“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார். பதிவின் நீளம் கருதி இதை தனியான பதிவாக போட்டிருக்கிறேன். ஓவர் டு சாரதா!
இந்நூல் என்னை வந்தடைந்த கதை (போரடிக்காவிட்டால் படியுங்கள்)…
நான் திருமணத்துக்கு முன் ‘லார்ஸன் அண்ட் டூப்ரோ’ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னை அண்ணா சாலையிலுள்ள ‘தேவநேயப்பாவாணர் அரசு மத்திய நூலக’த்தில் உறுப்பினர் அட்டை மூலம் நூல்கள் எடுத்துச் சென்று படிப்பது வழக்கம். அப்படி ஒரு முறை பார்த்துக் கொண்டு வந்தபோது, இடையிடையே புகைப்படங்களுடன் கூடிய ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற தலைப்பிட்ட தடிமனான புத்தகம் கண்ணைக் கவர, எடுத்து சில வரிகளைப் படித்தபோது மனதைக் கவரவே, உறுப்பினர் அட்டை மூலம் வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கத் துவங்கியதும் அதில் கரைந்து மூழ்கிப் போனேன். திருப்பிக் கொடுக்க வேண்டிய ஒரு வாரத்துக்குள் மூன்று முறை படித்துவிட்ட எனக்கு, இது என்னிடம் இருக்க வேண்டிய புத்தகம் என்று தோன்றவே, பதிப்பகத்தின் பெயரைக் குறித்துக் கொண்டு திருப்பியளித்துவிட்டேன். அன்றிலிருந்து தினமும் மாலை பெரிய புத்தகக் கடைகளில் ஏறி இறங்கினேன். பூங்கா நகரிலுள்ள சி.எல்.எஸ். புத்தகக்கடை, அண்ணா சாலை ஹிக்கின்பாதம்ஸ் உள்பட பெரிய புத்தகக் கடைகள் எதையும் விடவில்லை. ஆனால் இந்த புத்தகம் கிடைக்கவில்லை (அதில் ஒரு சின்ன லாபம். நான் பல நாள் தேடிக் கொண்டிருந்த வேறு சில புத்தகங்கள் கிடைத்தன).
அலுவலகத்தில் என்னோடு பணியாற்றிய நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, நேரடியாக பதிப்பகத்துக்கே போய்க் கேட்டுப் பாரேன் என்றார். தி.நகர் தணிகாச்சலம் செட்டி சாலையிலுள்ளது என்றதும் அவருக்கு உற்சாகம். அதன் அருகிலுள்ள ராஜா தெருவில்தான் அவர் வீடு. நானும் வருகிறேன் என்று வந்தார். கதவிலக்கம் தெரியாததால் நடந்து போய்க்கொண்டிருந்தோம். வழியில் தமிழ்வாணன் அவர்களின் மணிமேகலைப் பிரசுரம் தென்பட்டது. ‘இவங்களும் பதிப்பாளர்களாதலால் இவங்க கிட்டே கேட்டுப் பார்’ என்று உள்ளே அனுப்பினார். அலுவலகத்தில் ஒருவர் மட்டும் இருந்தார். சுற்றிலும் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ‘வாங்கம்மா என்ன புத்தகம் வேணும்?’ என்றார், கனிவோடு. ‘இல்லீங்க சார், நான் இங்கே புத்தகம் வாங்க வரலை. புக்வெஞ்ச்சர் பப்ளிகேஷன்ஸ் எங்கே இருக்குன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?’ அவர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை சட்டென்று எழுந்து வாசலுக்கு வந்தவர், ‘இப்படியே நேரா போனீங்கன்னா இந்தி பிரச்சார் சபா வரும். அதுக்கு எதிரில் ‘வாசகர் வட்டம்’ அப்படீன்னு ஒரு போர்டு போட்டிருக்கும். அதுதாம்மா’ ஆகா என்ன கனிவு என்ன அக்கறை. தமிழ்வாணன் இந்த விற்பனையாளரை எங்கே பிடித்தார்? இவருடைய கனிவுக்காகவே அடுத்த முறை மணிமேகலைப் பிரசுரம் வந்து ஏதாவது புத்தகம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நண்பருடன் நடந்தேன். (அதன் பின் இன்னொரு நாள் அங்கு சென்று இரண்டு புத்தகங்கள் வாங்கியது வேறு கதை).
அவர் சொன்ன போர்டு தென்பட்டது வாசலில் காம்பவுண்டுக்குள் மரங்கள் நிறைந்த அழகான வீடு. கண்ணாடியணிந்த, பார்த்தாலே மதிக்கத் தக்க ஒரு அம்மா வந்து விசாரிக்க, ‘நடந்தாய் வாழி காவிரி’ புத்தகம் வேண்டும் என்றோம். ‘உட்காருங்க’ என்று சொன்னதோடு வாசகர் வட்டம் வெளியிட்ட நூல்களடங்கிய லிஸ்ட் ஒன்றையும் தந்துவிட்டு உள்ளே சென்றார். எங்கள் இருவரையும் தவிர இன்னொரு நடுத்தர வயதைக் கடந்த ஆள் மட்டும் இருந்தார். ‘எவ்வளவு கனிவா பேசுறாங்க’ என்று நண்பர் வில்லியம்ஸிடம் சொன்னபோது, அந்த இன்னொரு ஆள் சொன்னார் ‘இவங்கதான் தியாகி சத்தியமூர்த்தியோட மகள் லட்சுமியம்மா’. இதைக் கேட்டதும் ஆச்சரியத்தில் மூழ்கினேன். எவ்வளவு சிம்பிளா இருக்காங்க..!!. அவங்க புத்தகத்தோடு அறையிலிருந்து வெளியில் வந்தபோது என்னையறியாமல் எழுந்து நின்று கைகூப்பினேன் ‘நீங்க யாருன்னு எனக்கு இப்போதான் தெரியும்’ என்று சொன்னதும் அழகான சிறிய புன்னகையோடு ‘உட்காருங்க’ என்று சொல்லிவிட்டு பில் போட ஆரம்பித்தார். இப்போது நினைத்தாலும், லட்சுமியம்மா அவர்களை அன்று பார்த்த தோற்றம் மனதில் நிழலாடுகிறது.சமீபத்தில் ஹிந்துவில் பெண் பதிப்பாளர்களைப் பற்றி ஒரு கட்டுரையில் லக்ஷ்மியைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். அதிலிருந்து ஒரு quote:
We were not good at marketing. If people burn their fingers, we burnt our arm!
தொகுக்கப்பட்ட பக்கம்: படிப்பு
தொடர்புடைய பதிவுகள்:
- தி. ஜானகிராமன் + சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” – சாரதா அறிமுகம் செய்கிறார்
- லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியைப் பற்றிய பதிவுகள்:
- வாசகர் வட்டம் உருவாக்கி நேர்த்தியான புத்தகங்களை பதிப்பித்த லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி (Lakshmi Krishnamoorthi)
- சமீபத்திய ஹிந்து கட்டுரை
- லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அளித்த ஒரு பேட்டி
- விகடனில் அளித்த இன்னொரு பேட்டி
- காலச்சுவடு இதழில் வந்த சா. கந்தசாமியின் அஞ்சலி
- சாரதாவின் பிற பதிவுகள்:
- சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம்
- ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் திரைப்படம்

April 27, 2010 at 1:06 மு.பகல்
Congrats!
Your story titled ‘சாரதாவும் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியும்’ made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 27th April 2010 12:25:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/234656
Thank you for using Tamilish.com
April 27, 2010 at 2:41 மு.பகல்
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்பெறும்.
April 27, 2010 at 9:11 மு.பகல்
அபிதாவும் அவர்கள்தான் முதலில் பதிப்பித்தார்கள்.
ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு..90களின் கடைசியில் போனபோது, அவர்களிடமே எல்லா புத்தகங்களும் இல்லை.
முன்பு தவறவிட்ட குபராவின் சிறிது வெளிச்சம் வாங்கி வந்தேன்.
April 28, 2010 at 12:05 மு.பகல்
விஜயன், லக்ஷ்மி சத்தியமூர்த்திக்கு ஏற்ற பெண் என்று சொல்ல வருகிறீர்களா?
ருத்ரன், அபிதா பற்றிய பதிவு இங்கே – http://koottanchoru.wordpress.com/2009/09/22/அபிதா/
April 29, 2010 at 3:48 மு.பகல்
வாங்க வேண்டிய புத்தகங்களில் ந.வா.கா ஐயும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
காவிரியிலிருந்து – அரசலாற்றில், பின் வாஞ்சியாற்றில் என ஓடிய நீரில் விளைந்த கதிரை உண்டு வளர்த்த உடம்பிற்கு நன்றியாகவாது வாங்க வேண்டும். தகவலுக்கு நன்றி.
நவம்பர் 2, 2011 at 4:30 மு.பகல்
சுவாரஸ்யம்