ஜனவரி 2009
மாதாந்திர தொகுப்பு
ஜனவரி 8, 2009
நான் புரிந்து கொண்ட வரை கீழே எழுதி இருக்கிறேன். ஏதாவது சரி இல்லை என்றால் சொல்லுங்கள்.
1. ஒரு காலத்தில் தமிழகத்தில் – இல்லை இந்தியாவிலேயோ? – பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இருந்தது.
2. மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள் (மத்திய ஆசியா என்றால் இன்றைய உஸ்பெகிஸ்தான், டாட்ஜிகிஸ்தான், கசாகிஸ்தான் போன்ற நாடுகள்)
3. அவர்கள் வர்ணம், ஜாதி, பிறப்பினால் ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை இந்தியாவில் நுழைத்தார்கள்.
4. ஒரிஜினல் இந்தியர்களுடன் இனக் கலப்பு நடந்தது. ஆனால் இந்த இனக் கலப்பு தென் இந்தியாவில் மிக குறைவு. முக்கியமாக தமிழகத்தில் இன்னும் ஒரிஜினல் இந்தியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
5. ஆரியர்களின் பூசாரி வர்க்கமான பிராமணர்கள் மெதுவாக தமிழகத்துக்கு வந்தார்கள்.
6. இவர்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லாதவர்கள். பல நூறாண்டுகளுக்கு பிறகும் தமிழகத்தில் 3%தான் இருக்கிறார்கள்.
7. இவர்கள் படை திரட்டிக்கொண்டு வந்து தமிழகத்தை வெல்லவில்லை.
8. இவர்கள் பெரிய விஞ்ஞானிகளும் அல்லர். இவர்கள் வந்து விவசாயம், தொழில், போர் முறை எதையும் முன்னேற்றவில்லை.
9. ஆனால் இவர்கள் சொல்வதை எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். திடீரென்று இங்கே நுழைந்து ராஜாவைத் தவிர மற்றவரெல்லாம் சூத்திரன், தாழந்தவன், இவர்கள் சந்ததியினர் எல்லாரும் கிட்டத்தட்ட அடிமைகள் என்று சொன்னதை அத்தனை பேரும் ஒத்துக்கொண்டார்கள்.
இது இந்தியா முழுதும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. வட இந்தியாவிலும், மற்ற திராவிட மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இவ்வளவு பிராமண எதிர்ப்பு கிடையாது. அதனால் அங்கே எல்லாம் இந்த வரலாற்றில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
அதாவது 97 பேர் உள்ள ஒரு ஊருக்கு 3 பேர் வந்தார்கள். இந்த 3 பேரிடம் படை இல்லை, ஆயுதம் இல்லை. ஆள் பலம் இல்லை. படை பலம் இல்லை. வாழ்க்கைக்கு உபயோகமான அறிவு பலம் இல்லை. திடீரென்று ஒரு ஊருக்கு வருவார்களாம். ஏறக்குறைய அத்தனை பேரும் எனக்கு அடிமை என்பார்களாம். எல்லாரும் “தங்கள் சித்தம் என் பாக்யம்” என்பார்களாம். இந்த ட்ரிக் தெரிந்திருந்தால் அலெக்சாண்டர், சீசர், ஜெங்கிஸ் கான், முஹம்மத் கஜினி, தில்லி சுல்தான்கள், ராஜ ராஜ சோழன், பாபர், வெள்ளைக்காரர்கள், நெப்போலியன், ராஜ பக்ஷே, பிரபாகரன் எல்லாரும் உலகத்தையே வென்றிருக்கலாம்.
இல்லை என்றால் இப்படியா? ஆரியர்கள் படை எடுத்து வந்து தமிழகத்தை வென்றார்கள். பிறகு திரும்பி போய்விட்டார்கள். போகும்போது சில பூசாரிகளிடம் நீங்கள் இனி மேல் எல்லாரிடமும் நீங்கள் உயர்ந்தவர், மற்றவரெல்லாம் தாழ்ந்தவர் என்று சொல்லுங்கள், எல்லாரும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுவார்கள், உங்களுக்கு அவர்களை அடக்கி வைக்க படை, ஆயுதம், பணம், பதவி ஒரு மண்ணும் தேவை இல்லை, சரித்திரத்தில் இந்த படைஎடுப்பு, ஆரியர்களின் வெற்றி எதையும் எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டு திரும்பி போய்விட்டார்கள்.
என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன், சில சமயம் கிருஸ்துவ பிரசாரகர்கள் தெரு மூலையில் நின்று கொண்டு “பாவிகளே” என்று கூப்பிடுவார்கள். உடனே பத்து பேர் பாவி என்றால் நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்காத குறையாக அங்கே போய் நிற்பார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.
கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மூளை எங்கே போயிற்று? எதற்காக இதை எல்லாம் ஒத்துக்கொண்டார்கள்?
ஜனவரி 6, 2009
Posted by RV under
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Annapoorani,
Appraisals,
Chandrasekhar,
Endru thaniyum intha suthanthira dhagam,
Jeyalalitha,
Kalaignar karunanidhi,
Kamaraj,
Koovam nadhik karaiyinile,
Manam oru kurangu,
Mohammad bin thuglaq,
Morarji desai,
Narendra modi,
Sarkkar pukuntha veedu,
Satthiram sonnathillai,
Then mazhai,
Thuglaq,
Unmaiye un vilai enna,
Vande matharam,
Yarukkum vetkamillai |
[24] Comments
சோவை பற்றி எழுதுவதாக முதலில் ஐடியா இல்லை. கொற்கை என்பவர் நான் ராஜாஜியை பற்றி எழுதியதும் அவர் “நீ பிராமணன், பிராமணன் பற்றிதான் எழுதுவாய்” என்ற ரேஞ்சில் ஒரு கமென்ட் விட்டார். அந்த கமென்ட் கிளப்பிய கடுப்பில்தான் – “பிராமணன் பற்றி எழுதுவது கொலைக் குற்றமா?” – இதை எழுதுகிறேன்.
சோவுக்கு பல முகங்கள் உண்டு. வக்கீல் (வெற்றி அடைந்தாரா தெரியாது), நாடக ஆசிரியர், நாடக, திரைப்பட நடிகர், அரசியல் இதழியலாளர் என்று.
வக்கீலாக என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.
அவர் அவ்வளவு நல்ல நடிகர் அல்லர். அவர் நன்றாக நடித்ததாக எனக்கு ஒரு திரைப்படம் கூட நினைவில்லை. ஆனால் கொஞ்ச நாள் அவர்தான் டாப் காமெடியன் ஆக இருந்தார். அவரது காமெடியும் வெகு சில படங்களிலேயே சோபித்தது. (வா வாத்யாரே ஊட்டாண்டே என்ன படம்? இடம் பெற்ற பொம்மலாட்டம், தேன் மழை) அரசியல் கலந்த காமெடி சில படங்களில் நன்றாக வந்தது (துக்ளக், அன்னபூரணி)
அவரது நாடகங்களை நான் பார்த்ததை விட படித்ததுதான் அதிகம். அவரது நாடகங்களில் நல்ல கதை அமைவது கஷ்டம். உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை மாதிரி சில நாடகங்களில்தான் கோர்வையான கதை அமைந்திருக்கும். அவரது நாடகங்களின் ஃபார்முலா ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு பிரச்சினை – ஜாதி, விபசாரம், உண்மை vs. பண பலம், லஞ்சம் என்று ஏதாவது ஒரு விஷயம் – அதை சுற்றி நிறைய அன்றைய அரசியல் பற்றிய அடிவெட்டுகள், கெக்கே பிக்கே ஜோக்குகள் இவற்றை வைத்து ஒரு நாடகம் பின்னி விடுவார். அவரது பாணி ஏறக்குறைய எம்.ஆர். ராதா பாணி. very topical comments. எழுத ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை. சில சமயம் Pygmalion, Tale of Two Cities போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை தழுவியும் மனம் ஒரு குரங்கு, வந்தே மாதரம் போன்ற நாடகங்களை எழுதி இருக்கிறார். சில சமயம் ப்ளாட்டே இல்லாமல் சும்மா அரசியல் கமெண்ட்டுகளை வைத்து வாஷிங்டனில் நல்லதம்பி, கூவம் நதிக் கரையினிலே, சர்க்கார் புகுந்த வீடு, என்று தணியும் இந்த சுதந்திர தாகம் போன்ற நாவல்கள் மற்றும் நாடகங்களை எழுதி இருக்கிறார்.
அவரை கிரேக்க நாடக ஆசிரியரான அரிஸ்டோஃபனசுடன் ஒப்பிடலாம். அரசியல், சமூகம் பற்றிய கமெண்ட்கள்தான் அவருடைய ஸ்பெஷாலிடி. இருவரிடமும் ஒரே ப்ராப்ளம். அந்த கால கட்டத்தில் வாசிக்காதவர்களுக்கு அவர் எதை கிண்டல் செய்கிறார் என்று புரிவது கஷ்டம். அரிஸ்டோஃபனஸ் அன்றைய கிரேக்க அரசியல்வாதியான க்ளியானை கிண்டல் செய்வதை நாம் இன்று எப்படி முழுதாக புரிந்து கொள்ள முடியும்? சோவுக்கு உதாரணமாக ஒன்று – சர்க்கார் புகுந்த வீடு என்ற நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களான ரகுநாத ஐயர், கந்தசாமி இருவருக்கும் மளிகைக் கடையிலும் பால்காரரிடமும் கடன் தொந்தரவு. அவர்கள் நாராயணசாமி நாயுடுவிடம் ஆலோசனை கேட்கப் போவார்கள். அவர் “பொதுவா வாங்கின கடனை திருப்பி கொடுக்கக் கூடாது என்பதுதான் நம்ம கொள்கை” என்பார். இதற்கு நீங்கள் சிரித்தீர்கள் என்றால் எண்பதுகளில் நாயுடு நடத்திய போராட்டங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறது என்று அர்த்தம்.
அவர் ஷேக்ஸ்பியரோ, இப்சனோ இல்லை. ஆனால் அவருடைய எழுத்துக்கள் சிரிக்க வைப்பவை. சில சமயங்களில் நாடகம் அருமையாக வந்து விழுவதும் உண்டு. சாத்திரம் சொன்னதில்லை, துக்ளக், உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, சர்க்கார் புகுந்த வீடு, கூவம் நதிக் கரையினிலே ஆகியவை படிக்க வேண்டியவை.
அவருடைய இதழியல் பணி குறிப்பிடப்பட வேண்டிய்து. துக்ளக் நடத்த முதல் ஐந்து ஆறு வருஷங்களாவது மிகுந்த துணிச்சல் வேண்டும். கலைஞர் அவருக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையின் போது அவர் ஜெயிலுக்கு போய் அடி வாங்காதது ஆச்சரியம்தான். He made Thuglaq an institution! அவருக்கு பிறகு துக்ளக் வரப்போவதில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
அவருடைய அபிப்ராயங்கள் சுலபமாக மாறுவதில்லை. காமராஜின் ஆட்சி பொற்காலம், மொரார்ஜி, சந்திரசேகர் போன்றவர்கள் அப்பழுக்கில்லாதவர்கள், வி.பி. சிங் ஒரு துரோகி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆகியோரை செலுத்துவது தேச பக்தியே, பெண் சுதந்திரம் என்பது பம்மாத்து, நரேந்திர மோடிதான் இன்றைய இந்தியாவின் சிறந்த தலைவர், புலிகள் அயோக்கியர்கள் இந்த மாதிரி பல. அவற்றை நல்ல நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவார். எழுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரை அவர் நடுநிலை தவறியதில்லை. நடுநிலை என்றால் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் ஒரே value system வைத்து பார்த்தார். அதனால் எம்ஜிஆர், கலைஞர், இந்திரா, ஜனதா கட்சி ஒருவரையும் விட்டதில்லை. மொரார்ஜி, காமராஜ் மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது, ஆனால் அவர்களது குறைகளையும் சொல்லுவார். ஒண்ணரை பக்க நாளேடுகள் சூப்பர்!
என்றைக்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தனவோ, அன்றையிலிருந்து அவர் தனது நடுநிலையை தவற விட்டுவிட்டார். அவரது கண்ணோட்டத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நல்லது. அதனால் அவர் பா.ஜ.க.வின் முக்கிய குறையான முஸ்லீம் எதிர்ப்பு என்பதற்கு ஏதாவது சப்பைக்கட்டு கட்டுவார். நரேந்திர மோடி குஜராத்தை ஊழல் அற்ற மாநிலமாக மாற்றி இருக்கிறாராம். அங்கே வளர்ச்சி அதிகமாம். அவரை சாதாரண மனிதனும் சுலபமாக பார்க்கலாமாம். இவை எல்லாம் அங்கே நடந்த படுகொலைகளை நியாயபடுத்த முடியாது. அவரே ஒரு முறை சொன்ன மாதிரி, integrity is more important in a politician than efficiency.
அதே போல்தான் ஜெவும். கலைஞர் ஆட்சிக்கு வந்தால் புலிகளுக்கு ஆதரவு மறைமுகமாக தரப்படும், அது இந்தியாவுக்கு ஆபத்து என்று அவர் உறுதியாக நம்புகிறார். கலைஞருக்கு புலிகளை விட, தமிழர்களை விட பதவி முக்கியம் என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் ஜெ போன்ற ஒரு மோசமான சர்வாதிகாரி மேல் அவருக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருக்கிறது.
அவர் நல்ல அறிவாளி. அரசியலில் ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். புலிகளை பற்றி எண்பதுகளில் குறை சொன்ன ஒரே பத்திரிகையாளர் அவர்தான். புலிகள் ராஜீவ்-ஜெயவர்த்தனே உடன்பாட்டை நிறைவேற விடமாட்டார்கள் என்று சரியாக கணித்தார். வி.பி. சிங்கை ஆதரிப்பது ஜனதாவுக்கு தற்கொலைக்கு சமமானது என்று அவர் கணித்தது சரியாக அமைந்தது. சரண் சிங், ராஜ் நாராயண் ஆகியோர் மொரரஜியின் முதுகில் குத்தக்கூடும் என்று சந்தேகப்பட்டார். அப்படியே ஆயிற்று.
மொத்தத்தில் அவர் ஒரு நல்ல நாடக ஆசிரியர். தமிழில் நல்ல நாடக ஆசிரியர்கள் அபூர்வம். அதனால் அவரது நாடக பங்களிப்பு மிக பெரியதாக தெரிகிறது. அவரது நகைச்சுவை அற்புதமானது. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷங்கள் அவர் அரசியல், சமூகம் பற்றி பட்டையை கிளப்பும் நடுநிலையான கமெண்ட்களை போட்டு தாக்கி இருக்கிறார். ஆனால் ஒரு பத்து பதினைந்து வருஷங்களாக அவர் பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார், அதனால் எல்லார் தவறுகளையும் போட்டு கிழிக்காமல், பா.ஜ.க.வுக்கு சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துவிட்டார். தான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாத குணமும், குதர்க்கம் பேசும் புத்தியும் அவருடைய குறைகள்தாம். அவர் நல்ல நடிகர் இல்லை. நகைச்சுவைக்காகவும், ஒரு நாடக ஆசிரியராகவும், தைரியமான, ஆனால் கடைசி நாட்களில் ஒரு பக்கம் சாய்ந்து விட்ட இதழியலாளர்/அரசியல் விமர்சகராகவும், நினைவு கூறப்பட வேண்டியவர்.
ஜனவரி 4, 2009
Posted by RV under
Srilankan tamils,
Tamil Culture,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Amirthalingam,
Dr. rudhran,
Jayalalitha,
Kalaignar karunanidhi,
LTTE,
Nedumaran,
Prabhakaran,
Rajiv gandhi,
Sirisabarathnam,
Srilankan tamils,
Suba. veerapandian,
Umamaheswaran,
Vaiko |
[20] Comments
சமீபத்தில் சுப.வீரபாண்டியன் இலங்கை தமிழர் பற்றி கொடுத்த பேட்டி ஒன்றை கண்டேன். அந்த போஸ்ட்கள் இங்கே, இங்கே.
அவருடன் எனக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. படித்த கொஞ்சத்தை வைத்துக்கொண்டு இதை உறுதியாக சொல்ல முடியாது – ஆனால் அவருக்கும் பிராமண எதிர்ப்பு வெறி இருப்பது போல இருக்கிறது. அவர் கலைஞருக்கு அனாவசியத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கிறது. ஆனால் அவர் இலங்கை பிரச்னை பற்றி சொல்லி இருக்கும் சில கருத்துகள் எனக்கு சரி என்று படுகின்றன.
நான் ஏழெட்டு நாட்களுக்கு முன்னால் எழுதிய மறுமொழி இன்னும் ஏற்கப்படவில்லை போலிருக்கிறது. அது இங்கே.
சுப. வீ. அவர்களே, தமிழ் தேசியவாதம் என்றால் என்னவென்று சரியாக புரியவில்லை. உங்கள் அறிமுகப் பக்கங்களை படித்தும் புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா?
தனி ஈழம் கேட்டால் தனி தமிழ் நாடு கேட்பார்கள் என்பதெல்லாம் அனாவசிய பயம்தான். இந்தியா ஆயுதம் விற்காவிட்டால் சீனா விற்கும் என்பதும் அயோக்கியத்தனமான வாதம்தான். (இப்படித்தான் ஹிட்லருக்கும் ஆயுதம் விற்றிருப்பார்கள்.) புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதே தவறு என்பது பேச்சுரிமையை பாதிக்கும் விஷயம்தான். எனக்கு சட்ட நுணுக்கங்கள் புரியவில்லை – அதனால் எங்கே சட்ட மீறல் ஏற்படுகிறது என்பது புரியவில்லை.
ஆனால் தமிழ் ஈழம் இந்தியாவுக்கு நட்பு நாடாகத்தான் இருக்கும் என்று எப்படி உறுதியாக சொல்லுகிறீர்கள்? பங்களாதேஷ் என்ன இந்தியாவுடன் பிரமாத நட்பு பாராட்டுகிறதா? இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலிருந்து யாரும் இங்கே வந்து எந்த அரசியல் தலைவரையும் கொல்லவில்லை. புலிகளோ ராஜீவை கொன்றிருக்கிறார்கள், கலைஞருக்கு மிரட்டல் வந்து வைகோ பிரிந்தார், ஜெயலலிதாவுக்கு ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. தனக்கு விரோதமாக செயல்படும் எல்லாரையும் ஞாபகம் வைத்திருந்து பழி வாங்கும் குணம் புலிகளுக்கு இல்லை என்று நினைக்கிறீர்களா? அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன், சிரி சபாரத்னம் போன்றவர்கள் கதி மறந்துவிட்டதா?
சீனாவின் முத்து மாலை நடவடிக்கை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது என்ன முத்து மாலை?
கலைஞர் செய்வது சரி என்று நினைக்கிறீர்களா? எல்லாரும் ராஜினாமா என்றார், எல்லாரும் அப்படியேதான் இருக்கிறார்கள். பிரணாப் போகிறார் என்றார், யாரும் போகவில்லை. நான் கலைஞர் சொல்வது சரி என்று நினைக்கவில்லை – ஆனால் அவர் சொல்வதற்கும் செய்வதற்கும் நிறைய இடைவெளி இருக்கிறது. வைகோ, நெடுமாறன் போன்றவர்களுடன் நான் வேறுபடுகிறேன், ஆனால் அவர்களிடம் இலங்கை தமிழர்கள், புலிகளை பொறுத்தவரையில் எந்த விதமான போலித்தனமும் இல்லை இன்று நினைக்கிறேன். கலைஞருக்கோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையாக இருக்கிறது. பதவிக்கு சங்கடம் வராத வரையில் இரங்கல் கவிதை எழுதுவேன் என்கிற நிலைமையில் அல்லவா அவர் இருக்கிறார்?
புலிகள் என்றால் இலங்கை தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்றால் புலிகள் என்பது உண்மையா இல்லை ஊடகங்கள் உருவாக்கும் மாயையா? புலிகளுக்கு எதிர்ப்பு நிலை எடுக்கும் என் போன்றவர்கள் தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்க முடியாதா? என்னுடைய ஒரு போஸ்ட் இங்கே
உங்களுடன் பல விதங்களில் நான் வேறுபட்டாலும், உங்களுடைய “இந்தியாவும் தமிழர்களும் என்ன செய்ய வேண்டும்” என்பது எனக்கு சரியாக படுகிறது. இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்வது என்னதான் ராஜீவின் கொலை ஏற்படுத்திய காயம் இருந்தாலும் பெரிய தவறுதான்.
கடைசியில் பார்ப்பனர்கள் என்று சொதப்பியதுதான் frustrationஐ கிளப்புகிறது. இதற்கு மறுமொழி எழுதும் முன் நான் ஐயர் ஜாதியில் பிறந்தவன் என்று சொல்லியாக வேண்டும். இதை சொன்ன பிறகு பலர் நான் என்ன சொல்கிறேன் என்பதை பற்றி கவலைப்படுவதில்லை, அம்பி என்று ஆரம்பித்துவிடுவார்கள். டாக்டர் ருத்ரனின் ப்ளாகில் ஒரு முறை Dalit Fury என்ற ஒரு போஸ்டுக்கு மறுமொழி எழுதும் போது இதை சொல்ல மறந்துவிட்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அவர் உன் ஜெனோடைப் என்ன என்று சந்தேகப்பட்டார் – இது வரையில் நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.
பார்ப்பனர்கள் எந்த விதத்தில் தமிழுக்கு விரோதியாக இருக்கிறார்கள்? சிதம்பரம் தீக்ஷிதர்கள் தேவாரம் பாடக்கூடாது என்பதாலா? இப்படி உங்களுக்கு பத்து விஷயம் தெரியுமா? அப்படித்தான் என்றால் அதே லாஜிக்கை உபயோகித்து இப்படி சொல்வீர்களா? தமிழ் நாட்டில் தலித்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் அனேகமாக எல்லாமே தேவர் ஜாதியினர் நடத்துவது. தேவர்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று எந்த மேடையிலாவது நீங்கள் பேசுவீர்களா? முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று பேசுவீர்களா? (அப்படி பேசினால் நான் அதையும் எதிர்ப்பேன்) என்னை நான் பிறந்த ஜாதியால் பார்ப்பனன் என்று சொல்வீர்கள், பிறகு பார்ப்பனர்கள் தமிழ் விரோதி என்பீர்கள். நான் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? > – என்ன கொடுமை சார் இது? என்னுடைய இன்னொரு போஸ்ட் இங்கே
ஜனவரி 4, 2009
ஜெயமோகன்: இந்த ப்ளாக் படிக்க ஆரம்பித்துத்தான் நான் தமிழ் ப்ளாக்களை பற்றி தெரிந்துகொண்டேன். சுவாரசியமான எழுத்தாளர். கொஞ்சம் குசும்பு உள்ளவர். கண்ட மேனிக்கு எல்லாரிடமும் திட்டு வாங்குவார். பாதி நேரம் எனக்கு ஏன் திட்டுகிறார்கள் என்றே புரிவதில்லை. சுந்தர ராமசாமியை தன் குருவாக மதிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அவருடனும் அவர் மகனும் காலச்சுவடு பதிப்பகத்தின் தலைவருமான கண்ணனுடனும் கூட சண்டை போலிருக்கிறது. சிவாஜி பற்றியும் எம்ஜியார் பற்றியும் எழுதி நிறைய திட்டு வாங்கினார். இதற்காக இவரை திட்டுகிறார்கள். ஆனால் இவரை விட அதிக ரீச் உள்ள அசத்தப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் சுமதீஈஈஈஈ என்று யாராவது சொன்னால் சிரிக்கிறார்கள். வி. எஸ். ராகவன் குரலில் பேசும் மைக்கேல் அகஸ்டின் என்பவர் எப்போதும் “அடங்கொய்யாலே என் பொண்டாட்டி எனக்கு சோறு போட மாட்டேங்கறா” என்றுதான் ஆரம்பிப்பார். அதற்கு வி.எஸ். ராகவனே கூட ஆட்சேபிப்பதில்லை. தமிழர்களின் லாஜிக் பெரிய மர்மம்தான்!
ராஜநாயகம்: ரசிகர். சினிமா, எழுத்து உலகங்களில் பலரை தெரிந்தவர். அவர்களை பற்றி சுருக்கமாக, சுவாரசியமாக எழுதுவார். திடீரென்று நிறைய கெட்ட வார்த்தைகள் போட்டு “தமாஷாக” நாலு போஸ்ட் எழுதுவார். கெட்ட வார்த்தைகளை பற்றி எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, ஆனால் இதெல்லாம் தமாஷ் என்று சொல்வதற்கு ஆட்சேபணை உண்டு. ஜெயமோகனுடன் இவருக்கும் சண்டை. நான் இவரது தன்னிலை விளக்கங்களை முழுதாக படிக்கவில்லை,
டோண்டு: மனதில் பட்டதை தைரியமாக அடித்துவிடும் அபூர்வ மனிதர். சமீபத்தில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் என்று ஆரம்பித்து எதையாவது எழுதுவார். அவரது நினைவுகள், கருத்துகள், பதில்கள் சுவாரசியமானவை. நரேந்திர மோடி, சோ ராமசாமி ஆகியோரின் தீவிர ஆதரவாளர். தமிழ் பதிவுகளில் வெளிப்படும் பிராமண வெறுப்பு இவரை வெறி கொள்ள வைக்கிறது.
வேறு பல ப்ளாக்களையும் அவ்வப்போது படிக்கிறேன். சாதாரணமாக வோர்ட்ப்ரெஸ்சின் டாப் ப்ளாக்கள் என்ன என்று பார்ப்பேன். ஆனால் ரெகுலராக பார்ப்பது இவைதான். இவற்றை எல்லாம் ப்ளாக்ரொலில் எப்படி சேர்ப்பது என்று கூட தெரியாது – அதனால் அவ்வப்போது சென்று பார்க்கிறேன்.
என்னை விட நன்கு தெரிந்தவர் என்ன சொல்கிறார் என்றும் பாருங்கள் – பாஸ்டன் பாலாவின் டாப் தமிழ் ப்ளாகர்ஸ் - எங்கள் சினிமா பற்றிய அவார்டா கொடுக்கறாங்க ப்ளாக் இங்கே “ஆறுதல் பரிசு” மாதிரி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனவரி 3, 2009
நான் ப்ளஸ் டூ முடிக்கும்போது எம்ஜிஆர் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு வருமான வரம்பு இருந்தால்தான் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். வெறும் வாயையே மெல்லக் கூடிய கலைஞர் அடித்தது சான்ஸ் என்று “போராடினார்”. எம்ஜிஆர் நமக்கு எதற்கு வம்பு என்று என்று வருமான வரம்பை நீக்கினார். கலைஞரை விட தான்தான் பிற்படுத்தப்பட்டவர்களின் நண்பன் என்று காட்டுவதற்காக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32%இலிருந்து 50%ஆக இட ஒதுக்கீட்டை உயர்த்தினார். மொத்த இட ஒதுக்கீட்டை 50% இலிருந்து 68% சதவிகிதம் ஆக்கினார். கரெக்டாக அந்த வருஷம் ப்ளஸ் டூ முடித்த எனக்கு எஞ்சினியரிங் சீட் கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் தனியார் கல்லூரிகள் கிடையாது. இட ஒதுக்கீட்டை பற்றி எனக்கு என்ன கருத்து இருந்திருக்கும் என்று நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்.
என் அதிர்ஷ்டம் அடுத்த வருஷம் ப்ளஸ் டூ பரீட்சை ரொம்ப கஷ்டம். அடுத்த வருஷம் எனக்கு வெயிட்டிங் லிஸ்டில் சீட் கிடைத்தது. ஆனால் போன ஒரு மாதத்தில் நான் ஒரு டாப் மாணவன் என்பதும் இருந்ததில் 90% பேரை விட சிறந்த மாணவன் என்றும் சந்தேகமற தெரிந்தது. என் கணக்கு ஆசிரியர் சீனியர்களிடம் எல்லாம் போய் இந்தப் பையன் ஒரு மகா அறிவாளி என்ற ரேஞ்சுக்கு புகழ்ந்தார். (எல்லாம் முதல் வருஷம் மட்டும்தான், அடுத்த வருஷத்திலிருந்து சராசரிக்கு மேற்பட்ட மாணவன், ஆனால் டாப் மாணவன் எல்லாம் இல்லை. படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டது) ஆனால் எனக்கு வெயிட்டிங் லிஸ்ட் – என்ன கொடுமை சரவணன் ரேஞ்சுக்கு இது என்னை யோசிக்க வைத்தது.
எனது ரூம் மேட்கள் நால்வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மூன்று பேர் கவுண்டர்கள். நான்காமவன் தங்கமணிமாறன். தி.க. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன். என்ன ஜாதி என்று தெரியாது. உயிர் நண்பன். ஒரே தட்டில் சாப்பிட்டிருக்கிறோம். துணி, செருப்பு, பணம் எல்லாம் அனுமதி கேட்காமல் பகிர்ந்து கொள்ளலாம். “ஏண்டா எடுத்தே” என்று திட்டினால் “போடா மயிரு” என்று சொல்லிவிட்டு போகலாம். அவன் அப்பா அரசு ஊழியர். அதனால் அவனுக்கு சீட் கிடைத்ததே தவிர ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. ஒரு வேளை ஓபன் கோட்டாவிலேயே சீட் கிடைத்ததோ என்னவோ – இப்போது நினைவில்லை.
இன்னொரு நல்ல நண்பனின் அப்பா பெரிய வியாபாரி. அப்போதே கார் எல்லாம் இருந்தது. ஆனால் அவன் “வருமானம்” ஸ்காலர்ஷிப் வாங்கவும் தகுதி உடையது. மாறனோ கஷ்டப்பட்டான். தேவை உள்ளவர்களுக்கு ஸ்காலர்ஷிப் இல்லை, ஒரு தேவையும் இல்லாதவர்கள் சுலபமாக ஸ்காலர்ஷிப் வாங்கலாம் என்ற நிலைய கண்கூடாக பார்த்தேன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் எல்லாமே பம்மாத்து வேலை என்ற முடிவுக்கு சுலபமாக வர முடிந்தது. மாறனிடம் இந்த இரண்டு விஷயத்தையுமே வைத்து வாதிடுவேன். இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் திறமை உள்ளவர்களை அமுக்குகிறது, சரியான இடத்தில் உதவி போய் சேருவதில்லை என்று சொல்வேன். அவனாலும் ஒன்றும் சொல்ல முடியாது.
மாறனின் தி.க. தாக்கமோ, இல்லை எனக்கே தோன்றியதோ தெரியாது – பின்னால் எனக்கு இந்த கேள்விகள் தோன்றின.
1. படித்து முடித்து எங்கோ மின் வாரியத்திலோ, இல்லை பொது பணித்துறையிலோ வேலை செய்ய ப்ளஸ் டூவில் எழுபது மார்க் வாங்கினால் என்ன, எண்பது மார்க் வாங்கினால் என்ன?
2. மார்க் திறமையை முடிவு செய்ய சரியான கருவியே இல்லை – நான் வெயிட்டிங் லிஸ்டில் இருந்து வந்தவன், என் காலேஜில் மிக திறமையான மாணவன். ஆனால் ப்ளஸ் டூவில் என் மார்க் பல பிற்படுத்தப்பட்ட மாணவர்களை விட கம்மிதானே? அப்புறம் 98% வாங்கியும் நான் முற்படுத்தப்பட்டவன், எனக்கு சீட் கிடைக்கவில்லை என்று புலம்புவானேன்? 98%க்கும் 92%க்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கிறதா?
3. என் செட்டில் பிராமணர்கள் நிறைய பேர் இருந்தார்கள் – நிச்சயமாக 3% இல்லை. (3% என்றால் ஆறு பேர்தான் இருந்திருக்க வேண்டும்) ஒரு பத்து பதினைந்து % இருந்தார்கள் – அதாவது 32% ஒப்பன் கோட்டாவில் இது கிட்டத்தட்ட 40%. அப்படி என்றால் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் சரியான வாதமே அல்ல.
4. ஒரு பையன் ரெயில்வே போர்ட்டரின் பையன். இட ஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் இல்லாமல் அவன் படித்திருக்கவே முடியாது. அவனை மாதிரி ஒரு இட ஒதுக்கீடு ஒரு 10% சதவிகிதம் பேருக்கு சரியான முறையில் போய் சேர்ந்திருக்கலாம். 68% ஒதுக்கீட்டில், 10% சரியாக பயன்பட்டது என்றால் low efficiencyதான். ஆனால் ஒரு அரசு செயல்பாட்டில் இதுவே அதிகம் efficient என்று தோன்றுகிறது.
நகர்ப்புறங்களிலிருந்து வருபவர்களுக்கு கிராமப்புற மாணவர்களை விட exposure அதிகமாக இருக்கிறது. நகர்ப்புறத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், கிராமப்புறத்தார்களை விட குறைவாகத்தான் discriminationஐ அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு டபிள் அட்வான்டேஜ் ஆக இருக்கிறது. உண்மையில் கிராம மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். ஒரு ஐம்பது வருஷங்களுக்காவது தரப்பட வேண்டும்.
எல்லா பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் பிற்படுத்தப்பட்டவை அல்ல. கவுண்டர்களை சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். வன்னியர்கள், முதலியார்கள், தேவர்கள், நாடார்கள், செட்டியார்கள் இவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்டவர்களா? இவர்கள் ஆதிக்க சாதிகள்; பணக்கார சாதிகள். என் கருத்தில் தலித்களுக்கும், பழங்குடிகளுக்கும் மட்டுமே நீண்ட காலம் இட ஒதுக்கீடு தரவேண்டும். மற்றவர்களுக்கு ஒன்று இரண்டு ஜெநேரஷன்களுக்கு தரலாம். ஆனால் இது அரசியல் ரீதியாக சாத்தியம் அல்ல.
அரசியல் ரீதியாக ஒன்றுதான் சாத்தியம் – எல்லா ஜாதிகளையும் மெதுவாக பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் சேர்க்க வேண்டும். அதனால் பிள்ளைமார், கோனார், ரெட்டியார், நாயக்கர், யார் யார் எல்லாம் இப்போது பிற்படுத்தப்பட்ட ஜாதி லிஸ்டில் இல்லையோ அவர்கள் எல்லாரையும் சேர்க்கும் முயற்சிய நான் ஆதரிக்கிறேன். அப்புறம் இட ஒதுக்கீட்டுக்கு இரண்டு மூன்று ஜெனரேஷன்களில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்!
)
பின் குறிப்பு: தமிழ் நாட்டில் 3%தான் பிராமணர்கள் என்பது திராவிட இயக்கங்களின் மதிப்பீடு. திராவிட இயக்கங்கள் பிராமணர்களை பற்றி உண்மைதான் பேசுவார்கள் என்று அவர்களே கூட நம்புவதில்லை. உண்மையில் எத்தனை சதவிகிதம்? யாருக்காவது தெரியுமா? பிராமண சங்கத்தின் மதிப்பீடு என்ன என்று தெரிந்தால் அதற்கும் 3%க்கும் நடுவில் ஒரு சதவிகிதத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஜனவரி 2, 2009
கொஞ்ச நாள் முன்பு நடுநிலைமையான மதிப்பீடுகள் இல்லை என்று குறைப்பட்டுக்கொண்டேன். திடீரென்று நாமே எழுதினால் என்ன என்று தோன்றியது. பெரியாரை பற்றி முதலில் எழுதி இருந்தேன், இப்போது ராஜாஜி பற்றி. இவர்களை பற்றியும் எழுத விரும்புகிறேன்.
1. திரு.வி.க.
2. பாரதியார்
3. வ.உ.சி.
4. காமராஜ்
5. அண்ணா
6. கலைஞர்
7. எம்ஜிஆர்
மதிப்பீடு எழுதுவது கஷ்டமான காரியம். I am neither a professional, nor a scholar. நிறைய நேரம் பிடிக்கிறது. அதனால் எழுதுவேனா என்று நிச்சயமாக சொல்ல முடியாது.
வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, சத்யமூர்த்தி, ம.பொ.சி., சி. சுப்ரமண்யம், நாவலர், போன்றவர்களையும் பற்றி எழுத இஷ்டம்தான், ஆனால் அவ்வளவாக தெரியாது.
உங்கள் யாருக்காவது மதிப்பீடுகள் எழுத இஷ்டம் இருந்தால், வேறு யாராவது எழுதிய மதிப்பீடுகள் நெட்டில் இருந்தால் சொல்லுங்களேன்!
ஜனவரி 2, 2009
Posted by RV under
Indian Freedom Movement,
Tamil Nadu Politics | குறிச்சொற்கள்:
Annadurai,
C.r. narasimhan,
Congress,
DMK,
Gandhi,
Jinnah,
Kalki,
Kamaraj,
Kulak kalvi thittam,
Maulana azad,
Minoo masani,
Muthuramalingath thevar,
N.g. ranga,
Netaji,
Periyar,
Potti sriramulu,
Rajaji,
Swatantra party,
Thiru.vi.ka. |
[8] Comments
சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாருமே கிழவர்கள்தான். காந்திக்கு கிட்டத்தட்ட 80, ராஜாஜி, படேல் எழுபதுகளில், நேரு, ஆசாத் கிட்டத்தட்ட அறுபது. நேதாஜி, ஜின்னா இல்லை. காந்தி மறைந்த பின் நேருவுக்கு ஈடான தலைவர்கள் படேல், ராஜாஜி, ஆசாத் மட்டுமே. படேலுக்கு பாகிஸ்தான், முஸ்லீம் லீக் ஆகியவற்றின் மீது கசப்பு இருந்தது. அவருக்கு முஸ்லிம்கள் மீதே கசப்பு இருந்ததோ என்று சிலர் சந்தேகிக்கிறார்கள்.
நேரு இந்தியா சோஷலிச பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்பினார். படேல், ராஜாஜி போன்றவர்கள் காபிடலிஸ்ட்கள். நேருவுக்கு அவர்கள் இருவரும் மாற்று கருத்துகளை தயக்கம் இன்றி தெரிவித்தார்கள். நேருவின் லட்சியவாதம், படேலின் practicalness இரண்டும் சேர்ந்தது ஒரு நல்ல காம்பினேஷன். இந்த காலத்திலும் அவர்களும் தவறு செய்தார்கள்தான் – நேரு காஷ்மீர் விஷயத்தில் அனாவசியமாக குழப்பினார். அவர் திபெத்தை பற்றி கூக்குரல் இட்டிருக்கவேண்டும். படேல் கம்யூனிஸ்ட்களை ஹைதராபாத் விஷயத்தில் பயன்படுத்திக்கொண்டார். ஹைதராபாத் கைக்கு வந்ததும் கம்யூனிஸ்ட்களை வேட்டை ஆடினார்.
படேல் மறைந்ததும் ராஜாஜி அந்த இடத்தில் அமர்ந்தார். படேல் நேருவுக்குள் இருந்த போட்டி ராஜாஜி நேருவுக்குள் இல்லை. நேரு ராஜாஜியின் புத்தி கூர்மையை பெரிதும் மதித்தார். ராஜாஜியும் நேருவிடம் உரிமையுடன் மறுத்து பேசக்கூடியவர். அவர்கள் காம்பினேஷனும் நன்றாக செயல்பட்டிருக்கும். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவர் அன்றைய மெட்ராஸ் மாநிலத்துக்கு முதலமைச்சராக வந்தது துரதிருஷ்டமே. அப்போதெல்லாம் கம்யூனிஸ்ட்கள் என்றால் காங்கிரசாருக்கு பயம்தான். தெலிங்கானா புரட்சிக்கு பிறகு அது தவறு என்றும் சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட்கள் பயத்தால்தான் நேரு ராஜாஜியை மெட்ராசுக்கு முதலமைச்சராக போக சொன்னார்.
அவர் முதலமைச்சரான விதமும் சரியில்லை. முதலில் மேலவைக்கு நியமன உறுப்பினர் ஆகி முதலமைச்சராக ஆனார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்கு இருந்த எதிர்ப்பு அவருக்கு அச்சம் தந்ததா? நேருவின் வார்த்தையை மீறி காமராஜ் அவருக்கு விரோதமாக தேர்தலில் செயல்பட்டிருக்கமாட்டார். ஒரு வேளை கம்யூனிஸ்ட்கள் அவரை தேர்தலில் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்பட்டாரா? தெரியவில்லை.
முதலமைச்சராக நன்றாகவே செயல்பட்டார். நாட்டில் பஞ்சம் இருந்த சமயம் ரேஷனை ஒழிக்க தைரியம் வேண்டும். அவர் அப்படி செய்தது பதுக்கி இருந்த தானியங்களை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டுவந்தது. போலீஸ் ஸ்ட்ரைக்கை அருமையாக கையாண்டு அடக்கினார். நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். (ம.பொ.சி. இதை பற்றி பேசுகிறார்) ஆனால் அவர் பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணவிரதத்தை சரியாக கையாளவில்லை. ஸ்ரீராமுலுவின் இறப்பை தடுக்க அவர் ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
அவரது “குலக் கல்வி” திட்டம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை வாங்கி கொடுத்தது. மாணவர்களுக்கு பகுதி நேரக் கல்வி, மிச்ச நேரம் அவர்கள் பெற்றோரின் விருப்பப்படி என்பதுதான் அந்த திட்டம். பெற்றோரின் விருப்பப்படி என்றால் கிராமப்புற குழந்தைகள் அப்பாவின் தச்சுத்தொழிலிலோ, மீன் பிடிப்பதிலோ, வேறு எதிலோதான் உதவி செய்திருப்பார்கள். பிராமணர்களின் குழந்தைகள் எந்த தொழிலையும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் நிறைய மாணவர்கள் படித்திருக்கலாம். இதில் பெரிய தவறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. எழுபதுகளிலேயே என் நண்பன் தனுஷ் மாடு மேய்த்தவன். பள்ளிக்கு வரமாட்டான். மாலை நேரம் எங்களுடன் ஃபுட்பால் ஆட மட்டும் வருவான். மூன்று மணி நேரம்தான் பள்ளி என்றால் வந்திருக்கலாம். ஆனால் ஏழை மாணவர்களை பள்ளிக்கு வர வைக்க மதிய உணவு இதை விட நல்ல திட்டம் என்பதில் சந்தேகமில்லை. அவன் சாப்பாடு வரும் நாட்களில் காலையில் வந்து சாப்பிட்டுவிட்டு மதியம் போய்விடுவான். எல்லா நாட்களிலும் சாப்பாடு வராது என்று நினைவு. இப்போது யோசித்துப் பார்த்தால் உணவு ஏன் எல்லா நாட்களிலும் வரவில்லை என்று தெரியவில்லை.
ஆனால் ராஜாஜி கிராமப்புறங்களில் ஆறாயிரம் பள்ளிகளை மூடிவிட்டு பிறகு கிராமப்புறங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அதிகரிக்க இப்படி ஒரு திட்டம் கொண்டு வந்தார் என்று சொல்கிறார்கள். அந்தக் கால கட்டங்களில் பள்ளிகளை மூடுவது என்பது பெரும் தவறு. டோண்டு இப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்கிறார். அவரது ஆதாரம் கல்கி பத்திரிகைதான் – கல்கி அப்போதெல்லாம் உயிருடன் இருந்தார். அவர் ராஜாஜியின் கண்மூடித்தனமான ஆதரவாளர். அவர் நடுநிலைமையுடன் இதை பற்றி எழுதி இருப்பாரா என்பது எனக்கு சந்தேகம்தான்.
இதை பற்றி மேலும் விவரமாக படிக்க டோண்டுவின் பதிவு இங்கே
இந்த திட்டமும், காமராஜின் எதிர்ப்பும் அவரது முதலமைச்சர் பதிவுக்கு முடிவு தந்தன. அதற்கு பிறகு அவர் ஒரு பதவியும் ஏற்கவில்லை.
காமராஜின் மதிய உணவு திட்டம் ராஜாஜியின் இந்த “குலக் கல்வி” திட்டத்தை விட சிறந்தது. காமராஜ் கல்வி தருவதை அரசின் கடமையாக கருதி இருக்க வேண்டும். ராஜாஜி இதையும் எப்படி efficient ஆக நடத்துவது என்பதை தனது top priority ஆக கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் இதை “குலக் கல்வி” என்று திராவிட இயக்கங்கள் சித்தரித்தது தவறு. இது hindsight. இன்று சொல்வது சுலபம். அன்று அரசு வேலைகளில் பிராமண ஆதிக்கம் அதிகம். பல ஆண்டு காலங்களாக பிராமணர் அல்லாதவர்கள் அரசு வேலைகளை பெறாததை கண்டு வந்த அண்ணாவுக்கும் பெரியாருக்கும் அன்று இப்படி தோன்றி இருக்காவிட்டால்தான் ஆச்சரியம். அவர்கள் இதை தச்சன் பிள்ளைகள் தச்சனாகவே இருக்க செய்யும் சதி என்று நினைத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. காமராஜ் போன்றவர்களும் பெரியவரை கழற்றி விட இதுதான் சான்ஸ் என்று நினைத்திருப்பார்கள். காமராஜும் இது ஜாதிகளை perpetuate செய்யும் “குலக் கல்வி” என்று நினைத்திருந்தாலும் ஆச்சரியம் இல்லை. ராஜாஜியும் இதை விளக்க பெரிதாக முயற்சி செய்திருக்க மாட்டார். முஹமது பின் துக்ளக் படத்தில் ராஜாஜி போன்று வரும் ஒருவர் “உங்களுக்கு எது நல்லது என்று உங்களுக்கு தெரியாது, எனக்குத்தான் தெரியும்” என்று மக்களிடம் சொல்வார். ராஜாஜியின் பலவீனம் இதுதான் என்று நினைக்கிறேன்.
1955 ஆவடி காங்கிரஸில் சோஷலிசம்தான் தனது பாதை என்று காங்கிரஸ் அறிவித்தது. அந்த கால கட்டத்தில் சோஷலிசம்தான் சரியான பாதை என்றுதான் அநேகம் பேர் நினைத்தார்கள். ராஜாஜி காங்கிரசிலிருந்தும் நேருவிடமிருந்தும் மெதுவாக விலக ஆரம்பித்ததும் இப்போதுதான்.
இந்த கால கட்டத்தில் லைசன்ஸ் கோட்டா பெர்மிட் ராஜ் என்று சொல்ல தைரியம் வேண்டும். இன்று இது சரியாக படலாம் – ஆனால் அன்று பணக்காரர்கள் அயோக்கியர்களாகத்தான் படங்களிலும் கதைகளிலும் சித்தரிக்கப்பட்டார்கள். ஒரு எம்ஜிஆரும் சிவாஜியும் “நீ பணக்காரன், உன்னிடம் பாசம் கிடையாது” என்றுதான் வசனம் பேசுவார்கள். அரசாங்கம் பணக்காரர்களையும், தொழிலதிபர்களையும், நில சுவாந்தார்களையும் கட்டுப்படுத்தாவிட்டால் அவர்கள் எல்லாரையும் ஏமாற்றிவிடுவார்கள் என்று பரவலாக நினைத்த காலம் அது. அவர்களை கட்டுப்படுத்தத்தான் லைசன்ஸ், கோட்டா, பெர்மிட் எல்லாமே. அப்போது இது தவறு என்று சிந்திக்க அறிவு கூர்மை, தான் நினைத்ததை சொல்லும் நேர்மை எல்லாம் வேண்டும். இது ராஜாஜிக்கு இருந்தது. மினு மசானி, ரங்கா போன்றவர்களுடன் சேர்ந்து அவர் சுதந்திரா கட்சியை உருவாக்கினார். அது காங்கிரசுக்கும், சோஷலிசத்துக்கும் நல்ல மாற்றாக உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.
கட்சி ஆரம்பித்து அவர் பல காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார். முத்துராமலிங்கத்தேவருடன் கூட்டு, தி.மு.க.வுடன் கூட்டு எல்லாம் அப்படித்தான். என் பெரியப்பா சொல்லுவார் – அவர் மயிலை மாங்கொல்லையில் “நான் என் பூணூலை பிடித்துக்கொண்டு சொல்கிறேன், நீங்கள் எல்லாரும் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்கோ” என்று பேசினாராம். அவர் தன்னை பிராமண ஜாதியின் தலைவராக குறுக்கிக்கொண்ட செயலாகத்தான் இதை நான் காண்கிறேன். அவர் எப்படி ஒரு ஜாதிக்கு appeal செய்தார்? காங்கிரசை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
அவருடைய மகன் சி.ஆர். நரசிம்மன் எம்.பி. ஆக இருந்தார் போலிருக்கிறது. எனக்கு சி.ஆர். நரசிம்மனை பற்றி ஒன்றுமே தெரியாது. இது nepotismஆ, இல்லையா என்று டோண்டு போன்று தெரிந்தவர்கள் சொல்லலாம். டோண்டு சி.ஆர். நரசிம்மன் திறமை வாய்ந்தவர் என்றும் ராஜாஜி தன் குடும்பத்தவருக்கு உதவி செய்யாத விஷயம் மிகவும் notorious என்றும், இதில் எந்த விதமான nepotismஉம் இல்லை என்றும் சொல்கிறார்.
அவருடைய வியாசர் விருந்து, ராமாயணம் இரண்டும் அருமையான அறிமுக புத்தகங்கள். சரளமான நடை. ராமனின் தவறுகளுக்கும் கிருஷ்ணனின் தவறுகளுக்கும் எந்த சப்பைக்கட்டும் கிடையாது. (வில்லிபுத்தூரார் பாரதத்தை படித்து பாருங்கள், எவ்வளவு சப்பைக்கட்டுகள் கட்டப்படுகின்றன?) ஆனால் இந்த புத்தகங்களுக்காக அவர் சாகித்ய அகாடெமி பரிசை வாங்கிக்கொண்டது பெரும் தவறு. அது வியாசருக்கும், வால்மீகிக்கும் சொந்தமானது. அதே போல் காங்கிரஸில் இருந்த போதே அவருக்கு பாரத ரத்னா பரிசு விருது வழங்கப்பட்டது. பலருக்கு தியாகத்துக்கு விலை இல்லை, பென்ஷன் வாங்கக்கூடாது என்று சொன்னவர் தியாகத்துக்கு பரிசும் விருதும் வாங்கி இருக்கக்கூடாது. (டோண்டு சாவிக்கு அவர் இந்த அறிவுரை கொடுத்ததை குறிப்பிடுகிறார்)
தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது நேர்மை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது – சமீபத்தில் அவரது கொள்ளுப்பேத்திக்கு கலைஞர் அரசு உதவி வழங்கும் நிலைமை இருந்தது என்று படித்தேன். தன் வீட்டை ராஜாராம் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொடுத்தாராம். வானதி திருநாவுக்கரசிடம் தனக்கு ராயல்டி எல்லாம் முக்கியம் இல்லை, ஆனால் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை மலிவு விலையில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.
மொத்தத்தில் அவரது புத்தி கூர்மை இணையற்றது. சிந்தனையில் நேர்மை உள்ளவர். தனக்கு சரி என்று பட்டதை தனக்கு என்ன நஷ்டம் வருமோ என்று தயங்காமல் சொன்னவர். அருமையான நிர்வாகி. ஆனால் அவர் மாற்று கருத்துகளை அரவணைத்து செல்ல தெரியாதவர், தொண்டர்களுடன் நெருங்கி பழகாதவர், சில பரிசுகளையும் பட்டங்களையும் அவர் ஏற்றது கேள்விக்குரியது, காங்கிரசை வீழ்த்த அவர் சில காம்ப்ரமைஸ்கள் செய்து கொண்டார் என்று கருதுகிறேன். அவரது நிறைகள் அவரது குறைகளை விட மிக அதிகம், அவர் இந்தியாவின் வரப் பிரசாதம், அவர் சுதந்திர இந்தியாவில் மேலும் பதவிகளை வகிக்காது இந்தியாவின் துரதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.
அவரை பற்றி மேலும் படிக்க விரும்புவர்களுக்கு:
டோண்டுவின் பதிவுகள்
பத்திரிகையாளர் சுதாங்கனின் ஒரு பதிவு
ராஜாஜி மற்றும் காந்தியின் பேரரான ராஜ்மோகன் காந்தி எழுதிய Rajaji: A Life (நான் படித்ததில்லை)
நான் பயன்படுத்திய, சொல்ல மறந்த ஒரு source – திரு.வி.க.வின் வாழ்க்கை குறிப்புகள்
வேறு மதிப்பீடுகள், குறிப்பாக திராவிட இயக்கங்களின் பார்வையில் ராஜாஜியை பற்றி ஏதாவது மதிப்பீடு இருந்தால் அதை படிக்க ஆவலாக இருக்கிறேன்.
« முந்தைய பக்கம்