இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சுப்ரமணிய சாமி சிலிகான் பள்ளத்தாக்குக்கு வந்திருந்தார். அவரோடு நண்பர் வீட்டில் நாலைந்து பேர் சந்தித்தோம். பிறகு அவரோடு ஒரு ரெஸ்டாரண்டில் ஒரு முப்பது பேர் சேர்ந்து இரவு உணவு. அடுத்த நாள் அவரது பேச்சு மற்றும் கேள்வி பதில் செஷன் ஒன்று. ஒரு அறுபது எழுபது பேர் வந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் இன்னொரு உரை ஆற்ற சென்று கொண்டிருந்தார். ஏற்பாடு செய்திருந்த பாரதி தமிழ் சங்கம், அதன் தலைவர் ராகவேந்திரன், நண்பர் ராஜன் எல்லாருக்கும் நன்றி!
சாமி கேலிக்குரிய விதத்தில் பேசுபவர் (இன்னும் கடுமையான வார்த்தைகளை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்), இந்திய அரசியலில் ஒரு irrelevant ஆளுமை என்றுதான் எனக்கு ஒரு பிம்பம் இருந்தது. இல்லை. நிச்சயமாக இல்லை. அதிபுத்திசாலி. இந்திய அரசியலை மாற்ற தன்னால் முடிந்த எல்லா விதத்திலும் போராடுபவர், ஆனால் போராடும் வழிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டிருக்கிறார் என்றுதான் இப்போது தோன்றுகிறது. அவருடைய காம்ப்ரமைஸ்களைப் பற்றி எனக்கு கடுமையான விமர்சனம் இருக்கிறது.
எனக்கு சாமியின் “கொள்கைகள்” பற்றி இதற்கு முன்னால் எதுவும் தெரியாது. உண்மையை சொல்லப் போனால் நான் சாமியை சீரியஸாக எடுத்துக் கொண்டதே இல்லை. காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் என்று நினைப்பு, அதனால் அவர் எழுதிய கட்டுரை ஏதாவது கண்ணில் பட்டாலும் படிப்பதில்லை. சுப்ரமணிய சாமி என்ற பேரைப் பார்த்தாலே தானாக ஸ்விட்ச் ஆஃப். ஆனால் வினவு தளத்தில் முதல் முதலாக நான் சண்டை போட்டது அவர் மேல் முட்டை வீச்சு சம்பவம் நடந்து, அதற்கு அவர்கள் ஆஹா! ஜனநாயக முறைப்படி, மக்கள் விருப்பத்தை சாமி மேல் முட்டை வீசி நிறைவேற்றினோம் என்று முட்டாள்தனமாக குதித்தபோதுதான். சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடக் கூடாது என்று சொல்ல எந்த தீட்சிதருக்கும் உரிமை இல்லை என்று நான் உறுதியாக கருதுகிறேன். ஆனால் தீட்சிதர்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொல்லவும் எல்லாருக்கும் கருத்துரிமை உண்டு; அப்படி சொல்பவர்கள் மேல் முட்டை வீசுபவர்கள் தண்டனை அடைய வேண்டியவர்களே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதனால் எனக்கு அவரது கருத்துகளைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர் தீட்சிதர்கள் கண்ட்ரோலில்தான் சிதம்பரம் கோவில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பது மட்டுமே. சரி அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்பதையாவது புரிந்து கொள்வோமே என்று நினைத்துதான் போனேன்.
அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று நினைக்கிறேன். டையோ என்னவோ, தலை நிறைய கறுபபு முடி. (நான் புதிதாக ஒரு ஆணை சந்தித்தால் தலையில் எவ்வளவு முடி இருக்கிறது என்றுதான் முதலில் பார்ப்பேன். சொந்தக் கதை சோகக் கதை.) ஐந்தரை அடி உயரம் இருக்கலாம். தொந்தி தொப்பை இல்லை. சிரித்த முகம். மேட்டுக்குடி ஆள் என்று தோன்ற வைக்கும் முகம், நிறம், தோற்றம், நடை உடை பாவனை. அதிரடி பேச்சு. குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. கேள்விகள் எரிச்சல் மூட்டும்போது எரிச்சலை polished ஆக வெளிப்படுத்தும் லாவகம். தான் ஒரு பெரிய மனிதர், முன்னாள் மந்திரி என்றெல்லாம் எந்த வித hangup-உம் இல்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எடுத்த ஒரு ஃபோட்டோவை காட்டினார். அதில் அவர் பாடம் நடத்துகிறார், போர்டில் என்னவோ சிக்கலான ஈக்வேஷன்கள். நான் ஈக்வேஷன்கள் சிக்கலாக இருக்கிறது என்று ஒரு சம்பிரதாய கமென்ட் விட்டேன். அவர் ஓ அதெல்லாம் வெறும் ஐகன் வால்யூக்கள் என்று சொன்னார். ஐகன் வால்யூ பற்றி தெரிந்த ஒரு அரசியல்வாதியா என்று எனக்கு கொஞ்சம் புல்லரித்தது!
நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சனின் மாணவர். சாமுவெல்சனோடு இணைந்து பேப்பர்கள் எழுதிய ஐந்து பேர்களில் ஒருவர். சாமுவெல்சன் இவர் அடுத்த ஜெனரேஷனில் பேசப்படும் எகானமிஸ்டாக வருவார் என்று சொல்லி இருக்கிறாராம். கோடைக் காலத்தில் ஹார்வர்டில் ஒரு Mathematical Methods for Economics என்று ஒரு கோர்ஸ் நடத்துகிறாராம். சிலபஸில் Calculus of Variations , Multivariate Calculus எல்லாம் உண்டாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. ஆனால் இது ஒரு undergraduate கோர்ஸ் என்றுதான் நினைக்கிறேன். இதை நடத்த பெரும் மேதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நடத்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏன் இந்தியாவிலிருந்து ஒருவரை வரவழைக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என்னவோ.
வந்தபோதே களைத்திருந்தார். ஒரு பத்து நிமிஷம் தூங்கினார். பிறகு எழுந்து வந்தவர் எங்களுடன் பேச ஆரம்பித்தார். பல அதிரடி கேள்விகளை கேட்டார் – சோனியா காந்தி தான் கேம்ப்ரிட்ஜில் படித்தவர் என்று பொய் affidavit தாக்கல் செய்திருக்கிறாராம், ஆனால் அதை ஊடகங்கள் அமுக்கிவிட்டனவாம். மிட்ரோகின் என்ற கேஜிபி அதிகாரி சோனியா கேஜிபியிடம் பணம் வாங்கினார் என்று எழுதி இருக்கிறாராம். ஆனால் பா.ஜ.க. அரசு கூட அதைத் தோண்ட மறுத்துவிட்டதாம். இப்படி பல விஷயங்களை சொன்னார். ஏன் பா.ஜ.க. அரசு இவற்றை பயன்படுத்தி சோனியா காந்தியை ஒழிக்காமல் விட்டுவிட்டது என்று கேட்டேன். இதற்கு பதில் சொன்னால் நீங்கள் யாரும் நம்பமாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அதைப் பற்றி பேச மறுத்துவிட்டார்.
பதிவு நீண்டுகொண்டே போவதால் இங்கே நிறுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டில் என்ன பேசினார் என்று நாளை தொடர்கிறேன்.
சனிக்கிழமை ஸ்வாகத் ஹோட்டலில் நடப்பதாக இருந்த நிகழ்ச்சி இப்போது
Bay area Vaishnav Parivar
25 Corning Ave.,
Milpitas, CA 95035
Phone: (408) 586-0006
FAX: (408) 586-0008
என்ற முகவரியில் நடக்கிறது. தவறான இடத்துக்கு போய்விடாதீர்கள்!
உப்பிலி ஸ்ரீனிவாஸ் உட்பட்ட பலர் கக்கன் பற்றிய பல விவரங்களை வைத்யநாத ஐயர் பதிவில் கொடுத்திருந்தார்கள். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.
கக்கன் 1910-இல் பிறந்தவர். அவரது குரு வைத்யநாத ஐயரை விட இருபது வயது இளையவர். தலித் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கோவில் பூசாரி. மதுரைக்கு பக்கத்து கிராமமான தும்பைப்பட்டியில் பிறந்தவர். வைத்யநாத ஐயர் வீட்டில் ஊழியராக இருந்து அடுப்படி வரையில் சகல வேலைகளையும் செய்து வந்தார். 38-இல் சொர்ணம் பார்வதி என்பவரோடு கல்யாணம் நடந்திருக்கிறது.
முதன் முதலாக அவர் பேர் அடிபட்டது மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தின்போது என்று நினைக்கிறேன். வைத்யநாத ஐயரும் கோபாலசாமி என்பவரும் முன்னால் நின்று இந்த ஆலயப் பிரவேசத்தை நடத்தி இருக்கிறார்கள்.
1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு அலிப்பூர் ஜெயில். அப்போது பயங்கர அடியாம். 1946 மத்திய சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1952 தேர்தலில் எம்.பி. 1957 தேர்தலில் எம்.எல்.ஏ., அமைச்சர். பொதுப்பணித்துறை, விவசாயம், ஆதி திராவிடர் நலத்துறை, உள்துறை என்று பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். மெரினாவில் இந்துக் கடவுள்களின் சிலைகளை, தனது எச்சரிக்கையையும் மீறி, தந்தை பெரியார் எரித்த போது, சற்றும் தயங்காமல் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தவர் கக்கன் என்று ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார். தனிப்பட்ட தலைவர்களை விட சட்டம் – ஒழுங்கு முக்கியம் என செயல்பட்ட அவரை பின்னர் அதே பெரியார் பாராட்டினாராம். ஜாதிக் கலவரத்தை திறமையாக அடக்கினார் என்று இங்கே படித்தேன். – “சாதிக் கலவரம் நடந்த போது தேவரை நேரில் போய் சந்திக்கச் சென்ற போது போக வேண்டாம் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர். மீறி மன தைரியத்துடன் சென்று தேவரை சந்திக்கிறார். அவர் மிகச் சிறப்பாக வரவேற்று, இருவரும் சேர்ந்து கூட்டறிக்கை விட்டு சாதிக் கலவரத்தை நிறுத்துகின்றனர்.” அவர் டம்மி அல்ல, டோக்கன் தலித் தலைவர் இல்லை என்று விஜயன் சொல்கிறார். வைகை, மேட்டூர் அணைகளை உருவாக்கியதில் பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்த பெருமை கக்கனுக்கு உண்டாம்.
தொடர்ந்து 9 ஆண்டுகள் அமைச்சராகவும் 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகவுமிருந்த கக்கன் எந்த விதத்திலும் கறைபடாதவர். கக்கனுக்குப் பிறகு எந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடிமகனுக்கும் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய பொறுப்புகள் இன்று வரை வழங்கப்படவில்லை.
கக்கன் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காலத்தில் கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தது என்று இங்கே படித்தேன். முதலில் கக்கன் காங்கிரஸ் தலைவராக இருந்தாரா இல்லை காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவராக இருந்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. கோஷ்டி சண்டை மட்டுப்பட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியை வெளியே அனுப்பியாயிற்று. மிஞ்சி இருந்த ராஜாஜி ஆதரவாளர்கள் கூட – சி.எஸ். உட்பட – காமராஜை தலைவராக ஏற்றுக் கொண்டாயிற்று. அப்புறம் ஏது கோஷ்டி?
கக்கன் சென்ற ஒரே வெளிநாடு சீனா மட்டுமே. சீனாவிற்குச் சென்றிருந்த சமயம் சூயன்லாய் அவர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்.
அமைச்சராய் இருந்தபோது தன்னுடைய சம்பளம் போதாமல், மாதக் கடைசியில் தன்னிடம் வேலைப் பார்க்கும் செயலாளரிடம் கடன் வாங்குவாராம். ராஜன் சொல்கிறார் – அவரது தம்பி விஸ்வநாதன் கக்கனுக்கு சென்னையில் வேலை கிடைத்து வேலைக்குச் சேருவதற்காக அண்ணன் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறார். இது அரசு வீடு என் உறவினர்கள் தங்கக் கூடாது இரவு மட்டும் போலீஸ்காரர் தங்கும் அவுட்போஸ்டில் இருந்து விட்டு காலையில் வேறு இடம் பார்த்துக் கொள் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் மந்திரி கக்கன். ஆனால் உப்பிலி ஸ்ரீனிவாஸ் இது சம்பந்தி என்று குறிப்பிடுகிறார். (ஒரு வேளை இரண்டு பேரையும் வீட்டில் தங்கக் கூடாது என்று சொன்னாரோ என்னவோ. என்னைப் பொறுத்த வரை இது கிறுக்குத்தனம்.)
1975-இல் காமராஜர் இறந்த பிறகு அரசியலை விட்டு கக்கன் விலகிவிட்டார். ராயப்பேட்டையில் உள்ள கிருஷ்ணபுரத்தில் ரூபாய் 110 மாத வாடகையில் ஒரு சிறு வீட்டில் குடியிருந்தார். எங்கு சென்றாலும் பேருந்துக்காக கால் கடுக்க நின்றிருப்பார். நான்கு முழம் கதர் வேட்டியும் கதர் சட்டையுமே அணிவார். சாதாரண ஏழை சாப்பிடும் உணவையே அவர் சாப்பிடுவார்.எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, தமிழக அரசு கக்கனுக்கு இலவச வீடும் பேருந்தில் செல்ல இலவசப் பயணச் சீட்டும், இலவச மருத்துவச் சலுகையும் மாதம் 500 ரூபாய் ஓய்வு ஊதியமும் கொடுத்தது. 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த கக்கனைப் பார்த்து உடல் நலன் விசாரித்தார். உடனே கக்கனுக்கு தனியறை வசதியும், தகுந்த உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவருடைய எளிமைக்கும் நேர்மைக்கும் பல உதாரணங்கள் இங்கே சொல்லப்படுகின்றன.
பதவியினால் கிடைத்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி எந்தத் தவறும் செய்ததில்லை. தன்னுடைய இனத்தைக் கூட தனக்காக எந்த விதத்திலும் அவர் பயன்படுத்தியதில்லை, சுரண்டியதுமில்லை. இப்படி ஒருவர் நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தாரா என்று ஆச்சர்யப்பட வைத்த மாமனிதர் அவர். இந்த நேர்மையும் கறைபடாத தன்மையும்தான் அவரை உயர்ந்தோர்க்கெல்லாம் உயர்ந்தவராக்கியது.
நிகழ்ச்சி இடம் மாறி இருக்கிறது. இப்போது
Bay area Vaishnav Parivar
25 Corning Ave.,
Milpitas, CA 95035
Phone: (408) 586-0006
FAX: (408) 586-0008
இங்கே நடக்கும்.
சுப்ரமணிய சாமி பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசு வென்ற பால் சாமுவெல்சன் அவரது அட்வைசராக இருந்தார். பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ப்ரொஃபசராக வேலை பார்த்தார். இந்தியா திரும்பி எம்.பி.யாக ஆனார். எமர்ஜென்சியை தைரியமாக எதிர்த்தவர்களில் இவரும் ஒருவர். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது இவர் சட்டம் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருந்தார். இப்போது ஜனதா கட்சி என்று ஒரு லெட்டர்பாட் கட்சியை நடத்துகிறார்.
சுப்ரமணிய சாமி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அப்படி விமர்சனம் உள்ளவர்களில் நானும் ஒருவன். ஆனால் அவர் மெத்தப் படித்தவர் என்பதிலோ, இந்திய அரசியலில் ஒரு insider என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை. குறைந்த பட்சம் நன்றாக பொழுது போகும் என்று நினைக்கிறேன். வந்துதான் பாருங்களேன்!
விஸ்வநாதன் கக்கன் வேறு பேசுகிறார். இவர் முன்னாள் தமிழக அமைச்சரும், அரசியல் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுபவரும் ஆன கக்கனின் சகோதரர். கக்கனைப் பற்றிய நினைவுகளை கேட்கவாவது வாங்கள்!
Bharathi Thamizh Sangam Invites you to a lecture by
Dr. Subramanian Swamy
Professor of Economics, Harvard University
Chief Guest
Thiru.Viswanathan Kakkan (Brother of Late Shri.P.Kakkan, Home minister, Tamil Nadu)
June 26 (Saturday) @ 1.30 PM
Hotel Swagat, 68 South Abel St, Milpitas
Admission free – All are welcome!!
For details contact: Rajan – 510-825-2971, Nagarajan – 408-771-5779
இன்றுதான் தெரிந்தது – உப்பிலி ஸ்ரீனிவாஸ் பாலஹனுமான் என்ற பேரில் இப்போது ஒரு தளம் தொடங்கி இருக்கிறார். பாலஹனுமான் என்ற பேரில் இரண்டு மூன்று பின்னூட்டங்கள் வந்தும் நான் அவரை recognize செய்ய தாமதம் ஆகிவிட்டது. அங்கே அவரது வழக்கமான ஸ்டைலில் பல பதிவுகளை போட்டுத் தள்ளுகிறார். இங்கே வரும் பலரும் ஸ்ரீனிவாசின் விசிறிகள், அவரது பதிவுகளை (நான் உட்பட) மிஸ் செய்கிறார்கள். எதிர்காலத்தில் அவர் மீண்டும் இங்கேயே எழுத வருவார் என்று எனக்கும் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அது வரையில் அவரது பதிவுகளை படிக்க விரும்புவர்கள் இங்கே போய்ப் பாருங்கள்!
ஜன கண மன அதி நாயக ஜய ஹே என்ற பாட்டை எழுதியவர் ரவீந்த்ரநாத் தாகூர் என்று எல்லாருக்கும் தெரியும். பாட்டிற்கு மெட்டு போட்டது யார்?
காப்டன் ராம்சிங் தாகூர். கேள்விப்பட்டதே இல்லை இல்லையா?
காப்டன் ராம்சிங் சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1943-இல் நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தின் ரேடியோ ஸ்டேஷனுக்கு வந்தாராம். தாகூரின் பாட்டிற்கு மொழிபெயர்ப்பு ஒன்று இருந்ததாம். அதற்கு தூன்குபவர்களையும் எழுப்பக் கூடிய martial tune ஒன்று போட வேண்டும் என்று இவரிடம் சொன்னாராம். இவர் போட்ட மெட்டுதான் இன்றும் பாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று – 1947-இல் – நேரு ஆங்கிலேயக் கொடியை இறக்கி இந்தியக் கொடியை ஏற்றும்போது இவரேதான் இந்த மெட்டை வாசித்தாராம். (ஜன கண மனவா, இல்லை மொழிபெயர்ப்பா என்று தெரியவில்லை.)
மொழிபெயர்ப்பு ஷுப் சுக் செய்ன் கி பர்கா பர்சே பாரத் பாக்ய ஹை ஜாகா என்று தொடங்குகிறது. மொழிபெயர்ப்பாளர்களில் நேதாஜியும் ஒருவராம். டெல்லி சலோ என்று ஒரு கிராமஃபோன் ரெகார்ட் நேதாஜிக்கு பிடித்த பாட்டுகளோடு – இந்த பாட்டு உட்பட – வந்திருக்கிறதாம். யாரிடமாவது இருந்தால் பாட்டுகளை அப்லோட் செய்யுங்கள்!
வழக்கம் போல காப்டன் ராம்சிங்கை எல்லாரும் மறந்துவிட்டார்கள். 1997-இல் வந்த கட்டுரையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் கூட வரவில்லை என்று எழுதி இருக்கிறார்கள். என்ன ஆனாரோ? 2002-இல் இறந்திருக்கிறார். செத்த பிறகு சிலை வைப்பார்கள்!
காப்டன் ராம்சிங் மெட்டமைத்த இன்னொரு புகழ் பெற்ற பாட்டு – கதம் கதம் படாயே ஜா. இதுதான் இந்திய தேசிய ராணுவத்தின் marching song! பாட்டை கீழே கேட்கலாம்.
இதுதான் ஒரிஜினல் பாட்டா இல்லை சினிமாவுக்கு மாற்றிவிட்டார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. எப்படி இருந்தாலும் கேட்கும்போது உற்சாகம் வரவழைக்கும் பாட்டு!
ஆலயப் பிரவேசப் புகழ் வைத்யநாத ஐயர் பற்றி முன்னாள் அமைச்சர் கக்கன் எழுதியதை எங்கே பார்த்தேன் என்று கூட நினைவில்லை. ஆனால் படிக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
வைத்யநாத ஐயர் அந்தக் கால காங்கிரஸ்காரர். 1939-இல் அவர் ஆறு “தாழ்ந்த” ஜாதிக்காரர்களை அழைத்துக்கொண்டு போய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆலயப் பிரவேசம் செய்தார். அந்த ஆறு பேரில் கக்கனும் ஒருவர். ஆறு பேரில் ஐந்து பேர் தலித்கள், ஒருவர் சாணார். (சாணாரும் நாடாரும் ஒன்றுதானா?) வைத்யநாத ஐயருக்கு இதனால் கடும் எதிர்ப்பு. அடி உதை கூட விழுந்ததோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சண்டாளர்களை கோவிலுக்கு கூட்டிப் போய் கோவிலின் புனிததத்தை கெடுத்தானே பாவி என்று கும்மிப்பாட்டு எல்லாம் எழுதி அமோகமாக விற்றிருக்கிறதாம். இன்றைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு மாதிரி அன்றைக்கு கும்மிப்பாட்டு போலிருக்கிறது!
ஐயர் 1890-இல் பிறந்தவர். உப்பு சத்யாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு ஜெயிலுக்கு போனவர். உப்பு சத்தியாகிரகத்தில் வேதாரண்யத்தில் போலீஸ் அவரை அடித்து துவைத்துவிட்டார்களாம். குடுமி, பூணூல், பஞ்சகச்சம் என்று இருப்பாராம். காமராஜ்-ராஜாஜி கோஷ்டிகள் என்று தமிழக காங்கிரஸ் இருந்தபோது இவர் ராஜாஜி கோஷ்டி. காங்கிரசிலிருந்து விலகி இருந்த ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வர விரும்பியபோது அதற்காக தீவிரமாக பாடுபட்டு காமராஜோடு சண்டை போட்டு இதை சாதித்தவர்களில் இவரும் ம.பொ.சி.யும் முக்கியமானவர்கள்.
எந்தப் பதவியும் – எம்.எல்.ஏ., எம்.பி. என்று – வகித்த மாதிரி தெரியவில்லை. கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்புகளை கக்கனுக்கு விட்டுக் கொடுத்தாரோ என்னவோ. கக்கனுக்கும் இவருக்கும் அப்பா-பிள்ளை போன்ற உறவு இருந்திருக்கிறது. ஹரிஜன ஜாதியில் பிறந்த கக்கன்தான் இவருக்கு இறுதி சடங்குகளையே செய்தாராம்!
உண்மையிலேயே ஜாதி பார்க்காதவர் போலிருக்கிறது. முப்பதுகளிலேயே வீட்டு சமையல் அறையில் ஹரிஜன்கள் சாதாரணமாக புழங்கினார்கள் என்று கக்கன் சொல்கிறார். ஆச்சரியமான விஷயம். எழுபதுகளில் கூட சமையல் அறை மடி ஆசாரம், அங்கே பிற ஜாதியினர் வரக்கூடாது என்று சொல்லும் பிராமணக் குடும்பங்களை பார்த்திருக்கிறேன்.
ஓவர் டு கக்கன்!
அரிஜனங்களின் தந்தை
பி.கக்கன்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிஜன ஆலயப் பிரவேசம். பெரியவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். மதுரையின் வீதிதோறும் கூட்டம் போட்டு, அரிஜன ஆலயப் பிரவேசத்தைப் பற்றிக் கண்டித்துப் பேசினார்கள். ”அரிஜனங்கள் ஆலயத்துக்குள் நுழைந்துவிட்டால் இந்து மத தர்மமே சீர்குலைந்து போய்விடும்; அதனால் அவர்களை ஆலயப் பிரவேசம் செய்ய அனுமதிக்கக்கூடாது; அதுவும், வைத்தியநாதய்யர் போன்ற ஒரு ஜாதி இந்துவின் தலைமையில் அந்தக் காரியம் நடக்க அனுமதிக்கவே கூடாது” என்றெல்லாம் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களுக்கெல்லாம் உள்ளூர சிறிது தயக்கமாகவே இருந்தது. ஆலயப் பிரவேச தினத்தன்று எங்கே பெரிய சச்சரவும், தகராறும் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத் துக்கொண்டிருந்தோம். ஆனால் வைத்தியநாதய்யரோ, அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப் படாமல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்.
குறிப்பிட்ட தினத்தன்று ஆலயப் பிரவேசம் நடந்து முடிந்தது.
தெய்வாதீனமாக எவ்விதமான குழப்பமும் ஏற்படவில்லை. ஆலயப் பிரவேசம் முடிந்து அனைவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். அப்போது, வழியில் நின்றிருந்த ஒரு பெரியவர் வைத்தியநாதய்யரைப் பார்த்து, ”நீர்தான் அரிஜனாகிவிட்டீரே! உமக்குப் பூணூல் எதற்கு?” என்று சத்தம் போட்டுக் கோபமாகக் கூறினார்.
ஐயர் அவர்கள் ஒன்றுமே பேசாமல் சிரித்துக்கொண்டார்.
முப்பது, முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்பு, ஜாதிக் கொடுமை தீவிரமாக இருந்த நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே வைத்தியநாதய்யர் வீட்டுக்குள் அரிஜனங்கள் சர்வ சுதந்திரமாகப் போய் வரமுடியும். வீட்டுச் சமையலறை வரையில் கூட சென்று ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவார்கள்.
அவரைப் போல்தான் அவரது மனைவியாரும், அரிஜன மக்களின் நன்மைக்காக உழைத்தவர்.
அய்யரிடம் பண உதவியும், மற்ற உதவிகளும் பெற்றுப் படித்த அரிஜன மக்களில் பலர் இன்று பெரிய பெரிய நிலையில் இருக்கிறார்கள். நான் பொதுப் பணியில் ஈடுபட்டு, பிற்பாடு அரசியல் உலகத்துக்கு வருவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவரே வைத்தியநாதய்யர் அவர்கள்தான்.
அரிஜன சேவையை விட வைத்தியநாதய்யருக்குப் பிடித்த பொதுச் சேவை வேறு எதுவும் இல்லை. அதனால்தான் அவரை ‘அரிஜனங்களின் தந்தை’ என்று போற்றுகிறார் கள்.
அவர் மறைந்த பிறகு, அவரது இறுதிச் சடங்குக்கு நான் சென்றிருந்தேன். ஒரு தந்தைக்கு ஒரு மகன் செய்யக்கூடிய இறுதிச் சடங்குகள் அனைத்தையும் செய்யும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.
கக்கன் இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்கு உதாரணமாகச் சொல்லப்படுபவர். காங்கிரஸ் காலத்தில் மந்திரியாக இருந்தவர். இறக்கும்போது வசதிக் குறைவினால் அரசு மருத்துவமனையில்தான் அட்மிட் செய்தார்கள். எம்.பி., மந்திரி, எதிர்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ. என்று பல பதவிகள் வகித்த பின்னும் இந்த நிலை!
இது கக்கனின் நூற்றாண்டு. இவர், ஐயர் போன்றவர்களுக்கு ஒரு unbiased biography வந்தால் நன்றாக இருக்கும். unbiased ஆக இருப்பது முக்கியம். உதாரணமாக கக்கன் நேர்மையான அரசியல்வாதி, சரி. நல்ல நிர்வாகியா? அவரை ஒரு டோக்கன் ஹரிஜனாக காங்கிரசில் வைத்திருந்தார்களா? இதற்கெல்லாம் உண்மையான பதில் அதில் இருப்பது அவசியம். நம்மூரில் biography என்றால் புகழ்ந்து எழுத வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது!
கக்கன், ஐயர் இருவருக்கும் அரசு தபால் தலை வெளியிட்டிருக்கிறது.
பிற்சேர்க்கை: எழுத்தாளர் இரா. முருகன் தந்த தகவல் – திரு வைத்தியநாதய்யரின் மகளும் மருமகன் திரு ஸ்தாணுநாதனும் சென்னை தி.நகர் மோதிலால் தெருவில் எங்கள் பலமாடிக் குடியிருப்பில் இருந்தார்கள். எளிமையான நல்ல மனதுக்காரர்கள். திரு.ஸ்தாணுநாதன் ரயில்வே போர்ட் அங்கத்தினராகவும் அதற்கு முன் மத்திய ரயில்வேயில் உயர்ந்த பதவியிலும் இருந்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் இவர்கள் சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்தியாலத்தை நிர்வகித்து வருகிறார்கள்.
கோபால் எனக்கு நண்பர் ராஜு மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் மிடில் ஈஸ்டில் வாழ்பவர்கள். கோபாலின் நாஸ்டால்ஜியா பதிவுகள் பெரும் வரவேற்பை பெற்றவை. மனிதருக்கு நகைச்சுவை நன்றாக கை வருகிறது! கோபாலின் பதிவுகளை கோபால் பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.
ராஜன் உள்ளூர்க்காரர் (சிலிகான் பள்ளத்தாக்கு). சினிமா, படிப்பு ஆகியவற்றில் ஆழ்ந்த ரசனை உடையவர். பேசினால் மட்டும் போதாது என்று செயலிலும் ஈடுபடுபவர். பல தமிழ் எழுத்தாளர்கள் இவருக்கு நண்பர்கள். எனக்கு புஸ்தகம் இரவல் கொடுப்பவர். (இது ஒன்று போதாதா?) ராஜனின் பதிவுகளை ராஜன் பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். நிறைய விட்டுப் போயிருக்கிறது. கண்ணில் படும்போதெல்லாம் சேர்ப்பதாக ஐடியா. உங்களுக்கும் ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.
நானே பழைய சினிமா பைத்தியம். சாரதா என்னை விட பெரிய சினிமா பைத்தியம். நான் குறை சொல்லிக்கொண்டே பார்ப்பேன், சாரதாவுக்கு படத்தின் நிறைகளை சொல்ல மட்டுமே பிடிக்கும். சாரதாவின் பதிவுகளை சாரதா பதிவுகள் என்று தொகுத்திருக்கிறேன். அவார்டா கொடுக்கறாங்க முகப்பிலேயே தெரியும். ஏதாவது விட்டுப்போனது கண்ணில் பட்டால் சொல்லுங்கள், சேர்த்துவிடலாம்.
அது ஏன் சாரதா பக்கத்தை மட்டும் அவார்டா கொடுக்கறாங்க தளத்தின் துணைப்பக்கமாக போட்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் என்னை கேட்கக்கூடாது. ஆனால் கூட்டாஞ்சோறு தளத்தின் முகப்பில் நண்பர்கள் என்று ஒரு பக்கம் தெரியும். அங்கே கிளிக்கினால் இந்த மூவருடைய பக்கங்களுக்கும் லிங்க் கிடைக்கும்.
தமிழ் எழுத்தாளர் உலகத்தில் பிரசித்தி பெற்றவரான ஸ்ரீ விருத்தாசலம் (புதுமைப்பித்தன்) மறைவு இலக்கிய அன்பர்களிடையே பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கிறது. கற்பனைகள் மிகுந்த அவருடைய எழுத்துக்கள் புரட்சியும் புதுமையும் கொண்டு தமிழ் எழுத்தில் ஒரு புது சகாப்தத்தையே ஆரம்பிக்கக் கூடியவை. தமிழிலக்கியத்தில் மறுமலர்ச்சிக்கு முன் நின்று நவ நவமான சிருஷ்டிகள் செய்தவர்களில் புதுமைப்பித்தனுக்கு ஓர் உயர்ந்த ஸ்தானம் உண்டு. அன்னாருடைய மறைவுக்காக எழுத்தாளர் சங்கக் காரியதரிசி சங்கத்தின் சார்பாக வருத்தத்தைத் தெரிவித்து, அவர் பெயரால் ஒரு நிதி திரட்டி அவர் குடும்பத்துக்கு அளிக்கவும், அவருக்கு சாசுவதமான ஒரு ஞாபகச் சின்னம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எழுத்தாளர்களும் எழுத்தின் சுவையறிந்தவர்களும் இந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
புதுமைப்பித்தன் மாதிரி ஒரு ஜீனியஸ் மறைந்ததற்கே நாலு வரி ஆபிச்சுவரிதான் வந்திருக்கிறது! எழுத்தாளன் “செத்த பிறகு சிலை வைக்காதீர்” என்று எழுதியவருக்கே ஞாபகச் சின்னமாம்! அவருக்கு ஆவி உலகத்தில் தெரிந்திருந்தால் இந்த irony-ஐ மிகவும் ரசித்திருப்பார்!
5.5.57-இல் தேவன் இறந்தபோது அவர் விகடன் ஆசிரியர். அவரது மறைவைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறார்கள்.
விகடனின் மகத்தான நஷ்டம்!
சென்ற 23 ஆண்டுகளாக அவர் எழுதிய சிரஞ்சீவி இலக்கியங்கள் நம் கண் முன் இருக்கின்றன. ஆனால் ஸ்ரீ தேவன் மறைந்துவிட்டார். வடபழனி ஆண்டவனைப் பற்றி மனமார எழுதிய பேனா மன்னர், அவர் திருவடியிலேயே இரண்டறக் கலந்துவிட்டார்.
அவர் பேனாவிலே பிறந்த துப்பறியும் சாம்புவும், கல்யாணியும், கோமதியின் காதலனும், ஸ்ரீமான் சுதர்சனமும் உயிர் பெற்றுச் சிரஞ்சீவிகளாக உலாவிக்கொண்டிருக்கையில், அவர்களைப் படைத்த பிரமன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
ஆங்கிலக் கதைகளையே படித்துப் பழக்கப்பட்டவர்கள் கூட ஸ்ரீ தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந்நாதனையும், ஸி.ஐ.டி. சந்துருவையும் படித்துவிட்டுத் தமிழிலும் இப்படிப் புதுமைக் கருத்துக்களுடன் எழுத முடியுமா என்று வியந்து பாராட்டினார்கள்.
தேவன் அவர்களின் நஷ்டம் தமிழ்நாட்டுக்கே ஈடு செய்ய முடியாதது என்றால், விகடனுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி எப்படி எழுதுவது? அவருடைய அற்புதமான கதைகளை, எழுத்துக் கோக்கும்போதே படித்துக் களித்த ஆனந்த விகடன் கம்பாஸிடர்கள் அத்தனை பேரும் இன்று அழுது கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆசிரியர் குழாம் அலறித் துடிக்கிறது. கடமை உணர்ச்சியும், அன்பும், எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் நற்குணமும் படைத்த உத்தமமான நிர்வாக ஆசிரியரை இழந்து விகடன் கண்ணீர் வடிக்கிறான். 5.5.57 ஞாயிற்றுக்கிழமை பகல் ஒன்றரை மணிக்கு, தேவன் தேவனாகி விட்டார். அவர் பூத உடம்பு மறைந்து விட்டது. புகழுடம்புடன் ஆனந்த விகடன் வாசகர்களின் உள்ளங்களில் குடி புகுந்துவிட்டார்.