செப்டம்பர் 2010


ஷிஹான் ஹுசேனி என்று கேள்விப்பட்டிருக்கலாம். கராத்தே நிபுணர். சில படங்களில் கூட தலையை காட்டி இருக்கிறார் என்று நினைவு.

ஹுசேனியின் ஒரு பழைய பேட்டியை இங்கே பார்த்தேன். அவர் ஒரு ஹிந்துப் பெண்ணை மணந்திருக்கிறார். இரண்டு பக்கமும் பிரச்சினை.

அவருடைய குமுறல்கள் genuine ஆக தெரிகிறது. பேட்டி வந்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது. இந்த பத்து வருஷங்களில் அவருக்கு அடிப்படை மனநிலை மாறாமல் இருக்கவும், அவருடைய தினசரி பிரச்சினைகள் தீர்ந்திருக்கவும் அவரை வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

வருஷா வருஷம் டைம் பத்திரிகை ஒரு உலகின் டாப் 100 மனிதர்கள் என்று.லிஸ்ட் போடும். 2010 லிஸ்ட் வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது, இருந்தாலும் இப்போதுதான் பார்த்தேன். என் கண்ணில் பட்ட இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர். (பேரைக் கிளிக்கினால் டைம் சுட்டிக்கு போகலாம்.)

மன்மோகன் சிங் – தலைவர் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

நம்பெருமாள்சாமி – இதற்கு முன் இவரைப் பற்றி கேட்டதே இல்லை. காடராக்ட் ஆபரேஷன் செய்து பலருக்கும் கண் பார்வையை மீட்டிருக்கிறாராம். அரவிந்த் கண் ஆஸ்பத்திரி என்று ஒன்று நடத்துகிறாராம். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கிறார்.

கிரண் மஜூம்தார் – பயோகான் என்ற ஒரு பயோடெக்னாலஜி கம்பெனி நடத்துகிறார். பில்லியன் டாலர் கம்பெனியாம்!

ராகுல் சிங் – கனடாக்காரர் போலிருக்கிறது. அங்கே ஒரு paramedic ஆக இருக்கிறாராம். ஹைத்தியில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கே சென்று உதவி செய்திருக்கிறார். அங்கே தண்ணீர் கொடுத்திருக்கிறார், மருத்துவ முதல் உதவி செய்திருக்கிறார். சிம்பிளான, அதே நேரத்தில் முக்கியமான விஷயம். க்ளோபல்மெடிக் என்ற அமைப்பை நடத்துகிறார்.

சேதன் பகத் – எழுத்தாளர்.

அதுல் கவாண்டே – டாக்டர். ஆனால் அவர் புகழ் அவரது புத்தகங்களால்தான். பெட்டர் என்ற புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன்.

அமார்த்ய சென் – பொருளாதார நிபுணர். நோபல் பரிசு பெற்றவர்

பங்கர் ராய் – ராய் கிராம மக்களுக்கு வேலை கிடைக்க பாடுபவர். உண்மையான ஹீரோ.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்+கவுரவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டைம் 100 லிஸ்ட்

ராஜன் ஸ்கான் செய்து அனுப்பிய இந்தியா டுடே கட்டுரை. லிங்கை கிளிக்கினால் உங்கள் கம்ப்யூட்டரில் இது டவுன்லோட் ஆகும்.

டவுன்லோட் செய்து படிக்க சோம்பேறித்தனப்படுபவர்களுக்காக இங்கே சுருக்கமாக: அரசியல் அதிகாரம், தகவல் துறை domination, சினிமாவை மெதுவாக கைக்குள் கொண்டு வருவது எல்லாம் இன்று கலைஞர் கருணாநிதி குடும்பத்தவரிடம் இருக்கிறது. அதிகாரம் பணம் சம்பாதிப்பதை சுலபமாக்குகிறது; பணம் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதை சுலபமாக்குகிறது. இந்த நிலை தொடர்ந்தால்…

இந்தியா டுடேவுக்கும் ராஜனுக்கும் நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

கோபாலின் பதிவுகளை விரும்பிப் படிப்பவர் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர் அனுப்பி இருக்கும் இன்னொரு பதிவு ரசிகர்களை மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன். ஓவர் டு கோபால்!

வாழ்க்கையில் எது கிடைத்தாலும், ஓசியில் வாங்கி சாப்பிடுவது, அல்லது ஒரு பொருளை இலவசமாக வாங்கி உபயோகிப்பது என்பதில் கிடைக்கும் ஆனந்தம் உழைத்து சம்பாதிப்பதில் கிடைப்பதில்லை. தமிழர்களுக்கே உரித்த யதார்த்தமாக வந்த பழக்கவழக்கங்களை அவ்வளவு விரைவாக மறப்பதற்கில்லை.

ரயிலில் போகும்போது, ‘சார் கொஞ்சம் செய்தித்தாள் கொடுக்கிறீர்களா’ என்று கேட்டுவாங்கி அவர் படிக்கும் முன்பே ஒரு வரி விடாமல் படித்துவிட்டு, அவர் அதை படிக்க ஏங்கும் வரை எரிச்சலாகி, வேறு ஒரு சஞ்சிகையை வாங்கி வந்தவுடன் அதை பிடுங்கிக் கொண்டு இதை அவரிடம் கொடுத்து, “போதும் சார், நீங்க படிங்க” என்று சிரிப்பை பல்லிலும் மகிழ்ச்சியை கண்ணிலும் காட்டுவதாகட்டும், திரைப்படம் பார்க்கும் போது, தம் நண்பர்களிடம், “இப்போ பாரு, விஜயகாந்த் வில்லனை ஒரு குத்து விடுவார்” என்று முன்கூட்டியே வரும் காட்சியைக் கூறி படம் பார்க்காத நமக்கு எரிச்சல் மூட்டுவதாகட்டும், பஜ்ஜியை சாப்பிட்டுவிட்டு அந்தத் தாளில் கையை துடைத்து நடுச்சாலையில் எறிவதாகட்டும், எது இலவசமாக கிடைத்தாலும், முதலில் போய் கால் கடுக்க நின்று வாங்கி, போருக்குப் போன வீரன் வெற்றி வாகை சூடுவது போல அந்த இரண்டணா ‘டீ’ தூளை வாங்கி வருவதாகட்டும் நமக்கு நிகர் நாமே.

இது போன்ற தினப்படி பழக்கத்தை மறக்க முயற்சிப்பது தேசத் துரோகம், இனத் துரோகம். நாம் யாருடனும் விரோதம் பாராட்டுவோம், ஆனால் இது போன்ற ரத்தத்தினூடே ஊடுருவித் தூங்கும் பழக்கத்தை நாமே நினைத்தாலும் விடமுடியாது. பள்ளிக்கு போகும்போதே, இடைவேளையில் வாங்கித் திங்க ஒன்றும் இல்லாவிட்டால், “டேய், குமார், எனக்கு ஒரு காக்காக்கடி கொடுடா” என்று ஆரம்பிக்கிறது நமது ஓசி பயணம்.

சரி, அது என்ன ஓசி? அந்தக் காலத்தில், அதாவது ஆங்கிலேய ஆட்சி இருந்த காலத்தில் லண்டனுக்கு தபால் அனுப்புவது என்பது மிகவும் செலவான காரியம். இங்கு ஊழியம் செய்த துரைமார்கள் அங்குள்ளவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் புனைய வேண்டுமென்றாலோ, ஒரு ஆவணத்தை அனுப்ப வேண்டுமென்றாலோ மிகச் செலவாகும்.

ஆனால், அரசாங்க கடிதங்கள் மொத்தமாக ஒரு பெரிய உறையில் போட்டு மடிக்கப்பட்டு அரசாங்கச் செலவில் அனுப்பப்படும். அதன் மேல் “OG” அதாவது “ON GOVERNMENT SERVICE” என்று எழுதப்பட்டிருக்கும். இந்த வெள்ளையப்பன்கள் தங்களின் சொந்த கடிதங்களையும் சேர்த்து மெதுவாக சேர்த்துவிடுவார்கள். லண்டனில் இருக்கும் அடிவருடிகள் அதை பிரித்து உரிய இடத்தில் சேர்த்து விடுவார்கள். இந்த நமது கதாநாயகன் தான் “ஓஜி”. சுருக்கமாக கூறுவதற்காக “SERVICE” என்பதை முதலில் வெட்டிவிட்டு, “ஓஜி” என்று கூறத் தொடங்கினார்கள். பின் நாளடைவில், அதை உறையில் “ஓஜி” என்று எழுதினார்கள். நாம்தான் எதையும் நம்மகப்படுத்துவோமே, இந்த ஓஜிதான் மருவி, ஓசி ஆனது. பின்னாளில், எது இலவசமாக கிடைத்தாலும், “என்ன ஓசியா” என்று கேட்டு அதற்குரிய மரியாதையைக்கொடுத்தோம்.

பள்ளிப் பருவத்தில் கோவிலும், ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்களிப்பது என்பது இயல்பாகவே உண்டு. அதற்கு முக்கியக் காரணம் – எந்த பண்டிகைகளோ, விழாவோ நடந்தாலும் ஓசியாக ஏதாவது சாப்பிடக்கிடைக்கும். ஒரு வெள்ளிக்கிழமையென்றால், நிறைய பேர் ‘வடல்’ என்று வட்டார வழக்கில் சொல்லப்படும் சிதறு தேங்காய் பிள்ளையாருக்கு உடைப்பார்கள். அதில் பல பசங்கள் சேர்ந்து கொண்டு, உடைத்தவுடன் அதிகம் பொறுக்கிக்கொண்டு தலைவனிடம் கொடுத்தால் ‘பொறுக்கும்’ குழுவில் சேர்த்துக்கொள்வான். ஒரு 8 மணிக்கு கோவில் மூடும்போது, அதை மொத்தமாக பனியனைக் கழட்டி அதில் கொட்டி பங்கு வைப்போம். அதில் அடிதடியெல்லாம் வந்ததுண்டு. எல்லாம் பாழாப்போன (மறுநாளைக்கு கிடைக்கும்) சட்னிக்குத்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், நாம் திறமையாக நிறைய பொறுக்கியிருந்தாலும், சம பங்கை கூறு போடும்போது, நம் பங்கு குறையும்போது, கோபம் வரும். அப்போது கட்டி புரண்டு சண்டைபோட்டுள்ளோம். அடுத்தது, இந்த ஆடி மாசம் அமாவாசை திங்கள்கிழமைகளில் வந்தால் ஒரே குஷிதான். குழந்தை பிறக்காத பணக்காரர்கள் அரச மரத்தை சுற்றி வந்து, பூஜைகள் செய்து, ஒரு 1008 சிறு மணியோ அல்லது வேறு ஏதோவொரு (பரிசுப் பொருள்) பொருளைக் கொடுப்பார்கள். ஏப்ரல் மாதம் பஞ்சாங்கம் வந்தவுடனேயே ஆடியில் திங்கள் அமாவாசை வருகிறதா என்று பார்த்துவிடுவேன். காலையிலேயே போய் எப்படியும் ஒரு 2ஆவது வெற்றிகரமாக வாங்கிவந்துவிடுவேன். நவராத்திரி வந்து விட்டால், பேப்பரை பொட்டலமாகக்கட்டிக்கொண்டு ஒவ்வொருவீட்டிலும் போய் சுண்டல் வாங்கித்தின்போம். பண்ணையார் வீடுகளில் தெண்ணந்தோப்பு இருந்தால், சில சமயம் அவர்கள் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்காக, அதை உடைத்து தண்ணீரை எல்லோருக்கும் இலவசமாக கொடுப்பார்கள். எல்லாவற்றையும் நானே குடித்துவிட வேண்டுமென்று கருதி, அதை வாளி வாளியாக, குரங்கு கள் குடிப்பது போல் குடித்துவிட்டு, வாளியில் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்து மாலையில் புளித்துப்போய் (குளிர்பதன வசதி கிடையாது) கொட்டியுள்ளேன். திருவாதிரைக்கு களியும், பிள்ளையார் சதுர்த்திக்கு பலவகை கொழுக்கட்டையும், மார்கழி மாதத்தில் ‘திருப்பிட்சை’ என்றழைக்கப்படும் தயிர் சாத பிரசாதமும் ஓசியில் அனுபவித்துள்ளேன். சினிமாவிற்கும் ஓசியில் போயுள்ளேன். அந்தக் கூத்தை கேளுங்கள்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு மதுரையில் (விடுமுறையை அங்குதான் கழிப்போம்) இருக்கும்போது, மாமாவிடம் கெஞ்சி ஓசியில் பாஸ் வாங்கிக் கொடுக்கச் சொன்னோம். அவரும் 8 பாஸ் வாங்கி போய் அனுபவியுங்கள் என்று கொடுத்துவிட்டார். தேன் சுவைத்த வண்டு மயக்கத்தில் வட்டமிடுவது போல் மகிழ்ந்து, சிம்மக்கல்லில் இருந்த அந்தக் கொட்டகைக்கு போய், (படம்: “சிவப்புக்கல் மூக்குத்தி“) அங்குள்ள பணியாளரிடம் இலவச அனுமதிச் சீட்டுகளை கொடுத்தோம். அவரோ எங்களை அலுவலக பொறுப்பாளரிடம் கூட்டிப்போனார், அவர் எங்களை மேலேயும் கீழேயும் பார்த்து தையல்காரர் போல் கண்ணால் அளவெடுத்தார். ஒரு சலிப்புடன் “போங்க, போங்க” என்று தலையில் அடித்துக் கொண்டார். ஓஹோ, ஓசியில் வந்ததால் அவருக்கு கோபம் போல என்று எண்ணி உள்ளே போனோம். படம் ஆரம்பித்து முடியும் வரை நாங்கள் 8 பேர்தான் இருந்தோம், அவர் தலையில் அடித்துக்கொண்டது இப்போது புரிந்தது. அந்தப் படத்திற்கு கமல், ஸ்ரீதேவி நடிப்பதாக பெரிதாக விளம்பரம் செய்திருந்தார்கள். இரண்டு பேருமே ஒரு ஐந்து நிமிடம்தான் படத்தில் வருவார்கள் என்று நினைவு. ஓசிக்கு கிடைத்த அடுத்த அடி.

பின்னாளில் நகரத்திற்கு குடிபெயர்ந்தவுடன், இலவசமாக போய் வாங்குவது நம்மை கிராமத்தான் என்ற முத்திரை குத்திவிடும் என்று நினைத்து ஒரு வட்டத்தை எனக்குள்ளே போட்டுக்கொண்டேன். நகரத்தில் இருப்பவர்கள் மிகவும் யோக்கியர்கள் என்ற எண்ணம் வந்த புதிதில் இருந்தது. ஒரு முறை, ஒரு ராதா கல்யாணத்தில் ஓசியில் தேநீர் குடுத்தார்கள். அதை வாங்குவதற்க்கு ஒரு பெரிய கும்பல் அடித்துக்கொண்டிருந்தது. இதில் பணக்காரர் ஏழை என்றல்லாம் வித்தியாசம் கிடையாது. எனக்குத் தெரிந்து இந்த ஓசி அதிகமாக வாங்குவது பணக்காரர்களும், மேல்தட்டு மக்களும்தான். ஏழையாக இருப்பவனுக்கு பசிக்கும்போது மட்டும்தான் தேவைப்படும். வசதி உள்ளவனுக்கு எப்போதும் எதற்கும் பசிதான். நமக்கு இலவசம் என்றால் ஒரு போதை உண்டு. அந்த பாரம்பரியத்திலிருந்து விலகினால் நமக்கே அவநம்பிக்கை வந்துவிடும்.

அந்த தேநீர் நிகழ்ச்சி, ‘ஓஹோ நகரத்திலும் இதே நிலைதான் போலும்’ என்று எண்ண வைத்தது. இந்த ஓசி என்பது அண்ணன் என்றால், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ தம்பி மாதிரி. என்ன, இதே உத்தியை பல தொழில்களில், முக்கியமாக புடவை, பேனா, வீட்டு சாதனங்கள் எல்லாவற்றிலும் பயன்படுத்தினார்கள். ஒரு மின்விசிறி வாங்கினால் ஒரு 200 ரூ. தள்ளுபடி. இந்த மார்கட்டிங் நிறுவனங்கள் இருக்கிறதே அவற்றுக்கு நாம் எங்கே விழுவோம் என்று தெரியும். ஒரு விடுமுறைக்கு உங்களுக்கு கோவா, அல்லது கொடைக்கானல் போய் வர இலவசமாக பயணசீட்டும், தங்கும் வசதியும் கொடுக்கும் திட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால், எங்கள் அலுவலகத்தில் வந்து அதை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவார்கள். அங்கு போனால், ஒரு 1 மணிநேரம் நம் கழுத்தை அறுத்து பின் 6 மாதத்திற்குள் உபயோகிக்கும் இலவசமாக ஓசியில் தங்கும் பத்திரத்தை (அதுவும் நாம் போகாத இடமாக உ.பி-யில் ஒரு இடத்தில்) கொடுப்பார்கள்.

துபாயில் ஏர்ஷோ எனப்படும் விமான கண்காட்சிக்கு போயிருந்தேன், அங்கு எல்லோருக்கும் ஒரு நிறுவனத்தின் சார்பில் தொப்பி இலவசமாக கொடுதுக்கொண்டிருந்தார்கள். சிறிதுநே ரத்தில் எனக்கு, எனக்கு என்று கூவி ஒரே தள்ளுமுள்ளு ஏற்பட்டு விட்டது. நடந்த கூத்தில் தொப்பிபட்டுவாடா பண்ணுபவர் இருப்பதை போட்டுவிட்டு ஓடிவிட்டார். பார்க்க நன்றாக பொழுது போயிற்று.

பொதுவாக நகரத்தில் இருப்பவர்களும் இப்படித்தான் போலும், ஆஹா வெளிநாட்டினரை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணத்தை சற்று மாற்றினேன். சமீபத்தில் இந்த எண்ணமும் தவிடு பொடியானது. நாம்தான் பட்டிக்காடு, மற்றவர்கள் யோக்கியர்கள் என்பதற்கு ஆப்பு வைத்தது சமீபத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி.

எங்கள் நிறுவனம் பிரபல வர்த்தக மடிக்கணிணி விற்கும் பிரத்யேக உரிமை பெற்ற விற்பனையாளர்கள். புதுப்புது வடிவம் சந்தைக்கு வரும்போது, பழைய படிவங்களை ஓரளவு குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள். முதலில் உள்கட்டு விளம்பரம் மூலம் இன்னென்ன தேதியில் விற்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள், 8.00 மணி முதல் 2.00 மணி வரை என்று. நான் அந்தரங்கமாக விசாரித்ததில் சுமார் 150 – 200 கணிணிவரை விற்கப்போகிறார்கள் என்றும் கடை திறந்த ஒருமணிநேரத்திற்குள் போனால் ஏதாவது தேறும் என்றும், இதற்கு எந்தவிதமான உத்திரவாதமோ, மின்கலமோ, எம்.ஸ்.ஆஃபீஸ் போன்ற மென்பொருளோ கிடையாது என்றும், வீட்டிற்கு கொண்டுபோய் வேலைபார்க்காவிட்டால் அவ்வளவுதான்! அது நம் தலைவிதி என்று விடவேண்டியதுதான் என்றும் அறிந்தேன். பல முறை இது போல ஆப்பசைத்த குரங்காக அடிபட்டுவிட்டதால், இது போன்ற அலங்கார வார்த்தைகளில் மயங்கி வாங்குவதில்லை என்ற முடிவை எடுத்து கொள்கையாக கடைபிடித்து வருகிறேன். வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாலும், அங்கு நடக்கும் கூத்தை பார்க்க ஆவலாக இருந்தது. இது போன்று ஒரு முறை கைக்கடிகார விற்பனையில் சூடு பறந்து, ‘நவாப் ராஜமாணிக்கம்’ நாடகத்தை பார்க்கமுடியாத குறைகளை தீர்த்துக் கொண்டிருக்கிறேன்.

சரி என்று விற்பனை தினம் சுமார் 8 மணிக்கு போனால், திருப்பதி தோற்றது அவ்வளவு கூட்டம். சுமார் 2000 பேர்கள் இருக்கும் தேரோட்டம் போல் ஜே ஜே என்று இருந்தது. ஒரே அடிதடி, “நாடோடி மன்னன்” படத்திற்கு போய் பார்த்த அடிதடி, தள்ளுமுள்ளுக்கப்புறம் இன்றுதான் பார்க்கிறேன். அங்குள்ள காவலாளி சமாளிக்க முடியாமல் ஓடிவிட்டான். முக்கால்வாசி மக்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், பகுதி இந்தியர்கள், மீதி இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள், அங்கு ஒருவர் ‘சார், இவர்கள் காலையில் 4 மணிக்கே வந்து வரிசையில் நிற்கிறார்கள்” என்றான். இவ்வளவு கூட்டத்தை பார்த்து அங்கு என்னவென்று பார்க்கவந்த அரசு காவலரோ தவறான வாகன நிறுத்திகளை பெண்டு எடுத்து சீட்டுக்கொடுத்துக்கொண்டிருந்தார். பல இந்தியர்கள் ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர்களிடம் தோற்று சமாளிக்க முடியாமல் புறமுதுகுகாட்டி ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் எல்லோர் மேலேயும் ஏறி ஓடிக்கொண்டிருந்தான். வெப்ப நிலை வேறு அதிகமாக இருந்ததால், சூரியன் ஒரு மணி சூட்டை காலையிலேயே ஆப்பு வைத்துக் கொண்டிருந்தான். ஒருவன் பனியன் கிழிந்து, “oh it is too much” என்று நொந்துகொண்டு புலம்பிக்கொண்டிருந்தான். 8 மணிக்கு சுமார் 5 நிமிடம் சிறிதாக கதவைத் திறந்து மூடிவிட்டார்கள். ஒரு காவலாளி வந்து, “எல்லோரும் வரிசையில் வாருங்கள்” என்று கூற, அவரை துச்சமாக மதித்து, கொத்தாக தூக்கி ஓரம் கட்டிவிட்டு கும்பல் முன்னேறியது. ஒருவன் கொண்டுவந்திருந்த குடிதண்ணீரை குடித்துக் கொண்டிருக்கும்போது அருகில் இருந்தவன் ஓசியில் பிடுங்கி குடித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததுகொண்டிருந்தது. சிலபேர் அவர்கள் உற்றார் நண்பர்களை அலைபேசியில் கூப்பிட்டு சீக்கிரம் வரவும், வரவேண்டாம் என்று நேர் வர்ணனை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இந்த கூத்து போதாதென்று, கணிசமான பெண்கள் வேறு வந்து எங்களுக்கு தனிவரிசை வேண்டும் என்று பெண்ணுரிமையை நிலைநாட்ட முற்பட்டு 33% ஒதுக்கீட்டிற்கு நேர்ந்த கதிபோல் தோற்று ஓடிக்கொண்டிருந்தார்கள். யாரும் யாரையும் மதிக்கும் மனநிலையில் இல்லை, எல்லோருக்கும் ஒரே மனநிலைதான் “எப்படியும் ஒன்றாவது வாங்கிவிடவேண்டும்” என்ற வெறி. ரொம்ப நாளைக்கப்புறம் சிறந்த நகைச்சுவை காட்சியை நேரில் கண்டு களித்தேன்.

என் அலுவலகத்தில் சக பணியாளரிடம் கேட்டபோது “இந்த வீர விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை” என்றார்கள். யாருமே கணினி வாங்கியதாகத் தெரியவில்லை. பின் யார்தான் வாங்கினார்கள்? கடைசி முடியும் பதிலே கிடைக்கவில்லை. நான் அறியப்பட்டவரை. இந்தக் கூத்து முடியும்போது ஒன்று மட்டும் நிச்சயமாக புலப்பட்டது – இந்த ஓசி, இலவசம், தள்ளுபடி என்பவற்றிற்கு கிராமம், நகரம், உலகம் என்றெல்லாம் கிடையாது. எல்லோருக்குமே ஆழ்மனதில் ஒரு பொருளை எப்படியாவது குறைந்த விலைக்கோ, ஓசியிலோ, இலவவசமாகவோ வாங்கிவிட வேண்டுமென்ற உள்ள வேட்கை உள்ளது. ஏதோ நமக்கு பொழுது போனால் சரி என்று நினைவலைகளை அசை போட்டுக்கொண்டே செய்தித்தாளை பிரித்தேன், “ஒரு அலைபேசி வாங்கினால் ஒரு அலைபேசி இலவசம்” என்ற விளம்பரம் வந்திருந்தது. பாவம், எத்தனை எலிகள் இந்த மசால் வடைப்பொறியில் சிக்கப்போகின்றனவோ என்று பெருமூச்சு விட்டேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கோபால் பக்கங்கள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
(பருப்புருண்டை) மோர்க்குழம்பு
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்

தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்

நேற்று ஒரு முஸ்லிம் நண்பர் வீட்டிலிருந்து பிரமாதமான சிக்கன் பிரியாணி வந்தது. ஒரு வெட்டு வெட்டினோம். அப்போது ஒவ்வொரு ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் ஸ்பெஷலான சாப்பாட்டு ஐட்டங்கள் ஏதாவது உண்டா என்று லிஸ்ட் போட ஆரம்பித்தேன். ஜாதியால் இன்றைக்கும் கிடைக்கும் நல்ல விஷயம் இதுதான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்கள்.

  1. அய்யர் வீட்டு ரசம் (பருப்பு+தக்காளி ரசம், எலுமிச்சம்பழ ரசம், மைசூர் ரசம் மூன்றும்) – ரசம் சர்வசாதாரணமான விஷயம்தான். ஆனால் அய்யர் வீடு ரசப் பக்குவமே தனிதான். பாருங்கள் அதிலும் நான் அய்யங்கார் வீட்டு ரசத்தை (சாத்தமுது?) சேர்த்துக்கொள்ளவில்லை!
  2. அய்யர் வீட்டு பொடி அடைத்த முழு கத்தரிக்காய் “கறி” (பொரியலை அய்யர்கள் கறி என்றுதான் சொல்வார்கள்)
  3. அய்யர் வீட்டு தாளகம் ஏறக்குறைய புளி போட்டு சமைத்த அவியல் மாதிரி இருக்கும், திருவாதிரை அன்று மட்டும்தான் கிடைக்கும், திருவாதிரைக் களியோடு சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் என்பார்கள். எனக்கு என்னவோ அந்தக் களி பிடிப்பதில்லை.
  4. அய்யங்கார் வீட்டு புளியோதரை எல்லாரும் புளியோதரை அருமையாகத்தான் செய்கிறார்கள், ஆனால் ஐயங்கார் வீட்டு புளியோதரை என்றால் அது ஸ்பெஷல்தான். அதுவும் பெருமாள் கோவில் பிரசாதம் என்றால் கேட்கவே வேண்டாம்!
  5. செட்டியார் வீட்டு கோழிக்குருமா – செட்டியார்கள் சமையலின் ரகசியம் புளியும் மிளகும்தான் என்று நினைக்கிறேன். இந்த கோழிக் குருமாவைத்தான் இன்று ஹோட்டல்களில் செட்டிநாடு சிக்கன் என்று போடுகிறார்கள்.
  6. முஸ்லிம்கள் வீட்டு சிக்கன் பிரியாணி – நண்பரை ரெசிபி கேட்கவேண்டும். :-)

மேலும் ஐட்டங்கள்:

  1. கன்னட மாத்வர் வீடு பிசிபேளாபாத்
  2. சேலம் மாவட்டத்தில் வன்னியர் டீக்கடைகளில் கிடைக்கும் தயிரில் போட்ட காரவடை (நான் சாப்பிட்டதில்லை)
  3. திருநெல்வேலிப் பிள்ளைமார் வீட்டு கூட்டாஞ்சோறு (நான் சாப்பிட்டதில்லை)
  4. அய்யர் வீட்டு ஈயச் சொம்பு ரசம், மாக்கல் சட்டி வத்தக் குழம்பு, வேப்பம்பூ ரசம் (இவை எல்லாம் நன்றாக இருக்கும்தான், ஆனால் வேப்பம்பூ ரசம் ஒன்றை மட்டுமே நான் ஸ்பெஷலாக சொல்வேன்.)

டக்கென்று இவ்வளவுதான் நினைவு வருகிறது. உங்களுக்கு நினைவு வரும் ஐட்டங்களையும் எழுதுங்கள்! நினைவிருக்கட்டும், ஒரு ஜாதிக்கு ஸ்பெஷலான ஐட்டங்களை லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறோம், திருநெல்வேலி அல்வா மாதிரி இடத்துக்கு ஸ்பெஷலான ஐட்டங்களை அனுப்பாதீர்கள். ((அதற்கென்று தனியாக ஒரு பதிவு போட்டா போச்சு!) இட்லி, தோசை மாதிரி எல்லாருமே சிறப்பாக செய்யும் ஐட்டங்களையும் அனுப்பாதீர்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மிச்சம் மீதி
தொடர்புடைய பக்கங்கள்: இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்ன உணவு வகை ஸ்பெஷல்?

« முந்தைய பக்கம்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers