(ஆசிரியர்: திரு.ராமசாமி)
மாதா, அன்னை, அம்மா, தாய் என பல சொற்கள் இருந்தாலும் அவையனைத்தும் ஒருவரைத்தானே குறிக்கின்றன. நம்மை ஈன்று பாலூட்டி சீராட்டி வளர்த்த,வளர்க்கின்ற பெருமாட்டி அம்மாவைத்தவிர வேறு யார் இருக்கமுடியும்? அதனால்தானே நாம் “அன்னையும்,பிதாவும் —-மாதா பிதா  குரு,தெய்வம்’ என்றெல்லாம் அன்னையை முன்னிறுத்திப் பெருமை  கொள்கிறோம் பாராட்டுகிறோம்.நாட்டைத் தாய்நாடு என்று அழைக்கின்றோம். அப்போது கூட ‘ஜனனி,ஜன்மபூமி——-‘”பெற்ற தாயும்,பிறந்த நன்னாடும் “என்று தாய்க்கு முதலிடம் கொடுக்கிறோம்.சிரமம் பாராது ஈரைந்து திங்கள் சுமந்து தான் உண்ணும்  உணவையே தன்  .   குழந்தைக்கு உணவாக்கி, பிறந்தபின் தன்  உதிரத்தை முலைப்பாலாகக் கொடுத்து  ஆளாக்கிய தாய்க்கு எந்த இடத்திலும் முதன்மை ஸ்தானம் கொடுப்பதில் தவறேதுமில்லையே! இந்த உறவு (பந்தம்)தொப்புள் கொடி உறவாகக் கூட இருக்கலாம்.ஆனால் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்பதை முழுமையாக உணர்ந்தவர்களல்லவா  நாம்?ஆகவே தாய்க்கு எங்கும் முதலிடம் கொடுப்பதில் வியப்பெதுமில்லையே!
நிலையற்ற உலகில் நிலையாத வாழ்வு வாழ்கின்ற சாமான்யர்களே நாம்.அன்னையின் அருமையைப்புரிந்தவர்கள், தெரிந்தவர்கள்  அன்னாரது பெருமையையைத்தேரிந்த நாம் உலக நாயகியான ஜகன்மாதாவான அம்பிகையின் அருளை உணரமாட்டோமா?அவளை  அரியணையில் அமர்த்தி ஆராதிக்கமட்டோமா?ஆகவே தான் ‘மாதா’வின் முதலில் ‘ஸ்ரீ’ என்ற சொல்லைச் சேர்த்து ,’ஸ்ரீ மாதா’ என்று விளித்து மகிழ்ச்சியடைகிறோம். ‘ஸ்ரீ’ (திரு) என்றாலே இகபர செல்வங்களை அருளுபவள் என்றுதானே பொருள்.அதனால் தான் லலிதா சஹஸ்ரநாமம் “ஸ்ரீ மாதா . மகாராஞீ “என்று தொடங்குகிறது.
அன்னையின் அருள் இயல்பானது,இயற்கையானது. உள்ளன்போடு ஒரு முறை தெரிந்தோ,தெரியாமலோ அழைத்தால் கூட அருள் பாலிப்பவள் அன்னையே!அவள் அவ்யாஜ கருணா ரூபிணி. குழந்தைகளாகிய நாம் எப்படி உபாசித்தாலும் அதை ஏற்று அனுக்ரஹம் செய்யக்கூடியவள்.அவள் எதிர்பார்ப்பது “உள்ளன்பும், பக்தியும் தான்’வேறு க்ரியா லாபங்களையோ   அல்லது அவை பற்றிய ஞானத்தையோ அல்ல.இதையொட்டியே ஆசார்யாளும்

ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ச்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ச்துதுகதா:!
ந ஜானே முத்ராஸ்து ததபி ச ந ஜானே விலபனம்
பரம் ஜானே மாத: த்வதனுசரணம்   க்லேசஹரணம்!!
என்று சொல்லியிருக்கிறார்கள்.
பொருள்:- எனக்கு மந்திரம்,தந்திரம்,வழிபாட்டு வகை,தியானம்,முத்திரைகள் போன்று எதுவுமே தெரியாது.ஆனால்  அன்னையே!உன்னைச் சரணடைந்து பக்தியோடு வழிபட்டால் துன்பங்கள் அகலும் என்பதை உணர்ந்துள்ளேன்.
மேலும் அன்னை க்ஷிப்ர  பிரசாதினி அருள் புரிவதில்,அதுவும் விரைந்து புரிவதில் அவளுக்கு  நிகர் அவளே!அதனால்தான் அம்மையை ‘சுகாராத்யா,சுலபாகதி’ என்றெல்லாம் அழைக்கின்றோம். நியம நிர்பந்தங்களில்லாமலேயே உபாசிக்கலாம்.உபாசனை மிக மிக எளிதானது.அம்மையை ஒருமித்த மனதோடு சரணடைந்தால் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.வேண்டும் அளவுக்கு மேலாகவே பெறலாம்.சகலவிதமான ஆபத்துகளிலிருந்து விடுபடலாம். அன்னை கருணையின் உருவம்.

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாசமதிகம் , சரண்யே லோகானாம்   தவ ஹி சரணாவேவ  நிபுணௌ                   (பயத்திலிருந்து காப்பவள்:கேட்பதற்கு  மேலாகவே நன்மை (பலன்)செய்யக்கூடியவள் அன்னையின் சரணங்களே நமக்கு எஞ்ஞான்றும்  துணை.)
நம் பாவங்களனைத்திர்க்கும்  பிராயச்சித்தம் அன்னையின் பாதங்களைப் பணிவதே.
க்ரதச்யாகில  பாபஸ் ய   ஞானதோ அஞானதோ வா ,பிராயச்சித்தம் பரம் ப்ரோக்தம் பராசக்தே:பத ஸ்மருதி:
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் பிராயச்சித்தம் அன்னை பராசக்தியின் பாதஸ்மரணமே
ஆகவே சக்தி வழிபாடு மிகவும் சிறந்தது.மேலும் அவளே சிவசக்தி,அர்த்தநாரி .அவளை வழிபட்டு அன்னையின் அருளுக்குப் பாத்திரமாவோமாக!


1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங்கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.

இயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.

இந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.

இவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.

அயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்

(For ItsDiff Radio – September 14, 2011)


மார்ச் 13, 1940

கேக்ஸ்டன் ஹால், லண்டன்.

கிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன?

ஏப்ரல் 13, 1919.

1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.

உலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.

அப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.

அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு  இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”

ஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.

அந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.

(For ItsDiff Radio – September 7, 2011)


முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து விட்டுப்போனது. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மேலை நாடுகள் இங்கே குப்பைகளை கொண்டு கொட்டுகிறார்கள் என்று ஆதங்கபட்டிருந்தார். ஆபத்தான குப்பைகளாக இல்லாவிட்டால், அது தேசிய அளவில் ஒரு வர்த்தக வாய்ப்பு மற்றும் மின் உற்பத்தி வாய்ப்பு என்று எனக்குப்
பட்டது. நான் 20 வருடங்களுக்கு முன் குப்பைகளை வைத்து மினசாரம்
தயாரிக்கும் அனல் மின் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறேன். Senoko
Incineration Plant என்ற அந்த அனல் மின் நிலையம் என்னை பல் வகையில்
கவர்ந்த ஒன்று. நாடு திரும்பியதும் சிங்கப்பூரில் உள்ள அதை போல் ஒன்றை
அரசாங்கம் இந்தியாவில் ஸ்தாபிப்பது பற்றி ஒரு இந்திய மின் பொறியாளரிடம்
பேசியபோது அவர் சொன்னது – “இந்தியாவில் பொருட்களை எல்லோரும் ரீசைக்கிள் செய்துவிடுகிறார்கள். அதனால் குப்பை சேராது” என்றார். அப்பொழுது இந்த மேலை நாட்டுக் குப்பை பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்திய
குப்பைகளையும் சேர்த்து மேலை நாடுகளும் கொட்டும் அளவு கடந்த குப்பையை
(குப்பையை கொட்ட பணமும் கொடுக்கிறார்கள்) நாம் உபயோகித்தால் நிச்சயம்
மின் உற்பத்தி செய்ய குப்பைகள் போதுமானது என்று நினைக்கிறேன்.
சிந்திக்கலாமே?

மின் தயாரிப்பு பற்றி விளக்கம் –

சிங்கப்பூர் நகரில் (தேசத்தில்)வீடுகளிலும், வர்த்தகங்களிலும்
கொட்டப்படும் குப்பைகள் தங்கள் பயணத்தை ஆங்காங்கு காணப்படும் இரும்பு
குப்பைத் தொட்டிகளில் தொடங்குகிறது. (அடுக்கு மாடிக் கட்டடங்களில்
வசிக்கும் மக்கள் சிறு குப்பைகளை வீட்டின் சமயலரையின் சுவற்றில்
பொறுத்தியிருக்கும் ஒரு சிறிய கதவை திறந்து சிம்னி குழாய் போன்ற ஒரு
Chuteல்  எறிகிறார்கள். அது கீழே சரியாக பெரிய ஒரு இரும்புத்தொட்டியில்
வந்து விழுகிறது. பெரிய குப்பைகள் லிஃப்டில் கீழே கொண்டு வந்து
எறியப்படுகின்றன)

நாள் முழுவதும் இயங்கும் பெரிய ட்ரக் வாகணங்கள் ஆங்காங்கு காணப்படும்
பெரிய இரும்புத்தொட்டியை தன் இரும்புக் கைகளால் ஏந்தி தன்னுள் கவிழ்த்து
குப்பைகளை சேகரிக்கிறது.

வாகணங்கள் குப்பையை Senoko மற்றும் Tuas என்ற இரண்டு incineration
plantற்கு எடுத்துச் சென்று அதன் பிரம்மாண்டமான குப்பைதொட்டிகளில்
சரிக்கிறது.

இந்த புதிய குப்பை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் குப்பைகளுடன்
சேர்ந்துக் கொண்டு தன் அடுத்தக் கட்ட பயணத்திற்க்காக காத்திருக்கிறது.

இடைவிடாமல் தொடர்ந்து பெரிய கிரேண்கள் இப்படி காய்ந்துக்
கொண்டிருக்க்கும் குப்பைகளை அள்ளி ஒரு கன்வேயர் பெல்டில் வைக்கிறது.

பெல்ட்டில் பயணம் செய்யும் குப்பை ஒரு ட்ரையர் பகுதியில் நுழைந்து
வெளிவருகிறது. வெளிவரும் பொழுது அதிலிருந்த ஈரப்பசை அனேகமாக இல்லாமல்
ஆகிவிடுகிறது.

அடுத்தது Magnetic Separator. குப்பை என்பது கசங்கிய பேப்பராகவும்
இருக்கலாம். உடைந்த பெரிய மேஜை நாற்காலிகளாகவும் இருக்கலாவும். இரும்புக்
கட்டிலாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். (ஒரு வதந்தி – உடல்
பாகங்களும் இருக்கலாம் – நான் பார்த்ததில்லை) இந்த ”காந்த விலக்கி” யின்
வேலை அணைத்து இரும்புக் குப்பைகளையும் தன் காந்த சக்தியால் கைபற்றி சற்றே
நகர்ந்து வேறு ஒரு பெல்ட்டில் காந்த சக்தியை தற்காலிகமாக இழந்து
கைவிடுகிறது. இப்படி அப்புறப்படுத்தப்பட்ட இரும்புகள் நாள் ஒன்றுக்கு
இரண்டு மூன்று பெரிய ட்ரக்குகள் தேறும். அவை இரும்பு மார்க்கெட்டிற்கு
எடுத்துச் செல்லப்பட்டு recycle செய்வதற்க்காக விற்க்கப்படுகிறது.

முதல் பெல்ட்டில் பயணத்தை தொடரும் மற்ற குப்பைகள் crusherல்
உட்படுத்தப்பட்டு அளவு குறைக்கப்பட்டு அடுத்த இலக்கான பாய்லரை நோக்கி
செல்கிறது.

Senokoவில் மொத்தம் 4 பாய்லர்கள் (அல்லது 8 – மறந்துவிட்டது). பாய்லரின்
பெரும் வெப்பத்தில் குப்பைகள் எரிந்து அதன் மேல் இருக்கும் பெரும் நீர்
குழாய்களில் உள்ள தண்ணீர்  நீராவியாக மாற்றம் பெற்று கடுமையான அழுத்தம்
மற்றும் வெப்பம் மற்றும் வேகம் கொண்டு டர்பைனை (2 டர்பைன்கள்)
நோக்கிப்பாய்கிறது.

அதன் பின்னர் தெரிந்த கதை தானே! – நீராவி primemover டர்பைன் ப்ளேடை
தாக்கி அதிவேகத்தில் சுழற்றுகிறது (3000 RPM). அதனுடன் இணைக்கபட்ட
ஜெனரேட்டர்கள் 28 மெகாவாட்டை சிங்கப்பூர் கிரிட்டில் பரப்பி மிதக்கவிட்டு
synchronize செய்கிறது.

மின்சாரம் நம் வீட்டை அடையும் முன்னர், தன்னை தியாகம் செய்த திருப்தியில்
குப்பையின் ஆத்மா சாந்தியடைகிறது.

http://www.youtube.com/watch?v=MwPJBT_sgRg (குப்பைகளை பெல்ட்டில்
ஏற்றும் வீடியோ)

(பி.கு. Senokoவை Keppel நிறுவனம் வாங்கிவிட்டது. Tuas Senokoவை விட
பெரியது. என்ன நிலைமை என்று தெரியவில்லை. நான் மிட்சுபிஷி கழகத்தில்
(Mitsubishi Corporation) Commissioning Engineerஆக வேலை பார்த்தேன்.)


நவம்பர் 17 1920.

பின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.

அவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.

மேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.

ஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.

அந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.

(For ItsDiff Radio –  August 23, 2011)


நிர்வாண சுகதாயினி என்ற கட்டுரை திரு.ராமசாமி சுப்ரமணியனால் எழுதப்பட்டது. ஏற்கனவே கூட்டாஞ்சோறு தளத்தில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளது. இந்துத்துவம் 1, 2, 3 என்ற கட்டுரைகள் இந்தத் தளத்தில் உங்களுக்கு அறிமுகமானவையே.  திரு. ராமசாமி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு இந்துத்துவம் 1 என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய பிற தளங்கள்

தமிழ் ஹிந்து

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1


ஃபெப்ருவரி 4, 1922

மகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.

இந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார்.  பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.

இவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக  1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.

இப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.

(For ItsDiff Radio – July 27, 2011)


ஆகஸ்ட் 22 1907

ஸ்டட்கர்ட், ஜெர்மனி

சர்வதேச சோஸியலிஸ மாநாடு ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கே ஒரு அம்மையார் இடி முழக்கம் போன்று தன் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் அந்த கூட்டத்தில் தனக்கு பேச கிடைத்தது ஒரு பொன்னான வாய்ப்பு என்று கருதினார். காரணம் அவரது தேசப் பற்று. ஆம். பிரிட்டிஷ் அரசால் இந்தியா அடிமைப்படுத்தப்பட்டு அதன் பிரஜைகள் அல்லலுறுவதை உலக அரங்குகுக்கு எடுத்துச் சொல்ல அது ஒரு அரிய சந்தர்ப்பமே. பல் வேறு தேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே குழுமியிருந்தனர். அவர்கள் தேசங்களின் தலைவிதிகளை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர்கள். அம்மையார் எண்ணற்ற இந்தியர்களின் அவலங்களையும் ஏழ்மை நிலையையும் அனைவருக்கு எடுத்துக் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டிஷ் அரசு 35 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிலிருந்து கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார். இந்திய பிரஜைகளிடமிருந்து இப்படி கொள்ளையடிப்பதனால் நாளுக்கு நாள் இந்தியாவின் பொருளாதார நிலை சீர் குலைவதை பற்றி எடுட்துரைத்தார். “மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் வாழ்கின்றனர். சுதந்திரத்தை விரும்பும் எவரும் இந்தப் பிரஜைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை அடைய ஒத்துழைக்கவேண்டும்” என்று கூறி தன் உரையை முடித்தார். அதன் பின் ஒரு காரியத்தை மேற்கொண்டார். சட்டென்று ஒரு இந்திய கொடியை ஏற்றினார். ”இது தான் சுதந்திர இந்தியாவின் கொடி. சுதந்திர இந்தியா பிறந்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்க்காக உயிர் துறந்த எண்ணற்ற விடுதலை வீரர்களினால் அது புனிதப்ப்டுத்தப்பட்டுள்ளது. அதன் பெயரில் சுதந்திரத்தை பிறப்புரிமையாக கருதுபவர்கள் அனைவரிடமுமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்” என்று முழங்கினார்.

மாயத்தால் கட்டுண்டவர்கள் போல் அங்கு கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று அந்தக் கொடிக்கு மரியாதை செலுத்தினார். அந்தக் கொடி 1905ல் வீர் சாவர்க்கார், மற்றும் சில தேசப் பற்று மிகுந்தவர்களுடன் சேர்ந்து அந்த அமமையார் வடிவமைத்தார். முன்னதாக பெர்லினிலும், வங்காளத்திலும் பறந்த அந்தக் கொடி பச்சை, காவி, சிகப்பு பட்டைகள் கொண்டது. பச்சை பட்டையில் அன்றைய இந்தியாவில் இருந்த 8 பிராந்தியங்களை குறிக்கும் வண்ணம் 8 மலரும் தாமரைகள் இருந்தது. நடுவில் இருந்த காவிப் பட்டையில் தேவநாகிரி எழுத்துகளில் ”வந்தே மாதரம்” பொறிக்கப்பட்டிருந்தது. கீழே இருந்த சிகப்பு பட்டையில் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை குறிக்கும் அரை பிறைச் சந்திரனும், உதய சூரியனும் இருந்தது.

இந்த துணிச்சல் மிகுந்த தேச பற்று மிக்க அம்மையார் மேடம் காமா என்று அழைக்கப்பட்டு வந்த பிக்காய்ஜி ரஸ்டம் காமா.

(For ItsDiff Radio – 07/20/2011)


(திரு. ராமசாமியின் கட்டுரை – 3ஆம் பாகம்)

ஆன்மீக இந்துத்துவம் :-நம்மிடம் உள்ள குறைகள் காரணமாக “சடங்குகள்” பொருளற்றதாக கருதப்படுகின்ற நிலையில் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தி சமுதாயத்தில் நிலைநிறுத்த செயல்பட்டவர்கள் ஆன்மீக இந்துத்துவர்களும், அவர்கள்  சார்ந்த நிறுவனங்களும் (மடங்கள்) மற்றும் ஆலயங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது,. ஆனால் இந்த அமைப்புகளில் ஏற்பட்ட சில தேவையற்ற கட்டுப்பாடுகள் ,பழக்கவழக்கங்கள் இவையனைத்தும் ஒரு சாராருக்கே உரியவையோ என்ற நிலை உருவாகியது மேலும் உலக நியதியையோட்டி இந்த அமைப்புகளும்  தம் கட்டுப்பாட்டைத் தளர்த்த முற்பட்டன. அறநெறி நீங்கியது மக்கள் கவர்ச்சி தலைதூக்கியது அதிகாரபலமும், செல்வச்செழிப்பும்  ஆதிக்கப்போட்டிக்கு வழி வகுத்தன. சடங்குகள் முக்கியத்துவம் பெற்றன.புரியாத மொழியில் விளங்காத சடங்குகள் தேவையற்ற சர்ச்சைளையும் விவாதங்களையும் தோற்றுவித்தன. விளைவாக நாத்திகவாதமும் பிற மத குறுக்கீடுகளும் தலைதூக்க ஆரம்பித்தன. எதிர் கோஷா ங்கள் எழும்பின.
இந்துத்துவத்திற்கு நாத்திகவாதம் புதிதல்ல. சார்வாக மதம் தொன்றுதொட்டே நாத்திகம் பேசியது. ஆனால் எடுபடவில்லை. இந்துக் கடவுளர் இழிவு படுத்தப்பட்டனர். இந்துக்கள் பொறுமை காத்தனர். இந்து மதம் செழுமை கண்டது. சில பாஷாண்டிகள் தங்களை இந்துத்துவத்தின் பாதுகாவலர்களாகவும் இறைவனின் பிரதிநிதிகளாகவும் உருவகப்படுத்திக்கொண்டு சித்து வேலைகள் மூலம் பாமர மக்களைக் ஏமாற்றி வந்தனர். இதனால் ஏமாந்தவர் பலர். அந்நிய பணபலமும் மதமாற்றத்தை ஊக்குவித்தன சாதி இன பாகுபாடுகள், பகுத்தரிவாலரின் விபரீத விளையாட்டு மடங்களின் அவமதிப்பு மத நூல்களிலிருந்து தேவையான வரிகளை மட்டும் எடுத்து விரும்பத்தகாத கடுமையான விமரிசனங்கள் இந்து மதத்திற்குத் தொய்வை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயம் மக்களிடையே உருவானது. பாமர மக்கள் வழிவகை தெரியாது அலைக்கழிக்கப்பட்டனர்.

அரசியல் இந்துத்துவம் :- இந்துத்துவம் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்ய முனைந்தது. புதிய வழிமுறைகள் காணவேண்டிய அவசியத்தை உணர்ந்தது. ஆள்பலமும், பணபலமும், ஆதிக்கபலமும் இருந்தால் எதிர் பிரசாரத்தை எளிதில்
முறியடிக்கலாம் என்பது புலனாயிற்று. அரசியல் பலம் கூடும்போது ஆனவமும் வந்து விடும் எதிராளியும் அஞ்சுவன்ரோ?ஆதரிக்கும் அமைப்புகள் ஒன்று சேர வாய்ப்புகள் ஏற்பட்டன. அரசியல் இந்துத்துவம் பிறந்தது. மாற்றம் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. இந்துக்களின் ஒற்றுமையின்மை, நம் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்லாமை, நம்மைப்பற்றி நாமே புறம் கூறி எள்ளி நகையாடும் போக்கு ,எதிர்ப்பு வந்தபோது அமைதியாக ஏற்றது,இழிவு வந்ததபோது பொங்கி எழாமை -இந்துத்துவத்தை பலவீனப்படுத்தின. நம்மை ஜடப்பொருளாக மாற்றின. இவற்றை நிவர்த்தி செய்யவே அரசியல் இந்த்துதுவம் செயல்பட ஆரம்பித்தது.

சடங்கு இந்துத்துவம்,ஆன்மீக இந்துத்துவம்,அரசியல் இந்துத்துவம் ஆகிய மூன்றுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து தனித்தனியே பிரித்துப்பார்க்கமுடியாத நிலையில் இருப்பவை. மாற்றங்கள் வரலாம். அணுகுமுறை மாறலாம். உட்கரு ஒன்றுதான் இந்துத்துவம் நிலையானது. மக்கள் (மாக்கள் உள்பட) நல்வாழ்வு விரும்புவது. தெய்வ நம்பிக்கை கொண்டது. பிற சமயத்தாரையும் மதிப்பது. என்றும் அழியாதது.

வாழ்க!–வளர்க இந்துத்துவம்!!

(முற்றும்)

தொடர்புடைய கட்டுரைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1


(திரு ராமசாமியின் கட்டுரை – இரண்டாம் பாகம்)

விவரங்கள்  முழுமையாக  தெரியாத நிலையில்  அவை மூட நம்பிக்கைகளாக மதம் சார்ந்த  கோட்பாடுகளாக அமைகின்றன.
(உதாரணம்)   முன்னோர் திதி கழித்தல் :- இது  காலம் காலமாக இருந்து வரும் சடங்கு. முன்னோர் வாழ்த்து (ஆசி) பிள்ளைகளுக்கு  நல்லதொரு  வாழ்க்கையை அமைத்துத்தரும் என்ற நம்பிக்கை.  குறிப்பு;- அமாவாசை -மூன்று தலைமுறை  முன்னோரை நினைவு கூர்ந்து வழிபடுவது. இன்றும் இந்து பிராமணர்கள்  தொடர்ந்து செய்து வருவது -மஹாலய  அமாவாசை -அனைத்து இந்துக்களும் செய்வது
இந்த திதி கழித்தல் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் பாலமாக அமைகிறது அந்த இடங்களில்  திதி கழிப்பதை இந்துக்கள்  தலையாய கடமையாக எண்ணுகிறார்கள். மேலும்  கயாவில் திதி  கழிக்கும்போது –நம்  முன்னோர்களுக்கு மட்டுமல்ல – நமக்குததெரிந்த  தெரியாத  இறந்தவர்களுக்காக, விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக, திதி கழிக்க இயலாதவர்களுக்காக,அனைத்து  மதம் சார்ந்தவர்களுக்காக ,வளர்ப்பு  பிராணிகளுக்காக பிரார்த்தனை செய்கிறோம், இது தான் இந்துத்துவத்தின் விரித்து பரந்த மனப்பாங்கு.
நடுகல் சடங்குகள்,கிராம தேவதைகள் ,அய்யனார் -இவையனைத்தும்  சமுதாய ஒற்றுமைக்கே.
ஆலயங்கள்,திருவிழாக்கள் -இவை மக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி  ஒருவரையொருவர்  புரிந்து மனித நேயம்  வளர்வதற்கே. அதனால் தான் வந்த சொற்றொடர் “ஊர் கூடி தேர்  இழுத்தல்’. அனைத்து பிரிவினரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் சமூகம் ,கிராமம்,நகரம் நாடு ஆகியவை மேன்மையுறும்.
காது குத்துதல்,மெட்டி  அணிதல் -நம் உடலில் நிறைய நரம்பு முடிச்சுக்கள் உள்ளன இவையனைத்தும் மூளையுடன் தண்டுவடம் மூலம் தொடர்பு கொண்டவை. அதாவது  இன்றைய   “அகுபன்ச்சர  காதணி ,மூக்கில்  அணிவது,மெட்டி கொலுசு -ஆகியவை  வட்ட வடிவம் கொண்டவை நம் உடலுடன் சமச்சீரான முறையில் ஒட்டி உறவாடி நரம்பு மண்டலத்தையே செம்மையாக்குகின்றன.
மொட்டையடித்தல்:–நேர்த்திக்கடனாக மனிதன் மொட்டையடித்துக் கொள்கிறான். கொச்சையாக “உயிரைக் கொடுக்கிற சாமிக்கு மயிரைக்  ‘கொடுக்கிறான். சிகை என்பது மனிதனின் கௌரவச்  சின்னமாகும். அதை இழப்பது அவமானம் என கருதப் படுகிறது. மகா பாரதத்தில் அஸ்வத்தாமன் கொல்ல ப் படுவதில்லை.மாறா க  அவன் சிகை நீக்கப்படுகிறது. கௌரவம் அழிக்கப்படுகிறது. ஒருவனை மொட்டையடித்து வீதிகளில் ஊர்வலமாக அனுப்புதல் பெரிய தண்டனையாக கருதப்படுகிறது.அவமானம் என்பது மரணத்தை விட மோசமானது  . நேர்த்திக் கடனாக மொட்டையடித்துக் கொள்பவன் இறைவன் முன் சிகை நீக்கி ,தலை தாழ்த்தி அவமானத்
தை ஏற்று  தன  அடக்கத்தை வெளிப்படுத்துகிறான்.
நம் பெரியோர் சொன்னார்கள் என்பதனால் நாம் சடங்கைக் சடங்காக கண்மூடித்தனமாக பின்பற்றி வருகிறோம். அவற்றின் உட்பொருளைப்  புரிந்து  செயல்படாதது நம்மிடமுள்ள மிகப் பெரிய குறைபாடே. ஆனால் சடங்குகளைப் பற்றி விளக்கம் சொல்பவரும் பெருமளவில் இல்லை என்பதும்  நம்முடைய துரதிரூ ஷ்டமே. காலம்,தூரம் ,அறிவியல் முன்னேற்றம் என பலப்பல காரணம் காட்டி விலகி ஓடிவிடுகிறோம். ஆகவேதான் சடங்குகள் –  சில/பல இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாததாக இருதாலும்,பொருள் போதிந்தவையே ஆனாலும் அவை பொருளற்றவையாக வழக்கொழிந்தவையாக தோன்றுகின்றன

(தொடரும்)

தொடர்புடைய இடுகைகள்

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2

திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1