
“Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”.
ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்தது பதில்,” Nobody dies; they live in memories and in the genes of their children”. How True ?
சுஜாதா தன் எழுபதாவது பிறந்த நாள் கட்டுரையில்

‘சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கேதான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கேதான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது’

[நன்றி - விகடன்]
“மனைவி, மக்கள், பழைய பள்ளி, தெரிந்த பாட்டுகள், திறமைகள், கவிதைகள், கடிதங்கள், காதல்கள் எல்லாம் மறந்துபோய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்காக மட்டும் ஞாபகம் இருந்து, நாளடைவில் சாப்பிடுவதற்கு வாயசைப்பதையும் மறந்துவிடுவோமாம். உயிருடன் இருப்பது என்பது இது தான். உயிர் என்பது மூச்சுக் காற்றல்ல; ஞாபகம்தான்” — 12 வருடங்களுக்கு முன்பு (18-1-1998) சுஜாதா எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதி.
‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா கட்டுரையில் இருந்து… (11-05-2003)
‘யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம் இருக்கிறது. குணம், பிடிவாதங்கள், அழகு, டயபடிஸ் எல்லாவற்றையும் அங்கங்கே பாகம் பிரித்துக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறாள். அவள் நினைவுகள் நம் எல்லோரிடமும் உள்ளது’ என்று சொல்வார்.
Life goes on. இந்த அதீதமான சோகத்தை மறக்க, சீக்கிரமே அன்றாடப் பணிக்குத் திரும்புவது முக்கியம். அதையே நினைத்துக்கொண்டு மறுகினால், எண்ணங்கள் நம்மைச் சாப்பிட்டுவிடும்.
மனுஷ்ய புத்திரன்

உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது.
அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது.
சுஜாதாவின் நண்பரும் சீடருமான தேசிகன்
|
|
அவர் தேர்ந்தெடுத்துப் படிக்கும் புத்தகம் நிறைய. நவம்பர் மாதம், ‘இப்ப எல்லாம் எதையும் படிக்கிறதில்லை; கண்ணும் ரொம்ப ஸ்ட்ரைன் ஆகறது. நான் இப்ப கொஞ்ச நேரமாவது படிக்கிற புஸ்தகம் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் மட்டும்தான், அதுதான் எனக்கு எல்லாம்!’ என்றார்.
அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அவர் படும் கஷ்டங்களைப் பார்க்க முடியாமல், அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, ‘சிற்றஞ் சிறுகாலே…’ என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.
‘மனித உயிர் என்பது வற்றாத ஓர் அதிசயம், அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால், ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும்’ என்று சுஜாதா சொன்னது எவ்வளவு உண்மை!
இப்போது பிரிகிறோம், இனி எப்போது சந்திப்போம் சுஜாதா சார்?
கேள்வி: உலகத்தில் நிலையானது எது சார் ?
பதில்: மரணம்
லிஃப்டில் இறங்கும்போது, லிஃப்ட் இயக்குபவர், “சார் எந்த பக்கமா போறீங்க?”
“வெளியே போகணும்ப்பா..”
“இல்ல… இந்த லிப்டுக்கு இரண்டு கதவு இருக்கு, இந்தப் பக்கம் திறந்தா வெளிக் கதவு, அந்தப் பக்கம் திறந்தா மார்ச்சுவரிக் கதவு.
கவிஞர் நா.முத்துக்குமார்

மரணம் ஒரு கறுப்பு ஆடு. அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப் பூவைத் தின்றுவிடுகிறது!
சுஜாதா பற்றி சுஜாதா!

இதுக்கு முன்ன ஹாஸ்பிடலுக்குப் போனப்பல்லாம் கொஞ்ச நேரம் இருப்பார், வந்துருவார். அப்புறம் அதைப் பத்தியே ஒரு கதை எழுதிடுவார். ஆனா, இப்ப அவர் இறந்த கதையை யார் எழுதுறது..?
ஒரு தடவை அவருக்கு மாத்திரை கொடுக்க லேட் ஆயிடுத்து. பதறி ஓடி வந்து கொடுத்தா, ‘ஒரு வாய் மாத்திரை சாப்பிடலேன்னா, நான் செத்துட மாட்டேன். நீ ஏன் வொர்ரி பண்ணிக்கிற..?’ன்னாரு.
தண்ணி, பேப்பர், ரிமோட், சாப்பாடுனு எது கொடுத்தாலும், சின்னதா ‘தேங்க்ஸ்’ சொல்வார். ‘எதுக்கு என்கிட்டயும் தேங்க்ஸ்?’னு கேட்டா, ‘உன்கிட்டயும் தேங்க்சுக்கு ஒரே அர்த்தம்தானே!’னு சிரிப்பார்.
ஐயோ! ஐ ஃபீல் கில்ட்டி… நான் அவரை இன்னமும் நல்லபடியா கவனிச்சுண்டு இருந்திருக்கணும்! என்னை எப்படில்லாம் பார்த்துண்டார். என் பேர்ல எழுதுறதுக்கு அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இருந்திருக்கணும். நான் பதிலுக்கு அவருக்கு என்ன செஞ்சுருக்கணும். நான் இருக்குற வரை, அவரை போஷிச்சிருக்க வேண்டாமா..!
சுஜாதா பதில்கள் (குங்குமம்)
உலகத்தில் நிலையானது எது சார் ?
மரணம்.
மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது ?
மரணத்துக்குப் பின் என்ன என்பதை அறிந்துகொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே, அதுதான்.
எல்லாவற்றுக்கும் ஒரு Saturation Point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா ?
உண்டு. உயிரின் ரகசியமும், மரணத்துக்குப்பின் என்ன என்பதும் தெரியும்போது விஞ்ஞானம் முற்றுப்பெறும்.


பெப்ரவரி 27, 2010 at 8:01 மு.பகல்
தொகுப்பான பகிர்விற்கு நன்றி .. அத்தனையும் அருமை ..உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன்
பெப்ரவரி 27, 2010 at 4:58 பிற்பகல்
மிக்க நன்றி, பத்மநாபன்.
மார்ச் 3, 2010 at 1:58 பிற்பகல்
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்துவருகிறேன், பகிர்விற்கு நன்றி.
மார்ச் 3, 2010 at 8:03 பிற்பகல்
நன்றி பால்பழனி.
மார்ச் 3, 2010 at 11:39 பிற்பகல்
வேல நேரத்துல படிகேவே கூடாது … நேரம் போறதே தெரியல…ரொம்ப சூப்பரா இருக்கு keep writing
மார்ச் 4, 2010 at 7:02 மு.பகல்
அருண், உங்கள் பாராட்டுக்கு நன்றி.
மார்ச் 10, 2010 at 12:17 பிற்பகல்
எழுத்தாளர் சுஜாதாவின் மரனம் சம்பத்தப்பட்ட விஷயங்களாகவே தொகுத்தளித்து மனதைக் கனக்க வைத்து விட்டீர்கள். நேற்றுப்போல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் விரைந்தோடி விட்டன. இருப்பினும் எழுத்துலகில் அவர் விட்டுச்சென்ற இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அவரோடு ஒத்த சிந்தனையோடு கூடிய ஒருத்தர் வரும் வரை அது காலியாகத்தான் இருக்கும். (வர வாய்ப்பில்லை என்பது இன்னொரு பக்க உண்மை). 72 வயதிலும் அவருடைய எழுத்துக்கள் 27 வயதாகவே இருந்தன என்பது இன்னொரு அதிசய உண்மை. தொகுத்தளித்த உங்களுக்கு நன்றிகள்
மார்ச் 10, 2010 at 3:31 பிற்பகல்
நன்றி, சாரதா. இறுதி வரை மனதளவில் இளைஞனாக வாழ முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் அவர். என்னுடைய அடுத்த பதிவில், மரணம் பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வழங்க எண்ணியுள்ளேன்.