நவம்பர் 2010


(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த ஹாலில் ஏற்கனவே கடை போட்டிருந்த நகைக் கடைக்காரர்களின் வாடிக்கையாளர்கள் வந்து விடுவார்கள் ஆகையினால் பேச்சை இத்துடன் முடித்துக் கொள்ளவும் என்று தகவல் வந்தது. குறைந்தது மூன்று மணி நேரமாவது தனக்கு நேரம் வேண்டும் என்றும் தான் மிரட்டப் பட்டது, தனக்கு விடப் பட்ட தூதுக்கள், ஆளும் குடும்பத்தினரால் விடுக்கப் பட்ட மிரட்டல்கள், பல்வேறு ஊழல்களின் பின்ணணிகள் குறித்து முழுவதுமாகப் பேச தனக்கு 3 மணி நேரமாவது ஆகும் என்ற சொன்னவரின் பேச்சு ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே முடித்துக் கொள்ளப் பட்டது பெருத்த ஏமாற்றமளித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டார்களின் கவனக் குறைவினால் அவருக்கு இடமும், நேரமும் வழங்கப் படாதபடியால் அவரால் முழு விபரங்களையும் பேச முடியாமல் போனது. அப்படி பொது இடம் கிடைக்காத பட்சத்தில் ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் வீட்டு காரேஜிலேயே கூட்டத்தை வைத்திருந்திருக்கலாம். இந்தக் குளறுபடியினால் அவர் பேச வந்தது எதையுமே முடிக்க முடியாமல் போனது. தான் பேச வந்ததை வேகமாக முடித்துக் கொள்ளும் அவசரத்திற்குத் தள்ளப் பட்டார். அதனால் இன்றைய தி மு க அரசின் பல்வேறு ஊழல்கள் குறித்து அவரால் விபரமாகப் பேச முடியாமல் போய் விட்டது. அவற்றைச் சொல்வதற்கு அவர் தயாராக இருந்த பொழுதிலும் அரங்கம் கிடைக்காததினால் பாதியிலேயே அவர் நிறுத்த வேண்டி வந்தது.

பேச நினைத்ததைப் பேசக் கூட உரிய அவகாசமும் இடமும் கிட்டாத பொழுது அவரது பேச்சில் சிலர் குறுக்கிட்டு தேவையற்ற/அபத்தமான கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருந்தது எரிச்சலை வரவழைத்தது.

நிகழ்ச்சி அவசர அவசரமாக முடிக்கப் பட்டதினால் அவரிடம் நான் கேட்க்க நினைத்த கேள்விகளை கேட்க்க முடியாமலேயே வெளியேறினேன். நிச்சயமாக் உமா ஷங்கர் தமிழ் நாட்டு நிர்வாகத்தில் நிகழ்த்திய சாதனைகளும், அவரது துணிவான போராட்டங்களும், அமைப்பு ரீதியான மாறுதல்கள் குறித்தான அவரது தெளிவான பார்வைகளும் பாராட்டுக்குரியவையே. அன்று ஒரு சந்திரலேகா அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்த பொழுது ஆசிட் வீசி தாக்கப் பட்டார். அவருக்கு சாதி சங்கங்கள், மத அமைப்புகளின், ஜாதி சார்ந்த கட்சிகளின் ஆதரவு இல்லை. அதனால் அவரால் தொடர்ந்து எதிர்த்துப் போராட முடியாமல் போனது. சந்திரலேகா போல ஒரு ஜாதி ஆதரவு இல்லாத அதிகாரியாக இருந்திருந்தால் உமா ஷங்கர் இன்று துணிவுடன் போராடியிருக்க முடியாது.  இன்று உமா ஷங்கருக்கு அவர் சார்ந்த தலித் சங்க அமைப்புகளும், மாயாவதி கட்சி போன்ற தலித் கட்சிகளின்  ஆதரவும் இருப்பதினால் கருணாநிதி அரசினால் அவரை எதுவும் செய்ய முடியவில்லை அவரது உரத்த குரலை ஒடுக்க முடியவில்லை. தலித் அமைப்புகளின் தொடர் போராட்டங்களுக்கும், எஸ் சி கமிஷனுக்கு உமா ஷங்கர் அனுப்பிய மனுவினைக் கண்டு பயந்தும் மிரண்டு போய் கருணாநிதி அரசு உமா ஷங்கரை மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது. தேர்தல் வரும் சூழலில் ஒரு தலித் அதிகாரியைப் பழி வாங்குவதன் மூலம் தலித் மக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி விட்டார்கள். அவரது பாதுகாப்புக்கு ஜாதி அமைப்புகளும், ஜாதி கட்சிகளின் ஆதரவும் தேவையாக உள்ளது. எந்தவித ஜாதீய பின்புலனும் இல்லாத அரசு அதிகாரிகள் இப்படி அரசின் ஊழல்களை எதிர்த்துப் போராடியிருந்தால் ஒரேயடியாக நசுக்கப் பட்டிருப்பார்கள். சந்திரலேகா, உபாத்யாயா, நடராஜன், விஜயகுமார் போன்ற அதிகாரிகளுக்கு வலுவான ஜாதியப் பின்புலம் இல்லாத காரணங்களினாலேயே அவர்கள் பழிவாங்கப் பட்டார்கள். உமா ஷங்கருக்கு மக்களிடம் இருந்த அபிமானமும், மரியாதையும், அன்பும் அவருக்கு தேவையான தார்மீக வலுவையும் ஆதரவையும் அளித்தன என்றாலும் அவை மட்டுமே சர்வ வல்லமை படைத்த சக்தியுள்ள ஒரு குடும்ப மாஃபியாவினை எதிர்க்கப் போதுமானது அல்ல. மக்களின் ஆதரவை விட வலுவான ஜாதீய சங்கங்கள், ஜாதீய அரசியல் கட்சிகளின் ஆதரவினால் மட்டுமே அவர் மீண்டும் பணியில் அமர்த்தப் பட்டுள்ளார். அந்த ஆதரவின் காரணமாக மட்டுமே பதவியில் இருந்தாலும் அமெரிக்கா வரை பயணம் செய்து ஊழலை எதிர்த்து துணிந்து பிரச்சாரம் செய்ய முடிந்திருக்கிறது. வலுவான ஜாதி, மதப் பின்ணணி இல்லாத எந்த அதிகாரியாவது இவ்வளவு தூரம் போராடியிருந்தால் இந்நேரம் கொலை கூடச் செய்யப் பட்டிருப்பார்கள்.

இன்று இவருக்கு ஆதரவாக ஏராளமான வலைப் பதிவர்கள் கூட கையெழுத்து வேட்டை, தார்மீக ஆதரவு வலைப் பதிவு எல்லாம் நடத்துகிறார்கள். அதே வலைப் பதிவாளர்கள் ஒரு சந்திரலேகாவோ, ஒரு நடராஜன் ஐ பி எஸ் ஸோ, ஒரு விஜய குமார் ஐ பி எஸ்ஸோ இது போன்ற போராட்டம் நடத்தியிருந்தால் ஆதரவு தர மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் இவர்கள் வெறுக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.  தங்களை அறிவு ஜீவிகளாகக் கருதிக் கொண்டு செயல்படும் வலைப் பதிவர்கள் தங்கள் ஜாதி, தங்களின் அஜெண்டாக்களுக்கு ஒத்து வருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்கும் இரட்டை வேடதாரிகள். தமிழ் நாட்டு அரசியலை விடக் கேவலமான அரசியலை தமிழ் இணையத்தில் செய்யும் நபும்சகர்கள் இவர்கள்.

இதைப் போன்ற ஜாதி,மத, கட்சி ஆதரவு இருந்தாலும் கூட எத்தனை அதிகாரிகள் ஊழல்களைத் துணிவாக எதிர்த்துப் போராடுகிறார்கள் என்பது அடுத்தக் கேள்வி. அரசியல், ஜாதி, மத, மக்கள் ஆதரவு பின்புலன்களையும் தாண்டி அடிப்படையிலேயே ஒரு தார்மீக நிலைப்பாடும், துணிவும் கொண்டே உமா ஷங்கர் ஆரம்பம் முதலே செயல் பட்டு வந்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்க போற்றுதலுக்குரிய நெஞ்சுரம் நேர்மை மிக்க ஒரு துணிவான செயலாகும். அதற்கான பாராட்டுதல்களும் ஆதரவும் அவருக்கு என்றும் உண்டு.

இருந்தாலும் உமா ஷங்கரின் நேரமையான தார்மீகப் போராட்டங்களையும் மீறி பாலில் கலந்த ஒரு துளி நஞ்சாக நம்மை உறுத்துவது அவரது கிறிஸ்துவ மத மாற்ற ஆதரவு நிலைப்பாடு. அரசாங்கம் அவர் மீது சுமத்தியக் குற்றச்சாட்டு அவர் ஒரு தலித் கிறிஸ்துவர் என்பதை மறைத்து தன்னை இந்து என்று பொய் சொல்லி ஒரு தலித் இந்துவுக்குச் சென்றிருக்கக் கூடிய ஐ ஏ எஸ் பதவியை கள்ளத்தனமாக பறித்து விட்டார் என்பது. உமா ஷங்கரின் பேச்சுக்களைப் படித்தலில் இருந்து அந்தக் குற்ற சாட்டில் உண்மை இருக்கும் என்றே தோன்றுகிறது. அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு மீண்டும் பணியில் அமர்த்தியவுடன் அவர் பேசியதாக பத்திரிகையில் வந்த சில பேச்சுக்கள் அவர் மீது இருந்த நல்லெண்ணத்தை அழித்து விட்டன. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டுமோ இல்லையோ அரசாங்கத்தின் ஊழல்களை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரி நிச்சயமாக சந்தேகத்திற்கும் குற்றசாட்டுக்களுக்கும் அப்பாற்பட்டவாரக இருக்க வேண்டும்.

ஆனால் இவரோ இந்து தலித்துகளை கிறிஸ்துவர்களாக மாறச் சொல்லி அறிவுறுத்தியும், மாறிய பின்னால் பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் பதவிகளை மட்டும் கோட்டாவில் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் இவரிடம் பணிந்து பயந்து போனதற்குப் பின்னால் கிறிஸ்துவ சர்ச்சுகளின் அரசியலும் இருக்கலாமோ என்ற ஐயம் உருவாகிறது. தான் இன்று இந்துவாக இருந்து கொண்டே பதிவு செய்து கொள்ளாத கிறிஸ்துவராகச் செயல் படுவதாகவும் தான் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டதற்கு கர்த்தரின் ஆசியே காரணம் என்றும் சொல்லியுள்ளார். இவரது கடவுள், மத நம்பிக்கை தனிப்பட்ட விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது. ஆனால் இங்கு இவரது மதமாற்ற ஆதரிப்பே கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி இவரது அடிப்படை நேர்மை மீதே சந்தேகத்தை உருவாக்குகிறது. கிறிஸ்துவராக மாறிய பின்னும் இந்து பெயரில் இருந்து கொண்டே இந்து தலித்துக்களுக்கான சலுகைகளை அனுபவியுங்கள் என்று இவர் செய்திருக்கும் போதனை  நேர்மையான வழிமுறை அல்ல. மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை கேட்டு சட்டத்தை மாற்றச் கோரி போராடலாம். அந்தக் கோரிக்கையில் நியாயம் இல்லாவிட்டால் கூட அது ஒரு  நேரான  வழிமுறையாக இருக்குமே அன்றி சட்டத்தை ஏமாற்றி கிறிஸ்துவராக மாறி விட்டு இந்துக்களுக்குரிய சலுகையை அபகரித்துக் கொள்ளுமாறு சொல்லுவதும் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு நிகரான நேர்மையற்ற செயலே ஆகும். அப்படியாகப் பட்ட மத ஆதரவுப் பிரச்சாரம் ஆளும் கட்சியின் ஊழல்களுக்கு சற்றும் குறைந்தது அல்ல இந்த ஏமாற்று வேலை. முதலில் இவரது பேச்சுக்கள் மதமாற்றத்தை ஊக்குவித்து அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கக் கூடியது. இரண்டாவதாக சட்டப் படி ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுவது. இந்தப் பேச்சுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரது தார்மீகக் கோபம், ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், நேர்மை, நாணயம் எல்லாவற்றையுமே அர்த்தமிழக்கச் செய்து விழலுக்கு இறைத்த நீராக்கி விடும். இவை குறித்து இவரிடம் என் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிய விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாதபடியால் அவர் மீதான ஒரு சந்தேகங்களுக்கு அவரிடமிருந்து பதில்களைப் பெற முடியாமல் போய் விட்டது. அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடுகள் காரணமாக அவரது செயல்பாடுகளை  நான் சற்று சந்தேகத்துடனேயே அணுக வேண்டிய நிலையில் இருக்கிறேன். அவரது கிறிஸ்துவ மதமாற்ற நிலைப்பாட்டை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு அயோக்யத்தனத்தை ஆதரித்துக் கொண்டு மற்றொரு அயோக்யத்தனத்தை எதிர்க்கிறேன் என்று அவர் சொல்வாரானால் அது நேர்மையான செயலாகாது, செல்லுபடியாகாது, நம்பபிக்கையளிக்காது, அவர் மீதான் அவநம்பிக்கையை வளர்க்கவே உதவும்.  அவரது மதமாற்ற ஆதரவு நிலைப்பாடும் கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் பேச்சுமே அவரது அத்தனை நேர்மையையும், போராட்டத்தையும், சாதனைகளையும் கேள்விக்குரியாக்கி விடுகின்றன. ஊழலை எதிர்க்கும் ஒருவர் மதமாற்றத்தை ஆதரிப்பதும் அதன் மூலமாக சட்ட விரோதச் செயல்களை செய்யச் சொல்லி ஊக்குவிப்பதும் சரியான நிலைப்பாடு அல்ல. கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளுக்கு அவரது வெளிப்படையான ஆதரவும் மதம் மாறி விட்டாலும் அதை வெளியில் காண்பிக்காமல் தலித்துக்கள் தொடர்ந்து இந்து மதப் பெயர்களில் செயல் பட்டு அரசாங்கத்தின் ரிசர்வேஷனை அனுபவிக்க வேண்டும் என்ற அவரது அறிவுரை அவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாடுகளுக்கு எதிராக உள்ளன.

சந்தேகத்துக்கிடமில்லாத முழு அறவுணர்வும், அப்பழுக்கற்ற அனலாக கண்ணகியிடம் இருந்ததினாலேயே அவளால் அரசனிடம் துணிந்து நீதி கேட்க்க முடிந்தது, மதுரையை எரிக்க முடிந்தது. கண்ணகியின் அறத்தில் களங்கம் இருந்திருந்தால் அவளது நேர்மையில் கறை இருந்திருந்தா நீதியும் கிடைத்திராது, மதுரையும் எரிந்திருக்காது. ஆகவே உமா ஷங்கர்   ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த கட்டம் செல்வதற்கு முன்பாக, அவரது சர்ச்சைக்குரிய இந்த நிலைப்பாடு குறித்து அவர் தெளிவு படுத்த வேண்டியது மிக அவசியம். அதிகாரத்திற்கும் ஆளும் சர்வாதிகாரிகளுக்கும் எதிரான போராட்டத்தினை நடத்திச் செல்பவர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பு என்ற அஸ்திரமே கேலிக்குரியதாகப் போய் மக்களின் ஆதரவை இழந்து விடும். இதை உமா ஷங்கர் போன்றவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

(முற்றும்)

தொடர்புடைய பிற பதிவுகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 2

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags

(ராஜனின் உமா சங்கர் பற்றிய கட்டுரையின் தொடர்ச்சி இது)

பேச ஆரம்பித்து ஒரு கால் மணி நேரம் சலசலப்பு. வருகிற அனைவரையும் உட்காரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தார் உமா ஷங்கர்.  தமிழ் நாட்டில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் எச்சமாக ரெவின்யூ அதிகாரிகளுக்கு இருக்கும் பந்தாவும், அதிகாரமும், எடுபிடிகளும், ப்ரோட்டாக்கால்களும் ஐ ஏ எஸ் களுடன் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று அதிகாரிகளுடன் பழகியவர்களுக்கும் அதிகாரிகளின் பந்தாக்களை நேரில் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அரசு அதிகாரிகள் அதிலும் குறிப்பாக போலீஸ், ரெவின்யூ அதிகாரிகளுக்கு நம் நாட்டில் பொது இடங்களிலும் அவர்கள் வேலை செய்யும் அலுவலகங்களிலும் தேவையில்லாமல் பெரும் மரியாதையும் சிறப்பு உபசரிப்புகளும் சலுகைகளும், ராஜ மரியாதைகளும் சாதாரண மக்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் எப்பொழுதுமே அளிக்கப் பட்டு வருகின்றன.  இவர்களுக்கு எப்பொழுதுமே இரண்டு கொம்புகள். இவர்கள் எப்பொழுதுமே பூமியில் இருந்து ஒரு அடி உயரத்திலேயே பறக்கும் வர்க்கத்தினர். அவர்கள் நினைப்பதற்கு முன்னாலேயே அவர்கள் விருப்பம் நிறைவேற்றி விட ஏராளமான உதவியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கண்கள் கரும்பைப் பார்த்தாலே உதவியாளர்கள் சர்க்கரையுடன் வந்து நிற்பார்கள். ஒரு மைல் நீளத்திற்கு கைகளில் மாலைகளுடனும், பழங்களுடனும் இவர்கள் வீடுகள் முன்னால் அதிகாலையில் இருந்தே இவர்களுக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் க்யூவில் காத்து நிற்கும் கண்றாவிக் காட்சியை ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியிலும் தவறாமல் காணலாம். விழா ஒன்றில்  கலந்து கொண்டிருந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி சட்டைப் பையில் இருந்து பேனாவை பின்னால் நின்ற தனது உதவியாளரிடம் கொடுக்க அவர் அதன் மூடியைத் திறந்து கொடுத்தவுடன் பேனாவில் எழுதி விட்டு மீண்டும் பேனாவை உதவியாளரிடம் கொடுக்க அவர் அதை மூடித் தர தன் சட்டைப் பையில் சொருகிக் கொண்ட வைபவத்தை ”பேனாவின் மூடியக் கழற்றவே ஒரு எடுபிடி தேவையென்றால் ஒரு வேளை “மற்றதையும்”  போட்டு விடவும், கழட்டி எடுக்கவும் இவருக்கு எடுபிடிகள் இருப்பார்களோ?” என்று தனக்கேயுரிய நக்கலுடன் ஐயம் தெரிவித்திருந்தார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அப்படியாகப் பட்ட பேனாவின் மூடியைத் திறந்து கொடுக்கக் கூட எடுபிடிகளை வைத்துக் கொள்ளும் நம் இந்திய அதிகார வர்க்கத்தில் இருந்து, ஆணவமும் அதிகாரமும் நிரம்பிய பாபுக்களின் முகாமில் இருந்து வந்திருக்கும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி, கூட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரையும் உபசரித்து உட்கார சொல்லுவதில் மும்முரமாக இருந்த பணிவையும் கரிசனத்தையும் கண்ட பொழுது எனக்கு  நிஜமாகவே இந்த உமா ஷங்கர் ஒரு இந்திய அரசு அதிகாரிதானா என்ற சந்தேகமே வந்து விட்டது.
வருகிறவர்களுக்கு எல்லாம் சேர் போட்டு உட்காரச் சொல்லி உபசரிப்பதிலேயே முதல் கால் மணி கழிந்து விட்டது. ஒரு வழியாக பேச ஆரம்பித்த பொழுது 4 மணி தாண்டியிருந்தது. உமா ஷங்கர் பேசியதின் சாரம் :

1. தான் இன்னமும் ஒரு அரசு அதிகாரி எந்தவிதமான அரசியல், பண ஆதாயத்திற்காகவும் தான் ஊழலை எதிர்த்துப் போராடவில்லை என்றும் தனக்கு  அரசியலுக்கு வரும் நோக்கம் கிடையவே கிடையாது  அரசியலுக்கு வரவே மாட்டேன் என்றும் தன்னிலை விளக்கம் கொடுத்தார். ”நீங்கள் மூன்று முறை அரசியலுக்கு வரவே மாட்டேன் சொன்னபடியால் நீங்கள் நிச்சயம் வருவீர்கள் அதுதான் தமிழ் நாட்டு குழுவூக் குறி” என்று ஒருவர் சத்தமாகச் சொல்ல, அதை மறுத்து தான் அரசியலுக்கு வரப் போவதேயில்லை என்று மீண்டும் உறுதியளித்தார்.

2. இன்றைய தமிழக அரசில் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களின் வரிசையில் கருணாநிதி, அழகிரிக்கு அடுத்ததாக தன் நேர்மையின், திறமையின், கடமையின் காரணமாக மட்டுமே தனக்கென்று ஒரு சக்தி வாய்ந்த இடம் இருப்பதாகவும், அரசியலில் சேர்ந்து அதிகார அடுக்கில் தனக்கு இருக்கும் அந்த உயர்ந்த இடத்தில் இருந்து  தன்னை கீழே தள்ளிக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிகார அமைப்பின் உள்ளே இருந்து கொண்டே ஊழலை எதிர்க்கும் இயக்கங்களுக்கு தன் ஆதரவையும், ஆலோசனைகளையும், உந்துதலையும் கொடுக்கப் போவதாகவும் அதற்காகவே இந்தக் கூட்டத்தில் பேச வந்திருப்பதாகவும் குறிப்பிட்டு விட்டு தன் பேச்சைத் தொடர்ந்தார்.

3. தான் எல்காட் என்ற அரசு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பொழுது, எல்காட்டின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப் பட்ட ஒரு நிறுவனம், எல்காட்டின் போர்டுக்குத் தெரியாமலேயே ரகசியமாக தனியார் ஒருவருக்கு மாற்றப் பட்டு பல நூறு கோடி ரூபாய்களுடன் ஒரு அரசு நிறுவனமே மாயமாக மறைந்து போய் தனியார் நிறுவனமாக மாறிய மர்மத்தைத் தோண்ட ஆரம்பித்தவுடன், தியாகராஜ செட்டியார் என்ற ஒருவர் சர்வ வல்லமை வாய்ந்த மதுரை அழகிரியிடம் முறையிட்டவுடன் உடனுக்குடன் தான் மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டதாகக் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழல் அளவு இல்லாவிட்டாலும் கூட இந்த ஊழலும் பல நூறு கோடி ரூபாய்கள் மதிப்புள்ளது. எல்காட்டில் இருந்து மாற்றப் பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த நிலையில் கருணாநிதி குடும்பத்திற்கும் மாறன் சகோதரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில்  பிரிவு வந்தவுடன், மாறன் சகோதரர்களின் சுமங்கிலி கேபிள் என்ற நிறுவனத்தின் ஊடுருவலை எதிர்த்து அரசாங்கமே  ஒரு அரசு கேபிள் நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் நிர்வாக இயக்குனராகச் செயல் படும் படி தன்னை கருணாநிதி கேட்டுக் கொண்டததினால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். ஊழல்வாதியான எல்காட்டின் சேர்மனின் கீழ் தன்னால் வேலை செய்ய முடியாது என்ற நிபந்தனையில் பேரில் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பதவியேற்றவுடன் தயாநிதி மாறனை சந்தித்து இது போட்டி நிறுவனம் அல்ல ஒரு அரசு நிறுவனம் மட்டுமே என்று விளக்கியதாகத் தெரிவித்தார் (எதற்காக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியான உமா ஷங்கர் தனியார் கேபிள் உரிமையாளாரான ஒரு தயாநிதி மாறனை சந்தித்து அரசு முடிவு குறித்து விளக்க வேண்டும் என்ற சந்தேகம் எனக்கு வந்தது, கேள்வி கேட்டு அவரது பேச்சை துண்டிக்க வேண்டாம் இறுதியில் கேட்டுக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன், பின்னால் கேள்வி கேட்கும் வாய்ப்பு கிட்டாமலேயே போய் விட்டது)

4. மீண்டும் ஆளும் குடும்பத்திற்குள் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் அரசு சார்பில் துவங்கப் பட்ட கேபிள் நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட ஆதரவு குறைந்துள்ளது. கோவை நகரிலும் பிற நகரங்களிலும் அரசு கேபிள் நிறுவனத்தின் கட்டமைப்புகள் உடைக்கப் பட்டு, கேபிள்கள், ஆண்டனாக்கள் முதலிய கட்டுமானங்கள், அரசின் பொதுச் சொத்துக்கள் மாறன் சகோதரர்களின் அடியாட்களினால் அழிக்கப் பட்டதாகவும் அது குறித்து தொடர்ந்து முதல்வருக்கும், உள்துறை செயலருக்கும், போலீஸுக்கும் புகார் அனுப்பியும் எவருமே கண்டு கொள்ளாமல் அந்த அழிப்பை தொடர அனுமதித்ததினால் தானே நேரில் சென்று அவற்றை தடுக்கத் தொடங்கியதாகவும் தெரிவித்தார். அவ்வாறு தானே நேரில் சென்று அரசாங்கச் சொத்துக்கள் அழிவதைத் தடுக்கத் தலையிட்டவுடனேயே மாறன் சகோதரர்களின் தூதுவர் ஒருவர் கோவை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதைத் தருகிறோம் எங்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள் என்று பேரம் நடத்தியதாகச் சொன்னார்.  பேரம் நடத்த வந்தவர்களிடம் நீங்கள் அளிக்கும் பணம், பதவி எதுவும்  எனக்குத் தேவையில்லை நான் என் கடமையைச் செய்வேன் என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். மாறன் சகோதரர்களின் நெருக்குதலுக்குத் தான் பணியாமல் போனபடியால் போலியான ஜாதிச் சான்றிதழை அளித்து ஐ ஏ எஸ் பதவி பெற்ற குற்றத்திற்காகவும் வருமானத்திற்கும் மேலான சொத்து சேர்த்த குற்றத்தின் அடிப்படையிலும் தன்னை அரசாங்கம் தற்காலப் பணி நீக்கம் செய்ததாகக் குறிப்பிட்டார்.

5. தயாநிதி மாறன், கலாநிதி மாறன் இருவரும் ரவுடிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் குண்டர்கள் என்றும் சமூக விரோதிகள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறை வைக்க தான் பரிந்துரைத்தினாலேயே தான் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாகக் கூறினார். அழகிரியின் தலையீடு பற்றியும் அதன் மூலம் அரசாஙக்த்திற்கு ஏற்படும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் நஷ்டம் குறித்தும் தயங்காமல் பேசினார். கருணாநிதி குடும்பத்தார் அரசின் கடமைகளில் குறுக்கிட்டு பல லட்சம் கோடி ஊழல்களைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார். லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஜெயலலிதா அரசின் மீதான தன் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்த தி மு க இன்று பல லட்சம் கோடிகள் மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து வருவதாகக் குறிப்பிட்டார். கருணாநிதிக்கும், பிறருக்கும் தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகள் குறித்தும் குறிப்பிட்டார்.

6. தனது முதல் பணியில் இருந்து ஒவ்வொரு பணியிலும் தான் எவ்வாறு அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரங்களுக்கும் பணியாமல் ஊழலுக்கு இடம் தராமல் பணியாற்றினேன் என்பதை பல உதாரணங்கள் மூலமாக விளக்கினார். மதுரையில் துணைக் கலெக்டராக இருந்த பொழுது சுடுகாட்டுக்கு கூரை போடும் விஷயத்தில் நடந்த ஊழலை எதிர்த்துப் புகார் செய்தபடியால் அப்பொழுதைய ஜெயலலிதா அரசினால் முக்கியத்துவம் இல்லாத துறையில் பல ஆண்டுகள் வேலை பார்த்தாகவும் கூறினார். அப்பொழுதய ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் கேவலம் பத்து லட்சங்களிலேயே இருந்தது எனவும் இன்றைய அரசின் ஊழல்கள் அனைத்துமே பல்லாயிரக் கணக்கான கோடிகள், லட்சக்கணக்கான கோடிகள் புரளும் பிருமாண்டமான ஊழல்கள் என்று குறிப்பிட்டார். இவர்களுடைய ஊழல்களை ஒப்பிடும் பொழுது ஜெயலலிதா அரசின் ஊழல்கள் வெறும் தூசு என்றார்.

7. சஸ்பெண்ட் ஆன பின் தனக்கு வந்த மிரட்டல்கள் குடும்பத்தாரின் உதவியுடன் தான் மேற்கொண்ட சட்டபூர்வமான நடவடிக்கைகள் தனக்குக் கிட்டிய ஆதரவுகள் அதனால் அரசு மீண்டும் தன்னை வேலையில் அமர்த்தியது ஆகியவற்றை வேகமாகப் பேசி தான் சஸ்பெண்ட் ஆன விஷயத்தின் பின்ணணியை முழுவதும் சொல்லாமல் அவசரமாகப் பேசி முடித்தார்.

8. தமிழக அரசின் ரெவின்யூ டிப்பார்ட்மெண்டில் நிலவும் லஞ்சத்தின் நிலமை அதற்கான காரணங்கள் ஆகியவற்றை ஒளிவு மறைவின்றிப் பேசினார். ஒரு அரசு அதிகாரியே அரசாங்கத்தில் நடக்கும் ஊழல்களை லஞ்ச லாவண்யங்களை எந்த விதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியது
ஆச்சரியமே. கலெக்டர் ஆஃபீசின் ஒவ்வொரு நிலையிலும் லஞ்சம் கொடுக்காமல் எதையுமே சாதிக்க முடியாது என்பதை விளக்கினார்.

9. அரசின் ரெவின்யூ துறையில் சாதாரண வி ஏ ஓ, தலையாரியில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அலுவலர்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள், செயலர்கள், மந்திரிகள் வரை நடக்கும் ஊழல்களை மிக விரிவாகவும் வெளிப்படையாகவும் விளக்கினார். ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தன் அரசாங்கத்தின் புழுத்து அரித்துப் போன ஊழல்களை இவ்வளவு வெளிப்படையாகப் பேசி நான் கேட்ப்பது இதுவே முதல் முறை. நிலத்திற்கு பட்டா வாங்கப் போனால் நிலத்தின் மதிப்பின் படி ஆயிரம் முதல் லட்சங்கள் வரை கொடுக்காமல் யாராலும் தமிழ் நாட்டில் நிலப் பட்டா வாங்கி விட முடியாது என்ற நிலையை விளக்கினார்.

10. தனக்கு அமெரிக்க, இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றிலும் சி ஐ ஓ, சி டி ஓ போன்ற பல பதவிகள் காத்திருந்த பொழுதிலும் கூட, தனக்கு கொலை மிரட்டல் வரை இருந்த பொழுதிலும் கூட கடைசி வரை ஐ ஏ எஸ் பதவியில் இருந்து தன்னால் முடிந்த வரை துணிந்து ஊழல்களை எதிர்த்துப் போராட முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு தன் குடும்பத்தாரின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து அதற்கு உறுதுணையாக இருக்கும் தன் மனைவியையும் அறிமுகப் படுத்தினார்.

11. தனது இருபதாண்டுகளுக்கு மேலான அரசுப் பணியில் பல்வேறு சோதனைகளையும் தடைகளையும் இடையூறுகளையும் மீறி தனது பல்வேறு சாதனைகளை குறும் படங்கள் மூலமாகவும், அட்டவணைகள் மூலமாகவும், புகைப் படங்கள் மூலமாகவும் விளக்கினார். திருவாரூர் மாவட்டத்தில் மாநிலத்திலேயே முதன் முதலாக மாவட்ட நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கியதன் மூலம் முதன் முதலாக இ-கவர்னன்ஸை அமுல் படுத்தியதைத் தன் பெரும் சாதனையாகக் குறிப்பிட்டார். அதைப் போல ஒரு முழுமையான சிஸ்டத்தை அதன் பிறகு எந்த மாவட்டத்திலும் அமுல் படுத்த இயலவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.  எல்காட்டின் தலைவராக இருந்து மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் ஐ டி பார்க்குகளையும் உருவாக்கியது, ரேஷன் கடைகளில் துல்லியமாகவும் கள்ள வியாபாரத்தைத் தடுக்கும் விதமாகவும் கொண்டு வந்த எலக்ட்ரானிக் அளவு மானிகளையும், ரசீது இயந்திரங்களையும் அறிமுகப் படுத்தியது, எல்காட்டிலும், மாவட்ட நிர்வாகங்களிலும் நடந்த பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்ந்தது ஆகியவற்றை தனது சாதனைகளாக விளக்கினார்.

12. இந்த ஊழல்களையும், மிரட்டல்களையும், அராஜகங்களையும் நிறுத்த வேண்டுமானால் இந்தியா ஊழலில்லாத தேசமாக மாற வேண்டும் என்றால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாத தன்னாட்சி அமைப்புகள் உருவாக்குவதே ஒரே வழி என்றார். சட்டமன்றம் சட்டம் இயற்றுவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டுமே அன்றி நீதித் துறை போலவே காவல் துறையும் சிவில் நிர்வாகமும் சுயாட்சி உடைய தனி அமைப்புகளாகச் செயல் படாத வரை ஊழலை ஒழிக்கவே முடியாது என்று குறிப்பிட்டார். போலீஸ், சிவில் நிர்வாகம் தனி அமைப்புகளாக செயல் பட்டால் அரசியல்வாதிகளின் கட்டற்ற சக்தி குறைந்து விடும் என்றும் அவர்களால் அதிகாரிகளை மிரட்ட முடியாது என்றும் அதன் மூலமாக ஊழலற்ற அரசாங்கம் சாத்தியப் படும் என்பதையும் விளக்கினார்.

13. அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும்ம் இந்தியர்களுக்கும் அவர்களின் செல்வாக்கு, அறிவு, அமெரிககவின் மீதான மதிப்பு காரணமாக இந்திய அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஒரு வித மரியாதை நிலவுவதாகவும் ஆகவே இந்திய அரசியல்வாதிகளிடம் உங்களைப் போன்ற என் ஆர் ஐ க்கள் இந்த சீர்திருத்தம் குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதை வலியுறுத்தவதற்காகவே தான் இந்தப் பயணத்தை மேற்க் கொண்டதாகவும் தெரிவித்தார். லோக்சத்தாவின் ஜெயப்ரகாஷ் நாராயணன் அவர்களின் கூட்டம் பற்றி நான் ஏற்கனவே இங்கு எழுதியிருக்கிறேன். அதே பாணியிலேயே அமைப்புச் சீர்த்திருத்தமே ஊழலை ஒழிப்பதின் முதல் படி என்பதை வலியுறுத்தியே உமா ஷங்கரும் வலியுறுத்தினார்.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பகுதிகள்

கலிஃபோர்னியாவில் உமா ஷங்கர் ஐ ஏ எஸ் பகுதி 1

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags

(சமீபத்தில் உமா சங்கர் சான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதிக்கு வந்திருந்தார்.  ராஜன் அவரை பற்றி இந்த இடுகையை அனுப்பியுள்ளார். ஓவர் டூ ராஜன்…)

 

உமா சங்கர் ஐ ஏ எஸ் பேச இருப்பதாக  பே ஏரியா தமிழ் மன்றத்தில் இருந்து அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. எனக்கோ சில ஆச்சரியங்கள். உமா சங்கர் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி சமீப காலங்களில் ஆளும் குடும்பத்தின் சக்தி வாய்ந்த பிரமுகர்களான மாறன் சகோதரர்களை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று கோரியதாலும், கருணாநிதியின் துணைவி தன்னை அழைத்து தனக்கு வேண்டப் பட்டவருக்கு ஆர்டர் தருமாறு வற்புறுத்தியதாகவும் ஆளும் குடும்பத்தை எதிர்த்துத் துணிந்து நின்றதால், தமிழக அரசினால் குற்றம் சாட்டப் பட்டு, கருணாநிதி அரசாங்கத்தால் சஸ்பெண்ட் செய்யப் பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப் பட்டவர். அப்படி அரசுக்கு வேண்டப் படாத ஒரு அதிகாரி எப்படி, எதற்காக அமெரிக்கா வருகிறார் என்பது முதல் ஆச்சரியம்? பொதுவாக அரசு செலவில் அதிகாரிகளை அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு அனுப்புவதில் நிறைய அரசியல் நிலவும். ஆளுக் கட்சிக்கு வேண்டப் பட்ட அதிகாரிகளும் அல்லது ஆளும் கட்சிக்குச் சாதகமாக நடந்து கொள்ளும் அல்லது முறைத்துக் கொள்ளாத அதிகாரிகளைத்தான் வழக்கமாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒரு சலுகையாக அனுப்பி வைப்பார்கள். வேண்டாத அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் அப்ளை செய்யவே அரசின் தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி அளிக்க மறுத்து விடுவார்கள். அப்படியாகப் பட்ட ஒரு விசேஷ சலுகையை ஆளும் கட்சியை முறைத்துக் கொண்ட ஒரு ஐ ஏ எஸ் ஸுக்கு தருவது சாத்தியமேயில்லை. ஆகவே அவர் அரசுப் பயணமாக வந்திருக்கச் சாத்தியமில்லை என்பது வெள்ளிடை மலை. ஆக இது ஒரு தனிப் பட்ட விஜயமாகவே இருக்க முடியும். அப்படியே அவர் தனிப் பட்ட முறையில் விஜயம் செய்திருந்தாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டப்படாத ஒரு அரசு அதிகாரிக்கு அனுமதி அளித்தது மற்றொரு ஆச்சரியம். ஏனென்றால் வேண்டாத அதிகாரி என்றால், அவரது சொந்த வேலையின் காரணமாகக் கூடச் சென்னையில் இருந்து கூடுவாஞ்சேரி செல்ல வேண்டும் என்றால் கூட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்ப்பார்கள், அனுமதி கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆகவே உமா ஷங்கர் அமெரிக்கா வருகை தருகிறார் என்ற செய்தி பலத்த ஆச்சரியத்தை அளித்தது.

அடுத்து பே ஏரியா தமிழ் சங்கம்  கருணாநிதிக்கு நடிகர்களுக்குப் போட்டியாக  ஆடல் பாடல்களுடன் டெலிகாம் விழா எடுத்திருந்தார்கள். அப்படியாகப் பட்ட ஒரு கருணாநிதி ஆதரவு தமிழ அமைப்பு எப்படி கருணாநிதி அரசை எதிர்த்துப் போராடும் ஒரு அதிகாரியை வரவேற்று மேடை வழங்குகிறார்கள் என்பது இரண்டாவது ஆச்சரியம். எனக்கு உமா ஷங்கரின் மீது குறிப்பிட சில காரணங்களினால் சில சந்தேகங்கள் இருந்தாலும் கூட நேரில் போய் அவரை யார் அழைத்திருக்கிறார்கள், எதற்காக வந்திருக்கிறார், என்ன பேசப் போகிறார் என்று கேட்டு விடலாம் என்று வழக்கமான சனிக்கிழமை மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு, கூட்டம் நடைபெற இருந்த மில்பிட்டாஸ் ஸ்வாகத் ரெஸ்டாரெண்டுக்குச் சென்றிருந்தேன். நம் பாரதப் பண்பாட்டின் படி மூணு மணிக்கு கூட்டம் என்றால் எப்படியும் நான்கு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையின் பேரில் நான் 3.45க்கு சென்றிருந்தேன். நம் கலாச்சாரம் மீதான என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான்கு மணி அளவில்தான் மில்பிட்டாஸ் ஸ்வாகத் ஹோட்டலில் ஒரு பக்கம் தீபாவளிக்காக நகை விற்கும் நகைக் கடைக்காரர்கள் பளிச்சென்று விளக்கு போட்டு நகைகளை அடுக்கியிருக்க அதன் வெளிச்சத்தின் நடுவே, பொன்னகைகளின் நடுவே புன்னகையோடு உமா ஷங்கர் நின்று பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு முன்பே வரவேற்பு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்திருந்தன.

வழக்கமாக நான் சந்தித்திருக்கும் பெரும்பாலான ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள் போன்ற உயரமோ, கம்பீரமான தோற்றமோ, அர்விந்த் சாமி பள பளப்போ, ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கே இருக்கும் இயல்பான அதிகாரக் களையோ, பயமுறுத்தும் அதிகார முறுக்கோ இல்லாமலும், முக்கியமாக அரசு அதிகாரிகள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல பிறக்கும் பொழுதே தைத்துப் போட்டுக் கொண்டு வந்தது போன்ற சஃபாரி சூட்டு கோட்டு இல்லாமலும் வெகு சாதாரணமான தோற்றத்தில் நம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர் போல, பே ஏரியா டெக்கிகள் வீடுகளில் (இங்கு ஆஃபீசுக்கே அரை டவுசரில்தான் வேலைக்கு வருவார்கள்) அணிவது போன்றே ஒரு காலர் இல்லாத சாதாரண டீ ஷர்ட்டுடன் இயல்பாக எளிமையாகத் தோற்றமளித்தார். இவர் வழக்கமான அரசு அதிகாரி இல்லை என்பதும் அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளிதானவர், அதிகார பந்தா மிரட்டல் இல்லாத வித்யாசமான ஒரு அரசு அதிகாரி என்ற செய்தியை அவரது பேச்சும், உடல் மொழியும் தோற்றமும் அளித்தன. அவரது பேச்சும் கூட அலங்காரம் இல்லாத ஆடம்பரமில்லாத எளிய தமிங்க்லீஷ் பாணியிலேயே இருந்தது.

அங்கு வைக்கப் பட்டிருந்த விளம்பர பேனர்களைப் பார்த்தவுடன் அவர் யாரால் அழைக்கப் பட்டு இங்கு வந்திருக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. ஆந்திராவில் லோக்சத்தா அமைப்பின் டாக்டர் ஜெயப்ரகாஷ் நாராயணன் (இவரைப் பற்றியும் இவரது லோக் சத்தா அமைப்பினைப் பற்றியும் இங்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்) அவர்களால் உந்தப் பட்டு தமிழ் நாட்டில் அது போன்ற ஒரு அமைப்பான மக்கள் சக்தி என்ற ஒரு அரசியல் இயக்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் ஆனந்த் என்பவர் நடத்தி வருகிறார். அதன் அமெரிக்க கிளையுடன் சேர்த்து ஃபிப்த் பில்லர் என்றொரு நான் ப்ராஃபிட் அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது இந்தியாவில் ஊழலை எதிர்க்க ஆரம்பிக்கப் பட்ட ஒரு இயக்கம். லஞ்சம் கேட்டால் மறுக்கவும் பதிலாக பூஜ்ய ரூபாய் நோட்டைக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தும் ஒரு இயக்கம். லஞ்சம் கொடுக்கவும் மாட்டோம் வாங்கவும் மாட்டோம் என்பது இந்த அமைப்பின் பிரச்சார கோஷம். ”அன் எரப்ஷன் அகெயின்ஸ்ட் கரப்ஷன்” என்ற கோஷத்தோடு இந்த இயக்கம் ஐந்தாம் தூண் செயல் படுகிறது. அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விஜய் ஆனந்த மக்கள் சக்தி கட்சி மக்கள் சக்தி கட்சி என்ற அரசியல் அமைப்பையும் ஆந்திராவில் ஆரம்பிக்கப் பட்டுள்ள லோக் சத்தாவின் தமிழ் நாட்டும் வடிவமாக துவக்கியுள்ளார். ஐந்தாவது தூண் என்ற இவர்களது அமெரிக்க அமைப்பின் மூலமாக  தமிழ் நாட்டில் லஞ்ச ஊழலை எதிர்த்துத் துணிவுடன் போராடும் உமா சங்கர் ஐ ஏ எஸ் அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து அமெரிக்க வாழ் தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளார்கள். அவர்கள் அழைப்பின் பேரில் உமா ஷங்கர் அமெரிக்கா வந்துள்ளார்.

வந்த இடத்தில், லோக்கல் தமிழ் சங்கத்தின் ஆதரவைக் கோரியும் அவர்களுடன் இணைந்தும் கூட்டம் நடத்துகிறார்கள். உள்ளூர் பே ஏரியா தமிழ் மன்றம் இது நாள் வரை இவரைப் போன்ற ஒரு விஸில் ப்ளோயருக்கு ஆதரவும் மேடையும் அமைத்ததில்லை.  சமீபத்தில் இப்பகுதிக்கு வந்திருந்த இந்தியாவின் மற்றொரு முக்கியமான ஊழல் எதிர்ப்புப் விழிப்புணர்வாளர்களான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, குருமூர்த்தி போன்றவர்களை பே ஏரியா தமிழ் மன்றம் என்றுமே ஆதரித்து வரவேற்றதில்லை. ஆனால் முதன் முறையாக ஒரு அரசு அதிகாரி என்ற முறையில் இல்லாமல்  ஊழலை எதிர்த்துப் போராடும் ஒரு ஆக்டிவிஸ்ட் என்ற வகையில் உமா ஷங்கர் அவர்களுக்கு பே ஏரியா தமிழ் மன்றம் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத் தக்க ஒரு மாற்றமாகும். வருங்காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனி நபராகப் போராடி வரும் டாக்டர் சுவாமிக்கும் இதே ஆதரவை அளித்து அவருக்கும் மேடை அளிப்பார்கள் என்று நம்புகிறேன். கூட்டத்தில் தமிழில் பேசுவதா, ஆங்கிலத்தில் பேசுவதா என்ற சிறிய சர்ச்சைக்குப் பின்னால் ஆந்திர மாநில லோக்சத்தா அமைப்பினர் சிலரும் கூட்டத்திற்கு வந்திருந்தபடியால் ஆங்கிலத்திலேயே அவர் பேசுவதாக முடிவாகியது.

(தொடரும்)

 

தொடர்புடைய பிற பதிவுகள்

ஜே.பி – ராஜனின் அனுபவம்

A ray of hope to “Rejuvenate India”  By Bags

போஸ்ட் எழுதி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது. இன்னொரு வாரமாவது ஆகும், சில பல சொந்த வேலைகள். பக்ஸ் எழுதினால் உண்டு.

ஒரு வழியாக தி.மு.க.வை சேர்ந்த ராஜாவை மந்திரி பதவியிலிருந்து தூக்கிவிட்டார்கள். இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகும் ராஜாவை மந்திரி சபையிலிருந்து விலக்க – கவனியுங்கள் விலக்க, அவர் மீது கேஸ் கீஸ் போட இல்லை, just விலக்க – இத்தனை நாளானது கூட்டணி அரசியலின் மிக மோசமான விளைவுகளில் ஒன்று. இத்தனை பணம் நஷ்டமாயிருக்கிறது – நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ஆயிரத்து நானூறு ரூபாய் போச்சு – அந்த ராஜாவுக்கு தண்டனை மந்திரி பதவி போனது மட்டுமே. மொத்த நஷ்டம் 1.76 லட்சம் கோடி ரூபாய். அதாவது 17,60,00,00,00,000 ரூபாய். கிட்டத்தட்ட நாற்பது நாலு பில்லியன் டாலர்கள். (திருத்திய வீராவுக்கு நன்றி!) கலாநிதி மாறனின் நெட் வொர்த் மூன்று பில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இந்த வருஷ பட்ஜெட் deficit-இல் பாதி போல ஐந்து மடங்கு.

இந்த விஷயத்தைப் பற்றி தமிழ் ஹிந்து தளத்தில் விஸ்வாமித்ரா மிகச் சிறப்பான ஒரு பதிவை – இந்தியாவின் பிரதமர் மன்மோகன் அல்ல நீரா ராடியா – எழுதி இருக்கிறார். மூன்று பகுதிகளாக வந்திருக்கிறது – பகுதி 1, பகுதி 2, பகுதி 3.

இதை விட சிறந்த, அடர்ந்த ஒரு கட்டுரை இது வரை தமிழில் எந்தப் பத்திரிகையிலும் வரவில்லை. முழுமையான ரிப்போர்ட், எல்லா விஷயங்களையும் கவர் செய்கிறது. இந்த அளவுக்கு விலாவாரியான தமிழ் கட்டுரை எனக்குத் தெரிந்து இது ஒன்றுதான். கட்டாயமாகப் படித்துப் பாருங்கள்!

விஸ்வாமித்ராவின் அலசலே போதவில்லை இன்னும் விவரம் வேண்டும் என்பவர்கள் CAG ரிபோர்ட்டை படிக்கலாம்.

என்னைப் போல சோம்பேறிகளுக்காக ராஜாவின் திருவிளையாடல்கள் சுருக்கமாக:

  • 122 கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. இதில் 85 கம்பெனிகள் பொய்யான விவரங்களைக் கொடுத்திருக்கின்றன. ராஜாவின் டிபார்ட்மென்ட் கண்டுகொள்ளவில்லை.
  • அனுபவம் இல்லாத புதிய கம்பெனிகளுக்கு மலிவான விலையில் லைசன்ஸ் கொடுக்கப்பட்டது. (இதற்காகத்தான் First come First Served பாலிசி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் இந்த ராஜா) இதற்காகத்தான் மனு செய்வதற்கான கடைசி தேதி வேண்டுமென்றே ஒரு வாரம் முன்னால் நகர்த்தப்பட்டது. First-come-first-serve என்று ராஜா சொல்கிறாரே தவிர அதை விதிப்படியும் கடைப்பிடிக்கவில்லை, நியாயப்படியும் கடைப்பிடிக்கவில்லை.
  • சொன்னதற்கு மேலான அளவு ஸ்பெக்ட்ரம் 9 கம்பெனிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது (பாரதி டெலிகாம், ரிலையன்ஸ், ஏர்செல், வோடஃபோன்…)
  • அனில் அம்பானியின் கம்பெனிக்கு நிறைய சலுகை
  •       அம்பானி கம்பெனிக்கு மலிவு விலையில் லைசன்ஸ்
  •       லைசன்ஸ் கேட்டு மனு செய்த ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனியில் அம்பானி கம்பெனி 10%-க்கு மேல் ஷேர்களை வைத்திருந்தது. இது அரசு விதிகளை மீறிய செயல்.
  •       இப்போது ரிலையன்ஸ் லைசன்ஸ் கொடுக்கப்பட்டபோது 10%-க்கு உட்பட்டுத்தான் ஷேர் இருந்தது என்று சொல்கிறது. மனு செய்தபோது விதி மீறல் என்பதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கிறது
  •       ஸ்வான் டெலிகாம் கொடுத்த ஈமெயில் ஐடி ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரியின் ஈமெயில் ஐடி.
  • தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

    1948ல் அம்பேத்கார், நேரு, சர்தார் படேல் ஆகியோர் மகாத்மா காந்தியின் தீண்டாமை ஒழிப்பையும், பெண்கள் விடுதலையையும், மற்ற பல முன்னேற்றக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்திய சட்டத்தை தயார் செய்தனர்.  இது தனிப்பட்ட ஹிந்து சட்டத்தை எதிர்த்து அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற கொளகையை முன் வைத்தது. இதை ஹிந்து-சட்ட-மசோதா (Hindu code Bill) என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அடிப்படை வேலைகள் இந்திய சுதந்திரம் தவிர்க்க முடியாத ஒன்று என்று தெரிய வரும் பொழுதே ஆரம்பித்து விட்டது. அதாவது 1941லேயே அனைத்து இந்துக்களுக்கும் ஒருமையான சட்டத்தை ஏற்படுத்த சர்.பி.என்.ராவ் தலைமையிலான கமிட்டியை பிரிட்டிஷார் உருவாக்கினர்.  இந்தச் சட்டம் மிதாக்‌ஷரத்தையும், தாயாபாகத்தையும் நிலைகுலையச் செய்தது. அதனால் பல இந்து மேல் ஜாதியினரை பகைத்து கொண்டார் நேரு.

    இந்த சீர்திருத்தச் சட்டங்களின் முக்கிய அம்சங்கள்*:

    1. மிதாக்‌ஷரத்தையும்,  தாயபாகத்தையும் முழுமையாக அல்லாவிட்டாலும்  பல பகுதிகளை புறக்கணித்தல் – சுருக்கி சொல்லப்போனால் மகனுக்கும் மகளுக்கும் அப்பாவின் சொத்தில் 50-50

    2. பெண்களுக்கு அலிமோனி – விவாகரத்தான பெண்ணுக்கு ஜீவானாம்சம்

    3.  ஜாதி மாற்று திருமணங்களை அங்கீகரித்தல் – அதாவது சட்டப்படி ஜாதி மாற்று மணங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்டப்படி ஒரே ஜாதியில் திருமணம் பண்ணியவர்கள் போன்று அணைத்து உரிமையும் பெறுதல் – அதாவது சொத்துரிமை போன்றவை.

    4. பெண்களுக்கும் டைவோர்ஸ் உரிமை

    5. மோனோகாமி – ஒரு மனைவியோ, ஒரு கணவனோ மட்டும் இருக்கவேண்டும்

    6. வேறு ஜாதிக் குழந்தைகளை தத்தெடுப்பது

    *(”காந்திக்கு பிறகு இந்தியா” – ராமச்சந்திர குகா)

    நல்லச் சட்டங்கள் தானே என்று தோன்றுகிறதல்லவா? உங்களுக்கு தோன்றுகிறதோ இல்லையோ, பல முன்னேற்ற சமுதாயத்திற்கு காலகாலமாய் தோன்றிக்கொண்டு தானிருந்திருக்கிறது. இந்த மாதிரி சீர்திருத்தங்களெல்லாம் கௌடிலயர் காலத்திலிருந்தே பல மேல ஜாதி இந்துக்களின் எதிர்ப்புகளுக்கு இடையில் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

    அரவிந்தன் நீலகண்டன்  ”இந்துத்வத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்” (“பண்பாட்டை பேசுதல்”  – தமிழ்ஹிந்து பதிப்பகம்) என்ற கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். ஸின் முக்கிய கோட்பாடான சாதிய புறக்கணிப்பிற்கு  சத்தியகாம ஜாபாலா, ஸ்ரீமத் பி.ஸ்ரீ.ஆச்சாரியார் முதற் கொண்டு பல உதாரணங்கள் கூறுகிறார். வீர் சாவர்க்கர், குருஜி மாதவ சதாசிவ கோல்வால்க்கர் முதலியோர்கள் சாதியத்துக்கு அப்பாற்பட்டவர்கள், ஆர்.எஸ்.எஸ். மேடைகள் எப்பொழுதும்  ரைகவர் முதல் அம்பேத்கார் வரை முன் வைத்து பேசுகிறது என்பதையெல்லாம் அரும்பாடுபட்டு விளக்குகிறார். அவரின் பிரயத்தனம் புரிகிறது. மேல் ஜாதி ஹிந்துக்கள் முற்போக்கு சிந்தனைக்கு தடையாக இருந்ததை ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கிறது என்ற செய்தியை சொல்ல பாடுபடுகிறார். விஷ்வ ஹிந்து பரிஷத் ஜாதியத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளை சுட்டுகிறார்.

    ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  ”ஹிந்து சட்ட மசோதா”விற்கு கடின எதிர்ப்பு தெரிவித்ததாக வரலாறு கூறுகிறது. அனைத்திந்திய இந்து-சட்ட-மசோதா-எதிர்ப்பு என்ற அமைப்பிற்க்கு தன் முழு ஆதரவை அளித்திருக்கிறது. துவாரகாவின் சங்கராச்சாரியர், பழமைவாத(conservative) வக்கீலகள், மற்றும் பலரின் இந்த மசோதா எதிர்ப்பிற்கு பின்னால் தன் முழு பலத்தையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அளித்ததாக ராமச்சந்திர குஹா கூறுகிறார். இந்தச் சட்டம் ”ஹிந்து இனத்திற்கு ஒரு அணு குண்டு” என்று ஆர்.எஸ்.எஸ்.ச்ஸை சேர்ந்தவர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

    இன்று ஆர்.எஸ்.எஸ். இதை எப்படி நியாயப்படுத்துகிறது?

    வருஷம் 1946. இந்தியா விடுதலைப் பெறப்போவது உறுதியாகிவிட்டது. ஒரு இடைக்கால மத்திய அரசை அமைக்க வேண்டும். காங்கிரஸ், ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக் இரண்டையும் ஒரு கூட்டணி அரசை அமைக்க வைஸ்ராய் கூப்பிட்டிருந்தார். முஸ்லிம் லீக் பயங்கர வீம்பு பிடித்துக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த முஸ்லிமும் அமைச்சராகக் கூடாது என்று நிபந்தனை. இதை காங்கிரஸ் நிராகரித்தது. (அபுல் கலாம் ஆசாத் ஒரு வருஷம் முன்பு வரை காங்கிரசின் தலைவராக இருந்திருக்கிறார்) லீக் பழிக்குப் பழி உளிக்கு உளி என்று தானும் ஒரு ஹிந்துவை அமைச்சராக்கியது. யார் அந்த முஸ்லிம் லீகின் (ஒரே ஒரு) ஹிந்து? அவர்தான் இந்த ஜோகேந்த்ரநாத் மண்டல்.

    இதைப் பற்றி முதன்முதலாக தெரிந்து கொண்டபோது முஸ்லிம் லீகில் எப்படி ஒரு ஹிந்து போய்ச் சேர்ந்தார் என்று வியந்தேன். அரவிந்தன் நீலகண்டனின் இந்த கட்டுரை பல விஷயங்களை விளக்குகிறது. மண்டல் தலித் தலைவர். தலித்களும் முஸ்லிம்களும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள், அதனால் அவர்களது இலக்குகளில் இசைவு உண்டு, சேர்ந்து இருந்தால் அது பலத்தை அதிகரிக்கும் என்று கருதி இருக்கிறார். ஜின்னாவால் கவரப்பட்டு அவருக்கும் லீகுக்கும் உண்மையான விசுவாசியாக இருந்தார். பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானுக்குப் போனார். அங்கே சட்ட அமைச்சராக இருந்தார். ஜின்னா இருந்தவரைக்கும் எல்லாம் சரியாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ஜின்னாவின் மறைவுக்குப் பிறகு அங்கே ஹிந்துக்கள் ஒடுக்கப்படுவதைப் பார்த்து வேறு வழியில்லாமல் தன பதவியை எல்லாம் ராஜினாமா செய்துவிட்டு திரும்பவும் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்.

    மண்டல் தலித்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவர். அவரது ஆதரவு இல்லாவிட்டால் சுராவர்தி 1946-இல் வங்காளத்தில் வெற்றி பெற்று முஸ்லிம் லீக் அரசை அமைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அப்படி முஸ்லிம் லீக் அரசு அமைதிருக்காவிட்டால் கல்கத்தா, நவகாளி கலவரங்கள் எல்லாம் நடந்திருக்குமா என்பது சந்தேகமே. வங்காளத்தில் நடந்தது சுராவர்தி அரசின் மறைமுக ஆதரவோடு நடந்த கலவரம். (ஹே ராம் படத்தில் காண்பிக்கப்படுவது இந்த கலவரம்தான்.) அப்படியே யோசித்துக் கொண்டே போனால் பிரிவினைக்கே இவர்தான் காரணமோ என்று தோன்றுகிறது!

    சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம், கண்மூடித்தனமான விசுவாசம், தப்புக் கணக்கு ஆகியவை நல்ல தலைவராக பரினமித்திருக்கக் கூடிய ஒருவரை எப்படி திசை மாற்றி இருக்கிறது என்பதற்கு மண்டல் ஒரு உதாரணம்.

    நல்ல கட்டுரை எழுதி இருக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கு வாழ்த்துக்கள்!

    தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

    தொடர்புடைய சுட்டிகள்:
    அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை
    ஜோகேந்த்ரநாத் மண்டல் – விக்கி குறிப்பு
    ஜோகேந்த்ரநாத் மண்டலின் ராஜினாமா கடிதம்

    சாரதா ரொம்ப ஃபிலாசஃபிக்கலாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்!

    For the record, நாளைக்கு இருக்க மாட்டோம் என்பதனால் இன்றைக்கு ஏன் மனதைப் போட்டு உழப்பிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவன் நான் (ஆர்வி).

    தினம் தினம் இப்போதெல்லாம் மற்றவர்களின் மரணச்செய்திகள் கேட்கக் கேட்க மனதுக்குள் பயம் எட்டிப்பார்க்கத் துவங்கிவிட்டது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது சின்ன வயதிலிருந்தே கேள்விப்பட்டதுதான் என்றாலும் கூட, கண் முன்னேயே பச்சிளம் குழந்தைகள் கூட மரணிப்பத்தைக் கண்டபோதும் கூட ஆறிலும், பதினாறிலும், இருபத்தாறிலும் ஒரு அசட்டு தைரியம், நமக்கு இன்னும் வயதிருக்கிறதே என்று. என்னவோ இத்தனை வயதுக்குப் பின்தான் மரணம் வருமென்று இறைவன் சொல்லிவிட்டது போல.

    ஆனால் இப்போதெல்லாம் அந்த அசட்டுத் துணிச்சலும் கூட இல்லை. ஒவ்வொரு மரண ஓலம் கேட்கும்போதும் அடுத்தது நாமோ என்ற பயம். இது ஒன்றும் வரிசையில் நின்று வாங்கும் பொருள் அல்ல, நமக்கு முன்னால் இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்று தைரியம் கொள்வதற்கு. உலகத்திலேயே மிகப் பெரிய பம்பர் குலுக்கல் நடத்திக் கொண்டு இருப்பவன், யாருக்கு அடுத்து மரணத்தை பரிசாகத் தருவானென்பது மிகப் பெரிய புதிர். நூறு வயது முதியோரை அடுத்து ஆறுமாதக் குழந்தையை அழைப்பான். அது தெரிந்தும் ஆட்டம் போடுகிறோம். மரணித்தவனை குழியில் தள்ளி மூடிவிட்டு வந்த நமக்கு அடுத்து சிரிப்பதற்கு எப்படி வாய் வருகிறது? அடுத்த மரணத்தைப் பார்த்ததும் அந்த சிரிப்பை சிறிது காலம், அல்லது சிறிது நேரம் தற்காலிகமாக ஒத்திப்போட்டுவிட்டு மீண்டும் அழுகிறோமே அது எப்படி?

    பெரிய பெரிய கோட்டை கொத்தளங்களையும், அரண்மனைகளையும் கண்டு ‘அடேயப்பா இதை எப்படிக் கட்டினார்கள்?’ என்று வியப்பதற்கு முன் நமக்கு (எனக்கு) தோன்றுவது ‘இதைக் கட்டியவர்கள் எல்லாம் இப்போது எங்கே?. இதை ஆண்டு அனுபவித்தவன் இப்போது எங்கே? காலம் முழுவதும் நிலைத்திருப்போம் என்றுதானே இவற்றைக் கட்டினான்? அவன் ஆசைப்படி இருந்தானா? மரணத்தைப் பற்றி சிறிது சிந்தித்திருந்தால் இவற்றைக் கட்டுவதில் மெனக்கெட்டிருப்பானா?’ என்ற எண்ணம்தானே தோன்றுகிறது என்னென்ன ஆடம்பரங்கள் எத்தனை வேலைப்பாடுகள்! இவற்றைப்பாதுகாத்து அடுத்து வரும் தலைமுறைக்குத் தர வேண்டுமாம். எதற்கு? நாமே ‘நாலாளுக்கு மேலாளாக’ப் போகும்போது யாருக்காக இவையெல்லாம்?

    இப்போதெல்லாம் சுவையான உணவுகளை ஏற்பதற்குக் கூட நாவும், மனமும் மறுக்கிறது. விருந்துகளைப் புறக்கணிக்கிறேன். காரணம் அவ்வாடம்பர விருந்துகளில், இவ்வுலகின் நிலையாமை மறக்கப்படுகிறது. கேலிக்கூத்துகள், வேடிக்கைகள் முதலிடம் பிடிக்கின்றன. நமக்கோ மனம் கூசுகிறது. இதை விட சுவையாகச் சாப்பிட்ட நம் முப்பாட்டன் எல்லாம், அடையாளத்துக்கு எலும்புக் கூடு கூட இல்லாமல் போய்விட்ட பிறகும் அதை மறந்து மீண்டும் கேளிக்கைகளில் மனம் ஈடுபட துணிவது எப்படி? சில நாள் முன்பு வரை நாமும்தான் இந்த ஆட்டத்தில் கலந்துகொண்டு ஆடினோம் என்ற சமாதானத்தை இப்போது மனம் ஒப்பவில்லை. இளைய சமுதாயத்துக்கு நிலையாமை பற்றிய அச்சம் ஊட்டப்பட்டால், அனாச்சாரங்கள் குறைய வாய்ப்புண்டோ? ‘நாம் இளைய தலைமுறையாய் இருந்தபோது சிந்தித்தோமா’ என்பதைவிட, நமக்கு அச்சமூட்ட வேண்டியவர்களின் மெத்தனப் போக்கும் காரணமாக இருந்திருக்கக்கூடும். முந்தைய தலைமுறை செய்த அதே தவறை நாமும் செய்து இளையோர்களின் வாழ்க்கையை அச்சமூட்டி நெறிப்படுத்துவதில் தவற வேண்டுமா?

    வீடு : ஒரு காலத்தில் பார்த்தோர் வியக்கும் கலைக்கூடமாக இருந்த என் வீடு, இப்போது நேர்மாற்றமாக. இப்போது பார்ப்பவர்களும் வியக்கிறார்கள், இந்த வீட்டிலும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று. அப்படி அதிசயிக்கும் மானிடப்பிறவிகளே, நாம் நிரந்தரமாகப் போக இருக்கும் மண்ணறை, இதைவிட பல நூறு மடங்கு மோசமானதாயிற்றே, உணர்ந்தீரா?

    தொகுக்கப்பட்ட பக்கம்: சாரதா பக்கம்

    அமேரிக்காவில் தீபாவளி எப்படி கொண்டாடுவார்கள் என்று என் உறவினர்கள் பல முறை கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்படி கேட்பவர்களுக்கு முன்பெல்லாம் ஒன்றும் சொல்ல இருக்காது. அதாவது ஒரு எட்டு வருடம் முன்பெல்லாம், தீபாவளி என்பது சென்னை மற்றும் பிற ஊர்களில் இருக்கும் உறவினர்களுக்கு செய்யும் சில ஃபோன் கால்களுடன் தீபாவளி காலை முடிந்துவிட்டாதாக தோன்றும். என் அன்பு மனைவியிடம் இருந்து சில ஸ்வீட்ஸுடனும், வீட்டில் ஒரு சிறிய பூஜையுடனும் தீபாவளி இரவும் முடிந்துவிட்டதாகத் தோன்றும். இப்படி அமைதியான முறையில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஒரு ஏக்கத்தை விட்டில் நிறைத்து விட்டு வந்து போகும். இது அனேகமாக இங்கு இன்றும் பல இல்லங்களில் நடக்கும் ஒரு காட்சிதான். ஆனால் சில வருடங்களாக இதில் இனிய மாற்றங்கள். இந்த மாதிரி போரடித்த தீபாவளியை போக்க வேண்டும் என்று மனைவியும் நானும் சிந்திக்க ஆரம்பித்தோம். அதன் விளைவாக ஒரு பாரம்பரியம் உருவாகத் தொடங்கியிருக்கிறது.

    தீபாவளி நெருங்குகிறது…. தம்பிகளுடனும், கம்பவுண்ட் நண்பர்களுடனும் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்னரே எந்த வெடிகள் வாங்க வேண்டும் என்று ஒரு நூறு ரூபாய்க்கு பட்டியல் போட்டு, கடைசியில் ஒரு வழியாக அப்பா சம்மதத்துடன் ஒரு இருபத்தைந்து ரூபாய்க்கு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்ன்ர் தான், வெடி மற்றும் மத்தாப்புக்கள் வருகிறது. அது போலத்தான் புதிய உடைகளும். திபாவளிக்கு முந்தின தினம் டெய்லர் கடைக்குப் போய் காத்திருந்து, அவர் கருணையில் கடைசியில் இரவு ஒரு ஒன்பது மணிக்கு புதிய உடைகள் வந்து சேர்கிறது. இதல்லாம் ஒரு துன்பமாயினும் அதிலும் ஒரு இன்பம் இருக்கத்தான் செய்கிறது. பாட்டி வீட்டில் தான் அனேகமாகத் தீபாவளி. மாலை அப்பா வந்ததும் டவுன் பஸ் பிடித்து கொட்டும் மழையில் கடைசி ”யாக்கோபுரம்” பஸ் பிடித்து கிட்டதட்ட இரவு பத்தரை மணிக்கு பாட்டியின் ஊர் போய் சேர்கிறோம். ஊரே அந்த இரவிலும் கோலாகலம் அடைந்திருக்கிறது. ஒரு வீட்டிலும் முன் கதவு மூடப்படவில்லை.ஒவ்வொரு வீட்டின் முன்னும் சித்தப்பா,பெரியப்பா, மாமா-அத்தை இவர்களின் பையன்களும், பெண்களும் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் யாராவது வெளியே வந்து மகிழ்ச்சி பொங்க ”வாங்க வாங்க” என்று அபபாவிடமும், அம்மாவிடமும் விசாரித்துவிட்டு “போளி ரெடி ஆகிக் கொண்டிருக்கிறது”, “துக்கடா அடுப்பில் இருக்கிறது” என்று எதாவது சொல்லிப் போகிறார்கள்.அதற்க்குள் சித்தப்பா எங்களை பார்த்து வந்து “என்ன கடைசி பஸ் தான் கிடைத்ததா” என்று விசாரித்துக் கொண்டே அம்மா கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொள்கிறார்…வெடி மத்தாப்புகளுக்கிடையிலும், குசலம் விசாரிப்புகளுக்கு இடையிலும் புகுந்து, கடந்து பாட்டி வீடு வந்தடைகிறோம். அங்கே சித்தப்பா மகன்கள் மற்ற நண்பர்களுடன் மத்தாப்பு கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாட்டி வந்து எல்லோரையும் வரவேற்கிறாள். வந்ததும், வராததுமாக “லக்‌ஷ்மி, வடைக்கு அரைத்துக் கொண்டிருந்தேன், நல்ல வேலை வந்துட்ட. போய் அதை பாத்துக்க” என்று சொல்ல அம்மா உடைகளை மாற்ற நேரமில்லாமல் அடுப்படியில் சித்திகளுடன் ஐக்கியமாகிறாள்.
    “என்ன டெய்லர் நேரமாக்கிட்டானா? கடைசி கார் தானா கிடைச்சுது?”
    “இல்லம்மா, அஃபீஸ்ல் வேலை 7 மணி வரை இருந்துது. அப்புறம் டெய்லர்ட்ட போயிட்டு வரும் போதே, மழை வேற”
    “சரி விடு. வா சாப்பிடு…”
    “நீங்களும் வாங்கடா…” நாங்களும் உற்ச்சாகமாகி பின்னல் ஓடுகிறோம்.
    எல்லோரும் பேசிக்கொண்டே சுடச் சுட தோசை மற்றும் தேங்கா சட்னி, சாம்பார் ஸ்வீட்கள் முதலியவற்றை கபளீகரம் பண்ணுகிறோம்.
    அப்பா மற்றும் சித்தப்பா ஊர் முழுவதும் உள்ள சகோதரர்களையும், தங்களைப்போன்று வெளியூரிலிருந்து வந்த சகோதரர்களையும் (எல்லாம் பெரியப்பா – சித்தப்பா வீட்டு சகோதரர்கள் தான் – ஊரே சொந்தக்ககாரர்கள் தானே) பார்க்க, எல்லோரும் கூடும் அடுத்தடுத்து நீண்ட திண்ணைகள் கொண்ட வீடுகள் அமைந்த நடுத்தெருவிற்க்குச் செல்கிறார்கள். மூன்று வீட்டு திணனையை சகோதரர்கள் நிறத்திருக்கிறார்கள். பலமான சிரிப்பு, பேச்சு, மீண்டும் சிரிப்பு. இனி மேல் இரண்டு மணிக்கு தான் வீட்டுக்கு வருவார்கள்…நாங்கள் எல்லோரும் அம்மாக்களிருக்கும் அடுப்படிக்கும், தெருவிற்க்கும், அப்பாக்களிருக்கும் நடுத்தெருவிற்க்கும் இரவு 11 மணியிலிருந்து 2 மணி வரை ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். கேட்பதற்கு ஒரு ஆள் கிடையாது. எல்லா இடங்களும் விளக்கு வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. வெடிகளின் சத்தங்களிலும், ஜனங்களின் போக்கு வரத்திலும் ஊர் நிறைந்திருக்கிறது….

    முப்பது வருடத்திற்கு முன்னால் அது. நிச்சயம் இப்பொழுது இப்படியெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆம். இங்கும் தீபாவளி வந்துவிட்டதுதான்.நாளை மறு நாள் தீபாவளி.சித்ரா முன்னரே எல்லோருக்கும் ”ஈவைட்” மூலம் தகவல் அனுப்பி தீபாவளிக்கு ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். தீபாவளி காலையில் ஒன்றும் பண்ண முடியாது. பட்ஷணம் பல பண்ண வேண்டும் என்ற அவளுக்கு ஆசை தான். ஆனால் தனி ஆளாக அதெல்லாம் செய்ய முடியுமா? என்ன சித்திகளும், அத்தைகளும், பாட்டிகளும் வந்து இருந்து இரவெல்லாம் கண்விழித்து செய்யும் காலமும், இடமுமாகவா இருக்கிறது? அனைத்து நண்பர்களும், மனைவிகளும் பிஸியாக இருப்பவர்கள். எல்லோருக்கும் வேலை, வீடு, குழந்தைகள். மொத்தத்தில் தீபாவளி அன்று காலை அலுவலகத்திற்கு லீவ் போட்டால் தான் முடியும் என்ற நிலைமை. அப்படிதான் ஆயிற்று. நான் உதவி செய்யலாம் என்றால் வாரத்திற்கு ஒரு நாள் தான் அலுவலகம் செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையில் (மற்ற நான்கு நாட்கள் கோர்ட்டில்)மாட்டிக் கொண்டதால் சித்ராவிற்கு உதவி செய்வதாக அளித்திருந்த வாக்குறுதியை சத்தமில்லாமல் வாபஸ் வாங்கினேன்.

    சவாலை சமாளிக்கத்தான் அலுவலகத்தில் அன்றாடம் பழகிக் கொண்டிருக்கிறாள் சித்ரா. பிராஜக்ட் மேனஜர். தீபாவளியும் அவள் கண்ணில் ஒரு சிறு பிராஜக்ட்டாக உருவெடுத்தது. நான் மாலையில் வீடு வந்து சேரும் பொழுது அனேகமாக எல்லாம் தயார். நான் என் பங்குக்கு எதாவது உதவி செய்யவா என்று குற்ற உணர்ச்சியுடன் கேட்டு வைத்தேன்.கேட்கும் போதே ஒரு பயம் தான். எங்கே வேலை நிறைய இருக்குமோ என்று. நல்ல வேலை பெரிதாக  செய்வதற்கு ஒன்றும் மீதம் இல்லை. நண்பர்களும் ஸ்வீட், காரம், டின்னர் ஐட்டங்களுடன் 7 மணிக்கு ஆஜர்.

    தீபாவளிக்கு வெடி மத்தாப்பு எல்லாம் ஜூலை மாதமே வாங்கிவிடுவோம். அப்பாடா. இதில் ஒன்றிலாவது இந்தியாவில் கொண்டாடுபவர்களை தோற்கடித்தாகிவிட்டது. அட வெடியெல்லாம் போடுகிறீர்களா என்று ஆச்சர்யபடுகிறீர்களா? ஆம. நிச்சயாமாக. ஜூலை நான்கு இங்கே சுதந்திர தினம். அதற்கு ஃபயர்வொர்க்ஸ் கிடைக்கும். சிவாகாசி சரக்கு இல்லை. அதை வாங்கி வைத்துவிடுவோம். இம்முறையும் அது தான். பேக்யார்ட் என்று சொல்லும் கொல்லை புறத்தில் கோலாகலம் மணி 8 அளவில் தொடங்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்காகத் தானெ. அனைத்து குழந்தைகளும் வந்து சேர்வதற்கு 8 மணி ஆகிவிட்டது. சற்றே நவம்பர் குளிர் மெலிதாக தாக்குகிறது. கம்பி மத்தாப்புகளில் ஆரம்பித்த கொண்டாட்டம் படிப்படியாக் ப்ரோமோஷன் பெற்று, உய் உய் என்ற சத்தங்களுடன் பெரிதாக சில மணித்துளிகள் வெடிக்கும் வெடியாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம்.

    பின்னர் ஸ்வீட்களுடன் டின்னர். குழந்தைகளின் விளையாட்டு. பெரியவர்களின் பேச்சுகள். கிட்டத்தட்ட தமிழகத்தில் தீபாவளி கொண்டாடியது போன்ற மகிழ்ச்சி.ஒரு முக்கியமான விஷயம். அனேகமாக உங்கள் வீட்டிற்கெல்லாம் அழையா விருந்தினராக வரிசையாக வருகை தரும் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினர்கள், திரை நட்சத்திரங்கள், புது சினிமாக்கள் பற்றிய ரிவ்யூக்கள் இவையெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதில்லை. சாலமன் பாபையாக்களை வீட்டிற்குள் கூட்டி வரும் டி.வி.சேனலகள் எங்கள் வீட்டில் கிடையாது. அடுத்த முறை தீபாவளி அன்று முழுவதும் டி.வி.யை அணைத்து விட்டு கொண்டாடுங்கள். அதன் மகிழ்ச்சியே தனி.

    போன வருடமும், இந்த வருடமும் வார இறுதி என்பதால் மகிழ்ச்சியான மன நிலையில் கொண்டாட முடிந்தது. தீபாவளிக்கு விடுமுறை எவ்வளவு அவசியம் என்பது நன்றாகவே புரிந்தது. ஆர்வி – ஹேமா, குழந்தைகளுடன்  சில வருடங்களாக சேர்ந்து தான் தீபாவளி கொண்டாடுகிறோம். இரண்டு வருடத்திற்கு முன் மேலும் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள். போன வருடம் ஒரு ஐந்து குடும்பம். இந்த வருடம் இந்த எண்ணிக்கையில் மேலும் இரண்டு கூடியது. இவர்கள் தான் ஒருவருக்கு ஒருவர் மாமா-அத்தை, பெரியப்பா-சித்தப்பா, பெரியம்மா-சித்திகள்.


    அடுத்த வருடத்திற்கு காத்திருக்கிறோம்.

    தனிமையைப் பற்றி பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். என்னையும் இம்ப்ரஸ் செய்தது என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன். எழுதிய ஆனந்த் ராகவ், இயக்கிய தீபா ராமானுஜம், முக்கிய நடிகரான நவீன் நாதன், க்ரியா அமைப்பு, ஏற்பாடு செய்த பாரதி தமிழ் சங்கம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்! பிற நடிகர்கள் பெயர் தெரியவில்லை, சிகரெட் பிடிக்கும் சித்தப்பாவாக நடித்தவர், ப்ரொஃபசராக நடித்தவர், மனைவியாக வந்தவர் ஆகியோரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

    இதை எழுத ஒரு பதிவா என்று யோசிக்கிறீர்களா? :-) நண்பர் (திருமலை)ராஜன் இந்த நாடகத்துக்காக வெளியிடப்பட்ட flyer-இன் pdf-ஐ அனுப்பி இருக்கிறார். அதையும் போடத்தான். :-)

    தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி

    தொடர்புடைய சுட்டிகள்:
    பக்சின் விமர்சனம்
    க்ரியா தளம்
    பாரதி தமிழ் சங்கம் தளம்

    அடுத்த பக்கம் »

    Follow

    Get every new post delivered to your Inbox.

    Join 59 other followers