இதன் திருத்தப்பட்ட மீள்பதிப்பை இப்போது சிலிகான் ஷெல்ஃபில் வாசிக்கலாம்.

இந்திரா பார்த்தசாரதி
எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு சிரிப்பை வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப் புனல் (கீழ் வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப் பட்டது) புத்தகத்தை விட அவ்வளவாக வெளியே தெரியாத செந்நெல் – சோலை சுந்தரப் பெருமாள் எழுதியது – நன்றாக இருக்கும்.
இன்று தற்செயலாக திண்ணை தளத்தில் இ.பா.வின் ஏசுவின் தோழர்கள் புத்தகத்துக்கு ஒரு விமர்சனம் பார்த்தேன். நியாயமான விமர்சனம்தான். போலந்தில் செட்டில் ஆகிவிடும் ஒரு தமிழனின் மகள் தன் வேர்களை தேடி கும்பகோணம் வரும் கதை. மேல் விவரங்களை அங்கேயே பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.
பின் குறிப்பு: சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.
ஜனவரி 17, 2012 at 10:49 மு.பகல்
ஏசுவின் தோழர்கள் – சமீபமாகத்தான் படித்தேன். வழுக்கிக்கொண்டே போகும் நடை. இதில் நான் கவனித்தது – கதா பாத்திரங்கள் நிறைய மாறுபட்ட கருத்துக்களுடன் ஆனால் அனுசரித்துப் போகும் வகையான சூழலில் இருப்பார்கள். ஒன்றைப்பற்றி கேள்வி எழுப்பிக்கொண்டே போய் நடுவில் ஏதோ ஒரு பானம் அருந்தும் இடைவெளியில் அது அப்படியே விட்டுப்போகும். அந்த துண்டித்துப் போகும் தொடர்புதான் நாம் நிறைய இடங்களில் செய்துகொண்டிருக்கும் விஷயம். பட்டம் பூச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு கதாபாத்திரம் ஒருவித மாயத்தன்மையுடன் வந்து போகும். வயசான பாட்டி அந்த போலந்து பேத்தியிடம் ஏற்படுத்தும் தாக்கம் ரசிக்கும்படியாக இருக்கும். இத்தனைக்கும் அந்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்யவேண்டுவதாக இல்லாமல் மிக இயல்பாக இருக்கும் அந்த பாட்டியின் பேச்சு. வறுமையால் விலைமகளாக மாறியதாக சொல்லும் அந்த ஒரு கதாபாத்திரம் மட்டும் (அதற்கான காரண நியாயம் அதில் எனக்கு கிடைக்கவில்லை) சற்றே இடிக்கிறது. ஆனால் இது நல்ல நாவல். மேலும் இந்த நாவலை அந்த கதாபாத்திரங்கள் இருக்கும் அந்த சூழலை கருத்தில் கொண்டு படித்தால்தான் அதன் சுவை புரிபடும்.