மே 2009


நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன். நான் சொல்வது தமிழ் பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா இல்லையா என்று தெரியாது.

பார்ப்பனர்கள் அடுத்தவர் காலில் விழும்போது அபிவாதயே என்று தொடங்கும் சுய அறிமுகத்தை செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ஐதீகம் உண்டு. நான் இந்த கோத்ரத்தில் பிறந்தவன், இந்த இந்த ரிஷிகள் என் மூதாதையர்கள், என் தாத்தா இவர், என் அப்பா இவர், எங்கள் குடும்பம் இந்த வேதத்தை பரம்பரை பரம்பரையாக ஓதி வந்திருக்கிறது, என் பெயர் இது என்ற அர்த்தம் வரும் – சமஸ்கிருதத்தில் இருந்தாலும் சுலபமாக புரியும்.

எனக்கும் சொல்லி கொடுத்தார்கள், ஆனால் மறந்துவிட்டது. நான் விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவன். விஸ்வாமித்ர கோத்ரத்தை சேர்ந்தவர்கள் எந்த எந்த ரிஷிகளை மூதாதையர்கள் என்று சொல்வார்கள் என்று சமீபத்தில்தான் சேதுராமன் எடுத்து சொன்னார். நாங்கள் யஜுர் வேதத்தை ஓதி வந்திருக்கிறோமோம். என் அம்மாவின் அப்பா குடும்பத்தினர் சாம வேதத்தை ஓதி வந்திருக்கிறார்களாம். (எனக்கு தெரிந்த வரை என் உறவினர்கள் யாரும் எந்த வேதமும் தெரிந்தவர்களில்லை.)

ரிக்வேத பாரம்பர்யம் உள்ள குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதர்வண வேத பாரம்பரியம் உள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவர்கள் இன்னும் இருக்கிறார்களா? யாருக்காவது தெரியுமா? இந்த வேதம் இருக்கிறதா? அனேகமாக பார்ப்பனர்களை விட பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்திருக்கிறது. தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்!

ஐயங்கார்கள், குறிப்பாக தென்கலை ஐயங்கார்கள் சமஸ்கிருதத்தை விட தமிழை, தமிழில் உள்ள நூல்களை அதிகமாக ஓதுபவர்கள். அவர்கள் இந்த மாதிரி ஏதாவது வேதம் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்வார்களா? யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வட நாட்டில் த்விவேதி(இரண்டு வேதம் தெரிந்தவர்), த்ரிவேதி(மூன்று வேதம்), சதுர்வேதி(நான்கு வேதம்) என்று பெயர் வைத்துக் கொள்வது உண்டு. குறைந்த பட்சம் இந்த சதுர்வேதிகள் நான்கு வேதமும் ஓதும் பாரம்பரியம் உள்ளவர்களா?

நான்கு வேதங்களில் அதர்வண வேதம் ஒன்றுதான் கொஞ்சம் விஞ்ஞானம், கொஞ்சம் மருத்துவம் எல்லாம் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் அதுதான் எல்லாவற்றையும் விட வேகமாக வழக்கொழிந்திருக்கிறது! ஆச்சரியம்!

இதன் திருத்தப்பட்ட மீள்பதிப்பை இப்போது சிலிகான் ஷெல்ஃபில் வாசிக்கலாம்.

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

எனக்கு பொதுவாக இந்திரா பார்த்தசாரதி அவ்வளவாக பிடிப்பதில்லை. எல்லாரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆங்கிலத்தில் அதிகமாக பேசுவார்கள். ஜெயகாந்தனைப் பற்றியும் எனக்கு இப்படி ஒரு நினைப்பு உண்டு. ஆனால் ஜேகேயின் படைப்புகளில் ஒரு அழுத்தமான நீதி, கொள்கை ஏதாவது இருக்கும். இ.பா.வின் படைப்புகளிலோ அங்கதம்தான் அடித்தளம். அவரது அங்கதம் எனக்கு சிரிப்பை வரவழைப்பதில்லை, அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவரது எந்த படைப்புமே எனக்கு நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. அவரது புகழ் பெற்ற குருதிப் புனல் (கீழ் வெண்மணி சம்பவத்தை பின்புலமாக வைத்து எழுதப் பட்டது) புத்தகத்தை விட அவ்வளவாக வெளியே தெரியாத செந்நெல் – சோலை சுந்தரப் பெருமாள் எழுதியது – நன்றாக இருக்கும்.

இன்று தற்செயலாக திண்ணை தளத்தில் இ.பா.வின் ஏசுவின் தோழர்கள் புத்தகத்துக்கு ஒரு விமர்சனம் பார்த்தேன். நியாயமான விமர்சனம்தான். போலந்தில் செட்டில் ஆகிவிடும் ஒரு தமிழனின் மகள் தன் வேர்களை தேடி கும்பகோணம் வரும் கதை. மேல் விவரங்களை அங்கேயே பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏசுவின் தோழர்கள் நான் ஃப்ரீமான்ட் நூலகத்துக்கு நன்கொடையாக கொடுத்த புத்தகங்களில் ஒன்று. சான் ஃப்ரான்சிஸ்கோ அருகே இருந்தால் நீங்கள் சுலபமாக படிக்கலாம். நூலகத்துக்கு நன்கொடை கொடுத்தது பெரிய கதை. அதை இன்னொரு நாள் விபரமாக எழுதுகிறேன்.

பின் குறிப்பு: சோலை சுந்தரப் பெருமாளின் செந்நெல் சான் ஹோசே நூலகத்தில் கிடைக்கும்.

சுரேஷ் கண்ணன் தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், என்ன சிறுகதைகளை இயக்கலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். அந்த லிஸ்ட் கீழே.
ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
பிலிமோத்ஸவ் – சுஜாதா
உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
தீட்டு – அழகிய பெரியவன்
ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்

இந்த சிறுகதைகளில் நான் மூன்றுதான் படித்திருக்கிறேன். புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது, அசோகமித்ரனின் புலிக் கலைஞன், இந்திரா பார்த்தசாரதியின் ஒரு கப் காப்பி. முதல் இரண்டும் எனக்கு பிடித்த சிறுகதைகள். ஒரு கப் காப்பி சுமார்தான்.

ஒரு நாள் கழிந்தது கைக்கும் வாய்க்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் பாட்டை பற்றியது. அதிலும் ஒரு சிறு குழந்தை மிக நல்ல காரக்டர். குடும்பத் தலைவன் ஏழை, அதே நேரத்தில் அது தெரியாத மாதிரி கொஞ்சம் பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும். அந்த ரோலுக்கு தலைவாசல் விஜய் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

புலிக் கலைஞன் மிக அற்புதமான ஒரு கதை. புலி வேஷம் போடும் ஒருவன் சினிமாவில் சான்ஸ் கேட்டு ஒரு பிரமாதமான டெமோ கொடுக்கிறான். அந்த டெமோவின்போது ஒரு intensity வெளிப்பட வேண்டும். பிரகாஷ் ராஜ் பொருத்தமாக இருப்பார். இல்லை என்றால் நாசர்.

ஒரு கப் காப்பி சிறு வயது நண்பர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வேளை. ஒருவன் ஏழை பிராமணன், ஒன்றும் தெரியாமல் பிராமணன் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறேன் என்று காலத்தை ஓட்டுபவன். இன்னொருவன் ஊரை விட்டுபோய் ஓரளவு செழிப்பாக, சடங்குகள் செய்ய வேண்டும் என்று வருபவன். டெல்லி கணேஷும், டெல்லி குமாரும் பொருத்தமாக இருப்பார்கள்.

எனக்கு தோன்றும் சிறுகதைகள்:
தங்கர் பச்சானின் குடிமுந்திரி – முந்திரி மரத்தை வெட்டி பையனுக்கு ஷூ வாங்குகிறார் விவசாயி அப்பா.
சுஜாதாவின் நிஜத்தை தேடி – உதவி கேட்பவன் ஃப்ராடா இல்லையா? கணவன் மனைவி சண்டை.
சுந்தர ராமசாமியின் விகாசம் – மனித கால்குலேட்டர் ராவுத்தர் எலெக்ட்ரானிக் கால்குலேட்டர் வந்ததும் என்ன செய்வார்?
புதுமைப்பித்தனின் மனித இயந்திரம் – கணக்குப் பிள்ளை பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட திட்டம் இடுகிறார்.
புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் – ட்ரெய்னில் பெண்ணின் கால் பட்டதும் சுப்பையா பிள்ளை கனவு காண்கிறார்.
புதுமைப்பித்தனின் சாப விமோசனம் – சீதையின் அக்னி பிரவேசத்தை பற்றி அகலிகை என்ன நினைப்பாள்?
கு.ப.ரா.வின் கனகாம்பரம் – புது மனைவியிடம் தன நண்பர்களிடம் கலந்து பேச சொல்லும் கணவன், அதன்படி நடக்கும் மனைவி.
ஜெயமோகனின் பித்தம் – இரும்பை தங்கமாக மாற்ற வாழ்க்கையை செலவிடும் பண்டாரம்.
பாலகுமாரனின் எந்த கரை பச்சை – வீட்டு வேலைகளை கவுரவம் பார்க்காமல் செய்யும் மச்சினன்
பாலகுமாரனின் சின்ன சின்ன வட்டங்கள் – வேலை இழந்த கணவன், இறந்து போகும் குழந்தை.
எம்.வி. வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை – சுய நலம் நிறைந்த குடும்பம்
அசோகமித்ரனின் பிரயாணம் – குருவை ஓநாய்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சிஷ்யன்

விகடனுக்கு நன்றி!

விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர்களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.

மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம்மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் தேச பக்தர்களின் படங்கள். அவற்றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!

கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட்கார்ந்தார். மூச்சுத் திணறியது. ”வாங்கய்யா” என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் ஸ்விச்சைப் போட்டார்.

”தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்.”

”நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்துடன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக் கொள்கிறேன்.”

”சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?” என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

”நல்லாச் சொன்னீங்கய்யா! அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! ‘பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத்தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு’ம்பான்!”

”மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?”

”அனுப்பறான். பொடிக்கடை தனக்கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்.”

”எவ்வளவு பணம் அனுப்பறாரு?”

”120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும்பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க, அப்ப இங்கே வந்திருந்தான். ‘என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா’ன்னு கேட்டேன். ‘நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட் டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா?”

”இப்படி ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்” என்றதும், அன்னையின் கண்கள் கலங்கிவிட்டன.

”ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?”

”கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்துவிட்டு நிற்கிறேனே!”

ஆர்வியின் குறிப்பு: இந்த பேட்டி 1962-க்கு முன்னால் வந்திருக்க வேண்டும். 1962-க்கு பிறகு காமராஜ் எந்த பதவியிலும் இல்லை. அந்த காலத்தில் 120 ரூபாய் என்பது அப்போது ஒரு ஆள் உயிர் வாழ சமாளித்துக் கொள்ளக் கூடிய பணம்தான். ஆனால் சொகுசு வாழ்க்கை கிடையாது. வந்து போகும் ஆட்கள் நிறைய இருந்தால் கஷ்டம்தான்.

ஐம்பதுகளில் டீச்சர் ட்ரெயினிங் போன என் அம்மாவுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் வாங்க வேண்டும் என்பதுதான் கனவு. (எழுபதுகளில் ஸ்கூலில் படித்த எனக்கு ஃபோர் ஃபிகர் சாலரி – ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பது பெரிய விஷயம். அப்போதெல்லாம் மாட்ரிமோனியல்களில் ஃபோர் ஃபிகர் சாலரி என்று போடுவார்களாம். எண்பதுகளின் இறுதியில் டெண்டுல்கர் விளையாட வந்தார். அவருக்கு மஃபத்லால் ஒரு வேலை கொடுத்தது. அப்போது அவருக்கு ஃபைவ் பிகர் சாலரி என்று பெரிய செய்தியாக வந்தது.)

டோண்டு ராகவன் காமராஜ் பற்றி எழுதி இருக்கும் சில பதிவுகளை இங்கே காணலாம்.

காமராஜை பற்றி அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த தளத்தில் நிறைய எழுதி இருக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ள அபூர்வமான புகைப்படங்களுக்காகவாவது பாருங்கள்!

க.நா. சுப்ரமண்யம்

க.நா. சுப்ரமண்யம்

தன ரசனையின் அடிப்படையில், தனக்கு பிடித்த புத்தகங்களை பற்றி இங்கே க.நா.சுப்ரமண்யம் பேசுகிறார். நான் தமிழில் இதற்கு முன் புத்தகங்களை பற்றி பேசும் வேறு புத்தகங்களை படித்ததில்லை – நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் மாதிரி இலக்கியங்கள் பற்றி நிறைய கிடைக்கும். ஆனால் அதை எல்லாம் எவன் படிப்பது?

எனக்கு இந்த புத்தகம் ஒரு eye opener. தமிழிலும் சாண்டில்யன், லக்ஷ்மி தரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றை பற்றி பேசவும் எழுதவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று இதை படிப்பதற்கு முன் எனக்கு தெளிவாக தெரியாது. ஏதோ கொஞ்சம் நல்ல புத்தகங்கள் இருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன். தமிழில் நல்ல எழுத்துகளுக்கான என் தேடலுக்கு வழி காட்டிய முதல் புத்தகம் இதுதான். செகந்தராபாதில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அந்த காலத்தில் வருஷா வருஷம் ஒரு தமிழ் புத்தக கண்காட்சி நடத்துவார். அங்கே இதை வாங்கிவிட்டு வராந்தாவிலேயே படித்ததும், இதில் உள்ள புத்தகம் எல்லாம் வருவதில்லை என்று அவர் சொன்னதும் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவிருக்கிறது. (எஸ்.வி.வி. எழுதிய உல்லாச வேளை மட்டும் கிடைத்தது.)

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் எனக்கு இன்னும் முக்கால்வாசி கிடைக்கவில்லை. ஆனால் இன்னும் தேடுவதை நான் நிறுத்தவில்லை.

க.நா.சு.வின் லிஸ்ட் கீழே. எனக்கு ஏதாவது தெரிந்தால் அதையும் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்.

1. புதுமைப்பித்தனின் காஞ்சனைபுதிய கூண்டு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், சுப்பையா பிள்ளையின் காதல்கள், செல்லம்மாள், சாப விமோசனம் ஆகிய கதைகள் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் என்று யாராவது தொகுத்தால் கூட போடலாம். சுப்பையா பிள்ளையின் காதல்கள் ஜேம்ஸ் தர்பர் எழுதிய Secret Life of Walter Mitty என்ற அருமையான கதையை நினைவுபடுத்தலாம். தர்பர் கதையை படித்துவிட்டு புதுமைப்பித்தன் எழுதினாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படியே எழுதி இருந்தாலும் கூட இது ஒரு அற்புதமான கதை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

2. தீபனின் அரும்பிய முல்லை – நான் படித்ததில்லை. தீபன் டி.கே.சி.யின் புதல்வர். அவர் எழுதிய கதை, கவிதை, விமர்சனம், கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இங்கே தொகுக்கப்பட்டிருக்கின்றன. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

3. சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்படித்ததில்லை. இவர் எழுதிய எதையுமே நான் படித்ததில்லை. இந்த புத்தகம் பற்றி க.நா.சு. எழுதியதை படித்த பின்னர் இது கிடைக்காதா என்று பெரிய ஏக்கமே உண்டு. நண்பர் ராஜனிடம் இந்தப் புத்தகமும் மண்ணில் தெரியுது வானம் என்ற புத்தகமும் கிடைத்தது. அவற்றைப் பற்றிய பதிவு இங்கே. வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

4. எஸ். வையாபுரிப் பிள்ளையின் தமிழ் சுடர்மணிகள் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
வையாபுரிப் பிள்ளையைப் பற்றிய போஸ்ட்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே.

5. லா.ச.ரா.வின் ஜனனி – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!
லா.ச.ரா. கொஞ்சம் pretentious என்று நான் நினைக்கிறேன். அவர் எழுத்துகள் உணர்ச்சி பிரவாகம். ஆனால் அவர் எழுதிய பாற்கடல், புத்ர இரண்டும் எனக்கு பிடிக்கும். கண்ணாடியில் பிம்பம் விழும் ஓசை என்று அவர் எழுதிய ஒரு வரி மிக பிரபலம். (நல்ல வரியும் கூட. பூப்பூக்கும் ஓசை பாட்டின் வரிகள் மாதிரி இல்லை?) அந்த வரி வரும் கேரளத்தில் எங்கோ என்ற புத்தகத்தை நான் தேடித் பிடித்து படித்திருக்கிறேன். இந்த ஒரு வரி தவிர வெறும் ஒன்றுமே அதில் கிடையாது. :-)

6. எஸ்.வி.வி.யின் உல்லாச வேளை – எஸ்.வி.வி. இதில் கலக்கி விடுவார். நகர்ப்புற, மேல் மத்திய தர வர்க்க, பிராமண milieu. படிக்க உண்மையிலேயே உல்லாசமாக இருக்கும். “படித்திருக்கிறீர்களா” புத்தகம் படித்துவிட்டு அந்த கண்காட்சியில் தேடியபோது கிடைத்து ஒரே புத்தகம் இதுதான்.கல்கியின் நகைச்சுவை மாதிரி இருக்கும். ஆனால் அவரது பிற புத்தகங்கள் எனக்கு ரசிக்கவில்லை (ராமமூர்த்தி)

7. வ.வே.சு. ஐயரின் மங்கையர்க்கரசியின் காதல் – நான் இந்த புத்தகத்தை படித்ததில்லை. ஆனால் இதில் வரும் குளத்தங்கரை அரசமரம் நல்ல சிறுகதை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

8. யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் – படித்ததில்லை. யதுகிரி அம்மாள் பாரதியாரின் நண்பர் (மண்டயம் திருமலாச்சாரியார்?) ஒருவரின் மகள். பாண்டிச்சேரியில் சிறுமியாக இருந்தபோது பாரதியாரை அருகில் இருந்து பார்த்தவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

9. வ.ரா.வின் நடைச்சித்திரம் – வாழ்க்கையில் உள்ள மனிதர்களை பற்றி ஒன்றிரண்டு பக்கங்களில் நன்றாக எழுதி இருப்பார். போஸ்ட்மன் பொன்னம்பலம், காய்கறிக்காரி அம்மாக்கண்ணு, தமிழ் வாத்தியார் முத்துசாமி என்று இருக்கும். சின்ன வயதில் படித்திருக்கிறேன். சமீபத்தில் என்னிடம் இருக்கும் காப்பியை தேடித் பிடித்து திருப்பியும் படித்தேன், அப்போதும் பிடித்திருந்தது.

10. சங்கரராமின் மண்ணாசை – படித்ததில்லை. படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

11. ஏ.கே. செட்டியாரின் உலகம் சுற்றும் தமிழன் – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

12. தி. ஜானகிராமனின் கொட்டுமேளம் – சிறுகதை தொகுப்பு. படித்ததில்லை. இதுவும் நண்பர் ராஜனிடம் கிடைத்தது. அதைப் பற்றிய பதிவு இங்கே. சிலிர்ப்பு என்ற அருமையான சிறுகதையை வேறு எங்கேயோவும் படித்திருக்கிறேன். பசி ஆறியது, தவம் என்ற இன்னும் இரண்டு சிறுகதைகளும் குறிப்பிட வேண்டியவை. எந்த சிறுகதையும் சோடை போகவில்லை. தி.ஜா.வின் மோக முள், அம்மா வந்தாள் இரண்டும் எனக்கும் பிடித்த நாவல்கள். மரப் பசு சிலாகிக்கப்படுகிறது. சில இடங்கள் நன்றாகவும் இருக்கும். ஆனால் என் கண்ணில் அது ஒரு தோல்வி. தி.ஜா.வுக்கு அந்த காலத்து வாசகனை அதிர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருந்திருக்க வேண்டும். இந்த காலத்து வாசகர்கள் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். :-)

13. மு.வ.வின் கரித்துண்டுபடித்ததில்லை. கரித்துண்டு பற்றிய பதிவு இங்கே. மறைந்த நண்பர் சேதுராமன் அனுப்பிய புத்தகம். மு.வ.வின் நாவல்கள் எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. ஆனால் இது பிடித்திருந்தது. மு.வ.வை பற்றிய ஒரு பதிவு இங்கே. அவரது இன்னொரு நாவலான அகல் விளக்கு பற்றி இங்கே படிக்கலாம். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

14. தி.ஜ.ர.வின் பொழுதுபோக்கு – படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

15. டி.எஸ்.எஸ். ராஜனின் நினைவு அலைகள் – படித்ததில்லை. ராஜன் அந்த காலத்தில் மந்திரியாக இருந்தவர். சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர். யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

16. ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்படித்ததில்லை. இங்கே இதைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்க வேண்டும் என்று க.நா.சு. ஏக்கப்பட வைக்கிறார். வேறு யாராவது படித்திருந்தாலும் இதைப் பற்றி எழுதுங்களேன்!

17. கு. அழகிரிசாமி கதைகள் – அழகிரிசாமி அற்புதமான எழுத்தாளர். இந்த தொகுப்பை நான் படித்ததில்லை. ஆனால் இதில் வந்திருக்கும் ராஜா வந்திருக்கிறார், திரிவேணி இரண்டு சிறுகதைகளையும் வேறு எங்கோ படித்திருக்கிறேன். மிக அருமையானவை. என்னிடம் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளும் தொகுக்கப்பட்டது ஒரு காப்பி இருக்கிறது. இன்னும் படித்து முடிக்கவில்லை. புத்தகத்தை எங்கே வைத்தேன் என்றுதான் தெரியவில்லை. :-)

18. அ. சுப்ரமணிய பாரதியாரின் ஜடாவல்லவர் – இவர் மகாகவி பாரதியார் இல்லை. இன்னொருவர். இந்த புத்தகத்தை படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

19. கல்கியின் சங்கீத யோகம் – தமிழிசை இயக்கம் பற்றி கல்கி எழுதியவை. படித்ததில்லை. யாராவது படித்திருந்தால் இதைப் பற்றி எழுதுங்களேன்!

20. பாரதிதாசன் கவிதைகள் – எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். ஏதாவது படித்திருப்பேன், என்ன என்று கூட தெரியாது. முனைவர் மு. இளங்கோவன் மாதிரி யாராவது பாரதிதாசனின் கவிதை வீச்சு, தாக்கம் பற்றி எழுதினால் என்னை போன்ற ஞான சூன்யங்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் பாரதிதாசனுக்கு சந்தம் கை வந்த கலை – எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சொல்லிப் பாருங்கள்! இல்லை கொடு வாளினை எடடா பல கொடியோர் செயல் அறவே என்று சொல்லிப் பாருங்கள்! அவருக்கு நல்ல sense of humor உண்டு. இருண்ட வீடு என்ற சிறு காவியத்தை படித்து பாருங்கள். இல்லை என்றால் தமிழ் சினிமாவின் நிலை பற்றி அவர் எழுதியதிலிருந்து ஒரு வரி – பத்தினிக்கு இன்னல் வரும், பழையபடி தீரும்

21. கு.ப.ராவின் கனகாம்பரம் – சிறுகதை தொகுப்பு. திரை, பண்ணை செங்கான், விடியுமா ஆகியவை மிக நல்ல கதைகள். கு.ப.ரா. மிகவும் subtle ஆக எழுதக்கூடியவர். கு.ப.ராவின் எல்லா கதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றை அல்லையன்ஸ் பதிப்பகம் தொகுத்து ஏழெட்டு வால்யூம்களை ஒரு நாலைந்து வருஷத்துக்கு முன் வெளியிட்டது. இப்போதும் கிடைக்கலாம். என்னிடம் கூட ஒன்றிரண்டு வால்யூம்கள் எங்கேயோ இருக்கிறது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1957-இல் வந்தது. அதற்கு முன் வந்த புத்தகங்களை பற்றித்தான் அவர் இங்கே எழுதி இருக்க முடியும். Obviously. விலை என்ன தெரியுமா? இரண்டே முக்கால் ரூபாய்!

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

வட ஆற்காடு மாவட்டம் கடப்பேரி கிராமத்தில், 1903ம் வருடம் ஏப்ரில் 12ம் தேதி, இராகவன், முனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இளமை முதலே காந்திய நெறியில் ஈடுபட்டவர். காந்திய இயக்கங்கள் அனைத்திலும் கலந்து கொண்டு, தம் மாவட்டத்தில் முன்னணியில் நின்று ஒன்பது ஆண்டுகள் சிறை சென்றவர்.

இண்டர் படித்து முடித்த பின் ஆறு மாதம் பள்ளி ஆசிரியராக இருந்து, காங்கிரசில் சேர்ந்து பொதுத் தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்தவர். கனல் தெரிக்க ஆவேசமாகப் பேசும் ஆற்றல் படைத்தவர். இவர் மகாகவி பாரதியின் பக்தர். தமிழை உயிரினும் இனியதாகக் கொண்டவர்.

இவரது வாழ்க்கைத் துணைவியார் லீலாவதி அம்மாளும் தியாகக் குடும்பத்தில் பிறந்தவர். காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அஞ்சலையம்மாள் மகள் லீலாவதி. அஞ்சலை அம்மாள் பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவராம். (தன் கொள்ளுப்பாட்டி பற்றிய சுட்டியை கொடுத்த சந்தனமுல்லைக்கு நன்றி!)

ஜமதக்னியின் மகளான சாந்தி 2004-இலிருந்து தமிழ் நாடு திட்ட கமிஷன் துணைத் தலைவராக இருக்கும் நாகநாதன் அவர்களின் மனைவி. ஜமதக்னியின் மனைவி லீலாவதியின் தங்கை கல்யாணியின் மகள் மங்கையும், மங்கையின் மகள் சந்தனமுல்லையும் பல விவரங்களை கொடுத்து உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி! சந்தனமுல்லையின் தளத்தை இங்கே காணலாம். அவரே தன் பெரிய தாத்தா ஜமதக்னி பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறார்.

ஜமதக்னி தேசபக்தர் மட்டுமல்லர். சிறந்த இலக்கிய அறிஞர். தமிழ், வடமொழி, இந்தி, ஆங்கில மொழிகளில் வல்லவர். கம்பனில் ஊறியவர். மார்க்சிய சிந்தனையாளர்.. கார்ல் மார்க்சின் படைப்பை மூல தனம் – மிகை மதிப்புக் கோட்பாடுகள் என்ற தலைப்பில் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர். (இப்புத்தகம் 1998ல் பதிப்பிக்கப் பெற்றது என்று வலைச் செய்தி கூறுகிறது)

இந்தி மொழியில் மாகாவியமான, திரு.ஜெய சங்கர் பிரசாதின் காமாயனியைச் செந்தமிழ்க் கவிதையில் காமன் மகள் என வடித்தவர். காளிதாசனின் ரகுவம்சத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் (1969)

இவரது மற்ற நூல்கள்:
1. கனிந்த காதல்
2. தேசிய கீதம்
3. சோசலிஸ்ட் கீதங்கள்
4. பக்த விஜயம்
5. மார்க்சீயம்
6. பூமி வரலாறு
7. உயிர்களின் தோற்றம்
8. லெனின்

இவர் விரிவுரை எழுதிய நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படை
2. கந்தரலங்காரம்
3. கந்தரனுபூதி
4. குமரேச சதகம்

தகவல் ஆதாரம்:
1. மது.ச.விமலானந்தம் எழுதிய “தமிழ் இலக்கிய வரலாறு” 1987
2. வலைத்தளத்திலிருந்து அமுதம் ராமசாமி ஹிந்துவில் எழுதிய கட்டுரை
3. தமிழக அரசு ப்ளானிங் கமிஷன் வலைத்தளம்

பூவை எஸ். ஆறுமுகத்தை பற்றிய கட்டுரையும், பூவை கிராம தளத்தில் அவரை பற்றி உள்ள கட்டுரையும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதை டோண்டு ராகவன் பூவை ஆறுமுகம் பதிவுக்கு அளித்த மறுமொழியில் எடுத்து காட்டி இருக்கிறார். அவருக்கு நன்றி!

சேதுராமன் புத்தகங்களிலிருந்தும் தளங்களிலிருந்தும் தேடி எடுத்து இவற்றை மறுபதிவு செய்வது நல்ல விஷயம். தளங்களிலிருந்து எடுத்தாண்டால் கூடிய வரை அவற்றை சுட்ட முயற்சி செய்கிறேன். உதாரணமாக பாவலர் நா.ரா. நாச்சியப்பன், புலவர் கோவேந்தன் ஆகியோரை பற்றி பதிவுகள் போட்ட பிறகுதான் முனைவர் மு. இளங்கோவனின் தளத்தை பற்றி தெரிய வந்தது. அவரது பதிவுகளை படிப்பு பக்கத்தில் சுட்டி இருக்கிறேன்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

பூவை எஸ். ஆறுமுகம்

பூவை எஸ். ஆறுமுகம்

சேதுராமனின் தொடரும் அறிமுகங்கள்.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

பூவை எஸ். ஆறுமுகம் ஒரு சிறந்த எழுத்தாளர். பிறந்த ஊருக்குப் புகழ் ஊட்டியவர். “பூவை” என்ற சொல்லைத் தனது பெயருடன் இணைத்துக் கொண்டு, தமிழகத்திலும், தமிழகத்திற்கு அப்பாலும் ஊரின் பெயரை நிலை நாட்டியவர். பூவை ஊரில் மலர்ந்து, புகழ் பெற்ற எழுத்தாளராக வளர்ந்து, உமா, “பொன்னி, காதல் மனிதன் போன்ற தரமான பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் எழுத்துப் பணி மூலம் அண்ணா, கலைஞர், காமராசர் போன்ற அரசியல் தலைவர்களின் நட்பையும் பெற்றவர்.

பூவை ஆறுமுகம் 1927ம் வருஷம் ஜனவரி 31ம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் கிராமத்தில் பிறந்தவர். தனது கல்வி முடிந்தவுடன், ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலர் ஆகப் பதவி ஏற்றுக் கொண்டார். “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியர்.

சிறந்த கதாசிரியர், இருனூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும் எழுதித் தஞ்சை மண் வாசனையைப் பரப்பியவர். இவரது எழுத்தில் சமூக நீதியும், சமுதாய வளர்ச்சிக் கருத்துக்களும் நர்த்தனமாடும்.

இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகம், ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகம். கல்கி முதல் அகிலன் வரை என்ற இவரது திறனாய்வு நூல் வெகு சிறப்பானது. இவரது படைப்பான இன்னொரு கீதை தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்ட சிறந்த நாடகம். இதனால் இவருக்கு ஏற்பட்ட பெருமையை விட, இவரது சொந்த ஊரான பூவைக்கு ஏற்பட்ட பெருமைதான் அதிகம். தங்கச் சம்பா என்ற இவரது நாவல், வட்டார மணம் வீசும் வளமானதொன்று. ஐம்பது அறுபது எழுபதுகளில் யாவரும் போற்ற எழுதிக் குவித்தவர்.

தமிழக முதலமைச்சர்களாக இருந்த மாண்புமிகு எம்.பக்தவத்சலம், மாண்புமிகு டாக்டர் மு.கருணாநிதி, மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரிடம் தனது நாவல், நாடகம், சிறுகதைகளுக்காக தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். ஒரே சமயம், நாடகம் மற்றும் நாவலுக்காக டாக்டர் எம்.ஜி.ஆரிடம் தமிழக அரசின் விருதுகளைப் பெற்ற ஒரே எழுத்தாளர்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி ஆகிய இருவரையும் தனது கூண்டுக்கிளி என்ற திரைப் படத்தில் நடிக்க வைத்து, திரையுலக எழுத்தாளர் வரிசையிலும் இணைந்து முத்திரை பதித்தவர்.

இவரது சிறுகதைகள், நாவல்களுக்கென்று, சென்னை கன்னிமாரா நூலகத்தில், ஒரு தனி அலமாரியே அமைக்கப்பட்டுள்ளது.

இவரது படைப்புகள் :
சிறுகதைத் தொகுப்புகள்: கடல் முத்து, அமிர்தம், பூவையின் கதைகள், வேனில் விழா, அந்தித் தாமரை, இனிய கதைகள், திருமதி சிற்றம்பலம், தாய் வீட்டுச் சீர், அரண்மனைக் கோழிமுட்டை, சுட்டும் விழிச் சுடர் முதலானவை.
நாவல்கள்: ஒற்றை ரோஜாப்பூ, வாழும் காதல், ஜாதி ரோஜா, பத்தினித் தெய்வம், அன்னக்கிளி, பூமணம், தாய் மண், வசந்த பைரவி, நாத வீணை, நீ சிரித்த வேளை, மருதாணி நகம், சமுதாயம் ஒரு சைனா பஜார், கீழ் வானம், பத்தினிப் பெண் வேண்டும், நித்தியவல்லி, அக்கினி சாட்சி, அறம் வளர்த்த நாயகி, காதலிக்க ஒருத்தி, கற்பின் கொழுந்து, கரை மணலும் காகித ஓடமும், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன, மற்றும் பல.

தகவல் ஆதாரம்:
1. மது. ச. விமலானந்தம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு – 1987
2. ஆனந்த விகடன் தகவல் வங்கி – புகைப்படத்திற்கும், வரலாற்றுக் குறிப்பிற்கும், ஆனந்த விகடன் குழுவினருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி)

ஆர்வி: நான் இவர் எழுதிய எதையும் படித்ததில்லை. அதனால் எதுவும் சொல்வதற்கில்லை. கூண்டுக்கிளி படம் தயாரித்து இயக்கியது டி.ஆர். ராமண்ணா என்று நினைவு. கதை வசனம் விந்தன் என்று நினைக்கிறேன். இவரது பங்களிப்பு என்ன என்று தெரியவில்லை.

சேதுராமன் தரும் புதிய தகவல்:

அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அப்படி என்றால் இப்போது 28 பேரில் கண்ணதாசன், சுந்தர ராமசாமி, லக்ஷ்மி ஆகியோர் இப்போது நாட்டுடமை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்கள்.

லக்ஷ்மியை பற்றிய பதிவு இங்கே.

நாட்டுடமை சீரிஸின் வேர்ப்பதிவு இங்கே.

மன்மோகன் அடுத்த பிரதமர் என்பது நிச்சயம் ஆகிவிட்டது. அவரது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும்?

நான் அமெரிக்காவில் வாழ்பவன். என் வேர்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. அமெரிக்க அரசியலை விட இந்திய அரசியலைத்தான் நான் கவனிக்கிறேன். ஆனாலும் தூரம் அதிகம். இந்தியாவில் இருந்தால் நேரடியான பாதிப்பு, நண்பர்கள், டீக்கடை பேச்சு, செய்தித்தாள்கள், டிவி என்று பலதரப்பட்ட விதத்தில் என் கருத்துகள் முழுமை அடையும். இப்போதோ இணையத்தில் நுனிப்புல் மேய்வதுதான் எனக்கு செய்திகளின் ஆதாரம். அதனால் இமேஜை மட்டும் வைத்து இதை எழுதுகிறேன்.

மனித வள மேம்பாடு அல்லது கல்வி அல்லது கிராம மேம்பாடு: ராகுல் காந்தி. ராகுல் மந்திரி சபையில் பொறுப்பேற்றே ஆக வேண்டும். அவரது கவனம் இந்த துறைகளில் இருக்கிற மாதிரி தோன்றுகிறது. அதனால் இதில் ஏதோ ஒரு துறை கொடுக்கலாம்.

கபில் சிபல்: முன்னாள் சாலிசிடர் ஜெனரல். திறமையாளர். இவருக்கு சட்டம் மாதிரி எதையாவது கொடுத்து மூலையில் உட்கார வைக்காமல் நல்ல துறையாக கொடுக்கலாம். உள்துறை?

நிதி: மாண்டெக் சிங் ஆலுவாலியா. முன்னாள் நிதித்துறை செயலாளர். திட்டக் கமிஷன் துணைத் தலைவர். முன்பு மன்மோகன் நரசிம்ம ராவ் அரசில் செயல்பட்ட மாதிரி செயல்படுவார்.

வெளியுறவுத் துறை: சஷி தரூர். தரூர் ஐ.நா.வில் பெரிய பொறுப்பில் இருந்தவர். செக்ரடரி ஜெனரல் பதவிக்கு போட்டியிட்டு தோற்றுப் போனார். ஆனாலும் அவருக்கு இருக்கும் அனுபவம், தொடர்புகள் ஆகியவை இந்த பதவிக்கு பெரும் உதவியாக இருக்கும். அவருக்கு அனேகமாக ஒரு உதவி அமைச்சர் பதவியாவது கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் காபினெட் அமைச்சர் பதவிதான் சரி.

ரயில்வே: லாலு யாதவ். போன முறை சிறப்பாக செயல்பட்டார். அந்த ஒரு காரணத்துக்காவே அவரை இப்போதும் மந்திரி சபையில் சேர்த்து அதே துறை வழங்கப் பட வேண்டும்.

தகவல் துறை: தயாநிதி மாறன். தயாநிதி ஊழல் பேர்வழி என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றபடி சாதாரண மக்களுக்கும் நன்மை விளைந்திருக்கிறது.

இந்த ஆறு பேருக்கு சீட் கொடுக்க வேண்டும். இவர்கள் முதல் லிஸ்ட்.

இரண்டாவது லிஸ்டில் சீனியர்கள், தோழமைக் கட்சியினர், “இளைஞர்கள்” எல்லாம் வருவார்கள். பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஷரத் பவார் போன்ற மூத்தவர்களுக்கு எப்படியும் சீட் கொடுக்க வேண்டும். பிரனாபுக்கு ராணுவம், சிதம்பரத்துக்கு உள்துறை (இல்லை என்றால் சிதம்பரத்துக்கு ராணுவம், பிரனாபுக்கு உள்துறை), பவாருக்கு விவசாயம் ஆகியவற்றை கொடுக்கலாம். “இளைஞர்களான” சச்சின் பைலட், ஜோதி சிந்தியா ஆகியவர்களுக்கு விமானத்துறை, கல்வி, பெட்ரோலியம், சாலைகள், வணிகம் என்று முக்கியமான infrastructure துறை கொடுப்பது நல்லது. குலாம் நபி ஆசாத், கமல்நாத், பிரஃபுல் படேல், ஜெயராம் ரமேஷ், சல்மான் குர்ஷீத் போன்றவர்கள் நிச்சயமாக இடம் பெறுவார்கள். மம்தா பானர்ஜிக்கு ராகுலுக்கு எதையாவது கொடுத்த பிறகு மிச்சம் இருப்பவற்றில் மனித வள மேம்பாடு அல்லது கல்வி என்று எதையாவது கொடுக்கலாம். தி.மு.க. எப்படியும் அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு, ராசா, பழனிமாணிக்கம் ஆகியோருக்கு பதவி கேட்கும். எதையாவது கொடுத்து தொலைக்க வேண்டியதுதான்.

அர்ஜுன் சிங், ஷிவ்ராஜ் பாட்டில் போன்றவர்களை மறந்துவிட வேண்டும். இவர்கள் எல்லாம் தண்டம்.

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers