ஜனவரி 2009


படிப்பை பற்றி எழுதிய சில போஸ்ட்களை இங்கே ஒருந்கிணைத்திருக்கிறேன்.

எனக்கு ஐந்து ஆறு வயது இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு டெண்ட்டு கொட்டாய் திறந்தார்கள். முதல் படம் திருவருட்செல்வர். என் அப்பா ஊரில் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டர். அவருக்கு ஸ்பெஷல் இன்விடேஷன். ஏதோ துண்டை காணோம் துணியை காணோம் என்று சிவாஜி கதறி கதறி அழுவதுதான் ஞாபகம் இருக்கிறது.

அடுத்த படம் பாக்தாத் திருடன். வீட்டில் அழுது புரண்டு சண்டை போட்டேன். என் அம்மா யாரும் கூட வர மாட்டோம், பரவாயில்லை என்றால் போய்த்தொலை என்று கோபத்துடன் சொன்னாள். நானும் விட்டுக்கொடுக்காமல் போய்விட்டேன். சண்டைக் காட்சிகளின் போது பயம். என்னை யாராவது திரையிலிருந்து வெளி வந்து அடித்துவிடுவார்களோ என்று ஒரு வினோத பயம். பெஞ்ச்சுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டேன். யாருடா இந்த வீரத் திருமகன் என்று எங்கள் குடும்ப நண்பர் எட்டிப் பார்த்து நான் தனியாக வந்திருப்பதை அறிந்து கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து எனக்கு தைரியம் சொல்லிக் கொண்டே படம் பார்த்தார்.

அது அல்லவோ படம்? எம்ஜிஆர் கத்தியை சுழற்றுவதென்ன, வில்லன்களை துரத்துவதென்ன? அடி தூள்! அப்போதிலிருந்து ஒரு மூன்று நான்கு வருஷம் நான் தீவிர எம்ஜிஆர் ரசிகன். அதற்கு பிறகு சிவாஜி நடிப்பு, ஜெய்ஷங்கரின் ஜேம்ஸ் பாண்ட் சாகசங்கள், ரஜினி ஸ்டைல், கமலின் இளமை என்று ரசனை மாறினாலும் எம்ஜிஆரை மறக்க முடிந்ததில்லை.

நாங்கள் இருந்த ஊரின் பேர் லாடாகரனை எண்டத்தூர். விவசாய கிராமம். சில பெரிய “பண்ணையார்கள்”, முக்கால்வாசி கூலிகள். அனேகமாக எல்லாரும் ஏழைகளாகத்தான் இருந்திருக்க வேண்டும். எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலக்கப்பட்டதும் அந்த ஊரில் ஒரு ஊர்வலம் நடந்தது – ராத்திரி ஒன்பது மணிக்கு. எல்லாரும் வேலையை முடித்துக் கொண்டு, ராத்திரி சாப்பாடு ஆனதும் கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனார்கள். நூறு பேராவது போயிருப்பார்கள். வேலைகளை முடித்துக்கொண்டு எம்ஜிஆருக்கு நேரம் ஒதுக்கியது என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி. இவர்கள் எண்டத்தூரில் ராத்திரி ஒன்பது மணிக்கு ஊர்வலம் போனதால் என்ன ஆகி விடப் போகிறது? பேசாமல் படுத்து தூங்குவதை விட்டுவிட்டு ஊர்வலம் போக வேண்டுமென்றால் எம்ஜிஆர் அவர்கள் உள்ளத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்க வேண்டும்?

அப்புறம் 1977இல் – எமர்ஜென்சிக்கு பிறகு – வந்த தேர்தலில் எம்ஜிஆர் இந்திரா கூட்டணி. அதற்கு முற்போக்கு கூட்டணி என்று பேர். பத்து பனிரண்டு வயது சிறுவனான நான் அப்போது இருபது அம்சத் திட்டம் பற்றி பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பரிசெல்லாம் வாங்கி இருந்தேன். உண்மையிலேயே இருபது அம்சத் திட்டம் நல்ல விஷயம் என்று நம்பிய காலம். இது முற்போக்கு கூட்டணி என்றால் கலைஞர் இருப்பது பிற்போக்கு கூட்டணிதானே என்று யோசிக்கும் அளவுதான் என் மூளை இருந்தது. எம்ஜிஆருக்குத்தான் என் ஆதரவு.

எம்ஜிஆர் அரசியலில் வெற்றி அடைந்தவர். ஆனால் அவர் ஒரு சினிமாக்காரராக்கத்தான் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். அவர் ஆழ் மனதில் அவர் ஒரு அரசியல்வாதி இல்லை.

சிவாஜி நடிகர். பாலச்சந்தர் இயக்குனர். இளையராஜா இசை அமைப்பாளர். ஏவிஎம் செட்டியார் தயாரிப்பாளர். ஆனால் எம்ஜிஆர் சினிமாக்காரர் – நல்ல சினிமாக்காரர். அவரது ஆளுமை பெரியது.

1936இல் சினிமாவில் நுழைந்தாலும் கிட்டத்தட்ட பதினைத்து வருஷங்கள் சைடி ரோல்கள்தான். அப்புறம் ஒரு பத்து வருஷங்கள் ராஜா ராணி படங்களில் ராஜா. அதற்கப்புறம் சினிமா உலகுக்கே ஒரு பத்து வருஷங்கள் ராஜா. கடைசி ஐந்தாறு வருஷங்கள் பழைய பெருங்காய டப்பா வாசனையை வைத்து ஓட்டினார்.

அவர் நல்ல நடிகர் இல்லை. எர்ரால் ஃப்ளின் நல்ல நடிகரா? இருக்கலாம், ஆனால் ஒரு சாகசம் புரியும் நடிகராகத்தான் நமக்கு தெரியும். ஆனால் எர்ரால் ஃப்ளின் முக்கியமான நடிகர். அதே போல்தான் எம்ஜிஆரும்.

அவர் நல்ல இயக்குனரா? தெரியவில்லை. அவர் இயக்குனர் என்று வெளிப்படையாக சொல்லிக்கொண்ட படங்கள் மிகக் குறைவு. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இரண்டொரு படங்கள்தான். ஆனால் நாடோடி மன்னனுக்கு பிறகு அவரது படங்களை அவர்தான் இயக்குனர் என்று சொல்ல வேண்டும்.

அவர் நல்ல தயாரிப்பாளரா? சினிமாவை ஒரு தொழிலாக செய்தாரா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல தயாரிப்பாளர் செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவோ குறைத்து வரவை அதிகரிக்க முயற்சி செய்வார். எம்ஜிஆர் பணத்தை காரணம் இல்லாமல் செலவழிப்பார் என்று கேள்வி. ஷூட்டிங்குக்கு வந்துவிட்டு மேக்கப் ரூமை விட்டு வெளியேவே வரமாட்டாராம்.

சினிமாவை பொறுத்த வரை அவர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. தானும் அவ்வப்போது பணத்தை கொடுத்து கொடை வள்ளல் என்று பேர் வாங்கினார். அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.

அவரது சினிமா எதுவும் உலகத்தரம் வாய்ந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.

ஆனால் அவரது பல சினிமாக்கள் இன்று பழையதாகிவிட்டன. காவல்காரன், தர்மம் தலை காக்கும், சக்கரவர்த்தி திருமகள், ஜெனோவா, மலைக் கள்ளன், திருடாதே, நம் நாடு, உழைக்கும் கரங்கள், நேற்று இன்று நாளை மாதிரி படங்களை இன்று பார்க்க முடிவதில்லை. போர் அடிக்கும். எழுபதுகளில் அவர் நடித்த அநேக படங்கள் மட்டமானவை. பெண்களை கீழ்த்தரமாக – காயா இது பழமா என்று தொட்டுப் பார்க்கட்டுமா? – சித்தரித்தன.

தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை. சிவாஜி கூட அவரது பாணியில் நடிக்க முயன்றிருக்கிறார்.

அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார். நடிகருக்கு மந்திரி பதவி கொடுத்திருந்தால் அவர் எப்போதும் பின்னணியிலேயே இருந்திருப்பார். மந்திரி பதவி கொடுக்காததும், அவரை அமுக்க மு.க. முத்து முயன்றதும் கலைஞரின் தப்புக் கணக்கு. நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். அண்ணாயிசம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.

முதல்வரான முதல் முறை கலைஞர் மாதிரி ஊழல் செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தார். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று தோன்றியது. கலைஞர் பேசாமல் இருந்திருந்தால் அடுத்த முறை அவர் தோற்றிருக்கலாம். கலைஞரின் அடுத்த தப்புக் கணக்கு அவரது அரசை டிஸ்மிஸ் செய்ய வைத்தது. சிம்பதி அலை கிளம்பி அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். லஞ்சமும் வந்து விட்டது. இட ஒதுக்கீட்டை அதிகரித்து என் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டார். கலைஞருக்கு விட்ட சவாலில் ஜெயித்தாகிவிட்டது. நிர்வாகத்தில் பெரிதாக இண்டரஸ்ட் இல்லை. அவருக்கு சொந்தமான உலகம் சினிமாதான். என்ன செய்வது? ஒன்றுமே செய்யவில்லை. கட்சியை நடத்த, கட்சிக்காரர்களை ஒரு கட்டுக்குள் வைக்க, தேர்தலில் செலவழிக்க என்று ஊழல் பணம் வருகிறது. மிச்ச நேரத்தில் டிவி பார்த்துக்கொண்டும், கலைஞரை மட்டம் தட்டிக் கொண்டும், உசுப்பி விட்டுக் கொண்டும், சுப்பு+துரைமுருகன்+ரஹ்மான் கான் கூட்டணியை சட்ட மன்றத்தில் சமாளித்துக்கொண்டும் காலத்தை ஓட்டினார். மூன்றாவது ஆட்சி காலத்திலோ உடல் நலம் மிக மோசமாக இருந்தது. அவர் வெறும் பொம்மை என்று தோன்றியது.

அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.

அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத தட்டையான கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.

அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். ஆனால் அவருக்கு உண்மையில் அரசியலிலும் நிர்வாகத்திலும் அவ்வளவு உற்சாகம் இருந்ததில்லை. தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல். அவர் அரசியலில் வெற்றி அடைந்திருந்தாலும் அவர் தமிழ் நாட்டை பின்னடைய செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

என் பெரிய பெண் ஸ்ரேயாவுக்கும் எனக்கும் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல்.

நாங்கள் அவளது பள்ளியிலிருந்து நேராக ஜிம்னாஸ்டிக்ஸ் க்ளாசுக்கு போய்க்கொண்டிருந்தோம். அவளுக்கு ஒரு ஃப்ளாஸ்கில் பாலும் கொஞ்சம் பிஸ்கட்களும் கொண்டு போயிருந்தேன்.

நான்: ஸ்ரேயா, பாலை குடி.
ஸ்ரேயா: போதும் டாடி!
நான்: ஸ்ரேயா, வம்பு பண்ணாம ஒழுங்கா பாலை குடிச்சுடு
ஸ்ரேயா: Daddy, I will drink it after the class.
நான்: ஸ்ரேயா, ஒன்னரை மணி நேரம் ஜிம் க்ளாஸ் இருக்கு. அப்புறம் பசிக்கும். பாலை குடிச்சுடு.
ஸ்ரேயா:I am full, daddy!
நான்: ஸ்ரேயா, டெய்லி உன் கூட இதே பாடா போச்சு. ஒழுங்கா பால குடி, இல்லாட்டி அப்பாவுக்கு கோவம் வந்துடும்.
ஸ்ரேயா: But I have no space in my stomach, daddy! I can’t drink any more!
நான்: ஸ்ரேயா, உன் நல்லதுக்குத்தான் சொல்லறேன். அப்புறம் பசிக்கும். பாலை குடி.
ஸ்ரேயா: Aaaaaargh! I can’t drink any more! I am full! Aaaarrnnn! Please, daddy! No more! I am completely full! Aaaannggh!! I can’t drink even one more drop!
நான்: (மிகுந்த கடுப்புடன்) உன் கூட மாரடிக்க முடியாது. எக்கேடோ கெட்டுப் போ! குடிச்சா குடி இல்லாட்டி போ!
ஸ்ரேயா: Can I have some cookies?

ஜெயமோகன்

அந்திமழை

முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கடராமன் மரணம் அடைந்தார். ஆர்வி என்ற பெயரில் புகழ் பெற்றவர் அவர் ஒருவர்தான் என்று நினைக்கிறேன்.

ஆர்வி தமிழ் நாட்டின் தொழில் துறையில் சாதித்தவர். சிவகாசி, கோயம்புத்தூர், திருப்பூர், ஹோசூர் போன்ற இடங்களில் தொழில் வளம் பெற அவர் ஒரு முக்கிய காரணம். அவர் காலத்து சிந்தனைகளின் படி அவர் அரசு சார்ந்த தொழில் நிறுவனகளை உருவாக்கினார். தமிழ் நாடு அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.

அவர் மத்திய அமைச்சராக ஏதோ குப்பை கொட்டினார். பிரமாதமாக ஒன்றும் சாதித்து விடவில்லை.

ஜனாதிபதியாக அவர் ராஜீவ், வி.பி.சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ் என்று நான்கு பிரதமர்களைப் பார்த்தவர். ராஜீவிடம் அவர் எதிர்பார்த்த மெச்சூரிடி இல்லை என்று எழுதி இருக்கிறார்.

அவர் எழுதிய மை ப்ரசிடென்சியல் இயர்ஸ் என்ற புத்தகத்தை தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது அவரது வாழ்வின் minutiae – ஜன்னல் திரைகளை மாற்றப்பட்டன, ரோஜா செடிகள் வைக்கப்பட்டன என்ற மாதிரி – பற்றி வெகு விபரமாக எழுதி இருப்பார். இதில் அடுத்தவர்களுக்கு என்ன சுவாரசியம் என்று அவர் யோசிக்கவே இல்லை.

என் மாமனார் ஏதோ ஒரு தேர்தலில் அவருக்காக வேலை பார்த்திருப்பதாக ஒரு முறை சொன்னார்.

இந்தியாவில் ஜனத்தொகை நூறு கோடியை தாண்டிவிட்டது. இந்த விருதுகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் கோடிப் பேருக்கு ஒரு விருது கொடுக்கப்படுகிறது போல. சாதனையாளர்களை கவுரவப்படுத்துவது நல்ல விஷயம். சில தவறுகள் இருந்தாலும். ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுத வேண்டும். இப்போதைய நிலையைப் பார்த்தால் எல்லாரும் வாழ்த்து சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். கொடுக்கப்பட்டது சரி, தவறு என்று விமரிசனங்களை வைக்க வேண்டும், அப்படி செய்தால்தான் எதிர்காலத்தில் இந்த விருதுகள் கொடுக்கப்படுவது நன்றாக செயல்படும்.

விருது பெற்றவர்கள் லிஸ்டை பார்த்தேன். எனக்கு தெரிந்தவர்கள் வெகு சிலரே.

சுந்தர்லால் பஹுகுணா, பத்ம விபூஷன்: சிப்கோ இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்ம விபூஷன் விருது கொடுக்கப்பட்ட வேறு எவரையும் எனக்கு தெரியாது.

தெலுங்கு நடிகர் கிருஷ்ணா, பத்ம பூஷன்: இது கொஞ்சம் டூ மச்சண்டி. கிருஷ்ணாவின் சாதனை என்னங்க? அவருக்கு எதுக்கு ஒரு அவார்ட்? ஒரு வேளை முன்னூறு படங்களுக்கு மேல் நடித்ததற்கு அவார்டா?

ஹிந்தி திரைப்பட பின்னணி பாடகி, ஷம்ஷாத் பேகம்: ஐம்பதுகளில் பிரபலமான திரைப்பட பின்னணிப் பாடகி. எனக்கு மிகவும் பிடித்த குரல்களில் ஒன்று. ஒரு மாதிரி கனமான குரல். ஓரளவு பரவை முனியம்மாவை நினைவு படுத்தும் குரல். ஆண்களில் திருச்சி லோகநாதனை நினைவுபடுத்தும் குரல். கபி ஆர் கபி பார், லேக்கே லேக்கே பெஹ்லா பெஹ்லா ப்யார், பச்பன் கே தின் புலா ந தேனா போன்ற பல புகழ் பெற்ற பாடல்களை பாடியவர். ஹிந்திப் பட உலகில் அவரது சாதனை தமிழ் பட உலகில் திருச்சி லோகநாதனுக்கு ஏறக்குறைய சமமானது. ஹிந்தி பாடல்களின் தாகம் அதிகம், அதனால் அவருக்கு விருது கொடுக்கப்பட வேண்டியதுதான்.

ஆனால் எம்எஸ்வி, இளையராஜா போன்றவர்களுக்கு ஒரு பத்மஸ்ரீ விருது கூட கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அது ஒரு பெரிய அநியாயம்.

தனஞ்சயன், சாந்தி தனஞ்சயன் தம்பதியினர், பத்ம பூஷன்: இவர்களை இங்கே சில நண்பர்களின் அரங்கேற்றத்தில் பார்த்திருக்கிறேன். நடனம் பற்றி எனக்கு தெரியாது. விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

கணபதி ஸ்தபதி, பத்ம பூஷன்: இவர்தான் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை கட்டியவரோ? விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

சி. கே. பிரகலாத்: இவர் ஒரு மானேஜ்மென்ட் குரு. வறுமை ஒழிப்பை பற்றி பாட்டம் ஆஃப் த பிரமிட் என்ற ஒரு புகழ் பெற்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். நான் படித்ததில்லை. அமெர்க்காவில் வாழ்கிறார். விருது பற்றி கருத்து சொல்ல முடியாது.

ஜெயகாந்தன்: சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரை பற்றி தனியே ஒரு போஸ்ட் எழுதி இருக்கிறேன்.

ராமச்சந்திர குஹா: எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் கிரிக்கெட் பற்றி எழுதுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அருமையான புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஆனால் நான் இவருக்கு பத்மஸ்ரீ விருதுதான் சிபாரிசு செய்திருப்பேன்.

சாம் பிட்ரோடா: இந்தியாவில் டெலிகம்யூனிகேஷன் புரட்சியின் சிற்பிகளில் ஒருவர். சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

ப்ரொஃபசர் கைலாத்: இருபது வருஷங்களுக்கு முன் நான் கண்ட்ரோல் சிஸ்டம்சில் எம்.டெக். படிப்பதாக பொய் சொல்லிக்கொண்டிருந்த போது இவரது புத்தகங்களையும் பேப்பர்களையும் புரட்டி இருக்கிறேன். அப்போதே புரியவில்லை. ஆனால் விருது கொடுக்கப்பட வேண்டியதுதான். இவர் அப்போதே ஒரு என்ஆர்ஐ.

சரோஜினி வரதப்பன்: சமூக சேவகி. முன்னாள் முதலமைச்சர் பகதவத்சலத்தின் மகள் என்று நினைக்கிறேன். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் அம்மாவோ? எனக்கு இவர் என்ன சேவை செய்தார் என்று தெரியாது, அதனால் விருது பற்றி ஒன்றும் சொல்ல முடியாது.

அபினவ் பிந்த்ரா: துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றவர். விருது கொடுக்கப்பட வேண்டியதுதான்.

மொத்தம் முப்பது பேருக்கு பத்ம பூஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. சேஷாத்ரி என்பவர் தமிழ்நாட்டுக்காரர். மாத்சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் தலைவராம்.

திலகன், பத்மஸ்ரீ: திலகனை எனக்கு தமிழ் படங்கள் மூலமாகத்தான் தெரியும். அதை வைத்து அவருக்கு ஒரு விருதும் கொடுத்திருக்க முடியாது. அவர் மலையாளப் படங்களில் என்ன சாதித்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது.

விவேக், பத்மஸ்ரீ: இவரைப் பற்றி தனியாக ஒரு போஸ்ட் எழுதி இருக்கிறேன்.

ஐஸ்வர்யா ராய்: கொடுக்கலாம்.

அக்ஷய் குமார்: அநியாயம்.

அருணா சாயிராம்: கொடுக்க வேண்டியதுதான்.

ஹெலன்: காபரே நடனக்காரியாக புகழ் பெற்றவருக்கு அவார்டா என்று யோசிக்காதீர்கள். அவர் ஒரு காலத்தின் பிரதிநிதி. அவருக்கு கொடுக்க வேண்டியதுதான்.

ஹிருதயநாத் மங்கேஷ்கர்: கொடுக்கலாம்.

தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம்: இவருக்கு எதற்கு விருது என்று எனக்கு புரியவில்லை.

ஐராவதம் மஹாதேவன்: சரித்திர ஆராய்சியாளராகத்தான் எனக்கு இவரை தெரியும். மிகத் தகுதியானவர்.

ஹிந்தி பின்னணி பாடகர் குமார் சானு: கொடுக்கலாம்.

டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி: இவர் “இந்தியன் ஃபில்ம்” என்ற புத்தகத்தை எழுதியவரா? எனக்கு இவரைப் பற்றி தெரியவில்லை.

ரேடியோ புகழ் அமீன் சயானி: இவரது குரல் ஒரு காலத்தில் மிக பிரபலாமானது. கொடுக்கலாம்.

கிரிக்கெட் வீரர்கள் டோனி, ஹர்பஜன் சிங்: கொடுக்கலாம்.

ஸ்னூக்கர் வீரர் பங்கஜ் அத்வானி: கொடுக்கலாம்.

மொத்தம் 93 பேருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டை சேர்ந்த டாக்டர் சிவராமன், டாக்டர் நூர்தீன், டாக்டர் சடகோபன், கிருஷ்ண குமார், சக்திவேல் ஆகியவர்களை பற்றி தெரியவில்லை.

ஜெயகாந்தனுக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் அவரது தாக்கம் பெரியது. அக்னிப்ரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், கங்கை எங்கே போகிறாள் என்ற மூன்று அம்ச சிறுகதை/நாவல்கள் மிகவும் புகழ் பெற்றன. பாரீசுக்கு போ, ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்றவையும் நல்ல நூல்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. அவரது ஜெய ஜெய சங்கர சீரிஸ் நான் சிறு வயதில் படித்த போது பிடித்திருந்தது.

அவரது சினிமாக்களும் இன்னும் பேசப்படுகின்றன.

அவரது கதைகளில் லெக்சர் அடிக்கும் தோரணை தெரியும். அது அவரது பலவீனம். சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற கதைகளில் அளவுக்கு அதிகமாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (இது எழுபதுகளில் எழுதப்பட்ட கதை, இப்போது கூட ஆங்கிலம் அதிகமாக தெரிகிறது.)

இது பொருத்தமானவருக்கு கொடுக்கப்பட்ட விருது. தமிழக அரசுக்கு பாராட்டுக்கள். மேலும் அசோகமித்திரன், பூமணி, கி. ராஜநாராயணன், ஜெயமோகன் போன்றவர்களும் தகுதியானவர்களே. அவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

பின்குறிப்பு: ஐராவதம் மகாதேவனுக்கும் பத்மஸ்ரீ கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் சரியானவருக்கு கொடுக்கப்பட்ட விருது.

Jeyamohan’s has started writing in Indian express again. I didn’t know he wrote for Indian Express in the past. His latest article is here.

I am becoming a fan of Mr.Jeyamohan (thanks to RV). I felt exactly the same way as Mr. Jeevanantham felt. Some of the scenes in “Slumdog Millionaire” is similar to “Eezaam Ulagam”.  I am afraid that “Slumdog Millionaire” and “Eezaam Ulagam” are mutually exclusive in creating the shock in viewer’s/reader’s mind. One is going to steal the impression of the shock or awe or both that would be created in the minds of viewers/readers from the other.  That depends on what they viewed/read second, as they would have been already introduced to begging as industry  and beggars as commodity in the first. Having said that, I would say still both has the capacity to create a melancholic impression. However the credit should go to Mr.Jeyamohan as he wrote “Eezaam Ulagam” almost half a decade ago.


ஜெயமோகனின் விலாங்கு என்ற போஸ்டை படித்த போது ராகுல சாங்க்ரித்யாயன் எழுதிய பிரவாஹன் என்ற கதை நினைவு வந்தது.

பிரவாஹன் ஒரு ராஜகுமாரன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறு பிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞாவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை.

இந்த கதை வோல்காவிலிருந்து கங்கை வரை என்ற ஒரு அருமையான கதை தொகுப்பில் இருக்கிறது. “ஆரியர்கள்” மெதுவாக இந்தியாவிற்குள் நுழைந்து கங்கைக்கரை வரை பரவுவதை பல வேறு கால கட்டங்களில் நடக்கும் சிறு கதைகள் மூலம் விவரிக்கிறார். முதல் கதை கூட்டம் கூட்டமாக வேட்டையாடி வாழும் காலத்தில் நடக்கிறது. கடைசி கதை 1942இல் ஒரு கம்யூனிஸ்ட் ராணுவத்தில் சேர்ந்து போராடுவதுடன் முடிகிறது. நியு சென்சுரி புக் ஹவுஸ் போன்றவை ஒரு காலத்தில் வெளியிட்டன. இப்போது நியு சென்சுரி புக் ஹவுஸ் இருக்கிறதோ இல்லையோ?

இன்று பெரியார் படத்தை பற்றி ஒரு விமர்சனம் எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 59 other followers