“அவார்டா கொடுக்கறாங்க?” எங்களுடைய இன்னொரு ப்ளாக். நாங்கள் சினிமா பற்றி இங்கே எழுதுகிறோம். பொதுவாக பழைய சினிமா பற்றி, அபூர்வமாக புது சினிமாக்கள் (1975-க்கு பிறகு வந்ததெல்லாம் எங்களுக்கு புது சினிமா) பற்றியும் எழுதுவோம்.

வசந்தகுமார் எங்களை சுவாரசிய பதிவராக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி!

ஆர்வி எழுதிய அம்மாவுக்கு புரியாது சிறுகதை உரையாடல் போட்டியில் பரிசு பெற்றிருக்கிறது. போட்டியை நடத்திய பைத்தியக்காரன், மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தருக்கு நன்றிகள்!
வெற்றி பெற்ற சிறுகதைகளை புத்தகமாக வெளியிடப் போகிறார்களாம். இந்த புத்தகம் இன்னும் சில நாட்களில் – நவம்பருக்கு முன்னால் வெளியிடப்படுமாம். ஜ்யோவ்ராம் சுந்தர், சிவராமன், கிழக்கு பதிப்பகம் பத்ரி ஆகியோருக்கு நன்றிகள் பல!

பிருந்தா எழுதிய கவிதை பரிசு பெற்றிருக்கிறது. பரிசு விவரங்கள், இடுகையில்.

எழுதுவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. சிறுகதை வாரம் பாதியில் நின்றதற்கும் இதுதான் காரணம். கொஞ்ச நாள் ரெகுலராக எழுத முடியாத நிலை. எல்லாரும் மன்னிக்க வேண்டும்.

தீபாவளி வாழ்த்துகள்! சில தீபாவளி நினைவுகள் இங்கே.

சேதுராமன் மறைவு:
இந்த தளத்தில் நானும் பக்சும் எழுதுகிறோம் என்று சொன்னாலும் இங்கே மூன்று பேர் எழுதுகிறோம். சேதுராமன் இந்த தளத்தின் அங்கீகரிக்கப்படாத, அங்கீகாரம் வேண்டாத மூன்றாவது ப்ளாகர். அவர் மறைந்தது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. எங்கள் அஞ்சலி இங்கே.

நாகம்மாள்

நாகம்மாள்

இருபது வருஷங்களுக்குமுன்னால் இந்த புத்தகத்தைப் பற்றி முதல் முறையாக கேள்விப்பட்டேன். க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த அறிமுகங்கள் இரண்டு – ஒன்று சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம், இன்னொன்று இது. புத்தகம் எங்கும் கிடைப்பதில்லை. நண்பர் ராஜன் இரவல் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டார்.

புத்தகம் ஏமாற்றம் அளித்தது. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறோ என்னமோ. புத்தகம் உண்மையான மனிதர்களை, உண்மையான சூழ்நிலைகளை சித்தரிக்கிறதுதான். ஆனால் சுவாரசியமான முடிச்சுகள், ஒரு புதிய உலகம், மனிதர்களைப் பற்றிய insights என்று எதுவுமே இல்லை. நாகம்மாள் காரக்டர் இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகி இருந்தால் நன்றாக வந்திருக்கலாம். புத்தகத்தின் ப்ளஸ் பாயிண்டுகள் என்று பார்த்தால் அனாவசிய உபதேசம் இல்லாதது (ஒரு நா.பா. மாதிரி), ஒரு கிராமத்தை ஓரளவு தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவது, உண்மையான மனிதர்கள் என்று சொல்லலாம். ஆனால் ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, பூமணி, கி. ராஜநாராயணன் போன்றவர்கள் இதை விட தத்ரூபமாக, இதை விட நல்ல வட்டார இலக்கியம் எழுதி பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதை எல்லாம் படித்துவிட்டு இதைப் படித்தால் இது அரைகுறையாக நிற்கிறது என்றுதான் தோன்றுகிறது. ஒரு வேளை க.நா.சு. இப்படிப்பட்ட தமிழில் இப்படிப்பட்ட genre-இல் எழுதப்பட்ட முதல் புத்தகம் (1942-இல் வெளி வந்த புத்தகமாம்) என்று பூரித்துப் போய்விட்டாரோ என்னமோ. முன்னோடி நாவல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஜெயமோகன் பல முறை சொன்னார் – ஒரு நாவலுக்கு எக்கச்சக்க விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று. இதைப் படித்த பிறகுதான் அவர் என்ன சொன்னார் என்று கொஞ்சம் புரிகிறது. சாதாரணமாக என் ரசனையும் ஜெயமோகனின் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகும். இந்த நாவலைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை. ஜெயமோகன் இதை தமிழில் சிறந்த நாவல்களில் ஒன்று என்று மதிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில் இது // தமிழ் இயல்புவாத (நாச்சுரலிச) நாவல்களுக்கு முன்னோடியான (குறு)நாவல். நாகம்மாள் ‘கெட்டிஎலும்புள்ள ‘ கிராமத்து விதவை. அவளுடைய காதல் கொலையில் முடிகிறது. கிராமத்து ‘இட்டேறிகளை ‘ , கானல் பறக்கும் கரிசல் மண்ணை, ராகம்போடும் கொங்குமொழியை ஆசிரியர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களை விட சிறப்பாகவே அளித்திருக்கிறார். //

எஸ். ராமகிருஷ்ணனும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். ஆனால் நான் இதை தமிழ் நாவல் எப்படி ஆரம்பித்து எப்படி பரிணமித்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யமாட்டேன். ஒரு கிராம சூழ்நிலையை, ஜாதி சூழ்நிலையை இதை விட சிறந்த முறையில் பல புத்தகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

ஷண்முக சுந்தரத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை. கிட்டத்தட்ட 60 வயது வாழ்ந்திருக்கிறார். கூகிள் செய்து பார்த்ததில் கைலாசபதி இப்படி சொல்வது தெரிந்தது. (கைலாசபதி யாரென்றெல்லாம் கேட்காதீர்கள். இலங்கையை சேர்ந்தவர், பிரபல இலக்கிய விமர்சகர் என்று நினைக்கிறேன், அவ்வளவுதான் தெரியும்.) இந்த சுட்டியில் அவர் ஷண்முக சுந்தரத்தைப் பற்றி இவ்வாறு சொல்கிறார். // R.Shanmugasundaram’s Nagammal (1941) is another novel that belongs to this category. In the process of writing a novel on village life, Shenmugasundaram created the vogue for the regional novel. Kongunadu became a symbolic locality in his novels. It must be said, however, that there is nothing nostalgic in his treatment of village life. In Nagammal, for instance, strained relations in a family unit create innumerable problems, especially for the heroine, where only the mental toughness of the characters and a steely adherence to rational self-interest guarantee survival. Shanmugasundaram’s novel owes something to Hardy’s novel like Return of the Native and Tess of the D’Urbervilles in the balanced treatment of the relationship between man and nature. The nature novels lost their vitality by the late fifties. // க.நா.சு. இது 42-இல் வெளியானது என்றுதான் எழுதி இருக்கிறார். எது சரி என்று யாருக்காவது தெரியுமா?

மறு பதிப்புகள் இப்போது வந்திருக்கின்றன என்று தெரிகிறது.

தொடர்புடைய பதிவுகள்
க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா?
ஜெயமோகனின் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட்
எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்ட்
கைலாசபதியின் உரை

யார் இந்த விகாஸ் ஸ்வரூப்? ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஒரிஜினல் நாவலை எழுதியவர் இவர்தான். Q and A என்ற பேரில் வந்தது. படத்தில் கதையின் framework-ஐ மாற்றவில்லை, ஆனால் கேள்விகள் மாற்றப்பட்டிருக்கின்றன. அதற்கேற்றாற்போல ஹீரோ வாழ்க்கையும் மாற்றப்பட்டிருக்கிறது. ஹீரோ (பேர் ராம் முஹம்மது தாமஸ்) அத்தனை கேள்விகளுக்கும் விடை சொல்கிறார். ஸ்பான்சருக்கு அறிவித்தபடி பணம் கொடுக்க முடியாத நிலை. போலீசில் போட்டுக் கொடுக்கிறார்கள். சிறு வயதில் ஹீரோ காப்பாற்றிய பெண் இப்போது வக்கீலாக வளர்ந்து அவனைக் காப்பாற்றுகிறாள். இதில் அண்ணன் எல்லாம் கிடையாது, ஆனால் ஒரு உயிர் நண்பன் உண்டு. காதலும் உண்டு.

நாவல் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் நல்ல framework-ஐ பிடித்துக் கொண்டார். அதை வைத்து ஒரு சுமாரான, போர் அடிக்காத நாவல் எழுதி இருக்கிறார். நீண்ட பயணத்தின் போது படிக்கக் கூடிய நாவல்.

இன்னொரு நாவலும் எழுதி இருக்கிறார். Six Suspects. பல நிஜ சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட இன்னொரு போர் அடிக்காத நாவல். வில்லன் பெரிய தொழிலதிபர். உத்தரப் பிரதேசத்தின் உள்துறை மந்திரியின் மகன். மந்திரி உண்மையில் ஒரு தாதா. ஒரு பார்ட்டியில் ஒரு பெண்ணைக் கொன்று விடுகிறார். பணம், செல்வாக்கு இவற்றால் விடுதலை ஆகி விடுகிறார். அதைக் கொண்டாட ஒரு பார்ட்டி, அதில் அவரை யாரோ சுட்டுவிடுகிரார்கள். ஆறு பேர் மேல் சந்தேகம். இதுதான் கதை. ஆறு பேரில் ஒருவரான அந்தமான் தீவிலிருந்து வரும் ஒங்கே இனத்தை சேர்ந்த எகெடி நன்றாக வந்திருந்தது. மகாத்மா காந்தியின் ஆவி அவ்வப்போது ஒருவரைப் பிடித்துக் கொள்கிறது. மந்திரியின் காரக்டர் எப்போதும் தொலைபேசிக் கொண்டே இருக்கிறார்.

விகாஸ் ஸ்வரூப்புக்கு ஒரு நல்ல framework-ஐ தேர்ந்தெடுப்பது சுலபமாக இருக்கிறது. கதைக்கு ஒரு அடிப்படை சட்டம் கிடைத்ததும் ஓரளவு மெக்கானிக்கலாக அந்த சட்டத்தின் மீது கதையை டெவலப் செய்கிறார். கதையின் முடிச்சுகள் சுலபமாக, கொஞ்சம் சினிமாத்தனமாக அவிழ்கின்றன.

படித்தே ஆக வேண்டியவர் இல்லை, இருந்தாலும் படிக்கலாம்.குறிப்பாக நீண்ட பயணங்களின்போது.

தொடர்புடைய பதிவுகள்
ஸ்லம்டாக் மில்லியனர் விமர்சனம், ஸ்ரேயாவின் விமர்சனம், ஆஸ்கார் போட்டி, ரஹ்மானுக்கு ஆஸ்கார், ஆஸ்கார் விருதுகள்
ஏழாம் உலகம், ஸ்லம்டாக் மில்லியனர், நான் கடவுள்
ஏழாம் உலகம்
நான் கடவுள் விமர்சனம்

க.நா. சுப்ரமண்யம் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர். படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். அவரது பொய்த்தேவு மிக அருமையான நாவல். அவரது படித்திருக்கிறீர்களா எனக்கு மிக முக்கியமான படைப்பு – நல்ல தமிழ் படைப்புகளைப் பற்றி எனக்கு சொன்ன முதல் புத்தகம் அதுதான்.

பாரதிமணி க.நா.சு.வின் மாப்பிள்ளை. பாரதி திரைப்படத்தில் பாரதியின் அப்பா சின்ன்னச்சாமியாக நடித்தவர். அவர் க.நா.சுவை நினைவு கூரும் பதிவு ஒன்று இட்லிவடை தளத்தில் வந்திருக்கிறது. கட்டாயமாக படியுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
பொய்த்தேவு
படித்திருக்கிறீர்களா?

உலகின் மிக அபாயகரமான ரோடுகள் என்று ஒரு ஃபோட்டோ பதிவு இங்கே இருக்கிறது. கட்டாயமாக பாருங்கள்!

சுஜாதா

சுஜாதா

சுஜாதாவுக்கு பிடித்த சிறுகதைகள் என்று ஒரு லிஸ்ட் என் பழைய ஃபைல்களை கிளறியபோது கிடைத்தது. என் வழக்கமான சிறு ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்.

புதுமைப்பித்தன் – மனித இயந்திரம்: கணக்குப்பிள்ளை பணம் திருடிக்கொண்டு ஓட முயலும் கதை. புதுமைப்பித்தன் உலகின் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதற்கு இந்த ஒரு கதை போதும்.

கு.ப.ராஜகோபலன் – விடியுமா?: ஒரு காலத்தில் புரிந்த மாதிரி இருந்தது. சமீபத்தில் யாரோ சிபாரிசு செய்யவே மீண்டும் படித்துப் பார்த்தேன். அத்திம்பேர் இருக்காரா போய்ட்டாரா என்று குழப்பம். அப்புறம் திருப்பி படித்தேன். போய்ட்டார் என்று புரிந்தது. நன்றாகத்தான் எழுதி இருக்கிறார். கு.ப.ரா.வின் வேறு கதைகள் சில எனக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும்.

தி.ஜா. – சிலிர்ப்பு: இதுதான் ரயிலில் சிறு பையன் எங்கோ கல்கத்தாவுக்கு சமையல் வேலை செய்யப் போகும் சிறுமிக்கு பழம் கொடுக்கும் கதை என்று நினைக்கிறேன். நல்ல கதை.

கு. அழகிரிசாமி – அன்பளிப்பு: மிக அற்புதமான கதை. பல சிறுவர்களுக்கு பரிசாக டைரி கொடுப்பவர் சாரங்கனுக்கு கொடுக்கவில்லை. சாரங்கன் ஒரு டைரியை அவரிடம் கொடுத்து சாரங்கனுக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதி வாங்கிக் கொள்கிறான். மிக பிரமாதமான கதை. அழகிரிசாமி ஒரு மாஸ்டர் என்பதில் சந்தேகமே இல்லை.

சுந்தர ராமசாமி – பிரசாதம்: புன்முறுவலாவது வராமல் இந்த கதையை படிக்க முடியாது. அர்ச்சகரிடம் லஞ்சம் வாங்க முயற்சிக்கும் போலீஸ்காரர் அவரிடம் கடைசியில் கொஞ்சம் பணம் கடனாக வாங்கிக் கொள்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதை விகாசம்தான். ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் என்ற கதைகளும் நினைவு வருகின்றன.

கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு: இந்த கதை சிரஞ்சீவி. சாவே கிடையாது. இந்த ஒரு கதையினாலேயே நம்பி தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம் பெறுவார். உலக இலக்கிய வரலாற்றிலேயே கூட இடம் உண்டு.

அசோகமித்திரன் – புலிக் கலைஞன்: அசோகமித்திரன் ஒரு ஜீனியஸ். எல்லா சிறுகதைகளும் ஒரு தருணம், ஒரு நக்மா, ஒரு moment, ஒரு க்ஷணத்தை நோக்கி போகின்றணன். அதுதான் சாதாரணமாக கதையின் கடைசி வரி. இந்த கதையில் அந்த தருணம் கதையின் நடுவில் இருக்கிறது. மிக அபூர்வமான, அற்புதமான அமைப்பு. பிரயாணம் இன்னொரு அற்புதமான சிறுகதை.

தங்கர்பச்சான் – குடி முந்திரி: தங்கர் இரண்டு மிக நல்ல கதைகளை எழுதி இருக்கிறார். இது ஒன்று, வெள்ளை மாடு என்று ஒன்று. நகரத்தில் படிக்கும் பிள்ளைக்கு ஷூ வாங்க குடும்பத்தின் பாரம்பரிய சொத்தான முந்திரி மரத்தை விவசாயி வெட்டுகிறார்.

பிரபஞ்சன் – மீன்: பலரும் இதை சிலாகிக்கிறார்கள். எனக்கென்னவோ இது மிகவும் ramble ஆவதாக தோன்றுகிறது.

கி.ரா. – கதவு: நல்ல கதைதான், ஆனால் இதை விட பிடித்த கதைகள் இருக்கின்றன.

திலீப் குமார் – கடிதம்: கடிதம்தான் திலீப் குமாரின் சிறந்த கதை என்று பலராலும் கருதப்படுகிறது. இதை விட்டால் மூங்கில் குருத்துகள், பூனை செத்துப்போன கதை ஆகியவை திருப்பி திருப்பி anthology-களில் இடம் பெறுகின்றன. ஆனால் எனக்கு பிடித்தது கடவு என்ற கதைதான். சின்ன வயதில் பாட்டியை கடத்திக்கொண்டு போய் மும்பை சிவப்பு விளக்கு பகுதிகளில் விற்று விடுகிறார்கள். பல வருஷம் அங்கே வாழ்ந்துவிட்டு பிறகு தன் உறவினரிடம் திரும்பும் பாட்டியின் கதை.

வண்ணநிலவன் – எஸ்தர்: அன்பு நிறைந்த குடும்பம் பஞ்சம் பிழைக்க மதுரைக்கும் மற்ற ஊர்களுக்கும் சிதறப் போகிறது. வீட்டில் இருக்கும் கிழவியை என்ன பண்ண? சிறந்த கதை.

படிக்காதவை:
ஆ. மாதவன் – நாயனம்
பாமா – அண்ணாச்சி
இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
இரா. முருகன் – உத்தராயணம்
ஜெயமோகன் – பல்லக்கு
கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
லா.ச.ரா. – கொட்டு மேளம்
நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
ரா.கி. ரங்கராஜன் – செய்தி
ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
ராமசந்தர வைத்தியநாதன் – நாடகக்காரர்கள்
சிவசங்கரி – செப்டிக்
சோ. தருமன் – நசுக்கம்
சுந்தர பாண்டியன் – கனவு
சுஜாதா – மகாபலி
சு. சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
வண்ணதாசன் – நிலை:

நீங்கள் இந்த கதைகளில் எதையாவது படித்திருந்தால், இல்லை உங்களுக்கு பிடித்த வேறு சிறுகதைகள் இருந்தால் சொல்லுங்கள்! இதில் உள்ள கதைகளுக்கு லிங்க் கொடுத்தால், பதினைந்தும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள். அதுவும் நான் படிக்காத கதைகளுக்கு லிங்க் கொடுத்தால் பதினாறு!

தொடர்புடைய பதிவுகள்:
எனக்கு பிடித்த சிறுகதைகள் பகுதி 1(தமிழ்), பகுதி 2(தமிழ்), பகுதி 3(பிற இந்திய மொழிகள்)
சிறுகதை வாரம்
ஜெயமோகனுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள்
எஸ். ராமகிருஷ்ணனுக்கு பிடித்த 100 தமிழ் சிறுகதைகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2


எனக்கு பிடித்த இந்திய non-fiction எழுத்தாளர்களில் ராமச்சந்திர குஹாவுக்கு பெரிய இடம் உண்டு. அவரது “A Corner of the Foreign Field” கிரிக்கெட் பற்றி எழுதப்பட்ட மிக சிறந்த புத்தகங்களில் ஒன்று.

ஜெயமோகன் சமீபத்தில் இந்திய வரலாறு பற்றி படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று “காந்திக்கு பிந்திய இந்தியா” புத்தகத்தை சிபாரிசு செய்திருந்தார். ஃப்ரீமான்ட் நூலகத்தில் கிடைத்தது. இப்போது கிழக்கு பதிப்பகம் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறதாம்.

புத்தகம் மிக நன்றாக இருந்தது. சுலபமான நடையில் சுவாரசியமாக எழுதப்பட்ட புத்தகம். காஷ்மீர், இந்திய-சீன எல்லை தகராறு, மொழிவாரி மாநில சீரமைப்பு போன்ற பல விஷயங்களை பற்றி அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. பல (எனக்கு) தெரியாத விஷயங்களை போகிற போக்கில் சொல்கிறார். உதாரணமாக ஆந்திர மாநிலம் அமையவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து இறந்த பொட்டி ஸ்ரீராமுலு பற்றி – ஐம்பது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்த பிறகுதான் ராஜாஜி அவரை அணுக முயற்சி செய்திருக்கிறார். ஆனானப்பட்ட ராஜாஜியே கோட்டை விட்ட விஷயம் இது. நேரு இறப்பதற்கு முன் ராஜாஜி காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன் வைத்த ஒரு வழி மிக தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது – ஜம்மு, லடாக் இந்தியாவுக்கு; “ஆசாத் காஷ்மீர்” பாகிஸ்தானுக்கு; காஷ்மீர் பள்ளத்தாக்கு “சுதந்திர” நாடு, ஆனால் வெளிநாட்டு உறவும், ராணுவமும் இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் கூட்டாக பொறுப்பு எடுத்துக்கொள்ளும். அன்டோரா (விகி குறிப்பு) என்று ஒரு இத்துனூண்டு நாடு இப்படித்தான் ஸ்பெய்ன், ஃப்ரான்ஸ் நடுவில் இருக்கிறதாம். நேரு இறந்ததால் இதை மறந்துவிட்டார்கள்.

புத்தகத்தில் எனக்கு குறையாக படுவது டெல்லியின் கோணத்திலிருந்தே இந்திய வரலாற்றை பார்ப்பதுதான். இருந்தாலும் நல்ல புத்தகம், படிக்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனின் “வரலாற்றை வாசிக்க” பதிவு – முக்கியமான இந்திய வரலாற்று நூல்களை பற்றி.
ஜெயமோகனின் முக்கிய இந்திய வரலாற்று நூல் லிஸ்டில் இன்னொன்று – ராஜேந்திர பிரசாத்தின் At the Feet of Mahatma Gandhi
2009 பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் (குஹாவுக்கு பத்மபூஷன்)

க்ரியா இப்போது முதல் வகுப்பு. அவளுக்கு புவியியல் பாடம், map எல்லாம் உண்டு. map-இல் திசைகளை எப்படி கண்டுபிடிப்பது என்று சொல்லிகொடுத்தோம் – மேலே வடக்கு, கீழே தெற்கு, வலது பக்கம் கிழக்கு, இடது பக்கம் மேற்கு என்று. அவளும் ஆர்வமாக கற்றுக்கொண்டாள்.

ஒரு நாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது சூரிய அஸ்தமனம் நேராக தெரிந்தது. க்ரியா எது மேற்கு சொல்லு பாக்கலாம் என்று கேட்டேன். அவள் தன் இடது பக்கம் கையை காட்டினாள். என்னடி சூரியன் கண்ணுக்கு எதிரே அஸ்தமனம் ஆகிறது, நீ இடது பக்கம் கையை காட்றியே என்று கேட்டேன். அவள் சொன்னாள் – “Daddy, you don’t know anything. Up is north, down is south, right is east and left is west!”

தொடர்புடைய பதிவுகள்
நேற்று இன்று நாளை
க்ரியாவின் ஏமாற்றம்
பெரிய நம்பர்கள்
க்ரியாவுக்கு சொன்ன கதை
ஸ்ரேயாவின் பசி

தமிழ் சிறுகதைகளை பற்றி இங்கே மற்றும் இங்கே எழுதி இருந்தேன். இப்போது பிற இந்திய மொழிகள்.

தமிழுக்கு புதுமைப்பித்தன் என்றால் ஹிந்திக்கு பிரேம்சந்த். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். (இஸ்திஃபா (Resignation) கதையை படியுங்கள்) ஆனால் புதுமைப்பித்தன் போல நக்கல் அடிக்கமாட்டார். அவர் எழுதிய பல கதைகள் எனக்கு தேறும். நான் படித்ததெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில்தான். ஹிந்தியில் நான் எழுத்துக் கூட்டி படிப்பதற்குள் பொழுது விடிந்துவிடும். மொழிபெயர்ப்பில் கதையின் பிளாட் சரியாக வரலாம், ஆனால் பல nuances விட்டுப்போகும். அப்படி இருந்தும் அவரது கதைகளின் பிரமாதமான charm எனக்கும் புரிந்தது.

வழக்கம் போல எனக்கு கதை தலைப்புக்கள் நினைவிருப்பதும் இல்லை. ஆனால் மனைவியின் உடலை எரிக்க கிடைத்த பிணத்தில் குடிக்கும் மகனும் அப்பனும், வறுமையினால் விற்கப்படும் இரண்டு மாடுகள் மீண்டும் வீட்டுக்கே திரும்பி வரும் கதை, கடமையை செய்வதில் உறுதியாக நின்று வேலையை இழக்கும் சால்ட் இன்ஸ்பெக்டர், தனக்கே சாப்பாடு இல்லாவிட்டாலும் திண்ணையில் வந்து குந்தும் சாமியாருக்கு சாப்பாடு போடும் கதை என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய பிரேம்சந்த் சிறுகதைகள் காப்பி எங்கே என்று தெரியவில்லை. அது கிடைக்கும்போது இவரைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.

பிரேம்சந்த் சிம்பிளாக எழுதக் கூடியவர். அழகிரிசாமி, கி.ரா., பூமணி போன்றவர்கள் இவர் மாதிரி கதை எழுதுபவர்கள். அவருடைய கதையில் எல்லாம் வெட்ட வெளிச்சம். சிந்தனையை தூண்டும் தன்மை, சொல்லாமல் சொல்லும் தன்மை எதுவும் கிடையாது. அதே நேரத்தில் உபதேசம் எல்லாம் செய்யமாட்டார். அவர் கதைகள் வாழ்க்கையை, குறிப்பாக கிராம வாழ்க்கையை, அங்கங்கே ஃபோட்டோ பிடித்தது மாதிரி இருக்கும்.

அவருடைய கதைகள் பரவலாக காப்பி அடிக்கப்பட்டிருக்கின்றன. வேறு பல கதைகளுக்கு தூண்டுதலாக அமைந்திருக்கின்றன. கல்கி அவரது சால்ட் இன்ஸ்பெக்டர் கதையை புது ஓவர்சீயர் என்று அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார். தங்கர் பச்சானின் வெள்ளை மாடு கதை அவரது இரண்டு எருமைகளின் கதையை நினைவுபடுத்துகிறது. (காப்பி இல்லை, inspiration ஆக இருக்கலாம்.) அவரது கதைகள் சாகாது.

அடுத்தபடி நினைவு வருபவர் மணிக் பந்தோபாத்யாய். வங்க மொழி எழுத்தாளர். மிக powerful கதைகள். அவர் கதைகளில் வருபவர்கள் ரத்தமும் சதையும் உள்ள மனிதர்கள். Life courses through the characters in his stories. அவரது Primeaval என்ற கதை அவசியம் படிக்க வேண்டியது. ஒரு திருடன் திருடுகிறான், மாட்டிக் கொள்கிறான், தப்பித்து ஓடுகிறான், ஒரு கை போய்விடுகிறது, ஒரு பிச்சைக்காரியை சேர்த்துக் கொள்கிறான். இதெல்லாம் ஒரு கதையா? படித்தால்தான் புரியும். லிங்க் கொடுத்திருக்கிறேன், கட்டாயமாக படியுங்கள்.

இஸ்மத் சுக்டையின் உருது மொழி லிஹாஃப் என்ற கதை மிக அபாரமானது. பாரம்பரிய முஸ்லிம் குடும்பம். கணவனுக்கு பையன்கள்தான் வேண்டும். மனைவி என்ன செய்வாள்? இந்த கதையை எழுதியதற்கு அவர் மேல் ஆபாச கதை என்று கேஸ் போட்டிருக்கிறார்கள். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ஆர். கே. நாராயணின் A Horse and Two Goats என்ற கதையை படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன். அவரது சில கதைகளில் நல்ல craft தெரிகிறது.

ஃபநீஸ்வர்நாத் ரேனு மிக அருமையான கதைகள் எழுதுபவர். அவர் எழுதுவது ஹிந்தியின் மிதிலா dialect. ரேணுவின் தீஸ்ரி கசம் கதை அதே பேரில் திரைப்படமாகவும் வந்தது. வேறு கதைகள் இப்போது ஞாபகம் வரவில்லை. என்னிடம் இருக்கும் புத்தகத்தை தேடித் பிடிக்க வேண்டும். சமீபத்தில் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவருக்கு இந்த புத்தகத்தை பரிசாக தரவேண்டும் என்று எல்லா புத்தகங்களையும் கலைத்துப்போட்டேன். புத்தகம் கிடைக்கவில்லை, ஹேமா கஷ்டப்பட்டு என்னை திட்டாமல் பொறுத்துக் கொண்டாள்.

சாதத் ஹாசன் மாண்டோ சிலாகிக்கப்படும் இன்னொரு எழுத்தாளர். உருது. அவரது டோபா டேக் சிங் பெரிதும் புகழப்படுகிறது. என் கண்ணில் சுமார்தான். இதற்கும் லிங்க் கொடுத்திருக்கிறேன்.

ரவீந்த்ரநாத் தாகூர் கவிதை எழுதி நோபல் பரிசு எல்லாம் வாங்கினார். அவர் பல நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதி இருக்கிறார். எனக்கு இப்போது ஞாபகம் வருவது காபூலிவாலா(ஹிந்தி படமாகவும் வந்தது), போஸ்ட்மாஸ்டர் (சத்யஜித் ரேயின் தோ கன்யா படத்தின் முதல் பகுதி), Hungry Stones என்ற கதைகள்தான். படிக்கலாம், ஆனால் பிரமாதம் என்றெல்லாம் சொல்ல முடியாது. Hungry Stones கதை ஒரு gimmick என்றாலும் நல்ல craft உள்ள கதை. இவை கூடன்பர்க் தளத்தில் கிடைக்கும்.

அமேரிக்கா வந்த பிறகு – ஒரு 15-20 வருஷங்களாக – தமிழ் தவிர்த்த வேறு இந்திய மொழிப் புத்தகங்களை படிப்பது அற்றே போய்விட்டது. தமிழ் தெரியாத நண்பர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வாங்கிக் கொடுத்தால் உண்டு. ரேனு, குல்சார், பிரேம்சந்த் புத்தகங்கள் எல்லாம் மனீஷ் ஷர்மா பரிசாகத் தந்தவை. அதே போல் அவனுக்கு தமிழ் புத்தங்களின் மொழிபெயர்ப்பை பரிசாகத் தருவதில் எனக்கு விருப்பம் உண்டு. வெகு அபூர்வமாகவே ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. கடைசியாக கிடைத்தது ஒரு புளிய மரத்தின் கதை.

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்க வேண்டியது மிக அவசியம். நானும் மனீஷுக்காக ஓரளவு தேடி இருக்கிறேன். புதுமைப்பித்தனின் சில கதைகள் கிடைத்தன. ஜெயகாந்தன் கிடைத்தார். (எனக்கு ஜெயகாந்தனைப் பற்றி உயர்வான எண்ணம் கிடையாது, அதனால் வாங்கவில்லை.) மொத்தமாக ஒரு நாலைந்து புத்தகம் கிடைத்திருந்தால் அதிகம்.

பொதுவாக சிறுகதைகளை விட நாவல்களை மொழிபெயர்ப்பதுதான் அதிகமாக இருக்கிறது. ஏனோ தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு என்பது முக்கியமான கலை. அதுவும் இந்தியா மாதிரி செப்பு மொழி பதினெட்டுடையாள் நாட்டில் மிக மிக அவசியம். நான் சிறுவனாக இருந்த காலத்தில் கா.ஸ்ரீ.ஸ்ரீ., சரஸ்வதி ராம்நாத், த.நா. குமாரசாமி மாதிரி சிலர் இதை ஒரு சேவையாக செய்தார்கள். அவர்கள் மொழிபெயர்ப்புகள் மிக அருமையாக இருந்தன. இப்போது பாவண்ணன் மட்டுமே கன்னடத்திலிருந்து தமிழுக்கு நிறைய மொழிபெயர்க்கிறார். அது சரி, தமிழர்கள் ஒரிஜினல் புத்தகங்களையே வாங்குவதில்லை, மொழிபெயர்ப்புதான் முழு நேர வேலை என்றால் மொழிபெயர்ப்பாளன் கதி அதோகதிதான்.

நீங்கள் படித்த பிற இந்திய மொழி சிறுகதைகள் பற்றி சொல்லுங்களேன்! நான் தேடிய காலத்தில் ஹிந்தி, வங்கம், கன்னடம், மலையாளம் ஓரளவு கிடைக்கும். ஆனால் அஸ்ஸாமீஸ், ஒரியா, மராத்தி, தெலுங்கு, உருது புத்தகங்கள் எல்லாம் சான்ஸ் இல்லை. (எண்டமூரி வீரேந்திரநாத்தை தவிர்த்து) இப்போது மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றனவா?

தொடர்புடைய பதிவுகள்
மணிக் பந்தோபாத்யாயின் Primeaval
இஸ்மத் சுக்டையின் லிஹாஃப் (Quilt)
சாதத் ஹாசன் மான்டோவின் டோபா டேக் சிங்
கூடன்பர்க் தளத்தில் தாகூரின் கதைகள்

சிறுகதை வாரம்
எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் பகுதி 1, பகுதி 2
எஸ். ராமகிருஷ்ணனின் 100 சிறந்த தமிழ் சிறுகதைகள் சிபாரிசுகள், என் குறிப்புகள் பகுதி 1, பகுதி 2
ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள் – பெரிய பதிவு, ஒரு 250 சொச்சம் தமிழ் சிறுகதைகளை குறிப்பிட்டிருக்கிறார்.

சேதுராமன்

சேதுராமன்

இந்த பதிவு கொஞ்சம் நீளமானது. ஆனாலும் எங்கள் வருத்தம் எல்லாம் இங்கே வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. சேதுராமனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் பெரிய இழப்புதான்.

மகாபாரதத்தில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி உண்டு. ஒரு நச்சுப் பொய்கையின் கரையில் தன் நாலு தம்பிகளும் பிணமாக கிடக்க மாய யக்ஷன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வார். ஒரு கேள்வி – உலகின் மிக பெரிய அதிசயம் எது? யுதிஷ்டிரரின் பதில்: தினமும் கண் எதிரே மக்கள் இறந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும் தானும் ஒரு நாள் இறக்கப் போகிறவன்தான் என்று யாரும் நினைப்பதில்லை.

போன ஞாயிறு காலை சேதுராமனின் நண்பர் திரு ஸ்ரீனிவாசன் என்னை அழைத்தார். ஒரு துக்க சமாசாரம், சேதுராமன் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இறந்துவிட்டார் என்று சொன்னார். அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. சேதுராமனை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. எங்கள் உறவு இணையம், ஈமெயில் மூலம் வளர்ந்ததுதான். அவருக்கு என்னைப் போல இரண்டு மடங்கு வயதிருக்கும். ஆனால் நீண்ட நாள் பழகிய நண்பர் ஒருவரை இழந்தது போன்ற துக்கம் ஏற்பட்டது.

கேள்விப்பட்ட கணத்தில் முதலில் எழுந்த உணர்ச்சி regret-தான். அடுத்த முறை இந்தியா போனால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவரிடம் ஃபோனில் பேச வேண்டும் என்று தோன்றவே இல்லையே என்ற வருத்தம்தான் மேலெழுந்தது. பக்சும் அதையேதான் சொன்னான். என்னவோ இந்தியா போகும்போது பார்த்துக்கொள்ளலாம், பேசலாம் என்று முட்டாள்தனமாக நினைத்தோமே என்ற உணர்ச்சிதான் இப்போது மேலோங்கி நிற்கிறது.

சேதுராமன் பெரிய மனிதர். ஒரு விமானக் கம்பெனியில் பணி புரிந்திருக்கிறார். பின்னாளில் ஒரு ட்ராவல் ஏஜென்சி நடத்தி இருக்கிறார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது அமேரிக்கா போவதற்கான ஏற்பாடுகள் செய்தவர் இவர்தான். திரு ஸ்ரீனிவாசன் ஒரு காலத்தில் அமேரிக்கா போக வேண்டுமென்றால் இவரைத்தான் அணுகுவார்கள் என்று குறிப்பிடுகிறார்.

இந்த தளம் என்னுடையதும் பக்சுடையதும் மட்டுமல்ல, சேதுராமனுடையதும் கூட. நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துகள் பற்றி ஒரு மறுமொழி எழுதும்போது ராய. சொக்கலிங்கம் பற்றி எனக்கு தெரியவில்லை, நீங்கள்தான் சொல்லுங்களேன் என்று கேட்டிருந்தேன். அதை ஒரு சீரிசாக ஆக்கியது அவர்தான். 28 எழுத்தாளர்களை பற்றிய விவரம் சேகரிக்க படாத பாடு பட்டிருக்கிறார். ராய. சொ. பற்றி தெரிந்துகொள்ள காரைக்குடி வரைக்கும் பயணம் செய்து அவரது நண்பர்களிடம் பேசி தகவல் சேகரித்திருக்கிறார். வேதங்கள், கோத்திரங்கள், மந்திரங்கள் குறித்து நிறைய தெரிந்தவர், அவற்றை பற்றி எல்லாம் இங்கே எழுதி இருக்கிறார்.

இந்த தளத்தில் நான்(RV) பக்ஸ் இரண்டு பேரும் எழுதுகிறோம் என்று சொன்னாலும் உண்மையில் மூன்று பேர் எழுதுகிறோம். சேதுராமன் அவர்கள் இந்த தளத்தின் அங்கீகரிக்கப்படாத, அங்கீகாரம் வேண்டாத, மூன்றாவது collaborator. இந்த தளத்தில் அவர் எழுதி என்னையும் பக்சையும் கௌரவப்படுத்தினார்.

சேதுராமன் பொதுவாக அரிய தகவல்களை சேகரித்து தருவார். ஆனால் தன் கருத்து என்ன என்பதை அவ்வளவு சுலபமாக வெளியே சொல்ல மாட்டார். நான் நேர் எதிர். கருத்து கந்தசாமி. தெரியாத விஷயம் என்றாலும் பொழிந்து தள்ளுவேன். அவரையும் எப்படியாவது தான் நினைப்பதை வெளியே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

அவரை பிரிந்து வருந்தும் அவர் குடும்பத்தினருக்கு என் condolences.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ்வுலகு
என்று எழுதிய திருவள்ளுவரை என்றாவது பார்த்தால் தாடியை பிடித்து இழுத்து இதில் என்னய்யா பெருமை என்று கேட்க வேண்டும்.

பக்ஸ் எழுதுவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நானும் RVயும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுத்தான் ஸ்ரீ சேதுராமன் அவர்களின் மறைவு பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்தி அறிந்தேன். மிக வருத்தமடைந்தோம். நினைத்து நினைத்து பார்த்து, கண்ணில் ஈரம் கசிகிறது.

ஒரே ஒரு முறை சர்வ அலட்சியமாக மு.வ.வின் ”அகல் விளக்கு” நாவலை படிக்க ஆவலாயிருக்கிறேன் என்று ஒரு காமெண்ட் எழுத, உடனே அந்த வார்த்தைகளுக்கு அவர் பெரு மதிப்பு அளித்து, அடையாறிலிருந்து பாரிமுனைக்கு சென்று, ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வந்து (”அகல் விளக்கு”, மற்றும் “கரித்துண்டு” ), அவற்றை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அவருடைய வயது 80க்கும் மேல்.

கூட்டாஞ்சோற்றை எங்களுடன் சேர்ந்து சமைத்தார். ப்ளாக்கிற்கு 50000 ஹிட் எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தார். அதை அடைந்தவுடன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் ”நாட்டுடமை” தொடருக்காக எடுத்துக் கொண்ட சிரமங்கள் மிக அதிகம். பல இடங்களுக்குச் சென்றதாக RV கூறினான். சொல்லப்போனால், நாங்கள் அப்படி போயிருப்போமா என்பது சந்தேகம்.

தீபாவளியை முன்னிட்டு கீழ் காணும் ”சஹனா வவத்து” வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

__________________________________________________________________________________
HAPPY DEEPAVALI GREETINGS TO YOU ALL !!

Let us exist together !
Let us share the result of the work together !
Let us enlighten together !
Let us not have hatred towards anyone !
Let there be Shanthi and Peace for all of us !!

(Sanskrit Couplet ‘Sahana vavathu’)

Janaki, Sethuraman and family
Shastrinagar, Adyar – Oct. 2009
__________________________________________________________________________________

அவருக்கு பதில் வாழ்த்து எழுதியிருந்தேன். அதில் சஹனா வவத்துவின் சமஸ்கிருத வார்த்தைகளையும் கேட்டிருந்தேன். அவர் அதை அனுப்புவதற்கு எல்லா முயற்ச்சியும் எடுத்திருப்பார் என்று என்னால் உறுதியாக சொல்லமுடிகிறது. சொர்க்கத்தில் அவர் எங்களுக்காக ஒரு இடுகையை தயார் செய்து விட்டு, எங்களிடம் கொடுக்க நீட்டும் அவருடைய அன்புக் கரங்களை சந்திக்க, அதை அடைய முயற்சிக்கும் எங்கள் கரங்களுக்கு தகுந்த நீளம் இல்லாமல் நாங்கள் தவிக்கிறோம். எங்கள் நட்பிற்கு காரணமான இண்டர்நெட்டிற்க்கும் எட்டாத தூரத்தில் அல்லவாபோய்விட்டார்!

பின்குறிப்பு: இந்த போஸ்டை படிப்பவர்கள் உங்கள் வயதான உறவினர்கள், நண்பர்கள், யாரையாவது கூப்பிட்டு பேசுங்கள்!

தொடர்புடைய பதிவுகள்:
சேதுராமனுக்கு ஜே!
நாட்டுடமை சீரிஸ் – சேதுராமனின் முடிவு பதிவு

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! ஜைனர்களுக்கும், மார்வாடிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளும் கூட!

சிறு வயதிலிருந்தே பண்டிகை என்றால் தீபாவளிதான். இத்தனைக்கும் நான் கிராமங்களில் வளர்ந்தவன். விவசாய கிராமங்கள். போங்களின்போதுதான் விவசாயி, நிலத்தில் இறங்கி வேலை செய்பவர்கள் கையில் கொஞ்சம் காசு புரளும். கிராமத்தில் பெரிய பண்டிகை என்றால் பொங்கல்தான். மாட்டுப்பொங்கல் அன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட மாடுகளை ஊர்வலமாக அழைத்து செல்வார்கள். வைப்பணை என்ற கிராமத்தில் ஏழெட்டு வயதில் நான் பார்த்த ஊர்வலம் இன்றும் நினைவிருக்கிறது. (என் கண்ணெதிரில் ஒரு இருபது வருஷங்களுக்குள் தீபாவளி கிராமங்களின் முக்கிய பண்டிகையாக மாறியது. டெலிவிஷனின் சக்தி!)

பண்டிகை என்றால் தீபாவளிதான் என்பது ஏன்? முதல் காரணம் பட்டாசு. பட்டாசு வெடிக்கும்போது பயங்கர ஜாலியாக இருந்தது. பட்டாசு சிறுவர் சிறுமியருக்காக கண்டுபிடிக்கப்பட்ட விஷயம். கார்த்திகை அன்றும் பட்டாசு மாதிரி ஒரு விஷயம் உண்டு. ஓலையில் தீக்கங்குகளை ஒரு விதமாக கட்டி தலைக்கு மேல் சுற்றுவது உலக மகா கூல் விஷயம். அது கார்த்திகை அன்று மட்டும்தான் நடக்கும். ஆனால் தீபாவளி அன்று சங்கு சக்கரம், புஸ்வானம், விஷ்ணு சக்கரம், ராக்கெட், லக்ஷ்மி வெடி, ஊசி வெடி, சர வெடி, பாம்பு மாத்திரை (ஒரு வினோதமான வாசனை/நாற்றம் உடையது), கேப், கம்பி மத்தாப்பு, சாட்டை, ஆடம் பாம்ப் என்று வித விதமாக வெடிப்போம். தௌசண்டுவாலா எல்லாம் வராத காலம்.

இரண்டாவது காரணம் பட்சணம். பட்சணம் வேறு பண்டிகைகளுக்கும் கிடைக்கும். ஆனால் பண்டிகை அன்று பூஜை முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு முன் எடுத்தால் கையை ஒடித்து விடுவாரகள். தீபாவளி அன்றோ நேராக எண்ணை சட்டியில் கையை விட்டு எடுத்து சாப்பிட்டாலும் திட்டு விழாது. குஷிக்கு கேட்க வேண்டுமா?

மூன்றாவது புது சட்டை. அப்போதெல்லாம் தீபாவளி அன்று புது சட்டை காரண்டியாக உண்டு. என் தங்கைகளுக்கு பிறந்த நாள் அன்று புது துணி கிடைக்கும். என் பிறந்த நாள் எனக்கே நினைவிருக்காது. அதனால் புது துணி கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.

இத்தனை அருமையான பண்டிகை என்ன என்று தெரியாமலே என் பெண்கள் வளர்வது கொஞ்சம் சோகம்தான். சரி நான் வளரும்போது சாண்டா க்ளாஸ் யாரென்றே தெரியாது, வீட்டில் கிருஸ்துமஸ் மரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஹாலோவீன் என்று இங்கு வந்துதான் கேள்விப்பட்டேன். வேறு சந்தோஷங்கள்…

அடுத்த பக்கம் »