ஜூலை 2010


Vettupuliஇந்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகத்தை இங்கே படித்தேன். தமிழ்மகன் என்பவர் எழுதி இருக்கிறார். எழுத்தாளர், சினிமா, டிவிக்கும் எழுதியவர் போலிருக்கிறது.

என் சிறுவயதில் வெட்டுப்புலி தீப்பெட்டி இல்லாத வீடே தமிழ்நாட்டில் எங்கும் இருந்திருக்காது. அதுதான் நன்றாக பற்றிக் கொள்ளும் என்றெல்லாம் சொல்வது நினைவிருக்கிறது. அது என்ன யாரோ புலியை வெட்டப் போகிறானே என்றெல்லாம் ஒரு யோசனையும் தோன்றியதில்லை. தமிழ் மகனுக்கு தோன்றி இருக்கிறது. அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ஓவியம் என்று ஒரு premise வைத்துக் கொள்கிறார். இவர் கதையின் ஹீரோக்கள் யார் அந்த வீரன் என்று விவரம் சேகரிக்க செல்கிறார்கள். அதை வைத்து ஒரு நூறு வருஷமாக தமிழகத்தில் நடப்பதை எழுதி இருக்கிறாராம். அறிமுகம் படிக்க தூண்டுகிறது.

எனக்கு புத்தகங்களை புரட்டிப் பார்த்து வாங்கினால்தான் திருப்தி. இங்கே சிலிகான் வாலி மக்கள் யாரிடமாவது இருந்தால் இரவல் கொடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு

தொடர்புடைய சுட்டிகள்: வெட்டுப்புலி புத்தக அறிமுகம்

தேவநேயப் பாவாணர்

தேவநேயப் பாவாணர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். தனி தமிழ், தமிழே உலகில் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்று முழங்கியவர்.

அவருடைய தியரியில் தமிழரே உலகில் முதல் மானிடராம். இன்றைக்கு இந்து மகா சமுத்திரம் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய நிலப் பரப்பு இருந்ததாம். அதுதான் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்ந்து அன்றைய ஆசியாவின் தென்பகுதியில் முட்டியதாம். அதனால்தான் இமயமலை எழுந்ததாம். இன்றைய இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் உருவானதாம். பழைய இலக்கியங்கள் பேசும் கடற்கோள், பஃருளி ஆறு, முதல் சங்கம், இடை சங்கம், சுமேரியர்களின் முதல் ஐதீகமான வெள்ளத்திலிருந்து தப்பிய உட்னாபிஷ்டிம், பைபிளில் சொல்லப்படும் நோவா சந்தித்த வெள்ளம், தசாவதாரக் கதைகளில் வரும் மச்சாவதாரக் கதை எல்லாம் இந்த அழிவையே விவரிக்கின்றனவாம்.

அந்த நிலப்பரப்பில் உருவான முதல் மனிதர்கள் தமிழர்களே என்றும் அவர்கள்தான் உலகம் எங்கும் பரவி வேறு வேறு “இனங்களை” உருவாக்கினார்கள் என்றும் பாவாணர் சொல்கிறார்.

பாவாணர் சொல்வதை எல்லாம் சீர்தூக்கிப் பார்க்க எனக்கு அறிவு போதாது. ஆனால் முதல் மனிதன் தமிழன் என்றால் ஆரியனும் தமிழன் திராவிடனும் தமிழன். அப்புறம் பாவாணரை தங்கள் வழிகாட்டி என்று மேதை என்றும் கும்பிடுபவர்கள் ஆரியன் வந்தேறி, போயேறி என்று பேசுவதில் அர்த்தம் இல்லையே? அவர்கள் சொல்லும் திராவிடன்/தமிழன் சிறந்து விளங்கினான், பிராமண ஆரியன் வந்து காரியத்தை கெடுத்துவிட்டான் என்ற தியரி உதைக்கவில்லையா? இருந்தவனும் தமிழன், கைபர் கணவாய் வழியாக எவனாவது வந்திருந்தால் அவனும் தமிழன்! அப்புறம் இந்த இரண்டு கும்பலையும் பிறப்பை வைத்து எப்படி ஆரியன் திராவிடன் என்று பிரிப்பது?

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜாதி

தொடர்புடைய சுட்டிகள்:
தேவநேயப் பாவாணர் பற்றிய விக்கி குறிப்பு
எஸ். வையாபுரிப் பிள்ளை, தேவநேயப் பாவாணர் மற்றும் தமிழ் இலக்கியங்களின் கால வரையறை

எல்லா நாட்டிலும் நடப்பதுதான். இருந்தாலும் நம் நாட்டில் இருக்கும் சிஸ்டம் பணக்காரர்களால் சுலபமாக வளைக்கப்படுவது. அதனால்தான் இந்த மாதிரி செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.

லெக்சஸ் கார் ஒன்றை இறக்குமதி செய்திருக்கிறார்கள். அதில் வரியை மிச்சப்படுத்த பொய் டாக்குமென்ட்கள் தயார் செய்திருக்கிறார்கள். மாட்டிக்கிட்டாங்க!

அவருக்கு ஒரு கோடி என்பது ஏறக்குறைய பாக்கெட் மணி. ஒரு கோடி ரூபாய் வரி கட்டாத கேசில் அவர் மாட்டி ஜெயிலுக்கு போனால் அதை விட poetic justice இருக்கமுடியாது!

அனேகமாக இது நடராஜன் போன்றவர்களுக்கு நியூசன்ஸ் கேஸ் மாதிரிதான். ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் என்று போய் வாய்தா வாங்கியே காலத்தை ஓட்டிவிடுவார். இந்த கோர்ட்டிலேயே ஆறு வருஷம் ஆகி இருக்கிறது. ஏன்தான் நம் சட்டம் இவ்வளவு மெதுவாக செயல்படுகிறதோ? இருந்தாலும் ஒரு நப்பாசை, நியாயம் எப்போதாவது ஜெயிக்காதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

தொடர்புடைய பக்கம்: ஹிந்து செய்தி

பக்ஸ் ரொம்ப நாளைக்கு முன் துரோணாச்சாரியார் அந்தணரா? என்று ஒரு பதிவு எழுதி இருந்தான். சமூகம் துரோணரை பிராமணன் என்று பார்த்தாலும் அவர் பிராமணன் என்ற லட்சியத்தை அடைந்தவர் இல்லை என்பது அவன் வாதம்.

இந்த தளத்தில் பல சுவாரசியமான மறுமொழிகள் எழுதி இருக்கும் விருட்சம் இதைப் பற்றி தன கருத்துகளை எழுதி இருக்கிறார். பாலகுமாரன் துரோணரைப் பற்றி அன்பு மந்திரம் என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்து இவரது சிந்தனைகள் தூண்டப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு பகுதிகளில் நாவலைப் பற்றியும் கடைசி பகுதியில் தன கருத்துகளையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: கூட்டாஞ்சோறு–>ஜாதி

தொடர்புடைய பக்கங்கள்:
துரோணாச்சாரியார் அந்தணரா? – பக்ஸ்
துரோணாச்சாரியார் அந்தணரா? – விருட்சம் - பகுதி 1, பகுதி 2, பகுதி 3

இது தொடர் பதிவின் இறுதிப் பகுதி. அவரை சந்தித்த அனுபவம் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே; அவரது இன்றைய அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இங்கே.

சுப்ரமணிய சாமி ஒரு சுவாரசியமான மனிதர். பொருளாதாரத்தில் நிபுணர். வக்கீலுக்குப் படித்தாரோ என்னவோ, ஆனால் சட்டத்தைப் பற்றி நிறைய தெரிந்தவர். இந்திய அரசியலில் அவர் வெறும் fringe மனிதராக இருந்தாலும், அத்தனை பேரிடமும் inside track இருக்கிறது. எமர்ஜென்சி காலத்திலிருந்து ஒவ்வொரு பெரிய அரசியல் மாற்றத்தின் உள்குத்து வேலைகள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருக்கும். அவர் on the record, off the record ஆக சொல்லும் பல விஷயங்களை மனிதர் சும்மா சென்செஷனுக்காக ஏதோ சொல்கிறார் என்று புறம் தள்ளினாலும், இந்திய அரசியலில் அவர் சொல்வதை விட நம்பமுடியாத விஷயங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால் அவர் எமர்ஜென்சி காலத்தில் “சாகசம்” புரிந்திருக்கிறார். அப்போது அவர் எம்.பி. அவரை கைது செய்ய வாரன்ட் இருக்கிறது. மனிதர் நேராக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து பேசிவிட்டு விமானம் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார்! எமர்ஜென்சியை எதிர்த்தவர்களில் முக்கியமான ஒருவர். ஜனதா கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் founder member-களில் ஒருவர். இப்போதும் அந்த ஜனதா கட்சி லெட்டர்பாடிலாவது இருக்கிறது. அதற்கு இவர்தான் தலைவர்.

மொரார்ஜி காலத்தில் இவருக்கு மந்திரி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார். கிடைக்கவில்லை. மொரார்ஜியோடு முதலில் ஏதோ தகராறு இருந்திருக்கிறது. அப்புறம் சரியாகிவிட்டது என்று சொல்கிறார். ஆனாலும் அந்த கசப்பில்தான் இவர் விரும்பியது கிடைக்கவில்லை என்று தோன்றுகிறது. மொரார்ஜி நீ இன்னும் சின்னப் பையன், (அப்போது முப்பத்தாறு முப்பத்தேழு வயது இருக்கும்) துணை மந்திரி பதவி வேண்டுமானால் தருகிறேன் என்றாராம். அது இவருக்கு அவமானமாக இருந்திருக்கிறது, அதனால் மறுத்துவிட்டாராம்.

அப்புறம் இந்திரா அலை, ராஜீவ் அலை, வி.பி. சிங் அலை என்று அலை அடித்துக் கொண்டே இருந்தது. இவர் சில சமயம் எம்.பி.யாக ஜெயித்திருக்கிறார். இஸ்ரேலுடன் அதிகார பூர்வமான உறவு, இந்திய-சீன உறவை முன்னேற்றுதல் இரண்டும் இவருக்கு pet projects என்று தெரிகிறது. மானசரோவர் ஏரிக்கு இந்தியர்கள் யாத்திரை போக சீன அரசை சம்மதிக்க வைத்திருக்கிறார். வி.பி. சிங்கை சந்திரசேகர் கவிழ்த்ததற்கு இவர்தான் சூத்திரதாரியாம். சந்திரசேகர் காபினெட்டில் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போது இவர்தான் தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்ய மூல காரணமாம்.

அதற்கப்புறம் இந்திய அரசியலில் marginalise செய்யப்பட்டுவிட்டார். ஜெயலலிதாவோடு சேர்ந்து வாஜ்பேயி அரசை கவிழ்த்தது ஒன்றுதான் இந்த கால கட்டத்தில் இவரது அரசியல் “சாதனை.” இப்போது சட்டம் ஒன்றே ஆயுதம்.

அவரது ஜனதா கட்சி தளத்தில் அவர் காமராஜ், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் முதல் பல தலைவர்களைப் பற்றி எழுதி இருக்கிறார். Of course, எல்லா கட்டுரைகளிலும் இவருடைய திறமை, நல்ல மனது ஆகியவற்றை அந்த தலைவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். வாஜ்பேயியோடு மட்டும் எப்போதும் கொஞ்சம் கசப்பு உண்டு போலிருக்கிறது. இருந்தாலும் மிகவும் சுவாரசியமான கட்டுரைகள். முடிந்தால் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சுப்ரமணிய சாமியுடன் விவாதம்
சாமியின் அரசியல்

ஜனதா கட்சி தளத்தில் சுப்ரமணிய சாமியின் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகள்

நண்பர் கோபால் கொஞ்ச நாளைக்கு அப்புறம் ஒரு பதிவை அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

————————————————————————————–

வாழ்க்கையில் சில விஷயங்களில் பிடிப்பு இல்லையென்றாலும், சாப்பாடு என்றால் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு உண்டாகிவிடும். எங்கு போனாலும், சாப்பாடு கிடைத்தால் மனது கும்மாளமிடும். அந்த சின்ன வயதில் நன்றாக சாப்பிட ஒரு வித எதிர்பார்ப்பை மனது உருவாக்கிக் கொண்டு, எதுவும் வேண்டாம் என்று சொல்வதற்குண்டான பக்குவ நிலையை தயார் படுத்திக்கொள்ளவில்லை. கூடுமான வரை கல்யாணங்களுக்கு, சடங்குகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பக்கத்து ஊரில் நடக்கும் சீதா கல்யாண வைபோபவங்களுக்கு என பட்டியல் போட்டு இவற்றை தாக்கியதுண்டு.

இது போன்ற விழாக்களுக்கு பொது அழைப்பு இருக்குமென்றாலும், சும்மா சாப்பிடக் கூடாது என்ற ரோஷமான கொள்கையை பிரசவ வைராக்கியமாக வைத்துக் கொண்டு, எல்லோருக்கும் ஒரு இரண்டு பந்திக்கு தண்ணீர் சேந்தி கொடுத்துவிட்டு சாப்பிட்டுவிடுவேன். வைராக்கியத்தில் இரண்டு வகை உண்டு, ஒன்று பிரசவ வைராக்கியம், இன்னொன்று மயான வைராக்கியம். இதில் பிரசவ வைராக்கியம் என்பது பெண்கள் பிரசவத்தின் போது ஏற்படும் இன்பம் கலந்த துன்பத்தால் இனி மேல் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சபதமேற்று, பின் அதை மறப்பது. மயான வைராக்கியம் என்பது ஏதாவது இறந்தவர் வீட்டுக்கு போனால் நாமும் சாகப்போகிறோம் என்ற எண்ணம் மேலிட்டு இனி மேல் நேர்மையாக நடக்கவேண்டும் என்று எண்ணி, சபதமேற்று – இரண்டு நாளில் மறந்து மாமூல் வாழ்க்கைக்கு வருகிறோமே அதுதான். இவை இரண்டுமே தோன்றி மறையும் மனித அவலங்கள்.

இதில் நான் விருப்பமாக சாப்பிடும் மோர்க்குழம்பு பெரிய விருந்தில் உணவுப் பட்டியலில் இருக்காது. சில வீட்டு விருந்திலோ, தனிப்பட்ட முறையிலோதான் சமைக்கப்படும். சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உள்ளதால் -மோர்க்குழம்பு என்று ஒன்று பாரம்பரியமாக பட்டியலில் இருப்பதில்லை. அதனைத் தகுதியிழக்க செய்தவர்கள் கற்கால மனிதர்களே. கல்யாண வைபவங்களிலும் இருக்காது, கோவிலில் நடக்கும் திருவிழாக்களிலும் இதற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும். முன்பெல்லாம், அதாவது 1978 to 1985 வருடம் என்று நினைவு பல இடங்களுக்கு பேருந்தில் பயணிக்கும்போது (தமிழ்நாட்டில்) உணவு விடுதிகளில் வெளியில் இன்று என்ன உணவுப் பட்டியல் என்று சிறு குறும்பலகையில் எழுதி வைத்திருப்பார்கள். அதை ஆர்வமாகப் படிப்பேன், சில விடுதிகளில் ‘மோர்க்குழம்பு’, ‘மிளகாய் வத்தல்’, என்றெல்லாம் எழுதியிருப்பதைப் பார்த்து நாக்கில் எச்சில் ஊறூம்.

எனக்கு மோர் என்றாலே ஒரு வித வெறுப்பு உண்டு, என்னை விரட்ட வேண்டுமென்றால் மோரை ஒரு கரண்டியில் கொண்டு வந்தால் ஓடிவிடுவேன். மோர்க்குழம்பு என்றால் ஒரு பிடி பிடிப்பேன். மோர் பிடிக்காது, தயிர் பிடிக்கும், வெண்ணை பிடிக்காது, நெய்பிடிக்கும் இது என்ன பிறவியோ தெரியவில்லை. எப்படி இந்தப் பிறவி வெட்டியாக ஓடிக் கொண்டிருக்கிறதோ, அதே போல் ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு காரணம் புரியவில்லை. பல வித சைவ உணவின் சுவையை ரசித்து ருசித்து சாப்பிட ஒரு ஆர்வம் உருவாக இரண்டு காரணங்கள். ஒன்று என் அம்மா மிகவும் அற்புதமாக சமைப்பார்கள். இரண்டு என் அப்பா எப்படிச்சமைத்தாலும் இன்னும் நன்றாக வரவேண்டும் என்பார்.

இதில் மோர்க்குழம்பு பல வகைகளில் செய்யப்படும். வறுத்து அரைத்த மோர்க்குழம்பு, பருப்புருண்டை மோர்க்குழம்பு, நீர்த்த மோர்க்குழம்பு, வெந்தய மோர்க்குழம்பு, முருங்கைக்காய் மோர்குழம்பு, திடீர் மோர்க்குழம்பு, பச்சை மோர்க்குழம்பு, மோர்க்குழம்பு ரசம், ‘திவச’ மோர்க்குழம்பு. (இந்த ‘திவச’ மோர்க்குழம்பை, தாத்தா (அ) பாட்டி ‘திவசத்தன்று’, அன்று மட்டும் மிளகை அரைத்து சேப்பங்கிழங்கு சேர்த்து செய்வர்கள் – இது தனிச் சுவை கொடுக்கும், இதைச் சாப்பிடுவதற்காக அன்று பள்ளிக்கூடம் போகமாட்டேன்) என்று பல வகையான சுவைக் குழம்புகளை கழனிப் பானையில் விழுந்த எலியாக குடித்திருக்கிறேன், தவறு சாப்பிட்டிருக்கிறேன். கேரளத்தில் மோர்க்கூட்டான் என்று ஒன்று வைப்பார்கள், கிட்டத்தட்ட நம்ம ரகம்தான் என்றாலும், அதன் சுவை சற்று மாறுபடும். இதில் கடைசிஅலங்காரத்தில் தேங்காய் எண்ணய் சேர்த்து ‘தாளித்து’ விடுவார்கள், இது சிலபேருக்கு பிடிக்காது. ஒரு முறை திருச்செந்தூர் போய்விட்டு திரும்ப வீடு வந்து சேரும்போது மிகவும் தாமதமாகி விட்டது, சிறுகுடலை பெருங்குடல் பசியால் திண்றுகொண்டிருந்தது. பசி கண்ணைக் கட்டினால் கோபம் கொப்பளிக்கும். அப்போது என் அம்மா பசக்கென்று துரிதமாக ஒரு மோர்க்குழம்பு வைத்து பசியாற்றினாள். அதன் சுவையும், நினைவுகளும் இன்னும் நினைவில் உள்ளன.

இந்த பல்கலை மன்னன்களில், பருப்பு உருண்டை மோர்க்குழம்பு மிகவும் பிரசித்தி. இதில் என் தோழன் வெங்குட்டு ஒரு பருப்பு உருண்டை வெறியன். அதுவும் மோர்க்குழம்பு பருப்பு உருண்டை என்றால் எங்குதான் ஒளித்து வைக்குமோ அவன் வயறு. அதற்காகவே நாங்கள் தவறுகள் செய்யும்போது பருப்புருண்டையை வாங்கித் தின்று எங்களை காட்டிக் கொடுத்துள்ளான் இந்த நவீன எட்டப்பன். இவனின் பருப்பு தாகத்தில் எங்கள் உறுப்பு சேதாரம் அடைந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பருப்புருண்டைகளை வாயில் இரண்டு பக்கவாட்டிலும் அடக்கிக்கொண்டு நடுவில் உள்ள ஓட்டையின் வழியே தொண்டைக்குள் ஒரு உருண்டையை ‘கோல்’ அடிப்பான். எண்ணி ஒரு 10 சாப்பிட்டால் எண்ணாமல் ஒரு 12 சாப்பிடுவான். நம் வீட்டில் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு என்றால் நாசியில் ஊசி போனது போல் மோப்பம் பிடித்து வந்துவிடுவான். அவனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை வெட்கம், மானம், அனுமதி கோரல். எங்கு யார் வீட்டில் இதைச் செய்தாலும், உருண்டு வந்துவிடுவான் உருண்டையை உள்ளே தள்ள. ரேஷன் கடையில் இன்று சர்க்கரை பட்டுவாடா செய்கிறார்கள் நீ போய் வாங்கி வா என்று அவன் அம்மா கூறினால் போகமாட்டான். இதே போல், பக்கத்து வீட்டு மாமி கூப்பிட்டு “டேய் வெங்குட்டு, கொஞ்சம் போய் வாங்கி வாடா, வரிசையில் நிக்க முடியலை, உனக்கு பருப்புருண்டை மோர்க்குழம்பு வைத்து தருகிறேன்” என்றால் இன்று போய் நாளை வா படத்தில் பாக்கியராஜ் செய்வது போல் பல தடைகளை உடைத்து துரிதமாக வாங்கிவருவான். ஆளும் கழுக் மொழுக் என்று இருந்ததால் நாங்கள் அவனுக்கு பருப்புருண்டை என்று பட்டப்பெயர் வைத்தோம்.

எனக்கும் பருப்புருண்டை பிடிக்கும் என்றாலும், எல்லோரிடமும் வெளிப்படையாகக் கேட்பதில் கொஞ்சம் தயக்கம். ஒரு முறை நாங்கள் திருநெல்வேலிக்கு பள்ளிக்கூட சுற்றுலா போனபோது, ஒவ்வொரு சாப்பாட்டுக் கடையாக ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தான் வெங்குட்டு, வேறு எதற்கு பருப்புருண்டை கிடைக்குமா என்று பார்க்கத்தான். சில இடத்தில் அவர்கள் வேறு உருண்டையை காண்பித்தார்கள், சில இடத்தில் அவனை அடிக்காத குறைதான், இவன் ஒரு லூசு என்று முடிவெடுத்துவிட்டார்கள். ஊருக்கு போய் செய்து தருவதாக சொல்லித்தான் அவனை சமாதானப்படுத்த முடிந்தது. அவன்தான் எங்களின் பையை தூக்கிவருவான், இதை ஒரு சேவையாக செய்தான், அது மட்டுமல்லாது எதை கடையிலிருந்து வாங்கி வா என்றாலும் உடன் முகம் சுளிக்காமல் வாங்கி வருவான், அதனால் எங்களுக்கு அவனை சமாதானப்படுத்துவது ஒரு அத்தியாவசியத் தேவையாக இருந்தது.

இந்தப் பருப்புருண்டையை குழம்பிலும் போடுவார்கள், ஆனால், மோர்க்குழம்பில் போடும்போது ஒரு தனிவித மோகம். பல பேருக்கு பல வகை உணவில் ஆர்வம் இருக்கும், அதற்கு ஏன் என்ற காரணம் எல்லாம் கிடையாது. நாம் அறியாமலே, பழைய பாட்டை திடீர் என்று வாய் முணுமுணுக்கும், அதைக் கேட்க வேண்டும் என்று தோன்றும். அதே போல்தான் சாப்பாடும். சின்ன வயதில் பிடிக்காத உணவு வயதானவுடன் பிடிக்கும். என்ன ஒரு 500 பருப்புருண்டை சாப்பிட்டிருப்பேனா இது வரை, இருக்கலாம். படிப்பு காலம் முடியும் வரை சாப்பாடு பிரச்சனையில்லாமல் இருந்தது, பின் வேலைக்கு போக ஆரம்பத்தவுடன் மெஸ்ஸில் சாப்பிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக கண்ணிலிருந்து மறைந்தது, ஆனால் எண்ணத்தில் பசுமையாக இருந்தது. பின் வெளிநாடு வந்து ஓரளவு வசதி வந்தவுடன், நாம் முயற்சித்தால் என்ன என்று கோதாவில் இறங்கினேன். அம்மாவிடம் செய்முறை விளக்கம் கேட்டேன். எழுதி வைத்து, கன்னி முயற்சியாக செய்து பார்த்தேன், திருப்தியாக இல்லை. முதல் தோல்வி. அதாவது இரண்டு தொழில் நுட்பக் கோளாறு வந்தது. ஒன்று, மோர் சூட்டில் பிரிந்து போனது, இன்னொன்று உருண்டை மிதக்கவில்லை. இரண்டையும் சரி செய்ய எண்ணி மீண்டும் பரிசோதனை முறையில் முயற்சித்தேன். கொஞ்சம் கெட்டியான மோரை தேங்காய் விழுதில் சேர்த்து அரைத்தேன். இளஞ்சூட்டை ஏற்றிக்கொண்டு, அரைத்த தேங்காய் விழுதை உருண்டையுடன் கொதிக்க வைத்து, வாணலியை இறக்கும் முன்பு மீதமுள்ள மோரைச் சேர்த்தேன், இபோது பிரமாதமாக வந்தது. வெற்றி! வெற்றி! நாலு நாளில் நாலு காகிதத்தை வைத்துக் கொண்டு அணுகுண்டை கண்டுபிடித்த வாத்தியார் போல் எக்காளமிட்டேன். பின் பலமுறை வெவ்வேறு விதமாக செய்து பார்த்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.

பல நாட்கள் கழித்து சமீபத்திய ஒரு நிகழ்வில் வெங்குட்டுவை பார்த்தேன். “என்னடா, இபோதெல்லாம் பருப்புருண்டை சாப்பிடுகிறாயா” என்றேன். முகத்தில் தேடி எடுத்த புன்னகையை, சோகத்தை குழைத்து தவழவிட்டான். ‘இல்லடா, வயசாகிவிட்டது ஒரு காரணம், கண்ணு ஒத்துழைக்கும் அளவு உடம்பும் ஒத்துழைக்கமாட்டேன்கிறது”, இதைத் தாண்டி ஒரு காரணம் இருக்குமோ என்று நினைத்து, “அதெனாலென்னடா, மாதத்திற்கு ஒரு முறை கூடவா சாப்பிட முடியவில்லை?” என்றேன். அதற்கு பதிலளித்த அவன், “என்ன செய்ய, என் மனைவிக்கு பிரசித்தி பெற்ற சமையல் பட்டியல்கள் செய்ய வராது. நானும் அழுத்தம் கொடுத்து தொந்தரவு செய்வதில்லை. பேச்சில் நாக்கை அடக்கமுடியாவிட்டாலும், சுவையில் அடக்கிக் கொண்டேன். சிறு வயதில் எல்லாம் நன்றாக அனுபவித்தாகிவிட்டது, அதனால் வருத்தமில்லை, பழைய நினைவுகள் மங்கிவிடவில்லை, எல்லாவற்றையும் கடந்து செல்வதுதானே வாழ்க்கை” என்றான்.

அவனைப் பார்த்துக் கொண்டே எண்ண ஓட்டத்தை நழுவவிட்டேன். எல்லா வித படைக்கப்பட்ட பொருளுக்கும் இரண்டு வித உபயோகம் உண்டு என்பார்கள். ஒரு பொருளினால், கெட்டதும், நல்லதும் ஒருங்கே வரும். உடம்பில் எந்தக் கழிவை வெளியேற்ற உறுப்பு தேவையோ அதே உறுப்பினால் ஒரு உயிர் உற்பத்தியாகிவிடுவது மஹேசனின் மஹிமை. அதே போல் எந்த உடம்பிற்கு ‘வேண்டும்’ என்று தோன்றும் உணவு, ஒரு கட்டத்தில் அதே ‘உடம்பினால்’ வெறுக்கப்பட்டுவிடுகிறது. இந்த எழுதாக்கிளவியாகிய தத்துவத்தைத்தான் வெங்குட்டு யதார்த்தமாகச் சொன்னான். “இந்த தத்துவத்தையெல்லாம் என்னிடம் கொண்டு வந்து போணி பண்ணாதே” என்றது என் மனம். இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பை போல், என் மனதும், உடம்பும் கை கோர்த்து, “நான் விடுவதாக இல்லை” என்றது.

எப்போது பருப்புருண்டையை பார்த்தாலும், கர்ணன் படத்தில் தேவிகாவிற்கு நாயகனின் முகம் ‘நிலவில்’ வந்து மறைவதுபோல என் நண்பணின் எண்ணச் சிதறல்கள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. நான் ஒரு வேளை சின்ன வயது வெங்குட்டுவாக மாறிவிட்டேனோ? காலந்தான் பதில் சொல்லவேண்டும்!

இனி எனக்குத் தெரிந்த சமையல் பக்குவத்திலிருந்து மோர்க்குழம்புகளில் ஒரு தினுசு, உங்களுக்காக:
பருப்புருண்டை தயாரிப்பது எப்படி?
ஒரு சிறிய டம்ளர் துவரம்பருப்பு, ஒரு தேக்கரண்டி அரிசி ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்துக்கொள்ளவும். பின் அதை அரைக்கும்போது மிளகாய் வத்தல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்த விழுதில் கொஞ்சம் கட்டித் தன்மைக்காக அரிசி மாவு சேர்த்து கட்டியாக வைத்துக் கொள்ளவும். பின் வாணலியில் எண்ணையில் கடுகு வெடித்ததும், அரைத்த விழுதை கொட்டி, (கொஞ்சம் எண்ணை அதிகமாக விடவும் அப்போதுதான் ஒட்டாமல் உதிர், உதிராக வரும், சுவையும் கூடும்), உதிராக வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும். எலுமிச்சை அளவுக்கு சிறு உருண்டையாகப்பிடித்து, இட்லி பானையில் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

மோர்க்குழம்பு தயாரிப்பது எப்படி?

தேவையான சாமான்கள்: ஒரு தேக்கரண்டி: ஜீரகம், அரிசி, கொத்துமல்லி விதை, 3 மிளகாய்ப்பழம் (தேவைப்பட்டால் காரத்தை கூட்டி குறைத்துக் கொள்ளவும்). கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய், கட்டியான தயிர் அல்லது புளித்த மோர்.

செய்முறை: ஜீரகம், அரிசி, 3 மிளகாய்ப்பழம், கால் தேக்கரண்டி வெந்தயம், ஒரு மூடி தேங்காய் இவற்றை 2 கரண்டி எண்ணையில் வறுத்துக் கொள்ளவும், பின் தேங்காயைச் சேர்த்து அரைக்கும்போது அரவையில் தண்ணீருடன் கொஞ்சம் மோரை சேர்க்கவும், கட்டியான தயிர் அல்லது புளித்த மோரை கரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கொதிக்க விடும்போது உருட்டி வைத்த உருண்டைகளை சேர்க்கவும். மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின், மீதமுள்ள மோரை சேர்த்து இளஞ்சூட்டிலேயே இறக்கிவிடவும் (உருண்டைகள் மிதக்க வேண்டும்). பின் பச்சைக் கொத்துமல்லி தழைகளை சிறிதாக வெட்டிப் போடவும் (கத்திரிக்கோலை வைத்து அலம்பிய தழைகளை அப்படியே வெட்டிப் போடலாம்). நாலு மோர் மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து, கொஞ்சம் கருவேப்பிலை, சேர்த்து தாளித்து பெருங்காய கரைசலுடன் கொட்டவும். பருப்புருண்டை மோர்க்குழம்பு தயார். அலங்கார வேலைகள் முடிந்தவுடன் பார்த்தால், பூனையின் கண்கள் போல் எண்ணை மிதக்கவேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நண்பர்கள்->கோபால் பதிவுகள்

கோபாலின் முந்தைய பதிவுகள்:
நடிகை காஞ்சனா – அன்றும் இன்றும்
தேவன்: தமிழ் எழுத்துலக ஜாம்பவான்
பள்ளிக்கூடம், பரீட்சை, மாலைமுரசு
மருது பாண்டியர் பற்றி உ.வே. சாமிநாதய்யர்
பழமொழி விளக்கம் – அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்
டைம் பாஸ் கவிதைகள்
ரெகார்ட் டான்ஸ் பார்த்த கோபால்
கோபாலின் நெல்லிக்காய் நினைவுகள்

இது ஒரு தொடர் பதிவு. சுப்ரமணிய சாமியை சந்தித்த அனுபவத்தைப் பற்றி இங்கே; அவருடன் சிதம்பரம் கோவிலைப் பற்றி விவாதித்தது இங்கே.

எனக்கு சாமியின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி இப்போதும் அதிகமாகத் தெரியாது. அவரை சந்திப்பதற்கு முன்னால் கொஞ்சம் கூடத் தெரியாது. அவரைப் பற்றி எனக்கு இருந்த பிம்பம் மிகவும் சிம்பிள் – தடாலடியாக ஏதாவது ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டே இருக்கும் ஒரு ஜோக்கர். அவரை சீரியஸாக எடுத்துக் கொள்வதோ, அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி தெரிந்து கொள்வதோ நேர விரயம்.

அவர் ஒரு ஹிந்துத்வவாதி, அதுவும் பா.ஜ.க.வின் ஹிந்துத்வம் போதவில்லை என்று நினைப்பவர் என்று இங்கேதான் தெரிந்துகொண்டேன். நான் பார்த்த, பழகிய வரையில் ஹிந்துத்வா பேசுபவர்கள் அனைவருக்கும் நம் நாட்டில் பரவலாக இருக்கும் போலி மதசார்பின்மையைப் – ராமன் எந்த காலேஜில் எஞ்சினியரிங் படித்தார் என்று கேட்டுவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிப்பது மாதிரி – பார்த்தால் பற்றிக் கொண்டு வருகிறது. (எனக்கும் அப்படித்தான்.) நிறைய பேருக்கு முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும், எதையாவது சாக்காக வைத்து அவர்களை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும், ரொம்ப துள்ளுகிறார்கள் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. தீவிரமாக இயங்கும் சிலர் சிறுபான்மையினர் என்ற போர்வைக்குள் முஸ்லிம்கள்/கிருஸ்துவர்கள் ஏமாற்று மத மாற்றம், ஃபத்வா என்ற விஷயங்களை கூர்ந்து கவனித்து கூச்சல் போடுகிறார்கள். (இன்னும் சிலர் பேட்டை ரவுடிகள்.) சாமி தீவிரமாக இயங்குபவர். அவர் கையில் எடுத்திருப்பது சட்டத்தை. எங்கெல்லாம் (அவர் கண்ணில்) இந்த சிறுபான்மையினர் என்ற கவசத்தை வைத்து “அநியாயம்” நடக்கிறதோ அங்கெல்லாம் கேஸ் போட முயல்கிறார். (மேல் விஷாரம் என்று ஒரு உதாரணம் சொன்னார், இதைப் பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!)

சாமியின் பலம் அறிவு கூர்மை; அதிகாரிகளுடன் தொடர்பு; பயம் இன்மை. அவருக்கு எங்கிருந்தெல்லாமோ தகவல் வருகிறது. தி.மு.க. அமைச்சர் பூங்கோதை ஒரு அதிகாரியிடம் என் உறவினர் லஞ்சம் வாங்கிய விஷயத்தை கண்டுகொள்ளாதீர்கள் என்றால் அவருக்கு அந்த செல் ஃபோன் டேப் கிடைக்கிறது. சோனியா காந்தி கேம்ப்ரிட்ஜில் படித்தேன் என்று தன் தேர்தல் மனுவில் அஃபிடவிட் தாக்கல் செய்தால் அவருக்கு சோனியா அந்தப் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை என்று கேம்ப்ரிட்ஜில் இருந்தே தகவல் வருகிறது. மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா/ராஜீவுக்கு கேஜிபி பணம் தந்தது என்று எழுதினால் அந்த ஆவணங்கள் இவர் கண்ணில் மட்டும் எப்படியோ பட்டுவிடுகின்றன. இவருக்கு அவற்றை சட்டத்தின் முன்னும், ஊடகங்களிலும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று நல்ல வியூகம் வகுக்க முடிகிறது. யாருக்கும் பயப்படுவதில்லை.

அவரது பலவீனம் மக்கள் ஆதரவு இல்லாதது; ஊடகங்களில் தன் பேர் அடிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் அவரை யாரும் நினைவு வைத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நிலை; அவர் போடும் கேஸ்களில் அரசு போடும் முட்டுக்கட்டை. அவர் நடத்துவது லெட்டர்பாட் கட்சி. இன்றைய இந்திய ஜனநாயக அமைப்பில் அவரால் ஒரு வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே. எந்தக் கட்சியாவது அவர் மேல் பரிதாபப்பட்டு கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் அவர் பாடு அம்போதான். ஊடகங்களுக்கு வேண்டியது சென்சேஷன். அதற்கு இவர் ஏதாவது தடாலடி ஸ்டேட்மென்ட் விட்டால்தான் சரிப்படும். அந்த மாதிரி ஸ்டேட்மென்ட்கள் அவருக்கு ஒரு ஜோக்கர் இமேஜையே கொடுக்கிறது. என்னதான் கேஸ் போட்டாலும் அவரால் யாரையும் வீழ்த்த முடியவில்லை. சோனியா காந்தி மாதிரி பொய் அஃபிடவிட் கேசில் கூட ஒன்றும் செய்யமுடியவில்லை.

மூன்று விஷயங்களில் அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். ஒன்று சிதம்பரம் கோவில். அதைப் பற்றி இங்கே விலாவாரியாக எழுதி இருக்கிறேன். அவர் தீட்சிதர்களுக்காக போராடுவதற்கு உண்மையான காரணம் எதிரியின் எதிரி என்பதுதான் என்று நினைக்கிறேன். கலைஞர் அரசு செய்ய விரும்பும் விஷயத்துக்கு முட்டுக்கட்டை போடுவது என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல!

இரண்டாவது இலங்கைத் தமிழர்கள். நிச்சயமாக அவர் புலிகளை எதிர்க்கிறார். (நானும்தான்.) அவர் சீனா இலங்கையில் நுழைவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று சில பாயிண்ட்களை முன் வைத்தார். அவருடைய கருத்தில் புலிகளின் வளர்ச்சி இந்தியாவுக்கு ஆபத்து, அதனால் தமிழர்களின் உணர்ச்சிகளைப் பதிவு செய்துகொள்ளுங்கள், ஆனால் இந்தியாவின் strategic தேவைகள் என்ன என்பதை வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும். என் கருத்தில் இந்தியாவின் strategic தேவைகளை விட genocide நடக்காமல் தவிர்த்திருக்க வேண்டியதுதான் முக்கியம். புலிகளை அழிக்க வேண்டும் என்பதற்காக ராஜபக்ஷே genocide நடந்தால் நடக்கட்டும் என்றுதான் இருந்தார். அவரோடு புலிகளைப் பற்றி எனக்கு இசைவான கருத்து இருந்தாலும் போன வருஷம் இந்திய அரசு கொஞ்சம் மும்முரமாக செயல்பட்டு சேதாரத்தை குறைத்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அவரும் போன வருஷம் இந்திய அரசு மும்முரமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார், ஆனால் அவர் விரும்பிய மும்முரம் புலிகளை ஒழித்துக் கட்டுவதில்! நாங்கள் இருவரும் முழுதாக இசைவது இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி. இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர் நலனைக் காக்க வேண்டும், மன்மோகன் அரசு இதில் வீக்காக இருக்கிறது என்றுதான் அவரும் சொல்கிறார்.

மூன்றாவது குஜராத் கலவரங்கள். அவர் வெளிப்படையாக சொன்னார் – அரசு நினைத்திருந்தால் இதை தடுத்திருக்க முடியும் என்று. தானும் ஒரு மந்திரியாக இருந்தவன், அரசு எந்திரம் பற்றி தெரிந்தவன், குஜராத் அரசு இதை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும், தடுத்திருக்க வேண்டும், தடுத்திருக்க முடியும் என்று சொன்னார். அப்படி சொல்லிவிட்டு 84 டெல்லி கலவரம் என்று ஆரம்பித்துவிட்டார். 84 டெல்லி கலவரத்தை கண்டியுங்கள், அதை வைத்து வேறு கலவரங்களை நியாயப்படுத்தாதீர்கள். இந்த சின்ன விஷயம் இவருக்கு புரியாமல் இருக்காது, இருந்தாலும் சப்பைக்கட்டு கட்டுகிறார்.

இந்திய-சீன பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றில் நிபுணர் என்று கேள்வி. மூன்றாவதாகவும் ஒரு இடத்தில் இதைப் பற்றி பேசினாராம். என்னால் போக முடியவில்லை. போனவர்கள் பேச்சு நன்றாக இருந்தது என்று சொன்னார்கள்.

அவருடைய பல நிலைப்பாடுகளை நான் நிராகரிக்கிறேன். ஆனால் அவர் ஜோக்கர் இல்லை. நம் சிஸ்டத்தை மாற்றப் போராடுகிறார். சட்டம் மட்டுமே அவரிடம் இருக்கும் ஆயுதம். அதை திறமையாக பயன்படுத்துகிறார். அவரால் இதற்கு மேல் ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் சோகம். சுருக்கமாக சொன்னால், நம் அரசியல், ஜனநாயக, கட்சி அமைப்பால் அமுக்கப்பட்ட திறமையாளர்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன்
சாமியுடன் சிதம்பரம் கோவில் பற்றி ஒரு விவாதம்
சாமி என்னதான் செய்திருக்கிறார்?
சாமியின் தடாலடி ஸ்டேட்மென்ட்களை கிண்டல் அடித்து எழுதிய ஒரு பதிவு
சாமியின் லெட்டர் பாட் கட்சி நிலையை கிண்டல் அடித்து எழுதிய ஒரு பதிவு

அவரை சந்தித்த அனுபவத்தின் முதல் பகுதி இங்கே.

பிறகு எல்லாரும் ஒரு ரெஸ்டாரன்ட் கிளம்பிச் சென்றோம். அங்கே informal ஆக பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஒரு “ஹிந்துத்வவாதி”, பா.ஜ.க.வின் ஹிந்துத்துவம் போதவில்லை என்று நினைப்பவர் என்று அங்கேதான் தெரிந்துகொண்டேன். அங்கே வந்த பலரும் அப்படி நினைத்தவர்கள்தான் என்று தெரிந்தது. நானோ ஹிந்துத்வா எதிர்ப்பாளன். அப்புறம் எனக்கு இந்த சபை நாகரீகம் எல்லாம் கிடையாது. அதனால் எனக்கு உறுதியான கருத்து உடைய சிதம்பரம் கோவில் விஷயத்திலிருந்து ஆரம்பித்தேன்.
ஆர்வி: சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தமிழ் பாட்டு பாடக்கூடாது என்று சொல்வதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
சாமி: சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் சொத்து.
ஆர்வி: மிச்ச கோவில்கள் எல்லாம் கோவில் அர்ச்சகர்களின் சொத்தாக இல்லாதபோது இது மட்டும் எப்படி தீட்சிதர்களின் சொத்தாக இருக்க முடியும்?
சாமி: எந்த கோவிலும் அரசின் சொத்தாக இருக்க முடியாது. அரசியல் சட்டம் கோவில் (மற்றும் மசூதி, சர்ச், குருத்வாரா) ஆகியவற்றின் நிர்வாகம் சரி இல்லாதபோது அரசு நிர்வாகத்தை ஏற்கும் உரிமை அளிக்கிறது. ஆனால் நிர்வாகத்தை சரி செய்த பிறகு அரசின் கண்ட்ரோலில் கோவில் இருக்கக் கூடாது. இதற்காக நான் இன்னொரு கேஸ் போட்டிருக்கிறேன். (திருப்பதி கோவில் சம்பந்தப்பட்ட கேசாம்) கோவில்களை முக்கிய மடாதிபதிகள் பங்கு பெற்றுள்ள “ஹிந்து தர்மிக் சமாஜ்” அமைப்பின் கண்ட்ரோலில் கொண்டு வரலாம்.
ஆர்வி: தமிழர்கள் பணத்தில் கட்டப்பட்ட கோவில்; அங்கே தமிழ் பாட்டு கூடாது என்பது அநியாயம் இல்லையா?
சாமி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் போய் தேவாரம் பாட முடியுமா? அங்கே அதன் விதிகளின் படித்தான் நடக்க வேண்டும்.
ஆர்வி: மைக்ரோசாஃப்ட் ஆன்மீக அமைப்பு இல்லை. கோவிலில் தேவாரம் பாடப்படுவது எந்த முறையில் தவறு?
சாமி: கோவிலில் தேவாரம் பாடப்படுவது ஆன்மீகம்தானா இல்லையா என்ற கேள்விக்குள் நான் போக விரும்பவில்லை. தீட்சிதர்களின் நிர்வாகம் சரி இல்லை என்றால் ஹிந்து தர்மிக் சமாஜிடம் நிர்வாகத்தை கொடுப்போம். அவர்கள் தேவாரம் பாடலாமா கூடாதா என்று தீர்மானித்துக் கொள்வார்கள். இதை சட்ட ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். இங்கே தமிழ் பாட்டு வேண்டும் என்று மக்கள் ஒன்றும் பொங்கி எழவில்லையே!
ஆர்வி: ஒரே ஒருவர் மட்டும்தான் தமிழ் பாட்டு பாட வேண்டும் என்று கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் என்ன? சட்டம் எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பதைப் பற்றி இல்லையே? மேலும் அவர் கேட்பது சரிதானே? அதை எந்த விதத்தில் மறுக்க முடியும்? அப்புறம் சட்டம் பேசுகிறீர்கள். மக்கள் பிரதிநிதிகள் கேட்கிறார்கள்; எம்.எல்.ஏக்கள் கேட்கிறார்கள்; எம்.பி.க்கள் கேட்கிறார்கள்; அவர்கள்தானே சட்டப்படி மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறவர்கள்?

அதிக நேரம் இந்த ஒரே விஷயத்தில் செலவழிக்கப்பட்டுவிட்டதாலும், என் ஒருவன் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியாது என்பதாலும், இங்கே முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் சாமியின் பதில்கள் திருப்தி தரவில்லை. தமிழ் வேண்டும் என்று மக்கள் பொங்கி எழ வில்லையே என்கிறார். சமஸ்கிருதம் வேண்டும் என்று எப்போது மக்கள் பொங்கி எழுந்தார்கள்? அட தமிழில் பாடலாம் என்று தீர்ப்பு வந்தபோது சிதம்பரத்தில் ஏதாவது கடை அடைப்பு, பந்த், ஊர்வலம் நடந்ததா? தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யலாம் என்று அரசு சட்டம் இயற்ற முடியும் என்றால் தேவாரம் பாடலாம் என்று சட்டம் இயற்றும் உரிமை மட்டும் எப்படி இல்லாமல் போகும்? நிர்வாகத்தை ஹிந்து தர்மிக் சமாஜிடம் தர வேண்டுமாம், அப்புறம் அவர்கள் முடிவு செய்வார்களாம் – ஏன் இப்போதே தேவாரம் பாடலாம் (அல்லது பாடக்கூடாது) இதுதான் எங்கள் நிலை என்று சொல்வதுதானே? இவர்களிடம் நிர்வாகத்தை கொடுத்துவிட்டு அப்புறம் அவர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தரும்படி எந்த மடம் நடந்துகொண்டிருக்கிறது? ஊரில் இன்னும் முப்பது நாற்பது வேத பாடசாலைகளாவது இருக்கிறது. எந்த வேத பாடசாலையில் ஒரு தலித்துக்கு, அட ஒரு அனாதைக்கு, அட விடுங்கள் ஒரு பிராமணப் பெண்ணுக்கு வேதம் சொல்லித் தரப்படுகிறது? எனக்குத் தெரிந்து சேரிகளுக்குப் போன ஒரே மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிதான். அந்த காஞ்சி மடம் நடத்தும் வேத பாடசாலையில் கூட நிச்சயமாக இது நடக்கவில்லை. எல்லா மடங்களிலும் ஒரே ஜாதிக்காரர்கள்தான் தொடர்ந்து மடாதிபதி ஆகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் ஒரு பிராமணனோ தலித்தோ மடாதிபதி ஆகிவிட முடியுமா? (அய்யாவழி, நாராயண குரு, ராமகிருஷ்ணா மிஷன் அமைப்புகளில் எப்படி என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாம்.) அப்படிப்பட்ட மடாதிபதிகள் (அதுவும் சங்கர மடங்கள் மட்டுமே என்று நினைக்கிறேன், தெளிவாகத் தெரியவில்லை.) நிறைந்த ஒரு அமைப்பு பெரிதாக கிழித்துவிடும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. என் போன்றவர்களின் அவநம்பிக்கையைப் போக்கவாவது இப்போதே இந்த விஷயத்தில் என்ன நிலை என்று இந்த தார்மிக் சமாஜ் சொல்லிவிடலாமே! என் நம்பிக்கை பொய்யானால் என்ன வருத்தமா படப்போகிறேன்?

ஆனால் அவர் கடைசி வரை மசூதியில் தமிழில் அது என்னய்யா ஃபாத்தியாவா, ஏதோ ஒன்று, ஓதுவார்களா, சர்ச்சில் இப்படி கேட்க முடியுமா என்று சொல்லவே இல்லை. அது எனக்கு பிடித்திருந்தது. அப்படி கேட்பது எனக்கு எப்போதுமே எரிச்சல் ஊட்டும் விஷயம். நீ குளித்து சுத்தமாக இருக்கலாமே என்று சொன்னால் பக்கத்து வீட்டுக்காரன் குளிக்கவில்லையே என்று கேட்பது போன்ற முட்டாள்தனம் அது. ஒன்று மதச்சடங்குகள் எந்த மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது பூசாரிகளின் உரிமை; இல்லை பக்தர்களின் உரிமை. அடுத்த மதக்காரனின் உரிமை இல்லையே!

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல், ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சுப்ரமணிய சாமியை சந்தித்தேன் பகுதி 1, பகுதி 3, பகுதி 4

சிதம்பரம் கோவிலும் தமிழ் வழிபாடும் பகுதி 1, பகுதி 2

நாலைந்து நாளைக்கு முன்னால்தான் திரு விஸ்வநாதன் கக்கனை சந்தித்தேன். சுப்ரமணிய சாமியும் அவரும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது.

விஸ்வநாதன் கக்கன் மறைந்த காங்கிரஸ் தலைவரான கக்கனின் தம்பி. சுப்ரமணிய சாமி தலைவராக இருக்கும் ஜனதா கட்சிக்கு இவர்தான் செயலாளராக இருந்தார். சென்னை ஹை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அண்ணன் காங்கிரஸ், காமராஜ் என்று போனால் இவர் ஆர்எஸ்எஸ், ஹிந்துத்வா என்று கொஞ்சம் வேறு திசையில் போயிருக்கிறார். ஏதோ ஒரு வாயில் நுழையாத பேர் சொல்வார்களே, சர்சங்க்சாலக் என்ற மாதிரி, அந்த பொறுப்பில் ஆர்எஸ்எஸ் பிரசாரகராக இருந்திருக்கிறார். காஞ்சி சங்கர மடத்திடம் ஆழமான தொடர்பு இருந்திருக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதிக்கு கொஞ்சம் நெருக்கமானவர் போலிருக்கிறது. ஜெயேந்திரர் விசிட் அடித்த தலித் கிராமங்கள், கோவில்களில் இவருடைய தும்பைப்பட்டி கிராமமும் ஒன்று, அனேகமாக முதல் கிராமம் இதுதான். ஹிந்துத்வத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர். ஹிந்து முன்னணி துணைத்தலைவராக எல்லாம் இருந்திருக்கிறார். 2006 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார், வெற்றி பெறவில்லை. அவருடைய குடும்பத்தில் நிறைய கலப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. அவரே அப்படி மணந்துகொண்டவர்தாம். இங்கே தன் மகளையும் மருமகனையும், புதிதாக பிறந்திருக்கும் பேரனையும் பார்க்க வந்தவர் இப்படி இறந்துபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அவருடைய கொள்கைகள் – குறிப்பாக ஹிந்துத்வா ஆதரவு எனக்கு இசைவானதில்லை. ஆனால் அவருக்கு அதில் முழு நம்பிக்கை இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதுவும் ஹிந்து மதத்தின் ஒரு மோசமான கூறை நேரடியாக அனுபவித்தவர் எப்படி ஹிந்துத்வா ஆதரவாளராக மாறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு நாள் சாவகாசமாக உட்கார்ந்து அவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதையும் தள்ளிப் போடாதீர்கள்!

அவருடைய குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்.

பிற்சேர்க்கை: ஃபோட்டோ சுட்டி கொடுத்த ரீச்விநோவுக்கு நன்றி!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஆளுமைகள்

தொடர்புடைய பக்கங்கள்:
சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு வரும் சுப்ரமணிய சாமி
கக்கன்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers