செப்டம்பர் 2011
மாதாந்திர தொகுப்பு
செப்டம்பர் 21, 2011
1916 முதல் உலகப் போர் நடந்துக் கொண்டிருந்தது.
இந்தியாவிற்கு வந்திருந்த ஒரு அயர்லாந்து பெண்மணியின் மனதில் ஒரு பெரும் போர். இந்திய மக்களின் இன்னல்களை பார்த்து மனம் வெதும்பினார். ஆங்கிலேயர் பிடியில் சிக்கித் தவித்து சுதந்திரம் என்பதை அறியாதவராக இருந்து வரும் இந்தியர்களின் இன்னல்களை போக்க முடிவு செய்தார்.
இயற்க்கையாகவே இவருக்கு எளிய மக்களின் இன்னல்களின் காரணமாக இருப்பவர்களை எதிர்த்து போராடும் குணம் இருந்து வந்தது. முன்னதாக இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்காகவும், ஏழை விவசாயிகளுக்காகவும், மகளிருக்காகவும் போராடியவர். தியாஸபிக்கல் சொஸைட்டி என்ற இறையியல் சார்ப்பான இயக்கத்தில் ஈடுபட்டு தொண்டாற்றினார்.
இந்திய மக்களுக்காக போராட முடிவு செய்த அவர் அதன் பொருட்டு காங்கிரஸின் மூத்த தலைவர்களை சந்தித்தார். பால கங்காதிர திலகருடன் இணைந்து ஹோம் ரூல் லீக் என்ற இயக்கத்தை தொடங்கினார். ஹோம் ரூல் என்பது சுயாட்சி. இந்தியர்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று மிகவும் விரும்பினார். 1916ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வழிதிருத்தும் தீர்மானத்தை அவர் கொண்டு வந்தார். 1917ல் அவர் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார். அவர் இருக்கும் வரையில் ஹோம் ரூல் அவர் கண்ட கனவாகவே இருந்துவிட்டது.
இவர் இந்தியாவில் உயர்கல்வியில் பல்வேறு சீர்திருத்த்ங்களைக் கொண்டுவர முயற்ச்சித்தார். மத்திய இந்துப் பள்ளி மற்றும் கல்லூரியை அவர் நிறுவினார். பின்னர் அது பனாரஸ் ஹிந்து பல்கலைகழகமாக வளர்ச்சியடைந்தது. பெண்களின் விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன் போரட்டத்தை தொடர்ந்தார். மேலும் தியாசபிக்கல் சொசைட்டி நிறுவனத்தை சென்னையில் தொடங்கினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
சென்னையின் ஒரு பகுதிக்கு அவரை நினைவு கூறும் வகையில் அவர் பெயர் வழங்கப்பட்டது. அவர் 1933ல் காலமானார்.
அயர்லாந்திலிருந்து வந்து இந்தியர்களுக்காக உழைத்த அந்த பெண்மனி டாக்டர் அன்னி பெசண்ட்
(For ItsDiff Radio – September 14, 2011)
செப்டம்பர் 19, 2011
மார்ச் 13, 1940
கேக்ஸ்டன் ஹால், லண்டன்.
கிழக்கு இந்திய அசோசியேஷனும், ராயல் சென்ட்ரல் ஏசியன் சொஸைட்டியும் இணைந்து நடத்தவிருந்த கூட்டத்தில் புத்தகம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் கையிலிருந்த புத்தகத்தில் பக்கங்கள் நடுப்புறங்கள் அப்புறப்படுத்தப் பட்டு, அதனுள்ளே ஒரு துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்திய மக்கள் மீதும், இந்திய விடுதலையிலும் நேசம் கொண்டிருந்த அவன் தன் துப்பாக்கியின் நெடுநாளைய இலக்கான முன்னாள் பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓ ட்வையரின் வருகைக்காக காத்திருந்தான். இந்த கொலை நோக்கத்தின் காரணம் என்ன?
ஏப்ரல் 13, 1919.
1940 முன் அதாவது சுமார் 21 வருடங்களுக்கு முன் ரவ்லட் மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போரட்டம் நடந்து கொண்டிருந்தது. பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக் என்னும் தோட்டத்தில் பல தலைவர்கள் ரவ்லட் ம்சோதாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்கள். சுமார் 20ஆயிரம் மக்கள் அந்த கூட்டத்தில் பங்கு பெற்றுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அதன் குறுகிய நுழைவாயில் வழியாக பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் 90 காவலாளிகள் கொண்ட தன் காவல் படையுடனும், தானியங்கி துப்பாக்கிகளுடனும் நுழைந்தார். எந்த முன்னறிவிப்புமின்றி கூட்டத்தை நோக்கி சுட உத்தரவிட்டார். துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகமால் தப்பிக்க பலர் தோட்டத்தின் நடுவிலிருந்த கிணற்றில் குதித்தனர். பலர் தோட்டத்தின் உயர்ந்த சுவர்க்ளை ஏறி கடக்க முற்பட்டனர். ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் துப்பாக்கி தோட்டாவிற்கு இரையானார்கள். அதில் ஆறே வாரங்களே ஆகியிருந்த குழந்தையும் அடங்கும். சிலரின் கணக்குப்படி ஆயிரட்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஜாலியன்வாலா பாக் படுகொலை என்று வர்ணிக்கப்பட்டது.
உலகமே கண்டித்த அந்தச் சம்பவத்தை அப்போதைய பஞ்சாப் ஆளுனரான மைக்கேல் ஓ ட்வையர் பிர்கேடியர் டயர் செய்தது சரியே என்று பதிவு செய்தார். அனைவரும் வெகுண்டெழுந்தாலும் ஒன்றும் செய்ய இயலாமல் மௌனமாக துயரத்தை அனுபவித்து வந்தார்கள். பைசாகி தினமான அன்று சோக தினமாக மாறியது.
அப்படி வெகுண்டவர்களில் ஒருவன் தான் இன்று அதாவது 1940ல் கேக்ஸ்டன் ஹாலில் காத்திருந்த அந்த புரட்சி வீரன். சிறிது நேரத்தில் மைக்கேல் ட்வையர் உள்ளே நுழைந்தார். புத்தகத்துடன் மெதுவாக புரட்சிக்காரன் அவரை நெருங்கினான். யாரும் சந்தேகம் கொள்ளாதவாறு புத்தகத்தை திறந்தான். அதில் மறைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து இரண்டு முறை அவர் வயிற்றில் சுட்டான். உடனே ட்வையர் கொல்லப்பட்டார்.
அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவன் சொன்னது: “21 வருடங்களாக மனதில் இருந்த பழியுணர்ச்சிக்கு நிறைவு இன்று தான் கிடைத்தது. இந்தச் செயலை செய்ததற்க்காக நான் மிகவும் பெருமைபடுகிறேன். என் தாய்நாட்டிற்காக உயிரை விடுவதைக் காட்டிலும் பெருமை கிடையாது”
ஜூலை 31 1940ல் அவன் தூக்கிலிடப்பட்டான்.
அந்த புரட்சி வீரன் உத்தம் சிங்.
(For ItsDiff Radio – September 7, 2011)
செப்டம்பர் 18, 2011
முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து விட்டுப்போனது. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் மேலை நாடுகள் இங்கே குப்பைகளை கொண்டு கொட்டுகிறார்கள் என்று ஆதங்கபட்டிருந்தார். ஆபத்தான குப்பைகளாக இல்லாவிட்டால், அது தேசிய அளவில் ஒரு வர்த்தக வாய்ப்பு மற்றும் மின் உற்பத்தி வாய்ப்பு என்று எனக்குப்
பட்டது. நான் 20 வருடங்களுக்கு முன் குப்பைகளை வைத்து மினசாரம்
தயாரிக்கும் அனல் மின் நிலையத்தில் பணியாற்றியிருக்கிறேன். Senoko
Incineration Plant என்ற அந்த அனல் மின் நிலையம் என்னை பல் வகையில்
கவர்ந்த ஒன்று. நாடு திரும்பியதும் சிங்கப்பூரில் உள்ள அதை போல் ஒன்றை
அரசாங்கம் இந்தியாவில் ஸ்தாபிப்பது பற்றி ஒரு இந்திய மின் பொறியாளரிடம்
பேசியபோது அவர் சொன்னது – “இந்தியாவில் பொருட்களை எல்லோரும் ரீசைக்கிள் செய்துவிடுகிறார்கள். அதனால் குப்பை சேராது” என்றார். அப்பொழுது இந்த மேலை நாட்டுக் குப்பை பிரச்சனை இல்லாமல் இருந்தது. இப்பொழுது இந்திய
குப்பைகளையும் சேர்த்து மேலை நாடுகளும் கொட்டும் அளவு கடந்த குப்பையை
(குப்பையை கொட்ட பணமும் கொடுக்கிறார்கள்) நாம் உபயோகித்தால் நிச்சயம்
மின் உற்பத்தி செய்ய குப்பைகள் போதுமானது என்று நினைக்கிறேன்.
சிந்திக்கலாமே?
மின் தயாரிப்பு பற்றி விளக்கம் -
சிங்கப்பூர் நகரில் (தேசத்தில்)வீடுகளிலும், வர்த்தகங்களிலும்
கொட்டப்படும் குப்பைகள் தங்கள் பயணத்தை ஆங்காங்கு காணப்படும் இரும்பு
குப்பைத் தொட்டிகளில் தொடங்குகிறது. (அடுக்கு மாடிக் கட்டடங்களில்
வசிக்கும் மக்கள் சிறு குப்பைகளை வீட்டின் சமயலரையின் சுவற்றில்
பொறுத்தியிருக்கும் ஒரு சிறிய கதவை திறந்து சிம்னி குழாய் போன்ற ஒரு
Chuteல் எறிகிறார்கள். அது கீழே சரியாக பெரிய ஒரு இரும்புத்தொட்டியில்
வந்து விழுகிறது. பெரிய குப்பைகள் லிஃப்டில் கீழே கொண்டு வந்து
எறியப்படுகின்றன)
நாள் முழுவதும் இயங்கும் பெரிய ட்ரக் வாகணங்கள் ஆங்காங்கு காணப்படும்
பெரிய இரும்புத்தொட்டியை தன் இரும்புக் கைகளால் ஏந்தி தன்னுள் கவிழ்த்து
குப்பைகளை சேகரிக்கிறது.
வாகணங்கள் குப்பையை Senoko மற்றும் Tuas என்ற இரண்டு incineration
plantற்கு எடுத்துச் சென்று அதன் பிரம்மாண்டமான குப்பைதொட்டிகளில்
சரிக்கிறது.
இந்த புதிய குப்பை அங்கே காய்ந்து கொண்டிருக்கும் குப்பைகளுடன்
சேர்ந்துக் கொண்டு தன் அடுத்தக் கட்ட பயணத்திற்க்காக காத்திருக்கிறது.
இடைவிடாமல் தொடர்ந்து பெரிய கிரேண்கள் இப்படி காய்ந்துக்
கொண்டிருக்க்கும் குப்பைகளை அள்ளி ஒரு கன்வேயர் பெல்டில் வைக்கிறது.
பெல்ட்டில் பயணம் செய்யும் குப்பை ஒரு ட்ரையர் பகுதியில் நுழைந்து
வெளிவருகிறது. வெளிவரும் பொழுது அதிலிருந்த ஈரப்பசை அனேகமாக இல்லாமல்
ஆகிவிடுகிறது.
அடுத்தது Magnetic Separator. குப்பை என்பது கசங்கிய பேப்பராகவும்
இருக்கலாம். உடைந்த பெரிய மேஜை நாற்காலிகளாகவும் இருக்கலாவும். இரும்புக்
கட்டிலாகவும் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். (ஒரு வதந்தி – உடல்
பாகங்களும் இருக்கலாம் – நான் பார்த்ததில்லை) இந்த ”காந்த விலக்கி” யின்
வேலை அணைத்து இரும்புக் குப்பைகளையும் தன் காந்த சக்தியால் கைபற்றி சற்றே
நகர்ந்து வேறு ஒரு பெல்ட்டில் காந்த சக்தியை தற்காலிகமாக இழந்து
கைவிடுகிறது. இப்படி அப்புறப்படுத்தப்பட்ட இரும்புகள் நாள் ஒன்றுக்கு
இரண்டு மூன்று பெரிய ட்ரக்குகள் தேறும். அவை இரும்பு மார்க்கெட்டிற்கு
எடுத்துச் செல்லப்பட்டு recycle செய்வதற்க்காக விற்க்கப்படுகிறது.
முதல் பெல்ட்டில் பயணத்தை தொடரும் மற்ற குப்பைகள் crusherல்
உட்படுத்தப்பட்டு அளவு குறைக்கப்பட்டு அடுத்த இலக்கான பாய்லரை நோக்கி
செல்கிறது.
Senokoவில் மொத்தம் 4 பாய்லர்கள் (அல்லது 8 – மறந்துவிட்டது). பாய்லரின்
பெரும் வெப்பத்தில் குப்பைகள் எரிந்து அதன் மேல் இருக்கும் பெரும் நீர்
குழாய்களில் உள்ள தண்ணீர் நீராவியாக மாற்றம் பெற்று கடுமையான அழுத்தம்
மற்றும் வெப்பம் மற்றும் வேகம் கொண்டு டர்பைனை (2 டர்பைன்கள்)
நோக்கிப்பாய்கிறது.
அதன் பின்னர் தெரிந்த கதை தானே! – நீராவி primemover டர்பைன் ப்ளேடை
தாக்கி அதிவேகத்தில் சுழற்றுகிறது (3000 RPM). அதனுடன் இணைக்கபட்ட
ஜெனரேட்டர்கள் 28 மெகாவாட்டை சிங்கப்பூர் கிரிட்டில் பரப்பி மிதக்கவிட்டு
synchronize செய்கிறது.
மின்சாரம் நம் வீட்டை அடையும் முன்னர், தன்னை தியாகம் செய்த திருப்தியில்
குப்பையின் ஆத்மா சாந்தியடைகிறது.
http://www.youtube.com/watch?v=MwPJBT_sgRg (குப்பைகளை பெல்ட்டில்
ஏற்றும் வீடியோ)
(பி.கு. Senokoவை Keppel நிறுவனம் வாங்கிவிட்டது. Tuas Senokoவை விட
பெரியது. என்ன நிலைமை என்று தெரியவில்லை. நான் மிட்சுபிஷி கழகத்தில்
(Mitsubishi Corporation) Commissioning Engineerஆக வேலை பார்த்தேன்.)
செப்டம்பர் 17, 2011
நவம்பர் 17 1920.
பின்னாளில் எட்வார்ட் VIII என்ற அரசராக முடிசூடிய வேல்ஸ் இளவரசர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது கல்கட்டாவிற்கு விஜயம் செய்தார். அந்நாட்களில் பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை எதிர் நோக்கியிருந்த பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக நீதி மன்றத்தில் வாதாடி அவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த தேசபற்று மிக்க வழக்கறிஞர்கள் பலர் இருந்தனர். அப்படி கல்கத்தா பகுதியில் போராடிய வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வேல்ஸ் இளவரசரின் வருகையை புறக்கணிக்க தலைமை தாங்கினார். வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவில் நுழைந்த பொழுது அங்கு சாலைகளிலும், மற்ற இடங்களிலும் வரவேற்க ஒருவர் கூட இல்லை. முழுமையாக பந்த் செய்து புறக்கணிப்பை வெற்றி பெற செய்தார்.
அவர் வழக்கறிஞ்கராக பணியாற்றிய பொழுது அரவிந்தோ கோஷ் என்ற விடுதலை வீரரின் வழக்கையும் கையிலெடுத்துக் கொண்டார். அந்த வழக்குக்கு அலிப்பூர் குண்டுவெடிப்புச் சதி என்று பெயர் இருந்தது. லார்ட் கிங்ஸ்போர்டை குதிராம் போஸும், பிரஃபுல்ல குமார் ஷாக்கியும் கொல்ல முயன்ற போது கிங்ஸ்போர்ட் தப்பினார். ஆனால் இரண்டு அப்பாவி ஆங்கில பெண்மணிகள் இறந்து போயினர். அரவிந்த் கோஷ் இந்தச் சதிக்கு பின்னால் உள்ள தலைவர் என்று ஆங்கில அரசு முடிவுக்கு வந்திருந்தது. ஒருவரும் அவருக்காக வாதிட முன்வரவில்லை. அனால் தேசபக்தி மிகுந்த இந்த கல்கத்தா வழக்கறிஞர் வழக்கை எடுத்துக் கொண்டார். வழக்கு 126 நாட்கள் நீடித்தது. 200 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 4500 தஸ்தாவேஜூக்களும், பொருட்களும் வழக்கில் பதிவு செய்யப்பட்டிருந்தது. எப்படியாவது கோஷை தூக்கு மேடைக்கு அனுப்ப முயன்றது ஆங்கில அரசு. அந்தத் வழக்கறிஞரின் ஒன்பது நாள் முடிவுரைக்கு பின்னர் அரவிந்த கோஷ் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டார். வழக்கறிஞர் தன் வாதத்திறமையால் கோஷை விடுதலை செய்ததுமல்லாம்ல் அதற்க்காக எந்த ஊதியமும் பெற்றுக் கொள்ளவில்லை. அன்று அவர் வெற்றி பெறாதிருந்தால் நமக்கு ஸ்ரீ அரபிந்தோ என்ற ஞானி கிடைத்திருக்கமாட்டார்.
மேலும் இந்த வழக்கறிஞர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மரணப் படுக்கையிலிருந்த பொழுது பெங்கால் ஆர்டினன்ஸ் என்று கூறப்பட்டு வந்த மசோதாவை எதிர்த்துப் போராடினார். தீவிரவாதி என்ற சந்தேகம் மட்டுமே ஒருவரை கைது செய்ய போதுமான காரணம் என்ற நியாமற்ற மசோதா அது. கறுப்பு மசோதா என்ற அழைக்கப்பட்ட அந்த மசோதாவை எதிர்க்க தன்னை படுக்கையிலேயே கோர்ட்டுக்கு எடுத்து செல்ல கேட்டுக் கொண்டார். இரண்டு மருத்துவர்கள் துணையுடன் சென்று வாதாடினார். அந்த மசோதா தோற்றது.
ஜூன் 16 1925 அன்று அவர் உடல்நிலை காரணமாக இயற்கை எய்தினார்.
அந்த வழக்கறிஞர் தேசபந்து என்று அழைக்கப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்.
(For ItsDiff Radio - August 23, 2011)
செப்டம்பர் 16, 2011
Posted by Bags under
Misc | குறிச்சொற்கள்:
Hindutva,
Tamil hindu |
Leave a Comment
நிர்வாண சுகதாயினி என்ற கட்டுரை திரு.ராமசாமி சுப்ரமணியனால் எழுதப்பட்டது. ஏற்கனவே கூட்டாஞ்சோறு தளத்தில் அவருடைய கட்டுரைகள் வெளிவந்துள்ளது. இந்துத்துவம் 1, 2, 3 என்ற கட்டுரைகள் இந்தத் தளத்தில் உங்களுக்கு அறிமுகமானவையே. திரு. ராமசாமி அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு இந்துத்துவம் 1 என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
தொடர்புடைய பிற தளங்கள்
தமிழ் ஹிந்து
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 3
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 2
திரு. ராமசாமியின் இந்துத்துவம் 1
செப்டம்பர் 16, 2011
ஃபெப்ருவரி 4, 1922
மகாத்மா காந்தியின் தலைமையில் சட்ட மறுப்பு போராட்டம் நடந்துக்கொண்டிருந்தது. அப்பொழுது ஷவ்ரி ஷவ்ராவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நகரில் மையமாக உள்ள அங்காடிகள் இருக்கும் சந்தையை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். அவர்கள் “ஆங்கில அரசே! இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”, “மகாத்மா காந்தி வாழ்க” போன்ற கோஷங்கள் எழுப்பிச் சென்றார்கள். அப்பொழுது கலவரங்களை எதிர்பார்த்து காத்திருந்த போலீஸ் படை ஆகாயத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கி சூடு நிகழ்த்தியது. மேலும் போராட்ட ஊர்வலத்திலிருந்த மூன்று பேரை மிகக் கொடூரமாக போலீஸ் தடியால் அடித்தது. அடித்ததில் மூவரும் உயிர் நீத்தனர். வெகுண்டெழுந்த போராட்டக்காரர்கள் மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைகளை மறந்து கையில் இருந்த தீப்பந்தங்களுடன் போலீஸ் படையை துரத்தி சென்று அவர்களில் இருபத்து மூன்று பேரை மாய்த்தது. மிகவும் துயரமான இச்சம்பவம் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஷ்வ்ரி ஷவ்ரா கலவரம் என்று வர்ணிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு போராட்டக்காரர்களில் 225 பேரை கைதுசெய்து அவர்க்ளை தூக்கு தண்டனைக்கு பரிந்துரைத்தது. அப்பொழுது ஒரு தலைவர் தான் 1909 முதல் நிறுத்தி வைத்திருந்த வழக்கறிஞர் தொழிலை கையில் எடுத்தார். தன் வாதத் திறமையால் 153 பேரை குற்றமற்றவர்களாக பிரிட்டிஷ் அரசிடம் நிறுபித்து அவர்கள் விடுதலை அடையச் செய்தார்.
இந்தத் தலைவர் சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் மாநாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்ப்பார். 1886 முதல் 1936 வரை அநேகமாக அனைத்து காங்கிரஸ் ஆண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார். 1906 ஹிந்து மஹாசபா இயக்கத்தை நிறுவினார். பிriட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்பதற்க்காக ஹிந்து மஹாசபா அங்கத்தினர் போராடினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து போராடும் பொருட்டு, அனைத்து தேர்தல்களில் போட்டியிடுவதை கைவிட்டார்.
இவர் பிரிட்டிஷ் காலனிகளுக்கு வேலை செய்யும் பொருட்டு இந்தியர்களை அடிமைகளாக கொண்டு செல்வதை எதிர்த்து போராடினார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1918, 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பனாரஸ்-ஹிந்து பல்கலைகழகத்தை வாரனாசியில் நிறுவனம் செய்தார்.
இப்படி பல்வேறு துரைகளிலும் பணியாற்றிய மற்றும் இந்தியாவின் விடுதலைக்கு போரடியவருமாகிய அந்தத் தலைவர் மதன் மோகன் மாளவியா.
(For ItsDiff Radio – July 27, 2011)