் நடந்த சென்னை மாநகரக் கார்ப்பரேஷன் தேர்தலில், தி.மு.க. வெற்றி பெற்று, மேயர் பதவியைப் பெற்றது.  வெற்றிகள் தொடர்ந்தன. 1967ம் வருடம், தி.க.வாலும், தி.மு.க.வாலும் “குல்லுக பட்டர்” என்று வர்ணிக்கப்பட்ட, ராஜாஜியின் காங்கிரஸ் எதிர்ப்பு கொள்கை காரணமாக அவ்வருடம் நடந்த மாநிலத் தேர்தலிலும், 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம்.  அன்று தமிழ் நாட்டின் ஆட்சியை இழந்த காங்கிரஸ் இன்று வரை, திரும்ப ஆட்சி அமைக்க முடியாமற் போனது!

1967ம் வருடம் மார்ச்சு 6ம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார் அண்ணா. மாநிலத்தின் பெயரைத் “தமிழ் நாடு” என்று பெயரிட்டதும், படியரிசித் திட்டம் கொணர்ந்ததும் இவரே.

அமெரிக்க அரசின் ‘லீடர்ஷிப் எக்ஸ்சேஞ்ச்” என்ற திட்டத்தின் படி, அண்ணா ஒரு அமெரிக்கப் பயணம் செய்ததும் இந்த வருஷம்தான். அவரது பயண ஏற்பாடுகளை சென்னையிலிருந்த TRANS WORLD AIRLINESதான் செய்து கொடுத்தது.  நானும், என் மேலாளர் திரு.கே.ஆர்.கிருஷ்ணஸ்வாமியும் அப்போது பல முறை அவரது காரியாலயத்தில் சந்தித்து, ரோம், பாரிஸ், வாஷிங்க்டன் முதலான இட்ங்களில் தங்குமாறு வரையறுத்துக் கொடுத்தோம். புகழ் பெற்ற யேல் பல்கலைக் கழகத்தின் Chubb Fellowship பெற்ற இந்தியர் அண்ணாதான் என்று நினைக்கிறேன். ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து, மே 12 வரை, இந்தப் பயணம் நீடித்தது. அமெரிக்காவிலிருந்து, திரும்பி வரும்போது, ஜப்பான், சிங்கப்பூர் வழியாக வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தனது உடல் நிலை காரணமாக, அண்ணா மறுபடியும் செப்டம்பர் மாதமே அமெரிக்கா செல்ல வேண்டியதாயிற்று.  சிகிச்சை முடிந்து நவம்பர் மாதம் இந்தியா திரும்பிய அண்ணா, கடைசியாகப் பங்கேற்ற பொது நிகழ்ச்சி 1969 பொங்கல் திரு நாளன்று, தியாகராய நகரில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு தான். அவருடைய உடல் நிலை மீண்டும் மோசமாகி ஃபிப்ரவரி 2ம் தேதி நள்ளிரவு (ஃபிப்ரவரி 3ம் தேதி 00:20) அண்ணா காலமானார்.   அடுத்த நாள் ஃபிப்.4 சென்னைப் பல்கலைக் கழகக் கட்டடத்திற்கு எதிரே அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.

பல லட்சம் மக்கள் பங்கேற்ற, இது வரை கண்டிராத, ஒரு பெரிய இறுதி ஊர்வலம் அன்று நடை பெற்றது.

(செய்தி ஆதாரம் – பேரறிஞர் அண்ணாவின் மக்களாட்சிச் சிந்தனைகள் – தமிழ்மண் பதிப்பகம் – சென்னை 1999– மற்றும் வலைத்தளச் செய்திகள்)

ஆர்வி: திரு சேதுராமன் பயண ஏற்பாடுகளை கவனிக்கும் travel agency ஒன்று நடத்தி வருகிறார் என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிய வந்தது. அவர்தான் அண்ணாவின் அமெரிக்க பயண ஏற்பாடுகளை கவனித்தார் என்பது இப்போதுதான் தெரிகிறது.

தொடர்புடைய பதிவுகள்:
ஓரிரவு (Oriravu)
ஓரிரவு பற்றி கல்கி

இக்கட்டு்ரை நண்பர் சேதுராமன் அவர்கள் எழுதியது.

நம் தமிழ் நாட்டிலுள்ள இரு கழகங்கள் போட்ட பிரச்சாரக் கூக்குரலில், 1946ம் வருடத்திலேயே “ஈழம் உள்பட்ட ஒரு புதிய தமிழகம்” என்று குரல் எழுப்பிய ஒரு தமிழரை எல்லோருமே மறந்து விட்டனர்.  ஆம், தீவிர காங்கிரஸ்காரராக இருந்து, பின்னர் தனிக்கட்சி தொடங்கிய திரு ம.பொ.சிவஞானம் தான் அவர்.

புதிய தமிழகம் என்ற தலைப்பில் எழுதப்பெற்ற கட்டுரை சிதறுண்டு கிடந்த தமிழ் வழங்கும் பிரதேசங்களையும், எல்லைகளையும் விரிவாக வரையறை செய்துள்ளது முதல் முயற்சியாகும்.  ‘முதல் முயற்சி’ என்று குறிப்பிட்டதன் காரணத்தை ம.பொ.சி.யின் பின் வரும் எழுத்துகளில் இருந்து அறிய முடிகின்றது “” இதனை யான் எழுதிய நாளிலே, தமிழ் மாகாணம் படைக்கவும், அதன் வடக்கு-தெற்கு எல்லைகளை மீட்கவும், சென்னையம்பதியைக் காக்கவும், வேறொரு அரசியல் தலைவரோ, அரசியல் கட்சிகளில் எதுவுமோ குரல் கொடுத்ததில்லை என்பதை யான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்”   –  கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பின் வருவன:

*** தமிழ் நாட்டின் நீண்ட கால இலக்கியங்களில் காணப்படும் வரலாறுகளின்படி, தமிழ் நாட்டின் வடக்கெல்லை திருப்பதி என்பது திருத்தத்திற்கு இடமில்லாத ஒரு தீர்ப்பாகவே கொள்ள வேண்டும்.   *****

*** பிரிட்டிஷ் காலனியாக விளங்கும் இலங்கையில் ஒரு பகுதி யாழ்ப்பாணம்.  ஆனால் இந்தச் சிறு தீவு தமிழ் நாட்டிற்கும், இலங்கைக்கும் மத்தியில் இருக்கின்றது.  இந்தத் தீவில் வாழ்வோர் அனைவரும் தமிழர்களே. யாழ்ப்பாணத்தைப் பற்றிய  வரலாறுகளைத் தமிழிலக்கியங்களில் படிப்போர் எவரும் அதைத் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகவே ஒப்புக்கொள்வர்.  எனவே யாழ்ப்பாணத்தை இலங்கையோடு விட்டு வைப்பதா, அல்லது தமிழ் நாட்டுடன் சேர்ப்பதா?  என்ற விஷயத்தில், அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் காலம் வந்து விட்டதாகவே நான் கருதுகிறேன். *****

1946ல் தெரிவிக்கப்பட்ட இக்கருத்துக்கள் குறித்து ம.பொ.சி. பின்னர் “எனது போராட்டம்” என்ற நூலில் பின் வருமாறு விளக்கமளித்துள்ளார்:

*** இலங்கையின் வட பகுதியும், இந்தியத் தமிழகத்தை அடுத்தாற்போலுள்ளதும், தமிழர் மிகுதியாக வாழ்வதுமான யாழ்ப்பாணத்தின் மீதும் உரிமை கொண்டாடியிருந்தேன்.  இலங்கையில் தமிழர் மிகுதியாக வாழும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளைப் பற்றி அப்போது நான் அறிந்திருக்கவில்லையாதலால், யாழ்ப்பாணத்தை மட்டுமே கோரியிருந்தேன்…  அந்நாளில், இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் ஆட்சியே நடைபெற்று வந்ததால், இந்த இரண்டு நாடுகளிலுள்ள மக்களுக்குக் குடியுரிமை ஒன்றாக இருந்தது..  அதாவது இந்தியாவிலிருந்து இலங்கை செல்லவும், இலங்கையிலிருந்து இந்தியா வரவும் “பாஸ்போர்ட்” “விசா” பெற வேண்டிய சங்கடங்கள் இருக்கவில்லை.  இந்தியாவில் வாழும் எனக்கு இலங்கை அயல் நாடாகத் தோன்றவில்லை -  ஆம், யாழ்ப்பாணத்தை அயல் நாடொன்றின் உட்பகுதியாக நான் கருதவில்லை..  அதனால், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பிரிட்டிஷார் வெளியேறவிருந்த தருணத்திலே, மொழி அடிப்படையில், இந்திய-இலங்கை எல்லைகளைத் திருத்தி அமைக்குமாறு கோருவது தவறென்று நான் கருதவில்லை.

இந்தியாவையும் இலங்கையையும் கடல் நீர் பிரித்து நிற்பதை நான் அப்போது அறியாமலில்லை.. அறிந்தும், நிலத் தொடர்பற்ற யாழ்ப்பாணத்தின் மீது உரிமை கொண்டாடக்காரணமிருந்தது.  அப்போது இந்தியாவில் முஸ்லிம்கள் மிகுதியாக வாழும் நிலங்கள் கொண்ட பாகிஸ்தானை முஸ்லிம் லீக் கோரி வந்தது.  வடமேற்கில் உள்ள பஞ்சாப்-சிந்து எல்லைப்புற மாநிலங்களும், அதற்குச் சுமார் ஆயிரம் கல் தொலைவிலுள்ள  வங்க மாநிலமும் இணைந்ததே முஸ்லிம் கோரிய “பாகிஸ்தான்”  — நிலத் தொடர்பற்ற – ஆயிரம் கல் இடைவெளியைக் கொண்ட இருவேறு பகுதிகளை இணைத்துப் பாகிஸ்தான் அமைக்கப் படலாமென்றால், ஒரு மனிதன் எளிதில் நீந்திக் கடக்கக் கூடிய அளவேயுள்ள கடல் பரப்பால் பிரிக்கப்படும் யாழ்ப்பாணத்தையும், இந்தியத் தமிழகத்தையும் பிணைத்துப் “புதிய தமிழகம்” படைப்பதில் தவறில்லையென்றே நான் கருதினேன்.  ஆனால், பிற்காலத்தில் யாழ்ப்பாணம் பற்றிய கோரிக்கையை நான் அடியோடு கைவிட்டு விட்டேன், ஆம் – பிரிட்டிஷார் வெளியேறிய பின்னர், இலங்கை முற்றிலும் அயல் நாடாகி விட்டதல்லவா?

(பெ.சு.மணி எழுதிய “தமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி.யின் தமிழ் முரசு” – மே 2000 – பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர் சென்னை 600004 — புத்தகத்தில் இருந்து திரட்டப்பட்டவை)

ரதி என்ற நண்பரோடு இணைய தளத்தில் சில சண்டைகள் போட்டிருக்கிறேன். ரதி புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர். புலிகளின் தீவிர ஆதரவாளர். அவரது வாழ்க்கை அனுபவங்களை பற்றி அவர் எதார்த்தமாக சொன்ன சில விஷயங்களை வைத்து பார்க்கும்போது அவரது அந்த தேர்வு புரிந்து கொள்ளக்கூடியதுதான். நானோ புலம் பெயர்ந்த தமிழன். ஒரு 25 வருஷங்களாக புலிகள், குறிப்பாக பிரபாகரன் ஃபாசிஸ்ட் என்று நினைப்பவன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதும், வேறு வேறு perspective-கள் இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தானே! ஆனால் எங்கள் இருவருக்கும் ஒரு விஷயத்தில் முழு உடன்பாடு இருக்கிறது – இப்போது இலங்கையில் நடப்பது genocide, இந்தியா இலங்கை ராணுவத்துக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது.

ஆனால் ரதி நான் மதிக்கும் இணைய நண்பர்களில் ஒருவர். இணைய தளத்தில் பதிவு எழுதுவதின் பெரிய பலனே ரதி, சேதுராமன், டோண்டு, சாரதா, நல்லதந்தி, சுபாஷ், முரளி, சூர்யா, அரை டிக்கெட், போன்ற பலரோடு ஏற்பட்ட பழக்கம்தான்.

காங்கிரஸ்தான் இலங்கை தமிழர்களை பொறுத்த வரை நல்ல சாய்ஸ் என்ற பதிவு ரதிக்கு உடன்பாடு இல்லாதது. அவரை நான் கேட்டிருந்தேன் – ஒரு இலங்கைத் தமிழர் என்ற முறையில் யார் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று நினைக்கிறீர்கள் என்று. அவர் அளித்த பதில் மிக அருமையாக இருந்தது. அதை இங்கே பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு ரதி!

//தேர்தலுக்கு பிறகு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

அரசியல், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என்ற கருத்தியல் எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான் உள்ளது என்பது என் கருத்து. அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும், வாக்காளர்களும் தொண்டர்களும் பகதர்களாக மட்டும் இருப்பதால் அரசியல்வாதிகள் அவர்களை பகடைக்காய்களாக வைத்து பரமபதம் ஆடுகிறார்கள். ஆட்சியில் உட்கார்ந்தவுடன் தங்கள் சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பக்தர்களை மறந்துவிடுகிறார்கள், அடுத்த தேர்தல் வரும்வரை. இதற்கு இந்தியாவும்/தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வோடும் கலந்துவிட்டது.

ஆனாலும், நான் எந்த இந்தியா/தமிழ்நாடு கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ அபிமானி கிடையாது. அது கூட எங்கள் ஈழப்பிரச்சனையை வைத்து இவர்கள் அரசியல் நடத்துவதால் தான். அதுபோக, தமிழ்நாட்டு தமிழர்களுக்காவது உண்மையாக இருக்கிறார்களா? அதுவுமில்லை.

தேசிய அளவில் இந்தியாவில் எந்த கட்சியாவது ஒட்டு மொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா?பெரும்பாலும் சாதி அல்லது வேறு ஏதோ ஒரு விடயத்தை ஒவ்வொரு மாநிலமும் அதன் கட்சியும் முன்னிலைப்படுத்துகின்றன. மாநில அளவில் கட்சிக்களுக்கிடையில் குத்துச்சண்டை போடாத குறையாக ஆட்சி நடத்துகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியர்களின் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்த எந்த கட்சியும் தேசிய அளவில் கிடையாது. இதில் நான்/நாங்கள் எந்த கட்சியை நம்புவது. அது தவிர, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்துக்காவது ஈழத்தமிழனில் அக்கறையுள்ளதா? தேசிய அளவில் எந்த கட்சியாவது ஈழத்தமிழன் பிரச்சனையை பேசுகிறதா?

ஆனால், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்தால் அல்லது அதற்கு எந்த கட்சியாவது ஆதரவளித்தால் அதன் பிறகு பார்க்கலாம். இன்னும் இந்திராவின் காலத்தில் உருவாக்கிய வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படையிலேயே ஈழப்பிரச்சனையை அணுகினால் எந்த கட்சியையும் நாங்கள் எப்படி நம்புவது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் விடுதலையை நாங்கள் தான் போராடிப் பெறவேண்டும் என்ற நிலைதான் எங்களுக்கு. இந்தியா எங்களுக்கு விடுதலையை பெற்றுதரும் என்று நம்ப ஈழத்தமிழன் முட்டாளும் அல்ல. இருந்தாலும், ஈழத்தமிழனின் இன‌ப்படுகொலைக்கு துணை போகாத, எங்கள் ஈழவிடுதலையை தங்கள் தேசிய நலனுக்காக நசுக்க நினைக்காத எந்த கட்சியும் எனக்கு சம்மதம். அப்படி ஒர் தேசிய அளவிலான கட்சி இந்தியாவில் உள்ளதா?

ரதி சொல்வது மாதிரி இந்திரா காலத்திலிருந்து நமது அணுகுமுறை மாறத்தான்வில்லை. இந்தியாவின் நலனுக்காக ஈழத் தமிழரை ஒரு pawn ஆக கருதும் மனநிலைதான் உள்ளது. இந்திரா போராளிகளை வைத்து இந்தியாவை தெற்கு ஆசிய வல்லரசாக ஆக்க நினைத்தார். ராஜீவ் அதை தொடர்ந்தார் – ஆனால் அகலக் கால் வைத்துவிட்டார். புலிகளின் சம்மதம் இல்லாமல் அவர் போட்ட ஒப்பந்தம் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தியது. (அதற்கு காரணம் புலிகளின் ஃபாசிஸ்ட் மனநிலை, புலிகளை அற்பமாக ராஜீவ் நினைத்தது) ராஜீவ் மரணத்துக்கு பிறகோ புலிகளை அடக்க எத்தனை தமிழர் செத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலை இருக்கிறது.

ரதியோடு எனக்கு எத்தனையோ கருத்து வேறுபாடு இருந்தபோதும் இந்த கருத்தை நான் மனப்பூர்வமாக ஏற்கிறேன்.

நினைவு தெரிந்த நாளாக சரியோ தப்போ எந்த குட்டையில் ஊறிய மட்டை பெட்டர் என்று ஒரு திடமான கருத்து இருந்தது. இந்த தேர்தல் மாதிரி மோசமான மன நிலையில் எப்போதும் இருந்ததில்லை. அதற்கு காரணம் இலங்கைத் தமிழர்கள்தான்.

இலங்கைத் தமிழர்கள் இன்று செத்துக் கொண்டிருக்காவிட்டால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று தைரியமாக சொல்வேன் – காங்கிரஸ் நல்லவர்கள் என்பதற்காக இல்லை, பா.ஜ.க. முஸ்லிம்களையும் ஹிந்துக்களையும் பிரித்து வைப்பதை ஒரு strategy ஆக கொண்டிருப்பதால்.

கலைஞரும் ஜெவும் மற்ற குட்டித் தலைவர்களான சிதம்பரமும் ராமதாசும் விஜயகாந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாக கையை விரித்துவிட்டால் கூட பரவாயில்லை. இவர்களது போலித்தனம் மகா வெறுப்பை கிளப்புகிறது. என்ன மாதிரியான தலைவர்கள் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார்கள்? ஜெ துணிச்சலாக திமிராக மனதில் பட்டதை சொல்வார் என்று எனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தது. தேர்தல் வந்தவுடன் உண்ணாவிரதமாம். அயோக்கியத்தனம் மட்டுமே உள்ள தலைவர்கள்.

ஆனால் யாராவது ஆட்சிக்கு வரத்தான் போகிறார்கள். யார் வந்தால் இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நப்பாசையாவது மிஞ்சும்?

அத்வானி இல்லை. பா.ஜ.க. இந்திய இறையாண்மையை காங்கிரசை விட சென்சிடிவாக பார்க்கும் – அவர்களுக்கு இலங்கையின் இறையாண்மை பலவீனப்படுவது நல்ல விஷயம் இல்லை.

கம்யூனிஸ்டுகள்? இல்லை. அவர்களுக்கு வழிகாட்டியான சீனா எப்போதுமே உயிர்களைப் பற்றி அவ்வளவாக கவலைப்படுவதில்லை. அவர்கள் ஆதரவு ராஜபக்செவுக்குத்தான்.

மாயாவதி போன்ற யாராவதா? இலங்கையை பற்றி என்ன தெரியும் இவர்களுக்கு?

காங்கிரசா? இது நப்பாசைதான் – கலைஞர் வாயை திறக்க மாட்டார்தான், ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு புரியாமல் போய்விடுமா? என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா? தமிழ் நாட்டில் பேருக்காவது கட்சி இருக்கும் ஒரே “தேசியக் கட்சி” இதுதான். காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்குப் பின் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று எழுத கை கூசுகிறது. நம்பிக்கை இல்லைதான். ஆனால் மற்ற பேர் மீது 0% நம்பிக்கைதான் இருக்கிறது. இவர்கள் மீது ஒன்றிரண்டு சதவிகிதம் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சிதம்பரமும், மணிஷங்கர் ஐயரும், இளங்கோவனும், ஜி.கே. வாசனும் அடி முட்டாள்களா? ப்ராக்டிகலாக யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு உள்ள மாற்று இலங்கை தமிழர்களின் நிலையை இன்னும் மோசமாக்குவார்கள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என்ன கொடுமைடா சாமி! போயும் போயும் இவர்கள்தான் இருப்பதிலே நல்ல சாய்ஸ் என்றால் என்னத்தை செய்வது!

இந்திய பிரச்சினைகள் மட்டுமே என்றால் எனக்கு காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட நாள் முதல் நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். அன்று உருவான strategy-ஐ பா.ஜ.க. மாற்றிக் கொள்கிற மாதிரி தெரியவில்லை. மாயாவதி போன்றவர்களை விட காங்கிரஸ் பெட்டர் என்பது என் திடமான அபிப்ராயம். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் கொஞ்சம் குறையலாம், ஆனால் அவர்கள் கூட்டாளிகள் அதை ஈடு செய்துவிடுவார்கள். மேலும் அவர்கள் கம்யூநிச்டுகளா, காபிடலிஸ்டுகளா என்பதே இப்போதெல்லாம் குழப்பமாக இருக்கிறது. (நந்திக்ராமத்தை பாருங்கள்!)

ரொம்ப நாளாக சேதுராமன் சார் தயவில் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு நாள் நானே எழுதுகிறேன்.

இந்த தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு?

தி.மு.க. கூட்டணி – கட்சியை உன் குடும்பம் போல் நினைக்க வேண்டும் என்று யாரோ சொன்னதை கலைஞர் ஒருவர்தான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார். அழகிரிக்கு எம்.பி. சீட் கொடுத்ததற்கு ஒரே காரணம்தான் – நாளைக்கு நாம் ஆட்சியில் இல்லாவிட்டால் உனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பது. மோசமான ஆட்சி. மாநில அளவு சமாச்சாரங்கள் இந்த தேர்தலுக்கு நேரடி சம்பந்தம் உள்ளவை இல்லை என்றாலும், மின் வெட்டு, சட்டக் கல்லூரி விவகாரம், சு. சாமி முட்டையடியை பெரிதாக ஊதிவிட்டது, இலங்கைப் பிரச்சினையில் காட்டும் hypocrisy, இவை எல்லாம் கலைஞருக்கு ஆட்சியில் கவனம் இல்லை, அதே நேரத்தில் பதவியை விடவும் மனமில்லை என்றுதான் காட்டுகின்றன. தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவது நமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்வது போல.

அ.தி.மு.க. கூட்டணி – ஜெ மாநில அளவில் இருந்த போதே போட்ட ஆட்டம் தாங்க முடிந்ததில்லை. இவர் மத்திய அளவில் போய்விட்டால் சசிகலா கும்பல் இந்தியா பூராவும் சொத்து வாங்கும். ஜெவின் துணிவு மிக நல்ல விஷயம் – ஆனால் துணிவுக்கும் திமிருக்கும் உள்ள எல்லையை அவர் எப்போதோ தாண்டிவிட்டார். இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவது நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்வது போல.

விஜயகாந்த் – விஜயகாந்த் நல்ல மாற்றாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே போகிறது. இவர் மத்தியில் போய் என்னத்தை கிழிக்கப் போகிறார்? ஏதோ ஒரு கூட்டணிக்கு ஓட்டு போட்டுத்தான் ஆக வேண்டும் என்று நினைத்தால் இவருக்கு போடலாம்.

பா.ஜ.க. கூட்டணி – மசூதி என்று உடைக்கப்பட்டதோ அன்றிலிருந்தே நான் பா.ஜ.க. எதிர்ப்பாளன். ஓட்டுகளுக்காக இவர்கள் மூட்டிவிட்ட தீ மும்பை, கோயம்புத்தூர், கோத்ரா, குஜராத் என்று பல இடங்களில் எரிந்து கொண்டே இருக்கிறது. காங்கிரசை நல்லவர்கள் ஆக்குவது இவர்கள்தான். (இவர்களை நல்லவர்கள் ஆக்குவதும் காங்கிரஸ்தான்)

49O: எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு இதைப் பற்றி முழுதும் தெரியாது. ஒரு தொகுதியில் 49O நிறைய ஓட்டுகள் பெற்றால் அந்த தொகுதிக்கு எம்.பி. இல்லையா? இல்லை அடுத்த இடத்தில் இருப்பவர் எம்.பி.யா?

பிறகு என்னதான் செய்வது?

இருக்கிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலைதான். யாருக்கு ஓட்டு போடலாம் என்பதை விட யாருக்கு ஓட்டு போடக் கூடாது என்று தீர்மானிப்பதுதான் சுலபம்.

1. தி.மு.க.வுக்கு கூடாது. (கூட்டணிக்கு இல்லை, தி.மு.க. கட்சிக்கு) தி.மு.க.வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் கலைஞர் குடும்ப மாஃபியாவைதாந் வலிமைப்படுத்துகின்றன.
2. அ.தி.மு.க.வுக்கு கூடாது. (கூட்டணிக்கு இல்லை, அ.தி.மு.க. கட்சிக்கு). அ.தி.மு.க.வுக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் சசிகலா குடும்ப மாஃபியாவை வலிமைப்படுத்துகின்றணன்.
3. பா.ம.க.வுக்கு கூடாது. இவர்களுக்கு போடும் ஓட்டு சந்தர்ப்ப வாத அரசியலுக்கு போடும் ஓட்டு.
4. பா.ஜ.க.வுக்கு கூடாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடி போன்றவர்களின் வீச்சு இன்னும் அதிகரிக்கும். நரேந்திர மோடி குஜராத்துக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு அவர்தான் பெரும் பொறுப்பு. அப்படிப்பட்டவருக்கு கொடுக்கும் ஆதரவு மற்றவர்களையும் சில குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மீது வெறுப்பை பரப்ப செய்யும்.

அதனால்:
1. நல்ல வேட்பாளர், நல்ல மனிதர், ஊழல் செய்ய மாட்டார், வந்தால் நல்லது செய்ய முயற்சிப்பார் என்று தெரிபவர்களுக்கு போடுங்கள். – தென் சென்னையில் சரத் பாபு.
2. அது முடியாவிட்டால், மோசமில்லை, அதே நேரத்தில் தொகுதிக்கு நல்லது செய்யும் சக்தி உள்ளவர் என்று தெரிபவர்களுக்கு போடுங்கள் – ப. சிதம்பரம், தயாநிதி மாறன் மாதிரி. (ஆனால் அழகிரிக்கு போடாதீர்கள் – போட்டால் ரவுடியிசம் அதிகரிக்கும்.)
3. அதுவும் முடியாவிட்டால், இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்கக் கூடிய வைக்கோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு போடுங்கள். அவர்கள் கொடுக்கும் குரல் எனக்கு முழுதும் ஏற்புடையதல்ல. காம்ப்ரமைஸ்கள் பண்ணிக் கொண்டவர்கள்தான். ஆனால் அவர்கள் நூறு சொன்னால்தான் ஒன்றாவது நடக்கும்.
4. அதுவும் முடியாவிட்டால், இருக்கிற கொள்ளியில் காங்கிரஸ்தான் குறைவான மோசமான கொள்ளி. அதனால் காங்கிரஸ் போட்டி இட்டால் காங்கிரசுக்கு போடுங்கள். (பா.ஜ.க.வும் மாயாவதியும், கம்யூனிஸ்டுகளும் இலங்கைக்கு ராணுவ உதவியை நிறுத்த மாட்டார்கள், காங்கிரசுக்கு மட்டுமே கொஞ்சமாவது நிறுத்த சான்ஸ் இருக்கிறது என்பது என் நினைப்பு.)
5. அதுவும் முடியாவிட்டால், விஜயகாந்துக்கு ஓட்டு போடுங்கள். அவர் ஜெயித்தால் காங்கிரசுக்குத்தான் ஆதரவளிப்பார். தி.மு.க., அ.தி.மு.கவுக்கு ஒரு மாற்று வளர்வது நல்லது.
6. அதுவும் முடியாவிட்டால், 49O. வேறு என்ன செய்து தொலைப்பது?

இது ஒரு மீள்பதிவு – தேர்தல் நெருங்கும் காலத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனக்கு ஒரு 22 வயது என்று வைத்துக்கொள்வோம். (அட கனவாவது காண்போமே!) எனக்கு அரசியலில் ஈடுபாடு இருக்கிறது என்றும் நான் ஒரூ கட்சியில் சேர விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கட்சியிலும் சேருவதற்கான காரணங்கள்:

திமுக: எனக்கு கலைஞரின் தமிழ் பிடித்திருக்க வேண்டும். இல்லை என்றால் என் அப்பா தி.மு.க.வில் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் கலைஞரின் குடும்பம் உயர நான் எதற்கு உழைக்க வேண்டும்?
அதிமுக: எனக்கு சசிகலாவின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும்.
பாமக: நான் வன்னியராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்நியர்தான்.
விடுதலை சிறுத்தைகள்: நான் தலித்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சலித்துக் கொள்வார்கள்.
சரத்குமார் கட்சி: நான் நாடாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சரத் என்னை நாடார், அதாவது நாட மாட்டார். (ராடான் டிவியின் பெயர் மர்மம் இப்போதுதான் புரிகிறது)
தேதிமுக: தமிழில் எனக்கு பிடித்த ஒரே நடிகர் கேப்டனாக இருக்கவேண்டும்.
பாஜக: நான் சோவாக இருக்கவேண்டும்.
காங்கிரஸ்: எனக்கு பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்.
மதிமுக: எனக்கு பைத்தியம் முற்றி இருக்க வேண்டும்.
சுப்ரமணிய சாமி கட்சி: எனக்கு பைத்தியம் குணமாக வாய்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும்.
கார்த்திக் கட்சி: அஹம் பிரம்மாஸ்மி!
ரஜினிகாந்த் ஆதரவாளர்: வரும்ம்ம், ஆனால் வராது என்று ஒரு உறுதியோடு இருக்க வேண்டும்.

இதில் எனக்கு எந்த தகுதியுமே இல்லாதது வருத்தம்தான். ஏதாவது ஒன்றாவது இருந்திருந்தால் 2011இல் நான்தான் முதலமைச்சர்!

ஜீவா - சுந்தர ராமசாமி

ஜீவா - சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி எத்தனையோ புத்தகங்கள் எழுதியிருக்கும் பொழுது தோழர் ஜீவானந்தத்தை பற்றி எழுதிய “நினைவோடை” புத்தகத்தை இங்கே குறிப்பிட்டிருக்கிறானே என நீங்கள் சிந்திக்கலாம். இவன் என்ன கம்யூனிஸ்ட்டா எனறு கூட நினைக்கலாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த புத்தகம் தான் நான் ஆர்.வி.யிடமிருந்து தள்ளிக் கொண்டு வந்தவற்றிலேயே சிறிய புத்தகம். 78 பக்கங்கள். இரண்டு வாரம் ஒன்றும் அதிகம் படிக்க முடியாத அளவிற்கு வேலை. இந்த வார இறுதியில் எதாவது ஒரு புத்தகத்தை முடித்த கணக்காக இருக்கட்டுமே என்று இந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். ஒரு புதிய எழுத்தாளர் (எனக்கு) அறிமுகம் ஆன கணக்காகவும் இருக்கும். முழு மூச்சாக இதில் படிப்பதற்கு த்ரில் ஒன்றும் இல்லை. சிறிது சிறிதாக படித்து முடித்துவிட்டேன்.

ஜீவாவின் ஆளுமையை பற்றி தெரிந்து கொண்டேன். அவரை பற்றி எனக்கு தெரியாது. சரித்திரத்தில் அவருடைய முக்கியத்துவம் என்ன என்றும் தெரியாது. ஆனால் சில நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் நான் படித்த சுந்தர ராமசாமியின் (அவர் எழுதியது அல்ல, நேர்காணல் போன்ற ஒரு ஸ்டைலில் அவர் கூறியது) முதல் புத்தகம் என்பதால் அவரைப் பற்றியும் ஒரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.

சுந்தர ராமசாமி, ஜீவாவிடமிருந்து கற்று கொண்டதை நான் சுந்தர ராமசாமியிடம் கற்று கொண்டேன். பல நல்ல விஷயங்கள் கூறியிருக்கிறார். ஒன்று இது: ஜீவாவும், சுந்தர ராமசாமியும் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு ட்ரெயினில் போய்க்கொண்டிருந்த பொழுது சில வயதான விவசாயிகள் எதிர் வரிசையில்  அமர்ந்திருந்தனர். அவர்களிடம் நமக்கு பேச என்ன இருக்கப்போகிறது என்று அலட்சியம் ஏற்படும் நமக்கு. சுந்தர ராமசாமிக்கும் கிட்டத்தட்ட அப்படிதான் தோன்றியதாம். ஆனால் ஜீவா பாமரனிடம்கூட தெரிந்துகொள்வதற்கு ஏதாவது ஒன்று இருக்கும் என்னும் மனப்போக்கு கொண்டவர். அதனால் அவர்களிடம் பேச்சுக் கொடுத்திருக்கிறார். ஒரு விவசாயி கூறியதன் சுருக்கம் இது: நாம் ரயிலின் இரண்டு பக்கங்களிலும் வெற்று நிலத்தைப் பார்க்கிறோம். சென்னை வரை இது போல் தானிருக்கிறது. இதில் நிலங்களை தரிசாக போட்டிருக்காமல் ஏதாவது பயிர் செய்யலாம். ஏதாவது ஒரு பயிர் இங்கே நிச்சயமாக வளரும். தரிசு நிலம் என்று ஒன்றுமே கிடையாது. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மரத்தை (தண்ணீர் தேவைப்படாத – அப்படியும் மரங்கள் இருப்பதாக கூறுகிறார்) வளர்த்தால் ஏழைகளுக்கு இலவசமாகவே எரிபொருள்(விறகு) கொடுக்கமுடியும்.

ஜீவாவும், சுந்தர ராமசாமியும் பிரமித்துப் போய்விட்டார்களாம். பாமரரிடமும் கற்றுகொள்ள வேண்டும் என்று ஜீவா நினைத்தது சரிதானே? இதன் நுணுக்கத்தை அறிந்து கொண்டு, அதன் படி நடந்தால் நமக்கு நம் ஆளுமையை செம்மைபடுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

ஒரு தலைவராக இருப்பதனால் எந்தத் தவறும் செய்யக்கூடாது என்று நாம் எதிர்பார்ப்பது அறியாமை. தலைவரும் ஒரு மனிதர் தானே. தலைவர்கள் எந்தத் தவற்றை செய்யக்கூடாது என்பதில் வேண்டுமானால் மக்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஜீவா விஷயத்தில் தவறுகளை பார்த்த சுந்தர ராமசாமி இதைத் தான் வலியுறுத்துகிறார். அது போலவே கட்சி என்றால் தவறுகள், கொள்கை காம்பிரமைஸ் இருக்காது, இருக்கக்கூடாது என்று நினைப்பது நடைமுறைக்கு சாத்தியமான கருத்து அல்ல என்றும் கருதுகிறார்.

நான் பல வருடங்களுக்கு முன்னர் நர் பகதூர் பண்டாரி என்ற முதலமைச்சரின் போக்கு பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். (சிக்கிமின் முன்னாள் முதலமைச்சர்). மக்களுக்கு அவருடைய போக்கு (நிறைய பெண்கள் தொடர்பு) தெரிந்தும் அவர் ஒரு தேர்தலில் எல்லா தொகுதிகளையும் (குறிப்பாக பெண்கள் ஒட்டுகளை) கைப்பற்றினார். இதிலிருந்து தெரிவதென்ன என்றால் எவரும் அவருடையா சொந்த நடத்தை பற்றி கவலையுறவில்லை. ஆனால் இன்று அவர் இன்னொறு வழக்கில் கைதாகி (4 லட்ச ரூபாய் கையூட்டு வாங்கியதற்க்காக) சிறைத் தண்டனை அனுபவிக்கிறார். பொது வாழ்க்கையில் ஈடுபடும் தலைவர்கள் பல தவறுகள் செய்யக்கூடும். நாம் எதைப் பற்றி கவலைப்பட வேண்டுமோ அதைப் பற்றி மட்டுமே கவலை பட வேண்டும். இதைவிட்டு விட்டு எதிர் கட்சிகளும், போட்டிக்கட்சிகளும் குழப்புவதற்கு செவிசாய்க்காமல், பகுத்தறிவு என்பதை சிறிதாவது உபயோகப்படுத்தி முடிவெடுக்கவேண்டும். அதில்லாமல் எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவுக்கும் கனக்‌ஷன் இருக்கிறதாமே, அதனால் கருணாநிதிக்கு ஓட்டு போடலாம், வாஜ்பாயி மது அருந்துவாராமே அதனால் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவோம் என்ற கும்பல் தான் அதிகமாக இருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமில்லை. அர்னால்ட் ஷ்வாஸ்னெக்கர் ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ என்ற ஒரே காரணத்தினால் (எந்த முன் அனுபவமுமின்றி) மட்டுமே அவர் குடியரசு கட்சியின் சார்பாக, ஜனநாயக கட்சியின் கோட்டையான் கலிபோர்னியா மாகானத்தின் ஆளுனராக இருக்கிறார்.

சுந்தர ராமசாமி மேலும் கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களின் குறுகிய கண்ணோட்டங்களை பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் நான் படித்ததில்லை. குறிப்பிட்ட வாசக வட்டத்தை அடைவதற்காக ”காலச்சுவடு பதிப்பகம்” வெளியிட்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாருமே கிழவர்கள்தான். காந்திக்கு கிட்டத்தட்ட 80, ராஜாஜி, படேல் எழுபதுகளில், நேரு, ஆசாத் கிட்டத்தட்ட அறுபது. நேதாஜி, ஜின்னா இல்லை. காந்தி மறைந்த பின் நேருவுக்கு ஈடான தலைவர்கள் படேல், ராஜாஜி, ஆசாத் மட்டுமே. படேலுக்கு பாகிஸ்தான், முஸ்லீம் லீக் ஆகியவற்றின் மீது கசப்பு இருந்தது. அவருக்கு முஸ்லிம்கள் மீதே கசப்பு இருந்ததோ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.

நேரு இந்தியா சோஷலிச பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பினார். படேல், ராஜாஜி போன்றவர்கள் காபிடலிஸ்ட்கள். நேருவுக்கு அவர்கள் இருவரும் மாற்று கருத்துகளை தயக்கம் இன்றி தெரிவித்தார்கள். நேருவின் லட்சியவாதம், படேலின் practicalness இரண்டும் சேர்ந்தது ஒரு நல்ல காம்பினேஷன். இந்த காலத்திலும் அவர்களும் தவறு செய்தார்கள்தான் – நேரு காஷ்மீர் விஷயத்தில் அனாவசியமாக குழப்பினார். அவர் திபெத்தை பற்றி கூக்குரல் இட்டிருக்கவேண்டும். படேல் கம்யூனிஸ்ட்களை ஹைதராபாத் விஷயத்தில் பயன்படுத்திக்கொண்டார். ஹைதராபாத் கைக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடினார்.

படேல் மறைந்ததும் ராஜாஜி அந்த இடத்தில் அமர்ந்தார். படேல் நேருவுக்குள் இருந்த போட்டி ராஜாஜி நேருவுக்குள் இல்லை. நேரு ராஜாஜியின் புத்தி கூர்மையை பெரிதும் மதித்தார். ராஜாஜியும் நேருவிடம் உரிமையுடன் மறுத்து பேசக்கூடியவர். அவர்கள் காம்பினேஷனும் நன்றாக செயல்பட்டிருக்கும். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர் அன்றைய மெட்ராஸ் மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தது துரதிருஷ்டமே. அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் என்றால் காங்கிரசாருக்கு பயம்தான். தெலிங்கானா புரட்சிக்கு பிறகு அது தவறு என்றும் சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட்கள் பயத்தால்தான் நேரு ராஜாஜியை மெட்ராசுக்கு முதலமைச்சராக போக சொன்னார்.

அவர் முதலமைச்சரான விதமும் சரியில்லை. முதலில் மேலவைக்கு நியமன உறுப்பினர் ஆகி முதலமைச்சராக ஆனார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்கு இருந்த எதிர்ப்பு அவருக்கு அச்சம் தந்ததா? நேருவின் வார்த்தையை மீறி காமராஜ் அவருக்கு விரோதமாக தேர்தலில் செயல்பட்டிருக்கமாட்டார். ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள் அவரை தேர்தலில் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்பட்டாரா? தெரியவில்லை.

முதலமைச்சராக நன்றாகவே செயல்பட்டார். நாட்டில் பஞ்சம் இருந்த சமயம் ரேஷனை ஒழிக்க தைரியம் வேண்டும். அவர் அப்படி செய்தது பதுக்கி இருந்த தானியங்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. போலீஸ் ஸ்ட்ரைக்கை அருமையாக கையாண்டு அடக்கினார். நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். (ம.பொ.சி. இதை பற்றி பேசுகிறார்) ஆனால் அவர் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணவிரதத்தை சரியாக கையாளவில்லை. ஸ்ரீராமுலுவின் இறப்பை தடுக்க அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

அவரது “குலக் கல்வி” திட்டம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது. மாணவர்களுக்கு பகுதி நேரக் கல்வி, மிச்ச நேரம் அவர்கள் பெற்றோரின் விருப்பப்படி என்பதுதான் அந்த திட்டம். பெற்றோரின் விருப்பப்படி என்றால் கிராமப்புற குழந்தைகள் அப்பாவின் தச்சுத்தொழிலிலோ, மீன் பிடிப்பதிலோ, வேறு எதிலோதான் உதவி செய்திருப்பார்கள். பிராமணர்களின் குழந்தைகள் எந்த தொழிலையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நிறைய மாணவர்கள் படித்திருக்கலாம். இதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எழுபதுகளிலேயே என் நண்பன் தனுஷ் மாடு மேய்த்தவன். பள்ளிக்கு வரமாட்டான். மாலை நேரம் எங்களுடன் ஃபுட்பால் ஆட மட்டும் வருவான். மூன்று மணி நேரம்தான் பள்ளி என்றால் வந்திருக்கலாம். ஆனால் ஏழை மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க மதிய உணவு இதை விட நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அவன் சாப்பாடு வரும் நாட்களில் காலையில் வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் போய்விடுவான். எல்லா நாட்களிலும் சாப்பாடு வராது என்று நினைவு. இப்போது யோசித்துப் பார்த்தால் உணவு ஏன் எல்லா நாட்களிலும் வரவில்லை என்று தெரியவில்லை.

ஆனால் ராஜாஜி கிராமப்புறங்களில் ஆறாயிரம் பள்ளிகளை மூடிவிட்டு பிறகு கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்க இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்தக் கால கட்டங்களில் பள்ளிகளை மூடுவது என்பது பெரும் தவறு. டோண்டு இப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அவரது ஆதாரம் கல்கி பத்திரிகைதான் – கல்கி அப்போதெல்லாம் உயிருடன் இருந்தார். அவர் ராஜாஜியின் கண்மூடித்தனமான ஆதரவாளர். அவர் நடுநிலைமையுடன் இதை பற்றி எழுதி இருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்தான்.

இதை பற்றி மேலும் விவரமாக படிக்க டோண்டுவின் பதிவு இங்கே

இந்த திட்டமும், காமராஜின் எதிர்ப்பும் அவரது முதலமைச்சர் பதிவுக்கு முடிவு தந்தன. அதற்கு பிறகு அவர் ஒரு பதவியும் ஏற்கவில்லை.

காமராஜின் மதிய உணவு திட்டம் ராஜாஜியின் இந்த “குலக் கல்வி” திட்டத்தை விட சிறந்தது. காமராஜ் கல்வி தருவதை அரசின் கடமையாக கருதி இருக்க வேண்டும். ராஜாஜி இதையும் எப்படி efficient ஆக நடத்துவது என்பதை தனது top priority ஆக கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் இதை “குலக் கல்வி” என்று திராவிட இயக்கங்கள் சித்தரித்தது தவறு. இது hindsight. இன்று சொல்வது சுலபம். அன்று அரசு வேலைகளில் பிராமண ஆதிக்கம் அதிகம். பல ஆண்டு காலங்களாக பிராமணர் அல்லாதவர்கள் அரசு வேலைகளை பெறாததை கண்டு வந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்று இப்படி தோன்றி இருக்காவிட்டால்தான் ஆச்சரியம். அவர்கள் இதை தச்சன் பிள்ளைகள் தச்சனாகவே இருக்க செய்யும் சதி என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. காமராஜ் போன்றவர்களும் பெரியவரை கழற்றி விட இதுதான் சான்ஸ் என்று நினைத்திருப்பார்கள். காமராஜும் இது ஜாதிகளை perpetuate செய்யும் “குலக் கல்வி” என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியும் இதை விளக்க பெரிதாக முயற்சி செய்திருக்க மாட்டார். முஹமது பின் துக்ளக் படத்தில் ராஜாஜி போன்று வரும் ஒருவர் “உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்கு தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்று மக்களிடம் சொல்வார். ராஜாஜியின் பலவீனம் இதுதான் என்று நினைக்கிறேன்.

1955 ஆவடி காங்கிரஸில் சோஷலிசம்தான் தனது பாதை என்று காங்கிரஸ் அறிவித்தது. அந்த கால கட்டத்தில் சோஷலிசம்தான் சரியான பாதை என்றுதான் அநேகம் பேர் நினைத்தார்கள். ராஜாஜி காங்கிரசிலிருந்தும் நேருவிடமிருந்தும் மெதுவாக விலக ஆரம்பித்ததும் இப்போதுதான்.

இந்த கால கட்டத்தில் லைசன்ஸ் கோட்டா பெர்மிட் ராஜ் என்று சொல்ல தைரியம் வேண்டும். இன்று இது சரியாக படலாம் – ஆனால் அன்று பணக்காரர்கள் அயோக்கியர்களாகத்தான் படங்களிலும் கதைகளிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு எம்ஜிஆரும் சிவாஜியும் “நீ பணக்காரன், உன்னிடம் பாசம் கிடையாது” என்றுதான் வசனம் பேசுவார்கள். அரசாங்கம் பணக்காரர்களையும், தொழிலதிபர்களையும், நில சுவாந்தார்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிடுவார்கள் என்று பரவலாக நினைத்த காலம் அது. அவர்களை கட்டுப்படுத்தத்தான் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் எல்லாமே. அப்போது இது தவறு என்று சிந்திக்க அறிவு கூர்மை, தான் நினைத்ததை சொல்லும் நேர்மை எல்லாம் வேண்டும். இது ராஜாஜிக்கு இருந்தது. மினு மசானி, ரங்கா போன்றவர்களுடன் சேர்ந்து அவர் சுதந்திரா கட்சியை உருவாக்கினார். அது காங்கிரசுக்கும், சோஷலிசத்துக்கும் நல்ல மாற்றாக உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.

கட்சி ஆரம்பித்து அவர் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார். முத்துராமலிங்கத்தேவருடன் கூட்டு, தி.மு.க.வுடன் கூட்டு எல்லாம் அப்படித்தான். என் பெரியப்பா சொல்லுவார் – அவர் மயிலை மாங்கொல்லையில் “நான் என் பூணூலை பிடித்துக்கொண்டு சொல்கிறேன், நீங்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேசினாராம். அவர் தன்னை பிராமண ஜாதியின் தலைவராக குறுக்கிக்கொண்ட செயலாகத்தான் இதை நான் காண்கிறேன். அவர் எப்படி ஒரு ஜாதிக்கு appeal செய்தார்? காங்கிரசை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

அவருடைய மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பி. ஆக இருந்தார் போலிருக்கிறது. எனக்கு சி.ஆர். நரசிம்மனை பற்றி ஒன்றுமே தெரியாது. இது nepotismஆ, இல்லையா என்று டோண்டு போன்று தெரிந்தவர்கள் சொல்லலாம். டோண்டு சி.ஆர். நரசிம்மன் திறமை வாய்ந்தவர் என்றும் ராஜாஜி தன் குடும்பத்தவருக்கு உதவி செய்யாத விஷயம் மிகவும் notorious என்றும், இதில் எந்த விதமான nepotismஉம் இல்லை என்றும் சொல்கிறார்.

அவருடைய வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும் அருமையான அறிமுக புத்தகங்கள். சரளமான நடை. ராமனின் தவறுகளுக்கும் கிருஷ்ணனின் தவறுகளுக்கும் எந்த சப்பைக்கட்டும் கிடையாது. (வில்லிபுத்தூரார் பாரதத்தை படித்து பாருங்கள், எவ்வளவு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன?) ஆனால் இந்த புத்தகங்களுக்காக அவர் சாகித்ய அகாடெமி பரிசை வாங்கிக்கொண்டது பெரும் தவறு. அது வியாசருக்கும், வால்மீகிக்கும் சொந்தமானது. அதே போல் காங்கிரஸில் இருந்த போதே அவருக்கு பாரத ரத்னா பரிசு விருது வழங்கப்பட்டது. பலருக்கு தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று சொன்னவர் தியாகத்துக்கு பரிசும் விருதும் வாங்கி இருக்கக்கூடாது. (டோண்டு சாவிக்கு அவர் இந்த அறிவுரை கொடுத்ததை குறிப்பிடுகிறார்)

தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது – சமீபத்தில் அவரது கொள்ளுப்பேத்திக்கு கலைஞர் அரசு உதவி வழங்கும் நிலைமை இருந்தது என்று படித்தேன். தன் வீட்டை ராஜாராம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொடுத்தாராம். வானதி திருநாவுக்கரசிடம் தனக்கு ராயல்டி எல்லாம் முக்கியம் இல்லை, ஆனால் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மலிவு விலையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

மொத்தத்தில் அவரது புத்தி கூர்மை இணையற்றது. சிந்தனையில் நேர்மை உள்ளவர். தனக்கு சரி என்று பட்டதை தனக்கு என்ன நஷ்டம் வருமோ என்று தயங்காமல் சொன்னவர். அருமையான நிர்வாகி. ஆனால் அவர் மாற்று கருத்துகளை அரவணைத்து செல்ல தெரியாதவர், தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவர், சில பரிசுகளையும் பட்டங்களையும் அவர் ஏற்றது கேள்விக்குரியது, காங்கிரசை வீழ்த்த அவர் சில காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார் என்று கருதுகிறேன். அவரது நிறைகள் அவரது குறைகளை விட மிக அதிகம், அவர் இந்தியாவின் வரப் பிரசாதம், அவர் சுதந்திர இந்தியாவில் மேலும் பதவிகளை வகிக்காது இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி மேலும் படிக்க விரும்புவர்களுக்கு:
டோண்டுவின் பதிவுகள்
பத்திரிகையாளர் சுதாங்கனின் ஒரு பதிவு
ராஜாஜி மற்றும் காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தி எழுதிய Rajaji: A Life (நான் படித்ததில்லை)

நான் பயன்படுத்திய, சொல்ல மறந்த ஒரு source – திரு.வி.க.வின் வாழ்க்கை குறிப்புகள்

வேறு மதிப்பீடுகள், குறிப்பாக திராவிட இயக்கங்களின் பார்வையில் ராஜாஜியை பற்றி ஏதாவது மதிப்பீடு இருந்தால் அதை படிக்க ஆவலாக இருக்கிறேன்.