“அவார்டா கொடுக்கறாங்க?” எங்களுடைய இன்னொரு ப்ளாக். நாங்கள் சினிமா பற்றி இங்கே எழுதுகிறோம். பொதுவாக பழைய சினிமா பற்றி, அபூர்வமாக புது சினிமாக்கள் (1975-க்கு பிறகு வந்ததெல்லாம் எங்களுக்கு புது சினிமா) பற்றியும் எழுதுவோம்.

தங்கர் பச்சான்

தங்கர் பச்சான்

தங்கர் பச்சானின் இரண்டு சிறுகதை தொகுதிகளையும் ஒரு நாவலையும் நான் இது வரை படித்திருக்கிறேன். குடி முந்திரி, வெள்ளை மாடு, ஒன்பது ரூபாய் நோட்டு. ஒ.ரூ. நோட்டு நேற்று இரவுதான் தூக்கம் வராமல் படிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சிலே படித்து முடித்தேன்.

ஒன்பது ரூபாய் நோட்டு நல்ல நாவல். தமிழிலே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. ஒரு கணத்தில் தன் மகன்களிடம் சண்டை போட்டுக்கொண்டு ஊரை விட்டும் போகும் மாதவர் தான் சேர்த்த சொத்து அத்தனையும் தன் பிள்ளைகள் கட்டி காக்காததை பார்த்துவிட்டு சாகிறார். மிக சரளமான நடை. கடலூர் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமம் நம் கண் முன் கொண்டு வருகிறார். படிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறேன். இந்த படத்தை இப்போது தேடி பிடித்து பார்க்க வேண்டும்.

குடி முந்திரியில் டைட்டில் கதை பிரமாதம். விவசாயக் குடும்பம். ஒரு பையனுக்கு ஷூ வாங்க வேண்டும். அவ்வளவுதான் கதை. இதை அற்புதமாக சொல்லி இருப்பார். தமிழின் சிறந்த கதைகளில் ஒன்று. நான் என்றாவது ஒரு தமிழ் கதை ஆந்தாலஜி தொகுத்தால் இந்த கதை நிச்சயம் இடம் பெறும்.

வெள்ளை மாடு புத்தகத்திலும் டைட்டில் கதை அருமை. வீட்டில் ஆசை ஆசையாக வளர்த்த வெள்ளை மாட்டை விற்க வேண்டி இருக்கிறது. பிறகு ஒரு நாள் அதை பார்க்கிறார்கள். பிரேம்சந்த் எழுதிய அற்புதமான “தோ பைலோன் கி கஹானி” கதையை நினைவுபடுத்துகிறது. (பிரேம்சந்த் கதை டைட்டில் ஏறக்குறையதான் ஞாபகம் இருக்கிறது.)

இரண்டு புத்தகம் என்னிடம் இருக்கிறது. சவுத் பே, ஈஸ்ட் பே பகுதியில் உள்ளவர்கள் இரவல் வாங்கி படிக்கலாம். வெள்ளை மாடு ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைக்கும்.

இன்று இந்த தளத்தின் பேருக்கு தகுந்தாற்போல தோன்றியதை எல்லாம் எழுதி இருக்கிறேன்.

துக்ளக் இப்போது நெட்டில் கிடைக்கிறது. வருஷ சந்தா ரூபாய் 900. என்னை போல நீங்களும் கஞ்சனாக இருந்தால் பழைய இதழ்களை ஓசியில் படிக்கலாம். 2006-இலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்னால் வரை ஓசி. வைக்கோவின் பேச்சு ராண்டமாக ஒரு இதழை திறக்க, அங்கிருந்து கிடைத்ததுதான். என்ன ஒரே சோகம் என்றால் பழைய இதழ்களிலும் சோவின் கேள்வி பதில் கிடைப்பதில்லை. நான் துக்ளக்கில் தேடுவது அது ஒன்றுதான்.

எழுத்தாளர் பா.ராகவன் தன பழைய கதை ஒன்றை இப்போது நெட்டில் வெளியிடுகிறார். கால் கிலோ கனவு, அரை கிலோ காதல் என்று.

உரையாடல் போட்டிக்கு ஒரு கதை எழுதி இருந்தேன். போட்டிக்கு வந்த எல்லா கதைகளையும் இங்கே படிக்கலாம்.

நீங்கள் சான் ஃப்ராந்சிஸ்கோ ஃப்ரீமான்ட் அருகே வசிப்பவரா? கடுமையான கோடை காலத்தை சமாளிக்க இது அருமையான வழி. நேற்று என் பெண்ணின் பிறந்த நாளை இந்த வாட்டர் பார்க்கில்தான் கொண்டாடினோம். குழந்தைகளோடு போக நல்ல இடம்.

உங்கள் தளம் எவ்வளவு பாப்புலர் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா? இங்கே பாருங்கள்.

வைக்கோவின் ஒரு பேச்சை சமீபத்தில்தான் படித்தேன். இது 2006-07 காலத்தில் ஆற்றப்பட்ட சொற்பொழிவு. மனிதருக்கு படிப்பில் நிறைய இண்டரஸ்ட் இருக்கிறது. கட் பேஸ்ட் செய்ய முடியாததால், என் வார்த்தைகளில் அவரது பேச்சு.

தமிழ் நாட்டில் கதைகள் எப்போது வந்தது? 1822-இல் சென்னை கல்வி சங்கம் வீரமாமுனிவரின் பரமார்த்த குரு கதைகளை முதன் முதலாக புத்தகமாக அச்சேற்றி வெளியிட்டது. 1826-இல் வில்லியம்பாக்கம் தாண்டவராய முதலியார் பஞ்ச தந்திரக் கதைகளை வெளியிட்டார். 53-இல் ஈசாப் கதைகள், 56-இல் மதன காமராஜன் கதைகள், 58-இல் மயில் ராவணன் கதைகள், 69-இல் 32 பதுமை கதைகள். 86-இல் பண்டித நடேச சாஸ்திரி தொகுத்த திராவிட பூர்வ கால கதைகள்.

1840,50,60-களில் தெலுங்கில் மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகள் பதிப்பிக்கப்பட்டன. அவற்றை உதய தாரகை என்ற பத்திரிகையில் சதாசிவம் பிள்ளை தமிழில் மறுபதிப்பு செய்தார். 92-இல் சாமிநாத ஐயரின் விவேக சிந்தாமணி வர ஆரம்பித்தது. அதில் மாதவய்யா, டி.எஸ். ராஜம் போன்றவர்கள் எழுதினார்கள்.

1910-இல் ஹிந்து பத்திரிகையில் மாதவய்யா வாரம் ஒரு கதை எழுதினர். 12-இல் ஹிந்துவே அதை குசிகர் குட்டி கதைகள் என்று வெளியிட்டது. (மாதவய்யா தமிழில் எழுதினாரா, ஆங்கிலத்திலா? ஹிந்துவில் தமிழ் கதைகள் வந்தனவா?) 22-இல் கல்கி கடலூர் சிறைச்சாலையில் இருந்து விமலா என்ற நாவலை எழுதினர் (கேள்விப்பட்டதே இல்லை) 23-31 காலத்தில் நவசக்தி, விமோசனம் ஆகிய பத்திரிக்கைகளில் எழுதினார். (அவரது விமோசனம் அனுபவங்கள் பற்றி இங்கே.) 31-41 வரை விகடன். பிறகு கல்கி பத்திரிகை.

33-இல் மணிக்கொடி ஆரம்பித்தது. புதுமைப்பித்தன், கு.ப.ரா., வ.ரா., பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா, டி.எஸ். சொக்கலிங்கம், மணிக்கொடி ஸ்ரீனிவாசன் இன்னும் பலர் மணிக்கொடி தலைமுறையை ஸ்தாபித்தார்கள்.

வைக்கோவின் கல்லூரி காலத்தில் அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் அகிலன், மு.வ., கல்கி, காண்டேகர். பிறகு அண்ணா. அண்ணாவின் கொக்கரக்கோ என்ற கதை விகடனில் வந்தது. 49-இல் செவ்வாழை என்ற புகழ் பெற்ற கதை எழுதப்பட்டது. (ப்ராபகண்டாதான், ஆனால் படிக்கக் கூடிய நல்ல கதை). இது பிற்காலத்தில் ரஷிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

அண்ணாவைத் தவிர கலைஞர், ராதாமணாளன், ஆசைத்தம்பி, டி.கே. ஸ்ரீனிவாசன், தில்லை வில்லாளன், எஸ்.எஸ். தென்னரசு ஆகிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் வைக்கோவின் கண்ணில் குறிப்பிட வேண்டியவர்கள். விகடனில் ஜெயகாந்தனின் முத்திரை கதைகள் வந்தபோது நம்முள் பலரும் சுஜாதா தொடர்கதை எப்போது வரும் என்று காத்திருந்தது போல விகடன் எப்போது வரும் என்று வைக்கோவும் தன் மாணவப் பருவத்தில் காத்திருந்திருக்கிறார்.

இது ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. போட்டிக்கான சுட்டி இங்கே.

காதல் என்றாலே வீட்டில் பிரச்சினைதான். அதுவும் என்னை விட வயதில் பெரிய, விவாகரத்து செய்த, கம்மா ஜாதி தெலுங்குப் பெண்ணை காதலித்தால்?

மைலாப்பூரில் அக்மார்க் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன் நான். ஒரே பையன். தினமும் கௌஸல்யா சுப்ரஜா ராமா என்று டேப்பில் கேட்டுத்தான் திருப்பள்ளி எழுச்சி நடக்கும். ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு போகாத நாள் கிடையாது. பி.எஸ். ஹைஸ்கூல், கிண்டி எஞ்சினியரிங் காலேஜ், டிசிஎஸ்ஸில் வேலை. பாடி ஷாப்பிங்கில் அமெரிக்கா வரும் வரைக்கும் ரங்கநாதனை சேவிக்கவும், வெங்கடாசலபதியை சேவிக்கவும்தான் சென்னையை விட்டு வெளியே போயிருக்கிறேன்.

எனக்கு காண்ட்ராக்ட் கிடைத்த கம்பெனியில் மாலா வேலை செய்துகொண்டிருந்தாள். பார்த்த முதல் நாளே காட்சி பிழை போல எல்லாம் உணரவில்லை. ஜப்பானியர்களும், சீனர்களும் பேசும் ஆங்கிலம் கொஞ்சமும் புரியாமால் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்த என் மேல் பரிதாபப்பட்டு கொஞ்சம் வேலை சொல்லிக் கொடுத்தாள். இரண்டு வாரம் கழித்து டீம் லன்ச்சுக்கு போனபோது சோயா பீன்ஸ் டோஃபுவை சாப்பிட்டு என் முகம் போன போக்கை பார்த்து சிரித்துவிட்டு அடுத்த நாள் எனக்கு புளியோதரை செய்து கொடுத்தாள். பிறகு அவள் டைவர்ஸ் கதை எல்லாம் தெரிந்தது. அவள் துணிச்சலில், அழகில், உதவி செய்யும் நல்ல மனதில், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று நேரடியாக பேசும் குணத்தில், நான்தான் மயங்கிப் போய் அவள் பின்னால் லோ லோ என்று அலைந்தேன். அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னபோது, அவள் தியாகச் சுடர் மாதிரி எல்லாம் வசனம் பேசவில்லை. ரொம்ப சிம்பிளாக எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது, ஆனால் உன்னால் உன் ஆச்சாரமான குடும்பத்தை சமாளிக்க முடியுமா என்று டைரக்டாக கேட்டாள். முடியும் என்று அப்போது சொல்லிவிட்டேன், இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.

காண்ட்ராக்ட் முடிந்து இந்தியா வந்தாகிவிட்டது. ஸ்கைப் வாழ்க! தினமும் பேசிக் கொள்கிறோம். மாலா பிரஷர் கொடுக்கவில்லைதான், ஆனால் எனக்கு அவள் வேண்டும். இப்பவே வேண்டும். சீக்கிரம் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் அம்மா அப்பாவிடம் பேச தைரியம் இல்லை. எப்படி சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் மாலா இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை.

அப்பாவையாவது சமாளித்துவிடலாம். அவர்தான் நான் திருட்டு தம் அடிப்பதை பார்த்தாலும் அதை அம்மாவிடம் போட்டுக் கொடுக்காதவர். தெருவில் சண்டை போட்டு அடி வாங்கி வந்தால் அவர்தான் மருந்து போட்டிருக்கிறார். கம்பெனி பார்ட்டியில் பியர் குடித்துவிட்டு வந்தபோது அம்மாவுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டவர் அவர்தான். கோபப்படுவார்தான், வருத்தப்படுவார்தான், ஆனால் மன்னித்தும் விடுவார்.

அம்மாவை சமாளிப்பதுதான் முடியாத காரியம். ஆசாரம்தான் அம்மாவின் உயிர் மூச்சு. வாரத்தில் ஆறு நாள் விரதம். ராமன், கிருஷ்ணன், நரசிம்மன், லக்ஷ்மி, பூமாதேவி எல்லாருக்கும் விரதம். பலராமனுக்கும் கோவில் இருப்பது தெரியாது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் பலராமனுக்கும் விரதம் இருப்பாள். கோவிலுக்கு போனால் லேசில் வெளியே வரமாட்டாள். ஆஹா பெருமாள் முகத்தில் என்ன தேஜஸ் என்று பரவசப்பட்ட ஆரம்பித்தால் கூட போகிறவன் தாவு தீர்ந்துவிடும். அனுமார் முகத்திலும் அழகை காணும் அளவுக்கு பக்தி. வீட்டில் காப்பியை நான் தூக்கித்தான் குடிக்க வேண்டும். அதுவும் காலை குளித்து முடித்து ஸ்லோகம் சொன்னால்தான் காப்பி. நான் சந்தியாவந்தனம், பரிசேஷணம் எல்லாம் செய்வதில்லை என்று ஒரே வருத்தம். நான் அமெரிக்கா போகும்போது நான்-வெஜிடேரியன் உணவு சாப்பிடக் கூடாது என்று சத்தியம் எல்லாம் செய்ய வேண்டி இருந்தது. தம், தண்ணி எல்லாம் என் பிராமண தேஜசின் அருகே வரமுடியாது என்ற நம்பிக்கையால் அதை பற்றி எல்லாம் சத்தியம் வாங்காதது நமக்கு வசதியாகிவிட்டது.

ஒரு முறை என் அப்பாவுக்கு கை ஒடிந்துவிட்டது. என்ன காரணத்திலோ புத்தூர் கட்டு போட்டுக்கொண்டார். தினமும் வீட்டுக்கு ஒரு நாட்டு வைத்தியர் வந்து முட்டையை உடைத்து கொதிக்கவிட்டு என்னவோ தயார் செய்து கட்டு போடுவார். அம்மா அவருக்கு தனியாக பாத்திரம், ஸ்டவ் எல்லாம் தந்திருந்தாள். அப்பாவுக்கு கை சரியாக போனதும் பாத்திரம் மட்டுமல்ல, ஸ்டவ்வும் குப்பைத்தொட்டிக்கு போய்விட்டது. முட்டை வேக வைத்த ஸ்டவ் வீட்டுக்குள்ளே வந்தால் அம்மாவின் ஆசாரம் தாங்காது!

உண்மையை சொல்லப் போனால் அம்மாவுக்கும் மாலாவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் தைரியசாலிகள். எந்த கஷ்டம் வந்தாலும் சமாளிப்பார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் நல்ல மனசு. ஆனால் என் அம்மாவுக்கு பிடிவாதம் அதிகம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தால் அப்பாதான் தழைந்து போக வேண்டும். prejudice-உம் அதிகம், அதுதானே பெரிய பிரச்சினையாக இருக்கிறது! அம்மா என்னை, என் ஆசைகளை, என் காதலை புரிந்து கொள்ள மாட்டாள் என்ற நினைப்பு மிக பயமாக இருக்கிறது. எனக்கு அம்மாவும் வேண்டும்தான். அம்மாவா மாலாவா இரண்டில் ஒன்றுதான் என்ற நிலை வந்துவிடுமோ என்றுதான் பயப்படுகிறேன்.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு போக ஆரம்பித்த பிறகும் அம்மா எனக்கு மட்டும் கொஞ்சம் சலுகை கொடுத்திருக்கிறாள். நான் ஆறு மணிக்கு எழுந்தால் போதும். எழுந்து குளித்து காப்பி குடித்துக்கொண்டிருக்கும்போது அம்மா சொன்னாள் – “முகுந்தா, என்னை இன்னிக்கு கொஞ்சம் அண்ணா நகர் வரைக்கும் கூட்டிண்டு போடா!”

“என்னம்மா விசேஷம்?”

“என்னோட அலமேலு பெரியம்மா பேத்திக்கு கல்யாணம்டா!”

“அப்பாவை கூட்டிண்டு போம்மா! நான் எதுக்கு?”

“இன்னிக்கு அவர் ஃப்ரெண்டு பையன் கல்யாணம் வேற இருக்குடா! அவர் அங்கதான் போகணும்கரார். நீ என்னை கூட்டிண்டு போடா!”

“அட போம்மா! இன்னிக்கு ஒரு நாள்தான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலான்னு பாத்தா, நீ வேற!”

” டேய், நான் என்ன டெய்லியாடா உன்ன கேக்கறேன்? இங்க இருக்க அண்ணா நகர்தாண்டா! அப்புறம் அலமேலு பெரியம்மாவும் உன்னை பாத்தா சந்தோஷப்படுவாடா! இந்த மாதிரி நாலு கல்யாணத்துக்கு போனாதான்டா உன் கல்யாணத்துக்கு பொண்ணு கெடைக்கும்!”

“அம்மா போறும்! சும்மா பேசாதே. கூட்டிண்டு போறேன்.”

வேண்டாவெறுப்பாக கிளம்பினேன். அங்கே அலமேலு பாட்டி, அம்மா, ஆண்டாள் பெரியம்மா எல்லாரும் ஒரே பாச மழை. கொஞ்சம் தள்ளிப் போய் நிம்மதியாய் உட்கார்ந்துகொண்டேன்.

நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அம்மா யாரோ ஒரு பட்டுப்புடவை, வைர நெக்லஸ், வைரத்தோடு மாமியை கூட்டிக்கொண்டு என்னிடத்தில் வந்தாள். “ரமா, இவந்தாண்டி என் ஒரே புள்ளை, முகுந்தன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். நானும் அரை மனதோடு ஒரு கும்பிடு வைத்தேன்.

“முகுந்தா, நானும் உங்கம்மாவும் ஸ்கூல்ல ரொம்ப ஃப்ரெண்டு! முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் பார்க்கறோம்!”

“பழைய ஃப்ரெண்டுனா பேச நிறைய விஷயம் இருக்கும். நான் இங்க எதுக்கு உங்களுக்கு தொந்தரவா?”

“அட சும்மா இருடா! இவன் எப்பவும் இப்படித்தான், முசுடு!” என்று அம்மா என் மேல் எரிந்து விழுந்தாள். வேறு வழி இல்லாமல் அங்கேயே நின்றுகொண்டு பானுமதி, சரசா, விவேகானந்தன், மற்றும் பலர் இப்போது என்ன செய்கிறார்கள் என்ற பல நாட்டுக்கு முக்கியமான விஷயங்களை அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

திடீரென்று டிசிஎஸ் பேர் அடிபட்டது. “இவன் டிசிஎஸ்லியா வேல பாக்கறான்? என்னோட மாப்பிளையோட அத்திம்பேர் அங்கேதாண்டி மானேஜரா இருக்கார்! முகுந்தா, உனக்கு ஸ்ரீனிவாசனை தெரியுமா? அங்கே மானேஜரா இருக்காரே!” என்று ரமா மாமி கூவினார்.

“அங்க தடுக்கி விழுந்தா ஸ்ரீனிவாசன்தான். பத்து பேருக்கு ஒரு மானேஜர். நீங்க யாரை சொல்றேள் தெரியலியே மாமி!”

“நீ உன் கார்டை கொடுரா, ரமா நீ அதை அவர் கிட்டே கொடுத்தா அவர் இவனை கண்டுபிடிச்சுட்டு போறார்!”

சரி இரண்டு விசிட்டிங் கார்ட் கையை விட்டு போனால் பர்சின் கனம் குறையும் என்று என் கார்டை எடுத்து ரமா மாமியிடம் கொடுத்தேன். ரமா மாமி அதை பார்த்துவிட்டு தன் ஹாண்ட்பாகில் வைத்துக் கொள்ளப் போனவர் திடீரென்று மீண்டும் அதை எடுத்துப் பார்த்தார்.

“ஆர். முகுந்த்? அப்போ அந்த சுந்தரம்?”

என் அம்மாவுக்கு நான் பக்கத்தில் இருந்தது ஒரு நொடி மறந்து போயிருக்க வேண்டும். தன் கைகளை விரித்தாள். உச்சுக் கொட்டினாள். பிறகு சொன்னாள்.

“உனக்குத்தான் எல்லாம் தெரியுமேடி! சுந்தரம் முதலியாராச்சே! என் அம்மாவுக்கு என்னால புரிய வைக்க முடியலே!”

சில மறுமொழிகளை பார்த்ததும் எழுந்த எண்ணங்கள் – பத்து பாயிண்ட்கள்:

1. இன்றைய நிலையில் இலங்கை அரசுக்கு உட்பட்ட ஈழம் என்பதுதான் ப்ராக்டிகல்.

2. நான் தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்று நம்புபவனில்லை. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி. விடிந்தால் சரி. கஷ்டங்கள் தீர்ந்தால் சரி. தேசங்களை பிரிக்கும் கோடுகள் எல்லாம் செயற்கையானவை.

3. நான் பேசுவது லாஜிக். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் அநேகம் பேர் ஏதோ ஒரு விதத்தில் இழப்பை சந்தித்தவர்கள். இலங்கையில் இந்த போரில் ஐம்பதாயிரம் பேராவது இறந்திருப்பார்கள் என்று சொல்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். காயம் பட்டவர்களுக்கு சிங்களர்களோடு ஒன்றாக ஒரு நாளும் வாழ முடியாது, தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர்களின் இழப்பு கடந்த காலம். அவர்கள் நிலை காம்புகளில் வாழும் தமிழர்களின் நிலையை விட பல மடங்கு பெட்டர்.

4. இன்றைய முக்கிய பிரச்சினை புலம் பெயர்ந்த தமிழர்கள், அவர்களின் இழப்புகள் இல்லை – இலங்கையில் வாழும் அகதிகளாகிவிட்ட தமிழர்கள்தான், அவர்கள் கஷ்டங்கள்தான் மிக முக்கியம். புலம் பெயர்ந்த தமிழர்களின் காயங்களுக்காக பழி வாங்குவதை விட, அவர்களுக்கு ஆறுதல் தேடுவதை விட, இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை மாறுவது மிக முக்கியம். அது நடந்த பிறகுதான் அடுத்ததை யோசிக்க வேண்டும்.

5. புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலை கஷ்டம்தான். ஆனால் புலிகளால் இழப்பை சந்தித்தவர்களும் தமிழர்களில் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் புலிகள் கூடவே கூடாது என்று நினைக்கத்தான் செய்வார்கள். நாம் அனைவரும் கடந்த கால கசப்புகளை தாண்டி செல்ல வேண்டிய நேரம் இது.

6. இந்த நிலையில் இந்தியாவுக்கு கடமை இருக்கிறது. இந்தியத் தமிழர்களுக்கு கடமை இருக்கிறது. இலங்கை அரசுக்கு இத்தனை நாள் வால் பிடித்தாகிவிட்டது. இலங்கை அரசு ஜெயித்தாகிவிட்டது. இனப் படுகொலைக்கு சின்ன அளவிலாவது இந்தியாவும் உதவி செய்தாகிவிட்டது. இலங்கை அரசை ஐ.நா. கண்டிக்க விடாமல் உதவி செய்தாகிவிட்டது. இப்போது ராஜபக்சே மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய காலம்.

7. காம்ப் தமிழர்களுக்கு உதவுதல், செஞ்சிலுவை சங்கம், வாலண்டியர்கள் சுலபமாக காம்ப்களுக்கு செல்தல், காம்பில் உள்ள குடும்பங்களை இணைத்தல், காம்பில் உள்ளவர்களுக்கு உணவு+உடை+மருத்துவம்+கல்வி, தமிழர்கள் வீடு திரும்புதல், போரில் ஈடுபட்டவர்களுக்க் பொது மன்னிப்பு, தமிழர்களுக்கு சட்ட பூர்வமான உரிமைகள் கிடைக்க வைப்பது, முதலில் இவற்றுக்கெல்லாம் வெளிப்படையான டைம் டேபிளை அறிவித்தல் இதற்கெல்லாம் ராஜபக்சே மீது அழுத்தம் இருக்க வேண்டும்.

8. இத்தனை நாள் சும்மா இருந்தோம, சரித்திரம் அதற்கே நம்மை – இந்திய அரசை – எல்லாம் மன்னிக்குமா தெரியாது. ஆனால் புலிகள், இந்தியாவில் நுழைந்து ஒரு முன்னாள் பிரதமரையே கொன்றவர்கள், எந்த விதத்திலும் பயனடையக் கூடாது என்று நினைத்தோம் என்று ஒரு சாக்காவது சொல்லலாம். அது சரியோ தவறோ, ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது. இனி அதுவும் இல்லை. இப்போதும் நாம், இந்திய அரசு சும்மா இருந்தால் சரித்திரம் நம்மை எந்த நாளும் மன்னிக்காது. இதற்கான அழுத்தத்தை, ஆக்க பூர்வமான முயற்சிகள் இப்போதே ஆரம்பித்தாக வேண்டும். ஏற்கனவே கால தாமதம் ஆகிவிட்டது.

9. தேஷமிண்டே மட்டி காது, மனுஷ்யலு என்றார் பிரபல தெலுகு கவிஞர் ஸ்ரீ ஸ்ரீ. (தேசம் என்றால் மண் இல்லை, மனிதர்கள் என்று அர்த்தம்) இந்திய அரசு என்றால் நாம்தான். மன்மோகன் சிங் மட்டும் இல்லை. குறைந்த பட்சம் உங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு நம் கவலைகளை சொல்ல முயற்சிக்கலாம். பிரபல தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள பிரபல பத்திரிகைகளான டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், டெக்கான் க்ரானிகில், இந்தியா டுடே, வீக், போன்றவை என்னதான் சொல்கின்றன என்பதை தமிழர்களுக்கு சொல்ல முயற்சிக்கலாம். தமிழகத்துக்கு வெளியே என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால்தான் அவர்களை influence செய்ய முடியும். நிறைய பேருக்கு இலங்கை என்றால் புலிகள்தான், ராஜீவ் கொலைதான். அதற்கு மேலும் பிரச்சினை இருக்கிறது என்று தெரிய வைக்கும் பொறுப்பு தமிழர்களுடையது. அவர்களுக்கு தெரியவில்லை என்றால் தவறு அவர்களுடையது இல்லை, நம்முடையது. நம் கண்ணோட்டத்தையே ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருந்தோம் என்றால் மேலே எப்படி செல்வது? முடிந்தால் ஆங்கிலத்தில் பிளாக் எழுதலாம். (யார் படிப்பார்கள் என்பது அடுத்த விஷயம்) ஸ்டாலின், இன்றைய வெளிநாட்டு உறவு உதவி மந்திரி சஷி தரூர் போன்றவர்களின் தளங்களில் மாய்ந்து மாய்ந்து எழுதலாம். ஆக்க பூர்வமாக வேறு என்ன செய்யலாம் என்று உங்களுக்கு தோன்றுவதை எழுதுங்களேன்! நானும் அதை வைத்தே இன்னும் இரண்டு மூன்று பதிவு ஓட்டி விடுகிறேன்!

10. நீங்கள் புலிகளை முழு மூச்சாக ஆதரிப்பவராக இருந்தாலும் இப்போதைக்கு அடக்கி வாசிப்பது நல்லது. சாம பேத தான தண்டம் என்று சொல்வார்கள். தண்டம் இப்போது தோற்றுவிட்டது. பேத தானத்துக்கு இப்போது வழி இல்லை. சாமம் (நல்ல விதமாக பேசி பார்ப்பது) மட்டும்தான் இப்போதைக்கு மிச்சம் இருக்கும் வழி.

பின் குறிப்பு: விகடன் பொதுவாக புலிகள் ஆதரவு நிலை எடுத்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால் நான் மீள்பதிவு செய்த விகடன் கட்டுரை இலங்கை அரசுக்கு உட்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகள் என்ற நிலையில்தான் பேசுகிறது. இனி செய்ய வேண்டியவை என்று குறிப்பிடப்பட்டிருப்பவை இலங்கை அரசு செய்ய வேண்டியவையே. இலங்கை அரசுக்கு இவற்றை செய்ய இந்திய அரசு பிரஷர் கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒரு government-in-exile அமைக்க முயற்சிப்பதை தவறு என்று கூட சொல்கிறது. தனி ஈழம் வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு

சமீபத்திய விகடனில் வந்த கட்டுரை. விகடனுக்கு நன்றி! இந்த கட்டுரை முக்கியமானது என்று நினைப்பதால் இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். எழுதியவர் பேர் ப. திருமாவேலன். அவருக்கும் நன்றி! ஓவர் டு விகடன்!

கடல் அலை சொல்லும் கதை, நெஞ்சைக் கரிக்கிறது. அமைதியும் அல்லாத, போரும் இல்லாத சூனியத்தில் ஈழத்து மக்களைத் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது காலம்.

‘30 ஆண்டு காலப் பயங்கரவாதத்தில் இருந்து மீண்டு வந்து விட்டோம்’ என்று வெற்றிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது கொழும்பு. ‘சர்வ தேசியத் தமிழீழ அரசாங்கம்’ என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கிறார்கள் புலிகள் ஆதரவாளர்கள். ‘ஐந்தாம் யுத்தம்’ கர்ஜனைகளைப் போட்டு உண்மையை உணரவிடாமல் ஆகாயக் கோட்டைக்கு அழைத்துப் போகிறார்கள். இன்று ‘தமிழீழத்தில்’ தவிக்கும் அப்பாவி அபலைத் தமிழ் மக்களின் கோரிக்கைகள் இது எதுவும் இல்லை.

அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்று அவர்கள் உலகிடம் எதிர்பார்ப்பது இவைதான்….

1. ‘கூடாரங்களைப் பிரியுங்கள்!’
ஈழத் தமிழரின் இன்றைய பெயர், ‘கூடார மக்கள்’. ஆசிய மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் பசில் வேனாண்டோவின் கணக்கின்படி, 2 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சும்மா ரோட்டில் கிடத்தாமல் கூடாரங்களில் இருக்கிறார்கள்; அவ்வளவுதான்! வாஷிங்டன் மனித உரிமைக் காப்பகம், ‘இவை தற்காலிகக் குடியிருப்புகள் அல்ல; சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள்’ என்கிறது. தினமும் இங்கு மக்கள் செத்து விழுகிறார்கள். கழிவறை வசதியைக்கூடச் செய்து தர மறுத்துவிட்டது சிங்கள அரசு. ‘கக்கூஸ்கள் அமைக்கப்படாததை மக்கள் ஐ.நா. சபையிடம்தான் கேட்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார், மீள் குடியேற்றத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன். ‘பசியில் இறந்தாலும் ஐ.நா-வே பொறுப்பு’ என்று சொல்லிவிட்டார்கள். ‘இந்த இடத்தில் இருந்து எங்களை விட்டால் போதும். எங்களது வீடுகளுக்குப் போக அனுமதித்தால் போதும்’ என்று கெஞ்சுகிறார்கள் மக்கள்!

2. காணவில்லை… காணவில்லை!
ஒரு குழந்தை காணாமல் போனால் இங்கு விளம்பரங்கள், போலீஸ் விசாரிப்புகள், தனிப் படைகள் என எத்தனையோ முஸ்தீபுகள். ஆனால், அங்கு சர்வசாதாரணமாக நடக்கின்றன கடத்தல்கள். குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிப்பதால்தான் கடத்தல்கள் எளிதாக நடக்கின்றன. இதில் பெண்களும் சிறுவர்களும்தான் அதிகம் காணாமல் போகிறார்கள். ஒரு முகாமில் 870 சிறுவர்கள் அநாதைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கென யாருமே இல்லை. மருத்துவமனைக்கோ, பக்கத்து முகாமுக்கோ சம்பந்தப்பட்டவர்களை அனுப்பிப் பார்க்க அனுமதித்தால், உறவினர் இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவாவது முடியும். அதற்கும் அனுமதி இல்லை. இப்படிக் காணாமல் போன சுமார் 20 ஆயிரம் மக்களின் கதி என்ன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, உறவினர்களிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டும்!

3. வெள்ளை அறிக்கை
நீண்ட கால மரணங்களும் இழப்புகளும் கொண்டது ஈழத்துப் போராட்டம். 1983 முதல் 2001 வரை இறந்தவர்கள் ஒரு லட்சம் பேர். யாழ்ப்பாணம் தொடங்கி முல்லைத் தீவு வரை மொத்தமாக நாசமாக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி இருக்கும் என்று இலங்கை மத்திய வங்கி கணித்துச் சொல்லியிருக்கிறது. வட கிழக்கில் 56 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும், 34 ஆயிரம் வீடுகள் சேதமானதாகவும் சொல்கிறது அடுத்த புள்ளிவிவரம். இவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரங்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த அழிவுகள்தான் உச்சபட்சம். தமிழர் வாழும் கிராமங்கள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்ட நிலை. இப்படி தமிழர் பகுதிகள் அத்தனையும் கணக்கிட்டால் பாழடைந்த வீடுகள் எத்தனையோ?
முதல்கட்டமாக… பாதிக்கப்பட்ட வீடுகள், தொழில்கள், நிலங்கள் குறித்த தகவல்களுடன் இறந்தவர், இருப்பவர், இதில் உடல் ஊனமானவர் விவரம் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளிவந்தாக வேண்டும்!

4. பொதுமன்னிப்பு
“படுகொலைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர, மற்ற போராளிகளையும் அவர்களது குடும்பத் தினரையும் மன்னிக்க வேண்டும்!” – இப்படிச் சொல்லி இருப்பவர் புலிகளின் பரம்பரை எதிரியான டக்ளஸ் தேவானந்தா. இன்று அமைச்சராக இருப்பவர். இப்படி சுமார் 15 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. “வவுனியா, முல்லைத் தீவுப் பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு விதத்தில் புலிகள் அமைப்புடன் தொடர்பு உடையவர்கள். அவர்களை விசாரணை செய்வோம்” என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே அறிவித்தார். இதன்படி 3,000 பெண்கள் உட்படப் பலரிடமும் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை வேறு வேலைகள் பக்கமாகத் திருப்பிவிட வேண்டும்; சித்ரவதைகள் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என்கின்றன மனித உரிமை அமைப்புகள்!

5. ஏதாவது ஒரு நிவாரணம்
போர், மக்களின் நம்பிக்கையை மட்டுமல்ல; அவர்களது அன்றாட வாழ்க்கை, இதுவரை சேர்த்துவைத்த சொத்துகள், பணம் அத்தனையையும் கொள்ளை கொண்டுவிட்டது. விவசாயம் பார்த்தவர்களுக்கு நிலம் இல்லை. மீன்பிடித் தொழில் செய்து பிழைத்தவருக்குப் படகும் வலையும் இல்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 560 மீன்பிடிக் கிராமங்கள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட விவரத்தின்படி, 2.70 லட்சம் மீனவர்கள் இருந்தார்கள். ஆனால், அது படிப்படியாகக் குறைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் பேர் ஆனார்கள். இதற்கு முக்கியமான காரணம், அவர்களது மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் 180 கோடி ரூபாய். மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், இம்மக்கள் வறுமைக்கோட்டுக்குத் கீழே தள்ளப்பட்டார்கள். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன தென்னை, பனை மரங்கள் மொத்தமாகக் கொளுத்தப்பட்டன. தாங்கள் இழந்த சொத்துக்களுக்கான இழப்பீடாகவோ, அல்லது தங்கள் குடும்பத்தில் இழந்த உறவுகளுக்கான கருணைத் தொகையாகவோஅந்தப் பணம் அமைய வேண்டும்!

6. பயமற்ற சூழ்நிலை
‘இன்னும் தேடுதல் வேட்டை முடியவில்லை’, ‘பயங்கரவாதிகள் வேறு பல இடங்களில் பதுங்கி இருக்கிறார்கள்’ என்று சொல்லி மக்கள் வாழ்ந்த இடங்களில் ராணுவத்தின் முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அதி உயர் பாதுகாப்பு வளையம் என்று சொல்லி பள்ளிக்கூடங்கள், கோயில்கள், முக்கியத் தெருக்களில் ராணுவத்தினர் தங்கியுள்ளனர். முன்பு மக்கள் இருந்த பெரிய வீடுகளில் இன்று ராணுவத்தினர் தங்கவைக் கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளில் ராணு வத்தினர் தங்கியுள்ளனர். வட கிழக்கில் 156 பள்ளிக்கூடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். முக்கிய மான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டம் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்டுள்ளது. செக் போஸ்ட்டுகள் அதிகம் உள்ளன. எனவே, மக்களுக்குப் பயமற்ற சூழ்நிலையை உருவாக்க அரசு முன் வர வேண்டும்!

7. யாழ்ப்பாணம்
ராணுவத்திடம் சுமார் 15 ஆண்டுகளாக இருக்கும் யாழ்ப்பாணம், ‘எமர்ஜென்ஸி’ பகுதியாகவே இன்னமும் உள்ளது. மாலை 6 முதல் காலை 6 வரை யாரும் ரோட்டில் நடமாட முடியாது. எங்காவது வேலைக்குப் போகும் ஆட்களும் 6 மணிக்குள்ளாக வீட் டுக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும். இத்தனை ஆண்டு அடக்குமுறை உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை. மேலும், அங்கு பொருளாதாரத் தடைகளும் விலக்கப்படவில்லை. பொருட்களின் விலை பல மடங்கு அதிகம். அனைத்து வகையான நெருக்கடிகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும்!

8. கொழும்பு
எப்போதும் கொந்தளிப்பில் இருப்பவர்கள் கொழும்புத் தமிழர்கள். இங்கு தமிழ்ப் போராளிக் குழுக்களின் நடவடிக்கைகள் இல்லை. பதிலாக, சிங்களத் தீவிரவாத அமைப்புகளான ஜனதா விமுக்தி பெரமுனா, சிங்கள உறுமய, ஜாதிகல உறுமய போன்ற குழுக்கள் எதையாவது சொல்லி தமிழர் கடைகள், வீடுகள், தொழிற்சாலைகளை அடித்து உடைப்பதை வழக்கமாக வைத்துள்ளன. வெற்றி விழாக் கொண்டாட்டங்களின்போது தமிழர்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் பதுங்கிக்கொள்கிறார்கள். பூட்டி இருக்கும் வீடுகள் அடித்துத் திறக்கப்பட்டு நொறுக்கப்படுகின்றன. உயிருக்கும் உடைமைக்கும் கொழும்பில் பாதுகாப்பு தர வேண்டியது முக்கியமானது!

9. அச்சுறுத்தும் ஆயுதங்கள்
புலிகள் அமைப்பு முழுமையாக அடக்கப்பட்டு சரியாக ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆயுதம் தாங்கிய பல குழுவினர் இலங்கை முழுவதும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லிப் பதறவைக்கிறார்கள் கொழும்புப் பத்திரிகையாளர்கள். ஈ.என்.டி.எல்.எஃப்., டக்ளஸின் ஈ.பி.டி.பி., சித்தார்த்தன் தலைமையிலான பிளாட், கருணா குரூப் எனப் பலரும் ஆயுதம் தாங்கி அலைகி றார்கள். மர்மமான முறையில் துப்பாக்கிச் சூடுகள் நடப்பதும், திடீர்க் கொலைகள் நடப்பதற்கும் பின்னணியாக இவர்கள் இருப்பதாகவும் ஆட்கடத்தல், கொள்ளை போன்றவற்றின் பின்னணியில் இவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது!

10.உண்மையை உணர்ந்த மனிதர்கள்
இரும்புக் கோட்டையாக மாறிவிட்டது இலங்கை. என்ன நடந்தது, எத்தனை பேர் செத்தார்கள், இருப்பவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன தேவை என எதையும் நேரடியாகப் பார்க்க யாரையும் அனுமதிக்காத நிலையைத் தளர்த்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்புகள், மனித உரிமையாளர்கள், மருத்துவர்கள், பெண்கள் அமைப்புகள் என அங்கீகரிக்கப்பட்ட ஆர்வலர்களை உள்ளே அனுப்பி, மக்களைச் சந்திக்க வைத்தால் மட்டுமே அங்கு உள்ளவர்களுக்குக் கொஞ்சம் நிம்மதி பிறக்கும்.

“20 நாடுகளின் உதவியுடன் இந்த வெற்றியை நாங்கள் பெற்றோம்” என்று வெளி விவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சொல்லி இருக்கிறார். அப்படியானால், போருக்குப் பிறகு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் வாங்கித் தர வேண்டிய பொறுப்பும் இந்த 20 நாடுகளுக்கும் உண்டுதானே! அதில் இந்தியாவும் ஒன்று!

இதை படிக்கும்போது மனம் மிக கனக்கிறது. மேலே எதுவும் எழுதப் பிடிக்கவில்லை.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு

பிரபாகரன்

பிரபாகரன்

பிரபாகரனின் குறைகள் என்னவென்றுதான் பல நாளாக கத்திக் கொண்டிருக்கிறேன். அதற்காக அவர் நிறைகளே இல்லாத மனிதர் இல்லை. புலிகளின் நோக்கங்களும் தவறானவை இல்லை.

எண்பதுகளில் பிரபாகரன் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு சில ஆயிரம் பேர் கொண்ட படை இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான். லாஜிஸ்டிக்சுக்கு தமிழக ஆதரவு இன்றியமையாததாக இருந்தது. எம்ஜிஆரும், கலைஞரும், ராவும், இந்திராவும் ராஜீவும் அவர்கள் பின்னால் நின்றிராவிட்டால் கஷ்டம்தான்.

ஒரு பக்கம் பலம் வாய்ந்த ஒரு எதிரி; இன்னொரு பக்கம் தான் சொன்னபடி நடக்க வேண்டும் என்று மிரட்டும் அதிக பலம் வாய்ந்த “நண்பன்”. நண்பனின் ஆதரவுக்காக தன்னை போன்ற பலரிடம் பலத்த போட்டி. சுய பலம் கம்மி. பலம் என்று ஒன்றுதான் இருந்தது – தன் குறிக்கோளை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாத தன்மை. ஒரு நல்ல தலைவனுக்கு அது அவசியம்.

அந்த கனவுக்கு பின்னால் பல இலங்கை தமிழர்கள் வந்தார்கள். அவரை தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். தான் பட்ட காயங்களுக்கு அவர் மட்டுமே பழி வாங்க முடியும் என்று நினைத்தார்கள். அவர் சொன்னால் உயிரையும் கொடுக்க சித்தமாக இருந்தார்கள் – கொடுத்தார்கள்.

இலங்கை தமிழர்கள் மட்டும் இல்லை, இந்தியத் தமிழர்களுக்கும் அவர் ஹீரோவாகத்தான் இருந்தார். ராஜீவ் கொலை வரைக்கும அவரை எதிர்த்து கருத்து சொல்லும் தமிழர்கள் மிக குறைவு. எனக்கு தெரிந்து சோ ராமசாமி ஒருவர்தான் அவரை எதிர்த்து கூப்பாடு போட்டார். சோவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மிக குறைவு. யாரும் இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எம்ஜிஆரின் ஆதரவு அவருக்கு இருந்துகொண்டேதான் இருந்தது. கலைஞருக்கு நிச்சயமாக எம்ஜிஆர் ஆதரிக்கும் மனிதர் என்பது மனக்குறையாக இருந்திருக்கும் – ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ள முடியாத நிலை. அவரது வழக்கமான வாய்ச்சொல் வீரம் புலிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டது. IPKF-ஐ எதிர்த்து ஸ்டேட்மென்ட் எல்லாம் விட்டார். பாண்டி பஜாரில் துப்பாக்கியால் சுட்டால் என்ன, பத்மநாபா செத்தால் என்ன, பிரபாகரனின் செல்வாக்கு தமிழ்நாட்டில் வளர்ந்துகொண்டேதான் போனது. (பகத் சிங் அபுல் கலாம் ஆசாத்தை கொன்றால் அவரை கொண்டாடுவோமா என்ன?) அவரை விட்டால் ஈழத் தமிழர்களுக்கு வேறு கதி இல்லை என்ற இமேஜ் வளர்ந்துகொண்டே போனது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.

அவருக்கு இந்தியாவிலிருந்து ஏற்பட்ட முதல் பின்னடைவு ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம். அது நல்ல விஷயம் என்பது என் உறுதியான கருத்து. அந்த ஒப்பந்தம் உண்மையிலேயே நிறைவேறி இருந்தால் இன்றைக்கு அளவுக்கு விஷயம் மோசமாக போயிருக்காது. ஆனால் இலங்கை தமிழர்களும் புலிகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று காரண்டி கொடுக்க ராஜீவ் யார்? இந்தியா யார்? ராஜீவுக்கு நோபல் பரிசு கனவு இருந்திருக்க வேண்டும், ஜெயவர்த்தனாவுக்கு குஷியாக இருந்திருக்கும். அனுபவம் இல்லாத ராஜீவை ஜெயவர்த்தன மாட்டிவிட்டுவிட்டார்.

கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால், தன் ஈகோவை மறந்து செயல்பட்டிருந்தால், பிரபாகரன்தான் இலங்கைக்கு உட்பட்ட ஈழத்தின் பெரும் தலைவரகா வந்திருப்பார். ஆனால் அப்போதே பிரபாகரனுக்கு தனி ஈழம்தான் ஒரே தீர்வு, இதெல்லாம் நடக்காத விஷயம் என்று உறுதியாக தோன்றி இருக்க வேண்டும். அவரது சிந்தனை தவறு என்று சொல்வதற்கில்லை, மிக ஆழமான காயங்களை சுமந்தவர் அவர். ஒப்பந்தம் நடக்க ஒரு சான்ஸ் கொடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது நான் பெருமூச்சு விடலாம், ஆனால் காயங்களை நான் சுமக்கவில்லை. நெருப்பு எப்படி சுடும் என்று தீக்குளித்தவனுக்குத்தான் தெரியும். சிங்களர்களை நம்ப முடியாது என்று பிரபாகரன் நினைத்திருந்தால் அது ஆச்சரியம் இல்லை. ஒப்பந்தத்தால் இந்தியா பட்ட நஷ்டங்களுக்கு நான் ராஜீவைதான் பொறுப்பாக்குவேன், பிரபாகரனை அல்ல.

சக போராளிகளை கொல்வது பாட்டுக்கு நடந்துகொண்டேதான் இருந்தது. சிரிசபாரத்னம், பத்மநாபா, அமிர்தலிங்கம் என்று ஒரு பெரிய லிஸ்ட். அதை பற்றி எதிர்கருத்து தெரிவித்தவர்கள் மிக கம்மி. அந்த தைரியத்தில்தானோ என்னவோ, ராஜீவை கொல்ல ஆள் அனுப்பினார். அது பெரிய முட்டாள்தனம். கொஞ்சம் கூட அறிவில்லாத செயல். இந்திய தமிழர்களின் ஆதரவு ஒரே நாளில் முக்கால்வாசி கரைந்துவிட்டது. ஒரு தாக்குதலால் தன் இயக்கத்துக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கத் தெரிய வேண்டும். அது தெரியாத பிடிவாதக்காரரால் இயக்கத்தை காப்பாற்றுவது கஷ்டம்தான்.

ஆனால் காப்பாற்றினார். பெரும் அளவுக்கு இந்திய ஆதரவு கரைந்துபோனாலும், தாக்கு பிடித்தார். இலங்கை அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். தனி ஈழம் என்று ஒரு நாடு உருவாகவில்லையே தவிர significant நிலப் பரப்பை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். ஆனால் சர்வ தேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டார். புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவில், பணத்தில், இன்னும் தமிழ் நாட்டில் எஞ்சி இருந்த ஆதரவில் சமாளித்தார்.

அவர் மீது எனக்கு பலமான எதிர்ப்பு கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவர் மறைவு ஈழத்தமிழர்களுக்கு நஷ்டம் என்றே கருதுகிறேன். அவர் உயிரோடு இருக்க மாட்டாரா என்ற நப்பாசை எனக்கு கொஞ்சம் இருந்தது, ஆனால் இப்போது புலிகளே சொல்லிவிட்டார்கள்.

பெரும் லட்சிய வேகம் உள்ளவர், வீரர், கொண்ட கொள்கையை எந்த சூழ்நிலையிலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாதவர். ஆனால் எதிர்ப்பு காட்டும் ஒவ்வொருவரையும் வஞ்சம் வைத்து அழிக்கும் தன்மையும், சக போராளிகளை, சொந்த சகோதரர்களை அதிகாரத்துக்காக கொல்லும் கயமையும், எங்கேயோ இருக்க வேண்டிய ஒரு தலைவனை வீழ்த்திவிட்டன. அவர் சைமன் பொலிவர் போன்று, கரிபால்டி போன்று சரித்திரத்தில் இடம் பெற வேண்டியவர். இப்படி முடிந்தது பெரிய துரதிருஷ்டம். ஆனால் எத்தனையோ தவறுகள் செய்திருந்தாலும், பல ஈழத் தமிழர்களுக்கு இழப்பு ஏற்படுத்தி இருந்தாலும், அவர் ஈழத் தமிழர்களுக்கு ஹீரோதான். ஈழத் தமிழர்களுக்காக உண்மையிலேயே கடைசி வரை போராடியவர் என்பதை என்னை போன்ற எதிர்ப்பாளர்களும் மறுக்க முடியாது.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
ஈழ தமிழர்கள், புலிகள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு

என்னிடம் இரண்டு காப்பி இருக்கிறது, ஒன்று நர்மதா பதிப்பகத்திலிருந்து, இன்னொன்று காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து. இன்று காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை புரட்டி பார்த்தேன். இரண்டு எக்ஸ்ட்ரா சாப்டர் இருக்கிறது. வாங்குபவர்கள் காலச்சுவடு பதிப்பக புத்தகத்தை வாங்குங்கள்!

தொடர்புடைய பிற பதிவுகள்
அசோகமித்ரனின் ஒற்றன்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்


ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த புத்தகம். ஒன்றுக்கு இரண்டு காப்பி வேறு கை வசம். இன்று தூக்கம் வராமல் புரட்டினேன்.

மனிதர் ஜீனியஸ். சந்தேகமே இல்லை.

அயோவா பல்கலைகழகம் உலக எழுத்தாளர்களை ஒரு ஆறேழு மாத காலம் செமினார் மாதிரி ஏதோ ஒன்றுக்கு அழைத்திருக்கிறது. தமிழுக்கு அசோகமித்திரன் என்ற தியாகராஜன் – டகரஜான் என்று ஜப்பானிய பெண் எழுத்தாளர் கஜுகோவால் அழைக்கப்படுபவர். சைவ உணவு கிடைக்காமல், சரியாக சமைக்கவும் தெரியாமல், காப்பி (அதுவும் அமெரிக்க காப்பி), கார்ன் ஃப்ளேக்ஸ், சீரியல், பாதி வெந்த சாதம் இவற்றை வைத்து காலம் தள்ளுபவர். அவரது அனுபவங்கள்தான் இந்த கதை.

கிண்டலும் நகைச்சுவையும் புத்தகம் பூராவும் இழைந்தோடுகிறது. நாலு வரிக்கு ஒரு முறையாவது புன்னகையாவது வந்தே தீரும். ஷூவில் இருக்கும் அட்டையை எடுக்காமல் ஷூ கடித்துவிடுகிறது. யாரோ ஒரு நண்பன் வீட்டுக்கு போனால் நண்பனின் காதலியின் கணவன் இவரை தன் மனைவியின் காதலன் என்று நினைத்து துப்பாக்கியால் சுட வருகிறான். பெருவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் சார்ட் போட்டு கதை எழுத திட்டம் இடுகிறார். எதியோப்பியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர் இவரை உடும்பு பிடியாக பிடித்துக் கொள்கிறார்.

பி.ஜி. வுட்ஹவுசுக்கு இணையான நகைச்சுவை உணர்வு கொண்ட எழுத்தாளர் தமிழில் கிடையாது என்று நினைத்திருந்தேன். அவரை விட மென்மையான, subtle, மேன்மையான நகைச்சுவை.

எண்பதுகளில் என் படிப்பு என்ற பதிவில் ஒரு அசோகமித்திரன் கதையை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது இந்த நாவலின் ஒரு பகுதி என்று தெரிந்து கொண்டேன். அதிசயமான தற்செயல்!

தொடர்புடைய பிற பதிவுகள்
எண்பதுகளில் என் படிப்பு
அசோகமித்ரனின் சில கதைகள்

பின் குறிப்பு: ஒற்றன் எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இடம் பெறுகிறது. ஆனால் ஆச்சரியம், ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இல்லை.

(எண்பதுகள் என்றால் எண்பதுகள் இல்லை – எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரை)

டீனேஜ் பருவத்தில்தான் சுஜாதா கண்ணில் பட்டார். சுஜாதா என்றால் அப்போதெல்லாம் வெறி பிடித்த மாதிரி படிப்பேன். அதுவும் கணேஷ் வசந்த் என்றால் கேட்கவே வேண்டாம். அவருடைய வரிகளை சொல்லி சொல்லி மகிழ்ந்து கொள்வோம். நிர்வாண நகரத்திலிருந்து – “தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன்தான் குடம் குடமாக மூத்திரம் போவான்”. பிரியாவில் கணேஷ்தான் ஹீரோ, ஆனால் பெரிதாக ஹீரோத்தனம் எதுவும் கிடையாது. எனக்கு பெரிய புதுமையாக இருந்தது. 24 ரூபாய் தீவு, ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், வைரங்கள், மூன்று நிமிஷம் கணேஷ், அனிதா – இளம் மனைவி, நைலான் கயிறு, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கில் தெரியும் ராஷோமான் டெக்னிக், பாலம் கதை, ரத்தம் ஒரே நிறம், வசந்த்! வசந்த்!, கனவு தொழிற்சாலை, இலங்கையில் ஒரு நூலகம் எரிக்கப்பட்டதை வைத்து எழுதப்பட்ட ஒரு லட்சம் புத்தகங்கள் சிறுகதை என்று சொல்லி கொண்டே போகலாம். என்ன துக்கம் என்றால் அவரது இன்னொரு பக்கம் தெரியவே இல்லை. கணையாழியின் கடைசி பக்கம் மாதிரி அவர் எழுதுவார் என்றெல்லாம் எனக்கு தெரிய நிறைய நாட்கள் ஆயிற்று.

கணேஷ் வசந்த் அளவுக்கு மனதை கவராவிட்டாலும் தேடிய இன்னொரு சீரிஸ் தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகள். எப்போதும் தேநீர் பருகிக் கொண்டே இருப்பார். எஸ்.எஸ். 66 என்ற கதை எங்கள் வட்டத்தில் பாப்புலராக இருந்தது. அப்புறம் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள் வர ஆரம்பித்தன. சங்கர்லால் அளவுக்கு பிடிக்கவில்லை.

மாத நாவல்கள் வர ஆரம்பித்த புதிது. மாலைமதி வர ஆரம்பித்திருந்தது. ஒரு ரூபாய் விலை என்று நினைக்கிறேன். (அது பெரிய அமவுண்ட், தினமும் ரயிலில் போய் பள்ளியில் படிக்கும் எனக்கு கையில் கொஞ்சம் காசு இருக்கட்டும் என்று மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய் கொடுத்து வைத்திருந்த காலம் அது – டீ பதினைந்து பைசாவுக்கும் சமோசா பத்து பைசாவுக்கும் கிடைத்துக்கொண்டிருந்தது.) மாத நாவல்கள் மூலம் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், மகரிஷி, சவீதா என்று பலர் அறிமுகம் ஆனார்கள். சுஜாதாவின் பல கணேஷ் வசந்த கதைகள் மாத நாவலாக வெளி வந்தன. எனக்கு ஞாபகம் இருப்பவை மேற்கே ஒரு குற்றம் (சுஜாதா), மூன்று நிமிஷம் கணேஷ் (சுஜாதா), அது வரையில் காஞ்சனா (மகரிஷி), வணக்கத்துக்குரிய காதலி (ராஜேந்திரகுமார்), லீனா மீனா ரீனா (புஷ்பா தங்கதுரை). புஷ்பா தங்கதுரையின் சிங் துப்பறியும் கதைகள் பெரும்பாலும் soft porn. ராஜேந்திரகுமாரும் சுஜாதாவும் எழுதியவை யூத் கதைகள். ரா. குமாரின் கதைகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞனின் முதுகில் ஒரு இளைஞியின் மார்புகள் அழுந்தும். ஞே என்று விழிப்பார்கள். ஒருத்தனுக்கு கிடைத்தால் க்ளாசில் எல்லாரும் படிப்போம்.

ஜெயகாந்தனின் ஜ.ஜ. சங்கரவை பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன்.

இந்த கால கட்டத்தில் படித்த முக்கியமான புத்தகங்களில் ஒன்று வியாசர் விருந்து. மகாபாரதத்தின் மீது இன்றும் இருக்கும் பெரும் பித்துக்கு இதுதான் காரணம். மகாபாரதத்தை பற்றி இன்னொரு முறை விலாவாரியாக எழுதுகிறேன். ராஜாஜியை எத்தனை பாராட்டினாலும் தகும். இதை போன்ற simplified versions-ஐ வேறு பலரும் எழுதி இருக்கிறார்கள். (ஆர.கே. நாராயண், சோ ராமசாமி உட்பட) ஆனால் ராஜாஜி மாதிரி யாரும் எழுதவில்லை.

குமுதம், விகடன் தொடர்கதைகள் மூலம்தான் சிவசங்கரி, லக்ஷ்மி, இந்துமதி, பி.வி.ஆர்., மெரினா ஆகியோர் அறிமுகமானார்கள். பி.வி.ஆர். எழுதும் கதைகள் அப்போது கொஞ்சம் ரியலிஸ்டிக்காக இருப்பதாக தோன்றியது. இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் முதலில் படித்தபோது பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு பதினேழு வயதில் எனக்கும் அந்த இன்டலெக்சுவல் மாதிரி என்னை நினைத்துக் கொள்ள பிடித்திருந்தது. என்ன, எனக்கு அண்ணனும் இல்லை, மன்னியும் இல்லை, ஜமுனாவும் இல்லை. இப்போதும் அது நல்ல புத்தகம் என்றுதான் நினைக்கிறேன். மெரினாவின் நாடகங்கள் விகடனில் தொடராக வரும். கால்கட்டு, ஊர் வம்பு என்று சுவாரசியமான நாடகங்கள். சிவசங்கரி, லக்ஷ்மி கதைகள் எல்லாம் இந்த காலத்து மெகா சீரியல்கள் மாதிரி பெண்களுக்காகவே எழுதப்பட்ட மாதிரி இருக்கும். சிவசங்கரியின் கதைகள் என் வயது பெண்களுக்கு பிடித்திருந்தன. அவர்களிடம் பேச ஒரு சாக்கு வேண்டும் என்பதற்காகவே அவரது கதைகளை விடாமல் படித்தேன். அவர் எழுதிய எந்த கதையும் – புகழ் பெற்ற ஒரு மனிதனின் கதை, பாலங்கள் உட்பட – பெரிதாக பிடிக்கவில்லை. அவருக்கு லக்ஷ்மி கொஞ்சூண்டு பெட்டராக தெரிந்தது.

அடுத்த source உறவினர் வீட்டில் பைண்ட் செய்து வைக்கப்பட்டிருக்கும் தொடர்கதைகள். பொன்னியின் செல்வனை அப்படித்தான் பேய் பிடித்த மாதிரி நாலைந்து நாட்களில் படித்தேன். என்னால் கீழேயே வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை எல்லாம் தேடி கண்டுபிடித்து படித்தேன். பொ. செல்வன்தான் அவருடைய மாஸ்டர்பீஸ். சி. சபதம் நன்றாக இருந்தது. பா. கனவு கொஞ்சம் வாண்டு மாமா கதை மாதிரி இருக்கும். அலை ஓசைதான் அவருக்கு பிடித்த நாவலாம். எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. அப்போது தேடிய தியாக பூமி, கள்வனின் காதலி எல்லாம் எனக்கு பல வருஷம் கழித்துதான் படிக்க முடிந்தது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் (புதுமைப்பித்தன்) பிடித்திருந்தன. பிடித்த இன்னொரு புத்தகம் வால்காவிலிருந்து கங்கை வரை. தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், துப்பறியும் சாம்பு இரண்டும் இந்த கால கட்டத்தில்தான் படித்தேன். எல்லாமே அம்மா சிபாரிசு என்று ஞாபகம். சாம்பு ஃபார்முலாதான், ஆனால் படிக்க ஜாலியாக இருந்தது. ஜ. ஜகன்னாதன் நன்றாக இருந்தது.

எல்லாரும் குறிப்பிட்டு சொல்கிறார்களே என்று பிரதாப முதலியார் சரித்திரத்தை நான் தேடித் பிடித்து படித்தேன். உலக மகா போர். தி.ஜானகிராமன் எனக்கு சுலபமாக கிடைக்கவில்லை. கிராம நூலகங்களில் கிடைத்திருக்கும், ஆனால் என் அம்மா அவரை வேண்டுமென்றே எனக்கு சிபாரிசு செய்யவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு அம்மா வந்தாள், மரப் பசு ஆகியவற்றை எழுபதுகளில் படித்திருக்க முடியாது, ஆனால் மோக முள் படித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அம்மா வந்தாள் எனக்கு எண்பதுகளிலும் படித்திருக்க முடியாது. டூ ஷாக்கிங். அம்மா என்ற தெய்வப் பிறவியை, தியாகச் சுடரை, ஆசாபாசம் உள்ள மனுஷியாக பார்க்க முடியும் வயதில்லை.

அசோகமித்திரன், லா.ச.ரா சுத்தமாக புரியவில்லை. (இப்போதும் பல நேரம் அப்படித்தான்) அசோகமித்ரனின் ஒரு கதை – அவர் அமெரிக்கா வந்திருப்பார். நிறைய நிகழ்ச்சிகளை ஒத்துக்கொண்டிருப்பார். ஒரு நண்பர் அவரை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு போவார். இவருக்கு ஏழு மணிக்கோ என்னவோ பஸ். பஸ் வராது. இவர் மனதில் பல எண்ணங்கள் ஓடும், நிகழ்ச்சி மிஸ் ஆகப் போகிறது, அடுத்த நிகழ்ச்சிக்கு அங்கிருந்து டிக்கெட், அதையும் இனி மேல் அட்டென்ட் செய்ய முடியாது, என்ன செய்யப் போகிறோம் என்றெல்லாம். கடைசியில் பார்த்தால் பஸ் பஸ் மாதிரி இருக்காது, பெரிய ட்ரக் மாதிரி இருக்கும். பீஹாரில் முதல் முறை ட்ரக்கரில் பயணம் செய்த பிறகுதான் இந்த கதை எனக்கு புரிந்தது. அதற்கு இன்னும் பத்து வருஷம் இருக்கிறதே!

புதிதாக எழுதுபவர்களில் பாலகுமாரன் (மெர்க்குரிப் பூக்கள்) பிடித்திருந்தது. அந்த வயதில் என்னை கேட்டிருந்தால் சாயாவனம், ஜய ஜய சங்கர, தரையில் இறங்கும் விமானங்கள், பொ. செல்வன், சி. சபதம், மெர்க்குரிப் பூக்கள், கணேஷ் வசந்த் கதைகளைத் தவிர தமிழில் எதுவுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டியதாக எனக்கு தோன்றவில்லை.

ஒரு பதினாலு பதினைந்து வயதில் நான் ஆங்கிலப் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன். எனிட் ப்ளைடனில் ஆரம்பித்து, உடனடியாக ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், பெரி மேசன், அலிஸ்டர் மக்ளீன், ஹரல்ட் ராபின்ஸ், சிட்னி ஷெல்டன் என்று த்ரில்லர்களுக்கு போக முடிந்தது. அடுத்த கட்டமாக என்ன படிக்கலாம் என்று சொல்லும் புஸ்தகங்கள் கிடைத்தன. விரைவில் வுட்ஹவுஸ் கண்ணில் பட்டார். க்ளாசிக்ஸ் என்ன என்று தெரிந்தது - டிக்கன்ஸ், ஹ்யூகோ, டூமாஸ்(கல்கியை விட மட்டம்), ஸ்டீவன்சன், போ, இப்சன், ட்வெய்ன், தாக்கரே என்று படிக்க முடிந்தது. ஹார்டி, ஹாதொர்ன் போன்றவர்கள் நமக்கு சரிப்பட மாட்டார்கள் என்று ஒதுக்க முடிந்தது. நவீன காலத்துக்கு என்று ஹெமிங்வே, ஷா, பிரெக்ட், ஆர்தர் மில்லர் என்று கிடைத்தார்கள். என்ன படிக்கலாம் என்று முடிவு செய்வது சுலபமாக இருந்தது. விமரிசனங்கள், இலக்கிய வரலாறுகள் கிடைத்தன.

அலிஸ்டர் மக்ளீன் மாதிரி எனக்கு தெரிந்து யாருமே தமிழில் எழுதவில்லை. கணேஷ் வசந்த் நன்றாக இருந்தாலும், ஷெர்லாக் ஹோம்ஸ் எங்கேயோ போய்விட்டார். தமிழில் science fiction என்று எதுவுமே இல்லை. (அப்போது சுஜாதாவின் SF பற்றி தெரியாது) தமிழ் பி.ஜி. வுட்ஹவுஸ் கிடைக்கவில்லை. Tale of Two Cities, Treasure Island, Dr. Jekyll and Mr. Hyde, Arms and the Man, Doll House, Les Miserables தரத்துக்கு எனக்கு தமிழில் எதுவுமே கிடைக்கவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எடுத்தால் எப்போதும் நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு, ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் பற்றிதான் ஆய்வுகள் கிடைத்தன. தமிழ் நாவல், சிறுகதைகளை பற்றி பேசுபவை சுலபமாக கிடைக்கவில்லை. எனக்கும் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தின் இறுதியில்தான் கணையாழி போன்ற பத்திரிகைகளை பற்றி கேள்விப்பட்டேன். மணிக்கொடி என்று ஒரு பத்திரிகை இருந்ததே தெரியாது. சிறு பத்திரிகைகள் வருகின்றன என்று கூட தெரியாது. என்ன படிக்கலாம் என்று சொல்ல யாருமில்லை. அப்படிப்பட்ட விமரிசனங்களும் என் கண்ணில் படவில்லை. கணையாழி மாதிரி பத்திரிகைகளின் பேர் கூட நான் கேள்விப்பட்டதில்லை. (கிராமங்களில் வளர்ந்தவன்) ஏதோ பழக்கம் காரணமாக தமிழ் புத்தகங்கள் படித்தேன், அவ்வளவுதான். Time pass!

இந்த கால கட்டத்தில் படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்திருந்தவை:
1. பொன்னியின் செல்வன்
2. சிவகாமியின் சபதம்
3. பார்த்திபன் கனவு
4. தரையில் இறங்கும் விமானங்கள்
5. வால்காவிலிருந்து கங்கை வரை
6. மெர்க்குரிப் பூக்கள்
7. துப்பறியும் சாம்பு
8. ஜஸ்டிஸ் ஜகன்னாதன்
9. கணேஷ் வசந்த் கதைகள்
10. எஸ்.எஸ். 66
வேண்டுமானால் பி.வி.ஆரையும் சேர்த்துக் கொள்ளலாம் (புத்தகம் பேர் எதுவும் ஞாபகம் இல்லை).

மொத்தமாக ஒரு பதினைந்து வருஷ படிப்புக்கு முப்பது நாற்பது புத்தகம் தேறினால் ஜாஸ்தி. எனக்கு த்ரில்லர், நகைச்சுவை, சயன்ஸ் ஃபிக்ஷன், க்ளாசிக் புத்தகங்கள், மனித வாழ்வை சித்தரிக்கும் insightful புத்தகங்கள் என்றால் தமிழ் இல்லை, ஆங்கிலம்தான் என்று மனதில் தோன்றிவிட்டது. இந்த கால கட்டத்தில் படித்த ஆங்கிலப் புத்தகங்களில் மட்டும் யோசிக்காமல் ஒரு ஐம்பது புத்தகமாவது சொல்லலாம்.

தொடர்புடைய மற்ற பதிவுகள்
எழுபதுகளில் என் படிப்பு
இன்குலாப்
கணேஷ் வசந்த் வாழ்க்கை வரலாறு
ப்ரவாஹன்

அடுத்த பக்கம் »